Showing posts with label பாலஸ்தீனம். Show all posts
Showing posts with label பாலஸ்தீனம். Show all posts

Wednesday, July 19, 2017

பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு


[தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : ஏழு)
"இஸ்ரேலின் (முதலாவது) பிரதமர் மெனகம் பெகின் ஒரு பாசிஸ்ட்!" - பிரபல யூத விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன் (Letter to the New York Times, December 4, 1948)
"யூத தேசக் கோட்பாடு, யூத மதத்திற்கே பாதகமாக அமையும்... யூதர்களுக்கென தனி நாட்டை உருவாக்குவதை விட, அரேபியருடன் சமாதான சகவாழ்வு வாழ்வதே மேல்..." - Albert Einstein (April 17, 1938, in a speech at the Commodore Hotel in New York City)
[Einstein on Israel and Zionism: His Provocative Ideas About the Middle East, by Fred Jerome, (New York: St. Martin’s Press, 2009)]

"நாடற்ற மக்களுக்கு, ஒரு மக்களற்ற நாடு காத்திருக்கின்றது." சியோனிசவாதிகளின் இத்தகைய பிரச்சாரங்களை செவிமடுத்த ஐரோப்பிய யூதர்கள், அன்றைய பாலஸ்தீனம் யாருமே வாழாத பாலைவனப் பிரதேசம் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். பாலஸ்தீனத்தின் (இன்றைய இஸ்ரேல்) தென் பகுதியில் மட்டுமே (நகேவ்) பாலைவனம் உள்ளது என்பதும், பிற பகுதிகள் பயிர்ச்செய்கைக்கு உகந்த மண்வளத்தைக் கொண்டிருந்தது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஐரோப்பிய யூதர்கள் குடியேறுவதற்கு முன்னரே, பாலஸ்தீன ஒரேஞ் பழங்கள் ஐரோப்பிய சந்தையில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. தாம் வந்த பின்னரே, பாலைவனத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியதாக, இஸ்ரேலில் குடியேறி வாழும் யூத பாமரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யூத பாமரர்களின் அறியாமையை, சில படித்த தமிழர்களும் பிரதிபலிக்குமளவுக்கு, அது ஒரு பிரச்சார உத்தியாக முன்னெடுக்கப் பட்டது.
1891 ல், முதன் முதலாக ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து பாலஸ்தீனம் சென்று வந்த யூதரின் வாக்குமூலம் இது:
"இஸ்ரேல் யாருமே வாழாத பாலைவனம் என்று, இஸ்ரேலுக்கு வெளியே வாழும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அங்கு சில அரேபிய நாடோடிக் குழுக்கள், கழுதைகளுடன் சுற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறோம். அங்கே நிலம் யாருமே வாங்காமல் தரிசாக கிடப்பதாக கருதுகிறோம். ஆனால் உண்மை அதற்கு எதிர்மறையானது. செம் (நோவாவின் புதல்வன்) மின் வழித்தோன்றல்களான அரேபியர்களும் புத்திசாலிகள் தான்...." (ரஷ்ய யூதரான
Asher Ginzberg எழுதிய நூலில் இருந்து.)

அன்றைய பாலஸ்தீனாவின் சனத்தொகை விகிதாசாரம் பின்வருமாறு அமைந்திருந்தது:
முஸ்லிம்கள் 600000
கிறிஸ்தவர்கள் 70000
யூதர்கள் 80000
(பாலஸ்தீன யூதர்கள் 80000 பேர் மட்டில் அங்கே வாழ்ந்து வந்த போதிலும், விரல்விட்டு எண்ணக்கூடிய யூதர்கள் மட்டுமே வாழ்ந்ததாக, ஐரோப்பாவில் சியோனிசவாதிகள் பரப்புரை செய்தனர்.)

மொத்த பாலஸ்தீன சனத்தொகையில் 60 % பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் யூத விவசாயிகளும் அடக்கம். ஜெருசலேம் ஆண்டு தோறும், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புனித நகராகும். ஆகவே ஜெருசலேமில் வாழ்ந்த மக்கள் சுற்றுலாத் துறையால் நல்ல வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தனர். யூதர்கள் விவசாயிகளாக மட்டுமல்லாது, அரச உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள் போன்ற பதவிகளையும் வகித்து வந்தனர். பாலஸ்தீனத்தில் அரைவாசி காணிகள், முஸ்லிம் நிலவுடமையாளர்களின் சொத்தாக இருந்தது. அவர்கள் தமது நிலத்தை சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு, பெய்ரூட், டமாஸ்கஸ், இஸ்தான்புல் போன்ற நகரங்களில் சுக போகமாக வாழ்ந்து வந்தனர். பாலஸ்தீனத்தின் தலைஎழுத்தை மாற்றியதில் இந்த நிலவுடமையாளர்களுக்கும் பங்குண்டு.

முதலாம் உலகப்போரில், பாலஸ்தீனத்தை ஆட்சி செய்து வந்த துருக்கி (ஓட்டோமான் சாம்ராஜ்யம்) தோல்வியுற்றது. பலவீனமடைந்த துருக்கி ஆட்சியாளர்களுக்கு எதிராக அரேபியர்கள் விடுதலைப் போரை நடத்தினார்கள். அரபு விடுதலைப் போராளிகளுக்கு பிரித்தானியா ஆயுத விநியோகம் செய்தது. (பார்க்க : Lawrence of Arabia திரைப்படம்) ஆனால் துருக்கியர்கள் வெளியேறிய உடனேயே, பிரிட்டன் பாலஸ்தீனாவை காலனிப்படுத்தியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக பாலஸ்தீன தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. அன்று அரேபியரும், யூதர்களும் தோளோடு தோள் சேர்ந்து பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடினார்கள். பாலஸ்தீன தேசிய காங்கிரஸ், லிபரல் கட்சி, சுதந்திரக் கட்சி போன்ற ஜனநாயகக் கட்சிகள், சுதந்திர பாலஸ்தீனத்தை பொறுப்பேற்க தயாராக இருந்தன. ஆனால் பிரிட்டிஷ் படைகள் பாலஸ்தீன விடுதலைப் போரை நசுக்கின. பாலஸ்தீன எழுச்சியை நிரந்தரமாக ஒடுக்குவதற்காக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மனதில் ஒரு சூழ்ச்சித் திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.

