Sunday, December 04, 2011

உங்களது ஒவ்வொரு அசைவையும் அரசு கண்காணிக்கின்றது

சில தசாப்தங்களுக்கு முன்னர், பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜோர்ஜ் ஒர்வேல் எழுதிய 1984 எனும் நூல் வெளியானது. பனிப்போர் உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில், கம்யூனிச அரசாங்கங்களை பற்றிய எதிர்மறையான கருத்துகளை பரப்புவதற்காக அந்த நூல் எழுதப் பட்டது. "பெரியண்ணன் உங்களை கண்காணிக்கிறான்" என்ற பெயரில், தனது நாட்டு பிரஜைகளின் நடமாட்டங்களை, அரசு கண்காணிப்பது கதைக்கரு.

1984 நாவல் ஒரு கற்பனைக் கதை. இருப்பினும், அன்றைய ரொமானியாவில் அவ்வாறான அரசாங்கம் இயங்கியதாக, மேற்குலக மக்கள் நம்ப வைக்கப் பட்டனர். இன்றைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சியில் பல வருடங்கள் பின்தங்கியுள்ள, வறிய நாடான ரொமானியாவில் அதெல்லாம் சாத்தியமாகியிருக்க முடியாது. இருப்பினும், "தனி நபர் சுதந்திரத்தை, மனித உரிமையை மதிப்பதாக கருதப்படும்," மேற்குலக நாடுகளில், பிரஜைகளை உளவறியும் கண்காணிப்பு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அது குறித்து விக்கிலீக்ஸ் இணையத் தளம் பல தகவல்களை பகிரங்கப் படுத்தியுள்ளது. குறிப்பாக, அரபுலகின் மக்கள் எழுச்சியின் பின்னர், மேற்குலகில் பிரஜைகளின் நடமாட்டங்களை அவதானிப்பது அதிகரித்து வருகினது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், அரசின் கண்காணிப்பின் கீழ் உள்ளமை புதிய விடயமல்ல.

பாதுகாப்பு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும், அமெரிக்காவின் SS8, பிரான்சின் Vupen, என்பன வைரஸ் மென்பொருள்களை(Trojan) தயாரித்து அனுப்பி வருகின்றன. இவை உங்களது கணணிகளை, கைத் தொலைபேசிகளை ஊடுருவி, உங்களது செயற்பாடுகளை பதிவு செய்கின்றன. கணனியில் நீங்கள் எதைப் பார்க்கின்றீர்கள், எதை தேடுகின்றீர்கள், தொலைபேசியில் யாருடன் உரையாடுகின்றீர்கள், எல்லாமே பதிவு செய்யப் பட்டு, அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. கமெரா உள்ள கைத் தொலைபேசி உங்கள் அயலில் உள்ளவற்றை படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருக்கிறது.

செக் நாட்டை சேர்ந்த கம்பனியான Phoenexia, குரலை கண்டுபிடிக்கும் மென்பொருள் ஒன்றை தயாரித்து வருகின்றது. அந்த voiceprint மென்பொருளானது, ஒருவரது குரலை வைத்தே, ஒரு நபரது பால், வயது, போன்ற விபரங்களை கொடுக்கிறது. அமெரிக்காவின் Blue Coat, ஜெர்மனியின் Ipoque, போன்ற நிறுவனங்கள், அரச எதிர்ப்பாளர்களின் இணையப் பாவனையை கட்டுப்படுத்துகின்றன. துனிசியாவில், எகிப்தில் நடந்தது போன்ற ஆர்ப்பாட்டம் எல்லாம், மேற்குலகில் சாத்தியமேயில்லை. மேற்குலக நாடுகளுடன் நல்லுறவை பேணும் நாடுகளிலும், இந்த கண்காணிப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப் படுகின்றது. இலங்கையில் நடந்த இறுதிப்போரின் பொழுது, புலிகளின் நடமாட்டங்களை, பிரபாகரனின் மறைவிடத்தை, அமெரிக்க செய்மதி நிறுவனங்கள் கண்காணித்து, இலங்கை அரசுக்கு அறிவித்து வந்துள்ளன. இந்த தகவலையும், ஒரு முறை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

பெரும்பாலான மேற்குலக "பாதுகாப்பு நிறுவனங்கள்", தமது தயாரிப்புகளை ஆர்வமுள்ள அரசுகளுக்கு விற்பனை செய்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு எந்த வித கட்டுப்பாடுகளும் கிடையாது. அதாவது, மனித உரிமைகளை மீறும் அரசுக்கு கூட அவை தமது பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை இல்லை. பல்வேறு நாடுகளின் காவல்துறை, இராணுவம், அரசு என்பன இந்த மென்பொருள்களை வாங்கிப் பாவிக்கின்றன. தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அனுமதி இன்றியே, அரசுகள் நம்மை கண்காணிக்க முடியும். எங்களது கணணிகளை அவர்களால் இயக்க முடியும். எமது கைத்தொலைபேசி பாவனையை வைத்தே, நாம் யார், தற்போது எந்த இடத்தில் நிற்கிறோம், என்பதை அறிந்து கொள்ள முடியும். எமது தொலைபேசி சாதனம் பாவனையில் இல்லாத நேரத்திலும், அந்த விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். மேற்குலக நாடுகளில், இவ்வாறு பதிவு செய்வது, அன்றாட நடவடிக்கையாக மாறி விட்டது, என விக்கிலீக்ஸ் தெரிவிக்கின்றது. VAStech போன்ற நிறுவனங்கள், நாடு முழுவதும் நடக்கும் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து அரசுக்கு விற்று வருகின்றன.

வருகிற வாரங்களில், விக்கிலீக்ஸ் இது குறித்து மேலதிக விபரங்களை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. L'Espresso , Privacy International of The Bureau of Investigative Journalism போன்ற பல ஊடக நிறுவனங்கள் விக்கிலீக்சுடன் ஒத்துழைக்கின்றன. இதற்கென தனியாக ஒரு இணையத் தளத்தை (The Spy files) ஆரம்பித்துள்ளது.

1 comment:

Thava said...

இந்த அருமையான தகவலை வழங்கியதற்கு தங்களுக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.