Showing posts with label கலாச்சாரப் புரட்சி. Show all posts
Showing posts with label கலாச்சாரப் புரட்சி. Show all posts

Tuesday, September 17, 2019

பெண் ஆணுக்கு கட்டிய தாலி! - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி


பெண் ஆணுக்கு கட்டிய தாலி! - சில விளக்கங்கள்:


சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகத்த்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள் தமது "தமிழ்ப் பண்பாட்டின் படி" ஒருவருக்கொருவர் தாலி கட்டிக்கொண்ட திருமணம் பலத்த சர்ச்சையை உண்டாக்கி விட்டுள்ளது. குறிப்பாக "பழமைவாதிகளும், இந்து மத அடிப்படைவாதிகளும்" குய்யோ முறையோ என்று தலையில் அடித்து கதறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக ஒரு சிறு விளக்கம்.

சில தினங்களுக்கு சுவிட்சர்லாந்தில் ஒரு மண்டபத்தில் (கோயிலில் அல்ல) நடந்த மேற்படி திருமண நிகழ்வுக்கு பலர் சமூகமளித்து இருந்தனர். மாப்பிள்ளை சுவிஸ் புலிகளின் இளையோர் அமைப்பை சேர்ந்தவர் என்பதால், நிறையப் பேருக்கு அவரைத் தெரியும். இருப்பினும் "மணப்பெண் மணமகனுக்கு தாலி கட்டும்" படம் சமூக வலைத்தளங்களில் பரவிய பின்னர் தான், அது அனைத்துலக தமிழர்கள் மத்தியில் பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்தது.

முதலில் மணமகன், மணப்பெண் ஆகியோரின் வாழ்க்கைச் சூழல், அரசியல் அபிலாஷைகள் போன்றவற்றை கவனத்தில் எடுக்க வேண்டும். இருவரும் குழந்தைப் பராயத்தில் இருந்தே சுவிட்சர்லாந்தில் வளர்ந்து வரும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த ஈழத் தமிழர்கள். புலிகளின் தமிழ்த்தேசிய அரசியலின் தீவிர விசுவாசிகள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகள் தொடர்பாக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும், புலிகளின் பெயரிலான அடையாள அரசியல் பற்றி எந்தக் குறையும் கூறுவதில்லை. அந்தளவு புரிந்துணர்வு உள்ளது. உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் பெற்றோர் புலி எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். ஆனால், பிள்ளைகள் தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள். அதற்குக் காரணம் அடையாள அரசியல். வெள்ளையரின் நாடொன்றில் தமிழ் இளையோர் தமக்கான அடையாளத்தை தேடுகின்றனர்.

தமிழ்த்தேசிய அரசியல் என்பது தமிழ்ப் பண்பாட்டையும் உள்ளடக்கியது தான். இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழ் இளையோர் அதற்கு எதிரானவர்களும் அல்ல. மாறாக, பலர் சுயவிருப்பின் பேரில் பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆகையினால், அவர்களுக்கு தெரிந்த "தமிழ்ப் பண்பாட்டை" பின்பற்றி, தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. இங்கே பெண் ஆணுக்குத் தாலி கட்டியது தான் பழமைவாதிகளின் கண்களை உறுத்துகிறது.

