Saturday, May 29, 2010

தென் கொரிய கப்பல் தகர்ப்பு மர்மம்

"தென் கொரிய கடற்படைக் கப்பல் ஒன்றை, வட கொரியா ஏவிய "டொர்பெடோ" ஏவுகணை மூழ்கடித்து விட்டது. 46 கடற்படை வீரர்கள் பலி. இந்த சம்பவத்தால் வட-தென் கொரியாக்களுக்கு இடையில் யுத்தம் மூளும் அபாயம் உள்ளது." அண்மைக்காலமாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் சர்வதேச செய்தி. வட கொரிய ஏவுகணை தான் கப்பலை மூழ்கடித்தது என்பதற்கு நம்பகத் தன்மை வாய்ந்த ஆதாரங்களை சமர்ப்பித்தார்களா? ஜனநாயகத் தூண்களான சுதந்திர ஊடகங்கள், மறுதரப்பு (வட கொரியா) என்ன சொல்கிறது என்று கேட்டு தெரிவித்தார்களா? இருதரப்பு வாதங்களைக் கேட்டு ஆராய்ந்து முடிவு எடுக்கும் பொறுப்பை மக்களிடம் விட்டு விட்டு நடுநிலைமை காத்தார்களா? இந்த விஷயத்தில் நமது தமிழ் ஊடகங்களை விட்டு விடுவோம். பாவம், அவர்களுக்கு சி.என்.என்., பி.பி.சி., ரோய்ட்டர் இவற்றை விட்டால் செய்தி சேகரிக்க வேறு வழி இல்லை. ஊடக சுதந்திரத்திற்கு இலக்கணம் எழுதிய சர்வதேச ஆங்கில ஊடகங்கள் இந்த விடயத்தில் நடுநிலை தவறிவிட்டன. சரியாக ஆராயாமல் வட கொரியா மீது குற்றம் சாட்டும் அரச கைக்கூலிகளாக செயற்படுகின்றனர்.

26 மார்ச் இரவு தென் கொரிய கடற்படைக் கப்பலான Cheonan வெடித்து மூழ்கியது. கப்பலில் இருந்த 104 பேரைக் கொண்ட கடற்படைக் குழுவில் 46 பேர் பலியானார்கள். 58 பேர் காப்பாற்றப் பட்டனர். ஆரம்பத்தில் கப்பல் வெடித்ததற்கான காரணம் அறியப்படவில்லை. சுமார் ஒரு மாதம் கழித்து, தென் கொரியா, அமெரிக்க, பிரிட்டிஷ் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் பின்னர், இது வட கொரிய ஏவுகணைத் தாக்குதல் என அறிவித்தனர். அவர்கள் காட்டிய ஆதாரங்களுக்கான நம்பகத் தன்மை இன்னும் உறுதி செய்யப் படவில்லை. அதற்கிடையில் கடலில் அத்துமீறிய வட கொரியா மீது போர் தொடுக்கும் எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. சம்பவம் குறித்து ஆரம்பத்தில் அறிவித்த தென் கொரிய ஊடகங்கள், இதனை வட கொரியாவின் செயலாக பார்க்கவில்லை. அவற்றில் வந்த ஆய்வுகளை இங்கே தொகுத்து தருகிறேன். பல தகவல்கள் சர்வதேச கவனத்தை பெறாதது ஆச்சரியமளிக்கிறது. மேலும் அவற்றை வெளியிட்ட தென் கொரிய ஊடகங்கள், வாயை மூடிக் கொண்டு அரசு சொல்வதை பிரதிபலிக்குமாறு, பின்னர் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

