Showing posts with label வெள்ளாளர்கள். Show all posts
Showing posts with label வெள்ளாளர்கள். Show all posts

Wednesday, September 27, 2017

"வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர்கள்": ஈழத்தின் சாதிய- நிறப் பாகுபாடு


அருளினியனும், அவர் எழுதிய கேரள டயரீஸ் நூலும் பற்றி சில குறிப்புகள்....

எனக்கும், அருளியனுக்கும் இடையில் நிறைய கொள்கை முரண்பாடுகள் உள்ளன. இருவரும் ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. கடந்த காலத்தில் அது தொடர்பாக வாதங்கள் செய்துள்ளோம். என்னைப் பொறுத்தவரையில், அவர் ஒரு லிபரல் ஜனநாயகவாதி. அதனால், கொள்கை ரீதியாக எதிராளி என்றாலும், தனிப்பட்ட ரீதியாக நட்புடன் பழகுவார். இந்தளவு புரிந்துணர்வு பலரிடம் காணக் கிடைப்பதில்லை.

அவர் "வேர்களைத் தேடி" என்ற பெயரில் கேரளா பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அனுபவங்களை, ஆரம்பித்தில் தனது முகநூலில் பதிவிட்டு வந்தார். பின்னர் நூல் வடிவில் கொண்டு வர விரும்பினார். ஒரு ஈழத் தமிழராக, ஈழத்திற்கும் கேரளாவுக்கும் என்ன தொடர்பு என்று ஆராய்ந்துள்ளார். அயல் மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பவர்கள் கூட அறிந்திராத பல உண்மைகளை கண்டுபிடித்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். இது வருங்கால சந்ததிக்கும் உதவும்.

அருளினியன் முகநூலில் எழுதிய பதிவுகளில், யாழ்ப்பாண வெள்ளாளர் பற்றிய கட்டுரை, அன்று பலரால் பாராட்டப் பட்டது. அப்போதே நானும் அது குறித்த விமர்சனத்தையும் வைத்திருந்தேன்.

யாழ்ப்பாண சாதி அமைப்பின் யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. தகவல்கள் அனைத்தும் உண்மை தான். ஆனால், சாதியத்தை அழிப்பது எப்படி என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. சாதியக் கட்டமைப்பு இன்று வரைக்கும் நிலைத்திருப்பது எப்படி என்பதற்கும் காரணம் தெரிந்திருக்கவில்லை. "புலிகளின் காலம் பொற்காலம். பிராபாகரன் இன்றிருந்தால் சாதியம் மறைந்திருக்கும்..." என்பது போன்ற மேலோட்டாமான பார்வையை கொண்டிருந்தார்.

சுருக்கமாக: யாழ்ப்பாணத்தில் உயர்சாதியினராக கருதப்படும் வெள்ளாளர்களின் போலிக் கெளரவம், சாதி அபிமானம், பழமைவாதம் போன்றவற்றை தான் அருளினியன் விமர்சித்துள்ளார். உள்ளதை உள்ள படியே போட்டு உடைத்துள்ளார்.

வெள்ளாள ஆதிக்க சாதியினர் மீதான மென்மையான விமர்சனத்தைக் கூட, ஒரு சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு, யாழ்ப்பாணத்தில் இன்னமும் சாதிவெறி தாண்டவமாடுகின்றது. பலர் என்ன தான் வாய் கிழிய தமிழ்த் தேசியம் பேசினாலும், சந்தர்ப்பம் வரும் போது தாங்களும் சாதிமான்களே என்பதை நிரூபிக்கின்றனர்.

அருளினியன் தனது நூலை வெளியிட தேர்ந்தெடுத்த இடமும் குறிப்பிடத் தக்கது. அவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராக இருப்பதால், தனது முதல் நூலை அங்கே வெளியிட விரும்பியதில் தவறில்லை. இருப்பினும், யாழ் இந்துக் கல்லூரி ஒரு காலத்தில் சாதிவெறியர்களின் கூடாரமாக இருந்ததை மறக்கக் கூடாது, மறுக்கவும் முடியாது.

