Showing posts with label தென் கொரியா. Show all posts
Showing posts with label தென் கொரியா. Show all posts

Saturday, February 19, 2022

தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்!


தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்! ஆம், நீங்கள் சரியாகத் தான் வாசித்தீர்கள். வட கொரியா அல்ல,தென் கொரியா தான். இது பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் தென்கொரியர்கள் பற்றிய தகவல் அல்ல. (அதுவும் நடக்கிறது தான்.) ஆனால், கிம்மின் "சர்வாதிகார" ஆட்சி நடக்கும் வடகொரியாவில் இருந்து தப்பியோடி, சுதந்திரமாக வாழ்வதற்காக "ஜனநாயக" ஆட்சி நடக்கும் தென் கொரியாவில் தஞ்சம் கோரிய அகதிகள் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள்.

தென் கொரியாவில் தஞ்சம் கோரி வாழ்ந்து வந்த வடகொரிய அகதியான Han Sung-ok எனும்  42 வயது தாயும், அவளது ஆறு வயது மகனும் வீட்டில் சாப்பிட எதுவுமில்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். ஆமாம், முதலாளித்துவ சொர்க்கபுரியான ஒரு "செல்வந்த" நாட்டில், ஒரு குடும்பம்  சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்தது செத்த அவலம் நடந்திருக்கிறது! (ஆதாரம்: She fled North Korea for a better life. She died with her young son in an apartment in Seoul

இந்த சம்பவம் நடந்தே மூன்று வருடங்கள் ஆகின்றன. இருப்பினும்,  இந்தக் கொடுமை தென் கொரியாவில் நடந்த படியால்பெருமளவில் ஊடகக் கவனத்தை பெறவில்லை. இதுவே வடகொரியாவில் நடந்திருந்தால், இந்நேரம் தமிழ் ஊடகங்கள் எல்லாம் மாறி மாறி ஒப்பாரி வைத்து கதறி அழுதிருப்பார்கள். என்ன செய்வது? அவர்கள் இறந்தது முதலாளித்துவ சொர்க்கபுரியான தென் கொரியாவில் அல்லவா? அதனால் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்கிறார்கள். 

அந்தத் தாயும் மகனும் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு தண்ணீர் மீட்டர் அளக்க வந்த பரிசோதகர், ஒரு வீட்டிலிருந்து வித்தியாசமான மணம், பிண வாடை வந்த படியால், உடனடியாக பொலிசிற்கு அறிவித்திருக்கிறார். அவர்கள் வந்து பார்த்த நேரம், அந்த வீட்டிற்குள் இரண்டு அழுகிய பிணங்களும் வெறுமையான குளிர்சாதனப் பெட்டியும் இருந்தன. அவர்கள் மாதக் கணக்காக சாப்பாடு எதுவும் இல்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். 

ஏற்கனவே அந்தக் குடும்பத்தினர் பல மாதங்களாக வீட்டு வாடகை, எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கட்டணங்களை செலுத்த முடியாமல் அவதிப் பட்டிருக்கிறார்கள். பில்லுக்கு மேல் பில் என, கடனுக்கு மேல் கடன் சேர்த்து வைத்திருந்திருக்கிறார்கள். வேலையுமின்றி, அரச உதவியுமின்றி, தெருவில் உணவுக்காக பிச்சை கேட்டு கையேந்த வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளே பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள். 

ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் வட கொரியாவில் இருந்திருந்தால் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்கள். வட கொரியாவில் யாரும் வீட்டு வாடகை கட்டுவதில்லை. எல்லோரும் சொந்த வீடுகளில் குடியிருக்கிறார்கள். எரிபொருள் கட்டணம் மிக மிகக் குறைவு. தண்ணீருக்கு செலவே இல்லை. எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதனால் வருமானம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானியத்தில் கிடைக்கின்றன. அதனால் யாரும் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால், நமது தமிழ் ஊடகங்கள் என்ன சொல்கின்றன? வட கொரியாவில் மக்கள் எல்லோரும் பட்டினி கிடப்பதாக புளுகுகின்றன. சாப்பாடு இல்லாமல் புல்லைத் திண்கிறார்கள் என்று ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுவார்கள். அதையும் நம்புவதற்கு நாட்டில் ஏராளமான முட்டாள்கள் இருக்கிறார்கள். 

அது சரி, தென் கொரியாவுக்கு வருவோம். பனிப்போர் காலத்தில் தென் கொரியாவுக்கு வந்த வட கொரிய அகதிகளுக்கு, அரசு தாராளமாக நிதியுதவி செய்தது. அகதிகள் வந்தவுடன் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து, வீட்டு வசதிகளையும் செய்து கொடுத்து வந்தது. உண்மையில் வடகொரியாவில் வாழ்பவர்களுக்கு வசதி, வாய்ப்புகள், பணம் மீதான ஆசை காட்டி அவர்களை தென் கொரியாவுக்கு வரவழைக்கும் வகையில் கவர்வது தான் அதன் நோக்கம். 

ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு தென் கொரிய அரசு வட கொரிய அகதிகளுக்கு நிதி ஒதுக்குவது படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பனிப்போர் முடிந்த பின்னர், உலக ஒழுங்கு மாறி விட்டது. மேலும், அந்தக் காலகட்டத்தில் வட கொரியாவில் வரட்சி, வெள்ளப்பெருக்கு காரணமாக பஞ்சம் ஏற்பட்ட படியால் பெருமளவு அகதிகள் வந்து விடுவார்கள் என்று அஞ்சி இருக்கலாம். தொண்ணூறுகளுக்கு பின்னர், வட கொரிய பொருளாதாரம் மாற்றமடைந்து, தென் கொரிய நிறுவனங்களும் முதலிடும் வகையில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் வந்து விட்டது. அதனால் தற்போது எந்தவிதமான சித்தாந்த முரண்பாடுகளும் கிடையாது. 

வட கொரியாவில் வறுமை இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதனால், வடகொரியாவில் இருந்து செல்லும் அகதிகள், தென் கொரியாவுக்கு பிழைப்பு தேடிச் செல்கிறார்கள் என்று சொன்னாலும் தவறில்லை. ஆனால், அவர்கள் அறியாத உண்மை ஒன்றுள்ளது. தென் கொரியாவிலும் வறுமை இருக்கிறது. அது வட கொரிய வறுமையை விட பல மடங்கு கொடுமையானது என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். 

உண்மையில் தொண்ணூறு சதவீதமான வட கொரிய அகதிகள், அவர்களது தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் தென் கொரியா பற்றிய கற்பனைகளை வளர்த்து வந்ததாக தெரிவிக்கிறார்கள். பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கையை காட்டும் தென் கொரிய படங்கள், டிராமா சீரியல் பார்த்து விட்டு, இப்படித் தான் சாதாரண தென் கொரிய மக்கள் வாழ்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தாங்களும் அங்கே சென்றால் ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என கனவு கண்டிருக்கிறார்கள். ஆனால், தென் கொரியாவுக்கு வந்த பின்னர் தான் யதார்த்தம் அவர்களது முகத்தில் அறையும். 

வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்கள் அனைவரும் இனத்தால் கொரியர்கள் தான். ஒரே கொரிய மொழி தான் பேசுகிறார்கள். ஆனால், வட கொரியர்களின் வட்டார பேச்சு வழக்கு வித்தியாசமாக இருக்கும். அதுவே அவர்களை காட்டிக் கொடுத்து விடும். வட கொரிய பேச்சு மொழியை கேட்டால் வேலை தர மாட்டார்கள். தனியார் முதலாளிகள் வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டுவார்கள். தொழிற்துறையில் பெரும்பாலும் தனியார்மயம் கோலோச்சும் நாட்டில் அரச உதவியை எதிர்பார்க்க முடியுமா? ஏமாற்றம். மிகப் பெரிய ஏமாற்றம். 

தென் கொரிய பாடசாலைகளில் படிக்கும் வட கொரிய பிள்ளைகள் பேசும் வட்டார வழக்கு காரணமாக பிற மாணவர்களின் கேலிக்கு உள்ளாகிறார்கள். இதனால் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வேலைக்கு செல்பவர்கள் பலர். இந்தக் காலத்தில் எவனாவது டிப்ளோமா இல்லாமல் வேலை கொடுப்பானா? அதனால், அதிக உடல் உழைப்பை கோரும் அடி மட்ட வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலைமை. 

ஏன், வட கொரியாவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், மேல் மட்ட பதவிகளில் இருந்தவர்களுக்கும் அது தான் நிலைமை. தென் கொரியாவில் அவர்களது தகுதிக்கேற்ற வேலை கிடைக்காது. அவர்களும் சாதாரண கூலித்தொழில் செய்து பிழைக்க வேண்டிய அவல நிலை. முன்பு வட கொரிய இராணுவத்தில் நல்ல பதவியில் இருந்த ஒருவர், இன்று தென் கொரியாவில் குப்பைகள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்கிறார். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்வதை விட வட கொரியாவில் இருந்து செத்திருக்கலாம் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார். 

வட கொரிய அகதிகள் வரும் பொழுதே கடன் சுமையுடன் தான் வருகிறார்கள்.  சட்டவிரோத எல்லை கடத்தல் மூலம் சீனா ஊடாக அழைத்து வரும் "பயண முகவர்களுக்கு" ஆயிரக்கணக்கான டாலர்கள் கடன் கொடுக்க வேண்டி இருக்கும். அந்தக் கடனை அடைப்பதற்காகவே தென் கொரியாவில் வருடக் கணக்காக வேலை செய்ய வேண்டி இருக்கும். அரச உதவித் தொகையும் மிச்சம் பிடித்து கடனை அடைப்பதற்கு செலவாகி விடுகிறது. அதனால் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. தென் கொரியாவில் தஞ்சமடைந்த வட கொரிய அகதிகள் பட்டினி கிடந்தது சாவதற்கு இதுவும் ஒரு காரணம். 

பெரும்பாலும் வட கொரிய அகதிகளுக்கு இலகுவாக தென்கொரிய நண்பர்கள் கிடைப்பதில்லை. அவர்கள் இவர்களை தாழ்வாக பார்ப்பார்கள். அதைவிட தென்கொரிய தேசியவாதிகளின் துன்புறுத்தல்கள் வேறு. வடகொரியா எப்போதாவது ஏவுகணை சோதனை செய்து விட்டால், தேசியவாதிகளின் உணர்வுகள் உச்சத்திற்கு சென்று விடும். அந்நேரம் கண்ணில் அகப்படும் வடகொரியர்களை வறுத்தெடுத்து விடுவார்கள். 

சரி, தஞ்சம் புகுந்த நாட்டில் தான் வரவேற்பில்லை. தாயகத்தில் இருக்கும் உறவுகளோடு பேசி துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றால், அதற்கும் தடை போட்டிருக்கிறார்கள். அதாவது, தென்கொரியாவில் வாழும் யாரும் வடகொரியாவில் இருப்பவர்களுடன் தொடர்பு வைக்க முடியாது.  தொலைபேசி, கடிதப் போக்குவரத்து எதுவுமே இருக்கக் கூடாது. ஆமாம், தென் கொரிய அரசு தான் இந்தளவு கடுமையான தடைகளை போட்டிருக்கிறது. 

தென்கொரியாவுக்கு வந்த அகதிகளில் குறிப்பிட்ட அளவில் சிலர் மட்டுமே வசதியாக வாழ்கிறார்கள். ஏனையோர் வாழ்க்கையை நடத்த  முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். தென் கொரியாவில் தொட்டதெற்கெல்லாம் பணம். கையில் காசு இல்லையா? யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தெருவில் படுத்தால் என்ன, செத்துத் தொலைந்தால் என்ன கண்ணை மூடிக் கொண்டு சென்று விடுவார்கள். 

இப்படியான நரகத்தில் வாழப் பிடிக்காமல், பலர் வடகொரியாவுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள். அதுவும் சட்டவிரோதமாகத் தான்.  தென் கொரியாவில் வாழும் அகதிகளில் குறைந்தது சில ஆயிரம் பேராவது வடகொரியாவுக்கு திரும்பிச் சென்று விட்டார்கள். உண்மையில் தென் கொரிய அரசு அனுமதித்தால் இன்னும் பல ஆயிரம் அகதிகள் தாமாக திரும்பிச் சென்று விடுவார்கள். ஆனால், அதற்கான எல்லா வழிகளையும் தென் கொரிய அரசு அடைத்து வைத்திருக்கிறது.

Wednesday, March 11, 2020

Crash Landing on You: ஒரு வட கொரிய - தென் கொரிய காதல் கதை

Crash Landing on You - அவசியம் பார்க்க வேண்டிய Netflix தொலைக்காட்சித் தொடர். வட கொரியாவில் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் கண்டு களிக்கலாம். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப் பட்டுள்ளது.

இது ஒரு தென் கொரிய தொலைக்காட்சித் தொடர். கதையின் பெரும் பகுதி வட கொரியாவில் நடப்பதைப் போன்று ஸ்டூடியோவில் படமாக்கப் பட்டது. இதற்காகவே வட கொரிய மாதிரிக் கிராமம் ஒன்றை அமைத்திருந்தனர். தென் கொரியாவில் வாழும் வட கொரிய அகதிகளும் தமது தாயகத்திற்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டதாக பாராட்டி உள்ளனர்.

இந்தத் தொடரின் கதையும், அதில் வரும் பாத்திரங்களும் கற்பனை தான். சுருக்கமாக ஒரு வழமையான காதல் கதை. மென்மையான காதல் உணர்வுகள், நகைச்சுவைக் காட்சிகள், வில்லனின் சூழ்ச்சிகள், மர்ம முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் அடங்கிய ஒரு சாதாரண தொலைக்காட்சித் தொடர். சிலநேரம் ஒரு தமிழ்த் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

தென் கொரியாவில் ஒரு பெரிய குடும்ப வணிக நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபரின் மகளான கதாநாயகியை சுற்றி கதை நகர்கிறது. அவள் ஒரு தடவை பொழுதுபோக்காக பாரசூட்டில் பறக்கும் போது அடித்த சூறாவளிக்குள் மாட்டிக் கொண்டதால் வாழ்க்கை திசை மாறுகிறது. தற்செயலாக வட கொரியாவுக்குள் வந்து இறங்கி விடுகிறாள். அங்கு எல்லைக் காவல் பணியில் இருக்கும் கதாநாயகனான வட கொரிய இராணுவ கேப்டன் மேல் வந்து விழுகிறாள்.

அங்கிருந்து தப்பி தென் கொரியாவுக்கு சென்று விட வேண்டும் என்பதற்காக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப் பட்ட சூனியப் பிரதேசத்தின் ஊடாக ஓடுகிறாள். இருப்பினும் வழி தவறி திரும்பவும் வட கொரியாவுக்குள் வந்து விடுகிறாள். அதுவும் கதாநாயகன் குடியிருக்கும் கிராமத்திற்கே நேரே வந்து விடுகிறாள்! கதாநாயகன் அவளைத் தனது வீட்டில் மறைத்து வைத்திருக்க உடன்படுகிறான். அவனது படைப்பிரிவில் பணியில் உள்ள வீரர்களும் அந்த இரகசியத்தை பாதுகாக்கிறார்கள்.

காதாநாயகன் ஒரு சாதாரணமான கடைநிலை இராணுவ கேப்டன் போன்று காட்டப் பட்டாலும், அவனும் அரசியல் செல்வாக்கு மிக்க ஒரு வட கொரிய தலைவரின் மகன் தான். முன்பொரு தடவை எல்லைப்புற பகுதியில் நடந்த தனது சகோதரனின் மர்ம மரணத்திற்கு காரணம் யார் என்று துப்புத் துலக்குவதற்காக எல்லைப் படையில் சேர்ந்திருக்கிறான். சகோதரனின் கொலைக்குக் காரணமான இராணுவ அதிகாரி தான் வில்லன். மாபியாக் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கிறான்.

ஒரு தடவை எல்லைப் பகுதி கிராமத்தில் நடக்கும் வழமையான தேடுதலின் பொழுது வீட்டிற்குள் மறைந்திருந்த கதாநாயகி கண்டுபிடிக்கப் படுகிறாள். அந்நேரம் தலைநகர் பியாங்கியாங் சென்றிருந்த கதாநாயகன் விடயத்தை கேள்விப் பட்டு உடனே அங்கே வருகிறான். கதாநாயகி தென் கொரியாவில் இரகசிய உளவு வேளைகளில் ஈடுபட்டு நாடு திரும்பி இருப்பதாகவும், அவள் தனக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் என்றும் பொய் சொல்லி காப்பாற்றுகிறான். இருப்பினும் வில்லனான இராணுவ அதிகாரிக்கு சந்தேகம் தீரவில்லை. தொடர்ந்து ஆராய்கிறான். இதற்கிடையில் பியாங்கியாங் நகரில் இருந்து கதாநாயகனுக்கு பெற்றோரால் நிச்சயிக்கப் பட்ட முறைப்பெண் அவனைத் தேடி வருகிறாள்.

கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையிலான காதல் நிறைவேறியதா? கதாநாயகி தென் கொரியாவுக்கு திரும்பிச் சென்றாளா? மிகுதியை தொலைக்காட்சி தொடர் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற கதை வேறொரு இடத்திலும் நடக்கலாம். தற்செயலாக வழிதவறிச் செல்லும் ஒரு பணக்கார வீட்டுப் பெண், திக்குத் தெரியாத கிராமத்தில் மாட்டிக் கொள்வதும், மாளிகை போன்ற வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்தவள் ஏழையின் குடிசையில் எளிமையாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும், ஏற்கனவே பல தமிழ்த் திரைப்படங்களில் வந்த கதை. அதே தான் இந்த தென் கொரிய படத்தின் கதையும்! வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான கலாச்சார வேறுபாடுகள் மட்டும் இதில் உள்ள சிறப்பம்சம் எனலாம்.

வட கொரிய கிராமத்தில் வந்து சேரும் முதல் நாளில் இருந்து, கதாநாயகி கலாச்சார அதிர்ச்சிக்கு பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுகிறது. அங்கு யாரிடமும் மொபைல் போன் கிடையாது. (ஆனால் தலைநகர் பியாங்கியாங்கில் வசிப்பவர்கள் மொபைல் போன் பாவிக்கிறார்கள்.) வீட்டில் குளிர் சாதனப் பெட்டி கிடையாது. அதற்குப் பதிலாக, காய்கறிகளை ஒரு கிடங்கிற்குள் போட்டு மூடும் (kimchi) பாரம்பரிய குளிரூட்டும் முறையை பயன்படுத்துகிறார்கள். (கதாநாயகி அதை இயற்கை வழியிலான "Organic" முறை என்று புரிந்து கொள்கிறாள்.) அத்துடன் குளிப்பதற்கு சுடு நீர் கிடையாது. தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு தொட்டிக்குள் ஊற்றி விட்டு, நீராவி வெளியேற விடாமல் சுற்றிவர பொலிதீன் திரையால் மூடிக் கொண்டு குளிக்க வேண்டும்.

கொரிய மொழி ஒன்று தான் என்றாலும், வடக்கிலும் தெற்கிலும் பேசப்படும் மொழயில் வேறுபாடு இருக்கிறது. அது பிராந்திய பேச்சு மொழி வேறுபாடு என்பதற்கும் அப்பால், சில சொற்களின் பயன்பாடும் மாறுபடுகின்றது.(படத்தில் தென் கொரிய நடிகர்கள் வட கொரிய வட்டார மொழி பேசுகின்றனர்.) அதனால் கதாநாயகி தென் கொரியாவில் இருந்து வந்தவள் என்பதை அனைவரும் எடுத்த உடனே புரிந்து கொண்டு விடுவார்கள். அவளும் தான் "தென் கொரியாவில் வசிக்கும் இரகசிய உளவாளி" என்று சொல்லித் தான் ஊர் மக்களுடன் பழகுகிறாள். அதை அவர்களும் நம்புகிறார்கள். வட கொரிய பெண்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் இந்தப் படத்தில் மிகவும் இயல்பாகக் காட்டப் படுகின்றது. பெண்கள் ஊர் வம்பளப்பது எங்கும் உள்ள வழக்கம் தான். தமிழ்நாட்டுப் பெண்கள் எப்படியோ, அப்படித் தான் வட கொரியப் பெண்களும் இருக்கிறார்கள்.

