Saturday, December 24, 2011

எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"



[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 10]
(பத்தாம் பாகம்)



இன்றைக்கு பல்வேறு ஐரோப்பிய மொழிகளைப் பேசும் இனங்கள், "இயேசு கிறிஸ்து நம்மவரே" என்று நம்புகின்றன. மக்களின் மத நம்பிக்கையை, தமது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தும் இனத் தேசியவாதிகள் அவ்வாறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தேசியவாத அரசியலையும், இரண்டாயிரம் வருடங்கள் பழமையான மதத்தையும் இணைப்பதால் பல வேடிக்கை வினோதங்கள் அரங்கேறுகின்றன.

"முருகன் தமிழ்க் கடவுள்" என்று, தமிழர்கள் சொந்தம் கொண்டாடுவதும் அது போன்ற நகைச்சுவை தான். ஏனெனில், மறு பக்கத்தில் சிங்களவர்களும், "முருகன் ஒரு சிங்களக் கடவுள்" என்று சொந்தம் கொண்டாடுவதை இவர்கள் அறியவில்லை. உண்மையில், முருகன் தமிழனுமில்லை, சிங்களவனுமில்லை. பழங்குடியின மக்களால் வழிபடப் பட்ட, இன்னும் சொல்லப் போனால், அரேபிய தீபகற்பம் வரை மதிக்கப் பட்ட, உலகிற் சிறந்த அறிவுஜீவி தான் முருகக் கடவுள். மனித நாகரீகம் வளராத காலத்தில் வாழ்ந்த ஞானியை, மக்கள் ஒரு தெய்வமாக வழிபட விரும்பியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. என்றைக்கு ஒரு நாகரீகமடைந்த அறிவு சார் சமுதாயம், வீரப் பிரதாபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததோ, அன்றைக்கே முருகனின் பெருமைகளும் மறைந்து போயின.

இன அடிப்படையிலான கலாச்சார ஆதிக்கம் போன்றது தான், ஒரு மதத்தின் ஆதிக்கமும். வட இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறிய, இந்து ஆரியர்கள், தாம் வென்ற நாடுகளின் அரசுகளை மட்டுமல்ல, கலாச்சாரங்களையும் அழித்தார்கள். இராமாயணக் காலம் எப்போது என்று தெரியவில்லை. இருப்பினும், இலங்கையின் உன்னத நாகரீகம் வடக்கே இருந்து படையெடுத்து வந்த இராமனால் அழிக்கப் பட்டதை இராமாயணமே தெரிவிக்கின்றது. அன்றில் இருந்து, இலங்கையில் இந்து மத (ஆரிய இன) ஆதிக்க கலாச்சாரம் வலுப் பெற்றது. இலங்கையில் இன்றைக்கு வாழும், தமிழர்களும், சிங்களவர்களும், இந்து-ஆரிய கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர்.

"சிங்களவர்கள் ஆரியர்கள் அல்ல." என்ற உண்மையை சிங்கள புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போன்று, "தமிழர்கள் இந்துக்கள் அல்ல." என்பதை தமிழ் புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆரிய மயப்பட்ட தமிழர்களும், இந்துக் கலாச்சாரத்தை பின்பற்றும் சிங்களவர்களும், தமது பூர்வீகத்தை கங்கைக் கரையில் (வட இந்தியாவில்) தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான், இந்தக் கட்டுரைகளில் சொல்லப்படும் தகவல்கள் புதிதாக தோன்றுகின்றன. தமிழர்கள் தமது தொன்மையான நாகரீகத்தை மறந்து போனதற்கு காரணம், பிற்காலத்தில் வந்த இந்து நாகரீகம் அவர்களை சிந்தனைப் போக்கை மாற்றியது.

சிங்களவர்கள் என்ற புதிய மொழி பேசும் இனம் தோன்றுவதற்கு பௌத்த மதம் காரணமாக இருந்தாலும், இந்து மதக் கலாச்சாரம் முழுவதுமாக மறையவில்லை. இலங்கையில் பௌத்த மதம் காலூன்றிய பின்னரும், விஷ்ணுவை, சிவனை வழிபட்ட "சிங்கள" மன்னர்களின் கதைகள், மகாவம்சத்தில் கூறப் பட்டுள்ளன. சோழத் தமிழ் மன்னனான எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு கதிர்காமக் கந்தனிடம் ஆசி பெற்றுள்ளான். போரில் தான் வென்றால், கதிர்காமத்தில் முருகனுக்கு பெரியதொரு கோயில் கட்டித் தருவதாக துட்டகைமுனு வாக்களித்துள்ளான். அதே போன்று, "கதிர்காமக் கந்ததனின் அருளால்" போரில் எல்லாளனை தோற்கடித்த துட்டகைமுனு, வாக்களித்த படியே கதிர்காமக் கந்தனுக்கு ஆலயம் கட்டிக் கொடுத்துள்ளான். (பார்க்கவும்:
A Short History of kataragama and Theivanaiamman Thevasthanam)

இலங்கையில், முதன் முதலாக பௌத்த மதத்தை தழுவிய தேவநம்பிய தீசன் முதல், ஐந்தாம் மகிந்தன் காலம் வரையில், கதிர்காமம் உள்நாட்டு மன்னர்களினால் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. இந்த மன்னர்களை எல்லாம் சிங்களவர்கள் என்றோ, அல்லது தமிழர்கள் என்றோ முத்திரை குத்துவது, எமது அறியாமையின் பாற் பட்டது. மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தான், சிங்களவர், தமிழர் என்ற மொழிப் பிரிவினை தோன்றியது. இன்றைக்கும், யாழ்ப்பாண வட்டார மொழியாக பேசப்படும் தமிழுக்கும், சிங்கள பேச்சு மொழிக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகள் அதனை உறுதிப் படுத்துகின்றன.