புலம்பெயர் நாடொன்றில் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழர்கள் சந்திக்கும் கலாச்சார அதிர்ச்சியை முதலில் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு பாடசாலை ஒன்றில் படிக்கும் தமிழ்ச் சிறுமி தனக்கு நடந்த சாமத்திய சடங்கு (மஞ்சள் நீராட்டு) பற்றி பள்ளி மாணவர்களுக்கு எப்படி விளக்குவாள்? இதிலுள்ள சங்கடங்கள் பற்றி ஏற்கனவே பலர் பேசி விட்டனர். அதே போன்ற சங்கடம் தான் தாலி கட்டுவதில் உள்ள பிரச்சினை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் வாழும் மக்கள் மத்தியில் பலதரப் பட்ட கலாச்சாரங்கள் பற்றிய அறிவும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு துருக்கி திருமண விழாவில் மணமக்களை ஏற்றிச் செல்லும் வாகனத் தொடரணி தெருவில் ஹாரன் அடித்துக் கொண்டே செல்லும். இந்நாடுகளில் ஹாரன் அடிக்கத் தடை இருந்தாலும், அது துருக்கியரின் பண்பாட்டு நிகழ்வு என்பதற்காக அனுமதிக்கிறார்கள். இந்த விடயம் இந்நாடுகளில் வாழும் அனைவருக்கும் தெரியும். பலர் அதைப் பார்த்து இரசிக்கிறார்கள். அந்தளவு ஐரோப்பிய கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதாக மாறி விட்டது.

இப்போது தாலி கட்டும் விடயத்திற்கு வருவோம். தமிழர்களின் திருமண சடங்கில் ஆண் பெண்ணுக்கு தாலி கட்டுவது எமக்கு வேண்டுமானால் சர்வசாதாரணமாகத் தெரியலாம். ஆனால், வேற்றின மக்களுக்கு அது விசித்திரமாக இருக்கும். நான் வேற்றின நண்பர்களுக்கு தமிழரின் திருமண சடங்கு பற்றி விளக்கம் கொடுக்கும் நேரம், "ஆணும், பெண்ணும் மாறி மாறி தாலி கட்டிக் கொள்வார்கள் தானே?" என்று சர்வசாதாரணமாகக் கேட்பார்கள். நான் அப்படி அல்ல என்று சொன்னால், அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இதனை "ஆணுக்கு பாரபட்சம் காட்டும் விடயமாக" எடுத்துக் கொள்வார்கள்.

எனக்கு நேர்ந்த இந்த அனுபவம் ஏனையோருக்கும் ஏற்பட்டிருக்கும். குறிப்பாக சுவிட்சர்லாந்தில் தாலி கட்டிக் கொண்ட மணமக்களின் சொந்த அனுபவமாகவும் இருக்கலாம். ஏனெனில் அவர்களும் சுவிஸ் சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்கிறார்கள். அவர்களது பள்ளித் தோழர்கள், சக தொழிலாளர்கள் ஆகியோர் பெரும்பாலும் சுவிஸ்காரர்கள், அல்லது பல்வேறு ஐரோப்பிய மற்றும் பல உலக நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

இங்கு வாழும் தமிழர்கள் குறைந்தது பத்து வேறுபட்ட இனத்தவருடன் நட்பாக இருப்பது சர்வசாதாரணமான விடயம். அவ்வாறான சூழலில் வாழும் மணமக்கள் தமது திருமண சடங்கை பார்ப்பதற்கு பல்லின நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பார்கள். வழமையான திருமணங்களில் நடப்பதைப் போன்று "ஆண் பெண்ணுக்கு தாலி கட்டினால்..." அது தான் இங்கே தவறான விடயமாகக் கருதப் படும்! அதை விட ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தாலி கட்டிக் கொண்டால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார்கள்.

பண்பாடு என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது மக்கள் தாமாகவே உருவாக்கிக் கொண்ட பழக்க வழக்கம். அது காலத்திற்கு ஏற்றவாறு மாறக் கூடியது. ஒரு காலத்தில் மஞ்சள் கயிறில் தாலி கட்டியவர்கள் தங்கத்தால் தாலி செய்து போடவில்லையா? இதெல்லாம் கலாச்சாரக் காவலர்களுக்கு ஒரு பண்பாட்டுப் பிறழ்வாக தெரியாதது அதிசயம்!

