Showing posts with label வேலையில்லா திண்டாட்டம். Show all posts
Showing posts with label வேலையில்லா திண்டாட்டம். Show all posts

Tuesday, March 07, 2017

வேலையில்லாப் பட்டதாரிகளை நையாண்டி செய்யும் ஜே.ஆரின். குழந்தைகள்

இலங்கையில், வடக்கு- கிழக்கு மாகாணங்களில், வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் நடக்கிறது. வழமையாக தமிழரின் தேசியம் சம்பந்தமான போராட்டங்களில் காணப்படும் ஒருநிலைப் பட்ட ஆதரவு இதில் இல்லை.

இதற்கு முன்னர் நடந்த கானாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டம், கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம், இவற்றுடன் ஒப்பிடும் பொழுது, வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் அதிகளவு முக்கியத்துவம் பெறவில்லை. அதற்குக் காரணம், எப்போதும் பொருளாதாரப் பிரச்சினை என்று வந்து விட்டால், ஈழத் தமிழர்கள் இரண்டு பட்டு சிந்திப்பார்கள்.

தமிழர்களில் பெருமளவில் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் இருந்தாலும், கணிசமான அளவினர் எதிர்ப்பவர்களாக உள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, அவர்களில் சிலர் நக்கல், நையாண்டி மூலம் தனியார்துறைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றனர். "எதற்காக வேலை கேட்டு அரசிடம் கெஞ்சுகிறீர்கள்? தனியார் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இரண்டு, மூன்று மடங்கு அதிக சம்பளமும் கொடுப்பார்கள்..." என்று நியாயம் பேசுகின்றனர்.

தற்காலத்தில் 15% வேலைவாய்ப்புகள் அரசுத் துறையிலும் 85% வேலைவாய்ப்புகள் தனியார் துறையிலும் இருப்பதாக, ஒரு தனியார்துறை ஆதரவாளர் "அறிவுபூர்வமாக" எடுத்துரைத்தார். அதற்கு அவர் எந்தப் புள்ளிவிபர ஆதாரத்தையும் காட்டவில்லை. இலங்கையில் இன்றும் கூட ரயில், தபால், மின்சாரம் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்கள் அரசினால் நடத்தப் படுகின்றன. சரி, ஒரு பேச்சுக்கு அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.

எல்லா நாடுகளிலும் பொது (அரசு) நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. அந்தந்த நாட்டைப் பொறுத்து விகிதாசாரம் கூடலாம், குறையலாம். வேலையில்லாப் பட்டதாரிகளில் ஒரு பிரிவினர் தமக்கு அரசாங்க வேலை மட்டுமே வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், எல்லோரும் அப்படி பிடிவாதம் பிடிக்க வாய்ப்பில்லை. வேலையில்லாவிட்டால் வறுமையில் வாட வேண்டும் என்று நிலைமை இருக்கும் நாட்டில், கட்டாயமாக தனியார் துறையில் வேலை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும்.

ஒருவருக்கு தான் எங்கே வேலை செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யும் உரிமை உள்ளது. அதற்கான சுதந்திரமும் உள்ளது. அரசாங்க வேலை வேண்டும் என்பதும் தனி மனித உரிமை தான். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் மனத் திருப்தி அவருக்கு கிடைக்கலாம். அதற்கு மாறாக, தனியார் துறையில் வேலை செய்வதன் மூலம் அவர் சுரண்டலுக்கு துணை போகின்றார். உலகில் எங்காவது மக்களை கொள்ளையடிக்காத, உழைப்பாளிகளை சுரண்டாத தனியார் நிறுவனம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்.

வேலையில்லாப் பட்டதாரிகள் தனியார் துறையில் வேலை தேடுமாறு "ஆலோசனை" கூறிய நியாயவான்கள் சொன்ன காரணங்களில் முக்கியமானது, அதிக சம்பளம். அரசுத் துறையை விட தனியார் துறையில் பட்டதாரிகளுக்கு இரண்டு, மூன்று மடங்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று ஆசை காட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லாமல் மறைக்கும் உண்மை ஒன்றுண்டு. அதே தனியார் துறையில் அடிமட்ட ஊழியர்களின் சம்பளம் இரண்டு, மூன்று மடங்கு குறைவு. அதாவது, அடிமட்ட தொழிலாளர்களிடம் இருந்து திருடப் படும் உழைப்பின் ஒரு பகுதி தான் அந்த "அதிக சம்பளம்". இந்தப் பகல் கொள்ளைக்கு வக்காலத்து வாங்குவதற்காக வெட்கப் பட வேண்டும்.

அரசுத் துறையிலா, தனியார் துறையிலா வேலை வாய்ப்பு அதிகம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அரசிடம் கோரிக்கை வைக்கும் வேலையிலாப் பட்டதாரிகளின் போராட்டம் நியாயமானதா? அரசமைப்பு சட்டப் படி, வேலை செய்வது ஒரு குடிமகனின் உரிமை என்றால், வேலை வாய்ப்பை உருவாக்குவது அரசின் கடமையாகின்றது. ஆனால், சந்தர்ப்பம், சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்காத படியால், அது குறித்து கட்டாயப் படுத்த முடியாது என்றும் அரசு தப்பிக் கொள்கின்றது. எது எப்படி இருப்பினும் அரசு தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளமை முக்கியமானது.

தனியார்துறைக்கு ஆதரவாகப் பேசும் இளம் தலைமுறையினர், எழுபதுகள், எண்பதுகளுக்குப் பிறகு பிறந்தவர்கள். அதன் அர்த்தம், இலங்கையில் ஒரு காலத்தில் அரசுத் துரை நிறுவனங்களே அதிகமாக இருந்த காலகட்டம் பற்றி அவர்களுக்குத் தெரியாது. 1977 ம் ஆண்டுக்குப் பிறகு தான், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனே கொண்டு வந்த நவ தாராளவாத அரசியலின் விளைவாக தனியார்மயம் ஊக்குவிக்கப் பட்டது. அதற்குப் பிறகு தான் பொருளாதாரத்தில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரித்தது.

வேலையில்லாப் பட்டதாரிகளை நையாண்டி செய்யும் தனியார் மய தாசர்களை "ஜே.ஆரின். குழந்தைகள்" என்று அழைப்பதில் எந்தப் பிழையும் இல்லை. இலங்கையில் தனியார் மயத்தை புகுத்திய ஜே. ஆர். தான், தமிழர்களுக்கு எதிரான ஈழப்போரைத் திணித்தவர். பல இலட்சம் தமிழர்களின் உயிர்களைக் காவு கொள்ளக் காரணமாக இருந்தார். ஈழப்போருக்கும், தனியார்மயமாக்கலுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. Naomi Klein எழுதிய Shock Doctrine நூலை வாசித்தால் அந்த உண்மை புரியும். அமெரிக்க பொருளியல் அறிஞர் Milton Friedman முன்மொழிந்த சந்தைப் பொருளாதார தத்துவம், முதல் தடவையாக சிலியில் நடந்த சதிப்புரட்சியின் பின்னர் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது.

தனியார்மயத்தின் வரலாறு ஒரு புறம் இருக்கட்டும். வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்தின் பின்னால் உள்ள நியாயத் தன்மையை இப்போது பார்ப்போம். மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் கூட, வேலை வாய்ப்பு உருவாக்குவதை அரசு தான் பொறுப்பு எடுக்கிறது. நான் கடந்த இருபது வருட காலமாக மேற்கு ஐரோப்பாவில் வாழ்வதால், அதை கவனித்து வருகிறேன்.

ஒவ்வொரு தேர்தல் பரப்புரையிலும், வேலை வாய்ப்பு உருவாக்குவது பற்றிய விடயம் முக்கியமாகப் பேசப் படும். இடதுசாரிக் கட்சியாக இருந்தாலும், வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், இந்த விடயத்தில் ஒன்று தான். தற்போது மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்து வரும் வலதுசாரி இனவாதக் கட்சிகள் கூட, அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறி விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது பழி போடுவது அவர்களது இனவாத அரசியல் சார்ந்தது. மேலும் அவர்களால் தமது உறுதிமொழியை காப்பாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேற்கத்திய நாடுகளிலும் வேலையில்லாத பட்டதாரிகள் தமது பிரச்சினைக்கு அரசை தான் பொறுப்பேற்க வைப்பார்கள். அது சரியானதும் கூட. ஏனென்றால், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், அவர்கள் அதை ஒரு கடமையாகக் கருதுவதில்லை. அதாவது நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தனியார் நிறுவனங்களின் கடமை அல்ல. அவர்கள் தமக்கு தேவையான அளவில் எடுத்துக் கொண்டு, ஏனையோரை நிராகரிப்பார்கள். ஆகவே, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் கொள்கை வகுப்பது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த விடயம். அதை அரசு தான் பொறுப்பேற்று செயற்படுத்த வேண்டும்.

Friday, May 24, 2013

சுவீடனின் வேலையில்லா திண்டாட்டம் : ஸ்டாக்ஹோல்ம் நகரம் எரிகின்றது!


சுவீடன், ஸ்டொக்ஹோம் நகரின் புறநகர்ப் பகுதியான ஹூஸ்பி (Husby) யில், ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய கலவரம், ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உழைக்கும் வர்க்க குடியிருப்புகள் நிறைந்த அந்த புறநகர்ப் பகுதி, தலைநகரின் ஏழைகள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். பெரும்பாலும் வெளிநாட்டுக் குடியேறிகளை கொண்டது. பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினையினால் அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள் வாழும் இடம். ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த இடத்தில் வாழ்ந்த வயோதிபர் ஒருவர்,போலீஸ்காரர்களின் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்தார். "அந்த 69 வயது முதியவர், கத்தி வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும், தற்பாதுகாப்புக்காக சுட்டதாகவும்..." போலிஸ் கூறுகின்றது. (Man skjuten till döds av polis i Stockholm, http://www.expressen.se/nyheter/man-skjuten-till-dods-av-polis-i-stockholm/)


பொலிஸ் அறிக்கையில் பல உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால், ஆத்திரமுற்ற இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலிஸ் படையை எதிர்த்து கற்களை வீசினார்கள். வணிக நிலையங்கள், வாகனங்கள் எரித்து நாசமாக்கப் பட்டன. பொருளாதார நெருக்கடி காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலட்சக் கணக்கான மக்கள் வேலையிழந்து, வறுமையில் வாடுகின்றனர். இதனால், பல ஐரோப்பிய நகரங்கள் எந்த நேரமும் கலவரம் வெடிக்கக் கூடிய நேர வெடிகுண்டுகளாக காணப்படுகின்றன.


சுவீடிஷ் பொலிசின் இனவெறிப் பேச்சுக்களே, ஞாயிறு இரவு ஸ்டொக்ஹோம் நகரில் இடம் பெற்ற கலவரத்திற்கு காரணம் என்று தெரிய வருகின்றது. "குரங்குகள், நீக்ரோக்கள்" போன்ற இனவெறி வசைச் சொற்களை, அங்கு கடமையில் இருந்த போலிஸ் அதிகாரிகள் பயன்படுத்தி உள்ளனர். சுவீடிஷ் போலிஸ் அடிக்கடி இவ்வாறு நடந்து கொள்வதாகவும், ஞாயிற்றுக்கிழமை அதன் எதிரொலியாக வன்முறை வெடித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. முகமூடி அணிந்த இளைஞர்களால், குறைந்தது 100 கார்கள் எரிக்கப் பட்டுள்ளன.

பெரும்பாலும் சோமாலிய இளைஞர்களே கலவரத்தில் ஈடுபட்டதால், இதனை "முஸ்லிம் இளைஞர்களின் வெறியாட்டம்" என்ற அர்த்தத்தில், வலதுசாரி சுவீடிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சுவீடிஷ் இனவெறியர்களும் சோமாலியர், முஸ்லிம்கள், வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். கலவரம் இடம்பெற்ற ஹூஸ்பி (Husby) என்ற புறநகர் பகுதியில் வசிக்கும் 80 சதவீதமானோர் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகள் ஆவர். அண்மைக்கால பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்ட வேலையில்லாப் பிரச்சினை, வாய்ப்புகள் மறுக்கப்படும் வெளிநாட்டவர்கள், இது போன்ற சமூகப் பிரச்சனைகளை மூடி மறைப்பதற்கு, இனவாத திரிபுபடுத்தல்கள் உதவுகின்றன. "சுவீடன் போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில் இனவாதம் அறவே இல்லை" என்று பலர் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர், ஏதோ ஒரு நிறுவனம் நடத்திய புள்ளிவிபர ஆய்வு ஒன்றும் அவ்வாறு தெரிவித்திருந்தது.

