Tuesday, May 25, 2010

நெதர்லாந்து மே தின ஊர்வலத்தில் போலிஸ் அடக்குமுறை!


(Rotterdam, 1 மே 2010) மே தின ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. போலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து கலைத்தது. 16 பேர் கைது செய்யப்பட்டனர். எந்தவொரு வெகுஜன ஊடகத்திலும் இந்த செய்தி வரவில்லை. ஜனநாயக விழுமியங்களின் பாதுகாவலன், தனிமனித சுதந்திரங்களின் சொர்க்கபுரி, என்றெல்லாம் புகழப்படும் நெதர்லாந்தில் போலிஸ் அடக்குமுறை என்பது நம்புவதற்கு கஷ்டமாக இருக்கலாம். பொருளாதார நெருக்கடி காரணமாக உலகெங்கும் மக்கள் எழுச்சி ஏற்பட்டு வரும் காலத்தில், மே தின ஊர்வலம் போன்ற சிறு பொறியை கூட அணைக்க விரும்புகின்றது அதிகார வர்க்கம்.

நெதர்லாந்தின் தொழிற்துறை நகரமான ரொட்டர்டாமில் மட்டுமே மே தின அணிவகுப்பை காணலாம். கடந்த 30 வருடங்களாக "மே தினக் கமிட்டி" என்ற அமைப்பினரே ஊர்வலங்களை ஒழுங்கு செய்து வந்தனர். ரொட்டர்டாம் துறைமுகத்தில் வேலை செய்யும் துருக்கி தொழிலாளர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய அமைப்பு அது. சிறிய துருக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டமைப்பு. நெதர்லாந்தில் நலிவடைந்த இடதுசாரி அமைப்புகளும் அதில் பங்குபற்றின. இவர்களின் கூட்டு உழைப்பில் வருடாவருடம் மே தின ஊர்வலம் நடத்தப்பட்டு வந்தது. இந்த வருடமும் அவ்வாறு செய்வதற்கு ஏற்கனவே போலிஸ் அனுமதி வாங்கி இருந்தனர்.

ரொட்டர்டாம் மாநகர சபை கட்டிடத்திற்கு முன்னால் ஒன்று கூடிய ஆர்வலர்களை போலிஸ் சுற்றி வளைத்தது. பங்கேற்பாளர்களின் கைகளில் இருந்த செங்கொடிகளையும், சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஒப்படைக்கும் படி கேட்டது. அப்படி ஒப்படைக்கா விட்டால் ஊர்வலத்தை நகர அனுமதிக்க மாட்டோம், என போலிஸ் மிரட்டியது. ஆனால் அதற்குப் பின்னரும் மே தின ஊர்வலம் முன்னோக்கி செல்ல போலிஸ் அனுமதிக்கவில்லை. போலிஸ் நாய்களைக் கொண்டு சுற்றி வளைத்த படியே, கூட்டத்தின் மீது தடியடிப் பிரயோகம் செய்தது. எந்தவித தூண்டுதலும் இன்றி போலிஸ் தானாகவே இந்த அடக்குமுறையை ஏவி விட்டது. குறைந்தது 16 பேர் கைது செய்து இழுத்து செல்லப்பட்டனர். கண்மூடித் தனமான தடியடிப் பிரயோகம் காரணமாக ஊர்வலத்திற்கு வந்தவர்கள் கலைந்து செல்ல வேண்டி நேரிட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்ட அன்று, மே தினக் கமிட்டி நீதி மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தது. அப்போது எடுத்த புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.) அதே நேரம் மே தினக் கமிட்டியினர், போலிஸ் அத்துமீறலுக்கு எதிராக ரொட்டர்டாம் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

(மே தின துண்டுப் பிரசுரத்திலும், நீதிமன்ற ஆர்ப்பாட்ட பதாகையிலும் காணப்படும் சுலோகம்: "WE ARE'T GOING TO PAY THEIR CRISIS! FOR THE SOLIDARITY AND SOCIALISM!")

கீழே Rotterdam மே தின ஊர்வலத்தைக் கலைக்க பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்யும் வீடியோ காட்சி.




நெதர்லாந்தில் நைமேஹன் (Nijmegen) என்ற இடத்தில் நடைபெற்ற, சிறிய அளவிலான மே தின ஊர்வலத்தையும் பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து விரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கீழே உள்ளது "நைமேஹன் கலவரம்" குறித்து உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ.

No comments: