Saturday, February 16, 2013

விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்


[விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்] 
 (பாகம் - 2)

யுத்த பிரபுக்களுக்கு இடையில் அகப்பட்டு, சின்னாபின்னமாகி சீரழிந்த  ஆப்கானிஸ்தானை விடுதலை செய்வதே, தாலிபானின் குறிக்கோளாக இருந்தது. யுத்த பிரபுக்கள் தமது சுய இலாபத்திற்காக, அதிகார வெறிக்காக, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டிருந்தனர். அவர்களின் போருக்குள் அகப்பட்ட அப்பாவி மக்கள், சொல்லொனா துயரத்தை அனுபவித்து மரணித்துக் கொண்டிருந்தனர். இதனால், கட்டுக்கோப்பான இயக்கமென பெயரெடுத்த, கொள்கைப் பிடிப்புள்ள தாலிபான்களை, ஆப்கான் பொது மக்கள் வரவேற்றதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

விஸ்வரூபம் திரைப்படத்தில்,  நேட்டோ தாக்குதலால் சேதமடைந்த ஊர்   ஒன்றை, தாலிபான் குழுவினர் பார்வையிடுகின்றனர். அப்போது அங்கே அவர்களை எதிர்கொள்ளும் மூதாட்டி ஒருவர், "முதல்ல இங்லீஷ்காரங்க வந்தாங்க, ரஷ்யாக்காரங்க வந்தாங்க, தாலிபான், அமெரிக்கன், நீங்க..."   என்று திட்டி விட்டு செல்வார். இந்தக் காட்சியில், தந்திரமாக கமல் திணிக்கும், நுணுக்கமான, அயோக்கிய அரசியலை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. ஆங்கிலேயர்கள், ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் ஆகியோர், ஆப்கான் மக்களால் வெறுக்கப்பட்ட அந்நிய படையெடுப்பாளர்கள். அவர்களுடன், ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்துப் போராடும் தாலிபானையும் ஒரே நேர் கோட்டில் வைத்துப் பேசுவதற்கு, கமல்ஹாசனுக்கு எந்தளவு மனோ தைரியம் வேண்டும்? 

புலிகளின் De Facto தமிழீழத்தில் "தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருந்தது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை போன்ற குற்றச் செயல் எதுவும் நடக்கவில்லை. கலாச்சார சீரழிவுகள் இருக்கவில்லை. சாதிப் பாகுபாடு இருக்கவில்லை...." என்றெல்லாம் புலிகளின் பொற்காலம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களை சந்தித்திருப்பீர்கள். ஏன், இதை வாசிக்கும் நீங்கள் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். தாலிபான் ஆதரவாளர்களும், அதே மாதிரியான கதைகளை சொல்லி, ஆப்கானிஸ்தானில் கடந்த கால தாலிபான் ஆட்சியை நியாயப் படுத்தி பேசி வருகின்றனர். இன்றைக்கும், ஈழத்தில்  மட்டுமல்லாது, தமிழகத்திலும் வாழும் தமிழர்கள் மத்தியில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு இருப்பதை மறுக்க முடியாது. அதே போல, இன்றைக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் வாழும் பஷ்டூன் மொழி பேசும் மக்கள் மத்தியில் தாலிபானுக்கு ஆதரவு உள்ளது.  

தாலிபான் இயக்கம், ஆப்கான் மக்களுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக செய்துள்ளனர், என்றே வைத்துக் கொள்வோம். ஆயுத அதிகாரத்தினால் மக்களை அடக்கி வைத்திருந்தனர். தங்களை மட்டுமே ஆப்கானியர்களின் ஏக பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டார்கள். மாற்றுக் கருத்தாளர்களை கொன்றார்கள். அது எல்லாம் உண்மை தான். அதே நேரம், தாலிபான் போராளிகள், பஷ்டூன் மொழி பேசும் மக்கள் மத்தியில் இருந்து உருவானவர்கள். பெரும்பான்மை பஷ்டூன் மக்களால் விடுதலைப் போராளிகளாக கருதப் பட்டவர்கள்.

இதிலே நமக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். இருந்தாலும், தாலிபான் போராளிகள், அவர்களின் குடும்பங்கள், சனத்தொகையில் குறிப்பிட்டளவு விகிதாசாரம், தாலிபானை ஆதரித்திருப்பார்கள் அல்லவா? ஈழத்தில் விடுதலைப் புலிகளின் விடயத்திலும் அதுவே நிதர்சனமாக இருந்தது. ஈழத்திற்கு வெளியே, பிற இன மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஈழத் தமிழரில் ஒரு பிரிவினர் அவர்களை ஆதரித்தனர் என்ற உண்மையை நாங்கள் மறைக்கக் கூடாது. ஈழத் தமிழர்கள் புலிகளையும், சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தையும் ஒரே மாதிரியாக பார்க்கிறார்கள் என்று பேசுவதும் அபத்தமானது. அந்த அபத்தம் தான் விஸ்வரூபம் படத்தில் அரங்கேறியுள்ளது. 

படத்தில் அதே காட்சியில், அமெரிக்க கைதிகளை தாலிபான் சிறைப்பிடித்து வைத்த இடத்தை தான், நேட்டோ படைகள் தாக்கியதாக காட்டியிருப்பார்கள். இது இன்னொரு அபாயகரமான அரசியல் பிரச்சாரம். முதலில் அமெரிக்க படையெடுப்பு நடைபெறும் வரையில், எந்தவொரு அமெரிக்கரையும் தாலிபான் சிறைப்பிடித்து வைத்திருக்கவில்லை. ஆப்கானிஸ்தான் முழுவதும் அமெரிக்க இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப் பட்ட பின்னர் நடந்த கெரில்லா போரில் தான், அமெரிக்க போர்வீரர்கள் தாலிபானிடம் உயிரோடு பிடிபட்டனர். விஸ்வரூபம் படக்கதை, அமெரிக்க இராணுவ நடவடிக்கை தொடங்கிய காலத்தில் நடக்கின்றது. ஆகவே கைதிகளை மீட்பதற்காக நடந்த இராணுவ நடவடிக்கை போன்று காட்டுவது, ஒரு  வரலாற்றுத் திரிப்பு மட்டுமல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது. 

ஈழப்போர் நடந்த காலத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த கிராமங்கள் மீது குண்டு வீசியதற்கு ஸ்ரீலங்கா அரசு என்னென்ன காரணங்களை கூறியதோ, அதையே கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் ஒப்புவிக்கிறார். "அந்தக் கிராமத்தில் அமெரிக்க கைதிகள் வைக்கப் பட்டிருந்தார்கள். அதனால் தான் அமெரிக்கர்கள் குண்டு போட்டார்கள். அப்பாவி மக்களை கொன்ற பாவம் அமெரிக்கர்களைச் சேரும்..."   என்று விஸ்வரூபம் படத்தில் ஒமாராக நடிப்பவர் கூறுகின்றார்.

அதாவது, அமெரிக்க தாக்குதலை எதிர்பார்த்து, வேண்டுமென்றே பொது மக்கள் வாழும் இடத்தில் அமெரிக்க கைதிகளை அடைத்து வைத்திருந்தார்கள். ஆகவே, "ஆப்கான் பொது மக்கள் கொல்லப் பட்டதற்கு தாலிபான் பொறுப்பேற்க வேண்டும். விமானக் குண்டுவீச்சு நடத்திய அமெரிக்கர்கள் குற்றவாளிகள் அல்ல." என்ற நியாயத்தை கமல்ஹாசன் முன்வைக்கிறார். அது நியாயம் அல்ல, அநியாயம். விஸ்வரூபம் கூறும் (அ)நியாயத்தை தான், பாலஸ்தீன மக்களின் படுகொலை சம்பந்தமாக இஸ்ரேலிய அரசு கூறுகின்றது. ஈழத் தமிழரின் படுகொலை சம்பந்தமாக, இலங்கை அரசு கூறுகின்றது. 

பொதுவாக, பெரும்பான்மையினமான பஷ்டூன் மக்களின் பிரதேசங்களில் தாலிபானுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. ஆனால், டாரி, ஹசாரா, உஸ்பெக், தஜிக்கி ஆகிய சிறுபான்மை இனத்தவர் வாழ்ந்த இடங்களில் எதிர்ப்பு அதிகமாக இருந்தது. உஸ்பெக், தஜிக்கி இனத்தவர்கள் தமக்குள்ள இருந்த பகைமையை மறந்து, தாலிபானுக்கு எதிராக கூட்டணி அமைத்தனர். அதுவே "வடக்கு கூட்டணி" என்ற பெயரில் அழைக்கப் பட்டது. அதன் தலைவராக தஜிக்கி இனத்தை சேர்ந்த மசூத் இருந்தார். அவர்களுக்கு CIA யும், RAW வும் பயிற்சியளித்தனர். ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கான, அமெரிக்க படைகளின் தரைவழி நகர்வுகளும், வடக்கே இருந்து தான் தொடங்கின.

வட ஆப்கானிஸ்தானில், தாஜிக் மக்கள் வாழும் பிரதேசத்தை, தாலிபானால் கடைசி வரை வெல்ல முடியவில்லை. அதனால், மசூத்தை ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் தீர்த்துக் கட்டினார்கள். அந்த தற்கொலைக் குண்டுதாரி ஒரு அல்ஜீரிய அரேபியர். அந்த தாக்குதலை,  அல்கைதா நடத்தி இருந்தது. தாலிபான் இயக்க வரலாற்றில், அது ஒரு காலத்திலும் தற்கொலைத் தாக்குதலை நடத்தவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் முழுவதும் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர், சில வருடங்களின் பின்னர் மறுசீரமைக்கப்பட்ட தாலிபான் கெரில்லா யுத்தத்தை நடத்த தொடங்கிய பொழுது தான், முதன் முதலாக தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. விஸ்வரூபம் திரைப்படத்தில் வரலாற்றை திரிபுபடுத்திக் காட்டுகிறார்கள். தாலிபான் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில், படையெடுக்க தயாராக நின்றிருந்த அமெரிக்க கவச வாகனம் ஒன்றின் மீது, தற்கொலைத் தாக்குதல் நடப்பதாக காட்டுவது உண்மைக்கு புறம்பானது.

படத்தில் தற்கொலைக் கொலையாளி, ஒரு பெண் போல பூர்கா அணிந்து செல்கின்றார். பிற்காலத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்பதற்காக நடந்த போரில், இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால், எல்லா தற்கொலைக் குண்டுதாரியும் பூர்கா அணிந்து பெண் வேடமிட்டு செல்வதில்லை. அமெரிக்க இராணுவம் ஆப்கான் பெண்களை சோதனையிடுவதற்கு, அவர்களை அவமானப் படுத்துவதற்கு நியாயம் கற்பிப்பது போல, அந்தக் காட்சியை அமைத்திருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுதாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரம், "மூளைச்சலவை செய்யப்பட்ட, போரையும், ஆயுதங்களையும் ஆராதிக்கும் பருவ வயது சிறுவனாக" காட்டுகின்றனர். முன்பு புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளை பற்றியும், இலங்கை அரசு அது மாதிரியான பிரச்சாரங்களை செய்து வந்தது. விஸ்வரூபம் திரைப்படத்தை பார்க்கும் பிற இனத்தவர்கள், இரண்டையும் ஒன்றாகத் தான் புரிந்து கொள்வார்கள். விஸ்வரூபம் படத்தை "ஆஹா...ஓஹோ..." என்று புகழ்ந்த புலி ஆதரவாளர்கள், இவ்வாறு தான் அவர்கள் அறியாமலே சர்வதேச சதிவலைக்குள் சிக்கிக் கொள்கின்றனர். 

விஸ்வரூபம் திரைக்கதை எந்தக் காலகட்டத்தில் நடக்கின்றது என்ற தெளிவு இல்லை. கதையில் நிறைய முரண்பாடுகள். தாலிபான் ஆட்சி நடந்த காலத்தில் கதை நடக்கின்றதா? அல்லது அமெரிக்க படைகளின் பொம்மை அதிபரான கர்சாய் ஆட்சி நடந்த காலத்தில் கதை நடக்கிறதா?  RAW உளவாளியான கமல், பாகிஸ்தானில் வைத்து, தாலிபான் இயக்கத்தில் சேர்வதாக முதலில் காட்டுகின்றார்கள். பாகிஸ்தானில் இருந்து எல்லை கடக்கும் வழியில், ஆப்கான் எல்லைக் காவல் படைவீரனுக்கு கையூட்டு கொடுக்கின்றனர். தாலிபான் ஆட்சி நடந்த காலத்தில், எல்லையிலும் தாலிபான் காவலர்கள் தான் நின்றிருப்பார்கள். ஆனால், படத்தில் காட்டப்படும் காவலர் அணிந்திருக்கும் சீருடை இன்றைய ஆப்கான் இராணுவ சீருடை போன்றுள்ளது. காவலரணில் பறப்பது, இன்றைய ஆப்கான் தேசியக் கொடி. (தாலிபானின் கொடி, கருப்பு வர்ணத்தில் குரான்  வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும்.) அப்படியானால், அது அமெரிக்கா நியமித்த பொம்மை அரசு ஆட்சி நடந்த காலகட்டமாக இருக்க வேண்டும். அப்படி நினைத்துக் கொண்டிருந்தால், அடுத்து வரும் காட்சிகள் தாலிபான் ஆட்சிக் காலத்தையும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர் தொடங்கிய காலத்தையும் நினைவுபடுத்துகின்றன.

அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தும் நேரம், "பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்கர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்..." என்று முல்லா ஒமார் சொல்லி விட்டு, தனது தோழர்களுடன் தப்பிச் செல்லும் காட்சி வருகின்றது. ஆனால், நிஜமோ அதற்கு முற்றிலும் மாறானது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் வந்திறங்க முன்னரே, தாலிபான் தலைவர்களும், போராளிகளும், தமது குடும்ப உறுப்பினர்களையும் கூட்டிக் கொண்டு, பாகிஸ்தானுக்கோ, அல்லது வேறு மறைவிடங்களுக்கோ தப்பிச் சென்று விட்டார்கள். அப்படியானால், விஸ்வரூபம் படக்கதை ஆப்கானிஸ்தானுக்கு பதிலாக, பாகிஸ்தானில் நடக்க வேண்டும். அமெரிக்க/நேட்டோ படைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் படைகள் தாலிபான் தலைவர்களை வேட்டையாடி இருக்க வேண்டும். ஆனால், "பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடு, தாலிபானை ஆதரிக்கும் நாடு",  என்று இந்திய இரசிகர்களுக்கு சொல்ல வேண்டும், என்பதே விஸ்வரூபம் தயாரித்தவர்களின் நோக்கம். இந்த அரசியல் சார்புத் தன்மையினால் தான், கதையிலும் நிறைய முரண்பாடுகள். ஆகவே, ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் இறுதிக் காலத்திற்கு, அமெரிக்க படையெடுப்பு நடந்த காலத்திற்கு, திரைக் கதையை நகர்த்திச் செல்கின்றனர்.

தனது மனைவியை வைத்தியம் பார்க்க வந்த பிரெஞ்சுப் பெண் மருத்துவர், தலையை மூடாமல் இருப்பதற்காக, முல்லா ஒமார் கடுமையாக கண்டிக்கிறார். ஆப்கானிஸ்தானில் தாலிபான் தோன்றுவதற்கு முன்னர், முஜாகிதீன் என்ற இஸ்லாமிய கடும்போக்காளர்களின் ஆட்சி நடந்தது. வெளிநாட்டுப் பெண்கள் முகத்தை மூடும் பூர்கா அணியா விட்டாலும், தலையை மூடி முக்காடு அணியும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர். ஆகவே படத்தில் காட்டுவது போன்ற ஒரு சம்பவம், நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதே காட்சியில், டைரக்டர் கவனிக்காத தவறு ஒன்று நடந்துள்ளது. ஒமார் தனது வீட்டுக்கு ஒரு அந்நியரை (கமல்) அழைத்துச் செல்லும் நேரம், அவர் மனைவி வெறும் முக்காடு மட்டுமே போட்டிருப்பார். இன்னொரு இடத்தில் ஓமாரின் மனைவியையும், மகனையும் தனியான இடத்தில் கமல் போட்டோ பிடித்துக் கொண்டிருப்பார். அப்படி எல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.  

கமல் வீட்டுக்கு வரும் தருணங்களில், தன் மனைவி முகத்தை மூடும் பூர்கா அணிந்திருக்க வேண்டுமென்று கண்டித்திருக்க வேண்டிய ஒமார், சும்மா இருக்கிறார். அது எப்படி? சாதாரண ஆப்கான் பெண்கள், தமது குடும்ப உறுப்பினர்களை தவிர பிற ஆண்களுடன் பேசுவதற்கு தடை விதித்த தாலிபான்கள், தமது குடும்பப் பெண்களை அந்நிய ஆடவருடன் பேச  விட்டிருப்பார்களா? படத்தில் வரும் கமல்ஹாசன், ஒரு டிஜிட்டல் கமெராவை வைத்து, முல்லா ஒமார், அவர் மனைவி, மகன், பாதுகாவலர்கள், அயலவர்கள் என்று எல்லோரையும் போட்டோ எடுத்து தள்ளுவார். தாலிபான் ஆட்சியில், பெண்களை, ஆண்கள் புகைப்படம் எடுக்க தடை இருந்தது. ஒரு அந்நிய ஆண், தாலிபான் குடும்பப் பெண்ணை புகைப்படம் எடுக்க சம்மதிப்பார்களா? தாலிபான்,  மிகவும் இரகசியமான இயக்கம்.  பொது நிகழ்வுகளை தவிர, வேறெங்கும் போட்டோ, வீடியோ  எடுப்பதை அனுமதித்ததில்லை. தாலிபான் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், ஒரே ஒரு தடவை, முல்லா ஒமார் பொது மக்கள் முன்னிலையில் தோன்றிய போது எடுத்த வீடியோ மட்டுமே, இன்று வரை காணக் கிடைக்கின்றது. அந்தளவுக்கு இரகசியம் பேணிய பேர்வழி அவர். முல்லா ஓமாரின் போட்டோ, அல்லது வீடியோ எங்கே தேடினாலும்  கிடைக்காது. 

புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்று, தாலிபான் தலைவர் ஒமாரும் எந்தவொரு பொது நிகழ்விலும்  கலந்து கொண்டதில்லை. பொதுக் கூட்டங்களில் பேசுவதில்லை. அவரைப் பார்ப்பதே அபூர்வம்.  தாலிபான் இயக்க உறுப்பினர்களே முல்லா ஒமாரை நேரில் பார்த்ததில்லை. தாலிபான் இயக்கத்தின் உயர்மட்ட தலைவர்கள், மற்றும் ஒசாமா பின்லாடன், அவருக்கு நெருக்கமான சில அரேபியர்கள் மட்டுமே முல்லா ஒமாரை சந்திக்க முடிந்தது. செப்டம்பர் 2001, நியூ யார்க் இரட்டைக் கோபுர தாக்குதலின்  பின்னர், அன்று பாகிஸ்தானை ஆண்ட முஷாரப் அரசு, அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து விட்டது. அன்றிலிருந்து பாகிஸ்தான் அரசு, ISI கூட, தாலிபானின் எதிரிகளாக மாறி விட்டனர்.

அவ்வாறு மாறிவிட்ட கள நிலைமையில் தான், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு நிகழ்ந்தது. அந்தப் படையெடுப்புக்கு பாகிஸ்தான் அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. ஆகவே, விஸ்வரூபம் படத்தில் காட்டப் படுவதைப் போல, ஒரு பாகிஸ்தானிய ISI  அதிகாரி, அதுவும் சீருடையில், முல்லா ஓமாரையும், ஒசாமா பின்லாடனையும் சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை. அதாவது, செப்டம்பர் 2001 க்கு முன்னர், பாகிஸ்தானிய ISI அதிகாரிகள் மட்டுமல்ல, அமெரிக்க CIA அதிகாரிகள் கூட, ஒமாரையும், ஒசாமாவையும் சந்தித்து இருந்தனர். ஆனால், விஸ்வரூபம் படக்கதை நடக்கும் காலத்தில், அவர்கள் எதிரெதிர் முகாம்களில் இருந்தனர்.   

ஆப்கானிஸ்தானில், தாலிபான் ஆட்சியாளர்கள் மக்களை எப்படி கொடுமைப் படுத்தினார்கள் என்று, கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் எடுத்துக் காட்டியுள்ளதாக பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில், குறிப்பிட்டுச் சொல்லும்படியான "தாலிபான் கொடுங்கோன்மை" எதுவும் அந்தப் படத்தில் கிடையாது. ஒருவரை பொது மக்கள் முன்னிலையில்  தூக்கில் போடும் காட்சி கூட, "ஒரு துரோகிக்கு மரண தண்டனை வழங்குவது" போலத் தான் காட்டியுள்ளார்கள். இது போன்ற பல சம்பவங்கள், ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் நடந்துள்ளன. விஸ்வரூபம் படத்தில் காட்டப்படுவது போல, சமிக்ஞை அனுப்பும் கருவிகளுடன், எதிரிக்கு காட்டிக் கொடுக்கும் உளவாளிகள் பலர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் இருந்தனர். அப்படியானவர்கள் கையும், களவுமாக அகப்பட்டால்,  ஒரு சந்தியில் வைத்து பொது மக்கள் முன்னிலையில்சுட்டுக் கொன்று, மரண தண்டனை  நிறைவேற்றுவார்கள். 

ஆனால், விஸ்வரூபம் படக்கதையில் ஒரு ஓட்டை உள்ளது. தவ்பீக் என்ற அரேபியர், அமெரிக்கப் படைகளுக்கு சமிக்ஞை அனுப்பும் கருவி வைத்திருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப் படுகின்றது. அதற்காக பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் போடுகின்றார்கள். தாலிபான் ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்த அரேபியர்கள், ஒசாமா பின்லாடனின் அரவணைப்பில் வாழ்ந்தனர். அரேபியர்கள் எத்தகைய குற்றம் புரிந்தாலும் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் தாலிபானுக்கு இருக்கவில்லை. அதிக பட்சம், ஒசாமாவிடம் ஒப்படைத்து தண்டிக்க சொல்லிக் கோரலாம். அவ்வளவு தான். 

படத்தில் காட்டப் படுவதைப் போல, தவ்பீக் போன்ற அரேபிய புரவலர்கள், தாலிபானுக்கு நிதியுதவி செய்தனர் என்பது உண்மை தான். அதற்காகவே அரபுக்காரர்களுக்கு விசேட உரிமைகள் வழங்கப் பட்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் யாருக்கும் கிடைக்காத சுதந்திரம் அவர்களுக்கு கிடைத்தது. சிலநேரம் தாலிபான் உறுப்பினர்களுக்கு கிடைப்பதை விட அதிக சலுகைகள் கிடைத்தன.  தாலிபான் ஆட்சியில், அரேபியர்கள் ஆப்கான் மக்களுடன் எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை. தாலிபான் தலைமை, அரேபியருக்கு அதிக சுதந்திரமும், சலுகைகளும் கொடுப்பதாக, ஆப்கான் மக்கள் குறைப்பட்டனர். அப்படியான நிலையில், ஒரு அரேபியர் எந்தளவு பாரதூரமான குற்றம் இளைத்திருந்தாலும், இப்படி பகிரங்கமாக தூக்கில் போட்டிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு தாலிபான்கள் முட்டாள்கள் அல்ல. யாராவது ஒரு அரேபியர் தண்டிக்கப் பட்டால், அரேபியர்களின் பண வருவாய் நின்று போகும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.     

கமல்ஹாசன் எதற்காக இவ்வளவு முரண்பாடுகளுடன் ஒரு படத்தை எடுக்க வேண்டும்? ஆப்கானிஸ்தான் என்ற நாட்டில் நடந்த, தாலிபானின் கொடுமைகளை பற்றி இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லவா? தாலிபான் போன்ற மட அடிப்படைவாதிகளை எதிர்ப்பதற்காகவா? எதுவுமே இல்லை. உண்மையைச் சொன்னால், கமல்ஹாசனும், அவரை ஆதரிக்கும் பார்ப்பனிய, இந்துத்துவா கும்பலும், இந்தியாவில் ஒரு தாலிபான் ஆட்சியை கொண்டுவர விரும்புகின்றார்கள். அதற்கான நடவடிக்கைகளை இப்போதே ஆரம்பித்து விட்டார்கள். உன்னிப்பாக கவனித்தால், "தாலிபான்கள் எப்படியான அடக்குமுறை சட்டங்களை ஆப்கான் மக்கள் மீது விதித்தார்கள்,"  என்று  விஸ்வரூபம் படத்தில் எங்கேயும் சொல்லியிருக்க மாட்டார்கள். அது தான் சூட்சுமம். இந்து மத அடிப்படைவாதிகளுக்கும், முஸ்லிம் மத அடிப்படைவாதிகளுக்கும் இடையில் கொள்கை வேறுபாடு எதுவும் கிடையாது. அது இஸ்லாமிய தாலிபான், இது இந்து தாலிபான். அது மட்டுமே வித்தியாசம். 

(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்

*************************

விஸ்வரூபம் தொடர்பான வேறு பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

*************************


சினிமா தொடர்பான பதிவுகள்:

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!
தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்
ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா
ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை

34 comments:

Vathees Varunan said...

//புலிகளின் De Facto தமிழீழத்தில் "தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருந்தது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை போன்ற குற்றச் செயல் எதுவும் நடக்கவில்லை. கலாச்சார சீரழிவுகள் இருக்கவில்லை. சாதிப் பாகுபாடு இருக்கவில்லை...."//

இதிலே குறிப்பிடும் சகல விடயங்களும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இடம்பெற்றவைதான். அவற்றுக்கான தண்டனைகள் மிக்கடுமையாக இருந்தது. குற்றவாளிகளை ஸ்பீக்கர்மூலம் குறிப்பிட்ட இடத்தில் கொலைசெய்யப்போவதாக அறிவித்துவிட்டு மக்களுக்கு முன் கொண்டுவந்து சுட்டுக் கொலை செய்தவர்கள்தான் புலிகள். தலிபானுக்கும் புலிகளுக்குமிடையில் பெரிதாக வித்தியாசம் இருக்கவில்லை. சமயரீதியான கட்டுப்பாடுகள் எதுவும் புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை.