Mawat Land Ordinance (1920), என்ற நிலவுரிமைச் சட்டம் யூத குடியேற்றங்களை இலகுவாக்கியது. அந்த சட்டத்தின் படி, தொடர்ந்து மூன்று வருடங்கள் பயிர் செய்யப்படாத நிலம் அரசுடமையாகும். மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் யூத முதலாளிகளின் நிதியில் இயங்கிய "யூத தேசிய நிதியம்", சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீன நிலங்களை வாங்கியது. அரபு நிலவுடமையாளர்களும் நல்ல விலைக்கு நிலங்களை விற்று விட்டு, குடும்பத்துடன் வெளிநாட்டில் தங்கி விட்டனர். யூத தேசிய நிதியம் வாங்கிய நிலங்களில், கிழக்கு ஐரோப்பிய யூதர்களின் குடியேற்றம் இடம்பெற்றது. உண்மையில் பிரிட்டனும் அதை விரும்பியது. அன்றைய வெளியுறவு அமைச்சர் பல்போர் எழுதிய பிரகடனம், யூதர்களை தனி இனமாகவும், இஸ்ரேலை அவர்களுக்கான தேசமாகவும் ஏற்றுக் கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ஒப்பந்தம் எழுதப்பட்ட காலப்பகுதியில், மொத்த பாலஸ்தீன சனத்தொகையில் 2 % மட்டுமே யூதர்கள்! ஆனால் பல்போரின் நோக்கம் வேறு. அமெரிக்க யூத முதலாளிகளின் முதலீட்டில், ரஷ்ய யூதர்களை குடியேற்ற விரும்பினார். இதனால் பிரிட்டனுக்கு என்ன இலாபம்? அமெரிக்க யூதர்களிடம் இருந்து கடன் பெறலாம். அப்போது தான் உருவாகியிருந்த கம்யூனிச ரஷ்யாவில் இருந்து யூதர்களைப் பிரிக்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இல்லை, மூன்று மாங்காய்கள் விழுந்தன. பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது.

யூத குடியேற்றங்கள் அன்று கிப்பூத்ஸ் (Kibbutz) என்று அழைக்கப்பட்டன. அதாவது கூட்டுறவுப் பண்ணைகள். கிப்பூத்ஸ் உறுப்பினர்கள், சாதாரண விவசாயிகள் மட்டுமல்ல. பலதரப்பட்ட தொழில்நுட்ப அறிவு படைத்தோராகவும் இருந்தனர். கைத்தொழில் பட்டறைகள், சிறு தொழிற்சாலைகள் என்பன கூட்டுறவுப் பண்ணையில் தோன்றின. எந்த தேவைக்காகவும் அவர்கள் பண்ணையை விட்டு வெளியேறத் தேவையில்லை. அனைத்து வசதிகளும் அங்கே கிடைத்தன. ஆரம்ப கால கிப்பூத்ஸ் உறுப்பினர்கள் அனைவரும் சோவியத் யூனியன், மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறியவர்கள். மேற்கு ஐரோப்பிய யூதர்கள் பாலஸ்தீனம் சென்று குடியேறுவதை விட, அமெரிக்கா செல்வதையே விரும்பினார்கள். கிழக்கைரோப்பிய யூதர்களும் அவர்களை பின்பற்றி அமெரிக்கா சென்று கொண்டிருந்தார்கள். சாதாரண மனிதர்கள் எப்போதும் தொழில் வாய்ப்பை, பணத்தை தேடித் தான் ஓடுவார்கள். யூதர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஈழத்தமிழர்கள் எதற்காக இந்தியா செல்வதை விட, செல்வந்த நாடுகளுக்கு சென்று குடியேறுவதை விரும்புகிறார்கள்? ஒரு சாதாரண இந்திய இளைஞன், அமெரிக்கா சென்று வாழ விரும்புவானா, அல்லது ஆப்பிரிக்கா சென்று வாழ விரும்புவானா? அன்று யூதர்களிடம், "இஸ்ரேலில் குடியேற வருகிறீர்களா?" என்று யாராவது கேட்டால், பைத்தியம் என்று நினைப்பார்கள். "அங்கே சென்று என்ன செய்வது? வேலை கிடைக்குமா?" என்று பதில் கேள்வி போடுவார்கள். அதனால் அவர்களுக்கு வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே, கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன. "யூதர்கள் தமது மத நம்பிக்கை காரணமாக, அல்லது கொள்கைப் பிடிப்பு காரணமாக இஸ்ரேலுக்கு செல்ல விரும்பினார்கள்." என்பதெல்லாம் சியோனிஸ்ட்கள் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைகள். ஆனால், ஹிட்லரின் யூத இனவழிப்புக்கு பிறகு, பெருமளவு யூதர்கள் உணர்வுபூர்வமாக இஸ்ரேல் செல்ல விரும்பியது உண்மை தான். அப்போதும் இஸ்ரேலுக்கு சென்றவர்களை விட, அமெரிக்கா சென்றவர்களே அதிகம். இன்றைக்கும் இஸ்ரேலில் வாழ்பவர்களை விட இரண்டு மடங்கு யூதர்கள் அமெரிக்காவில் வாழ்கின்றார்கள்.

