Tuesday, May 12, 2015

நெதர்லாந்தில் வேலையில்லாப் பிரச்சினையும், வேலைநிறுத்தப் போராட்டங்களும்


நெதர்லாந்தில், டில்பூர்க் (Tilburg) எனும் நகரத்தில், அடிப்படை வருமானம் தொடர்பான சமூகப் பரிசோதனை ஒன்று நடைபெறவுள்ளது. ரோபோ மயப்படுத்தல் காரணமாக, வருங்காலத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும். அதற்கு ஏற்றவாறு சமுதாய அமைப்பையும் மாற்ற வேண்டி இருக்கும்.

இன்று வரையில், பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், வேலையற்று இருப்பவர்களுக்கு அரச உதவித்தொகை வழங்கப் படுகின்றது. ஒரு மனிதன் வாழ்வதற்கு தேவையான மாதாந்த உதவித் தொகை அது. அந்த உதவித்தொகை பெறுவோர் வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அது மட்டுமல்ல, மேலதிக பணம் சேமிப்பில் வைத்திருக்க முடியாது. எந்தநேரமும் அரச கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும். இது போன்ற நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

டில்பூர்க் நகரசபை, தற்காலிகமாக உதவித்தொகை பெறும் நூறு பேரை தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்யவுள்ளது. அதன் படி, அவர்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப் பட மாட்டாது. அவர்கள் மீதான அரச கண்காணிப்பும் நிறுத்தப் படும். மேலும், பகுதிநேர வேலை பார்த்து சிறிது பணம் கூட சம்பாதித்தாலும், அதை வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுவார்கள். (தற்போதைய நடைமுறையில், சம்பளப் பணத்தின் அளவுக்கு உதவித்தொகை குறைக்கப் படும்.)

இந்தப் பரிசோதனை முயற்சியின் நோக்கம் என்ன? இதனால் வேலையற்றவர்களின் மனநலம், உடல்நலம் பாதிக்கப்படாது என்று எதிர்பார்க்கிறார்கள். (தற்போதைய நிலைமையில், நிறையப் பேர் மன உளைச்சலால், அதனோடு சேர்ந்த உடல் உபாதைகளினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.)

அழுத்தங்கள் குறைவாக இருக்கும் காரணத்தினால், ஒருவர் சுதந்திரமாக தனது நன்மை குறித்து சிந்திக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால், அவராகவே ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொள்வதற்கோ, அல்லது நேரத்தை பயனுள்ள முறையில் கழிப்பதற்கோ முன்வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அடிப்படை வருமானம் தொடர்பான பரிசோதனை முயற்சி, வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ள, மேலும் சில உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நடைமுறைப் படுத்த ஆலோசிக்கப் பட்டுள்ளது.

ஐந்தாண்டு கால பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம், தற்போது வளர்ந்து வருவதாக சொல்லப் படுகின்றது. அதே நேரம், அடிக்கடி வேலை நிறுத்தங்களும் நடக்கின்றன. அண்மையில், ஜெர்மன் ரயில்வே ஊழியர்களும், நெதர்லாந்து காவல்துறையினரும் வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள்!

பொருளாதாரம் வளரும் நேரத்தில் எதற்காக வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். மேற்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு தான் அதற்குக் காரணம். நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நேரம், முதலாளிகள் பல சாக்குப் போக்கு சொல்லி சம்பளத்தை அதிகரிக்க மாட்டார்கள். ஆனால், பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் அது எதுவும் செல்லுபடியாகாது. இலாபத்தில் தமக்கும் பங்கு வேண்டும் என்று தொழிலாளர்கள் கேட்கத் தொடங்கி விடுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இலாப விகிதம், வருடத்திற்கு எந்தளவு அதிகரிக்கின்றது என்ற துல்லியமான விபரத்தை, பெரிய இடதுசாரி தொழிற்சங்கங்கள் எடுத்து வைத்துக் கொள்கின்றன. அதைக் காட்டி, தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்க வேண்டும் என்று பேரம் பேசுகின்றன. முதலாளிகள் இணங்க மறுக்கும் பட்சத்தில், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.

அவ்வாறு தான், நெதர்லாந்து காவல்துறையும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் குதித்தது. அதைத் தடுப்பதற்காக அரசு நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. "அத்தியாவசிய சேவையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது" என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. ஆனாலும், அந்த தீர்ப்பையும் மீறித் தான், காவல்துறையினர் வேலைநிறுத்தம் செய்தனர். நீதிமன்றம் தடை போட்டு விட்டது என்பதற்காக உரிமையை விட்டுக் கொடுக்க முடியுமா?

ஜெர்மனியில் வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. ஒவ்வொரு தொழிற்துறையும் ஒன்றை அடுத்து மற்றொன்று வேலைநிறுத்தத்தில் குதித்து வருகின்றன. பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டாலும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர்.

மேற்கு ஐரோப்பாவில் வாழும் உழைக்கும் வர்க்க மக்கள், போராடாமல் வாழ்க்கை இல்லை என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடாது. உலகில் எந்த முதலாளியும் தானாக சம்பளத்தை உயர்த்தித் தர மாட்டான். அதற்கு நிறுவனமயப் பட்ட தொழிற்சங்க நடவடிக்கை அவசியம்.


நெதர்லாந்தில் கருத்து சுதந்திரம் படும் பாடு

கடந்த வருடம் நிறவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் Fuck the King என்று கோஷம் எழுப்பிய ஆர்வலருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை எதிர்த்து, 6-5-2015 அன்று சில இனந்தெரியாத நபர்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள அரச மாளிகை சுவரில், Fuck the King என்று எழுதி இருந்தனர். நகரசபை நிர்வாகம், உடனே அந்த சுலோகத்தை அழித்து விட்டது. 

மேற்குலகில் கருத்து சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கிறது. நம்புங்கப்பா!

No comments: