Showing posts with label ஐரோப்பிய மத்திய வங்கி. Show all posts
Showing posts with label ஐரோப்பிய மத்திய வங்கி. Show all posts

Wednesday, March 22, 2017

சேமிப்பு பணம் வைப்பிலிட்டால் வங்கிக்கு வட்டி கட்ட வேண்டும்!


இனி வருங்காலத்தில் வங்கியில் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடும் பணத்திற்கு நாமே வட்டி கட்ட வேண்டி இருக்கும்! சிரிக்காதீர்கள், இது ஜோக் அல்ல! உண்மையில் நடக்கவுள்ளது.

நெதர்லாந்தில் Triodos வங்கி சேமிப்புப் பணத்திற்கு 0% வட்டி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆமாம், சேமிப்புப் பணத்திற்கு ஒரு சதம் கூட வட்டி கிடையாது. ஏற்கனவே பல ஐரோப்பிய வங்கிகள் மிகக் குறைந்த வட்டி கொடுத்து வந்துள்ளன.

இனிமேல் அது எதிர்மறை வட்டியாகவும் இருக்கலாம். அதாவது, நாங்கள் சேமிப்புக் கணக்கில் போடும் பணத்திற்கு நாமே தான் வட்டியும் கட்ட வேண்டும். அந்த வட்டிப் பணம் வங்கிக்கே போய்ச் சேரும்.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். உங்களது வங்கி சேமிப்புக் கணக்கில் 24.437 யூரோக்களுக்கு அதிகமான பணம் வைப்பில் இட்டுள்ளீர்களா? அப்படியானால் அது உங்கள் சொத்தாக கருதப் படும். அதாவது அந்தப் பணத்திற்காக அரசுக்கு மேலதிகமாக சொத்து வரி கட்ட வேண்டும்!

எதற்காக சேமிப்புக்கான வட்டி குறைந்து கொண்டே செல்கின்றது? அதற்குக் காரணம் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வட்டி வீதத்தை குறைத்துள்ளது. வட்டி குறைவாக இருந்தால் மத்திய வங்கியில் இருந்து வர்த்தக வங்கிகள் எடுக்கும் கடன் தொகையும் அதிகரிக்கும். மறுபக்கத்தில் அந்த வங்கிகள் மக்களுக்கு கொடுக்கும் கடனும் அதிகரிக்கும்.

சேமிப்பில் பணத்தை வைப்பிலிடுவதை மத்திய வங்கி ஊக்குவிக்கவில்லை. அதனால் இவ்வளவு காலமும் சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்த வட்டி கொடுக்கப் பட்டு வந்தது. அதற்குக் காரணம் பணம் சுற்றிச் சுழல வேண்டும். மக்கள் பணத்தை சேமிப்பதை விட, செலவளிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது.

சேமிப்பு பணத்திற்கு வட்டி குறைவதற்கு இன்னொரு காரணம் பணவீக்கம். எங்களது சேமிப்புப் பணத்திற்கு கிடைக்கும் வட்டி பணவீக்கத்தை விட அதிகமாக இருந்தால் தான் நன்மை உண்டு. இல்லாவிட்டால் அந்த வட்டியால் எந்தப் பயனும் இல்லை. உதாரணத்திற்கு, ஆயிரத்திற்கு பத்து ரூபாய் வட்டி சம்பாதித்து விட்டதாக நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. பணவீக்கம் காரணமாக அதற்கு எந்தப் பெறுமதியும் இல்லை.

உண்மையில் நாட்டில் ஓரளவு பணவீக்கம் இருப்பதை வங்கிகள் விரும்புகின்றன. அதற்குக் காரணம் பணவீக்கம் இருந்தால் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அது பொருளாதாரத்திற்கு நல்லது. எப்படி? இன்றைய விலையை விட நாளைய விலை அதிகமாக இருக்கலாம். இனி வருங்காலத்தில் விலை கூடுமே தவிரக் குறையாது என்று நாமாகவே முடிவெடுப்போம். அதை கருத்தில் கொண்டு, நாங்கள் இன்றைக்கே அந்தப் பொருளை வாங்கி விடுவோம். அதனால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். விற்பனை கூடினால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

சுருக்கமாக, பணம் ஓரிடத்தில் தேங்காமல் சுற்றிச் சுழல வேண்டும் என்பது முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை. அவ்வாறு சுற்றிச் சுழலும் பணம் எல்லோரிடமும் வந்து சேரும் என்று நாங்கள் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், பணம் இறுதியில் ஒரு சில பணக்காரர்களின் பைகளில் சென்று தேங்கி விடுகின்றது. சாதாரண மக்கள் ஓட்டாண்டிகளாக சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் செலவவழித்துக் கொண்டிருக்க வேண்டும். முதலாளிகள் அதை மூலதனமாக திரட்டிக் கொண்டிருப்பார்கள். இதற்குப் பெயர் தான்  முதலாளித்துவம்.

