Friday, May 14, 2010

"ஜாவா இனப்படுகொலை", நெதர்லாந்து அரசின் போர்க்குற்றங்கள்

9 செப்டம்பர் 1947, இந்தோனேசியா, ஜகார்த்தா நகரில் இருந்து நூறு கி.மீ. தூரத்தில் உள்ள ராவகேடே கிராமம். மேஜர் வைனன் (Wynen) தலைமையிலான நெதர்லாந்து படைகள் கிராமத்தை சுற்றி வளைக்கின்றன. இந்தோனேசியாவை ஆக்கிரமித்த நெதர்லாந்து காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. விடுதலைப் படைத் தலைவர்களில் ஒருவனான லூகா, ராவகேடே கிராமத்தில் மறைந்திருக்கிறான் என்றொரு வதந்தி. அவனைப் பிடிப்பதற்காக தான் நெதர்லாந்து படையினர் வந்தார்கள். ஆனால் எங்கு தேடியும் லூகா அங்கில்லாதது படையினருக்கு ஏமாற்றமளிக்கின்றது. பலரை கைது செய்து அழைத்துச் சென்றனர். ஊருக்கு வெளியே வயல் பக்கமாக நிற்க வைத்து அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள். பிணங்களைத் தூக்கி கிணற்றில் வீசினார்கள். கிராமத்தில் இருந்த பிற ஆண்கள், உயிர் பிழைக்க தப்பியோடியவர்கள் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்று நெதர்லாந்து படையினரின் வெறியாட்டத்திற்கு 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியானார்கள். ஐக்கிய நாடுகள் சபை கூட அன்று நடந்த இனப்படுகொலையை கண்டித்திருந்தது.

இந்தோனேசிய இனப்படுகொலைகள் நடந்து அறுபது வருடங்கள் உருண்டோடி விட்டன. போர்க்கால குற்றம் புரிந்த நெதர்லாந்து படையினரில் ஒருவர் கூட இன்று வரை கைது செய்யப்படவில்லை. மேஜர் வைனன் உட்பட அனைத்து குற்றவாளிகளும் நெதர்லாந்தில் நலமாக வாழ்ந்தனர். அரசு அவர்களை எந்த விசாரணைக்கும் உட்படுத்தவில்லை. அதை விட இன்று வரை போர்க்கால குற்றங்களுக்கான பொறுப்பை நெதர்லாந்து அரசு ஏற்கவில்லை. இனப்படுகொலை விவகாரம் நினைவுபடுத்தப் படும் போதெல்லாம், வருத்தம் தெரிவிப்பதுடன் நின்று கொள்கின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டஈடாக வழங்கப்படவில்லை.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் Liesbeth Zegveld பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக, நெதர்லாந்து அரசு மீது வழக்குத் தொடுத்துள்ளார். இந்தோனேசியாவில் படுகொலை செய்யப்பட்ட ஆண்களின் விதவைகளையும், பிற உறவினர்களையும் கண்டு பேசி, வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளார். (கீழே உள்ள வீடியோவில் அவர்களது சாட்சியங்கள் பதிவாகியுள்ளன.) நெதர்லாந்து அரசு மீதான குற்றச்சாட்டு இனப்படுகொலைக்கு பொறுப்பு ஏற்க வைப்பது மட்டுமல்ல. படுகொலைகளை விசாரணை செய்யாமல் புறக்கணித்த குற்றத்திற்குமாகத் தான். "அறுபது வருடங்கள் கடந்து விட்டதால் குற்றங்கள் காலாவதியாகி விட்டன." என்று வாதிடுகின்றது நெதர்லாந்து அரசு. ஆனால் இரண்டாம் உலகப்போர் கால குற்றங்களுக்காக இன்றைக்கும் வழக்குகள் நடைபெறுகின்றன. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


இந்தோனேசியாவில் நெதர்லாந்து படையினரின் போர்க்குற்ற வழக்கு தொடர்பாக நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் வீடியோ:


2 comments:

Ramprasath said...

ஆனந்த விகடனில் வந்தமைக்கு வாழ்த்துகள்.. பயனுள்ள பதிவுகள். தொடருங்கள்.

- நாகர்கோவில் ராம்
http://azhiyasudargal.blogspot.com/

Kalaiyarasan said...

தகவலுக்கு நன்றி, ராம்.