துட்டகைமுனு போன்ற மன்னர்கள் சிங்களவர்கள் என்று, மகாவம்சத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப் படவில்லை. சிங்கள- தமிழ் இனவாதிகள் தான், தமது அரசியல் லாபங்களுக்காக அவ்வாறு பிரச்சாரம் செய்கின்றனர். "எல்லாளன் நீதி நெறி தவறாது ஆட்சி புரிந்த மன்னன்" என்று மகாவம்சம் எல்லாளனின் நற்செயல்களை புகழ்ந்து எழுதியுள்ளது. அதே நேரம், எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பளனாகவும் (சோழ ஏகாதிபத்தியம்) சித்தரிக்கப் படுகின்றான். (பிற்கால மொழிபெயர்ப்பாளர்கள், வேண்டுமென்றே சோழர்களை, தமிழர்கள் என்று மாற்றி எழுதியுள்ளார்கள்.) ஆகவே, அந்நியர்களிடம் இருந்து நாட்டை விடுதலை செய்வதற்காக, துட்டகைமுனுவிற்கு கதிர்காமக் கந்தன் உதவி புரிந்ததாகத் தான் மகாவம்ச வரலாறு கூற விளைகின்றது. எல்லாள-துட்டகைமுனு யுத்தத்தை, சிங்கள- தமிழ் யுத்தமாகக் கருதும் அடிப்படையே தவறானது.

இன்றைக்கு, சிங்கள இனவாதிகள் துட்டகைமுனுவை தமது தேசிய நாயகனாக கொண்டாடுகின்றனர். அதே போன்று, தமிழினவாதிகள் எல்லாளனை தமது நாயகனாக மகிமைப் படுத்துகின்றனர். இரண்டு தரப்பினரும் தமது அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்றை திரிக்கின்றனர். அன்று நடந்ததை சிங்கள-தமிழ் யுத்தமாகவோ, அல்லது பௌத்த-இந்து முரண்பாடாகவோ பார்ப்பது தவறு. கதிர்காமம், அன்றில் இருந்து இன்று வரையில், சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான புண்ணியஸ்தலமாகும். முஸ்லிம்களும் கதிர்காமம் சென்று வழிபடுவது வியப்பை உண்டாக்கலாம். (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.) இன்று அங்கே, "இந்துக் கதிர்காமம்", "பௌத்த கதிர்காமம்", "இஸ்லாமிய கதிர்காமம்" என்று மூன்று பிரிவுகள் காணப்படுகின்றன. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஒரே இனமாக வாழ்ந்த மக்களை, பிற்காலத்தில் வந்த மதங்கள் மூன்றாகப் பிரித்து வைத்துள்ளன. (ம்ஹ்ம்... மனிதன் மாறி விட்டான்... மதத்தில் ஏறி விட்டான்...)

முருக வழிபாடு, இலங்கையில் இருந்தே இந்தியாவுக்கு பரவி இருக்க வேண்டும். இலங்கையின் பூர்வீக மக்களான வேடுவர்களால் கூட, முருகன் அறிவின் கடவுளாக போற்றப் படுவது கவனத்திற்கு உரியது. ஏனெனில், பொதுவாக, "நாகரீகமடையாத காட்டுமிராண்டி கால பழங்குடி சமுதாயங்கள்", தமது கடவுளை வீர சூர பராக்கிரமசாலிகளாகவே சித்தரிப்பார்கள். முருகனின் விடயத்தில் அது தலைகீழாக நடந்துள்ளது. ஆதிகாலம் தொடக்கம் கதிர்காமத்தில் முருகனை பூஜித்து வரும் பழங்குடி இனமான வேடுவர்கள், "உலகில் உள்ள அனைத்து அறிவையும் திரட்டி வைத்திருந்த ஞானியாகவே" முருகனை வழிபடுகின்றனர். எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்ட வேடுவர்களைப் பொறுத்த வரையில், வேட்டைக்கான நிபுணத்துவத்திற்கு மட்டும் கந்தனின் அருள் போதுமானதாக இருந்துள்ளது.

"சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்ததாக", இந்தியாவில் இந்து மதம் கந்தனைப் போற்றுகின்றது. அதே போன்று, "புத்தருக்கு ஞானோபதேசம் செய்ததாக", சீனாவில் பௌத்த மதம், முருகனை போற்றுகின்றது. ஆதி கால முருகனின் கையில், போர்க் கருவியான ஈட்டி (வேல்) இருக்கவில்லை. (கதிர்காம கோயிலின் மூலஸ்தானம் திரை போட்டு மறைக்கப் பட்டிருப்பதால், பல சந்தேகங்கள் எழுவது இயற்கை. அந்த மர்மம் இன்னும் துலங்கவில்லை.) ஆதி கால முருகக் கடவுளின் கையில் ஒரு ஊன்று கோல் இருந்தது. பழனி முருகனும், கையில் ஒரு தடி வைத்திருப்பதால், "தண்டாயுதபாணி" என்று அழைக்கப் படுவது இங்கே குறிப்பிடத் தக்கது. இலங்கையை சேர்ந்த வேடுவர்கள், முருகனை ஒரு கிழவனாகவே வழிபட்டுள்ளனர். ஒரு வயோதிபரின் கையில் ஊன்றுகோல் இருப்பது வழமை தானே? இலங்கையில் வாழ்ந்த வயதான ஞானி (தீர்க்கதரிசி) யின் பெருமைகள், மேற்கு ஆசிய நாடுகளிலும் அறியப் பட்டுள்ளன. (அந்த விபரங்களை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.)