இன்றைக்கும் தமிழகத்தில், நீலகிரி மலைகளில் வாழும் இருளர் பழங்குடி இன மக்கள் மத்தியில் நடக்கும் திருமணச் சடங்கில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தாலி கட்டுகிறார்கள். உண்மையிலேயே ஒரு காலத்தில் இந்தப் பழக்கம் பரவலாக இருந்திருக்கும். ஆனால் ஆணாதிக்க சமுதாயம் வளர்ச்சி அடைந்த "நாகரிக" காலகட்டத்தில், தாலி பெண்ணுக்குரியதாக மட்டும் குறுக்கப் பட்டிருக்கலாம். சுவிஸ் மணமக்கள் அந்தப் பிழையை சரியாக்கிக் காட்டி இருக்கிறார்கள்.

பழமைவாதிகளின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலாக ஒரு பண்பாட்டுப் புரட்சியை நடத்திக் காட்டிய மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

Saturday, August 26, 2017

தொழிலாளர், விவசாயிகளுக்கே கல்லூரிகளில் முன்னுரிமை - கம்யூனிசக் கல்வி அமைப்பு


ஒரு முதலாளித்துவ நாட்டில் கல்வி அமைப்பானது, உத்தியோகம் பார்க்கும் சிறிய அளவிலான மேட்டுக்குடி வர்க்கத்தை உருவாக்கும் நோக்கில் அமைக்கப் பட்டுள்ளது. மிகவும் புத்திசாலித்தனமான மாணவர்கள் மட்டுமே சித்தி அடையும் வகையில், பாடங்கள் கடினமான மொழி நடையில் எழுதப் படுகின்றன. ஒன்றை சுற்றி வளைத்து சொல்வதன் மூலம், தேவையில்லாத சொற்களை புகுத்துவதன் மூலம், பலருக்கும் புரிந்து கொள்ள முடியாதவாறு வேண்டுமென்றே கடினமாக்கப் பட்டுள்ளது.

இது பற்றி விமர்சித்தால் ஒரு பதில் தயார் நிலையில் இருக்கும்: "பாடங்களையும், சோதனைகளையும் இலகுவாக்கினால் எல்லோரும் பாஸ் பண்ணி விடுவார்களே!" அதாவது, முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் அளவிற்கு தேவையான ஒரு சிறு தொகையினர் மட்டுமே போதும். எஞ்சியவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. அவர்களைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.

சோஷலிசப் புரட்சிக்கு முன்பிருந்த ரஷ்யாவிலும், சீனாவிலும் நிலைமை அப்படித் தான் இருந்தது. அப்போதிருந்த முதலாளித்துவ கல்வி அமைப்பானது, சமூகத்தில் உத்தியோகம் பார்க்கும் ஒரு அறிவுஜீவிக் குழாமை உருவாக்கிக் கொண்டிருந்தது. ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு அனுப்பப் பட்டனர். அங்கு அவர்கள் விவசாயிகளுடன் தங்கியிருந்து, பண்ணைகளில், வயல்களில் வேலை செய்ய வேண்டும். அத்துடன் எழுத்தறிவற்ற கிராமிய மக்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

அறுபதுகளில் அமெரிக்க பொருளியல் பேராசிரியர் Granick, சோவியத் யூனியனில் நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்று ஆராய்வதற்காக சென்று வந்தார். தாயகம் திரும்பிய பின்னர், "சிவப்பு நிர்வாகி" என்ற பெயரில் அவர் எழுதிய நூலில், சோவியத் பல்கலைக்கழக பரீட்சைகள் எப்படி நடக்கின்றன என்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பல்கலைக்கழக பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருந்து மாணவர்கள் எப்படிப் பரீட்சிக்கப் படுகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளார்.