மன்சி (Munsi) said...

வேண்டும் என்றே பரபரப்புக்காக எழுதிய கட்டுரை இது.

//புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்று, தாலிபான் தலைவர் ஒமாரும் எந்தவொரு பொது நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை//

//தாலிபான் இயக்க உறுப்பினர்களே முல்லா ஒமாரை நேரில் பார்த்ததில்லை. தாலிபான் இயக்கத்தின் உயர்மட்ட தலைவர்கள், மற்றும் ஒசாமா பின்லாடன், அவருக்கு நெருக்கமான சில அரேபியர்கள் மட்டுமே முல்லா ஒமாரை சந்திக்க முடிந்தது. //

தலைவர் பிரபாகரன் அவர்கள் தவறாமல் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசில்கள் வழங்கியும் கலைஞர்களை கெளரவித்தும் இருக்கிறார். செஞ்சோலை காந்தரூபன் நிகழ்ச்சிகளிலும் (அங்கு படிப்பித்தவர்களது குடும்ப உறுப்பினர் அந்நிகழ்ச்சிகளுக்கும் போவார்கள்) பங்கேற்று இருக்கிறார். அதைத் தவிர முத்தமிழ் விழாவில் பங்கேற்று இருக்கிறார். கேணல் கிட்டுவின் நினைவஞ்சலி நிகழ்வில் தீருவில் மக்கள் வெள்ளத்திலும் தலைவர் தோன்றினார். இதை விட புதுக்குடியிருப்பு நாற்சந்தியில் அவர் வந்த வாகனம் புகைந்து அவர் வெளியே வந்து நின்ற போது பொது மக்கள் மனித சங்கிலி வளையம் அமைத்து அவரை ஏற்ற வந்த போராளிகளை செக்பண்ணியே பிறகே அவர் இருந்த இடத்திற்கு அனுமதித்தார்கள். அந்த நேரத்திலே ஊடுறுப்பு தாக்குதல் நடந்தது கொண்டிருந்தன. அதனால் வந்த போராளிகள் மக்கள் செக்கப் பண்ணி அனுப்பினார்கள். தளபதி சங்கர், தமிழ்ச்செலவன் கொல்லப்பட்ட போது பயணிப்பது பாதுகாப்பு இல்லை என்ற போதும் அவர்கள் வீட்டிற்குப் போய் ஆறுதல் படுத்தியவர் - நூற்றுக்கணக்கான மக்கள் அந்த வீடுகளில் நின்றிருந்தார்கள்.

ஒருவரால் (உங்களால்) எப்படித் தான் இப்படி கணக்கு வழக்கில்லாமல் பொய் சொல்ல முடிகிறதோ தெரியவில்லை. கேவலமான தமிழினத்தில் பிறந்ததுக்கு வருந்துகிறேன்.


தலிபான் சமயத்திற்காக போராடியது. புலிகள் தமிழர்களுக்காக போராடினார்கள். அவர்கள் ஆட்சியில் நீங்கள் குறிப்பிட்ட குற்றங்கள் மிகவும் சொற்ப அளவிலேயே நடந்தது. எடுத்ததற்கெல்லாம் புலிகள் மரண தண்டனை கொடுத்ததில்லை. ஓரிருவருக்கு மரண தண்டனை கொடுத்தார்களே ஒழிய எல்லா துரோகிகளுக்கும் அல்ல. தலிபான் இயக்கம் ஆரம்பத்தில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராட ஆரம்பித்தாலும் சமய சச்சரவுகளால் வேறு பாதையில் சென்றவர்கள். புலிகள் அப்படி அல்ல.

எல்லாளன் said...

கமல் ஒரு ஈழவிரோதி தான் அதில் மாற்றுக்கருத்தில்லை

முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கு முடிச்சு போடுகின்றது

புலிகளை தூற்றாமல் கலையகத்தால் இருக்க முடிவதில்லை போலும்





Kalaiyarasan said...

விஸ்வரூபம் படக் கதையில் நிறைய முரண்பாடுகள். ஆப்கானிஸ்தான் பற்றி ஒரு திரைப்படம் எடுப்பதற்கு முன்னர், அந்த நாட்டைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு இந்திய முஸ்லிம் அல்கைதாவில் சேர முடியும். ஆனால், தாலிபானில் சேர முடியாது. பஷ்டூன் இன மக்கள் மட்டுமே தாலிபானில் உறுப்பினராக சேர முடியும். பிற ஆப்கானிய இனங்களான டாரி, ஹசாரா, உஸ்பெக், தாஜிக் மக்கள் யாரும் அந்த இயக்கத்தில் சேரவில்லை. அதற்கு காரணம், ஆப்கானிஸ்தானில் கூர்மையடைந்துள்ள இன முரண்பாடுகள். கடந்த காலத்தில் ஆப்கான் இனங்களுக்கு இடையில் நடந்த படுகொலைகள், அவற்றிற்கு இடையே கசப்புணர்வை வளர்த்துள்ளது. தாலிபானும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்த இயக்கம் என்னதான் "இஸ்லாமிய சர்வதேசியம்" பேசினாலும், பிற இன மக்களை படுகொலை செய்ததன் மூலம், தம்மை பஷ்டூன் இனத்தவரின் பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டனர். ஆகவே, ஒரு இந்தியாவில் இருந்து வரும் ஜிகாதி தாலிபானில் சேர்ந்து, அதுவும் தலைவருக்கு நெருக்கமாக வருவது நினைத்துப் பார்க்க முடியாதது. அல்கைதாவில் யாரும் சேரலாம். புதிதாக சேர்ந்து கொள்பவரின் இனம், மதம் முக்கியமல்ல. முஸ்லிமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்கைதாவில் சேர்ந்த பிறகு முஸ்லிமாக மாற முடியும். ஆனால், அல்கைதாவை தெரிவு செய்வதில் கமலுக்கு சிக்கல் இருந்திருக்கிறது. ஏனெனில் படத்தின் ஆரம்பத்திலேயே ஒசாமா பின்லாடன் இறந்து விட்டதாக காட்டுகிறார்கள். அதற்குப் பிறகு அல்கைதாவை வைத்து படம் எடுப்பது காலத்திற்கு ஏற்றதாக இருக்காது.

kk said...

புலிகளின் De Facto தமிழீழத்தில் "தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருந்தது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை போன்ற குற்றச் செயல் எதுவும் நடக்கவில்லை. ///ஹி ஹி கொலைமட்டும் நடக்குமாக்கும்

எல்லாளன் said...

மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால் மாட்டைக் கொண்டு போய் மரத்தில் கட்டி விட்டு மரத்தைப் பற்றி எழுதியது போல் தான்

கமலின் முஸ்லீம் விரோதத்தை உங்களுடைய முஸ்லீம் வாந்திக்கு

புலிகளை இழுத்து எழுதியதிற்கு எந்த சம்பந்தமும் இல்லை

ஈழத்தமிழரை இதற்குள் இழுத்து விட வேண்டும் என்ற நோக்கும் சந்ததி சாக்கில் புலிகளையும் தலிபான்களாக சித்தரித்ததும் தான் இதில் உள்நோக்கம்

ஆக நாங்கள் கடுமையாக எழுதினால் தூக்கி விடுவீர்கள் அது தான்

உங்களுடைய புலி எதிர்ப்பை தொடருங்கள்

ஆனால்

யாரும் புலிகளுக்காக வாந்தி எடுக்க வேண்டாம் செத்தவர்களை தோண்டி எடுத்து நோண்ட வேண்டாம்

Kalaiyarasan said...

எல்லாளன் அவர்களுக்கு, இந்தக் கட்டுரையில் புலிகளை எதிர்த்து என்ன எழுதியிருக்கிறேன் என்று நிரூபிக்க முடியுமா? கட்டுரை முழுக்க புலிகளுக்கு ஆதரவான, அவர்களின் போராட்டத்தை அனுதாபத்துடன் பார்க்கிற வகையில் தான் எழுதப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு பல இடங்களை குறிப்பிடலாம். நீங்கள் புலி எதிர்ப்புக் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் எல்லாம் அப்படித் தான் தெரியும்.
//புலிகளின் De Facto தமிழீழத்தில் "தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருந்தது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை போன்ற குற்றச் செயல் எதுவும் நடக்கவில்லை. கலாச்சார சீரழிவுகள் இருக்கவில்லை. சாதிப் பாகுபாடு இருக்கவில்லை...." என்றெல்லாம் புலிகளின் பொற்காலம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களை சந்தித்திருப்பீர்கள். ஏன், இதை வாசிக்கும் நீங்கள் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். தாலிபான் ஆதரவாளர்களும், அதே மாதிரியான கதைகளை சொல்லி, ஆப்கானிஸ்தானில் கடந்த கால தாலிபான் ஆட்சியை நியாயப் படுத்தி பேசி வருகின்றனர். இன்றைக்கும், ஈழத்தில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் வாழும் தமிழர்கள் மத்தியில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு இருப்பதை மறுக்க முடியாது. அதே போல, இன்றைக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் வாழும் பஷ்டூன் மொழி பேசும் மக்கள் மத்தியில் தாலிபானுக்கு ஆதரவு உள்ளது.//

//இதிலே நமக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். இருந்தாலும், தாலிபான் போராளிகள், அவர்களின் குடும்பங்கள், சனத்தொகையில் குறிப்பிட்டளவு விகிதாசாரம், தாலிபானை ஆதரித்திருப்பார்கள் அல்லவா? ஈழத்தில் விடுதலைப் புலிகளின் விடயத்திலும் அதுவே நிதர்சனமாக இருந்தது. ஈழத்திற்கு வெளியே, பிற இன மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஈழத் தமிழரில் ஒரு பிரிவினர் அவர்களை ஆதரித்தனர் என்ற உண்மையை நாங்கள் மறைக்கக் கூடாது. ஈழத் தமிழர்கள் புலிகளையும், சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தையும் ஒரே மாதிரியாக பார்க்கிறார்கள் என்று பேசுவதும் அபத்தமானது. அந்த அபத்தம் தான் விஸ்வரூபம் படத்தில் அரங்கேறியுள்ளது.//

//ஈழப்போர் நடந்த காலத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த கிராமங்கள் மீது குண்டு வீசியதற்கு ஸ்ரீலங்கா அரசு என்னென்ன காரணங்களை கூறியதோ, அதையே கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் ஒப்புவிக்கிறார். "அந்தக் கிராமத்தில் அமெரிக்க கைதிகள் வைக்கப் பட்டிருந்தார்கள். அதனால் தான் அமெரிக்கர்கள் குண்டு போட்டார்கள். அப்பாவி மக்களை கொன்ற பாவம் அமெரிக்கர்களைச் சேரும்..." என்று விஸ்வரூபம் படத்தில் ஒமாராக நடிப்பவர் கூறுகின்றார்.//

//விஸ்வரூபம் கூறும் (அ)நியாயத்தை தான், பாலஸ்தீன மக்களின் படுகொலை சம்பந்தமாக இஸ்ரேலிய அரசு கூறுகின்றது. ஈழத் தமிழரின் படுகொலை சம்பந்தமாக, இலங்கை அரசு கூறுகின்றது.//

Vathees Varunan said...

புலிகள் சொற்ப அளவிலேயே மரண தண்டனை வழங்கினார்கள் என்று கூறும்போது நா கூசவில்லையா உங்களுக்கு? விடுதலைப்புலிகளை விமர்சித்த எத்தனை புத்திஜீவிகளையும் புலிகளின் எதிர்ப்பாளர்களையும் கொன்றுகுவித்தார்கள். அவர்கள் தொடங்கிய கொலைக்கலாச்சாரம்தான் பின்னர் அவர்களுடைய ஆதரவாளர்கள் கொடிபிடித்தவர்கள் என எல்லோரையும் அதேபாணியில் இராணுவப்புலனாய்வுப்பிரிவினர் சுட்டுக்கொள்வதற்கு வழிகாட்டியாக இருந்தது.

கடைசியில் பலாத்காரமாக புலிகள் அமைப்பில் எனக்கு தெரிந்த ஒருவரின் உறவுக்கார பையனை பிடித்துக்கொண்டுபோகும்போது அந்தப்பையனுடைய தாயை சுட்டுவிட்டு பிடித்துக்கொண்டுபோனது இவ்வாறான முட்டாள்தளங்களாலேயே புலிகள் இயக்கமே அழிந்துபோனது. இனியும் புலிகளுக்கு வக்காளத்துவாங்காமல் எஞ்சியிருக்கும் மக்களை பாருங்கள்.
//மன்சி (Munsi)//

IBRAHIM MOORE said...

நான் ஒரு இஸ்லாமியன். எனக்கும் விஸ்வரூபம் சார்ந்த தாக்கம் இருக்கிறது. அதாவது இஸ்லாமிய அரசியல் சிருபில்லைத்தனமென வாதிடுவது படத்தின் முக்கிய கதையம்சம். அதுவே நான் அவர்கள் மேல் வைக்கும் குட்ரமும் கூட. ஆனால் உங்களின் பதிவு அவரின் கதையம்சத்தை தாக்குவதாக இல்லை. மற்றும் அவர் எண்ண அலைவுகளை தாக்குவதாக இல்லை. அவர் செய்வது யாவும் மடம் என்றே உள்ளது. கமல் தன்னை அறிவாளி என்று பாராட்ட விரும்பும் தற்குறி. இதைபோன்ற தற்குரிகளாலே சில வீண் வாதங்கள் உருவாகின்றன.நான் ஒவ்வொரு தமிழரிடமும் இருந்து கேட்பது இஸ்லாமிய அரசில்யல் தவறன்று எனப் புரிதல்.
சிருபான்மைஇன்ருகாக நடுநிலை கொண்டதற்கு நன்றி. இஸ்லாம் ஒரு மாற்று அரசியல் புரட்சி என்றதற்கு நன்றி.

Kalaiyarasan said...

இந்தக் கட்டுரையை வாசித்த நண்பர்களுக்கு. இந்தக் கட்டுரைக்கு இட்ட தலைப்பை பற்றிக் கூட சர்ச்சை எழுந்தது. இந்த தலைப்பு பரபரப்புக்காக இடப்பட்டதல்ல. இந்தக் கட்டுரயின் நோக்கம் வெறும் சினிமா விமர்சனம் அல்ல. அந்த சினிமா போதிக்கும் அரசியல் எந்தளவு அபத்தமானது என்பதை காட்டுவதற்கு. நமது சமூகத்தில் சினிமாக்களும் மக்களின் அரசியல் கருத்தை தீர்மானிக்க உதவுகின்றன. அதில் விஸ்வரூபமும் விதிவிலக்கு அல்ல. அந்தப் படம் முழுக்க முழுக்க அமெரிக்க-இந்திய வெளிவிவகார கொள்கையை பிரதிபலிக்கின்றது. அமெரிக்க-இந்திய வெளிவிவகார கொள்கை, தாலிபானையும், புலிகளையும் ஒன்றாகத் தான் பார்க்கின்றது. ஈழப் போருக்கும், ஆப்கான் போருக்கும் இடையில் என்ன தொடர்பு என்பதும் பலருக்கு தெரியவில்லை. நாற்பதாயிரம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னரும், தமிழர்கள் இன்னமும் அறியாமையில் வாழ்வது ஆபத்தானது.

Nellai Balaji said...

இந்த கட்டுரையை புலிகளின் மிதான வஞ்ச புகழ்ச்சியாகவே தோன்றுகிறது...தலிபான்கள் மத ரீதியாக மிக கடும் போக்கு உள்ளவர்களாகதான் எங்களுக்கு தெரியும்..நீங்கள் புலிகளையும் அதே நேர்கோட்டில் காட்டுவதாகவே தெரிகிறது..புலிகளின் மேல் உங்களுக்கு ஏன் இத்தனை கோவம்...

Kalaiyarasan said...

Nellai Balaji, ஈழத் தமிழர்களுக்கு புலிகள் எப்படியோ, ஆப்கான்-பஷ்டூன் மக்களுக்கு தாலிபான். இதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தாலிபான் மதம் என்ற பெயரில் பஷ்டூன் மக்களின் பழமைவாத கலாச்சாரத்தின் காவலர்களாக காட்டிக் கொண்டார்கள்.

Nellai Balaji said...

எனக்கு புரிகிறது..பஷ்டுன் மக்களுக்கு தலிபான்கள் போல, ஈழ மக்களுக்கு புலிகள் என்றால் , நீங்கள் தலிபான்களை ஆதரிக்கின்ரீர்களா?..தலிபான்கள் கடும்போக்குடையவர்கள் என்றால் புலிகளும் அவ்வாறா ? மத ரீதியான போரட்டமும், மொழி மற்றும் இன ரீதியாக ஒடுக்கப்பட மக்களும் ஒன்றா ? தலிபான்களுக்கு சவுதி எவ்வாறு பொருளாதார ரீதியாக உதவி செய்கிறது என்பது நீங்கள் அறிந்ததே.. இரண்டையும் ஒன்றுபடுத்தி பார்ப்பது மிகவும் தவறு என்பது என் கருத்து ..

Kalaiyarasan said...

//பஷ்டுன் மக்களுக்கு தலிபான்கள் போல, ஈழ மக்களுக்கு புலிகள் என்றால், நீங்கள் தலிபான்களை ஆதரிக்கின்ரீர்களா?//
நீங்கள் இன்னமும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் ஒரு பஷ்டூன் மொழி பேசும் இனத்தை சேர்ந்தவராக இருந்தால், "தாலிபானை ஆதரிக்கிறீர்களா?" என்ற கேள்வியில் அர்த்தம் உள்ளது. நீங்கள் இந்தக் கேள்வியை ஒரு தமிழரிடம் கேட்பதாக இருந்தால், "புலிகளை ஆதரிக்கிறீர்களா?" என்று கேட்க வேண்டும். தாலிபானை ஆதரிப்பவர்கள் பஷ்டூன் இன மக்கள். தாலிபானுக்கு பிற இன மக்கள் மத்தியில் ஆதரவில்லை. ஆப்கானிஸ்தானிலேயே தாஜிக், உஸ்பெக், துருக்மேன், ஹசாரா, டாரி இன மக்கள் யாரும் தாலிபானை ஆதரிப்பதில்லை. புலிகள் விடயமும் அவ்வாறு தான். தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில் மட்டுமே புலிகளுக்கு ஆதரவு இருக்கிறது. இலங்கையிலேயே சிங்கள, முஸ்லிம் இன மக்கள் ஆதரிப்பதில்லை. அது போலத் தான் இந்தியாவிலும். தமிழக மக்கள் மடுமே ஆதரிக்கிறார்கள். மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் ஆதரிப்பதில்லை. இது தான் யதார்த்தம். இதைத் தான் சுருக்கமாக கூறினேன். உங்களுக்கு புரியவில்லை.

Kalaiyarasan said...

//தலிபான்கள் கடும்போக்குடையவர்கள் என்றால் புலிகளும் அவ்வாறா ? மத ரீதியான போரட்டமும், மொழி மற்றும் இன ரீதியாக ஒடுக்கப்பட மக்களும் ஒன்றா ?//

கடும்போக்கு என்ற சொல்லை நீங்கள் பாவித்தால், அது தாலிபானுக்கும், புலிகளுக்கும் பொருந்தும். பல கட்டுப்பாடுகள் ஒரே மாதிரி நடைமுறைப் படுத்தப் பட்டன. உதாரணத்திற்கு, இயக்க உறுப்பினர்கள், மது அருந்தக் கூடாது, பெண்களோடு பேசக் கூடாது, காதலிக்க கூடாது, இப்படிப் பல. தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், அரசியல் அதிகாரத்தை ஒரே மாதிரித் தான் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். திருட்டு, கொள்ளை, பாலியல் வல்லுறவு, பாலியல் தொழில் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை கொடுத்தார்கள். அதிக பட்சம் பொது இடத்தில் சமூகவிரோதி என்ற குற்றஞ்சாட்டி, மரணதண்டனை வழங்கினார்கள். தாலிபானும், புலிகளும் இந்த விடயத்தில் ஒரே மாதிரி தான் நடந்து கொண்டார்கள். இதனால் தான், புலிகள் ஆண்ட காலத்தில் எந்த குற்றச் செயலும் நடக்கவில்லை என்று புலி ஆதரவாளர்களும், தாலிபான் ஆண்ட காலத்தில், எந்த குற்றமும் நடக்கவில்லை என்று தாலிபான் ஆதரவாளர்களும் இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Kalaiyarasan said...

//மத ரீதியான போரட்டமும், மொழி மற்றும் இன ரீதியாக ஒடுக்கப்பட மக்களும் ஒன்றா ? //
இந்தக் கேள்வியை நீங்கள் சரியான முறையில் எழுப்பவில்லை. "மத ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களும், இனரீதியாக ஒடுக்கப் பட்ட மக்களும் ஒன்றா?" என்று கேட்டிருக்க வேண்டும்.
தாலிபானும், அவர்களது முந்திய தலைமுறையினரான முஜாஹிதீன் குழுக்களும், தாம் மத ரீதியாக ஒடுக்கப் பட்ட மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொண்டார்கள். போராட்டம் தொடங்கிய காலத்தில் (1979 - 1989) சோஷலிச அரசு இருந்தது. அந்த அரசு, இஸ்லாமிய மத நிறுவனங்களை அடக்கியது. ஏராளமான இஸ்லாமிய மதத் தலைவர்கள் கொலை செய்யப் பட்டார்கள், அல்லது சிறையில் அடைக்கப் பட்டார்கள். அதன் எதிர்விளைவாக, இஸ்லாமிய மதத் தலைவர்கள் ஆயுதக் குழுக்களை உருவாக்கினார்கள். நாஸ்திக அரசுக்கு எதிராக போராடுவது, ஆஸ்திகர்களின் கடமை என்று கூறி, கிராமங்களில் வாழ்ந்த மதப் பற்று கொண்ட ஆப்கான் மக்களை ஒன்று திரட்டினார்கள். அந்தப் போராட்டத்திற்குள் பிறந்தவர்கள் தான் தாலிபான் உறுப்பினர்களும், அவர்களை ஆதரித்தவர்களும். அவர்களுக்கு மதத்தை தவிர வேறெதுவும் தெரியாது. கடந்த தலைமுறை தவறிழைத்து விட்டதாகவும், தாமே மதத்திற்காக தீவிரமாக போராடும் தூய்மைவாதிகள் என்றும் நம்பினார்கள். அதே போன்ற சூழ்நிலை, ஈழத்திலும் உருவாகியுள்ளது. முப்பதாண்டு கால போராட்டத்திற்குள் பிறந்த இளந் தலைமுறையினருக்கு, தமிழ்த் தேசியத்தை தவிர வேறெதுவும் தெரியாது. இதெல்லாம் அவர்களுடைய தவறு அல்ல. சூழ்நிலை அப்படி. அந்த சூழலுக்குள் வாழ்ந்தவர்கள், அதையே சரியான அரசியல் கொள்கை என்று நம்புவார்கள்.

தாலிபான் மதத்தை தனது அரசியல் கொள்கையாக வரித்துக் கொண்டது. புலிகள் தேசியவாதத்தை தனது அரசியல் கொள்கையாக வரித்துக் கொண்டது. அது மட்டுமே வித்தியாசம். மதம் என்பது இறைவனோடு சம்பந்தப் பட்டது. மத நம்பிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய மதக் கடமைகள் சில உள்ளன. தாலிபானை பொறுத்தவரையில், மதம் அவர்களுக்கு அனுகூலமாக அமைந்தது. "நீங்கள் உண்மையான மத நம்பிக்கையாளர் என்றால், நாங்கள் சொல்வது மாதிரி நடக்க வேண்டும்..." என்று மக்களை நிர்ப்பந்திக்க முடிந்தது.

இங்கே நீங்கள் ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்க வேண்டும். மதத்தை பின்பற்றி வாழும் சாதாரண மக்களுக்கும், மதத்தை அரசியல் கொள்கையாக பயன்படுத்தும் இயக்கங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. இந்தியாவில் வாழும் இந்துக்கள் எல்லோரும், குஜராத் முதல்வர் மோடியையோ, அல்லது ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா போன்ற இயக்கங்களை ஆதரிப்பதில்லை. அவர்களும் இந்துக்கள் தான். ஆனால், இந்து மதத்தை தமது அரசியல் கொள்கையாக பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா காரருக்கும், இந்து மதத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? தாலிபானுக்கும், இஸ்லாமிய மதத்திற்கும் இடையிலான வித்தியாசமும் அது அது தான். தாலிபான்கள் இஸ்லாமிய மதத்தை தமது அரசியல் கொள்கையாக பயன்படுத்துகிறார்கள்.

//தலிபான்களுக்கு சவுதி எவ்வாறு பொருளாதார ரீதியாக உதவி செய்கிறது என்பது நீங்கள் அறிந்ததே.. //
எல்லா இயக்கங்களுக்கும் எங்காவது ஓரிடத்தில் இருந்து நிதியுதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சவூதி அரேபியா ஏன் தாலிபானுக்கு உதவி செய்தது? ஏனென்றால், சவூதி அரேபியர்களின் எஜமானர்களான அமெரிக்கர்கள் தான் தாலிபானை உருவாக்கி, நிதியும், ஆயுதங்களும் கொடுத்தார்கள்.
இது பற்றி விரிவான பதிவை எழுதியிருக்கிறேன். வாசியுங்கள்:
அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆப்கான் ஜிகாதிகள் http://kalaiy.blogspot.nl/2013/02/blog-post_22.html

Nellai Balaji said...