"எதற்காக நமது தெய்வங்களின் கைகளில், எப்போதும் ஒரு ஆயுதம் இருக்கின்றது?" என்பது பல இந்துக்களின் மனத்தைக் குடையும் கேள்வி. அதற்கான விடை இது தான். இவை எல்லாம் ஆரிய மயமாக்கப் பட்ட தெய்வங்கள். முருகன் மட்டுமல்லாது, சிவன், கிருஷ்ணன் போன்ற பல இந்திய தெய்வங்கள் ஆதி காலத்தில் ஆயுதங்களோடு காட்சியளிக்கவில்லை. (உதாரணத்திற்கு, திபெத்திய சிவனின் கையில் சூலாயுதம் கிடையாது.) என்றைக்கு, ஆரிய இனத்தவர்களும் அவற்றை தமது கடவுளராக ஏற்றுக் கொண்டனரோ, அன்றில் இருந்து அவர்கள் கைகளில் ஆயுதங்கள் முளைத்து விட்டன.

அந்நிய வெள்ளையின ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்ட உள்நாட்டு கறுப்பின மக்கள், சில போர்த் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். காளி, பைரவர் போன்ற தெய்வங்கள் போரின் நிமித்தம் முக்கியத்துவம் பெறுவதால், அவற்றின் கைகளில் ஆயுதங்கள் இருந்துள்ளன. பிற்காலத்தில், போரில் வென்ற இந்துக்களான ஆரியர்கள், போர்த் தெய்வங்களை சுவீகரித்துக் கொண்டனர். இதன் மூலம், உள்ளூர் மக்கள் மீது கலாச்சார அடிமைத்தனம் திணிக்கப் பட்டது. இந்த அடிமைத்தனம் இன்றைக்கும் பலரின் மனதில் காணப்படுகின்றது.

வரலாற்றில் ஆரிய இனம், அறிவு சார் சமுதாயமாக இருக்கவில்லை. மற்றைய இன மக்கள் மீது போர் தொடுத்து, அடிமைப் படுத்தி, சொத்துகளை சூறையாடி வாழ்ந்த நிஜமான காட்டுமிராண்டி சமுதாயமே ஆரிய இனம் ஆகும். அவர்களைப் பொறுத்த வரையில், விவேகத்தை விட வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில், வெறித்தனமான வீரம் தான் அவர்களை பல நாடுகளுக்கு அதிபதிகளாக்கியது. பிறர் செல்வங்களை கொள்ளையடிக்க கற்றுக் கொடுத்தது. (இதற்கு ஆதாரம் தேடி எங்கும் செல்லத் தேவையில்லை. ரிக் வேதத்திலேயே எழுதப் பட்டுள்ளன.) இன்றைக்கும், இனவெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் தலைவர்கள், ஆரியரின் பாரம்பரியத்தை பின்பற்றி வருவதை கண்கூடாக காணலாம். "மூத்தகுடித் தமிழர்கள்", ஆரியர்கள் போன்று காட்டுமிராண்டிகள் அல்ல. ஒரு அறிவு சார்ந்த சமுதாயமாக, நாகரீகத்தில் சிறந்து விளங்கியவர்கள். ஆனால், தமிழர்கள் என்றைக்கு இந்து மதத்தை பின்பற்றத் தொடங்கினரோ, அன்றில் இருந்தே தமிழரின் பெருமைகள் மறக்கப் பட்டு விட்டன.

இன்றைய நவீன யுகத்திலும், இந்து மதத்தவர்கள், முருகனை ஒரு யுத்தக் கடவுளாகத் தான் பார்க்கின்றனர். ஒவ்வொரு வருடமும், முருகன் கோயில்களில் நடைபெறும் "சூரன் போர்" அதற்கு சான்று பகர்கின்றது. முருகன் கனரக ஆயுதங்களுடன் சூரனோடு போரிட்ட காட்சியை, மதச் சடங்கு என்ற பெயரில் மேடையேற்றுகின்றனர். சூரனின் படைகளை துவம்சம் செய்த முருகன், சூர சம்ஹாரத்திற்குப் பிறகு கதிர்காமத்தில் தங்கி விட்டதாக இந்துக்கள் நம்புகின்றனர். (எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு யுத்தக் கடவுளான முருகனிடம் ஆசீர்வாதம் வேண்டியதில் வியப்பில்லை.)

மகாவம்சமும் ஆரிய மயப் பட்ட மன்னர்களின் வரலாற்றை தான் கூறுகின்றது. மகாவம்சம் மட்டுமல்ல, எந்தவொரு இந்துப் புராணமும், இதிகாசங்களும் பூர்வீக மக்களின் கதைகளை எழுதியதில்லை. அவ்வாறு குறிப்பிட்டாலும், அந்த மக்களை "நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகம்" என்று தான் கூறுகின்றன. உதாரணத்திற்கு, இராவணனின் மக்களை அரக்கர்கள் என்று, இந்துக்களின் இராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. பௌத்தர்களின் மகாவம்சம், இலங்கையில் புத்தரின் வருகைக்கு முன்னர், பேய்களை போன்ற தோற்றம் கொண்ட மக்கள் (இயக்கர்கள்) வாழ்ந்ததாக எழுதுகின்றது. "அரக்கர்கள், இயக்கர்கள்", இவை போன்ற இழி சொற்களினால், மூத்த குடிகளின் நாகரீகம் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப் பட்டன.

மதம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார ஆதிக்கம் என்பதைப் பலர் உணருவதில்லை. ஒரு குறிப்பிட்ட மதம், எந்தப் பிரிவினரின், அல்லது சாதியின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றது என்பது தான் முக்கியமானது. பெரும்பான்மை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருக்கும் வரையில், அந்தப் பிரிவினரின் ஆதிக்கம் தொடரவே செய்யும். தமிழ் தேசியத்தை புரட்சிகரமான மாற்று அரசியலாக முன் வைக்க வேண்டுமானால், மதங்களுக்கு எதிரான தார்மீகப் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். உலகின் முதல் மனிதன் (ஆதாம்?) இலங்கையில் தோன்றியிருக்கலாம், என்று கூறப் படுவதன் சாத்தியப்பாட்டை, தமிழ் தேசிய பிரச்சாரத்திற்குள் சேர்த்துக் கொள்ளாத காரணம் என்ன? இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளாமல், அல்லது அறிய முயற்சிக்காமல், "முன் தோன்றிய மூத்த குடி தமிழர்கள் நாம்." என்று பெருமை பேசுவதில் பயனேது?