முன்னொரு காலத்தில், யாழ் இந்துக் கல்லூரியில் வெள்ளாளர்கள் மட்டுமே படிக்கலாம் என்ற நிலைமை இருந்தது. அதிலும் இந்து மாணவர்கள் மட்டுமே படிக்கலாம். அப்போது அது தனியார் பாடசாலை. அதனால் (சைவ-வெள்ளாள) முதலாளிகள் வைத்ததே சட்டமாக இருந்தது. அது பின்னர் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அரசுடைமை ஆக்கப் பட்டது.

அதன் பிறகு அனைத்து சாதிகளை சேர்ந்த மாணவர்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டனர். அப்போதும் பழைய சாதிய சின்னங்கள் அகற்றப் படவில்லை. இப்போதும் அங்கே ஆறுமுக நாவலருக்கு சிலை உள்ளது. அத்துடன் தீய வழியில் பிரபலமான சாதிவெறியன் காசிப்பிள்ளை என்பவரின் பெயரில் இல்லமும் உள்ளது.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்துக் கல்லூரியின் பெயரைச் சொல்லித் தான் அருளினியன் மீது சேறடிக்கப் பட்டது! அருளினியனையும், அவரது நூலையும் எதிர்த்தவர்கள் 90% சாதி அபிமானிகள் தான். அதற்காக, எதிர்த்தவர்கள் எல்லோரும் வெள்ளாளர்கள் என்று அர்த்தம் அல்ல.

இந்தியாவில் பார்ப்பனீயம் போன்று, யாழ்ப்பாணத்தில் வெள்ளாளீயம் உள்ளது. அதன் அர்த்தம், பிற சாதிகளை சேர்ந்தவர்களும், தாழ்த்தப் பட்டவர்களும், அதே மனப்பான்மையுடன் இருப்பார்கள். இன்னொருவிதமாக சொன்னால், இது அடிப்படையில் பழமைவாதம் பேணுவோரின் நவீன அரசியல் அவதாரம்.

ஏற்கனவே ஈழத்து தமிழ்த் தேசியம் பழமைவாத பிற்போக்குத் தனங்களின் மீதே கட்டப் பட்டது. உலகில் உள்ள பிற தேசியங்கள் மாதிரி, தமிழ்த் தேசியமும் தனக்கென சில புனிதங்களை கட்டமைத்து வைத்துள்ளது. மூவாயிரம் வருடங்களாக, ஈழத் தமிழினம் ஒரு DNA கூட மாறாமல் அப்படியே "ஒரே" இனமாக இருந்து வருகின்றது என்று நம்புகிறார்கள். அல்லது நம்ப வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

இது தான் அவர்களது கொந்தளிப்புக்கு காரணம். காலங்காலமாக நம்பப் பட்டு வரும் புராணக் கதைகள் பொய்யாக்கப் படுமென்றால், பழமைவாதிகளுக்கு கோபம் வராதா? அருளினியனின் கேரள டைரீஸ் நூலில் தேசியத்தின் பெயரால் புனையப் பட்ட கற்பிதம் உடைகிறது. இதை அருளினியன் தனது தாராளவாத (லிபரல்) அரசியல் நிலைப்பாட்டில் இருந்து எழுதி இருக்கிறார்.

ஈழத் தமிழர் மத்தியில், ஒருவரது அரசியல் கொள்கைக்கும், கருத்துக்கும் மதிப்பளிக்கும் பக்குவம் இன்னமும் வரவில்லை. தனக்குப் பிடிக்காது என்றாலும் சகித்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு மதம் என்றால், தமிழருக்கு இனம் இருக்கிறது. இரண்டு சமூகங்களிலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்டுக்கதைகளை ஒன்று சேர்த்து கோட்பாடாக்கி வைத்திருக்கிறார்கள். அதன் அத்திவாரமே ஆட்டம் காணுகிறது என்றால் சும்மா இருப்பார்களா?