அந்த நூலில் இருந்து: பரீட்சை மண்டபத்திற்குள் ஒவ்வொரு மாணவர்களாக அழைக்கப் பட்டனர். அங்கு கேள்வித்தாள்கள் கொண்ட மூன்று கடித உறைகள் இருந்தன. மாணவர் அதிலொன்றை தெரிவு செய்ய வேண்டும். கேள்விகளை வாசித்து குறிப்புகள் எழுதிக் கொள்வதற்கு சில நேரம் ஒதுக்கப் பட்டது. மாணவர் தயாரானவுடன், பரீட்சை நடத்தும் ஆசிரியர் கேள்வி கேட்பார். அவை திறந்த கேள்விகளாக இருந்தன. அதாவது, மாணவர் விரிவான பதில் கொடுக்க முடிந்தது. மேலும் பரீட்சைகள் பெரும்பாலும் வாய்மூலம் தான் நடக்கும். எழுதுவதற்கான அவசியம் இல்லை.

அமெரிக்காவுக்கு திரும்பிய பேராசிரியர் Granick, அமெரிக்க மாணவர்களினதும், ரஷ்ய மாணவர்களினதும் கல்வித் தகைமை சமமாக இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்துள்ளார். இரண்டு நாடுகளிலும் கல்வி போதிக்கும் முறையிலும், பரீட்சை நடத்தும் முறையிலும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் சித்தி அடைந்த மாணவர்களின் கல்வித் தகைமை கிட்டத்தட்ட ஒரே மட்டத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

கலாச்சார புரட்சிக்கு முந்திய சீனாவிலும், கல்வி முறை பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை. அதிகாரத் தன்மை கொண்ட கல்வியாளர்கள், பாடத்திட்டங்களை வகுத்திருந்தார்கள்.

பல்கலைக்கழகம் என்பது உத்தியோகம் பார்க்கும் நோக்கில் சமூகத்தில் மேன் நிலைக்கு செல்ல விரும்புவோருக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனமாக இருந்தது. கலாச்சாரப் புரட்சிக்குப் பின்னர், அது தொழிலாளர், விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டியிருந்தது. அதற்காக பல்கலைக்கழகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன. குறிப்பாக, தொழிலாளர்கள், விவசாயிகளை அனுமதிக்கும் வகையில், பல்கலைக்கழக அனுமதி இலகுவாக்கப் பட வேண்டும். அதற்காக, இரண்டு அல்லது மூன்று வருடங்கள் உற்பத்தியில் பங்கெடுத்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டது.

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவன்/மாணவி, தான் வேலை செய்த தொழிற்சாலை அல்லது பண்ணையில் இருந்து சான்றிதழ் பெற்றுக் கொடுக்க வேண்டும். கூட வேலை செய்த சக தொழிலாளி ஒருவரும், புரட்சிகர கமிட்டியும் அந்த சான்றிதழில் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அது வரை காலமும் விவசாயிகள், தொழிலாளர்கள் பல்கலைக்கழகத்தில் சேரத் தடையாக இருந்த கடினமான அனுமதிப் பரீட்சைகள் அனைத்தும் இரத்து செய்யப் பட்டன.

படிக்கும் காலத்தில் பரீட்சைகளும் வேறு விதமாக நடத்தப் பட்டன. சிலநேரம் மாணவர்கள் ஒரு சிறு குழுவாக கூடியிருந்து கேள்விகளுக்கு விடை கூறினார்கள். பெரும்பாலானவை "திறந்த புத்தக" பரீட்சைகளாக இருந்தன. அதாவது பரீட்சை நடக்கும் இடத்திற்கு தான் படித்த பாடநூலையும் கொண்டு செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட நேர அளவிற்கும் பதில் எழுத வேண்டும். இது போன்ற பரீட்சைகள், சிலநேரம் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கின்றன.

பாடநூல்கள், அனைவருக்கும் புரியும் வகையில் இலகுவான மொழி நடையில் எழுதப் பட்டிருந்தன. அது மிகவும் முக்கியமாக இருந்தது. ஏனென்றால், முன்பு நூல்களை எழுதிய பேராசிரியர்கள் வேண்டுமென்றே கடினமாக்கி வைத்திருந்தார்கள். 

