Showing posts with label வருமான வரி. Show all posts
Showing posts with label வருமான வரி. Show all posts

Sunday, March 26, 2017

லைக்கா தயாரிப்பில் ரஜனி நடித்த "150 வீடுகள்" - உண்மைக் கதை

அல்லிராஜா சுபாஸ்கரன்


லைக்கா ஈழத் தமிழருக்கு கட்டிக் கொடுத்தது 150 வீடுகள் மட்டுமே. ஆனால், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு கொடுத்தது இரண்டு மில்லியன் பவுன்ஸ். கடந்த வருடம் வரி கட்டாமல் பதுக்கிய பணம் இருபது மில்லியன் பவுன்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இலங்கை செல்வதாக வெளிவந்த தகவல், பலதரப் பட்ட வாதப் பிரதிவாதங்களையும், எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியதால், அந்தப் பயணத்தை இரத்து செய்வதாக ரஜனி அறிவித்திருந்தார்.

ரஜனியின் வருகை சம்பந்தமாக ஊடகங்களில் வெளியான தகவல் இது: 
//லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.//

வீடுக‌ள் க‌ட்டிக் கொடுப்ப‌து என்ப‌து ஒரு வியாபார‌ "போட்டி" அல்ல‌. அது முத‌லீட்டுக்கான அருமையான‌‌ வாய்ப்பு. ஒரு நாட்டில் போர் முடிந்த‌ பின்ன‌ர், அழிவில் இருந்து மீள‌க் க‌ட்டியெழுப்ப‌ முத‌லாளிக‌ளுக்கு கிடைக்கும் வாய்ப்புக‌ள். ஏற்க‌ன‌வே ஆப்கானிஸ்தான், ஈராக்கில் பெரிய‌ அள‌வில் ந‌ட‌ந்த‌து. அமெரிக்க‌ அர‌சே டென்ட‌ர் போட்டு யார் யாரெல்லாம் முத‌லிட‌லாம் என்று தெரிவு செய்த‌து. 

அங்கெல்லாம் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் மூலதன பலம் கிடையாது. அது அந்தளவு பெரிய நிறுவனம் அல்ல. ஆனால், இலங்கையில் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் பண பலம் உள்ளது. "இலவச" வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் பின்னணியில், எதிர்காலத்தில் ஏதோ ஒரு தொழிற்துறையில் முதலீடு செய்யும் நோக்கம் இருக்கலாம்.

லைக்கா நிறுவனம், ஐரோப்பாவில் வரி கட்டாமல் ஏமாற்றி, வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடித்த பணத்தில் தான், வவுனியாவில் 150 வீடுகள் கட்டப் பட்டன. உண்மையில் அந்த "தான தர்மம்" கூட, லைக்கா பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணத்தை விடக் குறைவு! 

முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு அல்லது கன்சவேர்ட்டிவ் கட்சிக்கான நிதியாக, £2.2 மில்லியன் பவுன்ஸ் "தானம்" செய்திருந்த விடயம் ஏற்கனவே அம்பலமானது. முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சனின் தேர்தல் செலவையும் லைக்கா பொறுப்பேற்றிருந்தது.

லைக்காவின் மொத்த வருடாந்த வருமானம் சுமார் 1.5 பில்லியன் பவுன்கள். பிரித்தானியாவில் வரி கட்டாமல் ஏமாற்றிய பணம், போர்த்துக்கலுக்கு சொந்தமான மாடேயிரா தீவில் உள்ள வங்கிகளில் இரகசியக் கணக்கில் வைப்பிலிடப் படுகின்றது. வருமான வரி மட்டுமல்ல, மதிப்புக் கூட்டு வரியும் (VAT) கட்டாமல் பெருந்தொகைப் பணம் பதுக்கப் படுகின்றது. இதற்கென இருபதுக்கும் குறையாத போலி நிறுவனங்கள் இயங்குகின்றன. சட்டவிரோத கருப்புப் பணத்தை தூய்மைப் படுத்துவதும், அதை இரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்குவது மட்டுமே இந்தப் போலி நிறுவனங்களின் வேலை.

