Monday, May 31, 2010

இரண்டாம் உலகப்போரும், முடிவுறாத மொழிப்போரும்

["மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!" - பெல்ஜிய பயணத் தொடரின் 3 ம் பகுதி]
பெல்ஜியத்தில் மீண்டும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நகர வீதிகளில் கட்சிகளின் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு என்றே தனியாக இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். பிற ஐரோப்பிய நாடுகளைப் போல, பெல்ஜியத்திலும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் அந்த இடங்கள் ஒதுக்கப்படும். ஆரம்பத்தில் தீவிர இடதுசாரிக் கட்சியான தொழிலாளர் கட்சியும், தீவிர வலதுசாரிக் கட்சியான பிலாம்ஸ் ப்ளோக்கும் அன்த்வேர்பன் நகரில் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தன. பின்னர், சோஷலிசக் கட்சி (& V ), கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (& V ) ஆகியனவற்றின் சுவரொட்டிகள் காணப்பட்டன. அது என்ன V ? V என்றால் Vlaanderen என்று அர்த்தம். அதாவது டச்சு பேசும் மக்களின் தாயகம். அதே போல பிரெஞ்சு பேசும் பகுதிகளில் கட்சிகளின் பெயர்களுக்கு பின்னால் W (Wallonie ) என்று குறிப்பிடுவார்கள். பெல்ஜியத்தில் கட்சிகள் எல்லாம் எவ்வாறு தேசியவாத அடிப்படையில் பிரிந்திருக்கின்றன என்பதை இது காட்டுகின்றது. அகதிகளுடனும், குடிவரவாளர்களுடனும் நட்பு பாராட்டும் (கம்யூனிச) தொழிலாளர் கட்சி மட்டும் நாடளாவிய ஒரே கட்சியாக உள்ளது.


பெல்ஜியத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படியே தேர்தல் நடக்கின்றது. நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்றால் ஐந்து வீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற வேண்டும். அனேகமாக சிறிய கட்சிகள் ஒரு போதும் ஐந்து வீத வாக்குகளைப் பெறுவதில்லை. தொழிலாளர் கட்சியும் அப்படித் தான். அன்த்வேர்பன் நகரில் அவர்களது காரியாலயத்திற்கு சென்றிருந்த பொழுது கட்சி உறுப்பினர்கள் கையெழுத்துகளை சேகரிக்கும் பணியில் இருந்தனர். தேர்தல் அறிவிக்கப்பட்டு குறைந்த காலத்திற்குள் பத்தாயிரம் கையெழுத்து சேகரிப்பது முடியாத காரியம் என்றனர். அவர்கள் தேர்தலைத் தவிர்ந்த சமூகப் பணிகளில் சிறப்பாக செயற்படுகின்றனர். மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் குறிப்பிடத் தக்கது. 'எல்லைகளற்ற மருத்துவர்கள்' பாணியில் இவர்களது சேவை சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வரப்பிரசாதம். குடிவரவாளர்களுடன் நட்புறவை உறுதிப்படுத்த தொழிலாளர் கட்சி ஒரு தடவை, அரபு-இஸ்லாமிய தேசியவாத கட்சியுடன் (AEL) சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. அது எவ்வளவு பெரிய தப்புக் கணக்கு என்பது பின்னர் தெளிவாகியது. Resist என்ற பெயரிலான கூட்டணி தேர்தலுக்கு பின்னர் காணாமல் போய் விட்டது. அதற்கு காரணம் ஒன்றோடொன்று முரண்படும் கொள்கை வேறுபாடுகள்.

வெளிநாட்டவர் எதிர்ப்பு என்று வந்து விட்டால், பெரிய கட்சிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசங்கள் மறைந்து விடும். பெல்ஜிய கட்சிகள் தமது மொழி, கலாச்சார உரிமைகளுக்காக, அவற்றை உயிரினிலும் மேலானதாக கருதி, குடுமிப்பிடி சண்டை பிடிக்கின்றனர். ஆனால் அதே நேரம் அந்நிய குடியேறிகள் தமது கலாச்சாரத்தை இறக்குமதி செய்வதை கடுமையாக எதிர்க்கின்றனர். கடைசியாக வீட்டுக்கு போன அமைச்சரவை, கலைக்கப்படுவதற்கு முன்னர் "பூர்க்கா தடை சட்டம்" போட்டு விட்டுத் தான் போனார்கள். சில நூறு பழமைவாத முஸ்லிம் பெண்கள் அணியும் பூர்காவை தடை செய்த இரண்டாவது ஐரோப்பிய நாடு பெல்ஜியம்.

பெல்ஜியத்தில் எப்போதும் கூட்டரசாங்கமே அமையும் என்பது அந்நாட்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் சிறப்பம்சம். பிரதிநிதித்துவ தேர்தல் முறையானது, ஒரு தொகுதியில் இரண்டு வேட்பாளர்களை தெரிவு செய்கின்றது. சிக்கலான தேர்வு முறையின் காரணமாக, எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற முடியாது. சில நேரம் "இவ்வளவு பணத்தை விரயம் செய்து எதற்காக தேர்தல் நடத்துகிறார்கள்?" எனக் கேட்கத் தோன்றும். ஏனெனில் எப்போதுமே தேர்தலின் பின்னர் மன்னர் நியமிக்கும் பிரதிநிதிகள் கட்சிகளுக்கு இடையில் பேரம் பேசி அமைச்சரவையை உருவாக்குவார்கள். இதற்காக தொழிற்சங்கங்களையும், தொழிலதிபர் சங்கங்களையும் கலந்தாலோசிப்பார்கள். எப்படியும் புதிய அமைச்சரவையில் டச்சு, பிரெஞ்சு மொழிவாரிக் கட்சிகள் சம பலத்துடன் வருமாறு பார்த்துக் கொள்வார்கள். பெல்ஜியத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கப் போவதில்லை. அதற்கு நாம் வேறு நாடுகளைத் தான் பார்க்க வேண்டும்.

பெல்ஜியம் மொழி வாரிப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட சமஷ்டி அமைப்பைக் கொண்டது. வடக்கே டச்சு மொழி பேசுவோருக்கு என தனியாக மாநில அரசு உள்ளது. அதன் நாடாளுமன்றம் அன்ட்வேர்பனில் கூடுகின்றது. அதே போல தெற்கில் பிரெஞ்சு மொழி பெசுவோருக்கென தனியான அரசும், அதற்கென நாமியூரில் (Namur) ஒரு நாடாளுமன்றத்தையும் கொண்டுள்ளது. இதை விட கிழக்கே (ஜெர்மனி எல்லையோரம்) ஜெர்மன் மொழி பேசும் சிறிய பிரதேசம் உள்ளது. அதற்கென ஒரு மாநில அரசும், எய்பன் (Eupen) என்ற இடத்தில் நாடாளுமன்றத்தை கொண்டுள்ளது. இந்த மொழிவாரி மாநில அரசுகளை "பொதுநல வாயம்" என அழைக்கின்றனர். இவை தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் கல்வி, கலாச்சாரம், ஊடகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் உரிமை கொண்டவை.

இவற்றை விட தலைநகரான புருசல்சும் [Brussel(Dutch),Bruxelles(French)], அதனை அண்டிய பகுதிகளும் தனியான மாநில அரசைக் கொண்டுள்ளன. புருசல்ஸ் நகரம் சட்டப்படி இரு மொழி பேசும் மாநிலம். ஆனால் அங்குள்ள பொது மக்கள் பிரெஞ்சு மட்டுமே பேசுகின்றனர். தபால் அலுவலகம், ரயில் நிலையம் போன்ற பொது மக்களுக்கு சேவை செய்யும் அரச திணைக்களங்களில் இரு மொழிப் புலமை வாய்ந்த ஊழியர்களை அமர்த்துகின்றனர். மற்றும் படி தெருவில் பிரெஞ்சு தெரியாமல் சமாளிக்க முடியாது. புருசல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த பகுதிகள் எப்போதுமே பிரச்சினைக்கு உரியவை. ஏனெனில் புருசல்ஸ் நகரை சுற்றி வர நாற்புறமும் டச்சு பேசும் பகுதிகள் உள்ளன. இவற்றில் புருசல்ஸ் மாவட்ட ஆட்சிக்கு உட்பட்ட இரண்டு ஊர்களில் பிரெஞ்சு மொழியை அலுவலக ஆட்சி மொழியாக இருப்பதை எதிர்த்த பிரச்சினையால் தான் அண்மையில் மத்திய அரசாங்கம் கவிழ்ந்தது.