Tsinghua பல்கலைக்கழகத்தில் கற்பித்த பேராசிரியர் ஒருவர் சுயவிமர்சனம் செய்து கொள்ளும் வகையில் பின்வரும் கருத்துக்களை கூறினார்:  
"நான் மக்களுக்கு சேவை செய்வதற்காக பாடநூல்களை எழுதி இருக்கவில்லை. மாறாக, எனது திறமைகளை காட்டுவதற்காக, கல்வியறிவை வெளிப்படுத்தும் வகையில் எழுதி இருந்தேன். என்னால் என்னவெல்லாம் முடியும் என்று காட்டுவதற்காக, பிரமிக்க வைக்கும் நோக்கில் பார்முலாக்களையும், வெளிநாட்டு மேற்கோள்களையும் பயன்படுத்தி இருந்தேன். சில தெரிவு செய்யப் பட்ட வாக்கியங்கள் மூலம் இலகுவாக விளக்கக் கூடிய பிரச்சனைகளை கடுமையாக்கி வைத்திருந்தேன். பல அருமையான கண்டுபிடிப்புகளை செய்திருந்த அனுபவம் மிக்க தொழிலாளி ஒருவர், எனது கடினமான விளக்கத்தை கேட்டு மனமுடைந்து போயிருந்தார். இதையெல்லாம் தான் என்றைக்குமே புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்."

பாடநூல்கள் இலகுவாக்கப் பட்டது மட்டுமல்லாது, கல்வி அமைப்பு முழுவதும் நடைமுறையுடன் ஒன்றிணைக்கப் பட்டது. ஒவ்வொரு கற்கையும் நடைமுறையுடன் கூடியதாக இருக்க வேண்டும். சில பல்கலைக்கழகங்கள் தமக்கென தொழிற்சாலைகள், விவசாயப் பண்ணைகளை கொண்டிருந்தன. ஆசிரியர்களும், மாணவர்களும் தொழிற்சாலைகள், பண்ணைகளுக்கு சென்று நடைமுறையில் எப்படி இருக்கிறதென்று படித்தார்கள்.

அதே மாதிரி, தொழிலாளர்கள், விவசாயிகள் பல்கலைக் கழகங்களுக்கு சென்று "வருகை தரும் பேராசிரியர்களாக" விரிவுரை ஆற்றினார்கள். மேலும், மாணவர்கள் தமது துறை சார்ந்த பாடங்களை மட்டும் படிக்கவில்லை. அரசியல் பாடம் அனைவரும் படிக்க வேண்டிய கட்டாய பாடமாக இருந்தது. அதில் தகைமை பெற்றிருந்த தொழிலாளர்கள் வந்து வகுப்பெடுத்தார்கள்.

நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான மிகப்பெரும் இடைவெளியும் நிரப்பப் பட்டது. உதாரணத்திற்கு, மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று மருத்துவமனை கட்டுவதற்கு உதவினார்கள். அதே மாதிரி, கிராமிய மக்கள் மருத்துவக் கல்லூரிக்கு வந்து பாரம்பரிய மருத்துவ முறைகள் பற்றியும், மூலிகைகள் பற்றியும் விளக்கினார்கள். 

உசாத்துணை:
De Rode Directeur, David Granick
Sociaslisme en Herstel van het Kapitalisme, Niek Scheerder

Wednesday, May 11, 2016

சீனக் கலாச்சாரப் புரட்சி: அரசு அதிகாரிகளை அடக்கிய மக்கள் அதிகாரம்!

கலாச்சாரப் புரட்சி
பற்றிய அறிவிப்பு 

சீனாவில் கலாச்சாரப் புரட்சி நடந்த காலத்தில், விவசாயிகள், தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியாக, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இலகுவாக்கப் பட்டன, அல்லது இல்லாதொழிக்கப் பட்டன.