லண்டன் தபால் நிலையங்களில் ஒவ்வொரு நாளும் கட்டுக் கட்டாக பண நோட்டுக்கள் அடங்கிய பார்சல்கள் அனுப்பப் படுவது கண்டுபிடிக்கப் பட்டது. அதை அடுத்து, பாரிஸ் நகரில் உள்ள லைக்கா கிளை அலுவலகம் கடந்த வருடம் பொலிஸ் சோதனைக்கு உள்ளானது. அங்கு 130,000 யூரோ தாள்களும், மேலதிகமாக வங்கியில் இருந்த 850,000 யூரோக்களும் பறிமுதல் செய்யப் பட்டன. பிரான்ஸில் பதினேழு மில்லியன் யூரோ வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் பிரெஞ்சுக் கிளை நிர்வாகி Alain Jochimek உட்பட ஒன்பது பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப் பட்டது.
(முழுமையான விபரங்களுக்கு இந்த இணைப்பில் வாசிக்கவும்:The French Connection: How Paris Police Closed In On Cameron’s Biggest Donor)

மேலும் இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன், ஐரோப்பிய தீவிர வலதுசாரி அரசியல்வாதிளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார். பாரிஸ் பொலிஸ் சோதனையில் பிடிபட்டு கம்பி எண்ணிய அலென் ஜோகிமிக் இஸ்ரேலிய அரசுடன் தொடர்புடைய யூத வலதுசாரி நிறுவனம் ஒன்றை  நடத்துகிறார். பிரிட்டனில், முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூன், முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் போன்றோர் கன்சவேர்ட்டிவ் கட்சியை சேர்ந்த வலதுசாரிகள். கன்சர்வேட்டிவ் கட்சி, ஈழப்போர் நடந்த காலத்தில் வெளிப்படையாகவே சிறிலங்கா அரசை ஆதரித்திருந்தது. 

தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் அகராதிப் படி, "லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு இனத் துரோகி!" இருப்பினும், ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் யாரும் லைக்காவின் கிரிமினல் வேலைகளை கண்டுகொள்வதில்லை. அது அவர்களது வர்க்கக் குணாம்சம். அவர்கள் யாரும் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் அல்ல, மாறாக முதலாளித்துவ ஆதரவு வலதுசாரிகள். 

//"லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு "ஈழத் தமிழர்". "தனது செலவில்(?)" தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார்..."// என்று போலித் தமிழ்த்தேசியவாதிகள் லைக்காவின் கிரிமினல் குற்றங்களுக்கு துணைபோகின்றனர். இனம் இனத்தோடு தான் சேரும். வர்க்கம் வர்க்கத்தோடு தான் சேரும். பணம் பணத்தோடு சேரும்.

எதிர்பார்த்த‌ மாதிரியே அர‌சிய‌ல் நீக்க‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள், ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ர‌ஜ‌னிகாந்துக்கு எதிராக‌வே க‌ம்பு சுற்றுகிறார்கள். "லைக்கா மாமா ந‌ல்ல‌வ‌ராம், ர‌ஜ‌னி மாமா கெட்ட‌வ‌ராம்!" என்று குழ‌ந்தை - ஊட‌க‌விய‌லாள‌ர் ஒருவ‌ர் சிணுங்குகிறார். இவர் கஜேந்திரகுமார் - விக்னேஸ்வரன் தலைமையில் நம்பிக்கை வைத்திருப்பவர். அவரைப் போன்றே தீவிர வலதுசாரிகளான த.தே.ம.மு. கட்சி ஆர்வலர்கள், ஆதரவாளர்கள் பிரபல நடிகரான ரஜனிகாந்திற்கு எதிராக கம்பு சுற்றுவதன் மூலம், லைக்காவின் குற்றங்களை மறைப்பதற்கு உதவுகிறார்கள்.

திரைப்ப‌ட‌ த‌யாரிப்பாள‌ரான‌ லைக்கா நிறுவ‌ன‌ம் நினைத்தால் ர‌ஜ‌னியை ம‌ட்டும‌ல்ல‌, ந‌மீதாவையும் கூட்டி வ‌ந்து விள‌ம்ப‌ர‌ம் தேட‌ முடியும். எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நோவ‌து மாதிரி, முத‌லீட்டாள‌ர் இருக்க‌ கூத்தாடிக‌ளை எதிர்க்கிறார்க‌ள். இது அவ‌ர்க‌ள‌து முத‌லாளிக‌ளுக்கு ஆத‌ர‌வான‌ வ‌ர்க்க‌க் குணாம்ச‌த்தின் வெளிப்பாடு.