கிராமிய மக்களின் கள்ளங்கபடம் அற்ற மனப்பான்மையும், நகரத்து மனிதர்களின் சூது வாது கொண்ட மனமும் தொடரில் சிறப்பாகக் காட்டப் படுகின்றது. உதாரணத்திற்கு, தென் கொரியாவில் கதாநாயகி காணாமல்போன நாள் முதல் அவளது சகோதரர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதும், நிறுவனத்தில் அவளின் பெயரில் உள்ள பங்குகள் தமக்குச் சேர வேண்டும் என்று சண்டை பிடிப்பதும் தத்ரூபமாக காட்டப் படுகின்றது. வட கொரிய கிராமத்தில் வசிப்பவர்களுக்கு பங்கு என்றால் என்னவென்று தெரியாது. அதைப் பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு எளிமையாக வாழ்கிறார்கள்.

இன்றைய வட கொரியா சோஷலிச நாடும் அல்ல, அதே நேரம் முதலாளித்துவ நாடும் அல்ல. அது இரண்டும் கலந்த சமூக பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ளது. பியாங்கியாங் நகரில் தனியார் நிறுவனங்களை நிர்வகிக்கும் வட கொரிய தொழிலதிபர்கள் வசதியாக வாழ்கிறார்கள். அவர்களது நுகர்வுக்கு தேவையான நவீன பாவனைப் பொருட்கள் அனைத்தும் அங்கு கிடைக்கின்றன. கடத்தல் மூலம் கொண்டுவரப்படும் தென் கொரிய பாவனைப் பொருட்கள் கிராமிய சந்தைகளிலும் விற்கப் படுகின்றன. அது எல்லோருக்கும் தெரிந்த "இரகசியம்"! அத்துடன் தென் கொரிய தொலைக்காட்சி டிராமா சீரியல்களும் வட கொரியர்களால் விரும்பிப் பார்க்கப் படுகின்றன. அரசாங்கம் இவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறது.

நீங்கள் இதுவரை காலமும் வட கொரியா பற்றி கேள்விப் பட்ட கட்டுக்கதைகள் எல்லாம் இந்தத் தொடரை பார்த்த பின்னர் விலகி விடும். வேண்டுமென்றே வட கொரியா பற்றிய பொய்ச் செய்திகளை பரப்பி வரும் விஷமிகள் இதைப் பார்த்தாலும் திருந்தப் போவதில்லை. தென் கொரியாவில் இந்த தொலைக்காட்சித் தொடர் வெளியானதும், வலதுசாரி கிறிஸ்தவ லிபரல் கட்சி அதற்கு எதிராக வழக்குப் போட்டது. அதாவது, வட கொரியா பற்றி நல்லபடியாக பேசுவது தென் கொரியாவில் ஒரு குற்றமாம்! அந்நாட்டில் அப்படியும் ஒரு சட்டம் உள்ளது!! அதனால் தான் பலர் வட கொரியா பற்றி இல்லாத பொல்லாத கதைகளை எல்லாம் மனம்போன போக்கில் அடித்து விடுகிறார்கள். 


Sunday, July 02, 2017

வட கொரியாவில் பொருளாதாரம் வளர்கிறது! மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது!!


"வ‌ட‌ கொரிய‌ர்க‌ள் ப‌ட்டினி கிட‌க்கிறார்க‌ள்... புல்லைச் சாப்பிடுகிறார்க‌ள்" என்று வாய் கூசாம‌ல் புளுகிய‌ ப‌ன்னாடைக‌ளைக் க‌ண்டால் இதைத் தெரிவியுங்க‌ள்:

பொருளாதார‌த் த‌டைக‌ளுக்கு ம‌த்தியிலும் வட‌ கொரிய‌ பொருளாதார‌ம் வ‌ள‌ர்ந்து கொண்டிருப்ப‌தாக‌வும், ம‌க்க‌ளிட‌ம் தாராள‌மான‌ ப‌ண‌ப் புழ‌க்க‌ம் அதிக‌ரித்துள்ள‌தாக‌வும், நெத‌ர்லாந்து ப‌த்திரிகையான‌ NRC Handelsblad (1-7-17) த‌கவ‌ல் தெரிவித்துள்ள‌து.

பியாங்கியாங் ந‌க‌ரில் வ‌ருடாந்த‌ம் ந‌ட‌க்கும் ச‌ர்வ‌தேச‌ வ‌ர்த்த‌க‌ ச‌ந்தையில் ட‌ச்சு வ‌ணிக‌ர்க‌ளும் க‌டை போட்டிருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளுட‌ன் சென்ற‌ செய்தியாள‌ர் தெரிவித்த‌ விப‌ர‌ங்க‌ள்:

ச‌ந்தையில் பெரும‌ள‌வு சீன‌ வியாபாரிக‌ளை காண‌க் கூடிய‌தாக‌ உள்ள‌து. அடுத்த‌ இட‌த்தில் ஈரானிய‌ர்க‌ள் அதிக‌ம். இந்த‌ இரு நாடுக‌ளும் வ‌ட‌ கொரியாவுட‌னான‌ வ‌ர்த்த‌க‌த் தொட‌ர்பால் அதிக‌ ஆதாய‌ம் பெறுகின்ற‌ன‌. வ‌ருடாவ‌ருட‌ம் க‌ண்காட்சி போன்று ந‌ட‌க்கும் ச‌ந்தையில், சாதார‌ண‌ வீட்டுப் பாவ‌னைப் பொருட்க‌ள் ம‌ட்டும‌ல்லாது, கார் கூட‌ விற்ப‌னையாகிற‌து.

அங்கு வ‌ரும் வ‌ட‌ கொரிய‌ வாடிக்கையாள‌ர்கள் ம‌ருந்துக‌ள், மின்ன‌ணு உப‌க‌ர‌ண‌ங்க‌ள், என்று ப‌ல‌ பாவ‌னைப் பொருட்க‌ளை பெட்டி பெட்டியாக‌ வாங்கிச் செல்கின்ற‌ன‌ர். ஒவ்வொரு வ‌ருட‌மும் விற்ப‌னை கூடிக் கொண்டு செல்வ‌தாக‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

"என‌து நிறுவ‌ன‌த்திற்கு இலாப‌ம் வ‌ர‌வில்லை என்றால், என்னை எத‌ற்கு வ‌ட‌ கொரியாவுக்கு அனுப்ப‌ப் போகிறார்க‌ள்?" என்று ஒரு சீன‌ விற்ப‌னையாள‌ர் கேட்டார். "தான் முத‌ல் த‌ட‌வையாக,‌ க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் வ‌ந்த‌ நேர‌ம், இந்த‌ள‌வு வியாபார‌ம் ந‌ட‌க்கும் என்று நினைத்திருக்க‌வில்லை" என்று ஓர் ஈரானிய‌ர் கூறினார்.

வ‌ட‌ கொரிய‌ வாடிக்கையாள‌ர்க‌ள் கைக‌ளில் அமெரிக்க‌ டால‌ர், சீன‌ ரென்மினி போன்ற‌ ச‌ர்வ‌தேச‌ நாண‌ய‌ங்க‌ள் தாராள‌மாக‌ப் புழ‌ங்குகின்ற‌ன‌. அந்த‌ ச‌ந்தையில் பொருட்க‌ளை வாங்குவ‌த‌ற்கு அந்நிய‌ செலாவ‌ணி அவ‌சிய‌ம். அங்கு யாருமே வ‌ட‌ கொரிய‌ நாண‌ய‌ம் கொடுத்து வாங்க‌வில்லை.

பொருளாதார‌த் த‌டைக‌ளால் நாற்புற‌மும் மூட‌ப் ப‌ட்டுள்ள‌ வ‌ட‌ கொரியாவுக்குள், அந்நிய‌ நாண‌ய‌ங்க‌ள் செல்வ‌து எப்ப‌டி என்ப‌து ஒரு புரியாத‌ புதிர். சீனாவுட‌னான‌ வ‌ர்த்த‌க‌த் தொட‌ர்பு ம‌ட்டும் கார‌ணம் அல்ல‌. ஏராள‌மான‌ வ‌ட‌ கொரிய‌ர்க‌ள், ர‌ஷ்யா, சீனா, ம‌ற்றும் ஐரோப்பிய‌ நாடுக‌ளில் வேலை செய்து ப‌ண‌ம் அனுப்புகிறார்க‌ள். அத்துட‌ன் க‌ட‌த்த‌லும் தாராள‌மாக‌ ந‌ட‌க்கிற‌து.

வ‌ட‌ கொரியாவின் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சி கார‌ண‌மாக‌, 2011 ம் ஆண்டில் இருந்து வட‌ கொரிய‌ உழைப்பாளிக‌ளின் ச‌ம்ப‌ள‌ம் வ‌ருட‌த்திற்கு 2% கூடிக் கொண்டிருக்கிற‌து. வீட்டு வாட‌கை இல்லை. கல்வி, மருத்துவ செலவு இலவசம். எரிபொருள், போக்குவ‌ர‌த்து செல‌வும் மிக‌க் குறைவு. இத‌னால் சராசரி வட கொரியரின் கையில் மிஞ்சும் ப‌ண‌மும் கூடியுள்ள‌து.

அண்மைக் கால‌த்தில் வ‌ட‌ கொரிய‌ பொருளாதார‌த்தில் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ சீர்திருத்த‌ங்க‌ளும் அத‌ன் வ‌ள‌ர்ச்சிக்கு கார‌ண‌ம். தென்கொரிய‌ பொருளிய‌ல் நிபுண‌ர்க‌ளே இதை உறுதிப் ப‌டுத்தி உள்ள‌ன‌ர்.