\\ மத ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களும், இனரீதியாக ஒடுக்கப் பட்ட மக்களும் ஒன்றா?\\ சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி..அதுதான் என் கேள்வி.. அரசியல் கொள்கை என்ற தளத்தில் மதமும், மொழியும் ஒன்று என்பது தங்களின் கருத்து...இதை போராட்ட தளத்திற்கு எடுத்து செல்லும் போது, வருகின்ற ஆதரவும் எதிப்பும் , எவ்வாறு போராட்ட களத்தையும், அதன் வெற்றியையும் தீர்மானிக்கும் என்பதற்கு ஈழம் மற்றும் தலிபான்(ஆப்கானிஸ்தான் ) சரியான எடுத்துகாட்டு ...ஆகவே நீங்கள் இரண்டையம் ஒன்று படுத்தி பார்ப்பது என்பது முற்றிலும் தவறு..
தலிபான்களின் மதம் அவர்களுக்கு ஒரு உலகளாவிய கேடயமாக பயன்பட்டுள்ளது என்பது மறுபதற்கு இல்லை..அந்த ஒரு கேடயம் புலிகளுக்கு(ஈழம் சமுதாயம் ,இன ரீதியாக ஒடுக்கப்பட மக்களுக்கு) இல்லை என்பதை தங்களுக்கு தெரியாதா ?
தலிபான்கள் ஆப்கானிஸ்தான் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி இல்லை என்பதை நான் மறுக்கவில்லை ..அதே நேரம் அமெரிக்காவே வேறு வழி இல்லாமல் அவர்களிடம் பேச்சு வார்த்தைக்கு வருவதை மதம் என்ற கேடயமாக பார்காமல் எப்படி பார்ப்பது ... ஆகவே மீண்டும் கூறுகிறேன் ,நீங்கள் இரண்டையம் ஒன்று படுத்தி பார்ப்பது என்பது முற்றிலும் தவறு..
மேலும் இழப்புகள் இரு பக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதனால் மட்டுமே இரண்டுமே ஒரே வகையான போராட்டமாகாது.... துரோகி இந்தியா, செஞ்சீனம் போன்ற பிராந்திய வல்லரசுகளின் பிடியில் மாட்டி, கடும் போராட்டம் நடத்திய புலிகளும் , தலிபான்களின் போராட்டமும் அரசியல் தளத்தில் மட்டும் அல்ல , போராட்ட களத்திலும் முற்றிலும் மாறுபட்டது ...ஒருவேளை நீங்கள் கூறுவது போல , எல்லா தமிழர்களும்,உலக மக்களும் வேண்டுமானால் ஆதரிக்காமல் இருக்கலாம் ..ஆனால் அந்த போராட்டம் கொச்சை படுத்த பட கூடாது ..அது நாமே நம் மீது கரியை புசுவது போல

Kalaiyarasan said...

//இதை போராட்ட தளத்திற்கு எடுத்து செல்லும் போது, வருகின்ற ஆதரவும் எதிப்பும்//

போராட்டக் களத்திற்கு எடுத்துச் செல்லும் பொழுது வருகின்ற ஆதரவும், எதிர்ப்பும் அந்த இயக்கம் முன்னெடுக்கும் கொள்கையில் தங்கியுள்ளது. தாலிபான் இஸ்லாமிய மதத்திற்காக போராடுவதாக சொல்லிக் கொண்டாலும், அவர்களது ஆதரவுத் தளம் பஷ்டூன் மக்கள் மட்டும் தான். அவர்களால், பிற ஆப்கான் இனங்களை சேர்ந்த இஸ்லாமியர்களை வென்றெடுக்க முடியவில்லை. இதனை நான் ஏற்கனவே பத்து தடவை சொன்னாலும், வேண்டுமென்றே புறக்கணித்து வருகின்றீர்கள். புலிகள் தமிழ் தேசியம் பேசினாலும், அவர்களது தமிழ் தேசியத்தினுள், மலையகம், கொழும்பை சேர்ந்த தமிழர்கள் அடங்கவில்லை. அதே போல தமிழை தாய்மொழியாக கொண்ட முஸ்லிம்களும் அடங்கவில்லை. அது குறிப்பிட்ட பிரதேசத்திற்கு உரிமை கோரும் இனக்குழு வாதமாக இருந்தது. ஆங்கிலத்தில் இதனை tribalism என்று சொல்வார்கள். ஆனால், புலிகள் தாம் தமிழ் தேசியம் என்ற உன்னத இலட்சியத்திற்காக போராடுவதாக அறிவித்துக் கொண்டார்கள். அதனால் தான், நீங்களும் ஆதரித்தீர்கள். நீங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு தமிழர்கள், மலேசிய தமிழர்கள், தென்னாபிரிக்க தமிழர்கள், மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று, "தமிழ் இன உணர்வு" கொண்ட மக்கள் ஆதரித்தார்கள்.

தாலிபான் விடயத்திலும் அதுவே நடந்தது. தாலிபான் இஸ்லாம் பற்றி பேசினாலும், அவர்களது பல கட்டுப்பாடுகளுக்கும் இஸ்லாமிய மதத்திற்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை. உதாரணத்திற்கு: பெண்கள் பூர்கா அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்ற சட்டம், பஷ்டூன் இன மக்களுக்கு மட்டுமே உரிய தனித்துவமான கலாச்சாரம். பிற ஆப்கானிய இனங்களிடம் அந்த வழக்கம் இல்லை. பஷ்டூன் மக்களும், பிற ஆப்கானியர்களும் இஸ்லாமியர்கள் என்பதால், தாம் இஸ்லாம் என்ற உன்னத இலட்சியத்திற்காக போராடுவதாக சொல்லிக் கொண்டார்கள். புலிகளுக்கு உலகத் தமிழர்கள் ஆதரவளித்தது போல, தாலிபானுக்கு உலக முஸ்லிம்கள் ஆதரவளித்தார்கள். புலிகளுக்கு "தமிழ் இன உணர்வாளர்கள்" ஆதரவளித்தது போல, தாலிபானுக்கு "முஸ்லிம் மத இன உணர்வாளர்கள்" ஆதரவளித்தார்கள். போராட்டக் களத்திற்கு செல்லும் ஒரு இயக்கம், உலகளாவிய ரீதியாக எத்தகையோரின் ஆதரவு தேவை என்பதை தீர்மானிக்கின்றது. புலிகளைப் பொறுத்தவரையில் அது தமிழ் தேசியம். தாலிபானை பொறுத்தவரையில் அது இஸ்லாம். இஸ்லாம், தமிழ் தேசியம் இரண்டுமே கருத்தியல் தளத்தில் முன்னெடுக்கப்படும் கொள்கைகள் ஆகும். இஸ்லாமியர் எல்லோரும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அல்ல. தமிழர்கள் எல்லோரும் தமிழ் தேசியவாதிகள் அல்ல.

Kalaiyarasan said...

//தலிபான்களின் மதம் அவர்களுக்கு ஒரு உலகளாவிய கேடயமாக பயன்பட்டுள்ளது என்பது மறுபதற்கு இல்லை..அந்த ஒரு கேடயம் புலிகளுக்கு(ஈழம் சமுதாயம் ,இன ரீதியாக ஒடுக்கப்பட மக்களுக்கு) இல்லை என்பதை தங்களுக்கு தெரியாதா ? //

இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன். தாலிபானுக்கு உலக முஸ்லிம்கள் மட்டுமே ஆதரவளித்தார்கள். ஒரு கிறிஸ்தவனோ, இந்துவோ ஆதரவளிக்கவில்லை. ஏனெனில் தாலிபான் முன்னெடுத்த கொள்கை : இஸ்லாம். அதே போல, புலிகளுக்கு உலக தமிழர்கள் மட்டுமே ஆதரவளித்தார்கள். ஒரு சிங்களவனோ, மலையாளியோ ஆதரிக்கவில்லை. ஏனெனில் புலிகள் முன்னெடுத்த கொள்கை : தமிழ் தேசியம். தாலிபான் தங்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக காட்டிக் கொண்டு விட்டு, பிற மதத்தவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஒருநாளும் நடக்க முடியாது. புலிகள் விடயத்திலும் அதுவே உண்மை. தங்களை தமிழ் தேசியவாதிகளாக காட்டிக் கொண்டு விட்டு, பிற இனத்தவர்கள் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஒருநாளும் நடக்கப் போவதில்லை. உங்களுக்கு பிற இன மக்களின் ஆதரவு தேவை என்றால், அதற்கு தமிழ் தேசியமோ, இஸ்லாமிய மதமோ உதவப் போவதில்லை. அனைத்து உலக மக்களையும் ஒன்று சேர்க்க உதவும் கொள்கை என்ன என்று கண்டுபிடியுங்கள். //ஒரு கேடயம் புலிகளுக்கு, ஈழம் சமுதாயம் ,இன ரீதியாக ஒடுக்கப்பட மக்களுக்கு இல்லையே?// என்ற ஒரு கேள்வியை கேட்டு விட்டு, நடைமுறையில் அந்தக் கேள்விக்கு முரணாக நடந்து கொள்வது உங்களது தவறு. இனியும் நீங்கள் ஒரு தமிழ் தேசியவாதியாகத் தான் இருப்பேன் என்று அடம் பிடித்தால், உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

Kalaiyarasan said...

//அதே நேரம் அமெரிக்காவே வேறு வழி இல்லாமல் அவர்களிடம் பேச்சு வார்த்தைக்கு வருவதை மதம் என்ற கேடயமாக பார்காமல் எப்படி பார்ப்பது//

இது ஒரு வரலாற்றுத் திரிபுபடுத்தல்.
அமெரிக்கா யார்?
கடந்த பத்தாண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து வைத்திருக்கும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள்.
தாலிபான் யார்?
அந்நிய ஆக்கிரமிப்பு படைகளை வெளியேற்றி, தாய் நாட்டை மீட்பதை குறிக்கோளாக கொண்ட சுதந்திரப் போராளிகள்.
ஆப்கானிஸ்தானில் போராடிக் கொண்டிருக்கும் இயக்கத்துடன் தானே, அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? அதிலே என்ன தவறு? நீங்கள் ஆப்கானிஸ்தானின் கடந்த கால வரலாற்றையும், இன்றைய யதார்த்தத்தையும் மறைத்துக் கொண்டு பேசுகின்றீர்கள். உலக முஸ்லிம்களின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா தாலிபானுடன் பேசுகின்றது என்பது ஒரு திரிபுபடுத்தப் பட்ட கட்டுக்கதை. புலிகள் போராடிக் கொண்டிருந்த காலத்தில், இலங்கை அரசு புலிகளோடு பல தடவை பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, இலங்கை அரசு புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தத்தினால் தான் பேசுவதாக, சிங்கள இனவாத கட்சிகள் பிரச்சாரம் செய்து வந்தன. சிங்கள இனவாதிகள் சொன்னதற்கும், நீங்கள் சொல்வதற்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா?

Kalaiyarasan said...

//மேலும் இழப்புகள் இரு பக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதனால் மட்டுமே இரண்டுமே ஒரே வகையான போராட்டமாகாது..//

பத்து வருடங்களுக்கு முன்னர், புலிகளும் உங்களைப் போல தவறாக சிந்தித்தார்கள். அதன் விளைவு என்ன தெரியுமா? முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டார்கள். அது போதாது என்று நீங்கள் கருதினால், இன்னும் பல இலட்சம் தமிழ் பலி கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த தவறான கொள்கையை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருங்கள்.

2001 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பு நிகழ்ந்தது. அப்போது, "இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர். இது போன்ற போர்கள் உலகம் முழுவதும் தொடரும்..." என்று அமெரிக்கா அறிவித்தது. செப்டம்பர் 11, உலகை மாற்றி விட்டதாக அரசியல் அவதானிகள் எழுதினார்கள். உலகில் விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்கள் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், அதனால் ஆப்கானிஸ்தானில் நடந்ததை படிப்பினையாக கொள்ளுமாறும் பலர் புலிகளுக்கு உபதேசித்தார்கள்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், மத்தியஸ்தம் வகித்த நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய சர்வதேச சமூகம், அந்தக் கருத்தை ஒரே குரலில் கூறி வந்தன. நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹைம், பிரபாகரனிடம் நேரடியாக தெரிவித்திருந்தார். ஆப்கானிஸ்தானில் தாலிபானுக்கு நேர்ந்த நிலைமயை பார்த்து, தமது அரசியல் தந்திரோபாயத்தை மாற்றிக் கொள்வதாக புலிகளும் காட்டிக் கொண்டார்கள். 2002 ம் ஆண்டு, புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில், யுத்த நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்டது. உங்களால் எப்படி இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு பேச முடிகின்றது?

அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களை மட்டுமே குறிவைத்து நடத்தப் பட்டது என்று நினைப்பது முட்டாள் தனமானது. 2001 தாலிபானுக்கு எதிரான அமெரிக்க படையெடுப்பிற்கு பின்னர், உலகில் பல இயக்கங்கள் சமரசப் பாதைக்கு வந்து சேர்ந்தன. அவை எல்லாம் இஸ்லாமியவாத அமைப்புகள் அல்ல. உதாரணத்திற்கு, நேபாளத்தில் போராடிக் கொண்டிருந்த மாவோயிஸ்டுகளை குறிப்பிடலாம். புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்த அதே இடத்தில், அதே நேரத்தில், பிலிப்பைன்ஸ் அரசும், கம்யூனிச NDF இயக்கமும் பேச்சுவார்த்தை நடத்தின. உங்களுக்கு இன்னும் உதாரணங்கள் வேண்டுமா? சூடான் அரசுக்கும், தென் சூடான் பிரிவினைக்காக போராடிய SPLA பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு தீர்வுக்கு வந்தது. கொலம்பிய அரசுக்கும், கம்யூனிச FARC இயக்கத்திற்கும் இடையிலும் அதே காலத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இங்கே குறிப்பிடப்பட்ட இயக்கங்கள் எதுவும் இஸ்லாமியவாத அமைப்புகள் அல்லவே?

Kalaiyarasan said...