இந்த விடயத்தில் ரஜனிகாந்த் நல்லவர் என்று சொல்ல வரவில்லை. அவருக்கும் சில அரசியல் ஆதாயங்கள் இருக்கலாம். தனக்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தே தனது இலங்கைப் பயணம் தொடர்பான தகவலை வெளிவிட்டிருக்கலாம். ஒரு காலமும் அரசியல் பேசாத ரஜனி, பயணத்தை ரத்து செய்வது தொடர்பாக விளக்கமளித்த கடிதத்தில் அரசியல் பேசி இருக்கிறார்.

ஏற்கனவே, ரஜனிகாந்த் தன்னை இந்துத்துவா சார்பானவராக காட்டி வந்துள்ளார். இந்தக் கடிதத்திலும் புலிகளின் ஈழ விடுதலைப் போரை "புனிதப் போர்" என்று குறிப்பிடுள்ளார். இவ்வளவு காலமும் ஒன்றில் கிறிஸ்தவ, அல்லது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மட்டுமே புனிதப் போர் என்ற கருதுகோளை கொண்டிருந்தனர். தற்போது இந்து மத அடிப்படைவாதிகள் அதைப் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். புலிகளின் ஈழ விடுதலைப் போர், இந்துத்துவா வாதிகளின் கண்களுக்கு புனிதப் போராகத் தெரிகின்றது.

லைக்கா இல‌ங்கைக்கு அழைப்ப‌தாக சொன்ன‌தும், அத‌ற்கு எழுந்த‌ எதிர்ப்பும், அத‌ன் விளைவாக‌ ப‌ய‌ண‌த்தை இர‌த்து செய்த‌தும் முன்கூட்டியே திட்ட‌மிட‌ப் ப‌ட்ட‌ நாட‌க‌மாக‌ இருக்க‌லாம். இவ‌ர்க‌ள் எல்லோரையும் பாஜ‌க‌ பின்னால் இருந்து ஆட்டுவித்திருக்கிற‌து.

ர‌ஜ‌னிகாந்தின் க‌டித‌த்தில் பாஜ‌க‌ அர‌சிய‌லே தொக்கி நிற்கிறது. அத்துட‌ன் ர‌ஜ‌னியின் வ‌ருகையை எதிர்ப்ப‌தாக‌ காட்டிக் கொண்ட‌ ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும், ம‌றைமுக‌மான‌ இந்திய‌ அடிவ‌ருடிக‌ள் தான். அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே, இந்து ம‌த‌வெறி அமைப்பான‌, சிவ‌சேனையின் வ‌ருகையை வ‌ர‌வேற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

Saturday, January 31, 2015

மைத்திரி ஆதரவாளர்களே, மக்களின் கோரிக்கைகளுக்காகவும் போராடுங்களேன்!


இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, பல அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளது. இதனால், சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலர் இதனை "பொருட்களின் விலைகுறைப்பு" (விற்பனை விலை) என்று தான் புரிந்து கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இவ்வளவு காலமும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதும், அரசு அறவிட்டு வந்த வரிகள் தான் குறைக்கப் பட்டுள்ளன!

இதனால், இந்த வருடம் அரசுக்கு வர வேண்டிய, 92.4 பில்லியன் வருமானம் இழக்கப் படும். அதன் காரணமாக, பட்ஜெட்டில் துண்டு விழும் தொகையை ஈடுகட்டுவதற்காக, வேறொரு இடத்தில் இருந்து வருமானத்தை எடுக்க வேண்டி இருக்கும். அது எந்த இடம் என்பதையும் மைத்திரி அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.

பணக்காரர்களின் சூதாட்டவிடுதிகளான, காசினோக்கள் பெருந்தொகை ஒன்றை, அதாவது ஒரு பில்லியன் ரூபாய்கள் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் ஒரு தடவை தானாம். இலட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட, விளையாட்டு சேனல்கள் கூட ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும். இதனால், மகிந்த ராஜபக்சவின் புதல்வனுக்கு சொந்தமான சேனல் ஒன்றும் பாதிக்கப் படும். 

அதே மாதிரி, சாட்டலைட் தொலைக்காட்சிகளும் ஒரு தடவை ஒரு பில்லியன் ரூபாய் கட்ட வேண்டும். எனக்குத் தெரிந்த வரையில், இலங்கையில் பெரும்பாலும் தமிழர்கள் தான் சாட்டலைட் தொலைக்காட்சி சேனல்களை அதிகம் பார்வையிடுகின்றனர். மேலும், மொபைல் தொலைபேசி நிறுவனங்களும் ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும்.