ஈழத்தின் ஆதிக்க சாதியாக உள்ள வெள்ளாளர்கள், ஒரு உள்நோக்கிய சிந்தனை (introvert) கொண்ட சமூகம். அவர்களுக்கென்று சில இரகசியங்கள் இருக்கும். அதை வெளியில் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஒன்றில் அந்த சாதியை சேர்ந்தவர்கள் அல்லது நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

அந்த இரகசியங்களை தமிழகத்து தொப்புள்கொடி உறவுகளுக்கும் சொல்ல மாட்டார்கள். இலக்கியங்களில் எழுத மாட்டார்கள். சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இந்த விடயத்தில் சாதிக்குள்ளே இருக்கும் தீவிரவாதிகள், மிதவாதிகள், பழமைவாதிகள், நவநாகரிகவாதிகள் எல்லோரும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வார்கள்.

ஈழத்து சாதிய சிந்தனைகளில் ஒன்று தோலின் நிறம். சிவப்பாக இருந்தால் வெள்ளாளர்கள், கறுப்பாக இருந்தால் தாழ்த்தப் பட்ட சாதியினர் என்பது ஒரு பொதுவான அபிப்பிராயம். சமூக விஞ்ஞானப் படி அது உண்மையல்ல. எல்லா வகையான நிறத்தவர்களும், எல்லா சாதிகளிலும் கலந்துள்ளனர். ஆனால், "வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர்" என்று நம்பும் பொதுப் புத்தி அந்த சாதியை சேர்ந்த பலரிடம் காணப் படுகின்றது.

இந்த கறுப்பு, வெள்ளை வேறுபாட்டை சிலர் "அறிவியல்" பூர்வமாக நிரூபிக்கக் கிளம்புவார்கள். அதற்கு அவர்கள் கண்டுபிடித்த கோட்பாடு "கேரளா தொடர்பு"! ஏனென்றால், "பொதுவாக மலையாளிகள் சிவப்பானாவர்கள்" என்ற பொதுப் புத்தியும் நிலவுகின்றது. தாம் மலையாளிகளின் வம்சாவளியினர் என்பதாலேயே சிவப்பாக இருப்பதாக பல வெள்ளாளர்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகளே மன்னியுங்கள்.

இங்கே இதை மறுப்பதற்கு நிறையப் பேர் வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மைகள். தனிப்பட்ட முறையில் பலரிடம் அவதானித்த விடயம். கேரளா வம்சாவழித் தமிழர்கள் என்பதை தாமாகவே நேரடியாக தெரிவித்தவர்களும் உண்டு. எனது அனுபவத்தில் கண்ட ஒருவரைப் பற்றிக் கூறுகிறேன்.

எனக்குத் தெரிந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கிறார். அவருக்கு மலையகத்திலும் உறவினர்கள் உண்டு. "எங்கள் ஊர் மலையகம் என்று சொன்னால், எல்லோரும் குறைந்த சாதியினர் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்..." என்று என்னிடம் சொல்லிக் குறைப்பட்டார்.

"கறுப்பர்களின் தேசத்தில் வாழ்வதற்காக வெட்கப்படும்", சிவந்த தோல் நிறம் கொண்ட அந்தப் பெண்மணி, தனது உயர்சாதிப் பெருமிதத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அந்த அரபு நாட்டில் தன்னுடன் கூட வேலை செய்த கேரளாக் காரரை பிடித்து மலையாளம் பேசக் கற்றுக் கொண்டார். அவர் மலையாளத்தில் சம்சாரிக்கும் பொழுது அடையும் பெருமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

இப்படி மலையாள மோகம் கொண்ட பலரை என் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறேன். முகநூலில் அறிமுகமான, வன்னியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், இந்த "கேரளா தொடர்பை" பற்றி ஆராய வெளிக்கிட்டார். அவர் அரசியலில் குதிப்பதற்கு முந்திய முகநூல் பதிவுகளிலும் கேரளா தொடர்பு பற்றிய பிரமிப்புகள் இருக்கும்.

அது குறித்து என்னுடனும் உரையாடினார். முடிந்தால் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதச் சொன்னார். இப்போது அந்த நண்பர் ஒரு தீவிர தமிழ்த் தேசியவாதி. வலதுசாரி தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் தீவிர செயற்பாட்டாளர். ஆகையினால், ஒரு காலத்தில் தன் மனதில் அப்படியான எண்ணம் இருந்தது என்பதையே மறுப்பார்.