தென் அமெரிக்க மத்திய வங்கியின் கணிப்பின் படி, வட கொரியாவின் பொருளாதார வளர்ச்சி வருடத்திற்கு 1,5 முதல் 3 சதவீதமாக இருக்கலாம். கடந்த ஐந்து வருடங்களில், வட கொரியர்களின் வருடாந்த சம்பளம் 1.000 இலிருந்து 1.500 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

பெருமளவு வர்த்தகம் சீனாவுடன் நடக்கிறது என்பது வெள்ளிடைமலை. சந்தையில் நவீன சீன வாகனங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. வட கொரிய தெருக்களில் சீன வாகனங்களே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் சீன இயந்திரங்களே வேலை செய்கின்றன.

சீனாவுடனான மொத்த வர்த்தகம், 1995 ம் ஆண்டு அரை பில்லியன் டாலர் அளவில் இருந்தது. 2016 ம் ஆண்டு அது 5,5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இவை சீன சுங்கத்துறை, மற்றும் உலக வர்த்தக கழகம் ஆகியவற்றில் இருந்து எடுத்த தகவல்கள். சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான வர்த்தகத்துடன் (44 பில்லியன் டாலர்) ஒப்பிடும் பொழுது அது ஒன்றுமே இல்லை. இருப்பினும் அந்தத் தொகையானது வட கொரிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு போதுமானதாக இருந்தது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், தொண்ணூறுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மறைந்து கொண்டிருக்கிறது. உழவர்கள் வயல்களில் மாடு கட்டி உழுவதும், கையால் உபகரணங்களை பாவிப்பதும், இன்னமும் சில இடங்களில் உள்ளது. ஆனால், நகரங்கள் மட்டுமல்லாது, கிராமங்களும் விரைவாக நவீனமயமாகிக் கொண்டிருக்கின்றன. வொன்சான் போகும் வழி நெடுகிலும், கூரையில் சூரிய ஒளிக் கலங்களுடன், புதிய கல்வீடுகள் கட்டப்படும் காட்சியைக் காணலாம்.

வட கொரிய பொருளியல் நிபுணர்களுடன் பேசினால், இப்போதும் அவர்கள் "தேசியத் தலைவர்" கிம் இல் சுங் பெயரைக் குறிப்பிட்டுப் பேசத் தயங்குவதில்லை. தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட, கிம் இல் சுங் உருவாக்கிய ஜூச்சே சித்தாந்தம் தற்போதும் நடைமுறையில் இருப்பதாக அரசு சொல்லிக் கொள்கிறது. இருப்பினும், வட கொரியப் பொருளாதாரம் பெருமளவு சீனாவில் தங்கியுள்ளது. எண்ணை கூட சீனாவில் இருந்து தான் வருகின்றது.

சீனாவில் தங்கியிருப்பதானது, ஒரு பக்கத்தில் வரப்பிரசாதமாகவும், மறுபக்கத்தில் பெரும் ஆபத்தாகவும் கருதப் படுகின்றது. அண்மையில், சீன பெற்றோலிய நிறுவனம், இன்னமும் கட்ட வேண்டிய பணம் பாக்கி இருப்பதாக கூறி, வட கொரியாவுக்கான எண்ணை விநியோகத்தை துண்டித்தது. 

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சீனா அவ்வாறு நடந்து கொண்டது என்று வட கொரிய அரசு குற்றம் சாட்டுகின்றது. அணுவாயுத ஏவுகணைத் திட்டத்தை கைவிடச் சொல்லியே அந்த அழுத்தம் பிரயோகிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், தம்மைத் தலைநிமிர வைத்த அணுவாயுத திட்டத்தை கைவிடுவதற்கு வட கொரியர்கள் தயாராக இல்லை.

Monday, May 15, 2017

தென் கொரியா : சாம்சுங் கம்பனி ஆட்சி நடக்கும் தேசம்

வீடிழந்து மெட்ரோ ரயில் நிலையத்தில் படுக்கும் தென்கொரியர்கள். இது தான் "சுதந்திரம்"!
"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" பற்றித் தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?

அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர் ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார்.

இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.

தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.

ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ தென்கொரிய‌ர்க‌ள் சாம்சுங் நிறுவ‌ன‌த்தில் வேலை செய்கிறார்க‌ள். "நல்ல‌ ச‌ம்ப‌ள‌ம், போன‌ஸ்" கிடைக்கிற‌து என்ப‌த‌ற்காக‌ ப‌ல‌ர் திருப்திப் ப‌ட‌லாம். ஆனால் அத‌ற்குப் பின்னால் உள்ள‌ அவ‌ல‌ங்க‌ள் வெளியே தெரிவ‌தில்லை.

நாளொன்றுக்கு 14 ம‌ணிநேர‌ம் வேலை செய்வ‌து அங்கே ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். வேலைப்ப‌ளு, பிற‌ கெடுபிடிக‌ள் கார‌ண‌மாக‌ த‌ற்கொலை செய்து கொண்ட‌வ‌ர்க‌ள் ப‌ல‌ருண்டு.

சாம்சுங் நிறுவ‌ன‌த்தின் 75 வ‌ருட‌ கால‌ வ‌ர‌லாற்றில் தொழிற்ச‌ங்க‌ம் அமைக்க‌ அனும‌திக்க‌வில்லை. தொழிலாள‌ர்க‌ளின் நீண்ட‌ கால‌ போராட்ட‌த்தின் பின்ன‌ர், சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் தான் அனும‌தித்தார்க‌ள். தொழிற்ச‌ங்க‌த்தை உருவாக்கிய‌ தொழிலாள‌ர் த‌லைவ‌ர் ம‌ர்ம‌மான‌ முறையில் த‌ற்கொலை செய்து கொண்டார். அது ஒரு கொலையாக‌ இருக்க‌லாமா? அதை விசாரிக்க‌ப் போவ‌து யார்? அர‌சும், காவ‌ல்துறையும் சாம்சுங் நிறுவ‌ன‌த்திற்கு விசுவாச‌மாக‌ இருக்கும் நாட்டில் உண்மை வெளிவ‌ரும் என்று எதிர்பார்க்க‌லாமா?

(த‌க‌வ‌ல்: அவுஸ்திரேலிய‌ SBS தொலைக்காட்சி ஆவ‌ண‌ப்ப‌ட‌ம்.)

******

தென் கொரியா: ந‌ர‌க‌த்தில் இருந்து வெளியேறக் காத்திருக்கும் இளைஞ‌ர்க‌ள்

Young South Koreans call their country ‘hell’ and look for ways out. (The Washington Post, January31, 2016)

வ‌ட‌ கொரியாவை ப‌ற்றி மிக‌ மோச‌மாக‌ க‌ற்ப‌னை செய்து க‌ட்டுக்க‌தைக‌ளை ப‌ர‌ப்பும் விஷ‌மிக‌ள், தென் கொரியா ப‌ற்றி ஆஹா ஓஹோ என்று புக‌ழ்ந்து பேசுவார்க‌ள். ஆனால் தென் கொரிய‌ ம‌க்க‌ள், குறிப்பாக‌ இளைஞ‌ர்க‌ள், த‌ம‌து நாட்டை ந‌ர‌க‌ம் என்று வ‌ர்ணிக்கிறார்க‌ள்.

ப‌ண‌க்கார‌ குடும்பங்க‌ளை சேர்ந்த‌ பிள்ளைக‌ள் ம‌ட்டுமே, உய‌ர் க‌ல்வி க‌ற்று உய‌ர் ப‌த‌வி வ‌கிக்கும் வாய்ப்புக‌ளை பெறுகிறார்க‌ள். அந்த‌ப் பிள்ளைக‌ள் த‌ர‌மான‌ க‌ல்விக்கு செல‌விடும் அள‌விற்கு வ‌ச‌தியாக‌ உள்ள‌ன‌ர். ப‌ண‌ வ‌ச‌தியில்லாத‌ குடும்ப‌ங்க‌ளை சேர்ந்த‌ பிள்ளைக‌ள் அதையெல்லாம் நினைத்தும் பார்க்க‌ முடியாது.

"சொகுசான‌" அலுவ‌ல‌க‌ வேலை செய்யும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ர் கூட‌ க‌டும் வேலைப் ப‌ளுவினால் அவ‌திப் ப‌டுகின்ற‌ன‌ர். அதிக‌ நேர‌ம் வேலை செய்ய‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். ச‌ம்ப‌ள‌ம் கூட‌ ஒழுங்காக‌ வ‌ருவ‌தில்லை.

உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌ பிரான்ட் பொருட்க‌ளை உற்ப‌த்தி செய்யும் சாம்சுங், ஹையுன்டாய் போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ளிலும் ப‌ணிப் பாதுகாப்பு கிடைப்ப‌தில்லை. விரும்பிய‌ நேர‌ம் வேலையில் இருந்து தூக்கி வீச‌ப் ப‌ட‌லாம். முதுமை அடைந்தால் முன்கூட்டியே ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ப் ப‌ட‌லாம்.

தென் கொரியாவில் த‌ம‌க்கு எதிர்கால‌ம் இல்லையென்ப‌தை உண‌ர்ந்து கொண்ட‌ இளைஞ‌ர்க‌ள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று புல‌ம்பெய‌ர்ந்து செல்கிறார்க‌ள். அமெரிக்க‌ இராணுவ‌த்தில் சேர்ந்து ப‌ணியாற்றினால் குறுக்கு வ‌ழியில் அமெரிக்க‌ குடியுரிமை கிடைக்கும், பிற்கால‌த்தில் அமெரிக்காவில் குடியேற‌லாம் என‌ ந‌ம்புகிறார்க‌ள்.

பிற்குறிப்பு: வ‌ட‌ கொரியாவில் மேற்குறிப்பிட்ட‌ பிர‌ச்சினை எதுவும் கிடையாது. ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் வ‌ரையில் க‌ல்வி அனைவ‌ருக்கும் இல‌வ‌ச‌ம். தொழில் வாய்ப்புக‌ள் நிச்ச‌ய‌ம். ப‌ணியில் அம‌ர்ந்தால் அது நிர‌ந்த‌ர‌ம். யாரையும் இல‌குவில் வீட்டுக்கு அனுப்ப‌ முடியாது. ச‌ம்ப‌ள‌ம் மிக‌க் குறைவாக‌ இருந்தாலும் குடியிருக்கும் வீட்டுக்கு வாட‌கை இல்லை. எரிபொருள், போக்குவ‌ர‌த்து செல‌வும் மிக‌ மிக‌க் குறைவு.