அதற்குப் பதிலாக, பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க முன்னர், இரண்டு, அல்லது மூன்று வருடங்கள் ஒரு தொழிற்சாலையில் (அல்லது வயலில்) வேலை செய்திருக்க வேண்டும். அவரது சக தொழிலாளிகளால் முன்மொழியப் பட வேண்டும் என்று மாற்றியமைக்கப் பட்டது.

அதிகார வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள், தொழிலகங்களில் இருந்த நிர்வாகிகளுக்குப் பதிலாக புரட்சிகர கமிட்டியின் தலைமைத்துவத்தை கொண்டு வந்தார்கள். தொழிற்சாலைகளில் இருந்த ஒரே நிர்வாகி முறை ஒழிக்கப் பட்டு, அந்த இடத்தில் புரட்சிகர தொழிலாளர்கள், கட்சி உறுப்பினர்களின் கூட்டுத் தலைமைத்துவம் கொண்டு வரப் பட்டது.

நாட்டுப்புறங்களுக்கு செல்ல
தயாராகும் மாணவர்கள் 
சீனப் புரட்சியின் பின்னர், நகர்ப்புற மாணவர்கள் நாட்டுப்புறங்களுக்கு சென்று, நடைமுறை சோஷலிச கல்வி கற்க வேண்டுமென பணிக்கப் பட்டது. கிராமங்களில் சாதாரண விவசாயிகளின் குடிசைகளில் தங்கியிருந்து, அவர்கள் தரும் உணவை சாப்பிட்டு, பகலில் வயல்களில் வேலை செய்ய வேண்டும்.

நாடுமுழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள், படையினர் தவிர்ந்த அனைவருக்கும் இந்த விதி கட்டாயமாக்கப் பட்டிருந்தது.

வசதியான மத்தியதர வர்க்க குடும்பங்களில் பிறந்த இளைஞர்கள், வசதியற்ற குடிசைகளில் செங்கல் அடுக்கப் பட்ட படுக்கையில் பாய் விரித்துப் படுத்தனர். உழவர்கள் காய்ச்சும் கஞ்சியோ, கூழோ வாங்கிச் சாப்பிட்டனர். வாரத்தில் ஒரு நாள் தான் இறைச்சி கிடைத்தது.

எல்லா இளைஞர்களும் அதை மனம் கோணாமல் வாங்கிச் சாப்பிட்டனர் என்று சொல்ல முடியாது. வாய்க்கு ருசியாக உண்ண வேண்டுமென்ற ஆசையில், அருகில் இருந்த சிறிய நகரங்களுக்கு சென்று, கையில் இருந்த பணத்தை கொடுத்து உணவுவிடுதியில் சாப்பிட்டவர்களும் உண்டு. அப்படியானவர்கள் அகப்பட்டால் "மேட்டுக்குடி கலாச்சாரத்தை பின்பற்றியதற்காக" அனைவர் முன்னாலும் அவமானப் படுத்தப் பட்டனர்.

அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள், மக்களை நசுக்கினார்கள் என்று தான் கேள்விப் படுகிறோம். அதற்கு மாறாக, மக்கள் ஆட்சியாளர்களை நசுக்கியது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோமா? அதற்குப் பெயர் "மக்கள் அதிகாரம்". சீனாவில் கலாச்சாரப்புரட்சி நடந்த பத்தாண்டுகளாக அது தான் நடந்தது.

சீனா முழுவதும் சிறிய, பெரிய நகரங்கள் எங்கும், செம்காவலர்கள் உருவானார்கள். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பில்லாத மாணவர்களும், மக்கள் திரளும் அதில் அங்கம் வகித்தனர். தமது ஊரில் இருந்த அதிகார வர்க்கத்தை குறி வைத்து தாக்கினார்கள். மிகவும் பலம் வாய்ந்த ஆளுநர்கள், மேயர்கள், கட்சித் தலைவர்கள் யாரும் தப்பவில்லை.