நான் ஆரம்பத்தில் கூறிய மாதிரி, இந்த கேரளா கதையாடல் வெள்ளாளர் சமூகத்தினுள் ஆழமாக வேரூன்றி இருக்கும் நம்பிக்கை. அது உண்மையா, பொய்யா என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால், சிவப்பு நிறத் தோல் என்ற தொன்மத்தை (Myth) நிறுவுவதற்கு, அவர்களுக்கு கேரளாவை விட்டால் வேறு வழியும் தெரியாது.

உண்மையில் நானும் அந்தக் கதைகளுக்கு ஆதாரம் இல்லையென்று தான் நம்பினேன். நூலகத்தில் இருந்த இலங்கையின் பழைய ஆவணங்களை புரட்டிக் கொண்டிருந்த நேரம், அந்தத் தகவல் தற்செயலாக தென்பட்டது. ஒரு காலத்தில், யாழ் குடா நாட்டிற்கும் கேரளாவுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்துள்ளது. எழுபதுகளில், சிறிமாவோ ஆட்சிக் காலத்தில் தான் அந்தத் தொடர்பு அறுந்தது. அதாவது, இலங்கை அப்போது ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடைவிதித்து சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்தது.

யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியை வலிகாமம் என்று அழைப்பார்கள். அந்தப் பிரதேசத்தில் தான் புகையிலை தோட்டங்களும் அதிகம். புகையிலை உற்பத்தியாளர்களில் 90% வெள்ளாள விவசாயிகள் தான். இது ஒன்றும் இரகசியம் அல்ல. அந்தப் பிரதேசத்தில் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இன்றைக்கும் யாழ் குடாநாட்டின் பெருமளவு விவசாய நிலங்கள் வெள்ளாளர்களுக்கு சொந்தமானவை.

நீண்ட காலமாக கேரளாவுடன் தொடர்பு வைத்திருந்த புகையிலை விவசாயிகள், இலங்கை அரசின் தேசியமயமாக்கல் காலகட்டத்தின் பின்னர், தென்னிலங்கையில் மட்டுமே சந்தைப் படுத்த முடிந்தது. அனேகமாக இதற்குப் பின்னர் தான், கேரளாவுடன் தொடர்பு வைத்திருந்த மலையாளிகளும், தம்மை யாழ்ப்பாணத் தமிழர்களாக மாற்றிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு சாதாரணமான சமுதாய மாற்றம்.

இப்போது எழும் பிரச்சினை என்னவென்றால், ஈழத் தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள், இனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கோட்பாட்டை உருவாக்கி, அதை நடைமுறைக்கும் கொண்டு வந்து விட்டார்கள். "சிங்களவர்கள் எல்லோரும் ஓரினம், தமிழர்கள் எல்லோரும் ஓரினம். இரண்டும் மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக இனத் தூய்மை பேணி வருகின்றன." என்ற கற்பனையை போதித்து வந்தார்கள்.

இப்போது யாராவது வந்து, "சிங்களவர், தமிழர் தனித் தனி இனங்கள் அல்ல. இரண்டுமே கலப்பினங்கள் தான்" என்று உண்மையை சொல்லி விட்டால் என்ன செய்வது. தாங்கள் இவ்வளவு காலமும் கட்டிக் காத்து வந்த பொய் அம்பலமாகிறது என்ற ஆத்திரத்தில் துள்ள மாட்டார்களா?

நிச்சயமாக. அதை மறைப்பதற்காக, "ஈழத் தமிழரை பிரிக்க சதி நடக்கிறது" என்று கூப்பாடு போடுவார்கள். ஆனால், "சிவப்பு, கறுப்பு நிற வேறுபாடு" பார்க்கும் கதைகளை, தொடர்ந்தும் தமது சாதிக்குள்ளே மட்டும் இரகசியமாக வைத்திருப்பார்கள்.

Thursday, May 25, 2017

ஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள்


யாழ்ப்பாண‌த்தில் குடியேறி, ஈழ‌த் த‌மிழ‌ராக‌ ஒன்று க‌ல‌ந்த‌ தெலுங்க‌ர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ம். ஈழ‌த்த‌மிழ் ச‌மூக‌ம் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ இன‌த்தூய்மை பேணி வ‌ருவ‌தாக‌ நினைப்ப‌து அறியாமை.