இது ஒரு வகையில் "ராபின் ஹூட் வரி" என்று முதலாளித்துவ ஊடகங்களே தெரிவிக்கின்றன. அதாவது, மைத்திரி அரசு பணக்காரர்களிடம் வரி அறவிட்டு, ஏழைகளுக்கு உதவுகிறது. உள்ளூர் கமக்காரர்களுக்கு உதவும் வகையில், அவர்களிடம் இருந்து வாங்கும் பாலுக்கான விலை பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், உள்ளூர் விவசாயிகளும் ஊக்குவிக்கப் படுவர் என்று நினைத்துக் கொள்ளலாம்.

இங்கே எழும் கேள்வி என்னவெனில், இந்த "ராபின் ஹூட் வரி" இன்னும் எத்தனை வருடங்களுக்கு நடைமுறைப் படுத்தப் படும்? காஸினோக்கள், சாட்டலைட், மொபைல் நிறுவனங்கள் மீதான ஒரு பில்லியன் வரி, ஒரு தடவை மாத்திரமே அறவிடப்படும் என்பது சந்தேகத்தை எழுப்புகின்றது. ஆகையினால், அடுத்த வருடத்தில் இருந்து, பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக, பொருட்களின் விலைகள் மீண்டும் ஏற்றப் படலாம்.

பிரேசில் நாட்டில் வரிகளற்ற சமுதாயம் ஒன்றிற்காக, அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர். உலகில் எல்லா நாடுகளிலும், குறைந்தளவு வருமானம் ஈட்டுவோர் தான், அதிகளவு வரி கட்டி வருகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும்.

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கான வரிகளை குறைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரசு இனிமேல் உழைக்கும் வர்க்க மக்களிடம் இருந்து வரியே அறவிடக் கூடாது என்று கோரிக்கை வைக்க வேண்டும்.

பாவனைப் பொருட்கள் மீதான வரிகள், அநேகமாக இடைக்காலத்தில் வந்த மதிப்புக் கூட்டு வரி (VAT) ஆக இருக்க வேண்டும். பொதுவாக, வர்த்தகர்கள் தான் அதனை பாவனையாளர்களிடம் அறவிட்டு, அரசாங்கத்திற்கு கட்டி வருகின்றனர். இதில் நடக்கும் முறைகேடுகள் காரணமாக, வரிப் பணம் ஒழுங்காக அரசுக்கு போய்ச் சேர்வதில்லை.

இடையில் உள்ள வர்த்தகர்கள் விழுங்கி ஏப்பம் விடும் வரியை இரத்து செய்வதால், அரசுக்கு என்ன குறை வந்து விடப் போகின்றது? இதனால், பொது மக்களுக்கு தான் அதிக நன்மை உண்டாகும். பாவனைப் பொருட்களின் விலை நிரந்தரமாக குறையும்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு வோட்டுப் போட்ட தமிழ் வாக்காளர்கள், மைத்திரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தமிழ் நடுத்தர வர்க்கத்தினர், இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசியவாத தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் "இது நமது அரசாங்கம்" என்று கூறியுள்ளார். "நமது அரசாங்கம்" என்றால், நமது மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமல்லவா?

**********

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடந்த அதே காலத்தில் தான் கிரீசிலும் பொதுத் தேர்தல் நடந்தது. கிரேக்க நாட்டில் பதவியேற்றுள்ள, சீரிசா எனும் இடதுசாரிக் கட்சி, நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பின்வரும் திட்டங்களை செயற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் மைத்திரி அரசும், மக்களின் நன்மை கருதி அதே மாதிரியான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று, அவரை ஆதரித்து ஓட்டுப் போட்ட தமிழ் மக்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என்று நம்புவோமாக. 

Saturday, January 24, 2015

தாமஸ் பிக்கெட்டி, யார் இவர்?