ஹூஸ்பி புறநகர் பகுதியில் தொடங்கிய கலவரம், தற்போது ஸ்டொக்ஹோல்ம் நகரின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகின்றது. வீதியோரமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் கார்கள் இரவோடிரவாக கொளுத்தப் படுகின்றன. பெரும்பாலும் 15 முதல் 19 வயதான இளைஞர்களே கலவரத்தில் ஈடுபடுகின்றனர். சில நேரம், 12 அல்லது 13 வயது சிறுவர்களும் காணப்படுகின்றனர். நேற்றும் பொலிஸ் நான்கு பேரை கைது செய்தது. கலவரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பிட்டு எழுதுவதை தவிர்த்து வருகின்றன. இருப்பினும் வலதுசாரி ஊடகங்கள், "சோமாலியர்கள், முஸ்லிம்கள்" என்று குறிப்பிட்டு எழுதி, "பன்முகக் கலாச்சார சமூகத்தின் எதிர்விளைவு" என்று, மூன்றாமுலக நாடுகளின் வந்தேறுகுடிகளுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை காட்டி வருகின்றன. ஹூஸ்பி புறநகர் பகுதியில், ஒரு 69 வயது முதியவரை போலீஸ்காரர்கள் சுட்டுக் கொன்றது தான், கலவரத்திற்கு மூல காரணம். போலிஸ் வன்முறைக்கு பலியான வயோதிப நபர், "ஒரு ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்" என்று போலிஸ் அறிவித்த தகவலை, இந்த வலதுசாரி ஊடகங்கள் மூடி மறைப்பது குறிப்பிடத் தக்கது.

வேலையில்லாதோர் எண்ணிக்கை, ஐரோப்பிய நாடுகளின் பூர்வீக வெள்ளையின மக்களிடையே குறைவாகவும், வந்தேறுகுடி சமூகங்களில் அதிகமாகவும் உள்ளது. அதற்கு அவர்களின் சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் என்பது, பாதிக்கப்பட்ட மக்களை குறைகூறும் அயோக்கியத்தனம் ஆகும். வந்தேறுகுடி சமூகங்களில், அதிகமாக படித்து, பட்டம் பெற்றவர்களுக்கு கூட வேலை இலகுவில் கிடைப்பதில்லை. பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழிக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு சரளமாக அவர்களது மொழியை பேசினாலும், மொழிப் புலமை காணாது என்று கூறுவார்கள். உங்கள் நாட்டில் இருந்து கொண்டு சென்ற சான்றிதல்களை காட்டினால், அவற்றை தகுதி போதாது என்று கூறி புறக்கணிப்பார்கள். பொதுவாகவே, தொழில் வாய்ப்புகள் குறைவாகவும், வேலை தேடுவோர் அதிகமாகவும் இருக்கும் காலங்களில், தங்களது இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்பார்கள். இது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.

நீங்கள் அனுப்பும் CV யில் இருக்கும் பெயர், பிறந்த இடம் போன்ற விபரங்களை பார்த்து விட்டே, உங்களை நேர்முகப் பரீட்சைக்கு கூப்பிட மாட்டார்கள். நீங்கள் அந்த நாட்டை சேர்ந்த பூர்வீக பிரஜை என்றால், வாய்ப்பு அதிகமாக இருக்கும். வேலையில்லா பிரச்சினை ஏற்படும் காலங்களில், வந்தேறுகுடிகள் தான் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். அதனால், அவர்கள் அதிகமாக அரசின் உதவிப் பணத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அது கிடைக்காவிட்டால், திருடியோ, பிச்சை எடுத்தோ தான் வாழ வேண்டி இருக்கும். அது இந்த ஐரோப்பிய நாடுகளின் இமேஜை பாதித்து விடும். அதற்குப் பிறகு, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளிக்கும், வளர்ச்சி அடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளிக்கும் இடையில் வித்தியாசம் இல்லாது போய்விடும்.

அனேகமாக, எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், வந்தேறு குடிகளின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லை. அதனால், அவர்களில் எத்தனை இலட்சம் பேர் அரச உதவிப் பணத்தில் வாழ்ந்தாலும், அதே மாதிரி வாழும் பூர்வீக வெள்ளையரின் எண்ணிக்கைக்கு ஈடாகாது. அதாவது, அரச உதவிப்பணத்தில் வாழும் பூர்வீக வெள்ளையின மக்களின் எண்ணிக்கை, வந்தேறுகுடிகளை விட பல மடங்கு அதிகம். இதனை பல புள்ளிவிபரங்கள் உறுதிப் படுத்துகின்றன.