//துரோகி இந்தியா, செஞ்சீனம் போன்ற பிராந்திய வல்லரசுகளின் பிடியில் மாட்டி, கடும் போராட்டம் நடத்திய புலிகளும் , தலிபான்களின் போராட்டமும் அரசியல் தளத்தில் மட்டும் அல்ல , போராட்ட களத்திலும் முற்றிலும் மாறுபட்டது .//

புலிகள் எந்தக் காலத்தில் இந்தியாவையும், சீனாவையும் நம்பினார்கள்? புலிகள் போராடிக் கொண்டிருந்த காலம் முழுவதும், அவர்களுக்கு எந்தவொரு உலக நாடும் ஆதரிக்கவில்லை. புலிகளும் யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களினதும், தமிழகத் தமிழர்களினதும் ஆதரவு மட்டுமே போதும் என்று எதிர்பார்த்தார்கள். அதை விட வேறெந்த ஆதரவு சக்தியும் இருக்கவில்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர், இந்தியா புலிகளுக்கு ஆதரவளித்தது. இராணுவப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கியது. 1987 ம் ஆண்டு, புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் தொடங்கியது. அன்றிலிருந்து இனிமேல் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது என்பது புலிகளுக்கு நன்றாகத் தெரியும். புலிகளுக்கு உறுதுணையாக நின்ற புலம்பெயர்ந்த தமிழர்கள், மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தனர். அவர்கள் சீனாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் சம்மதித்தால், தமிழீழம் பெற்று விடலாம் என்று நம்பினார்கள். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த அரசுக்களின் ஆதரவை பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்தார்கள். ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிறையப் பணம் செலவழித்தார்கள். தேர்தலில் ஒபாமா வென்றதும், "ஒபாமாவுக்கான தமிழர்கள்" என்ற அமைப்பை ஆரம்பித்தார்கள். உண்மையில், புலிகளுக்கு தமிழ் இன உணர்வாளர்கள் மட்டுமே நண்பர்களாக இருந்தார்கள். இந்தியா, சீனா மட்டுமல்லாது, எந்தவொரு உலக நாடும் புலிகளின் நண்பனாக இருக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெளியேற்றப் பட்ட போதும், புலிகளுக்கு நேர்ந்த கதி தான் அவர்களுக்கும் ஏற்பட்டது. "துரோகி இந்தியா, துரோகி சீனா..." என்று நீங்கள் புலம்புவது போலத் தான் தாலிபானும் புலம்பிக் கொண்டிருந்தார்கள். புலிகளுக்கு இந்தியா துரோகம் செய்தது என்றால், தாலிபானுக்கு பாகிஸ்தான் துரோகம் செய்தது. தாலிபான் இயக்கம் ஆரம்பித்த காலத்தில், அமெரிக்காவும் அவர்களுக்கு உதவியது. பின்னர் அதே அமெரிக்கா தான், தாலிபான் மீது போர் தொடுத்தது. அமெரிக்காவின் போருக்கு பாகிஸ்தானும் ஒத்துழைத்தது. புலிகளுக்கு ஒரு காலத்தில் ஆயுதமும், பயிற்சியும் வழங்கிய இந்தியா, இறுதிப் போரில் கட்சி மாறியது. தாலிபானுக்கு ஒரு காலத்தில் ஆயுதமும், பயிற்சியும் வழங்கிய பாகிஸ்தான், இறுதிப் போரில் கட்சி மாறியது. இப்படி 100% ஒற்றுமைகளை வேறெங்கும் காண முடியாது.

//ஆனால் அந்த போராட்டம் கொச்சை படுத்த பட கூடாது .//
தாலிபான் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். புலிகள் சிங்கள பேரினவாதத்திடம் இருந்து தமிழ் மக்களை மீட்கப் போராடினார்கள். தமிழர்களுக்கு புலிகள் விடுதலைப் போராளிகளாக தெரிந்தார்கள். ஆப்கானியர்களுக்கு தாலிபான் விடுதலைப் போராளிகளாக தெரிந்தார்கள். அதே நேரம், அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்தை பொறுத்த வரையில், புலிகளும், தாலிபானும் ஒன்று தான். ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழர்களும், ஒடுக்கப்பட்ட ஆப்கான் மக்களும் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர். அந்த ஒற்றுமையை குலைப்பதற்கு சில விஷமிகள் சதி செய்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தி வருகின்றனார். அவர்கள் தமது செயல்கள் மூலம் தமிழரின் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதுடன், தமிழரின் முகத்தில் கரி பூசி வருகின்றனார்.

Nellai Balaji said...

\\ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தி வருகின்றனார். அவர்கள் தமது செயல்கள் மூலம் தமிழரின் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதுடன், தமிழரின் முகத்தில் கரி பூசி வருகின்றனார்.\\\
கண்டிப்பாக ஒத்துகொள்ள வேண்டிய கருத்து ..புலிகள் செப்டம்பர் தாக்குதல் பின் நிகழ்வுகளை, சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராமல் இருந்தவரை எற்று கொள்ள கூடியது..அவர்களும் பேச்சுவார்த்தைக்கு வந்து சிங்கள அரசு பேச்சுவார்த்தையை முறித்து கொண்டு போனது அல்லது பேச்சுவார்த்தையை முறித்து கொள்ள சூழ்நிலையை உருவாக்கியது. இதில் புலிகளின் மீது தவறு இருப்பதாக தெரியவில்லை..சிங்கள அரசு தங்களுக்கு சீனா ,இந்திய அரசுகளின் முழு அதரவு கிடைத்தபின், பேச்சு வார்த்தையை முறித்து கொண்டது...புலிகள் செய்த தவறு , தமிழ் மக்களை ரணிலுக்கு வாக்களிக விடாமல் தவிர்த்து ...
நான் புலிகளுக்கு செய்கைகள் அனைத்துக்கும் முழு ஆதரவு தெரிவிக்கவில்லை ..அதேநேரம் தற்போதைய தமிழ் மக்களின் நிலைமைக்கு, புலிகள் மட்டுமே காரணம் என்ற கருதுகோளை எதிர்கின்றேன் ...இந்தியா அல்லது ஆளும் காங்கிரஸ் அல்லது சோனியா, தனது வன்மத்தை , சீனா தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நாட்டிய போராகவே இந்த ஈழ போரை பார்கவேண்டும் ..புலிகள் இதில் பலிகடாவாக மாற்றப்பட்டுள்ளனர் ...
மேலும் தலிபான் விடயத்தில், அவர்களுக்கு சவுதி என்ற நாட்டின் பின்புலம் உள்ளது ..அதைதான் கேடயம் என்பது போல குறிப்பிட்டேன் ...புலிகளுக்கு அவ்வாறு இல்லை என்பதுதான் என் மைய நோக்கு ...புலிகள் அதை விரும்பினார்கள இல்லையா என்பது வேறு ..மேலும் கொலம்பியா விவகாரம் , தற்போது பேச்சு வார்த்தைக்கு வந்த போதும் , உலக நாடுகளின் ஆதரவு ஓரளவிற்கு உள்ளது ...சூடான் விவகாரம் போல் நமக்கு எண்ணெய் இல்லை என்பதை நாம் மறுக்க முடியாது ..(தற்போது எண்ணெய் உள்ளதாக கண்டுபிடிக்கபடுள்ளதாக செய்திகள் வருகின்றது, ஈழத்தில் .)..

Nellai Balaji said...

\நீங்கள் ஆப்கானிஸ்தானின் கடந்த கால வரலாற்றையும், இன்றைய யதார்த்தத்தையும் மறைத்துக் கொண்டு பேசுகின்றீர்கள். உலக முஸ்லிம்களின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா தாலிபானுடன் பேசுகின்றது என்பது ஒரு திரிபுபடுத்தப் பட்ட கட்டுக்கதை. \\
அமரிக்க,சவுதி கூட்டணியின் குழந்தை(அல்லது தத்து ) தலிபான்...இதில் மாறுபடவில்லை ..தலிபான்கள் எப்படி ஆப்கானிஸ்தானின் தவிர்க்க முடியாத சக்தி ஆனர்கள்??? இக்கட்டான நேரத்தில் புலிகளுக்கு கிடைக்காத ஆயுதங்கள் மற்றும் பணம் எப்படி தலிபான்களுக்கு கிடைகிறது ..தலிபான்களுக்கு மட்டும் எப்படி பேச்சு வார்த்தைக்கு வரவழைக்க தெம்பு வந்தது ...நிலபரப்பு, காலநிலை போன்றவை தலிபான்களுக்கு, அமெரிக்காவை எதிர்க்க உதவுகிறதா ? புலிகள் தோற்கடிக்கபட்டதற்கு அவர்களின் நிலைப்பாடு மட்டுமே காரணம் ஆகாது .

Kalaiyarasan said...

//அவர்களும் பேச்சுவார்த்தைக்கு வந்து சிங்கள அரசு பேச்சுவார்த்தையை முறித்து கொண்டு போனது அல்லது பேச்சுவார்த்தையை முறித்து கொள்ள சூழ்நிலையை உருவாக்கியது. //

பேச்சுவார்த்தை காலத்தில், இரண்டு தரப்பும் ஒன்றையொன்று நம்புவதில்லை. இரண்டு தரப்பினரும் நூற்றுக் கணக்கான போர்நிறுத்த மீறல்கள் புரிந்துள்ளதை, கண்காணிப்புக் குழு பதிவு செய்துள்ளது. அரசு மீண்டும் ஒரு போருக்கு தயார் படுத்தியதைப் போன்று, புலிகளும் தயார் படுத்திக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு போர் தொடங்கினால், எப்போதும் போல நாமே வெல்லுவோம் என்று புலிகள் நம்பினார்கள். தங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்றும் நம்பினார்கள். பேச்சுவார்த்தை காலத்தில், புலி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மீண்டும் யுத்தம் வரும் என்று தான் கூறி வந்தார்கள். ஆனால், சர்வதேச சமூகத்தின் விருப்பம் வேறாக இருந்தது. மீண்டும் ஒரு யுத்தம் வரக்கூடாது என்று ஒரே முடிவாக இருந்தார்கள். இதை அவர்கள் ஸ்ரீலங்கா அரசிடமும், புலிகளிடமும் தெரிவித்தார்கள். கனடாவில் புலிகளை ஆதரிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்த கனடிய அரசு அதிகாரிகளும் அதனை வலியுறுத்திக் கூறினார்கள். இலங்கையில், அமெரிக்க தூதுவர், "மீண்டும் யுத்தம் வந்தால் அதுவே இறுதி யுத்தமாக இருக்கும். சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை அழிக்கப் பார்ப்பார்கள்." என்று பகிரங்கமாகவே தெரிவித்தார். பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடை செய்திருந்தனர். புலிகள் அதை எதிர்த்து வழக்காடினார்கள். அப்போது, "பேச்சுவார்த்தை மூலம் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டு, புலிகள் வன்முறையை கைவிட்டால், தடையை எடுப்பதாக," ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. இலங்கை அரசு பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு செல்ல விடாமல், சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அதிகரித்திருந்தது. மறுபக்கத்தில் அனுசரணையாளரான நோர்வே, புலிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டது. சிங்கள இனவாதிகள் நோர்வேக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யுமளவிற்கு, நோர்வேயின் நிலைப்பாடு புலிகளுக்கு சாதகமாக இருந்தது. உண்மையில், புலிகள் அதை சரியாக பயன்படுத்தி இருந்தால், ஒரு சுமுகமான முடிவுக்கு வந்திருப்பார்கள். ஆனால், புலிகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டவில்லை. அந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.

//சிங்கள அரசு தங்களுக்கு சீனா ,இந்திய அரசுகளின் முழு அதரவு கிடைத்தபின், பேச்சு வார்த்தையை முறித்து கொண்டது.//

இது உங்களுடைய ஊகம் மட்டுமே. உண்மை அல்ல. உங்களுக்கு எப்போதும் ஒரு பக்கச் சார்பான தகவல்கள் மட்டுமே கிடைத்து வந்ததை, உங்களது கூற்று உறுதிப் படுத்துகின்றது. அந்த நேரம், இலங்கை அரசு தந்திரமான இராஜதந்திர காய் நகர்த்தல்களை செய்து கொண்டிருந்தது. சர்வதேச சமூகத்தில், எதிரெதிரான நாடுகளை எல்லாம் தன பக்கம் வென்றெடுத்தது. இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், பிரிட்டன், பிரான்ஸ்..... இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிரான நாடுகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டது. உங்கள் கண்களுக்கு சீனாவும், இந்தியாவும் மட்டுமே தெரிகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் தெரிவதில்லை. குறிப்பாக, அமெரிக்கா யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே, புலிகளை முடக்குவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்கிய முகவர்களை கைது செய்தது. புலிகளின் ஆயுத விநியோகக் கப்பல்கள் எங்கெங்கு செல்கின்றன என்று செய்மதி மூலம் கண்டறிந்து, இலங்கை கடற்படைக்கு அறிவித்தது. இந்த நடவடிக்கைகள் புலிகளை ஏற்கனவே பலவீனப் படுத்தி விட்டிருந்தன.

Kalaiyarasan said...