Thursday, May 04, 2017

அமெரிக்கா கொரியாவில் நடத்திய இனப்படுகொலை மறைக்கப் படுவது ஏன்?


எந்தப் பெரிய மதிப்புக்குரிய ஊடகமாக இருந்தாலும், வட கொரியா விடயத்தில் பொய்களையும், புளுகுகளையும் துணிந்து சொல்லலாம். விரும்பியவாறு கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடலாம். யாரும் ஏனென்று கேட்க மாட்டார்கள். மக்களை அந்தளவுக்கு மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். 

வட கொரியா பற்றி தமிழ் ஊடகங்கள் தெரிவிக்கும் கட்டுக் கதைகளுக்கு "மர்ம மன்னன்", "மர்ம தேசம்" என்றெல்லாம் பெயர் வைப்பார்கள். அவற்றைப் பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள் திகில் உணர்வுடன் இரசிப்பார்கள். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று,மெல்ல மெல்ல நச்சுக் கருத்துக்கள் மூளைக்குள் திணிக்கப் பட்டு விடும்.

தமிழகத்திலும், இலங்கையிலும் அதிகளவு விற்பனையாகும் ஆனந்த விகடன் சஞ்சிகையில் (26 Apr, 2017 ) மர்ம மன்னன்! என்ற பெயரில் ஓர் அபத்தக் கட்டுரை பிரசுரமாகி உள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் பற்றி கிண்டல் அடிக்கிறார்களாம். கட்டுரை எழுத முன்னர் இணையத்தில் தேடிப் பார்த்தார்களாம். "வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் என்ன சாப்பிடுவார்?" "கேக், கம்ப்யூட்டர், கட்டடம், கார் மற்றும் நாய்க்குட்டி." இப்படி எல்லாம் இருந்ததாம். இண்டர்வியூ என்ற ஹாலிவூட் படத்தைப் பார்த்து விட்டும் இப்படி எழுதலாம். "வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் பொழுதுபோக்கு என்ன?" "நீலப் படம் பார்ப்பது...அழகான பெண்களுடன் கும்மாளம் அடிப்பது..." இப்படி எல்லாம் பாலியல் சுவை ததும்பவும் எழுதலாம். வாசிப்பவர்களுக்கும் கிளுகிளுப்பாக இருக்கும்.

அது சரி. கட்டுரை எழுதுவதற்கு முன்னர் கொஞ்சமாவது ஆய்வு செய்து பார்க்க வேண்டாமா? அதெல்லாம் எதற்கு? தமிழர்கள் அந்தளவு அறிவாளிகளா? வட கொரியா பற்றி எப்படிப் புளுகினாலும் நம்புவதற்கு பல வடி கட்டிய முட்டாள்கள் இருக்கிறார்கள். வட கொரியா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அணுவாயுதம் தயாரித்து வைத்திருக்கிறது. ஆனால், அது அண்மையில் எழுந்த பிரச்சினை என்பது போல கட்டுரையாளர் எழுதும் புளுகுக் கதை அபாரம். 

கட்டுரையில் இவ்வாறு இருக்கிறது: 
//அமெரிக்காவைச் சீண்டிக்கொண்டே இருப்பது, கிம்முக்குப் பிடித்த பொழுதுபோக்கு. சென்ற ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அணு ஆயுதப் பரிசோதனையை வட கொரியா நிகழ்த்தியபோது, அமெரிக்கா மட்டுமல்ல உலகமே அச்சத்துடன் திரும்பிப் பார்த்தது. எப்படியாவது அணு ஆயுதப் பரிசோதனையில் வெற்றிபெற வேண்டும் என்று தீராத துடிப்புடன் இருக்கிறார் கிம். அதற்கான காரணம் புரிந்து கொள்ளக் கூடியது தான்.//

கட்டுரையாளரே! உங்களுக்கு இணையம் பாவிக்கத் தெரியும் தானே? கொஞ்சம் தேடிப் பார்க்கலாமே? தொண்ணூறுகளில், அதாவது பனிப்போர் முடிவில், வட கொரியா அணு உலைகள் கட்டுவதாக தகவல்கள் வந்தன. அப்போதே அணுவாயுதம் தயாரிக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. உலகில் எந்த நாட்டுடனும் வர்த்தகத் தொடர்பில்லாமல் தனிமைப் படுத்தப் பட்டிருந்த வட கொரியா, எரிசக்தி தேவைக்காக அணு உலை அமைப்பதாக சொல்லிக் கொண்டாலும், இன்னொரு எதிர்பாராத நோக்கமும் இருந்தது. அமெரிக்காவிடம் இருந்து பொருளாதார உதவி பெற்றுக் கொள்வது!

வட கொரியாவும், இந்தியா, இலங்கை மாதிரி ஒரு மூன்றாமுலக வறிய நாடு தான். இருப்பினும், மேற்குலக நாடுகள் இந்தியா, இலங்கைக்கு வழங்குவது வட்டியுடனான கடன். ஆனால், அதே நாடுகள் வட கொரியாவுக்கு கொடுத்தது நன்கொடை! 

வட கொரியாவின் அணு உலைத் திட்டத்தை கைவிடுமாறு, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை மூலம் அழுத்தம் கொடுத்தது. அதன் படி, சர்வதேச மேற்பார்வையின் கீழ் அணு உலை அகற்றுவதற்கு வட கொரியா சம்மதித்தது. அமெரிக்கா அதற்கு பதிலாக இலவச உணவுப் பொருட்களும், பெருமளவு பணமும் கொடுத்திருந்தது. 

நண்பர்களே இவர்களில் யார் புத்திசாலி? மேற்குலகிற்கு சமர்த்துப் பிள்ளையாக நடந்து, வாங்கிய கடனை வட்டியுடன் ஒழுங்காக கட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவா? அல்லது அணுகுண்டை காட்டி மிரட்டி செல்வந்த நாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுக் கொள்ளும் வட கொரியாவா?

அணுவாயுதம் வைத்திருப்பது தான் பிரச்சினை என்றால், பின்வரும் கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்வார்களா?

1. கொரிய‌ப் போரானது, யுத்த நிறுத்தத்தில் முடிந்து ப‌ல‌ த‌சாப்த‌ கால‌மாகியும், அமெரிக்க‌ ஆக்கிர‌மிப்புப் ப‌டைக‌ள் தென் கொரியாவை விட்டு வெளியேற‌ ம‌றுப்ப‌து ஏன்?

2. அமெரிக்கா தனது ஆயிர‌க்க‌ணக்கான‌ ப‌டையின‌ரை ம‌ட்டும‌ல்லாது, அணுவாயுத‌ங்க‌ளையும் தென் கொரியாவில் குவித்து வைத்திருந்தது ஏன்? அவற்றை இப்போதும் அங்கிருந்து அகற்ற மறுப்பது ஏன்?

3. ஏற்கனவே ஜப்பான் மீது அணுகுண்டு வீசி, பல இலட்சம் அப்பாவி மக்களைக் படுகொலை செய்த அமெரிக்கா, கொரியா மீது அணுகுண்டு வீசவும் திட்டமிட்டிருந்தது. இதனை அன்றைய அமெரிக்க படைத் தளபதி மக் ஆர்தர் உறுதிப் படுத்தி உள்ளார். அப்போதே அணுகுண்டு வீச நினைத்த எதிரி இடமிருந்து வேறு எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்?

முன்பு சோஷலிச நாடுகள் இருந்த காலத்தில், சோவியத் யூனியன், சீனா இரண்டுடனும் வட கொரியா நெருக்கமான உறவுகளைப் பேணியது அனைவரும் அறிந்த விடயம். அப்போதே அவ்விரண்டு நாடுகளிடம் இருந்தும் அணுவாயுத உதவி கோரப் பட்டது. ஆனால், இரண்டு சோஷலிச வல்லரசுகளும் அணுவாயுதம் தருவதற்கு சம்மதிக்கவில்லை.

அணுகுண்டு தயாரிப்பதற்கான அறிவு வட கொரியாவுக்கு எப்படிக் கிடைத்தது என்பது இன்று வரையில் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. அனேகமாக, பாகிஸ்தான் மூலமாக கிடைத்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. நெதர்லாந்தில் கல்வி கற்ற பாகிஸ்தானிய விஞ்ஞானி கான், அணுத் தொழில்நுட்ப இரகசியங்களை கடத்திச் சென்றிருந்தார். அதை வைத்துத் தான் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரித்தது. அனேகமாக, கான் தனது தகவல்களை வட கொரியாவுடன் பகிர்ந்து கொண்டிருக்கலாம்.

பனிப்போரின் முடிவில், அமெரிக்கா ஒற்றை வல்லரசாகியது. அது தனக்கு எதிரான நாடுகளை "தீய நாடுகளின் அச்சு" எனப் பிரகடனம் செய்திருந்தது. சர்வதேச சமூகத்தால் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கப் பட்ட நாடுகளில் வட கொரியாவும் ஒன்று. அப்போதே ஒதுக்கப் பட்ட நாடுகள் ஒன்று சேரத் தொடங்கி விட்டன. தம்மிடமிருந்த வளங்களை பகிர்ந்து கொண்டன. உதாரணத்திற்கு, வட கொரியா கடாபியின் லிபியாவுக்கு பெருமளவு ஆயுதங்களை விற்றது. ஈரானிய பாவனைப் பொருட்கள் வட கொரியாவுக்கு ஏற்றுமதியாகின.

சதாம் ஹுசைனின் ஈராக்கும், கடாபியின் லிபியாவும் அணுகுண்டு மாதிரி பேரழிவு தரும் ஆயுதங்கள் வைத்திருப்பதாக அமெரிக்காவால் குற்றஞ் சாட்டப் பட்டன. உண்மையிலேயே அங்கு இரசாயன ஆயுதங்கள் இருந்துள்ளன. சர்வதேச அழுத்தம் காரணமாக, ஐ.நா. மேற்பார்வையின் கீழ் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டன. அதற்குப் பிறகு என்ன நடந்தது? ஈராக்கில் சதாமும், லிபியாவில் கடாபியும் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டனர். அமெரிக்க இராணுவப் படையெடுப்புகளால் பாதிக்கப் பட்டு, அந்த நாடுகள் சின்னாபின்னமாகின.