தாமஸ் பிக்கெட்டி. யார் இவர்? பிரான்ஸ் நாட்டின் பொருளியல் அறிஞர். அவர் எழுதிய 21 ம் நூற்றாண்டின் மூலதனம் எனும் நூல், 27 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அவர் செல்லுமிடமெங்கும் ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு உரிய வரவேற்புக் கிடைக்கிறது. நெதர்லாந்து அரசாங்கம் அவரை அழைத்து பாராளுமன்றத்தில் பேச வைக்கிறது. ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் சொற்பொழிவாற்றிய மண்டபம் ஜனத்திரளால் நிறைந்து காணப் பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

 21 ம் நூற்றாண்டின் மூலதனம் நூல், கார்ல் மார்க்ஸ் எழுதிய காலத்தால் அழியாத மூலதனம் நூலை நினைவுபடுத்தினாலும், தாமஸ் பிக்கெட்டி ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. அவர் இடதுசாரியோ, அல்லது வலதுசாரியோ அல்ல. ஆனால், இடதுசாரிகள் அவரைக் கொண்டாடினார்கள். வலதுசாரிகள் அவரை கௌரவித்தார்கள். இத்தனைக்கும் காரணம், பணக்கார மேற்கத்திய நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதை, ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

நெதர்லாந்து தொலைக்காட்சியில், பொருளாதாரம் சம்பந்தமான முற்போக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் Tegenlicht, தாமஸ் பிக்கெட்டியை பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அதில் அவர் தெரிவித்த சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தாமஸ் பிக்கெட்டி செல்லுமிடமெங்கும், முற்போக்கான வரி அறவிடப் பட வேண்டும் என்று கோரி வருகின்றார். அது என்ன முற்போக்கு வரி? இன்றைக்கும் பெரும்பாலான நாடுகளில், அரசுகள் வருமான வரி அறவிட்டு வருகின்றன. உழைப்பவர்கள் எல்லோரும், தாம் பெற்ற ஊதியத்திற்கு செலுத்த வேண்டிய வரி, இனிமேல் தேவையில்லை. ஏனென்றால் அது வறுமையை அதிகரிக்கின்றது.

அதற்குப் பதிலாக, சொத்து வரி அதிகரிக்கப் பட வேண்டும். சொத்து என்பது பணக்காரர்களின் அசையும், அசையா சொத்துக்கள் மட்டுமல்ல. பெரும் நிறுவனங்களின் மூலதன திரட்சியும் சொத்து தான். அரசாங்கம் அவற்றிற்கு மிகக் குறைந்த அளவு வரி தான் அறவிட்டு வருகின்றது.

வேலை செய்யும் எல்லோரும் கட்டும் வருமான வரியும், பணக்காரர்களின் சொத்துக்களுக்கான மிகக் குறைந்தளவு வரியும் தான் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை அதிகரிக்க வைக்கிறது. பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மென்மேலும் ஏழை ஆகிறான். 

நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், மீண்டும் ஒரு புரட்சி வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆகையினால், அரசாங்கங்கள் உடனடியாக முற்போக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். உழைப்பவர்கள் மீதான வருமான வரியை நிறுத்தி விட்டு, சொத்துக்கள் மீதான கூடுதல் வரி அறவிடப் பட வேண்டும்.

"பிரெஞ்சுப் புரட்சி மாதிரி ஒரு வன்முறைப் புரட்சியை எதிர்பார்க்கிறீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு பிக்கெட்டி அளித்த பதில்: 
"இன்று உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்துள்ள மக்கள் எழுச்சியும் புரட்சியின் ஒரு கட்டம் தான். புரட்சி என்பது என்ன? சிலநேரம் மாற்றத்திற்கு வன்முறை அவசியம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது வன்முறையற்ற பரிணாம வளர்ச்சிக் கட்டமாகவும் இருக்கலாம். வன்முறை பிரயோகிக்கப் படும் புரட்சி வெற்றி பெற்றாலும், அடுத்த கட்டம் என்னவென்பதை பற்றி சிந்திக்க வேண்டும். சமூகத்தை மாற்றியமைப்பதற்கான திட்டம் என்ன? ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை தக்க வைத்திருப்பது தான் முக்கியமானது.

"கம்யூனிசம் தோற்றுப் போன சித்தாந்தம்..." என்று இப்போதும் அறியாமை காரணமாக சொல்லித் திரிபவர்கள், "முதலாளித்துவம் வெற்றி அடைந்த சித்தாந்தம்" என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். முதலாளித்துவத்தின் லிபரல் கொள்கை தோற்றுப் போனதால், பிற்காலத்தில் நவ- லிபரலிச கொள்கை வந்தது. Trickle down economy எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்றார்கள்.