முதலில் கப்பல் தகர்ப்பு சம்பவம் நடைபெற்ற புவியியல் அமைவிடம் முக்கியமானது. வட கொரியாவையும், தென் கொரியாவையும் பிரிக்கும் கடல் எல்லைக் கோட்டில், அதுவும் வட கொரிய தலைநகர் பியங்கியாங் அருகில் (170 கி.மி.) கப்பல் தகர்க்கப் பட்டது. கப்பல் வெடித்த இடத்தில் இருந்து வட கொரியா வெறும் 20 கி.மி. தூரத்தில் இருந்தது. அந்த இடத்தில் தென் கொரியாவுக்கு சொந்தமான Baengnyeong என்ற தீவு உள்ளது. அந்த தீவில் வசிப்பவர்கள் தென் கொரிய பிரஜைகள். ஆயினும் அந்த தீவு தனக்கு சொந்தம் என்றும், தீவின் தென் பகுதியில் எல்லைக் கோட்டை பிரிக்குமாறு வட கொரியா கோரி வருகின்றது. வட கொரியா தீவுக்கு உரிமை கொண்டாடினாலும், கடல் பகுதியில் தென் கொரிய இறையாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரம் தென் கொரியாவுடனான படகுப் போக்குவரத்திற்கும் தடை ஏதும் கூறவில்லை.

மார்ச் மாதம் 26 ம் திகதி வரை பென்கியோங் தீவுக்கு அருகில் அமெரிக்க- தென் கொரிய கடற்படைக் கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. வட கொரியாவுக்கு மிக அருகில் நடந்த போர் ஒத்திகை, அந் நாட்டிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக பார்க்க இடமுண்டு. கூட்டுப்படைகளின் போர் ஒத்திகை பின்னர் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டது. தகர்க்கப்பட்ட ஷேனன் கடற்படைக் கப்பலும், மார்ச் 26 அன்று ஒத்திகையில் இருந்துள்ளது. இந்த தகவல்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. மேலும் தகர்க்கப்பட கப்பல் போர் ஒத்திகையில் ஈடுபடாமல் தனியாக ரோந்து சுற்றிக் கொண்டிருந்ததாகவும், பென்கியோங் தீவில் இருந்து 100 கி.மி. தூரத்திலேயே வெடித்ததாகவும் கொரிய அரசு தெரிவிக்கின்றது. கப்பல் வட கொரிய எல்லைக்கு அருகில் (பென்கியோங் தீவு அருகில்) தகர்க்கப்பட்டதாக தெரிவித்திருந்தால், வட கொரியா மீதான சந்தேகம் இறுகியிருக்கும். ஆனால் அப்படி சொல்லாமல் மறைக்கும் மர்மம் என்ன?

அமெரிக்க - தென் கொரிய கடற்படைகள் சாதாரண போர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கவில்லை. நீர்மூழ்கிக் கப்பல்களையும், கடலினுள் செலுத்தப்படும் Torpedo ஏவுகணைகளையும் கண்டறியும் சக்தி வாய்ந்த நவீன ரேடார்கள் பொருத்தப்பட்ட கப்பல்களே என்று பயிற்சியில் ஈடுபட்டன. தகர்க்கப் பட்ட சேனன் கப்பலிலும் அந்த ரேடார் பொருத்தப் பட்டிருந்தது. அப்படி இருக்கையில் தன்னை நோக்கி வந்த வட கொரிய கப்பலையும், தன் மீது ஏவப்பட்ட ஏவுகணையையும் அந்தக் கப்பல் கண்டுபிடித்து திருப்பித்தாக்க தவறி விட்டமை தெளிவாகின்றது. அப்படியானால் சக்திவாய்ந்த நவீன ரேடார் பல குறைபாடுகளை கொண்டுள்ளதை ஒத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து தென் கொரிய அரச தரப்பில் கூறப்படும் காரணம் "ரேடார் 70 வீதம் கண்டறியும் திறன் கொண்டது." இது பின்னர் வந்த அறிக்கையில் 50 வீதமாக குறைக்கப்பட்டது. (வட கொரியா மீதான குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்ப்பதற்காக).