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்

18 comments:

kumar said...

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய
மூத்த தமிழ்குடி.இதுவே பெரும் பைத்தியக்காரத்தனம்
இல்லையா? மண் தோன்றவில்லை எனில் எதில் விளைந்த
மயிரை நம் முன்னோர்கள் உண்டார்கள்?

தமிழ் செல்வா said...

உங்களுக்கு என்ன ஆச்சு கலையரசன் நல்லாதானே எழுதிக்கொண்டிருந்தீர்கள். எப்ப தமிழரின் தொன்மை பற்றி மேலோட்டமாக படித்துவிட்டு தவறுதலான புரிதலோடு மனதில் தோன்றியதையெல்லாம் எழுத ஆரம்பித்தீர்களோ மன்னிக்கணும் வரலாறை திரித்து எழுதி நிறைய பேரை குழப்புகிறீர்கள். இன எதிர்ப்பாளர்களுக்கு துணை போகாதீர்கள் மறைமுகமாக தயவுசெய்து. ஒரு தமிழன்பனின் வேண்டுகோள்.

Kalaiyarasan said...

//எப்ப தமிழரின் தொன்மை பற்றி மேலோட்டமாக படித்துவிட்டு தவறுதலான புரிதலோடு மனதில் தோன்றியதையெல்லாம் எழுத ஆரம்பித்தீர்களோ மன்னிக்கணும் வரலாறை திரித்து எழுதி நிறைய பேரை குழப்புகிறீர்கள்.//

உலகில் உள்ள எல்லா இனங்களையும் போன்று, தமிழரும் மத்தியிலும் தங்கள் தொன்மை பற்றிய மிகை மதிப்பீடு இருக்கின்றது. அவற்றில், உண்மை, பொய் எத்தனை சதவீதம் கலந்திருக்கிறது என்பதை அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். மற்றவர்களை எதற்கு குழப்புகின்றீர்கள்? ஏற்கனவே திரித்துக் கூறப்பட்ட வரலாற்றைத் தான் நீங்கள் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
நான் எந்த இடத்தில் வரலாற்றைத் திரித்தேன் என்பதை சுட்டிக் காட்டினால் நன்றாக இருக்கும். நான் எழுதியது பிழை என்றால், நீங்கள் சரியானதை எழுதி, அதற்கான ஆதாரங்களையும் காட்டலாமல்லவா

வலிப்போக்கன் said...

"முன் தோன்றிய மூத்த குடி தமிழர்கள் நாம்." என்று பெருமை பேசுவது-தமிழின வாதிகள்தான்

Unknown said...

//கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய
மூத்த தமிழ்குடி.இதுவே பெரும் பைத்தியக்காரத்தனம்
இல்லையா? மண் தோன்றவில்லை எனில் எதில் விளைந்த
மயிரை நம் முன்னோர்கள் உண்டார்கள்?//
மயிரையல்ல மயிரை நீக்கிய விலங்குகளை பச்சையாகவும்...நெருப்பில் சுட்டும் உண்டார்கள்...கல் தோன்றா..என்றால்...கல்லினால் செய்யப்பட்ட ஆயுதங்களை அறியும் முன் என்றும்...மண் தோன்றா...
மண்ணை கீறி உழுது பயிர் செய்யும் முன் என்று பொருள்...அதாவது ஆதிவாசி...கற்கால மனிதன் அவன் பிறகு குகைகளில் ஓய்வாக இருக்கும் போது கிறுக்கியது தமிழ் எழுத்துக்களுடன் ஒத்துப்போகிறது....நீங்க தமிழ்ல கமெண்ட் போட்டிருக்ககூடாது..ஸ்..சபா..கமெடியப்பா

தமிழ் செல்வா said...