யாழ்பாணத்தில் தெலுங்கர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் குடியேறிய‌ இடங்க‌ளின் பெயர்கள், ஆந்திரா, க‌ர்நாட‌காவில் உள்ள‌ ஊர்க‌ளின் பெய‌ர்க‌ளுட‌ன் ஒத்துப் போவ‌தை க‌வ‌னிக்க‌வும்.

யாழ்ப்பாணத்தில் குடியேறிய‌ தெலுங்க‌ர்க‌ள், (க‌ன்ன‌ட‌ர்க‌ளும்) வேளாளர் பட்டத்தை ஏற்றன‌ர். ஆகையினால் இன்றைய‌ வெள்ளாள‌ சாதியின‌ர் "தூய‌ த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌" என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து! (அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தீவிர‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளாக‌ இருப்ப‌தில் ஆச்ச‌ரிய‌ம் இல்லை.)

ஆந்திர தேசம்: 
1. கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்).
2. கதிரி - கதிரிப்பாய்.
3. நக்கன் தொட்டி - நக்கட்டி உடையாபிட்டி
4. வடுகு - வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை)
5. அந்திரன் - அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை)
6. வேங்கடம் - வேங்கடன் (சங்கானை).

கன்னட தேசம்: 
1. கன்னடி - மாவிட்டபுரம்
2. குலபாளையம் - குலனை (அராலி)
 3. சாமண்டிமலை - சாமாண்டி (மாவிட்டபுரம்)
4. மாலூர் - மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்).
5. பச்சூர் - பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்).
6. மூடோடி - முட்டோடி (ஏழாலை).

துளுவம் (க‌ர்நாட‌கா மாநில‌ம்): 
1. துளு - அத்துளு (கரவெட்டி).
2. துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி)

தமிழர் குடியேற்றம் தொண்டைமண்டலம், வட தமிழகம். தொண்டநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்:

1. கச்சி – கச்சினாவடலி (சுன்னாகம்).
2. கம்பாநதி –கம்பாமூலை, கம்பாக்கடவை (மல்லாகம்).
3. ஆலங்காடு – ஆலங்குழாய் (சண்டிலிப்பாய்)
4. காரைக்கால் - காரைதீவு. குதரைக்காடு (இணுவில்). 
5. உடுப்பூர் – உடுப்பிட்டி
6. காஞ்சி – காஞ்சிக்கோட்டம் (மானிப்பாய்).
7. சோழிங்கள் - சோழங்கள் (கரணவாய்)
8. தொண்டை – தொண்டைமானாறு, தொண்டைமான் தோட்டம் (வட்டுக்கோட்டை),
9. மயிலம் - மயிலங்காடு (ஏழாலை.)

(ஆதார‌ம்: யாழ்ப்பாணக் குடியேற்றம்)

(த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி: விஜ‌ய் ப‌ல்ல‌வ‌)

Thursday, February 05, 2015

ஆங்கிலேயரிடம் ஈழம் வாங்காமல் தவற விட்ட "தமிழ்த் தேசிய" தலைவர்கள்!

ஆள் பாதி, ஆடை பாதி, அமெரிக்கா மீதி!

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்திற்கு, முன்னாள் காலனிய எஜமான் பிரிட்டனின் எலிசபெத் மகராணி வாழ்த்துக் கூறி இருக்கிறார்! (https://www.gov.uk/government/world-location-news/queens-message-to-mark-independence-day-of-sri-lanka)

பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினமானது, "சிங்களவர்களிடம் தமிழர்கள் அடிமைப் பட்ட தினமாகையினால், அதனை தமிழர்கள் கருப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும்" என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். இன்னும் சிலர், "அன்றைக்கே ஈழம் கேட்காமல் விட்ட தமிழ்த் தலைவர்களின் தவறு" பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

வரலாறு தெரியாமல், அல்லது அது குறித்து பக்கச் சார்பற்ற ஆய்வு இல்லாமல், இது போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாது. பிரிட்டிஷ்காரர்கள் எந்தக் காலத்திலும் இழக்க விரும்பியிராத, இந்தியாவே கையை விட்டுப் போகிறது என்ற கவலையில், இலவச இணைப்பாக வழங்கப் பட்டது தான், இலங்கையின் சுதந்திரம்.