டச்சு பேசும் பெல்ஜியர்களும், பிரெஞ்சு பேசும் பெல்ஜியர்களும் அற்ப விஷயத்திற்காக எல்லாம் மொழிப் போரில் ஈடுபடுகிறார்கள். ஜேர்மன் பேசும் மக்கள் மட்டும் இந்தப் பிரச்சினைகளுக்குள் மாட்டாமல் தனியே ஒதுங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு என்று தொலைக்காட்சி, பத்திரிகை எல்லாம் இருக்கின்றது. அதனோடு திருப்திப் படுகின்றனர். சுற்ற வர பிரெஞ்சு மொழி ஊர்கள் இருப்பதால், பிரெஞ்சை இரண்டாம் மொழியாக பேசுகின்றனர். இந்த ஜேர்மன் மொழி பேசும் பிரதேசம் முதலாம் உலக யுத்த முடிவில் வென்ற பெல்ஜியத்திற்கு தானமாக வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் ஆரம்பத்தில் ஹிட்லர் அதற்கு உரிமை கோரினான். ஜேர்மனியோடு இணைக்க விரும்பினான். ஆனால் ஹிட்லரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத பெல்ஜிய ஜேர்மனியர்கள் அதனை விரும்பவில்லை. பெல்ஜியத்தை நாஜிகள் ஆக்கிரமித்த காலத்திலும், அதற்கு பிறகும் பெல்ஜிய அரசுக்கு விசுவாசமாக இருந்தார்கள்.

ஐரோப்பாவில் யூதர்கள் அதிகமாக வாழும் நகரங்களில் அன்ட்வேர்பன் முக்கியமானது. இன்றைக்கும் நகர மத்திய பகுதியில் வாழும் யூத சமூகத்தினர், 500 வருட பழமை வாய்ந்த கலாச்சாரத்தை பின்பற்றுவதை காணலாம். அன்ட்வெர்பன் நகரம் சர்வதேச வைர வியாபாரத் தலைநகரம் என அழைக்கப் படுகின்றது. நீண்ட காலமாக யூதர்கள் வைர வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள். தற்போது (குஜராத்தி) இந்தியர்கள் மலிவு விலை வைரம் கொண்டு வந்து விற்பதால், அவர்களின் பங்களிப்பு குறைந்து வருகின்றது. வைர வியாபாரத்தில் போட்டி போடும் இரு இனத்தவர்களும், "பணக்கார குடியிருப்பு" என அழைக்கப்படும் பகுதியில் அருகருகே வாழ்கின்றனர். ஒரு காலத்தில் ஐரோப்பிய யூதர்களின் மொழியாக இருந்த "யிட்டிஷ்" (ஹீபுரு, ஜெர்மன், ஸ்லாவிய மொழிச் சொற்கள் கலந்த மொழி) இன்றைக்கும் அன்ட்வேர்பன் நகரில் வாழும் 20000 யூதர்களால் பேசப் பட்டு வருகின்றது. நெதர்லாந்தைப் போல, பெல்ஜியமும் வர்த்தகத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த காரணத்தால், பல நூற்றாண்டுகளாக யூதர்களின் புகலிடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில், நாஜி ஆக்கிரமிப்பின் போது சுமார் 25000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