நண்பர் கலையரசன் அவர்களே,
எந்த மொழி தன்னிலே மூலசொற்களை கொண்டிருக்கிறதோ அம்மொழியே தொன்மையான மொழி. தமிழ் மொழி ஒன்றே எந்த மொழி துணையும் இன்றி தனித்தே நிற்க முடியும். தொல்காப்பியர் கூறுகிறார் அனைத்து தமிழ் சொற்களும் காரனப்பெயர்களே. online etymological dictionary சென்று எந்த வார்த்தைக்கும் மூலச்சொல் தேடினால் லத்தின் அ கிரேக்கம் மூலம் என்பார்கள். அதற்க்கு எது மூலம் என்றால் எபிறேயேம் என்பார்கள். அதற்கு எது மூலம் என்று கேட்டால், தெரியாதுன்னு வரும் அ இந்தோ ஐரோப்பியன் மொழி என்று வரும். தமிழ் தான் மூலம் என்பது தெரியாது. அல்லது கண்டுபிடிக்க தேட வில்லை. காரணம் ஒத்துக்க மனசு வருவதில்லை. தமிழர்களே ஏற்றுக்கொள்ளாத போது அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். நான் தற்ச்சமயம் ரோமில் படிப்பதால், இந்த ஒரு வருடத்தில், இத்தாலியில் இருநூறு தமிழ் வார்த்தைகளின் இருப்பை கண்டுபிடித்து எழுதி வைத்திருக்கிறேன். இத்தாலி என்பதே ஒரு தமிழ் வார்த்தை. இத்தாலி கிரேக்க வார்த்தை இதல்லோஸ் என்பதிலிருந்து. இத்தல்லோஸ் விதல்லோஸ் என்ற லத்தின் வார்த்தையிலிருந்து.வித்தல்லோஸ் என்றால் காளை மாடு என்று பொருள்.இது தமிழில் விடலை என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. இப்படி நூற்றுக்கணக்கில். நானே இரு நூறு வார்த்தை தொடர்பு கண்டுபிடித்தால் ஒரு தமிழ் ஆய்வாளர் எவ்வளவு கண்டுபிடிப்பார். ௨௦௦௦ ஆண்டுகளுக்கு பிறகு இவ்வளவு தொடர்பு என்றால் நூறு வருடங்களுக்கு முன் தமிழர் பயன்படிதிய சொற்கள், ஐநூறு வருடங்களுக்கு முன், ஆயிரம , ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன் எவ்ளோ வார்த்தை தொடர்புகள், பிரமிப்பா இருக்கு.
இது ஒரு வார்த்தை தொன்மை பற்றி மட்டுமே. இன்னும் வானவியல் தொடர்புகள் பார்த்தால் தொல் தமிழன் அறிவு உச்சத்தில். ஏழாம் அறிவில் ஒரு சதவிகிதம் காட்டியிருக்கிறார்கள் இன்னும் செல்லவேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது. கூகுள் வரைபடம் (map) பார்த்தால் கன்யாகுமரிக்கு தெற்க்கே கடலுக்குள் முன்னூறு கி.மி. நிலம் இருப்பது தெரியும். digital dictionary of south india வில் உள்ள தமிழ் வார்த்தை வளங்களை ஒரு முறையாவது பார்க்கும் எவரும் தமிழின் தொன்மையை முதன்மையை குறை சொல்ல மாட்டார்கள். இசை தொன்மைக்கு அபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம், வானவியலுக்கு ஓரை சத்திரம், மருத்துவத்திற்கு சொருப சாத்திரம், கட்டட கலைக்கு சிற்ப சாத்திரம், எத்தனை தொன்மையான தமிழ் அறிவுச்செல்வங்கள் நிறைய தொண்டப்படாமல், மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, இதில் நாமும் விளையாட வேண்டுமா? ஒரு ரெண்டாயிரம் பக்கங்களை எழுதக்கூடிய தகவல் வைத்திருக்கிறேன். பாவாணர் முதல் இன்று அறிஞர்கள் ராம.கி., சாத்தூர் சேகரன், அருளி, என பலரும் வெறும் பழமை பேசவில்லை. நமது அடிமைத்தனம் போக்க இழந்ததை மீட்க நமது அறிவுச்செல்வத்தை மீள்கொணர்வு செய்ய போராடுகிறார்கள். இந்த போராட்டத்தில் நாமும் பங்கெடுப்போம், சிறிய அளவிலாவது. கருத்தை வெளியிட்டமைக்கு நன்றி.

ஆதித்த கரிகாலன் said...

சிங்களமும் யாழ் வட்டார மொழியும் எவ்விதத்தில் ஒற்றுமையை கொண்டிருக்கின்றது? என்று மலையாளத்தில் பேச்சுவழக்கில் இருக்கும் ஆனால் தமிழ்நாட்டில் பயன்படாத , ஆதிதமிழ் சொற்களையா குறிப்பிடுகின்றனர் ?

ஆதித்த கரிகாலன் said...

கதிர்காமத்தில் ஓம் என்பது பல நூற்றாண்டுகளாக இருந்துவந்தது; சமீபத்தில் நீக்கப்ட்டடது.

தமிழர்கள் இந்துகள் அல்ல ஆனால் சிவலிங்க வழிபாடு நடத்திய சைவர்கள் எனலாம்

Kalaiyarasan said...

//சிங்களமும் யாழ் வட்டார மொழியும் எவ்விதத்தில் ஒற்றுமையை கொண்டிருக்கின்றது? என்று மலையாளத்தில் பேச்சுவழக்கில் இருக்கும் ஆனால் தமிழ்நாட்டில் பயன்படாத , ஆதிதமிழ் சொற்களையா குறிப்பிடுகின்றனர் ? //
சொற்கள் மட்டுமல்ல, வாக்கிய அமைப்பு கூட ஒரே மாதிரியாக உள்ளன. உதாரணத்திற்கு, வளவு, கமம், போன்ற சொற்கள் யாழ்ப்பாணத் தமிழிலும், சிங்களத்திலும் பரவலாக பயன்பாட்டில் உள்ளன. யாழ் வட்டார மொழியை, தமிழகத் தமிழில் இருந்து வேறுபடுத்துவது, அதனுடைய வாக்கிய அமைப்பு, மற்றும் பேச்சு வழக்கு. யாழ் தமிழுக்கு எழுத்து வடிவம் கொடுத்தால் எப்படியிருக்கும். அவ்வாறு தான் தரப்படுத்தப் பட்ட சிங்கள மொழி அமைந்துள்ளது. இரண்டுக்கும், மலையாளத்துடன் தொடர்பிருக்கலாம். உதாரணத்திற்கு, சிங்களத்திலும், யாழ் தமிழிலும் பல சொற்கள் ae என்ற உச்சரிப்புடன் வருகின்றன. தமிழகத் தமிழில் அது கிடையாது. இந்த உச்சரிப்புக்கு தமிழில் எழுத்து வடிவம் கிடையாது.

Kalaiyarasan said...

//எந்த வார்த்தைக்கும் மூலச்சொல் தேடினால் லத்தின் அ கிரேக்கம் மூலம் என்பார்கள். அதற்க்கு எது மூலம் என்றால் எபிறேயேம் என்பார்கள். அதற்கு எது மூலம் என்று கேட்டால், தெரியாதுன்னு வரும் அ இந்தோ ஐரோப்பியன் மொழி என்று வரும். தமிழ் தான் மூலம் என்பது தெரியாது. //

நண்பரே, எதையும் அரைகுறையாக தெரிந்து வைத்திருப்பவர்கள் ஆபத்தானவர்கள் என்பதைத் தான் இங்கே நிரூபிக்கின்றீர்கள். பல ஐரோப்பிய மொழிகளில் கிரேக்க, லத்தீன், எபிரேய சொற்கள் கலந்துள்ளன. இன்றைக்கு நாம் பேசும் தமிழில் நிறைய ஆங்கிலச் சொற்கள் கலந்துள்ளன அல்லவா? நிறைய சம்ஸ்கிருத சொற்கள் கலந்துள்ளன அல்லவா? அது போலத் தான் இதுவும். இன்று உலகில் எந்த மொழியும் தூய்மையான மொழி கிடையாது. லத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ் எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற மொழிகள். அதற்கு மூலம், இதற்கு மூலம் என்று தேடிப் பார்க்க முடியாது. ஏனெனில் இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த செம் மொழிகளாக கருதப் படுபவை.