அதாவது, நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வது மாதிரி, பணக்காரர்களை வாழவைத்தால் ஏழைகளுக்கும் நன்மை கிடைக்கும் என்ற தத்துவம். ஆனால், பல தசாப்தங்களுக்குப் பின்னரும், பணக்காரன் மேலும் பணக்காரனாவதும், ஏழை மேலும் ஏழையாவதும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. 

Trickle down economy ஆல் நன்மை அடைந்தவர்கள் பணக்காரர்கள் மட்டுமே. இதை நாங்கள் ஏன் முதலாளித்துவத்தின் தோல்வி என்று சொல்லிக் கொள்வதில்லை? உண்மையில் முதலாளித்துவம் தோல்வியின் விளிம்பில் நின்ற படியால் தான், தாமஸ் பிக்கெட்டியை கௌரவிக்கின்றது.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு கீழே. தாமஸ் பிக்கெட்டி ஆங்கிலத்தில் பேசுவதால், டச்சு மொழி தெரியாதவர்களும் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும்.



இது தொடர்பான முன்னைய பதிவு:

Wednesday, November 26, 2008

அதிகம் சம்பாதிப்பது தேச நலனுக்கு கேடாகலாம்


"அதிகம் படித்தல் = அதிகம் சம்பாதித்தல்" மத்தியதர வர்க்க குடும்ப பெற்றோர்களால், தம் பிள்ளைகளை சமூகப்-பொருளாதார ஓட்டப்போட்டியில் முன்னுக்கு வர பயிற்றுவிக்கும் மந்திரம் அது. அரசியல் பொருளாதார கற்பிதங்கள் பலருக்கு இரத்தத்தோடு ஊறி விட்ட ஒன்று. அதிலும் குறிப்பாக என்பதுகளுக்கு பின்னர் பிள்ளை வளர்ப்பென்பது, "தட்சரிசம்" (அல்லது "றீகனிசம்") என்ற பொருளாதார கொள்கைகளுக்குள் உட்பட்டதென்பது அவர்களுக்கே தெரியாது. 1979 ல் பிரித்தானிய பிரதமராகிய மார்கிரட் தட்சர், 1980 ல் அமெரிக்க ஜனாதிபதியாகிய ரொனால்ட் றீகன், ஆகியோர் எமது காலத்து உலகப் பொருளாதார கட்டமைப்பை அடியோடு மாற்றி விட்டு, அல்லது நாசமாக்கி விட்டு, மறைந்து விட்டனர்.

அது என்ன "தட்சரிசம்"? சுருக்கமாக சொன்னால், பணக்காரர்கள் குறைந்த வரி கட்ட வேண்டும்.(ஏழைகள் அதிக வரி கட்ட வேண்டும்). பட்டப் படிப்புகளை முடித்து விட்டு உத்தியோகம் பார்ப்பவர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். (படிப்பறிவு குறைந்த தொழிலாளர்கள் குறைந்தளவு சம்பளம் எடுக்க வேண்டும்.) இவ்வாறு சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வு, மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசமாக இருந்தால் தான், சமூகப் படிநிலையில் கீழ்நிலையில் இருக்கும் மக்கள், வசதியாக வாழ்வதற்காக போட்டி போட்டு, உயர்ந்த இடத்திற்கு வர முயற்சிப்பார்கள். (போட்டியில் தோற்பவர்கள் இழக்கும் தொகை முதலாளிகளின் கையில் லாபமாகப் போய்ச் சேருவது வேறு கதை.) அது சரி, அதிகம் சம்பாதிக்கும், குறைவாக வரி கட்டும், பணக்காரர்கள் எப்படி பொருளாதாரத்தை பெருக்குவார்கள்? அதிகம் சம்பாதிப்பதால் பெருமளவு பணத்தை மிச்சம் பிடித்து அதனை பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள்(அப்படி செய்யாதவர்களையும் செய்ய வைக்க ஊக்குவிக்கப்படும்). இந்த வசதிபடைத்த மத்தியதர வர்க்கம் வங்கிகளில் வைப்பிலிடும் சேமிப்பு பணத்தையும், வங்கிகள் பின்னர் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும். ஆமாம், இது தானே நமது நாட்டிலும் நடக்கிறது? தட்சரிசம் அவ்வளவு தூரத்திற்கு சர்வதேச சித்தாந்தமாகி விட்டது.