பிரிட்டன் தனது பணக்கார காலனியான சுதந்திர இந்தியாவின் பலத்தைக் குறைத்து, எதிர்காலத்தில் தீராத தலையிடியை உண்டுபண்ணும் நோக்கில், பாகிஸ்தான் பிரிவினைக்காக பாடு பட்டது. அதே நேரம், இலங்கையில் ஈழம் பிரிப்பதற்கு அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை.

உண்மையில் அன்றிருந்த தமிழ்த் தலைமைகள் யாரிடமும் தனி ஈழம் கேட்கும் எண்ணம் இருக்கவில்லை. அதற்குக் காரணம், அன்று யாருடைய மனதிலும் தமிழ் தேசிய உணர்வு இருக்கவில்லை. இன்னும் சொன்னால், தமிழர் என்ற இன உணர்வே அப்போது உருவாகி இருக்கவில்லை. 

தமிழ் தேசியக் கருத்தியல், தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு, குறைந்தது இரு தசாப்த காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து முரண்பட்டு பிரிந்து சென்ற, தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் காரணமாக, பிற்காலத்தில் உருவானது தான் தமிழ்த் தேசிய அரசியல். 

சேர் பொன் இராமநாதன், ஜிஜி பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தலைமைகள் தங்களை ஒட்டு மொத்த தமிழர்களின் தலைவர்களாக கருதிக் கொள்ளவில்லை. தாம் சார்ந்த வெள்ளாள சாதியின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுப்பதே அவர்களது குறிக்கோளாக இருந்தது. 

ஆங்கிலேயர் காலத்தில், படித்த மேட்டுக்குடி வர்க்கமாக உருவான வெள்ளாளர்கள் தான், இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் சிங்களத்தில் கொவிகம என்று அழைக்கப் பட்டாலும், மொழி கடந்து திருமண உறவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு, சாதி அபிமானம் நிலையானதாக இருந்துள்ளது. 

அன்றிருந்த சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினருக்கென சில பொதுவான அம்சங்கள் இருந்தன. அதுவே அவர்களது சாதி - வர்க்க ஒற்றுமைக்கு முக்கிய காரணம். அவர்களின் பூர்வீகம் சிங்களமாக, அல்லது தமிழாக இருந்தாலும், அவர்கள் தமது தாய்மொழியை புறக்கணித்து வந்தனர். அதற்குப் பதிலாக அன்னியரின் ஆங்கில மொழியையே வீட்டிலும் வெளியிலும் பேசினார்கள். கிறிஸ்தவ மதத்தை தழுவி, ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றி வந்தனர்.

அன்றைய சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரின் நலன்களும் ஒன்றாகவே இருந்தன. வர்த்தக நலன்களுக்காக, முஸ்லிம்களுடன் முரண்பட்டார்கள். இலங்கையில் முதன்முதலாக தோன்றிய இனக் கலவரம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்வதற்காக, சேர் பொன் இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்கை வாதாடி வென்று கொண்டு வந்தார். நாடு திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் பல்லக்கில் தூக்கிச் சென்றார்கள்.

மேற்படி சம்பவத்தை நினைவுகூரும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், "ஒரு தமிழ்த் தலைவரை சிங்களவர்கள் மதித்த காலம்..." என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் அது, அவர் ஒரு தமிழர் என்பதற்காக கிடைத்த மரியாதை அல்ல. இராமநாதனின் சாதிக்கு, அல்லது வர்க்கத்திற்கு கிடைத்த மரியாதை. இலங்கையில் அன்றிருந்த சாதி உணர்வு, வர்க்க உணர்வு என்பன அந்தளவு இறுக்கமானது.

சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரின் ஒற்றுமைக்கு இன்னொரு உதாரணத்தையும் கூறலாம். அன்று முஸ்லிம்களுக்கு அடுத்ததாக, இந்தியர்கள் கொழும்பு வர்த்தகத் துறையில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அது மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து வந்த பெருமளவு கூலித் தொழிலாளர்கள், கொழும்புத் துறைமுகம் போன்ற தொழிற்துறைகளில் வேலை செய்தார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள். கணிசமான அளவு தெலுங்கர்கள், மலையாளிகளும் இருந்தனர்.

அன்றைய இலங்கைப் பொருளாதாரம் மலேசியாவை விட முன்னேறிய நிலையில் இருந்தது. அதாவது, இன்றைக்கு சிங்கப்பூர், மலேசியா போன்ற பணக்கார நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வதைப் போன்று, அன்று பல இந்திய தொழிலாளர்கள் பணக்கார இலங்கைக்கு வேலை தேடிச் சென்றார்கள். 

ஒவ்வொரு வருடமும் பெருகிக் கொண்டிருந்த இந்திய குடியேறிகளை தடுப்பதற்காக தோன்றிய சிங்கள இனவாத அரசியல், பிற்காலத்தில் தமிழர்களுக்கு எதிரானதாக திரும்பியது. கொழும்பு இந்தியர்கள் மட்டுமல்ல, மலையக தோட்டத் தொழிலாளர்களினதும் குடியுரிமையை பறிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் வந்த நேரம், "தமிழ்த் தலைவர்" ஜிஜி பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்தார்.

இப்படியான கலாச்சார பின்புலத்தைக் கொண்ட "தமிழ்த் தலைவர்கள்" எவ்வாறு ஈழம் கேட்டிருப்பார்கள்? அது அவர்களது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயம். ஆங்கிலேயர் போன பின்பு, இலங்கை முழுவதையும் தங்களது வெள்ளாள சாதி ஆளப் போகிறது என்ற இறுமாப்பில் இருந்தவர்கள். எவ்வாறு நாட்டை கூறு போட சம்மதித்திருப்பார்கள்? சிலநேரம், அன்றைக்கு ஒரு புலிகள் இயக்கம் தோன்றி, ஈழப் போராட்டம் நடத்தி இருந்தால், அதை நசுக்குவதற்கு இவர்களே முன் நின்று உழைத்திருப்பார்கள்.

எல்லாவற்றையும் "சிங்களம் - தமிழ்" என்று, கருப்பு வெள்ளையாக பார்ப்பது தான், தேசியவாத அரசியல் கோட்பாடு. ஆனால், அது எல்லா இடங்களிலும், எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரக் கூடிய சூத்திரம் அல்ல. இலங்கையின் சாதிய அரசியல், அதற்குப் பின்னால் மறைந்திருந்த வர்க்க அரசியல், இவற்றை ஆராயாமல் பிரச்சினையின் வேர்களை கண்டுபிடிக்க முடியாது.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Tuesday, April 29, 2014

சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம்



யாழ் நகரில், சைவ- வெள்ளாள அடிப்படைவாதி ஆறுமுக நாவலருக்கு சிலை வைப்பதற்கு, 3 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு, யாழ்ப்பாண ஆளுநர் சந்திரசிறி முன்வந்துள்ளார். யாழ் சிவில் சமூகம் என்ற பெயரில், அரசு சார்பான தமிழர்களின் குழு ஒன்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிலை கட்டுவதற்கு ஆளுநர் சம்மதித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை புலிகள் ஆண்ட காலத்தில் கட்டிய சிலைகளை எல்லாம் உடைத்து நொறுக்கிய, மாவீரர் துயிலும் இல்லங்களை கூட தரைமட்டமாக்கிய, சிங்கள இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், ஆறுமுக நாவலருக்கு சிலை வைக்க முன் வந்துள்ளமை சந்தேகத்திற்குரியது. தென்னிலங்கையில் சிங்கள-பௌத்த அடிப்படைவாத சக்திகளை தூண்டி விடுவது போன்று, வட இலங்கையில் சைவ-வேளாள மேலாதிக்க சக்திகளை வளர்த்து விடும் நோக்கம், இதில் அடங்கி இருக்கலாம். சிங்கள-தமிழ் வெள்ளாள சாதி ஒற்றுமை நீண்ட கால நோக்கில், பேரினவாத அரசுக்கு நன்மை பயக்கும்.