//இத்தாலியில் இருநூறு தமிழ் வார்த்தைகளின் இருப்பை கண்டுபிடித்து எழுதி வைத்திருக்கிறேன். இத்தாலி என்பதே ஒரு தமிழ் வார்த்தை. இத்தாலி கிரேக்க வார்த்தை இதல்லோஸ் என்பதிலிருந்து. இத்தல்லோஸ் விதல்லோஸ் என்ற லத்தின் வார்த்தையிலிருந்து.வித்தல்லோஸ் என்றால் காளை மாடு என்று பொருள்.இது தமிழில் விடலை என்ற வார்த்தையிலிருந்து வருகிறது.//

இப்படியே பல சொற்களை பிரித்து ஆராய்ந்து, தமிழோடு தொடர்பு படுத்தி நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளலாம். அது உங்களது கற்பனை வளத்தைப் பொறுத்தது. அது சரி, நீங்கள் எல்லாம் இன்னமும் எதற்காக , தமிழை மேற்கு ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? ஐரோப்பிய மொழிகளும், கிரேக்கமும், எபிறேயமும் மட்டுமா உங்கள் கண்களுக்கு தெரிகின்றன? உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. அவற்றிற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்பதையும் ஆராய்ந்து சொன்னால் நல்லது. மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படியானால், தமிழ் மொழிக்கும் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க மொழிக்கும் இடையில் தொடர்பு இருக்க வேண்டுமல்லவா? அது எந்த மொழி என்பதையும் சற்று ஆராய்ந்து சொன்னால் நல்லது.

nanbenda said...

sandai podunga appathan saththana karuthukkal kidaikum saakkadaikal suththamagum

சார்வாகன் said...

நண்பருக்கு வணக்கம்,
/உலகின் முதல் மனிதன் (ஆதாம்?) இலங்கையில் தோன்றியிருக்கலாம், என்று கூறப் படுவதன் சாத்தியப்பாட்டை, தமிழ் தேசிய பிரச்சாரத்திற்குள் சேர்த்துக் கொள்ளாத காரணம் என்ன?/
இத்தொடர் ஏற்றுக் கொள்ளப்பட வரலாற்றுக்கு மாறாக சில கருத்துகளை முன் வைக்கிறது.
1. கிழக்கு ஆப்பிரிக்காவில் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு மனித இனம் தோன்றி அங்கிருந்து பிற பகுதிகளுக்கு பரவினர்.அதில் திராவிடர்(தமிழர்) என்னும் குழு பிற இனத்தவரை விட இந்தியாவிற்கு முன்பே வந்திருக்கிறது.இந்த மனிதப்பரவல் சிறு குழுக்களாக்வே நடை பெற்று இருக்க வாய்ப்பு அதிகம் ஏனெனில் விவசாயம் செய்ய அறியா குழுக்கள் இட மாற்றத்தின் போது அதிக உணவுப் பொருள்களை வழியில் பெறுவது என்பது கடினம். ஆகவே ஆரியர்,திராவிடர் இனும் மனித இனங்கள் சிறு சிறு குழுக்களாகவே இந்தியா வந்து இருக்க வேண்டும்.அந்த இனக்குழுக்களே சாதிகள் என்ற பெயரில் இன்னும் தொடர்கிறது. டி.என்.ஏ ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.மிகப் பழைய ஜீன் ஒன்று மதுரை தமிழர் உடலில் கண்டுபிடிக்கப்பட்டது செய்தியும் அறிந்ததே.

இந்த கும்ரிக் கண்டம் ஆதம் என்பது ஆய்வு ரீதியாக ஏற்றுக் கொள்ளப்டாத ஒரு விஷயம்.ஒருவேளை ஏற்றுக் கொள்ளப்ப்ட்டாலும்,மனிதப்பரவல்,மொழி பரவல் போன்ற பல விஷயங்கள் கால அடிப்படையில் விளக்கப் பட‌ வேண்டும்.
http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/elsi/humanmigration.shtml

http://www.bradshawfoundation.com/journey/

2./ அப்படியானால், தமிழ் மொழிக்கும் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க மொழிக்கும் இடையில் தொடர்பு இருக்க வேண்டுமல்லவா?/

இது நல்ல கேள்விதான் எனினும் ஆப்பிரிக்க மொழிகளுக்கு திராவிட மொழிகளுக்கும் உள்ள தொடர்பு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.திராவிட மொழிகள் அனைத்துக்கும் மூல மொழி உள்ளது என்பதையே இன்னும் சரியாக நிரூபிக்க இயலவில்லை என்பதும் உண்மை.திராவிட மொழிகளின் பொது சொற்களை வைத்து அம்மொழியை கட்டமைக்கும் பணியும் நடை பெறுகிறது,ஒரு வேளை இது வெற்றி பெற்றால் பிற மொழிக் குடும்பங்களோடு ஒப்பீடு செய்ய இயலும்.

The goal of research in Dravidian linguistics is to reconstruct the parent of the contemporary Dravidian languages from their shared native words and grammatical features, which show regular patterns of correspondence across languages. The scientifically reconstructed parent is the proto-language called Proto-Dravidian. Krishnamurti gives a picture of the Proto-Dravidian language, which, given our current knowledge, is complete in its sound (phonological) structure, detailed in its word (morphological) structure and suggestive in its sentence (syntactic) structure.

http://www.hindu.com/fline/fl2022/stories/20031107000807300.htm

தமிழ் செல்வா said...