இங்கேயுள்ள படங்களில், கவர்னர், மேயர், மற்றும் கட்சித் தலைவர்கள், மக்கள் முன்னிலையில் தலை குனிந்து நிற்கிறார்கள். அவர்கள் செய்த குற்றங்கள் கழுத்தில் எழுதிக் கட்டப் பட்டுள்ளன. பெருந்திரளான மக்களின் முன்னிலையில், ஒரு கதிரையில் ஏறி நின்ற படி, மணிக் கணக்காக தலை குனிந்திருக்க வேண்டும். குற்றப் பத்திரிகை வாசிக்கப் பட்ட பின்னர், தெருத்தெருவாக ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டனர்.
பத்திரிகை நிறுவன ஊழியர்கள் கூட,
 தமது மேலதிகாரிகளை 
குற்றவாளிக் கூண்டில்  நிறுத்தினார்கள். 
தலையில் உள்ள கடதாசித் தொப்பியில் 
குற்றச்சாட்டுகள் எழுதப் பட்டுள்ளன.

பத்திரிகை நிறுவன ஊழியர்கள் கூட, தமது மேலதிகாரிகளை குற்றவாளிக் கூண்டில்  நிறுத்தினார்கள். தலைமை நிர்வாகிகள் பெரிய வீடுகளில் வசித்துக் கொண்டு, வேலைக்கு ரஷ்ய கார்களை ஓட்டி வந்தனர். அவை பூர்ஷுவா (முதலாளிய) கலாச்சாரம் என்று ஊழியர்கள் குற்றஞ் சாட்டினார்கள். அதற்குப் பிறகு சிறிய வீடுகளுக்கு மாறிய நிர்வாகிகள், பொதுப் போக்குவரத்து வண்டிகளை பயன்படுத்தினார்கள்.  

மேற்கத்திய "ஜனநாயக" நாடுகளில் வாழும் மக்கள் இது போன்ற காட்சிகளை நினைத்துப் பார்க்க முடியுமா? தமது ஊரில் உள்ள அதிகாரம் படைத்த மேயர், கவர்னர்களை அவர்களால் கிட்ட நெருங்கக் கூட முடியாது.

"பல கட்சி ஜனநாயகம்" நிலவும் நாடொன்றில், குறைந்த பட்சம் ஆளும்கட்சி உறுப்பினரை இவ்வாறு நிறுத்த முடியுமா? அவர்கள் குற்றம் இழைத்தால், நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்வார்கள். பணபலம், அதிகார பலம் உள்ளவன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க முடியும்.

இது தான் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், பாட்டாளிவர்க்க ஜனநாயகத்திற்கும் இடையிலான வித்தியாசம். பலர் தவறாக நினைப்பது போன்று, சோஷலிச நாடுகளில் "ஒரு கட்சி" ஆட்சியில் இருப்பதில்லை. மாறாக ஒரு வர்க்கம், அதாவது பாட்டாளி வர்க்கம் ஆட்சியில் அமர்ந்திருக்கும். ஒருவர் கட்சி உறுப்பினராவதற்கும், கட்சிக்குள் தலைமைப் பொறுப்புகளை ஏற்பதற்கும், பாட்டாளி வர்க்க சமூகப் பின்னணி அவசியமானது.


மிகவும் சக்திவாய்ந்த மனிதராக இருந்த, கட்சியின் பிராந்திய தலைமைச் செயலாளர் Wang Yilun, பல்கலைக்கழக மாணவர்களினால் திரிபுவாதியாகவும்,  எதிர்ப்புரட்சியாளராகவும் குற்றம் சாட்டப் பட்டார். 