சியோனிஸ்ட் கொள்கை வகுப்பாளர்கள் பல ரகசியத் திட்டங்கள் வைத்திருந்தார்கள். கூட்டுறவுப் பண்ணைகளில் வசித்த குழந்தைகளுக்கு ஹீபுரு மொழி வகுப்புகளை நடத்தினார்கள். அவர்களது பாடத்திட்டம், பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் கல்விக்கு போட்டியாக அமைந்தது. யூதர்கள் மூடப்பட்ட கல்விக் கூடங்களில் ஹீபுரு மொழி பயின்றது மட்டுமல்ல, மொழியோடு கூடவே தேசியவாதத்தையும் வளர்த்தனர். பாலஸ்தீனர்கள் ஆங்கிலக் கல்வி கற்று பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பணியாற்றினார்கள். ஆனால் தமது சமூகத்திற்கென தனியான அரபு வழிக் கல்வியைக் கொண்டிருக்கவில்லை. அன்று பிரிட்டிஷார் அதற்கு அனுமதிக்கவுமில்லை. அதனால் பாலஸ்தீன தேசியவாதம் தோன்ற நீண்ட காலம் எடுத்தது. அது பிற்காலத்தில், யூத பேரினவாதத்தின் எதிர்வினையாகவே உருவெடுத்தது. "பாலஸ்தீனர்கள் நாடற்றவர்களாக உலகம் முழுவதும் அகதிகளாக அலைகிறார்கள்." போன்ற கதையாடல்கள் பாலஸ்தீன தேசியவாதத்தை வளர்த்தது.

இலங்கையின் இனப்பிரச்சினையும் இதே மாதிரியான மூலத்தைக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்திலேயே, பௌத்த சங்கங்கள் சிங்கள மொழிக் கல்வியளித்து வந்தன. சிங்களத் தேசியவாதமும் கூடவே வளர்ந்தது. பாலஸ்தீனரைப் போலவே, தமிழர்களும் ஆங்கிலம் கற்ற மத்திய தர வர்க்கமாக பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பணியாற்றினார்கள். அதனால் அன்று தமிழ்த் தேசியவாதம் தோன்றுவதற்கான சூழல் நிலவவில்லை. அது பிற்காலத்தில் சிங்கள பேரினவாதத்தின் எதிர்வினையாகவே உருவெடுத்தது. இனப்பிரச்சினை தீவிரமடைந்த பின்னரே, "தமிழர்கள் நாடற்றவர்களாக உலகம் முழுவதும் அகதிகளாக அலைகிறார்கள்." போன்ற கதையாடல்கள் உருவாகின. தமது புலம்பெயர் வாழ்வுக்கு, "யூதர்களை உதாரணமாக காட்டுவது" தமிழர்கள் மட்டுமல்ல, பாலஸ்தீனர்களும் அவ்வாறே சொல்லிக் கொள்கின்றனர். (பாலஸ்தீனர்கள், தாமும் யூதர்களைப் போல இரண்டாயிரம் வருடம் காத்திருந்தேனும் பாலஸ்தீனம் அமைக்கப் போவதாக சபதமெடுக்கின்றனர்.)

கிப்பூத்ஸ் பண்ணைகள், தேசத்திற்குள் இன்னொரு தேசமாக இயங்கிக் கொண்டிருந்தன. மேற்குலக யூத நிறுவனங்கள் இரகசியமாக ஆயுதங்களைக் கடத்தி வந்தார்கள். கிப்பூத்ஸ் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. முன்னர் ஒரு காலத்தில் "கிப்பூத்ஸ் ஆயுதக் குழுவாக" இருந்த "ஹகானா", பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவமாகியது. 1929 ம் ஆண்டு, ஜெருசலேம் நகரில், சீருடை தரித்த யூத இளைஞர்கள் இஸ்ரேலிய கொடியுடன் அணிவகுப்பு செய்த பொழுது, அரேபியருடன் கைகலப்பு ஏற்பட்டது. உண்மையில் கூட்டுறவுப் பண்ணைகளில் என்ன நடக்கின்றது என்பது அரேபியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தமது அயலில் ஐரோப்பியர்கள் வந்து குடியேறுவதை, அரேபியர்கள் அச்சத்துடன் அவதானித்தார்கள். ஜெருசலேம் அணிவகுப்பு அந்த அச்சத்தை அதிகரித்தது. இதனால் அரேபியரும், யூதரும் ஆங்காங்கே மோதிக் கொண்டார்கள். பாலஸ்தீன யூதர்களும், இனவுணர்வு கொண்டவர்களாக ஐரோப்பிய யூதர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அரேபியர்களையும், யூதர்களையும் நிரந்தரமாக பிரித்து வைத்த மகிழ்ச்சியில் பிரிட்டிஷ் கனவான்கள், ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்தார்கள்.

ஐரோப்பாவில் இருந்து புலம் பெயர்ந்த யூதர்கள், பிரிட்டனின் அனுமதி இன்றி பாலஸ்தீனாவில் குடியேறி இருக்க முடியாது. யூதர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு தமது மூதாதையர் வாழ்ந்த இடம் என்ற உரிமை பாராட்டினார்கள். ஆனால், பாலஸ்தீன அரேபியர்கள் அதனை ஐரோப்பியரின் காலனியாதிக்கமாக பார்த்தார்கள். ஏனெனில் பாலஸ்தீனாவில் வந்து குடியேறிய அனைவரும் வெள்ளை நிற ஐரோப்பியர்கள். யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக உரிமை பாராட்டிக் கொண்டு, சிங்களக் குடும்பங்கள் குடியேறி வருகின்றன. அங்குள்ள தமிழர்கள் எத்தனை ஆக்ரோஷமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்? தமிழ் தேசியவாதிகள் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் நடப்பதாக அலறிக் கொண்டிருக்கிறார்கள். இதே போன்ற நிலையில் தானே அன்று பாலஸ்தீன அரேபியர்கள் இருந்திருப்பார்கள்?