வட கொரியா தனது அணுவாயுதக் கொள்கைக்கு, ஈராக், லிபியாவில் நடந்தவற்றை காரணமாக சுட்டிக் காட்டுகின்றது. அதாவது, சர்வதேச அழுத்ததிற்கு அடிபணிந்து அணுவாயுதத்தை அழிப்பதற்கு ஒப்புக் கொண்டிருந்தால், வட கொரியாவும் இன்று இருந்த இடம் தெரியாமல் காணாமல்போயிருக்கும். மேலும் அருகில் சீனா என்ற வல்லரசின் ஆதரவு இருப்பதும் வட கொரியாவுக்கு சாதகமாகப் போய் விட்டது.

சீனாவுக்கு வட கொரியா மீது தனிப்பட்ட பாசம் எதுவும் கிடையாது. முன்பிருந்த சித்தாந்த உறவு இப்போது இல்லை. இன்றைய சீனா ஒரு முதலாளித்துவ நாடு என்பதால், பணத்திற்கே முன்னுரிமை. இருப்பினும், வட  கொரியாவால் சீனாவுக்கு சில அரசியல் ஆதாயங்கள் உள்ளன.

முதலாவதாக, வட கொரியா நிர்மூலமானால் அங்கிருந்து வெளியேறும் பெருமளவு அகதிகள் சீனாவில் தான் தஞ்சம் கோருவார்கள். இரண்டாவதாக, கொரியா ஒரே நாடானால் அமெரிக்க இராணுவம் சீன எல்லை வரை வந்து விடும். இந்த அபாயத்தை தடுப்பதற்கு, வட கொரியா தொடர்ந்தும் இருப்பதே சீனாவுக்கு பாதுகாப்பானது.


அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் அப்படி என்ன தகராறு? நம்மில் பலருக்கு வரலாறு தெரியாது, அல்லது பழைய வரலாற்றை வசதியாக மறந்து விடுகிறோம். 1950 - 1953, இந்த மூன்று வருடங்களுக்குள் நடந்த போரில் மாத்திரம், கொரிய சனத்தொகையில் இருபது சதவீதம் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் அழித்தொழிக்கப் பட்டனர். அன்று நடந்த இனப்படுகொலையை மூடி மறைக்க வேண்டிய காரணம் என்ன? அன்று அமெரிக்க படையினர் புரிந்த போர்க்குற்றங்களுக்கு எந்த நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்தது?

இரண்டாம் உலகப்போரில், ஆசியாவில் ஜப்பானை தோற்கடிப்பதற்கு அமெரிக்கா போட்ட குண்டுகளை விட அதிகமாக கொரியா என்ற சிறிய நிலப்பரப்பினுள் போடப் பட்டன. 635,000 தொன் குண்டுகள்! அதைவிட 32,557 தொன் நேபாம் நச்சுவாயுக் குண்டுகள் போடப் பட்டுள்ளன!! வட கொரியாவில் (தென் கொரியாவிலும் சில பகுதிகளில்) இருந்த நகரங்கள், கிராமங்கள் ஒன்று விடாமல் தரைமட்டமாக்கப் பட்டன. மூன்று மில்லியன் பொதுமக்கள் குண்டுவீச்சில் கொல்லப் பட்டனர்.
(ஆதாரம்: Air Force General Curtis LeMay, head of the Strategic Air Command during the Korean War, “we killed off … 20 percent of the population”?)

இருபது, முப்பது அணுகுண்டுகளை போட்டு, கொரியப் போரை பத்து நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்ட அமெரிக்க படைத் தளபதி ஜெனரல் மக் ஆர்தர் (Douglas MacArthur) பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இதிலே வேடிக்கை என்னவென்றால், அவர் ஐ.நா. சமாதானப் படையின் தளபதியாகத் தான் கொரியாவில் போரிட்டார்!

வட கொரியாவை விட்டு விடுவோம். தென் கொரியாவில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப் பட்டவர்கள் எத்தனை பேர்? தென் கொரியாவில், நோகன்ரீ எனும் இடத்தில், பாதுகாப்புத் தேடி பாலத்தின் கீழ் பதுங்கி இருந்த நூற்றுக் கணக்கான பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொன்றனர். (ஆதாரம்: G.I.'s Tell of a U.S. Massacre in Korean War) இது போர்க்குற்றம் அல்லவா? அதற்காக யாருக்காவது தண்டனை கிடைத்துள்ளதா? இன்று வரையில் இல்லை.

அமெரிக்க‌ப் ப‌டைக‌ள் ஆக்கிர‌மித்திருந்த‌ தென் கொரியாவில், ம‌க்க‌ள் ம‌த்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த‌‌ கொரிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி த‌டை செய்யப் ப‌ட்ட‌து. அங்கு இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சி கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. அடுத்து வ‌ந்த‌ ப‌ல‌ த‌சாப்த‌ கால‌மாக‌, தென் கொரியாவில் கொடூர‌மான‌ இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌ந்த‌து. தென் கொரியாவில் எண்ப‌துக‌ள் வ‌ரையில் தேர்த‌ல் என்ற‌ பேச்சுக்கே இட‌ம் இருக்க‌வில்லை. க‌ருத்துச் சுத‌ந்திர‌ம் ந‌சுக்க‌ப் ப‌ட்ட‌து. ம‌னித‌ உரிமைக‌ள் மீற‌ப் ப‌ட்ட‌ன‌. கொரிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி மீதான‌ தடை இப்போதும் தொட‌ர்கின்ற‌து.

கொரிய‌ப் போருக்குப் பின் அமெரிக்கா ஆத‌ரித்த‌ கொரிய‌ இராணுவ‌ ஆட்சியாள‌ர்க‌ள், முன்பு கொரியாவை கால‌னிப் ப‌டுத்திய‌ எதிரிக‌ளான‌ ஜ‌ப்பானிய‌ருட‌ன் ஒத்துழைத்த‌வ‌ர்க‌ள். அதாவது ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் என அழைக்கப் பட்டவர்கள். அத‌னால் ம‌க்க‌ளின் வெறுப்புக்கு ஆளானார்க‌ள். தென் கொரியாவில், அமெரிக்க அரச ஒத்தோடிகள் செய்த படுகொலைகள் எத்தனை?

ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்ட் சந்தேக நபர்களை தேடிப் பிடித்து, ஜீப் வண்டிகளில் ஏற்றிச் சென்று, வெட்ட வெளிகளில் சுட்டுக் கொன்று, பெரும் மனிதப் புதைகுழிகளுக்குள் போட்டு மூடினார்கள். அன்று பலியானவர்களில்  பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளும் அடங்குவார்கள். அமெரிக்கப் படையினர் அந்தப் படுகொலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். (ஆதாரம்: AP: U.S. Allowed Korean Massacre In 1950)

வ‌ட‌ கொரிய‌ பிர‌ச்சினையில் ப‌ல‌ருக்குத் தெரியாத‌ அல்ல‌து வ‌ச‌தியாக‌ ம‌ற‌ந்து விடும் விட‌ய‌ம் ஒன்றுள்ள‌து. அந் நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் மிக‌த் தீவிர‌மான‌ கொரிய‌த் தேசிய‌வாதிக‌ள். வ‌ட‌ கொரியா ஸ்தாபிக்க‌ப் ப‌ட்ட‌ நாளில் இருந்து கொரிய‌ ஒன்றிணைப்பை இல‌ட்சிய‌மாக‌க் கொண்டுள்ள‌ன‌ர்.

வ‌ட‌ கொரிய‌ தேச‌ வ‌ரைப‌ட‌ம் தென் கொரியாவையும் உள்ள‌ட‌க்கி இருக்கும்! இப்போதும் பாட‌சாலைக‌ளில் கொரியா தீப‌க‌ற்ப‌ம் முழுவ‌தையும் தாய்நாடு என்றே க‌ற்பிக்கிறார்கள். இப்போதும் தென் கொரிய‌ பிர‌தேச‌ங்க‌ளுக்கான‌ ஆளுந‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப் ப‌டுவ‌து ஒரு ச‌ட‌ங்காக‌ உள்ள‌து. ம‌று ப‌க்க‌த்தில் தென் கொரிய‌ ஆட்சியாள‌ர்க‌ளும் அவ்வாறே ந‌ட‌ந்து கொள்வ‌ர்.

விய‌ட்நாம் போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்பான‌ நிலைமையும் அவ்வாறே இருந்த‌து. வ‌ட‌ விய‌ட்நாம் சுத‌ந்திர‌ம‌டைந்து சோஷ‌லிச‌ நாடாகிய‌து. ஆனால் தென் விய‌ட்நாம் அமெரிக்க‌ப் ப‌டைக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப் ப‌ட்டிருந்த‌து. தென் விய‌ட்நாமில் இய‌ங்கிய‌ கெரில்லாக் குழுக்க‌ளுக்கு வ‌ட விய‌ட்நாமில் இருந்து ஆயுத‌ங்க‌ள் அனுப்ப‌ப் ப‌ட்ட‌ன‌. ஏராள‌மான‌ போராளிக‌ள் வட‌ விய‌ட்நாமில் இருந்து சென்ற‌வ‌ர்க‌ள் என்ற‌ குற்ற‌ச்சாட்டையும் ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

வ‌ட‌ கொரியாவிலும் விய‌ட்நாம் போர் முடிவு ஆர்வ‌த்தை தூண்டி விட்டிருந்த‌து. இறுதியில் விய‌ட்நாம் ஒரே நாடான‌ மாதிரி கொரியாவும் ஒன்று சேரும் என்று ந‌ம்பினார்க‌ள். ஒரு த‌ட‌வை கெரில்லாப் போராளிக‌ளை, ஒரு சிறு குழுவை அனுப்பிப் பார்த்த‌ன‌ர். ஆனால் எதிர்பார்த்த‌ ப‌டி தென் கொரியாவுக்குள் கெரில்லாப் போர் ந‌ட‌த்த‌ முடிய‌வில்லை.