//இந்தியா அல்லது ஆளும் காங்கிரஸ் அல்லது சோனியா, தனது வன்மத்தை , சீனா தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நாட்டிய போராகவே இந்த ஈழ போரை பார்கவேண்டும் ..புலிகள் இதில் பலிகடாவாக மாற்றப்பட்டுள்ளனர் ...//

இது சீமான், வைகோ போன்ற குறுந்தேசிய அரசியல்வாதிகளின் புரிதல். அவர்கள் பேசும் அரசியலுக்கும், யதார்த்தத்திற்கும் வெகு தூரம். இந்திய இராணுவத்துடன் யுத்தம் செய்த காலத்தில் இருந்தே, புலிகளுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு அறுந்து விட்டது.

இருப்பினும் இறுதிப்போரில் இந்தியா உதவ முன்வந்தது. (விக்கிலீக்ஸ் ஆவணங்களை பார்க்கவும்.) ஆனால், இந்தியாவின் நிபந்தனைகளை புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. புலிகளின் நிபந்தனையை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு தரப்பும், இம்மியளவு கூட விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தன. அங்கே போர் நடந்தாலும், நடக்கா விட்டாலும், புலிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பொருளாதாரத்தில் சீனா எதிர்பார்த்த பங்கு கிடைத்திருக்கும். ஏனெனில், பெரும்பான்மை சிங்களவர்கள் வாழும் தென்னிலங்கையில் தான் சீனா பல முதலீடுகளை செய்திருந்தது. இந்தியாவின் கவனம் வடக்கு-கிழக்கில் குவிந்திருந்தது. ஏனெனில், தமிழ் மக்கள் இந்தியாவுக்கு சார்பானவர்கள் என்பதால், தனது முதலீடுகளை எதிர்க்க மாட்டார்கள் என்று எதிர்பார்த்தது. இருப்பினும், இந்தியாவுக்கும் அது விரும்பிய பங்குகள் கிடைத்திருந்தன. உதாரணத்திற்கு, பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தொலைத்தொடர்பு போன்றன. உங்களுக்கு எப்போதும் சீனாவின் முதலீடுகள் பற்றிய தகவல்களை சொல்லும் நபர்கள், இந்தியாவின் முதலீடுகள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.

Kalaiyarasan said...

//தலிபான் விடயத்தில், அவர்களுக்கு சவுதி என்ற நாட்டின் பின்புலம் உள்ளது ..அதைதான் கேடயம் என்பது போல குறிப்பிட்டேன் ...புலிகளுக்கு அவ்வாறு இல்லை என்பதுதான் என் மைய நோக்கு ..//

உள்ளது அல்ல. ஒரு காலத்தில் இருந்தது. புலிகளுக்கும் ஒரு காலத்தில் இந்தியா என்ற நாட்டின் பின்புலம் இருந்தது. அது கடந்த காலம். நிகழ்காலத்தில், "இந்தியா துரோகி, சோனியா துரோகி" என்று நீங்கள் புலம்பும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. தாலிபானுக்கு சவூதி அரேபியா முன்னொரு காலத்தில்,(2001 க்கு முன்னர்) உதவியது. ஆனால், நிகழ்காலத்தில் "சவூதி அரேபியா துரோகி, மன்னர் அப்துல்லா துரோகி." என்று தாலிபானும், தாலிபான் ஆதரவாளர்களும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு இடையில் எவ்வளவு ஒற்றுமை. நீங்கள் கூடப்பிறந்த சகோதரர்களா?

//தற்போது பேச்சு வார்த்தைக்கு வந்த போதும் , உலக நாடுகளின் ஆதரவு ஓரளவிற்கு உள்ளது .//

எந்த நாடு ஐயா? கொலம்பிய அரசுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. FARC இயக்கத்திற்கு வெனிசுவேலாவும், கியூபாவும் ஆதரிக்கின்றன. FARC கம்யூனிசம் பேசுவதால், அந்த இரண்டு நாடுகளும் ஆதரிக்கின்றன. மாறாக தேசியவாதம் பேசி இருந்தால், உலகில் எவனும் ஆதரித்திருக்க மாட்டான். புலிகளும், புலி ஆதரவாளர்களும், அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகளின் அங்கீகாரத்தை தான் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார்கள். அமெரிக்கா துரோகி, பிரிட்டன் துரோகி, பிரான்ஸ் துரோகி, இஸ்ரேல் துரோகி....

Kalaiyarasan said...

//தலிபான்கள் எப்படி ஆப்கானிஸ்தானின் தவிர்க்க முடியாத சக்தி ஆனர்கள்???//

புலிகள் எப்படி இலங்கையில் தவிர்க்க முடியாத சக்தி ஆனார்கள்??? அது போலத் தான் இதுவும். அவர்கள் அமெரிக்க/நேட்டோ படைகளின் ஆக்கிரமிப்பையும், அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகள் நியமித்த பொம்மை அரசையும் எதிர்த்து போராடி வருவதால், மக்கள் ஆதரவளிக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம்? எந்த நாட்டு மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொள்கிறார்கள்?

// இக்கட்டான நேரத்தில் புலிகளுக்கு கிடைக்காத ஆயுதங்கள் மற்றும் பணம் எப்படி தலிபான்களுக்கு கிடைகிறது //
புலிகளுக்கு கிடைத்து வந்த ஆயுத விநியோகம் தடைப்பட்டது எப்படி என்று ஏற்கனவே விளக்கிக் கூறி இருக்கிறேன். தாலிபானுக்கு எந்த நாடும் உதவுவதில்லை. நீங்கள் குறிப்பிடும் சவூதி அரேபியா, பாகிஸ்தான் எல்லாம் தாலிபானுக்கு எதிர் நாடுகள் தான். ஆனால், தம்மிடம் இருக்கும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு போராடுகின்றார்கள். ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே அமெரிக்கா அள்ளிக் கொட்டிய ஆயுதங்கள் நிறைய இருக்கின்றன.

//தலிபான்களுக்கு மட்டும் எப்படி பேச்சு வார்த்தைக்கு வரவழைக்க தெம்பு வந்தது ...//

இதெல்லாம் என்ன கேள்வி? புலிகள் போராடிக் கொண்டிருந்த காலத்தில், பேச்சுவார்த்தைக்கு வரவழைக்க என்ன தெம்பு இருந்தது? ஒரு விடுதலை இயக்கம் தோல்வியடையாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தால், எப்படியும் அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரும்.

//நிலபரப்பு, காலநிலை போன்றவை தலிபான்களுக்கு, அமெரிக்காவை எதிர்க்க உதவுகிறதா ?//

புலிகளுக்கு சாதகமாக இருந்த நிலப்பரப்பு, காலநிலை தாலிபானுக்கு இருக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை சுற்றி சர்வதேச கடற்பரப்பு இருந்தது. அதே நேரம், தாலிபானுக்கு சாதகமான நிலப்பரப்பு புலிகளுக்கு இருக்கவில்லை. மலைகள் சூழ்ந்த பிரதேசமானது கெரில்லா யுத்தத்திற்கு ஏற்ற இடம். மேலும், அமெரிக்கர்கள் வேண்டா விருந்தாளிகளாக நுழைந்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள். அவர்களை எதிர்த்து போராடுவதில் என்ன தவறு? ஒரு காலத்தில், புலிகள் இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிடவில்லையா? உங்களுக்கு ஒரு தகவலை கூறுகின்றேன். இந்திய இராணுவத்துடன், புலிகள் யுத்தம் புரிந்த காலத்தில், ஆப்கானிய ஜிகாத் இயக்கங்களிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினார்கள். புலிகள் வைத்திருந்த அநேகமான அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவை தான். ஆப்கானிய ஜிகாதிகள், உலகின் இரண்டாவது பெரிய ரஷ்ய இராணுவத்தை எதிர்த்துப் போராடி விரட்டியடித்தார்கள். புலிகள், உலகின் நான்காவது பெரிய இந்திய இராணுவத்தை எதிர்த்து போராடி விரட்டியடித்தார்கள்.

Nellai Balaji said...

நன்றி நண்பரே!! அருமையான விவாதம்..என்ன இருந்தாலும் தலிபான் மற்றும் புலிகள் அமைப்புகள் ஒன்று என கூறினாலும், மத கட்டுப்பாடு அல்லது கடும்போக்கு விஷயத்தின் அடிப்படையில், இந்த இரண்டுமே இரு வேறுபட்ட அமைப்புகள்..ஏனென்றால் மதம் ஒரு மிகபெரிய விடயம்..அது ஒரு போராட்ட களம் அல்லது மக்கள் ஒருங்கிணைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க கூடியது ..மத ரீதியில் மக்களை ஒருங்கிணைப்பது மிகவும் எளிது .. மொழியோ அல்லது தேசிய பார்வையிலோ (உங்கள் பார்வையில் குறுந்தேசியம் ) மக்களை இணைப்பதற்கு ஒரு களப்பணி அதிகமாக தேவை ...அதை தந்தை செல்வா போன்றோர் ஆரம்பித்து,செய்து, தலைவர் பிரபாகரன் காலத்தில் முடித்து வைத்து விட்டார்கள் ...

இனி இன்னல் படும் மக்களுக்கு கல்வி அறிவும், சிந்திக்க நல்ல செய்திகளும், அவர்களின் வாழ்கையை மேம்படுத்த நல்ல வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்க நமக்கு கடமை இருக்கிறது ...அதை செய்தாலும், நம் மக்கள் அங்கே உரிமை மறுக்க படுவதை தடுக்க முடியாமல், இணையத்தில் எழுதுவதை விட என்ன பெரிதாக செய்து விட முடிகிறது, என்றே மனம் புலம்புகிறது ... சில நேரங்களில், கொடியவன் ராஜபக்சே அரசின் இனவாத இராணுவத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் என்குல மக்களுக்கு, விடுதலை புலிகளை விட வேறு சிறப்பான பாதுகாப்பு எங்கே உள்ளது என கேள்வியும் எழுகிறது..இதை நீங்கள் மறுத்து விடுதலை புலிகள்தான், இத்தனை , இராணுவ கொடுமைகளுக்கும் காரணம் என நீங்கள் கூறினாலும், அதை சாதி வெறியன் சுப்ரமணிய சாமி கூறுவது போல் எடுத்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை..

Nellai Balaji said...

\\இருப்பினும் இறுதிப்போரில் இந்தியா உதவ முன்வந்தது\\

\\பேசும் அரசியலுக்கும், யதார்த்தத்திற்கும் வெகு தூரம்\\

\\பொருளாதாரத்தில் சீனா எதிர்பார்த்த பங்கு கிடைத்திருக்கும்\\

\\இந்தியாவுக்கும் அது விரும்பிய பங்குகள் கிடைத்திருந்தன\\

\\இந்தியாவின் முதலீடுகள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்\\



நண்பரே...தாங்கள் கூற விழைவது என்ன..இந்த இன படுகொலைக்கும் இந்தியா,சீனா நாடுகளுக்கு சம்பந்தம் இல்லை என்றா?? இந்த நாடுகள் எதுவும் செய்யவில்லை என்றா?? இந்தியாவின் தலையிட்டையும், அதன் இனப்படுகொலை வேடிக்கை பார்த்த வெறிச்செயலை பற்றி கூறினால்,யதார்த்தத்திற்கும் வெகு தூரம் என்று கூருவதா ?? என்ன வேடிக்கை ...வெட்கக்கேடு ..

யதார்த்தம் என்ன என்பதை, கடைசி நாட்களில் வந்த பிரணாப், எம் கே நாராயணன் , மன்மோகன், கருணா, ராஜபச்சே போன்றோரின் பேட்டிகளில் இருந்து சிறு கொழந்தை கூட கூறிவிடும்..

முதலீடுகள் பற்றி யாவரும் அறிந்ததே ..டி ஆர் பாலு,வாசன் ,மல்லையா முதல் IOC, DLF போன்ற முதலாளித்துவ கூட்டங்கள் அங்கே ஓடி வருது ....

Kalaiyarasan said...

Nellai Balaji,இப்போதும் நீங்கள், இனப்படுகொலையில் ஈடுபட்ட வேறு சில நாடுகளின் பெயர்களை மறைப்பதில் குறியாக இருக்கிறீர்கள். குறிப்பாக இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் பெயர்களை உச்சரிக்கவே பயப்படுகிறீர்கள். என்ன காரணம்? //நண்பரே...தாங்கள் கூற விழைவது என்ன..இந்த இன படுகொலைக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு சம்பந்தம் இல்லை என்றா?? இந்த நாடுகள் எதுவும் செய்யவில்லை என்றா?? மேற்குலக நாடுகளின் தலையிட்டையும், அதன் இனப்படுகொலை வேடிக்கை பார்த்த வெறிச்செயலை பற்றி கூறினால்,யதார்த்தத்திற்கும் வெகு தூரம் என்று கூருவதா ?? என்ன வேடிக்கை ...வெட்கக்கேடு .// இப்படி உங்களையும் திருப்பிக் கேட்கலாம்.