ஒரு சைவ மத அடிப்படைவாதியான ஆறுமுக நாவலர், யாழ் சைவ-வெள்ளாள ஆதிக்க அரசியலை தோற்றுவித்த பிதாமகன் ஆக, சாதியவாதிகளால் போற்றப் படுகின்றார். சைவத்தையும், தமிழையும் வளர்த்ததோடு நில்லாது, சாதியத்தையும் உயர்த்திப் பிடித்த ஆறுமுக நாவலர்; சைவத் தமிழர்களின் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு எதிராக, கடுமையாக போராடியவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது காலத்தில் வாழ்ந்த சிங்கள- பௌத்த அடிப்படைவாதியான அநகாரிக தர்மபால, இன்றைய பொதுபல சேனா வகையறாக்களும், இந்தப் புள்ளியில் ஒன்று சேர்கின்றனர்.

யாழ் நகரில், அரசு நிதியில் நாவலருக்கு சிலை அமைப்பதற்கு, "தமிழ் இன உணர்வாளர்", "தமிழ் தேசியவாதி" என்று அழைத்துக் கொள்ளும் யாரும், இன்று வரையில் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில், தமிழ் தேசிய ஆர்வலர்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். இதிலிருந்தே, வலதுசாரி தமிழ்க் குறுந் தேசியவாதிகளின், உயர் சாதிப் பற்றை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

******


"சைவமும், தமிழும் வளர்த்தார்" என்று போற்றப்படும் ஆறுமுக நாவலர், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தமிழர்களாக ஏற்றுக் கொண்டவரா? அல்லது சைவ சமயத்தை பின்பற்றும் எல்லோரையும் சைவர்களாக ஏற்றுக் கொண்டிருந்தாரா? ஆறுமுக நாவலரைப் பொறுத்தவரையில், அவர் சைவத்தையும், தமிழையும், உயர் சாதியினரின் மேட்டுக்குடி கலாச்சாரமாக மட்டுமே கருதினார்.

நான் அப்போது, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். யாழ் சைவ சித்தாந்தக் கழகம், அரச பாடத் திட்டத்திற்குள் அடங்காமல், தனியாக ஒரு சைவ சமய பொதுப் பரீட்சை நடத்தி வந்தது. அந்தப் பரீட்சையில் போட்டியிட்டு தேறி, சான்றிதழ் பெற்றுக் கொண்டேன். பரீட்சைக்கு தயார் படுத்துவதற்காக, ஆறுமுக நாவலர் எழுதிய "சைவ சமயம் வினா- விடை" படிக்கத் தந்தார்கள். அந்த நூலில் ஓரிடத்தில் இருந்த நாவலரின் பதில் எனது கண்களுக்கு சாதிவெறி கொண்டதாக தென்பட்டது. அது இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

"திருநீறு பூசும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்" பற்றி நாவலர் எழுதி இருந்தார். அதில் ஒன்று, "திருநீறு பூசும் நேரம், எளிய சாதிகள் குறுக்கே வரக் கூடாது." என்றிருந்தது. தமிழ் தேசியமும், தமிழீழப் போராட்டமும் வீறு கொண்டெழுந்த காலகட்டம் அது. "நாம் தமிழர்கள்" என்ற கோணத்தில் இருந்து பார்க்கும் பொழுது, ஆறுமுக நாவலர் எனது கண்களுக்கு சாதிமானாக தென்பட்டார். அவரைப் பொறுத்தவரையில், "எளிய சாதிகள்" என்ற தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தமிழர்களாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம், அவர்களை சைவர்களாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கூட, ஆறுமுக நாவலரிடம் இருக்கவில்லை. ஆனால், அவர் தான் "சைவத்தையும், தமிழையும் வளர்த்தார்" என்பது ஒரு வரலாற்று முரண் நகை.

ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை நூலில் இருந்து ஒரு பகுதியை கீழே தருகிறேன். நாவலர் ஒரு தமிழ் தேசியவாதியா அல்லது சாதியவாதியா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்:

//சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியம்.//

//தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை?

சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.// 
(ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 2)