வட கொரிய பிரச்சினையில் பலர் அடிக்கடி மறந்து விடும், அல்லது மறைக்கும் விடயம் ஒன்றுண்டு. தென் கொரிய மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? அதை அறிந்து கொள்வதில் யாருக்கும் அக்கறை இல்லை. அதற்குக் காரணம் தென் கொரிய மக்களில் பெரும்பான்மையினர் வட கொரியா மீதான போரை எதிர்க்கிறார்கள். தென் கொரிய அரசு இந்த விடயத்தில் ஒரு பொம்மை அரசாகவே இருக்கிறது. அதன், இராணுவம், அமெரிக்க இராணுவத்துடன் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனால் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.

வட கொரிய ஏவுகணைகள் தாக்கவிடாமல் இடையில் தடுத்து அழிக்கும் நோக்கில் அமெரிக்காவின் நவீன ஏவுகணையான THAAD தென் கொரியாவுக்கு கொண்டு வரப் பட்டு பொருத்தப் பட்டது. அப்போது அது சென்ற வழியெங்கும் கூடிய தென் கொரிய மக்கள் கற்களை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஏவுகணைக்கு பாதுகாப்பாக ஆயிரக் கணக்கான படையினர் கூடவே செல்ல வேண்டியிருந்தது.

வ‌ட‌ கொரிய‌ ம‌க்க‌ள் எப்போதும் போருக்கு எதிரான நிலைப்பாட்டுடன் தான் இருந்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து அர‌சு போர்வெறி கொண்டு அலைய‌வில்லை. அதைச் செய்வ‌து அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ம். அது அந்த‌ ம‌க்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும். நாளைக்கு அமெரிக்க‌ இராணுவ‌ம் ப‌டையெடுத்தால் அந்த‌ ம‌க்க‌ளை கையைக் க‌ட்டி வேடிக்கை பார்க்க‌ சொல்கிறீர்க‌ளா? அமெரிக்க‌ குண்டு வீச்சில் அப்பாவி ம‌க்க‌ள் பலியாக‌ மாட்டார்க‌ளா? த‌ங்க‌ள் நாட்டை ஆக்கிர‌மிக்க‌ வ‌ரும் அந்நிய‌ இராணுவ‌த்தை எதிர்த்து போரிடுவ‌து த‌ப்பா? உங்க‌ள் வீட்டை கொள்ளைய‌ர்க‌ள் தாக்கும் அபாய‌ம் இருந்தால் என்ன‌ செய்வீர்க‌ள்?

இங்கு யார் பக்க‌ம் நியாய‌ம் உள்ள‌து? மிக‌ப் பெரிய ப‌ல‌சாலியான‌ கோலிய‌த்திற்கு எதிரான‌ நோஞ்சான் டேவிட்டின் போராட்ட‌ம் நியாய‌மான‌து. அதை ஆத‌ரிப்ப‌து நீதியான‌வ‌ர்க‌ளின் க‌ட‌மை.

அமெரிக்கா தான் வ‌ட‌ கொரியாவை ஆக்கிர‌மிக்கும் எண்ண‌த்துட‌ன் போர்ப் பிர‌க‌ட‌ன‌ம் செய்கின்ற‌து. வ‌ட‌ கொரியா அல்ல. அது உலகில் எந்த‌ நாட்டின் மீதாவ‌து படையெடுத்துள்ள‌தா? அது மெக்சிகோ அல்ல‌து க‌ன‌டாவுக்கு த‌ன‌து ப‌டைக‌ளை அனுப்பியுள்ள‌தா?

அமெரிக்காவின் இராணுவ‌ ப‌ல‌த்துட‌ன் ஒப்பிடும் பொழுது வ‌ட‌ கொரியா ஒரு நாள் கூட‌ தாக்குப் பிடிக்க‌ முடியாது. அத‌ற்காக‌த் தான் அணுவாயுத‌ம் வைத்திருக்கிற‌து. அந்த‌ உரிமை எல்லோருக்கும் இருக்கிற‌து. தற்காப்பு உரிமை. விரும்பினால் அதை சர்வாதிகாரம் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

ச‌ர்வாதிகார‌ம் என்ப‌து என்ன‌? பெரும்பான்மை ம‌க்க‌ளின் விருப்ப‌த்திற்கு மாறான‌ ஒரு சிறு குழுவின் ஆட்சி. இன்று ப‌ல‌ நாடுக‌ளில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ பெய‌ரில் ச‌ர்வாதிகார‌மே நில‌வுகின்ற‌து. தேர்த‌லில் வோட்டுப் போட்ட‌வுட‌ன் ம‌க்க‌ளின் க‌ட‌மை முடிந்து விடுகிற‌து. ஆளுவ‌து எப்போதுமே ப‌ண‌ம் ப‌டைத்த‌ கிரிமின‌ல் கும்ப‌ல் தான்.

அத‌ற்கு மாற்றான‌ நேர‌டி ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி பலருக்கும் தெரியாது. வ‌ட‌ கொரியாவிலும் தேர்த‌ல்க‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌. பாராளுமன்றப் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள். சமூகத்தின் பல மட்டங்களில் ஜனநாயகப் பொறிமுறை உள்ள‌து. உதார‌ண‌த்திற்கு தொழிற்சாலை நிர்வாக‌த்தில் தொழிலாள‌ர்க‌ள் ப‌ங்கெடுக்க‌ முடியும். அமெரிக்காவில் கூட‌ அத்த‌கைய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் கிடையாது.

Saturday, May 29, 2010

தென் கொரிய கப்பல் தகர்ப்பு மர்மம்

"தென் கொரிய கடற்படைக் கப்பல் ஒன்றை, வட கொரியா ஏவிய "டொர்பெடோ" ஏவுகணை மூழ்கடித்து விட்டது. 46 கடற்படை வீரர்கள் பலி. இந்த சம்பவத்தால் வட-தென் கொரியாக்களுக்கு இடையில் யுத்தம் மூளும் அபாயம் உள்ளது." அண்மைக்காலமாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் சர்வதேச செய்தி. வட கொரிய ஏவுகணை தான் கப்பலை மூழ்கடித்தது என்பதற்கு நம்பகத் தன்மை வாய்ந்த ஆதாரங்களை சமர்ப்பித்தார்களா? ஜனநாயகத் தூண்களான சுதந்திர ஊடகங்கள், மறுதரப்பு (வட கொரியா) என்ன சொல்கிறது என்று கேட்டு தெரிவித்தார்களா? இருதரப்பு வாதங்களைக் கேட்டு ஆராய்ந்து முடிவு எடுக்கும் பொறுப்பை மக்களிடம் விட்டு விட்டு நடுநிலைமை காத்தார்களா? இந்த விஷயத்தில் நமது தமிழ் ஊடகங்களை விட்டு விடுவோம். பாவம், அவர்களுக்கு சி.என்.என்., பி.பி.சி., ரோய்ட்டர் இவற்றை விட்டால் செய்தி சேகரிக்க வேறு வழி இல்லை. ஊடக சுதந்திரத்திற்கு இலக்கணம் எழுதிய சர்வதேச ஆங்கில ஊடகங்கள் இந்த விடயத்தில் நடுநிலை தவறிவிட்டன. சரியாக ஆராயாமல் வட கொரியா மீது குற்றம் சாட்டும் அரச கைக்கூலிகளாக செயற்படுகின்றனர்.

26 மார்ச் இரவு தென் கொரிய கடற்படைக் கப்பலான Cheonan வெடித்து மூழ்கியது. கப்பலில் இருந்த 104 பேரைக் கொண்ட கடற்படைக் குழுவில் 46 பேர் பலியானார்கள். 58 பேர் காப்பாற்றப் பட்டனர். ஆரம்பத்தில் கப்பல் வெடித்ததற்கான காரணம் அறியப்படவில்லை. சுமார் ஒரு மாதம் கழித்து, தென் கொரியா, அமெரிக்க, பிரிட்டிஷ் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் பின்னர், இது வட கொரிய ஏவுகணைத் தாக்குதல் என அறிவித்தனர். அவர்கள் காட்டிய ஆதாரங்களுக்கான நம்பகத் தன்மை இன்னும் உறுதி செய்யப் படவில்லை. அதற்கிடையில் கடலில் அத்துமீறிய வட கொரியா மீது போர் தொடுக்கும் எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. சம்பவம் குறித்து ஆரம்பத்தில் அறிவித்த தென் கொரிய ஊடகங்கள், இதனை வட கொரியாவின் செயலாக பார்க்கவில்லை. அவற்றில் வந்த ஆய்வுகளை இங்கே தொகுத்து தருகிறேன். பல தகவல்கள் சர்வதேச கவனத்தை பெறாதது ஆச்சரியமளிக்கிறது. மேலும் அவற்றை வெளியிட்ட தென் கொரிய ஊடகங்கள், வாயை மூடிக் கொண்டு அரசு சொல்வதை பிரதிபலிக்குமாறு, பின்னர் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

முதலில் கப்பல் தகர்ப்பு சம்பவம் நடைபெற்ற புவியியல் அமைவிடம் முக்கியமானது. வட கொரியாவையும், தென் கொரியாவையும் பிரிக்கும் கடல் எல்லைக் கோட்டில், அதுவும் வட கொரிய தலைநகர் பியங்கியாங் அருகில் (170 கி.மி.) கப்பல் தகர்க்கப் பட்டது. கப்பல் வெடித்த இடத்தில் இருந்து வட கொரியா வெறும் 20 கி.மி. தூரத்தில் இருந்தது. அந்த இடத்தில் தென் கொரியாவுக்கு சொந்தமான Baengnyeong என்ற தீவு உள்ளது. அந்த தீவில் வசிப்பவர்கள் தென் கொரிய பிரஜைகள். ஆயினும் அந்த தீவு தனக்கு சொந்தம் என்றும், தீவின் தென் பகுதியில் எல்லைக் கோட்டை பிரிக்குமாறு வட கொரியா கோரி வருகின்றது. வட கொரியா தீவுக்கு உரிமை கொண்டாடினாலும், கடல் பகுதியில் தென் கொரிய இறையாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரம் தென் கொரியாவுடனான படகுப் போக்குவரத்திற்கும் தடை ஏதும் கூறவில்லை.