நண்பரே, நீங்கள் நான் சொன்னதை திரிபுபடுத்தி, வேண்டுமென்றே விதண்டாவாதம் புரிகின்றீர்கள். நான் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் கூறியவற்றை ஒன்றாக தொகுத்து, நான் சொன்னதை திரிக்கப் பார்க்கின்றீர்கள். தமிழகத்தில் சீமான், வைகோ போன்றோர் பேசும் அரசியலுக்கும், யதார்த்தத்திற்கும் வெகுதூரம் என்று சொன்னேன். அதுவும் நீங்கள் கூறிய கருத்து தொடர்பான பதில் மட்டுமே.
//இந்தியா அல்லது ஆளும் காங்கிரஸ் அல்லது சோனியா, தனது வன்மத்தை , சீனா தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நாட்டிய போராகவே இந்த ஈழ போரை பார்கவேண்டும் ..புலிகள் இதில் பலிகடாவாக மாற்றப்பட்டுள்ளனர் ...//

//இது சீமான், வைகோ போன்ற குறுந்தேசிய அரசியல்வாதிகளின் புரிதல். அவர்கள் பேசும் அரசியலுக்கும், யதார்த்தத்திற்கும் வெகு தூரம். இந்திய இராணுவத்துடன் யுத்தம் செய்த காலத்தில் இருந்தே, புலிகளுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு அறுந்து விட்டது.//

நீங்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை, "காங்கிரஸ், சோனியாவின் வன்மம்" என்று புரிந்து கொள்கின்றீர்கள். அந்த புரிதல் தவறு என்று மட்டுமே சொன்னேன். உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்கிறேன். இந்தியாவுக்கென்று இலங்கை தொடர்பாக ஒரு கொள்கை இருக்கின்றது. அதனை காங்கிரஸ், சோனியா, பிஜேபி மட்டுமல்ல, வைகோ, சீமான் வந்தால் கூட மாற்ற முடியாது.

மேலும், இந்தப் போரினால் தான் சீனா தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலைநாட்டியது என்று சொல்வதும் தவறு. பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, இலங்கைக்கு IMF கடனுதவி கிடைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்ட நேரத்தில், சீனா கடன் கொடுத்து வந்தது. அது இந்தியாவுக்கும் தெரியும். நீங்கள் கூறும் சீனாவின் பிராந்திய ஆதிக்கம் அப்போதே தொடங்கி விட்டது. உங்களுக்கும், சீமான், வைகோ போன்றவர்களுக்கும் இந்த யதார்த்தம் தெரியாது. அதனால் தான் நீங்கள் பேசும் அரசியலுக்கும், யதார்த்தத்திற்கும் இடையில் வெகு தூரம் என்றேன்.

Kalaiyarasan said...

நண்பரே, இலங்கையில் இனப்படுகொலை என்பது 2009 ம் ஆண்டு மட்டுமே நடந்தது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தவறு. ஏற்கனவே 1971 ம் ஆண்டு முதலாவது இனப்படுகொலை நடந்தது. அப்போதும் இந்தியா, சீனா இலங்கையின் இனப்படுகொலையை ஆதரித்தன. சிங்கள மக்களையே இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசு, தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய மாட்டாது என்று குழந்தை கூட சொல்லாது. இன்னொரு தடவை சீனாவும், இந்தியாவும் அது போன்ற இனப்படுகொலையை ஆதரிக்காது என்று யாரும் வாதாட மாட்டார்கள். இந்த விடயம் எல்லாம், இலங்கையில் போராடத் தொடங்கிய பிரபாகரனுக்கும், புலிகள் அமைப்பின் தலைவர்களுக்கும் தெரியாது என்று கூற முடியாது. அப்படி சொல்வது, புலிகளுக்கு அரசியல் தெரியாது என்று சொல்வதற்கு சமமானது.

நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ. ஈழத்தில் புலிகளின் இறுதி முடிவும், ஆப்கானிஸ்தானில் தாலிபானின் முடிவும் ஒரே மாதிரி அமைந்தன. ஒசாமா பின்லாடனை தன்னிடம் ஒப்படைக்கா விட்டால், ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபானையும் அவர்களோடு ஆப்கான் மக்களையும் அழித்து விடுவோம் என்று, அமெரிக்கா தலைமையிலான சர்வதேச சமூகம் மிரட்டியது. முள்ளிவாய்க்காலுக்குள் அகப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களை தம்மிடம் ஒப்படைக்கா விட்டால், புலிகளையும், அவர்களோடு தமிழ் மக்களையும் அழித்து விடுவோம் என்று, அதே அமெரிக்கா போன்ற சர்வதேச சமூகம் மிரட்டியது. ஆப்கான் மக்களினதும், தமிழ் மக்களினதும் எதிரி ஒருவரே என்பது உங்களுக்கு இன்னமும் புரியவில்லை. தமிழ் மக்கள் எதிரிகளை இனம் கண்டு விடாமல் மறைப்பதில் தான் குறியாக இருக்கிறீர்கள். ஒடுக்கப்பட்ட ஆப்கான் மக்களும், தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து, பொது எதிரிக்கு எதிராக போராடி விடுதலை அடைந்து விடுவார்கள் என்று அஞ்சுகிறீர்கள்.

Nellai Balaji said...

\\ஒடுக்கப்பட்ட ஆப்கான் மக்களும், தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து, பொது எதிரிக்கு எதிராக போராடி விடுதலை அடைந்து விடுவார்கள் என்று அஞ்சுகிறீர்கள்\\

அப்படி ஒரு போராட்டம் நடந்தால் நான் மிக மிக மகிழ்ச்சி அடைவேன்..அது ஈழத்தில் முஸ்லிம் நண்பர்களோடு சேர்ந்து அங்கு இருந்து, தொடங்க வேண்டும் என மிக ஆவலாக இருக்கிறேன்..ஏகாதிபத்திய எதிர்ப்பு அது எந்த வகையில் இருந்தாலும் எதிர்க்க படவேண்டியது..

ஆனால் இந்திய ஏகாதிபத்திய (மற்ற நாடுகளும் உண்டு) கைகள், இலங்கை இனப்போரில் எந்த வேலையும் செய்யவில்லை என்பதை எப்படி மறைக்க முடியும்..அந்த நேரத்தில் இங்க ஈழத்தை பற்றி பேசுவதற்கே கடும் கட்டுப்பாடு இருந்ததை உங்களால் மறுக்கவும் முடியாது ..இந்திய உளவு துறை என்ன கெடுபிடிகள் செய்தன என்பதை உணர்தவன் நான் ...

நான் அமெரிக்கா,இஸ்ரேல் ,பிரிட்டன் போன்ற நாடுகள் ஏதோ மிகப்பெரிய மனிதநேயம் மிக்க நாடு என்று உங்களுடன் வீண் வதம் செய்யவில்லை..அதே நேரம் இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஏதோ இலங்கை இனபடுகொலையில் சம்பந்தமே இல்லாத நாடுகள் என்றும் கூறவும் முடியாது..

தலிபான்கள் இன்னும் அழியவில்லை என்பதற்கு சாட்சியே அவர்களுடன் ஏற்படும் மறைமுக உடன்பாடு...பாகிஸ்தான் ஆனாலும் , அமெரிக்க ஆனாலும் தலிபான்களுடன் ஒரு வித சமரசம் செய்யவே விரும்புகிறன ..இது பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் என் எண்ணம் ..கர்சாய் இதனால்தான் அமரிக்க படை விரைவில் வெளியேற நிர்பந்திக்கிறார்..அவரும் தலிபான்களுடன் பேச விரும்பவில்லை .. இன்னும் குண்டுகள் வெடித்துக்கொண்டுதன் உள்ளது .. இந்தியாவிற்கும் தலிபான்களுடன் பேச விரும்பவில்லை..தங்களுக்கு தெரியாதது இல்லை ..

\\ நீங்கள் கூறும் சீனாவின் பிராந்திய ஆதிக்கம் அப்போதே தொடங்கி விட்டது\\

நான் ஆரம்பத்தை பற்றி பேசவில்லை...இலங்கை எப்போதும் இந்தியாவுடன் இருந்ததில்லை ..எ .கா ..இந்திய-பாக் போரில், பாகிஸ்தான் கப்பல் விமானகளுக்கு, இலங்கை உதவிட முன் வந்தது ..இதற்குதான் , இந்திரா போராளி குழுக்களுக்கு உதவி செய்தது ...சீனா தன் நிலையை உறுதி செய்துள்ளது . ..ஆனால் இம்முறை தன் நிலையை, மிக சாதுரியமாக தனக்கு சாதகமாக அணைத்து வல்லரசுகளையும் பயன்படிதியது ...

இதே போலதான் அப்பிரிக்கவிழும் ...தற்போது அங்க தன முதலிடுகளை செய்து வரும் சீனா, கூடிய விரைவில் ,அங்கேயும் எதாவது செய்யும் (ஏற்கனவே அங்கே நிறைய உள் நாட்டு போர் நடக்கிறது என்பது வேறு கதை )..பார்க்கலாம்..என்னதான் நாம் வாதம் செய்தாலும், ஈழத்தைப்போல் படுகொலைகள் உலகில் நடப்பதை தடுக்க முடியாது ...மக்கள் திரண்டு எழுந்தால் தவிர ...

Kalaiyarasan said...

அண்மையில் வெளியான "விஸ்வரூபம், துப்பாக்கி", போன்ற திரைப்படங்கள், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக மட்டும் தயாரிக்கப் படவில்லை. கூடவே விடுதலைப் புலிகளின் தமிழ் தேசிய போராட்டத்தையும், இஸ்லாமிய மதவாதக் குழுக்களின் போராட்டத்தையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்து தாக்கும் நுண்ணரசியல் மறைந்திருக்கின்றது. இதனை தமிழர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, இந்த விடயத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாடு மட்டும் மாறப் போவதில்லை. அமெரிக்காவின் நிலைப்பாடு எதுவோ, அதுவே இந்தியாவின் நிலைப்பாடும் ஆகும். விஸ்வரூபம் படம் தொடர்பாக நான் எழுதிய விமர்சனம் ஒன்றுக்கு, "விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்" என்று தலைப்பிட்டதற்காக பலர் சண்டைக்கு வந்தார்கள். "மொட்டந் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்றேன்." என்று பரிகாசம் செய்தார்கள்.

2001 க்குப் பின்னரான, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற அமெரிக்க வெளியுறவு அரசியலின் தாக்கம், தற்போது இந்திய சினிமாவில் எதிரொலிக்கின்றது. அன்றைக்கு உருவான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, அல்கைதா, தாலிபான், நேபாள மாவோயிஸ்டுகள், தமிழ்ப் புலிகள் என்று பலதரப் பட்ட கொள்கைகளுக்காக போராடும் அனைத்து இயக்கங்களையும், "வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்கள்" என்ற பட்டியலில் சேர்த்தது. இந்திய மத்திய அரசும், அரசுக்கு சார்பான சினிமா தயாரிப்பாளர்களும் அந்த வெளியுறவுக் கொள்கையை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த உண்மையை புரிந்து கொள்ளாத, புலிகளை ஆதரிக்கும் வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், விஸ்வரூபம் போன்ற படங்களை பற்றி புகழ்ந்து பேசினார்கள். இவர்களில் பலர், இந்து மத அடிப்படைவாதிகள் என்பதாலும், முஸ்லிம் விரோத திரைப்படங்களை வரவேற்றதில் வியப்பில்லை.

மும்பை தாக்குதலை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட "உயிரம்புகள்" என்ற திரைப்படம், தற்போது "கரும் புலி" என்று பெயர் மாற்றி வெளியிடப் பட்டுள்ளது. விஸ்வரூபத்தின் நுண்ணரசியலை புரிந்து கொள்ள முடியாத அப்பாவிகளுக்கு, "கரும் புலி" நெற்றியில் அடித்தது மாதிரி சொல்கின்றது. மும்பை தாக்குதல் நடப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னர், காலி துறைமுகத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். மும்பையிலும், காலியிலும் தாக்குதலை நடத்திய ஆயுதபாணிகள் படகுகளில் வந்திறங்கி ஊடுருவினார்கள். அதற்கு முன்னர், யேமன் துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றுடன், வெடிமருந்து நிரப்பப்பட்ட அல்கைதாவின் படகு மோதி வெடித்திருந்தது. "அல்கைதா, புலிகளின் தாக்குதல்களை பார்த்து பின்பற்றியதாக..." புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். அப்போதே, அமெரிக்க, இந்திய அரச மட்டத்தில் இந்த ஒற்றுமை குறித்து ஆராயப்பட்டது. சில ஊடகங்களிலும் வந்துள்ளன. (தமிழ் ஊடகங்கள் மறைத்திருக்கலாம்.)

2001 ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த, அமெரிக்காவின் "பயங்கரவாத எதிர்ப்புப் போர்", ஈழத் தமிழருக்கும் எதிரானது என்பதை அன்று யாரும் உணரவில்லை. 2009 ம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடக்கும் வரையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை உணராமல் இருந்துள்ளனர். ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்களை எதிர்த்து, தமிழ் தேசியவாதிகள் தமிழ் மக்களை ஒன்று திரட்டி இருந்திருந்தால், இன்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு இந்தளவு தைரியம் வந்திருக்காது. காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தி ரோஜா படம் தயாரித்த மணிரத்தினம், புலிகளின் போராட்டத்தை கொச்சைப் படுத்தி கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தை வெளியிட்டார். அப்போதும், தமிழ் சினிமா மாபியாக்களின் ஒரு பக்கச் சார்பான அரசியலை தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதற்கெதிராக போராடவில்லை. அதன் விளைவு: துப்பாக்கி, விஸ்வரூபம், கரும் புலி.... எதிர்காலத்தில் இது போன்ற திரைப்படங்கள் நிறைய வரலாம்.