கப்பல் தகர்ப்பு சம்பவம் நடைபெற்ற இடம் உலகிலேயே ஆபத்தான கடல் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கொரிய யுத்தம் முடிவடைந்த பின்னரும், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையில், கடல் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டன. 1970 ம் ஆண்டளவில், வட கொரிய ஊடுருவல்களை தடுப்பதற்காக தென் கொரிய பாதுகாப்ப்பு படைகள் அந்த கண்ணி வெடிகளை விதைத்திருந்தன. சமாதான பேச்சுவார்த்தைகளின் பின்னர், பத்து வீதமான கண்ணி வெடிகள் மட்டுமே அகற்றப்பட்டன. வெடித்த கப்பல் அவ்வாறான கண்ணி வெடியில் அகப்பட்டிருக்கலாம் என்று தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் தென் கொரியாவில் பெருமளவு பார்வையாளர்களைக் கொண்ட KBS தொலைக்காட்சி முற்றிலும் புதிய தகவல் ஒன்றை தெரிவித்தது. ஷேனன் கப்பல் தகர்க்கப்பட்டு மூழ்கிய அதே தினத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் கூட பென்கியோங் தீவுக்கு மிக அருகாமையில் நடந்துள்ளது. அந்த இடத்தில் அமெரிக்க படையினரின் தேடுதல் வேட்டை இடம்பெற்றதாகவும், இறந்த அமெரிக்க வீரரின் உடல் ஒன்று அமெரிக்க ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி தெரிவித்தது.
இது குறித்த விரிவான தகவல்களைத் தரும் வரைபடங்களும், வீடியோவும் கொரிய இணையத்தளத்தில் காணப்படுகின்றன. கடலில் மூழ்கிய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் பற்றி, மரணமடைந்த அமெரிக்க வீரர்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன?

அன்று கொரியக் கடலில் என்ன நடந்தது என்ற உண்மையை ஒன்றில் தென் கொரிய அரசு அல்லது அமெரிக்க அரசு தெரிவிக்க வேண்டும். உண்மை தானாகவே வெளிவரும் வரையில் நாம் சில ஊகங்களின் மூலமே புரிந்து கொள்ள முடியும். முதலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிய இடம் சுவாரஸ்யமானது. பென்கியோங் தீவை சுற்றியுள்ள கடற்பரப்பு ஆழம் குறைந்ததும், கற்பாறைகள் நிறைந்ததும் ஆகும். பொதுவாகவே தீவுக்கு அண்மையில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல் தரை தட்டி விடும். ஆனால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நின்ற இடம் தீவின் தென் பகுதி. (தீவின் வட பகுதி வட கொரியாவை நோக்கி உள்ளது.) தென் பகுதியில் உயர்ந்த மலைகள் உள்ளன. அவற்றின் அருகிலான கடல் பகுதி மட்டும் ஆழம் மிக்கது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அந்தப் பகுதியில் மாதக் கணக்காக ஒருவருக்கும் தெரியாமல் மறைந்திருக்க முடியும். அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலுக்கு அங்கே என்ன வேலை?

பென்கியோங் தீவு வட கொரியாவுக்கு அருகில் இருப்பதையும், அங்கிருந்து வட கொரியத் தலைநகர் பியாங்கியாங் 170 கி.மி. தூரத்தில் இருப்பதையும் மறந்து விடலாகாது. வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் யுத்தம் மூளும் நேரம், அந்த இடத்தில் இருந்து பியாங்கியாங் மீது இலகுவாக ஏவுகணையை செலுத்த முடியும். தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணை போன்று, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வரும் ஏவுகணையும் சம வல்லமை பொருந்தியது. அப்படியான ஏவுகணையில் அணுகுண்டு பொருத்தப்பட்டிருக்கும் என்பதை இங்கே கூறத் தேவையில்லை. தென் கொரிய மக்கள் வட கொரியாவில் இருப்பவர்களையும் தமது சகோதரர்களாகவே கருதுகின்றனர். அதனால் "வட கொரியா மீது தாக்குவதற்கு தயாராக, அணுகுண்டு பொருத்திய ஏவுகணையோடு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் காத்திருக்கின்றது" என்ற தகவல் தென் கொரியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். அந்தக் காரணத்தால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் பிரசன்னம் குறித்து, தென் கொரிய அரசுக்கும் அறிவித்திருக்க மாட்டார்கள்.