மார்ச் மாதம் 26 ம் திகதி வரை பென்கியோங் தீவுக்கு அருகில் அமெரிக்க- தென் கொரிய கடற்படைக் கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. வட கொரியாவுக்கு மிக அருகில் நடந்த போர் ஒத்திகை, அந் நாட்டிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக பார்க்க இடமுண்டு. கூட்டுப்படைகளின் போர் ஒத்திகை பின்னர் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டது. தகர்க்கப்பட்ட ஷேனன் கடற்படைக் கப்பலும், மார்ச் 26 அன்று ஒத்திகையில் இருந்துள்ளது. இந்த தகவல்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. மேலும் தகர்க்கப்பட கப்பல் போர் ஒத்திகையில் ஈடுபடாமல் தனியாக ரோந்து சுற்றிக் கொண்டிருந்ததாகவும், பென்கியோங் தீவில் இருந்து 100 கி.மி. தூரத்திலேயே வெடித்ததாகவும் கொரிய அரசு தெரிவிக்கின்றது. கப்பல் வட கொரிய எல்லைக்கு அருகில் (பென்கியோங் தீவு அருகில்) தகர்க்கப்பட்டதாக தெரிவித்திருந்தால், வட கொரியா மீதான சந்தேகம் இறுகியிருக்கும். ஆனால் அப்படி சொல்லாமல் மறைக்கும் மர்மம் என்ன?

அமெரிக்க - தென் கொரிய கடற்படைகள் சாதாரண போர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கவில்லை. நீர்மூழ்கிக் கப்பல்களையும், கடலினுள் செலுத்தப்படும் Torpedo ஏவுகணைகளையும் கண்டறியும் சக்தி வாய்ந்த நவீன ரேடார்கள் பொருத்தப்பட்ட கப்பல்களே என்று பயிற்சியில் ஈடுபட்டன. தகர்க்கப் பட்ட சேனன் கப்பலிலும் அந்த ரேடார் பொருத்தப் பட்டிருந்தது. அப்படி இருக்கையில் தன்னை நோக்கி வந்த வட கொரிய கப்பலையும், தன் மீது ஏவப்பட்ட ஏவுகணையையும் அந்தக் கப்பல் கண்டுபிடித்து திருப்பித்தாக்க தவறி விட்டமை தெளிவாகின்றது. அப்படியானால் சக்திவாய்ந்த நவீன ரேடார் பல குறைபாடுகளை கொண்டுள்ளதை ஒத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து தென் கொரிய அரச தரப்பில் கூறப்படும் காரணம் "ரேடார் 70 வீதம் கண்டறியும் திறன் கொண்டது." இது பின்னர் வந்த அறிக்கையில் 50 வீதமாக குறைக்கப்பட்டது. (வட கொரியா மீதான குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்ப்பதற்காக).

கப்பல் தகர்ப்பு சம்பவம் நடைபெற்ற இடம் உலகிலேயே ஆபத்தான கடல் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கொரிய யுத்தம் முடிவடைந்த பின்னரும், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையில், கடல் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டன. 1970 ம் ஆண்டளவில், வட கொரிய ஊடுருவல்களை தடுப்பதற்காக தென் கொரிய பாதுகாப்ப்பு படைகள் அந்த கண்ணி வெடிகளை விதைத்திருந்தன. சமாதான பேச்சுவார்த்தைகளின் பின்னர், பத்து வீதமான கண்ணி வெடிகள் மட்டுமே அகற்றப்பட்டன. வெடித்த கப்பல் அவ்வாறான கண்ணி வெடியில் அகப்பட்டிருக்கலாம் என்று தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் தென் கொரியாவில் பெருமளவு பார்வையாளர்களைக் கொண்ட KBS தொலைக்காட்சி முற்றிலும் புதிய தகவல் ஒன்றை தெரிவித்தது. ஷேனன் கப்பல் தகர்க்கப்பட்டு மூழ்கிய அதே தினத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் கூட பென்கியோங் தீவுக்கு மிக அருகாமையில் நடந்துள்ளது. அந்த இடத்தில் அமெரிக்க படையினரின் தேடுதல் வேட்டை இடம்பெற்றதாகவும், இறந்த அமெரிக்க வீரரின் உடல் ஒன்று அமெரிக்க ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி தெரிவித்தது.
இது குறித்த விரிவான தகவல்களைத் தரும் வரைபடங்களும், வீடியோவும் கொரிய இணையத்தளத்தில் காணப்படுகின்றன. கடலில் மூழ்கிய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் பற்றி, மரணமடைந்த அமெரிக்க வீரர்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன?

அன்று கொரியக் கடலில் என்ன நடந்தது என்ற உண்மையை ஒன்றில் தென் கொரிய அரசு அல்லது அமெரிக்க அரசு தெரிவிக்க வேண்டும். உண்மை தானாகவே வெளிவரும் வரையில் நாம் சில ஊகங்களின் மூலமே புரிந்து கொள்ள முடியும். முதலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிய இடம் சுவாரஸ்யமானது. பென்கியோங் தீவை சுற்றியுள்ள கடற்பரப்பு ஆழம் குறைந்ததும், கற்பாறைகள் நிறைந்ததும் ஆகும். பொதுவாகவே தீவுக்கு அண்மையில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல் தரை தட்டி விடும். ஆனால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நின்ற இடம் தீவின் தென் பகுதி. (தீவின் வட பகுதி வட கொரியாவை நோக்கி உள்ளது.) தென் பகுதியில் உயர்ந்த மலைகள் உள்ளன. அவற்றின் அருகிலான கடல் பகுதி மட்டும் ஆழம் மிக்கது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அந்தப் பகுதியில் மாதக் கணக்காக ஒருவருக்கும் தெரியாமல் மறைந்திருக்க முடியும். அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலுக்கு அங்கே என்ன வேலை?

பென்கியோங் தீவு வட கொரியாவுக்கு அருகில் இருப்பதையும், அங்கிருந்து வட கொரியத் தலைநகர் பியாங்கியாங் 170 கி.மி. தூரத்தில் இருப்பதையும் மறந்து விடலாகாது. வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் யுத்தம் மூளும் நேரம், அந்த இடத்தில் இருந்து பியாங்கியாங் மீது இலகுவாக ஏவுகணையை செலுத்த முடியும். தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணை போன்று, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வரும் ஏவுகணையும் சம வல்லமை பொருந்தியது. அப்படியான ஏவுகணையில் அணுகுண்டு பொருத்தப்பட்டிருக்கும் என்பதை இங்கே கூறத் தேவையில்லை. தென் கொரிய மக்கள் வட கொரியாவில் இருப்பவர்களையும் தமது சகோதரர்களாகவே கருதுகின்றனர். அதனால் "வட கொரியா மீது தாக்குவதற்கு தயாராக, அணுகுண்டு பொருத்திய ஏவுகணையோடு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் காத்திருக்கின்றது" என்ற தகவல் தென் கொரியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். அந்தக் காரணத்தால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் பிரசன்னம் குறித்து, தென் கொரிய அரசுக்கும் அறிவித்திருக்க மாட்டார்கள்.

நீர்மூழ்கிக் கப்பல்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று, டீசலில் ஓடுவது. மற்றது, அணு சக்தியை பயன்படுத்துவது. டீசலில் ஓடும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி கடலின் மேற்பரப்பிற்கு வந்து போகும் நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால் அணு சக்தியால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அப்படியல்ல. மாதக் கணக்காக கடலினுள் மறைந்திருக்க முடியும். பெங்கியோங் தீவில் நிறுத்தப்பட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் அணுசக்தியில் இயக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. மார்ச் 26 அன்று, தகர்க்கப்பட்ட தென் கொரியக் கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடித்திருக்கலாம். (கப்பலில் விஷேச ரேடார் கருவி பொருத்தப் பட்டிருந்ததை நினைவில் கொள்க) அதனை வட கொரியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எனத் தவறாக புரிந்து கொண்டு தாக்கியிருக்கலாம். பதிலுக்கு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலும், தென் கொரியக் கப்பல் மீது தாக்கியிருக்கலாம். இதனால் இரண்டு கப்பல்களும் மூழ்கி இருக்கலாம். மேலும் மிக ரகசியமான திட்டம் என்பதால், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தன்னை நோக்கி வருவது தென் கொரிய கடற்படைக் கப்பல் என்று தெரிந்திருந்தாலும் ரேடியோ தொடர்பு கொண்டிருக்காது.

கப்பல் தகர்ப்பிற்கு காரணம் எதுவாக இருப்பினும், அதனை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. தென் கொரியாவில் வருகிற ஜூன் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. "வட கொரியாவுடன் சமாதானம் இல்லை. போர் தொடுக்க வேண்டும்." எனப் பிரச்சாரம் செய்யும் வலதுசாரி பழமைவாத கட்சி வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது. கப்பல் தகர்ப்பு சம்பவத்தின் பின்னர் வட கொரியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று என்பது வீதமான தென் கொரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் பென்டகனும் கொரியப் போர் மூள வேண்டுமென்று எதிர்பார்க்கலாம். அதற்கு காரணம் உள்ளது. 2012 ம் ஆண்டு, தென் கொரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளுக்கு கட்டளையிடும் அதிகாரம், தென் கொரிய அரசின் வசம் செல்கின்றது. அப்படியான காலகட்டம் சீனா தென் கொரியாவை வளைத்துப் போட இலகுவான காலம். தூர கிழக்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க அமெரிக்கா பாடுபடுகின்றது. தென் கொரிய கப்பல் தகர்க்கப் பட்ட இடம் சீனாவிற்கு அருகில் உள்ள கடல் பகுதி என்பது குறிப்பிடத் தக்கது.
_________________________

மேலதிக தகவல்களுக்கு:
Analysts question Korea torpedo incident
Photo Gallery: The Wreckage of the Cheonan
The sinking of the Cheonan: Another Gulf of Tonkin incident