அரேபியரின் எதிர்ப்புக் காரணமாக, மேலதிக யூதர்களின் வருகையை பிரிட்டன் தடை செய்தது. இரண்டாம் உலகப்போர் முடிவில், சைப்ரசில் இருந்து யூத அகதிகளை ஏற்றி வந்த கப்பல் கரையை அண்ட விடாமல் தடுத்தது. ஹைபா துறைமுகத்தில் நிறுத்தி வைத்த கப்பலை கிளம்ப விடாமல் தடுப்பதற்காக ஹகானா வைத்த குண்டு, நூற்றுக் கணக்கான அகதிகளை கொன்றதுடன் கப்பலை மூழ்கடித்தது. இந்தப் பிரச்சினை காரணமாக ஹகானாவுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையில் போர் மூண்டது. ஆனால், சர்வதேச அரங்கில், ஐ.நா. மன்றில் இஸ்ரேலை அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேறியதால், பிரிட்டன் பாலஸ்தீனாவை விட்டு வெளியேறியது. அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய புதிய வல்லரசுகளின் அழுத்தமும் அதற்கு முக்கிய காரணம். அவை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலகட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்பின. அதனால் பாலஸ்தீன பிரச்சினையில் எந்தத் தீர்வையும் காணாமலே, பிரிட்டன் வெளியேறியது.
(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:
6.
இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

Monday, August 04, 2014

உலக நாடுகளை சேர்ந்த பல்லின மக்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பது ஏன்?


பாலஸ்தீனர்களின் பிரச்சினையை, இன்றைக்கும் பலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். யானை பார்த்த குருடர்கள் போன்று, தாம் தவறாக புரிந்து கொள்வது மட்டுமல்லாது, அதையே உண்மை என்றும் நம்புகிறார்கள். பாலஸ்தீன இனப் பிரச்சினை, பல உலக நாடுகளில் உள்ள ஒடுக்கப்படும் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட முடிந்தாலும், அதற்கும் அப்பால் ஏதோ ஒரு முக்கியமான காரணம் இருக்க வேண்டும். அதனால் தான், ஒருவருக்கொருவர் தொடர்பற்ற பல்வேறு இன மக்களும் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர்.

உலக முஸ்லிம்கள், பாலஸ்தீனர்களை ஆதரிப்பது, இந்திய இந்துக்கள் ஈழத் தமிழர்களை ஆதரிப்பது போன்றது. அரபு நாடுகளை சேர்ந்த அரேபியர்களின் ஆதரவை, இந்தியா மற்றும் பல உலக நாடுகளை சேர்ந்த தமிழர்களின் ஈழ ஆதரவுடன் ஒப்பிடலாம். ஆனால், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், லத்தீன் அமெரிக்கர்கள்.... இவர்களும் எதற்காக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும்? அவர்கள் எல்லோரும் அரேபியர்களா? அல்லது முஸ்லிம்களா? அந்த மக்களின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை, நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்?

பாலஸ்தீனப் பிரச்சினை, ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது பாலஸ்தீனர்களோடு தொடங்கவுமில்லை, அவர்களோடு முடியப் போவதும் இல்லை. 

பாலஸ்தீனர்களை இனச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றி விட்டு, அவர்களது நாட்டை அபகரித்தது மட்டும் இஸ்ரேலின் குற்றம் அல்ல. எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய அண்டை நாடுகளுடன் போருக்கு சென்று, அவற்றின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பது, இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிப்பதில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. 

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை கண்டித்து, ஐ.நா. சபை நூற்றுக் கணக்கான தீர்மானங்களை போட்டு விட்டது. ஆனால், இஸ்ரேல் அவற்றை தூக்கி குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டது. ஐந்து வல்லரசுகளை தவிர, உலகில் வேறெந்த நாடாவது இஸ்ரேல் அளவுக்கு தைரியமாக ஐ.நா. வை எதிர்த்து நிற்க முடியுமா?

மேற்கத்திய நாடுகளில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்துவோரும், அவற்றில் பங்குபற்றுவோரும், அந்தந்த நாடுகளில் வாழும் அரபு அல்லது முஸ்லிம் இளைஞர்கள் "மட்டுமே" என்று நினைப்பது மிகவும் தவறான கருத்து. ஐம்பதுகளில் இருந்தே பாலஸ்தீன பிரச்சினைக்காக, மேற்குலகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, அமைதி வழி ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்ல, ஆயுதமேந்திய போராட்டங்கள் கூட நடந்துள்ளன என்பதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். பாலஸ்தீன விடுதலைக்காக, ஐரோப்பிய நகரங்களில் தமது உயிரைக் கொடுத்து போராடியவர்களில் பலர் ஐரோப்பிய வெள்ளையர்கள். அதை விட, ஜப்பானியர்களின் தியாகத்தையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் யாரும் மதத்தால் முஸ்லிமும் அல்ல, யாருக்கும் அரபு மொழியில் ஒரு சொல் கூடத் தெரியாது.

ஐரோப்பாவில், பாலஸ்தீன ஆதரவு ஆயுதப் போராட்டம் நடந்த காலங்களில், இன்று ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும், அரபு - முஸ்லிம் இளைஞர்கள் பலர் பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்த இளைஞர்கள், ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறையினர் தான். ஆனால், அவர்களின் பெற்றோரான முதலாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம்கள், அந்தக் காலங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். தனது நாட்டு அரசியலில் அக்கறை இல்லாதவர்களிடம், பாலஸ்தீன பிரச்சினை பற்றிய அறிவு இருந்திருக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், ஆரம்ப காலங்களில் இருந்து, இடதுசாரிகள் மட்டுமே பாலஸ்தீன சுதந்திரத்திற்காக போராடினார்கள். அதற்குக் காரணம், பாலஸ்தீனர்கள் தனி நாடு கேட்கிறார்கள் என்பதற்காக அல்ல. செவ்விந்தியர்களின் நாடுகளில் ஐரோப்பிய வெள்ளையர்கள் குடியேறி விட்டு, அதற்கு அமெரிக்கா, கனடா என்று பெயர் சூட்டியதைப் போன்றது தான், இஸ்ரேலிய - பாலஸ்தீன பிரச்சினையும்.