அப்போது சேமிப்பது நல்ல காரியமாக பார்க்கப்பட்ட காலம் அது. இப்போது காலம் மாறிவிட்டது. அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை, பொருளாதாரக் குதிரை இதற்கு மேல் இழுக்க முடியாது, என்று படுத்து விட்டது. தேசம் மீண்டும் பொருளாதார வளர்ச்சியை காண என்ன செய்யலாம்? என்று சர்வதேச அரசியல் தலைவர்கள் மண்டையைப் போட்டு குடைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்களுக்கு தெரியும் ஒரே வழி, மக்கள் பணத்தை சேமிக்காமல், தாராளமாக செலவு பண்ண வைப்பது. அவர்களது ஒரே நோக்கம், பொது மக்களை, அதாவது ஏழை மக்களை, அதாவது உங்களையும் என்னையும் போன்றவர்களை, செலவு பண்ண வைப்பது எப்படி? பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதை விட கடினமான வேலையா இது?

புதிய பொருளாதார கொள்கை காரணமாக, சமூகத்தில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி சிறிது குறையலாம். அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்ட ஒபாமா, அதனை வீட்டுக் கடனை கட்ட முடியாதவர்களுக்கு உதவும் வகையில், பணக்காரர்கள் அதிக வரி கட்ட வைக்க வேண்டுமென்கிறார். பிரிட்டன் பிரதமர் உபரி மதிப்பு வரியை(VAT) குறைக்க வேண்டும், அதனை பணக்காரரிடம் இருந்து அறவிடும் வரி ஈடுகட்ட வேண்டும் என்கிறார். நெதர்லாந்து நிதி அமைச்சர் அதிகம் சம்பாதிப்பவர்களும், குறைவாக சம்பாதிப்பவர்களும் ஒரே அளவு வரி கட்ட வேண்டும் என்று, வரி அமைப்பையே மாற்றுகின்றார்.

அப்பாடா, இப்போதாவது (பொது மக்கள் நினைப்பதற்கு மாறாக) அதிகம் சம்பாதிப்பவர்கள், அதிக வரி கட்டுவதில்லை என்ற உண்மையை ஒத்துக் கொண்டார்களே! அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், இருபதாம் நூற்றாண்டு வரையில் பணக்காரர்கள் அரசாங்கத்திற்கு வரியே கட்டவில்லை. அப்பாவி உழைக்கும் மக்கள் தான் வரி கட்டுவதை தமது கடமை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது கூட நிலைமை ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. உபரி மதிப்பு வரி(VAT) கட்டுவது, நுகர்வோரான நீங்களும், நானும் தான். பொருட்களை அல்லது சேவைகளை உற்பத்தி செய்யும் அல்லது விற்பனை செய்யும் வர்த்தக ஸ்தாபனங்கள் இந்த வரியை கட்டுவதில்லை. அதிலும் எம்மிடம் அறவிடும் வரியை அரசாங்கத்திற்கு கொடுப்பதாக சொல்லி, சிலர் தாமே பதுக்குகிறார்கள். தொழில் புரிபவர்கள் மட்டுமல்ல, சிறு வணிகர்கள் கூட வருமான வரி கட்டுகிறார்கள். அதேபோல, அதிக லாபம் சம்பாதிக்கும் பெரிய கம்பனிகள், அதிகளவு வருமான வரி கட்டுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. மட்டுப்படுத்தப்பட்ட(LTD) அல்லது மட்டுப்படுத்தப்படாத (Unlimited) பெரிய கம்பெனிகளுக்கு வருமான வரி கிடையாது. (கார்பரேட் வரி மட்டும் உண்டு) .