உசாத்துணை: 

பிற்குறிப்பு: பெரும்பாலான கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு முதலாளித்துவத்தை பற்றி எதுவும் தெரியாது. இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் ஒரு "பேராசிரியர்"(?) மார்க்சியத்தை ஏட்டுச் சுரைக்காய் என்று கேலி செய்யும் கட்டுரை ஒன்றை எழுதினார். (பார்க்க:பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு அதில் அவர் "பணம் சுற்றிச் சுழல வேண்டும்" என்பது கார்ல் மார்க்ஸின் தத்துவம் என்று கட்டுரை முழுக்க எழுதி இருந்தார். உண்மையில் அது ஒரு டச்சுப் பழமொழி. முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கை. அதை பொதுவுடைமை என்று திரித்துக் கூறுவது மக்களை முட்டாள்களாக்கும் செயல். (வாசிக்கவும்: கழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை? - ஒரு பொருளியல் குறிப்பு)

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Friday, March 20, 2015

வங்கி முதலாளியத்திற்கு எதிரான எழுச்சி! பிராங்பேர்ட் நகரம் எரிகின்றது!


ஜெர்மனி, பிராங்க்பெர்ட் நகரில் அமைந்துள்ள, ஐரோப்பிய மத்திய வங்கிக்கு (ECB) எதிரில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்தது. 20,000 க்கும் அதிகமான முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி இடம்பெற்றது. பொலிசாரின் கண்மூடித் தனமான தாக்குதலினால் பலர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக் காரர்கள், பதிலடியாக பல பொலிஸ் வாகனங்களை எரித்து நாசமாக்கியுள்ளனர். 


பிராங்பேர்ட் நகரில் நடந்த, முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம் தொடர்பான பின்னணித் தகவல்கள்:

"முதலாளித்துவம் கொல்லும்!"
ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) பிராங்பெர்ட் நகரில் அமைந்துள்ளது. மார்ச் 18 ம் தேதி, ECB பெரும் பொருட்செலவில் கட்டிய புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கவிருந்தது. கிரீஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினைகளில் தலையிடுவதில் ECB முக்கிய பங்குவகிக்கிறது. 

அதாவது, IMF மாதிரி, ஐரோப்பிய மத்திய வங்கியும் கடன் கொடுப்பது, வட்டி வீதம் தீர்மானிப்பது போன்ற பல பொருளாதாரத் திட்டங்களில் மேலாதிக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில், பொருளாதார பிரச்சினைகளினால் பாதிக்கப் பட்ட நாடுகளுக்கு கடன் கொடுத்து விட்டு, கடுமையான நிபந்தனைகள் விதிப்பது வழமை.

ஜெர்மனியில், "Blockupy" என்ற ஐக்கிய முன்னணி ஒன்று இயங்கிவருகிறது. ஜெர்மனியின் தீவிர இடதுசாரிக் கட்சிகள், அமைப்புகள் ஒன்று சேர்ந்து, Blockupy கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. புதிய கட்டட திறப்புவிழாவை இடையூறு செய்யும் வகையில், பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு Blockupy அறைகூவல் விடுத்திருந்தது. கடன்சுமையால் மக்கள் கஷ்டப் படுகையில் திறப்புவிழா கொண்டாடுவதில் அர்த்தமில்லை என்பது அவர்களின் வாதம்.

பெருமளவு மக்கள் கலந்து கொண்டஆர்ப்பாட்டம், இறுதியில் கலவரத்தில் முடிந்தது. முன்னூறுக்கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டார்கள். நூற்றுக்கணக்கான பொலிசாரும், ஆர்ப்பாட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர். பொலிஸ் வாகனங்கள் எரிக்கப் பட்டன. வங்கிகள் அடித்து நொறுக்கப் பட்டன. 

(Klasse gegen klasse) வர்க்கத்திற்கு எதிராக வர்க்கம் 

முகமூடி அணிந்த அனார்க்கிஸ்ட் இளைஞர்களின் குழு ஒன்று முதலாளித்துவ இலக்குகளை தாக்கும் வன்முறைகளில் இறங்கினார்கள். அவர்கள் இதற்கென்றே பயிற்சி பெற்றவர்கள் போன்று, குறுகிய நேரத்திற்குள் மில்லியன் யூரோக்கள் சேதம் உண்டாக்கி விட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக் காரர்கள், தெருக்களில் தடையரண்கள் போட்டு பொலிசாருடன் மோதினார்கள். ECB கட்டிடத்தை சுற்றி போடப்பட்ட தடையரண்களில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. பொலிசாரை நெருங்க விடாமல் தடுப்பதற்கு பல வகையான உத்திகளை பயன்படுத்தினார்கள். 

பொலிஸ் வாகனங்களை நோக்கி கற்கள் வீசப் பட்டன. வர்ணப் பூச்சுக் கலவைகள் விசிறியடிக்கப் பட்டன. இதனால் எழுந்த புகை மண்டலம் காரணமாக, நூற்றுக்கணக்கான பொலிஸ்காரர்கள் பின்வாங்கி ஓடினார்கள். பொலிசார் தமது சேவைக் காலத்தில், இது போன்றதொரு கலவரத்தை காணவில்லை என்று, பத்திரிகையாளர் மகாநாட்டில் பேசிய காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.