அமெரிக்க காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக செவ்விந்தியர்கள் மட்டுமே போராட வேண்டுமென்பதில்லை. உலகில் உள்ள மனிதநேயவாதிகள் யாரென்றாலும், செவ்விந்தியரின் மண் உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம். அந்த அடிப்படையில் தான், பாலஸ்தீன பிரச்சினை சர்வதேசத்தில் பலரது கவனத்தை ஈர்க்கின்றது. அதனை வெறுமனே அரேபியரின் அல்லது முஸ்லிம்களின் பிரச்சினையாக குறுக்கிப் பார்ப்பது அறியாமை.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம் இளைஞர்கள், பெருமளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு, வெறுமனே அரபு இன உணர்வோ அல்லது முஸ்லிம் மத உணர்வோ காரணம் அல்ல. இரண்டாம் உலகப் போருடன் ஐரோப்பிய காலனிய காலகட்டம் முடிவடைந்தாலும், நவ காலனிய காலகட்டம் ஆரம்பமாகியது. 

"அது என்ன நவ காலனியம்?" என்று அப்பாவித் தனமாக கேட்பவர்களுக்கு, பாலஸ்தீன பிரச்சினை கண் முன்னே தெரியும் உதாரணமாக உள்ளது. அதைப் புரிந்து கொள்வதற்கு, அவர்களுக்கு பெரிய அரசியல் அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேற்கத்திய செய்தி ஊடகங்களில், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. அமெரிக்கா, கனடா மற்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் கற்பிக்கப் படும் சரித்திர பாட நூல்களில், குறைந்தது ஓர் அத்தியாயமாவது இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை பற்றியதாக இருக்கும். 

ஆனால்... கொஞ்சம் பொறுங்கள். அந்தத் தகவல்கள் எதற்காக இஸ்ரேல் சார்புடையதாக இருக்கின்றன? அரபு மொழி பேசும் சமூகத்தினர் மத்தியில் வாய் வழியாக உலாவும் கதைகளுக்கும், பாடப் புத்தகங்கள், ஊடகங்கள் கூறும் கதைகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றதே? ஒரு சாதாரண அறிவுள்ள பிள்ளை அது குறித்து கேள்வி எழுப்ப மாட்டாதா? அவர்களது கேள்விகளுக்கு பதில் கிடைக்காத படியால் தான், தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். 

அத்துடன், மேற்கத்திய நாடுகளில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளும், அரசுக்களின் இன ரீதியிலான பாரபட்சமும், அவர்கள் மனதில் போராட்டக் குணாம்சத்தை உண்டாக்குகின்றன. சாதாரண மக்களுக்கு தமது பிரச்சனைகளை நேரடியாக வெளிப்படுத்த தெரியாது. பாலஸ்தீன ஆதரவு, அவர்களது அதிருப்தியை தெரிவிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதனால் தான், பாரிஸ் நகரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டதன் எதிரொலியாக கலவரங்கள் ஏற்பட்டன.

அரேபியர்கள் ஒற்றுமையான இனம் என்று கருதுவதும், இஸ்லாமியர்கள் ஒற்றுமையான மதத்தவர்கள் என்று நம்புவதும் பேதைமை. ஐரோப்பாவில் வாழும் மொரோக்கோ, அல்ஜீரிய முஸ்லிம்களுக்கும், துருக்கியருக்கும் இடையில் மதத்தை தவிர வேறெந்த ஒற்றுமையும் கிடையாது. ஈராக், ஈரான், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் கொளுந்து விட்டு எரியும், இஸ்லாமிய மதத்தில் உள்ள சன்னி - ஷியா மார்க்க வேறுபாடு, இன்று வெளியுலகில் ஓரளவு தெரிய வந்துள்ளது. ஆயினும், இன்னும் சில இஸ்லாமிய மதப் பிரிவினரின் பிரச்சினைகள் வெளியே தெரிய வருவதில்லை. 

மொரோக்கோ, அல்ஜீரியாவில் பெர்பெர் எனும் இன்னொரு மொழி பேசும் இனம் வாழ்வது எத்தனை பேருக்குத் தெரியும்? லிபியாவில் இனக் குழுக்களுக்கு இடையிலான பகை முரண்பாடுகள் இன்று மிகப் பெரிய இரத்தக் களரியை உண்டாக்கும் ஆயுத மோதல்களாக பரிணமித்துள்ளன. லெபனானில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள். 

இதைத் தவிர அரேபியருக்கு இடையிலான வர்க்க முரண்பாடுகள், கலாச்சார முரண்பாடுகள், யேமன், மொரிட்டானியா ஆகிய நாடுகளில் உள்ள சாதி முரண்பாடுகள்..... இப்படி எல்லாவற்றையும் கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தால், ஒரு புத்தகமே எழுதி விடலாம். இத்தனை முரண்பாடுகளை கொண்ட அரேபியர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடியது, பாலஸ்தீன பிரச்சினை மட்டுமே.

Wednesday, July 23, 2014

காஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு!


“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு காஸாவில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு போர்களுக்குமான தயாரிப்புகளும் முன்னெடுப்புகளும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளன. புலிகளின் இடத்தில் ஹமாசும், சிறிலங்கா அரசின் இடத்தில் இஸ்ரேலிய அரசும் உள்ளன.

ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போருக்கு அயலில் இருந்த பெரிய நாடான இந்தியா ஆதரவளித்தது. அதே மாதிரி, இஸ்ரேலுக்கு அயலில் உள்ள பெரிய நாடான சவூதி அரேபியா, இன்றைய காஸா இன அழிப்புப் போருக்கு உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மையை சொன்னால், பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஈழத்தில் கொல்லப் பட்ட பெரும்பான்மை தமிழ் மக்கள் இந்துக்களாக இருந்த போதிலும், ஓர் "இந்து நாடான" இந்தியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்தது. காஸாவில் கொல்லப்பட்ட பெரும்பான்மை அரபு மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், ஒரு "முஸ்லிம் நாடான" சவூதி அரேபியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்துள்ளது. "ஒரே மதத்தவருக்கு இடையிலான ஒற்றுமை" வெளியில் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே பயன்படும். உள்ளுக்குள்ளே அவரவர் பொருளாதார நலன்கள் மட்டுமே முக்கியமாக கருதப் படுகின்றன.

இஸ்ரேலிய தொலைக்காட்சியான சனல் 10 ல் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சாகுல் மபாஸ் (Shaul Mofaz) அதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். (Mofaz proposes role for Saudi Arabia and UAE to disarm Gaza; https://www.middleeastmonitor.com/news/middle-east/12931-mofaz-proposes-role-for-saudi-arabia-and-uae-to-disarm-gaza)  காஸாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போருக்கு சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் நிதியுதவி செய்யுமளவிற்கு சென்றுள்ளன! அதற்கு என்ன காரணம்?

பாலஸ்தீன பிரச்சினையில், “முஸ்லிம் நாடுகள்” எல்லாம் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை. வரலாறு நெடுகிலும், இஸ்ரேலுடன் ஒத்துழைத்த “முஸ்லிம் நாடுகள்” பலவுள்ளன. ஜோர்டான் பகிரங்கமாகவும், சவூதி அரேபியா மறைமுகமாகவும், தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுடன் நட்புறவை பேணி வந்துள்ளன. அவை பாலஸ்தீனத்தில், இஸ்ரேலுடன் சமரச உடன்படிக்கை செய்து கொண்ட அப்பாசின் கட்சியை ஆதரிக்கின்றன. ஹமாஸ், புலிகள் போன்று, நீண்ட காலமாக எந்த வித விட்டுக் கொடுப்புகளுக்கும் முன்வரவில்லை. ஆயுதப் போராட்டம் மூலம், பாலஸ்தீன விடுதலை அடையாமல் ஓயப் போவதில்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது.

சவூதி மன்னர் அப்துல்லாவின் மைத்துனர் துர்க்கி, புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாக இருப்பவர். அவர் அண்மையில், பெல்ஜியம் சென்று இஸ்ரேலிய ஜெனரல் ஆமோஸ் யால்டின் (Amos Yadlin) உடன் சந்தித்துப் பேசி இருக்கிறார். மத்திய கிழக்கில் ஒரு “புதிய சமாதானத் திட்டம்” குறித்து ஆராய்ந்துள்ளனர். அதன் முதற் கட்டமாக, ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும்.

இஸ்ரேலுக்கும், சவூதி அரேபியாவுக்கும் பொதுவான நண்பர்களும், பொதுவான பகைவர்களும் இருக்கின்றனர். இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா சிறந்த நண்பன். அதே மாதிரி, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் ஜென்ம விரோதிகள். அண்மைக் காலம் வரையில், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியும், சிரியாவும், ஈரானும் ஹமாசுக்கு உதவி வந்தன. சிரியா அரசு, உள்நாட்டுப் போரில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப் பட்டது. (முன்னர் எகிப்து பற்றிய பதிவொன்றில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கு சவூதி அரேபியா உதவியதாக தவறுதலாக எழுதி இருந்தேன். அதனை ஏற்கனவே சில நண்பர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர். எனக்குக் கிடைத்த தகவல்களும் அதை உறுதிப் படுத்துகின்றன. அப்போது நடந்த தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றேன்.)

பாலஸ்தீனத்திற்குள் ஈரான் ஊடுருவதற்கு முன்னர், ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும் என்பது இரண்டு கூட்டுக் களவாணிகளின் இரகசியத் திட்டம். (ஏற்கனவே இப்படி எல்லாம் நடக்கும் என்று மோப்பம் பிடித்த ஈரான், “பாலஸ்தீன மீட்புப் படை” ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆனால், அவர்களால் காசாவுக்குள் ஊடுருவ முடியுமா என்பது சந்தேகமே.) 

இதற்கிடையே, சூடான் தலைநகர் கார்ட்டூமுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது, இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன. (Israel said to bomb Sudan weapon warehouse; http://www.timesofisrael.com/israel-said-to-bomb-sudan-weapon-warehouse/) அந்த தாக்குதலில் சிலருக்கு காயமேற்பட்டதுடன், அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் வெடித்து நாசமாகியுள்ளன. அனேகமாக, ஈரானில் இருந்து ஹமாசுக்கு அனுப்பப் பட்ட ஏவுகணைகள் அங்கே பாதுகாத்து வைக்கப் பட்டதாகவும், அதனாலேயே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் கூட்டுச் சேர்ந்து, பாலஸ்தீன பிரச்சினையை தமது பாணியிலேயே தீர்க்க விரும்புகின்றன. அது ஏற்கனவே தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான “முள்ளிவாய்க்கால் தீர்வு”. அதன் முதல் கட்டமாக, இஸ்ரேல் காஸா மீது வான் வழித் தாக்குதல்களை நடத்தியது. இரண்டாம் கட்டமாக, தரை வழியாக படையினரை நகர்த்தியுள்ளது. இந்த யுத்தம் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்பதை ஏற்கனவே இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சில இனவாதிகள் “இனப்படுகொலை செய்வதில் தவறில்லை” என்று பகிரங்கமாக பேசி வருகின்றனர்.