அரசு நிறுவனங்களுக்குள், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே கூட வர்க்கப் போராட்டம் நடக்கலாம், நடந்துள்ளது. இதைத் தான் "ஸ்டாலினின் சர்வாதிகாரம்", "மாவோவின் சர்வாதிகாரம்" என்று மேற்குலகில் பிரச்சாரம் செய்தனர்.
மாவோ சிந்தனைகளை
படித்து விவாதிக்கும் மக்கள் திரள்
 

19 மே 1966 ம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியிடம் இருந்து "மாபெரும் பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சி" பற்றிய அறிவித்தல் வெளியானது. பெய்ஜிங் பாடசாலைகளில் தொடங்கிய "செம் காவலர்கள்" இயக்கம், நாடு முழுவதும் இருந்த கல்வி நிலையங்களில் பரவியது. 

உண்மையில் அது மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய இயக்கம். அதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணிக்கும் தொடர்பு இருக்கவில்லை. அதனால் எந்த அதிகாரத்திற்கும் கட்டுப் படாதவர்களாக இருந்தனர்.

ஆரம்பத்தில் பிரதமர் லியூ சொக்கி செம் காவலர் இயக்கத்தை அடக்க விரும்பினார். மாணவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டிருந்தன. ஆனால், மாவோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 

5 ஆகஸ்ட் 1966 அன்று, "தலைமையகத்தை தாக்குங்கள்" என்று மாவோ அறிவித்தார். மாவோ செம்காவலர் பாணியில் கையில் செந்நிறப் படி அணிந்து, தானே கைப்பட எழுதிய சுவரொட்டியுடன் மக்கள் முன்னால் தோன்றினார். (கம்யூனிஸ்ட்) கட்சியின் தலைமைப் பீடம் "பூர்ஷுவா தலைமையகம்" என்று அதில் குற்றம் சாட்டப் பட்டிருந்தது.

செம் காவலர் இயக்கத்திற்கு மாவோவின் ஆதரவு கிடைத்து வந்ததால், அவர்கள் துணிச்சலுடன் ஆளும் கட்சி தலைவர்களைக் கூட தாக்கத் தொடங்கினார்கள். திரிபுவாதிகள் என்று இனங்காணப்பட்ட பலர் மக்கள் முன்னால் நிறுத்தப் பட்டனர். பிரதமர் லியூ சொக்கி கூட குற்றம் சாட்டப் பட்டார். பலர் முன்னிலையில் அவமானப் படுத்தப் பட்டார்.

மியூசியமாக மாறிய 
ஒரு  நிலப்பிரபுவின் வீடு.
 பாவித்த ஆடம்பரப் பொருட்கள்
மக்களின் பார்வைக்காக 

வைக்கப் பட்டிருக்கின்றன. 

அதிகார வர்க்கத்தில் இருந்த கட்சித் தலைவர்களைத் தவிர, செல்வந்தர்கள், நிலப்பிரபுக்கள், வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள், வியாபாரிகளும் "துர் நடத்தை" கொண்டவர்களாக குற்றம் சாட்டப் பட்டு, மக்கள் முன்னால் அவமானப் படுத்தப் பட்டனர்.

கிராமங்களில் ஆடம்பரமாக வாழ்ந்த நிலவுடைமையாளர்கள், பணக்கார விவசாயிகளின் வீடுகள், அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்களுடன் கைப்பற்றப் பட்டன. அவை மக்கள் பார்வையிடுவதற்காக அருங்காட்சியமாக மாற்றப் பட்டன.

இவற்றைத் தவிர, ஒவ்வொரு ஊரிலும், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொது வெளியில், மாவோவின் சிந்தனைகளை படிப்பதும், அதை நடைமுறைப்படுத்துவதும் பற்றி விவாதிக்கப் பட்டது. அனேகமாக, இந்தக் காட்சிகள் மட்டுமே மேற்கத்திய ஊடகங்களினால் மிகைப் படுத்தி தெரிவிக்கப் பட்டன.




படங்கள், தகவல்களுக்கு நன்றி: 
Red- Color News Soldier, Li Shenzheng
Rode Morgen, 1 mei 2016