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், உலகம் முழுக்க பாதிக்கப்பட்ட போது, பெரிய நிறுவனங்களின் மேல்மட்ட நிர்வாகிகள் வருடாவருடம் பெற்றுக்கொள்ளும், மில்லியன் டாலர்கள் போனஸ் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. திவாலான கம்பெனி நிர்வாகிகள் கூட லட்சக்கணக்கில் சம்பளம், கோடிக்கணக்கில் போனஸ், என்று வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தமை, ரோம் நகரம் எரிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனை நினைவூட்டவில்லையா? நெருக்கடிக்கு பிறகு தேசிய பொருளாதாரத்தை தமது கைகளில் எடுத்த அரசியல் தலைவர்கள் "இனிமேல் கை நீட்டி போனஸ் வாங்கினால், கையை வெட்டி விடுவேன்..." என்று சொல்லாத குறை மட்டும் தான். ஒரு காலத்தில், "அவன் கஷ்டப்பட்டு அதிகம் உழைக்கிறான், அதனால் அதிகம் சம்பாதிக்கிறான்." என்று இந்த கோடி டாலர் பரிசுகளை நியாயப்படுத்திக் கொண்டிருந்த அதே மக்கள், இன்று அப்படி சம்பாதிப்பது பாவகாரியம் என்று தூற்றுகிறார்கள். அரசியல் தலைவர்களும் இது தான் தருணம் என்று, கோடிக்கணக்கான லாபப்பணத்தை போனஸ் என்று அள்ளிக் கொடுத்து ஒரு சிலரிடம் மட்டும் பணத்தை குவிக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டு, அந்தப் பணத்தை கம்பெனி வளர்ச்சியில் முதலீடு செய்யலாமே என்று கறாராக சொல்லி விட்டார்கள்.

தட்சரிசம் தோன்றிய பிரித்தானியாவில், அவரது பழமைவாத கட்சியே புதிய பொருளாதார கொள்கை பற்றி கடும் விமரிசனங்களை முன்வைக்க முடியாமல் திண்டாடுகின்றது. பணக்காரர் நலன்களை மட்டுமே கவனிப்பதாக கருதி (உண்மையும் அது தான்), பெரும்பான்மை மக்கள் தமது கட்சிக்கு எதிராக திரும்பி விடுவார்கள் என்ற ஐயம் அதற்கு காரணம். இருப்பினும் பிரபல வலதுசாரி பத்திரிகைகள் சும்மா இருக்கவில்லை. "ராபின் ஹூட் பட்ஜெட்" என்று ஏளனம் செய்கின்றன. ஒரு நாளிதழ் பிரதமர் பிரௌன் செங்கொடி ஏந்தி இருப்பதாக கார்ட்டூன் போட்டது.

தற்போது "அதிகம் சம்பாதிப்பவர்களிடம் அதிக வரி வசூலித்து, குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு வரிச் சலுகை கொடுப்பதன்" நோக்கத்தை, அவர்கள் சோஷலிசத்தை கொண்டு வரப் போவதாக, யாரும் பிழையாக புரிந்து கொள்ளக் கூடாது. இல்லை, ஏழை ஆடுகள் நனைவதற்காக முதலாளித்துவ ஓநாய்கள் அழுகின்றன. ஏழை மக்கள், அல்லது குறைவாக சம்பாதிப்பவர்கள் தான், அதிகமாக செலவழிக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்கள் தமக்கு கிடைக்கும் சொற்ப தொகையை, எதையாவது வாங்குவதற்கு செலவழிக்கிறார்கள், அல்லது அப்படி செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஓரளவு நல்ல சம்பளம் எடுப்பவர்கள் கூட, தமது ஆடம்பர தேவைகளுக்காக வாகனம், வீடு, வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்று வாங்கிக் குவிக்கிறார்கள் இல்லையா? அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து, இன்னும் அதிகம் செலவழிக்க வைப்பது தான், இப்போது வரும் புதிய பொருளாதாரக் கொள்கையின் நோக்கம்.

அனைவரது கவனமும் நிதி நெருக்கடி மீது இருந்த நாட்களில், ஒரு ஐரோப்பிய நாளிதழ் இவ்வாறு எழுதியது, "பொருளாதாரப் நெருக்கடியால் வேலை இழந்தவர்கள், வியாபாரத்தில் நட்டமடைந்தவர்கள், ஆகியோர் தமது கவலையை தீர்க்க மதுவை தஞ்சமடைந்து வருவதால், மது பான விற்பனை அதிகரிக்க வாய்ப்புண்டு." ஆகவே பெருங் குடிமக்களே, புகைப்பிரியர்களே, போதைக்கு அடிமையானவர்களே, நீங்கள் தேசிய பொருளாதாரத்தை வளர்க்கும் நாட்டுப்பற்றாளர்கள், என்று இனிமேல் பெருமையாக கூறிக் கொள்ளலாம்.

உசாத்துணை:
UK PM taxes rich to help fund economic recovery
Darling Aka Robin Hood
_____________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.