காஸா ஆக்கிரமிப்புப் போரின் இறுதியில், இஸ்ரேலிய இராணுவம் ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து விட்டிருக்கும். ஆனால், ஹமாஸ் முற்றிலுமாக அழித்தொழிக்கப் பட்டதை தனது வெற்றியாக பறை சாற்றிக் கொள்ளும். அதற்குப் பின்னர், காஸாவில் எஞ்சியுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகிறோம் என்று சொல்லிக் கொண்டு, சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் களத்தில் இறங்கும்.

ஹமாஸ் அழிக்கப் பட்ட பின்னர், அந்த அரசியல் வெற்றிடத்தில் அப்பாசின் பதா கட்சி பதவியில் அமர்த்தப் படும். “அழிவுகளில் இருந்து மீண்டெழுதல், மீள் கட்டுமானம், இன நல்லிணக்கம்….” இது போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களுடன் அந்தத் திட்டங்கள் நிறைவேறும். 

இதெல்லாம் நடக்கும் வரையில் சர்வதேச சமூகம் கண்களை மூடிக் கொண்டிருக்கும். ஐ.நா. ஒப்புக்கு விசாரணை செய்து, காஸாவில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் பட்டதாக ஓர் அறிக்கை சமர்ப்பிக்கும். போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கும். ஜெனீவாவில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப் படும். அதற்கும் அப்பால் எதுவும் நடக்காது.

இவை எல்லாம் ஏற்கனவே ஈழத் தமிழர்கள் கண்டு அனுபவித்த சம்பவங்கள் தான். ஏகாதிபத்திய நாடுகளால் வன்னியில் நிறைவேற்றப் பட்ட நகல் திட்டம், இந்த முறை காஸாவில் பிரயோகிக்கப் படுகின்றது. ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாமல், “ஈழப் பிரச்சினை வேறு, பாலஸ்தீன பிரச்சினை வேறு” என்று இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளப் போவதில்லை.

*******


இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியுடன், உலக நாடுகளில் உள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிரான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலின் போர்க்குற்றங்களில் பங்காளிகள் எனக் குற்றம் சாட்டியுள்ளன. பாலஸ்தீன மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், படுகொலைகளையும் கண்டிப்பதுடன், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். 

கூட்டறிக்கையில் விடுக்கப் பட்டுள்ள கோரிக்கைகள்: 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் கண்டிக்கப் பட வேண்டும். 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். 
  • இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற வேண்டும். 
  • இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப் பட வேண்டும். - காஸா, ஜெருசலேம், மேற்குக்கரை பகுதிகளில் வாழும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விலக்கப் பட வேண்டும். 
  • 1967 ம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைக்கு அப்பாலான குடியேற்றங்கள் அகற்றப் பட வேண்டும். 
  • ஐ.நா. தீர்மானத்திற்கு அமைய பாலஸ்தீன அகதிகளின் தாயகம் திரும்புதல் உறுதி செய்யப் பட வேண்டும். - இஸ்ரேலுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகள் இரத்து செய்யப் பட வேண்டும். 
  • கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட, 1967 ம் ஆண்டின் எல்லைக் கோட்டின் அடிப்படையில் பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப் பட வேண்டும்.


இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் விபரம் : 
1. Communist Party of Albania
2. Algerian Party for Democracy and Socialism
3. The Communist Party of Australia
4. Democratic Progressive Party (Bahrain)
5. Communist Party of Bangladesh
6. Bangladesh Workers Party
7. Communist Party of Brazil
8. British Communist Party
9. New Communist Party of Britain
10. Communist Party of Canada
 11. Chilean Communist Party
12. Croatia, Socialist Workers Party
13. AKEL (Cyprus)
14. Communist Party of Denmark
15. FARC-EP, PCCC, (Colombia)
16. Communist Party of Finland
17. The German Communist Party
18. Communist Party of Greece
19. Hungarian Workers' Party
20. Communist Party of India (Marxist)
21. The Tudeh Party (Iran)
22. Communist Party of Ireland
23. The Communist Party of Israel
24. The Italian Communist Party
25. Jordanian Communist Party
26. Communist Party of Luxembourg
27. Communist Party of Mexico
28. Popular Socialist Party - National Political Union, Mexico
29. New Communist Party of the Netherlands
30. Communist Party of Norway
31. Palestinian Communist Party
32. Palestinian People's Party
33. Communist Party of Peru
34. Philippine Communist Party (PKP-1930)
35. Communist Party of Poland
36. Portuguese Communist Party
37. Romanian Communist Party
38. The Communist Party of the Russian Federation
39. South African Communist Party
40. Russian Communist Workers' Party
41. Yugoslavia, New Communist Party
42. Communist Party of Serbia
43. Communist Party of Slovakia
44. Communist Party of the Peoples of Spain; Catalonia,
45. Communist Party of Spain
46. Sudanese Communist Party
47. Communist Party of Sweden
48. Syrian Communist Party
49. League of Communists of Ukraine
50. Austrian Workers' Party
51. Belarusian Communist Workers' Party
52. Communist Party of Sweden

Wednesday, July 16, 2014

தமிழினப் படுகொலைக்கு கவலை தெரிவித்து ஓர் இஸ்ரேலியன் கூட அழவில்லை

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர், நான் நெதர்லாந்து வந்த புதிதில், ஆம்ஸ்டர்டாம் நகரின் மத்தியில் உள்ள தங்கு விடுதி (Hotel) ஒன்றில் சில மாதங்கள் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஓர் இஸ்ரேலிய யூதர். பணியாட்களில் பல தமிழர்களும் இருந்தனர். இஸ்ரேலில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தான், பெரும்பாலும் அந்த ஹோட்டலில் தங்குவார்கள். ஓய்வு நேரங்களில் அவர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளும் சாதாரணமான அப்பாவி மக்கள் தான். தங்களுடைய நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர் மாதிரி, உலகில் வேறெந்த நாட்டிலாவது நடக்கிறதா என்று கேட்குமளவிற்கு அப்பாவிகள். அவர்களுக்கு பாலஸ்தீனர்களின் பிரச்சினை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. பலர் பாலஸ்தீனர்களை தமது வாழ்நாளில் கண்டிருக்கவில்லை. இஸ்ரேலிய அரசு வழங்கும் ஒரு பக்கச் சார்பான தகவல்களை உண்மை என்று நம்புகிறவர்கள். தங்களது பக்க இழப்புகளை பற்றி மட்டுமே மிகைப் படுத்தி பேசத் தெரிந்தவர்கள்.