நமக்கெல்லாம் கங்காரு மிருகம் பற்றி தெரியும், கங்காருன்னா "எனக்கு புரியலைன்னு" ஒரு ஆஸ்ட்ரேலியா பழங்குடி இனத்தவர், அந்த மிருகத்தின் பெயர் கேட்ட ஆங்கிலேயருக்கு சொன்ன பதில் தான், ஆங்கிலேயரால் அந்த மிருகத்தின் பெயரென்று தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டது, என்பது நமக்கு தெரியும். உண்மையில் அந்த மிருகத்தின் பெயர் என்ன? கங்காருவின் உண்மையான பெயர் ஒரு தமிழ் பெயர். மார்சப்பியல். ஏறக்குறைய 15 அடி நீளம் கொண்ட அம்மிருகத்தின் குட்டி பிறக்கும்போது ரெண்டு விரக்கடை (௨ inches) தான் இருக்கும். ஆனால் அது தேடி சென்று கங்காரு பையில் இருக்கும் காம்பை கண்டுபிடித்து அங்கேயே ஒரு சில வருடங்களுக்கு வளரும்வரை தங்கி விடுகிறது. இந்த மார் சப்பும் விலங்கு என்ற பெயர் அந்த விலங்கின் துணை வகுப்பின் பெயராக இன்றும் இருப்பது மார்சுபியல் தான். ஆதாரம் : (http://en.wikipedia.org/wiki/Kangaroo)
இது உலகின் தென்கிழக்கோடியில் உள்ள ஒரு நாட்டு விலங்கு.
இதே போல நாமறிந்த anaconda விலங்கு. இதன் உண்மையான பெயர் ஆனைகொண்டான் என்ற தமிழ் பெயர்(Elephant killer). ஆதாரம் (http://news.nationalgeographic.com/news/2002/08/photogalleries/0802_snakes1.html)
இதே போல் நிகோபார் தீவு நக்காவரம் என்ற தமிழ் பெயர். எவெரெஸ்ட்டு சிகரத்திற்கு 1865 இல் தான் அப்பெயர் வைத்தான் ஆங்கிலேயன். உள்ளூர் மொழியில் சிகர பெயர் சாகர மாதா அ உலக மாதா.
இப்படி எண்ணற்ற உதாரணங்களை நான் காட்டிக்கொண்டே செல்லலாம். நேரமில்லை.
தமிழ் திராவிட தொடர்புகளுக்குதமிழும் திரவிட மொழிகளும்-பேராசிரியர் இரா. மதிவாணன்
தமிழ் எகிப்து தொடர்புகளுக்குhttp://www.touregypt.net/featurestories/kmt.ஹதம்
தமிழ் மேலை தொடர்புகளுக்கு Indo-West.படப்
இன்னும் சீன, யப்பானிய, இசுபானிய தொடர்புகளுக்கு ஆதாரங்கள் உண்டு. நேரமின்மை காரணமாக முறைப்படி தொகுத்து தர இயலவில்லை. தொடந்து தேடுவோம் நமது மொழியின் செல்வத்தை.

Kalaiyarasan said...

//கிழக்கு ஆப்பிரிக்காவில் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு மனித இனம் தோன்றி அங்கிருந்து பிற பகுதிகளுக்கு பரவினர்.அதில் திராவிடர்(தமிழர்) என்னும் குழு பிற இனத்தவரை விட இந்தியாவிற்கு முன்பே வந்திருக்கிறது.//

ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததற்கு சாட்சியமாக, இருளர்கள் போன்ற ஆதி திராவிட மக்களைக் குறிப்பிடலாம். இன்றைக்கு அழிந்து வரும் இனமாகி விட்ட இருளர்கள், தமிழரின் மூதாயராக இருக்க வேண்டும். தோற்றத்தில் ஆப்பிரிக்க கறுப்பினத்தவர் போன்றிருப்பார்கள். ஆனால், அவர்கள் பேசும் மொழியும், கலாச்சாரமும் தமிழுக்கு நெருக்கமானது தான். இன்றைக்கு நாம் பேசும் தமிழ் மொழி, பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப் பட்டது. (செம்மொழியாக்கம், அல்லது தரப்படுத்தல்) இந்த உண்மையை மனதில் வைத்துக் கொண்டு தான் பண்டைத் தமிழரையும் புரிந்து கொள்ள வேண்டும்.

//ஆகவே ஆரியர்,திராவிடர் இனும் மனித இனங்கள் சிறு சிறு குழுக்களாகவே இந்தியா வந்து இருக்க வேண்டும்.அந்த இனக்குழுக்களே சாதிகள் என்ற பெயரில் இன்னும் தொடர்கிறது.//

சாதி அமைப்பு, எமது முன்னோர் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வந்த பண்பாடு ஆகும். ஆரியர்களுக்கு, ஈரானில் தான் சாதி அமைப்பு அறிமுகமானது. (எகிப்தின் தொடர்பு மூலம் அறிந்து கொண்டார்கள்.) ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு பற்றி ஏற்கனவே இரண்டு கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன்.

//இந்த கும்ரிக் கண்டம் ஆதம் என்பது ஆய்வு ரீதியாக ஏற்றுக் கொள்ளப்டாத ஒரு விஷயம்.//
நானும் அதனை ஏற்றுக் கொள்கிறேன். இது இன்னமும் நிரூபிக்கப் படவில்லை. விஞ்ஞான கற்பனை மாதிரி, இது சரித்திர கற்பனையாகவே உள்ளது. இருப்பினும் கடல் அழித்த நாடுகள் பற்றிய கதைகள், பண்டைய மக்கட் சமுதாயங்களிடம் செவிவழிக் கதைகளாக புழங்கி வருகின்றன. இந்திய, இலங்கைக் கரைகளில் சில கடலடி நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. தமிழர்கள் மட்டுமே குமரி கண்டம் என்ற பெயரில் அழைத்தனர். அங்கே தமிழர்களோடு வேற்றின மக்களும் வாழ்ந்திருக்கலாம். அவர்கள் வேறு பெயரில் அழைக்கலாம்.