நாஜிகள் பெல்ஜியர்களை ஆரிய இன சகோதரர்களாக கருதியதாலோ என்னவோ, கடுமையான அடக்குமுறை இருக்கவில்லை. அந்த காலங்களில் ஜேர்மனியில் வேலை வாய்ப்பு இருந்ததால் பலர் ஜெர்மனி சென்றனர். அதே நேரம் தீவிர டச்சு தேசியவாதிகளும், தீவிர பிரெஞ்சு தேசியவாதிகளும் நாஜிகளுடன் ஒத்துழைத்தார்கள். இவர்கள் இன்றைக்கும் இனவாத கட்சிகளின் முன்னணி உறுப்பினர்களாக உள்ளனர். பெல்ஜியதை நாஜிகள் ஆக்கிரமித்திருந்த காலங்களில் (பெல்ஜிய) கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவு கெரில்லா படை ஒன்றை கட்டியது. நாஜி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடந்த ஒரேயொரு ஆயுதப் போராட்டம் கம்யூனிஸ்ட்களுடையது.

போர் முடிந்த பின்னர் நடை பெற்ற தேர்தலில், கம்யூனிஸ்ட்கள் பெரும் வெற்றியீட்டி அதிக ஆசனங்களை கைப்பற்றி இருந்தார்கள். ஆயினும் போரின் பின்னால் ஆட்சியில் அமர்ந்த பெல்ஜிய அரசு கம்யூனிச எதிர்ப்பு கொள்கைகளை பின்பற்றியது. அமெரிக்க, பிரிட்டிஷ் இராணுவங்கள் பெல்ஜியத்தை விடுதலை செய்ததாக இன்றைக்கும் சரித்திரத்தில் எழுதப் பட்டுள்ளது. இதன் மூலம் கம்யூனிச ஆயுதப் போராட்டம் மறைக்கப்பட்டது. அது மட்டுமல்ல, அன்று இருந்த சோவியத் அதிபர் ஸ்டாலின் எதிர்ப்பு பிரச்சாரம், பெல்ஜிய கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக பாதித்தது. அரசின் திட்டமிட்ட எதிர்ப்பு வியூகங்களை தாங்க மாட்டாத கம்யூனிஸ்ட் கட்சி ஸ்டாலினிஸத்தை நிராகரிப்பதாக அறிவித்தது. இருப்பினும் அது கூட கட்சியை காப்பாற்றவில்லை. இன்று ஒரு சில நூறு பேர்கள் மாத்திரம் கட்சி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பெல்ஜிய அரசின் "கம்யூனிச எதிர்ப்பு புனிதப் போர்" பெரியண்ணனின் பக்க பலமில்லாமல் நடக்கவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் நாட்டை கட்டி எழுப்புவதற்காக அமெரிக்காவின் நிதியுதவி தேவைப் பட்டது. மாஷல் உதவி என்ற பெயரில் கொட்டப் பட்ட பெருமளவு நிதியைக் கொண்டு நவீன பெல்ஜியம் உருவானது. உள் நாட்டு தொழிலாளர் பற்றாக்குறையினால் மொரோக்கோ, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் தருவிக்கப் பட்டனர். இவர்களின் உழைப்பால் பெல்ஜியம் செல்வந்த நாடாகியது. தனது மக்களின் வாழ்கை வசதிகளை குறைவிலாது செய்து கொடுத்தது. இதனால் மக்களை கம்யூனிசத்தின் பக்கம் தலை வைத்துப் படுக்க விடாமல் செய்து விட்டதாக அரசு நினைத்துக் கொண்டிருந்தது. 1968 ம் ஆண்டு அரசு முற்றிலும் எதிர்பாராத ஒரு இடத்தில் இருந்து, திடீரென "கம்யூனிச பூதம்" புறப்பட்டது.

(தொடரும்)


பெல்ஜியம் பயணத் தொடரின் முன்னைய பதிவுகள்:
2.மத்தியில் மன்னராட்சி, மாநிலத்தில் சமஷ்டி
1.மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!

3 comments:

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

ராஜரத்தினம் said...

Whatever you blabber it is like you blamed for "Hindu terrorist" for Mumbai attack. First read and analyse and give your findings.Simply you live in excile in some country and start blabber. When you will stop this?

Vijay Vasu said...

I UNDERSTAND A LOT OF HISTORY FROM YOUR BLOG. Thank you!