நீர்மூழ்கிக் கப்பல்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று, டீசலில் ஓடுவது. மற்றது, அணு சக்தியை பயன்படுத்துவது. டீசலில் ஓடும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி கடலின் மேற்பரப்பிற்கு வந்து போகும் நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால் அணு சக்தியால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அப்படியல்ல. மாதக் கணக்காக கடலினுள் மறைந்திருக்க முடியும். பெங்கியோங் தீவில் நிறுத்தப்பட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் அணுசக்தியில் இயக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. மார்ச் 26 அன்று, தகர்க்கப்பட்ட தென் கொரியக் கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடித்திருக்கலாம். (கப்பலில் விஷேச ரேடார் கருவி பொருத்தப் பட்டிருந்ததை நினைவில் கொள்க) அதனை வட கொரியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எனத் தவறாக புரிந்து கொண்டு தாக்கியிருக்கலாம். பதிலுக்கு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலும், தென் கொரியக் கப்பல் மீது தாக்கியிருக்கலாம். இதனால் இரண்டு கப்பல்களும் மூழ்கி இருக்கலாம். மேலும் மிக ரகசியமான திட்டம் என்பதால், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தன்னை நோக்கி வருவது தென் கொரிய கடற்படைக் கப்பல் என்று தெரிந்திருந்தாலும் ரேடியோ தொடர்பு கொண்டிருக்காது.

கப்பல் தகர்ப்பிற்கு காரணம் எதுவாக இருப்பினும், அதனை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. தென் கொரியாவில் வருகிற ஜூன் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. "வட கொரியாவுடன் சமாதானம் இல்லை. போர் தொடுக்க வேண்டும்." எனப் பிரச்சாரம் செய்யும் வலதுசாரி பழமைவாத கட்சி வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது. கப்பல் தகர்ப்பு சம்பவத்தின் பின்னர் வட கொரியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று என்பது வீதமான தென் கொரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் பென்டகனும் கொரியப் போர் மூள வேண்டுமென்று எதிர்பார்க்கலாம். அதற்கு காரணம் உள்ளது. 2012 ம் ஆண்டு, தென் கொரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளுக்கு கட்டளையிடும் அதிகாரம், தென் கொரிய அரசின் வசம் செல்கின்றது. அப்படியான காலகட்டம் சீனா தென் கொரியாவை வளைத்துப் போட இலகுவான காலம். தூர கிழக்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க அமெரிக்கா பாடுபடுகின்றது. தென் கொரிய கப்பல் தகர்க்கப் பட்ட இடம் சீனாவிற்கு அருகில் உள்ள கடல் பகுதி என்பது குறிப்பிடத் தக்கது.
_________________________

மேலதிக தகவல்களுக்கு:
Analysts question Korea torpedo incident
Photo Gallery: The Wreckage of the Cheonan
The sinking of the Cheonan: Another Gulf of Tonkin incident

9 comments:

வவ்வால் said...

Kelvipadatha puthiya thagavalkal.good post.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

ராஜேஷ் said...

உங்கள் சேவை மிகவும் பாராட்டதக்கது
நண்பா

நிகழ்காலத்தில்... said...

பொறுமையான, அக்கறையான தகவல்கள்.

நன்றி நண்பரே

Kalaiyarasan said...

வவ்வால், நிகழ்காலத்தில், ராஜேஷ் பாராட்டுகளுக்கு நன்றி.

News99 said...

உங்கள் தளத்தில் ஒவ்வொரு கட்டுரைகளும் அருமை... வாழ்த்துக்கள்..
"new world order" பற்றி கட்டுரைகள் தர முடியுமா ?

Kalaiyarasan said...

Haazi நன்றி, நிகழ்கால செய்திகளின் பின்னணி பற்றி தான் எழுதி வருகிறேன். நீங்கள் கேட்கும் விடயமும் எழுத வேண்டிய நேரம் வரும் பொழுது நிச்சயம் எழுதுவேன்.

தமிழ்ச்செல்வன் said...

மிகவும் அருமையான கட்டுரை. இதேபோல பல நிகழ்கால மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர வேண்டுகிறேன். நன்றி

Kalaiyarasan said...

நன்றி தமிழ்ச்செல்வன் அது தான் எனது கட்டுரைகளின் தனித்தன்மை