//இது நல்ல கேள்விதான் எனினும் ஆப்பிரிக்க மொழிகளுக்கு திராவிட மொழிகளுக்கும் உள்ள தொடர்பு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.//

இந்தக் கருத்தை நான் மறுக்கிறேன். நமது தமிழினவாதிகள் எப்போதும், தமிழரை மேற்கத்திய நாட்டினரோடு ஒப்பிட்டு பெருமை கொள்வதில் அலாதிப் பிரியம் கொண்டவர்கள். அவர்கள், தமிழரையும், ஆப்பிரிக்கர்களையும் ஒப்பீடு செய்ய விரும்புவதில்லை. தமிழின வாதிகளுக்கு தீனி போடும் அறிஞர் பெருமக்களும் ஆப்பிரிக்கா பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள். தமிழுக்கும், ஆப்பிரிக்க மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை நானே நிரூபித்துக் காட்டுகிறேன். ஏற்கனவே, தமிழருக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இடையிலான பண்பாட்டு ஒற்றுமைகளை நான் நேரில் கண்டறிந்திருக்கிறேன்.

//திராவிட மொழிகள் அனைத்துக்கும் மூல மொழி உள்ளது என்பதையே இன்னும் சரியாக நிரூபிக்க இயலவில்லை என்பதும் உண்மை//
இதுவும் தவறான கருத்து. இன்றைக்கு பயன்பாட்டில் உள்ள மொழிகள் யாவும், பிற்காலத்தில் மொழியியல் அறிஞர்களால் செயற்கையாக வடிவமைக்கப் பட்டவை. வட்டார மொழிகளை ஒன்று சேர்த்து, ஒரே மொழியாக்கினார்கள். தமிழ் நாட்டிலேயே, பல "தமிழ் மொழிகள்" பேசப் பட்டன. ஓரிடத்தில் பேசப்பட்ட மொழி மற்ற இடத்தில் உள்ளவருக்கு புரியாது.

Kalaiyarasan said...

//இன்னும் சீன, யப்பானிய, இசுபானிய தொடர்புகளுக்கு ஆதாரங்கள் உண்டு. நேரமின்மை காரணமாக முறைப்படி தொகுத்து தர இயலவில்லை. //

உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும், குறிக்கப்பட்ட மொழிக் குடும்பங்களாக பிரித்து வைத்துள்ளனர். அதன் அர்த்தம், இவை எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு பட்டவை என்பது தான். இனம் என்பதே ஒரு கற்பனை. நீங்கள் தமிழர்களை ஒரு இனமாக நம்பும் ஒருவராக இருந்தால், மற்றைய இனங்களுடன் தொடர்பற்ற தனித்துவமான மொழியைப் பேசும் இனமாகத் தான் தமிழரைக் கருத வேண்டும். நீங்கள், தமிழை சீன, யப்பானிய, இசுபானிய மொழிகளுடன் ஒப்பிட்டீர்கள். அதன் அர்த்தம், தமிழர் என்பது தனியான இனம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சீன, யப்பானிய, இசுபானிய மொழிகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய, மிகப் பெரிய உலக இனம் ஒன்றின் பகுதியாகவே தமிழர்களைக் கருதுகின்றீர்கள்.

பல்வேறு மொழிகளுக்கு இடையில் தொடர்பு இருக்கிறது என்று தான் நானும் கூறுகின்றேன். ஆனால், இங்கே நீங்கள் கொண்டு வந்து நிறுவ விரும்பும் நோக்கம் வேறு. "தமிழில் இருந்து தான், மனித இனம் தோன்றியது. தமிழில் இருந்து தான் மனித நாகரீகம் தோன்றியது." என்று பேரினவாதம் பேசுவோரின் ஆதிக்க அரசியலுக்கு ஆதரவு தேடுகின்றீர்கள். வெள்ளையின நிறவெறிக் கொள்கை கொண்டோரும், இதே மாதிரியான "தொடர்புகள், ஆதாரங்களைக்" காட்டி வெள்ளையினம் உலகை ஆளப் பிறந்தது என்று நிறுவத் துடிக்கின்றனர். ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில், ஜேர்மனிய மொழிக்கும், உலக மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை, இன மேலாதிக்க நோக்கில் பிரச்சாரம் செய்து வந்தனர். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளா விட்டால், அவர்களைப் பொறுத்த வரையில் "இன எதிர்ப்பாளர்" ஆகி விடுவீர்கள்.

ஆதித்த கரிகாலன் said...

ஆரியர் வருகைக்குமுன்னர் சாதி அமைப்பு காணப்பட்டதா?

Kalaiyarasan said...

//ஆரியர் வருகைக்குமுன்னர் சாதி அமைப்பு காணப்பட்டதா? //

நிச்சயமாக, ஆரியர்கள் கொண்டு வந்த அமைப்பிற்கு பெயர் வர்ணம், சாதி அல்ல. வர்ணம் ஆரியர்களுக்கு இடையிலான பிரிவுகளையும், அடிமைப் படுத்தப் பட்ட மக்களையும் (சூத்திரர்கள்) மட்டுமே உள்ளடக்கியது. சாதி அமைப்பு இதை விட வித்தியாசமானது. ஆப்பிரிக்காவில் காணப்படும் சாதி அமைப்பின் பூர்வீகம் என்ன? அங்கேயும் ஆரியர்கள் தான் கொண்டு சென்று அறிமுகப் படுத்தினாரா?

தமிழன் வர்த்தகம் said...

முருக வழிபாடு, இலங்கையில் இருந்தே இந்தியாவுக்கு பரவி இருக்க வேண்டும். இலங்கையின் பூர்வீக மக்களான வேடுவர்களால் கூட, முருகன் அறிவின் கடவுளாக போற்றப் படுவது

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும் – தற்கால நிலை :http://inioru.com/?p=26230&cpage=1#comment-24346