இஸ்ரேலியர்கள் எங்களைப் பற்றியும் விசாரிப்பார்கள். எங்கள் எல்லோரையும் இந்தியர்கள் என்று நினைத்துக் கொண்டு பேசுவார்கள். இந்தியாவில் உள்ளவர்கள் ஹிந்தி (மட்டும்) பேசுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். (இஸ்ரேலில் சில நேரம் ஹிந்தி திரைப் படங்கள் திரையிடுவார்களாம்.) ஆனால், உலகில் தமிழ் என்ற மொழி இருப்பதே அவர்களுக்கு தெரியாது. ஸ்ரீலங்கா என்றால், அது எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. உலகில் அப்படி ஒரு நாடு இருப்பதையே அப்போது தான் கேள்விப் பட்டிருப்பார்கள். உலக வரை படத்தில் இலங்கையை தொட்டுக் காட்டினால்; "ஒ அதுவா! இவ்வளவு காலமும் அது இந்தியாவின் ஒரு பகுதி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்...." என்று சொல்வார்கள்.

அந்தளவு விடய ஞானம் கொண்ட அப்பாவி இஸ்ரேலிய யூதர்களிடம்: 
"முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நடந்து கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? 
- "எங்களுக்காக குரல் கொடுத்தீர்களா?" 
- "தமிழினப் படுகொலையை நிறுத்த வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்தீர்களா?" 
-  "ஐ.நா. வில் கதைத்தீர்களா?" 
இது போன்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தால், எம்மைப் போன்ற முட்டாள்கள் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கும் பல தமிழ் அரசியல் ஆர்வலர்கள் பலர், குறிப்பாக வலதுசாரி குறுந் தேசியவாதிகள், அவ்வாறு தான் மடத் தனமாக வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் உயர்கல்வி கற்ற அறிவுஜீவிகள் என்பதும் ஆச்சரியத்திற்குரியது.

"ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்ட நேரத்தில், பாலஸ்தீனர்கள் எதுவும் செய்யவில்லை" என்று கூச்சலிடுபவர்கள், எத்தனை வருட காலம் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கு எத்தனை பாலஸ்தீனர்களை தெரியும்? பாலஸ்தீனர்கள் அப்படிச் செய்யவில்லை, இப்படிச் செய்யவில்லை என்று எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு கதைக்கிறார்கள்?

பாலஸ்தீனர்களை குறை கூறும் பெரும்பாலானோரின் மனதில் மறைந்திருப்பது, இந்து அல்லது கிறிஸ்தவ மதவெறியும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்மமும் தான். பாலஸ்தீனம், மட்டுமல்ல காஷ்மீரில் கொல்லப் படும் மக்களும் அவர்கள் கண்களுக்கு முஸ்லிம்களாக மட்டும் தான் தெரிகின்றனர். "முள்ளிவாய்க்காலுக்கு பிறகு தான் நாங்கள் இப்படி மாறினோம்" என்று சொல்வது ஒரு மிகப் பெரிய பொய். அது வெறும் நொண்டிச் சாட்டு மட்டுமே. முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும், அவர்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிராகத் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னரும், பாலஸ்தீனத்தில் மக்கள் கொல்லப் படும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. பாலஸ்தீன பிரச்சினை பற்றிய தகவல்களுக்கு, தொலைக்காட்சி செய்திகளில் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இன்று ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பலர், அப்போதும் பாலஸ்தீனர்களுக்காக கவலைப் படவில்லை.

ஒவ்வொரு தடவையும் இஸ்ரேலில் நடக்கும் யுத்தம் காரணமாக பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப் பட்டால், அதன் எதிரொலியாக ஐரோப்பிய நகரங்களில் இடதுசாரி அமைப்புகள் ஒழுங்கு படுத்தும் ஆர்ப்பாட்டங்கள்  நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வருமாறு, எத்தனையோ தடவைகள், எனக்குத் தெரிந்த (ஈழத்) தமிழ் நண்பர்களிடம் கேட்டுள்ளேன். இடதுசாரி சார்புள்ள ஒன்றிரண்டு தமிழர்கள் மட்டுமே வருவார்கள். மற்றவர்கள் ஏதாவது நொண்டிச் சாட்டு சொல்லி வர மறுப்பார்கள். சிலர் தங்களுக்கு பிற நாட்டு பிரச்சினைகளில் ஆர்வம் இல்லை என்று நேரடியாகவே கூறுவார்கள்.

தமிழர்கள் மட்டும் தான் அப்படி என்று சொல்ல முடியாது. அனேகமாக, வேற்றின மக்களும் அப்படித் தான். பாலஸ்தீனம் அல்லது ஈராக் போர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் பெருமளவு அரபு- முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், நேட்டோ படைகள் செர்பியா மீது குண்டு போட்டதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில், அவர்களில் ஒருவர் கூட வரவில்லை. செர்பியா மீதான குண்டுவீச்சுக்கு எதிராக பெருமளவில் வந்த செர்பியர்கள், பாலஸ்தீன ஆர்ப்பாட்டத்திற்கு வர மாட்டார்கள்.

அதே மாதிரித் தான், குர்திஷ் பிரச்சினைக்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் குர்திஷ் மக்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். இலங்கையில் நடந்த போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் மட்டுமே வந்திருப்பார்கள். இவ்வாறு தான், எல்லா தேசிய இனங்களும், தத்தமது தேசிய கிணறுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

பல நாடுகளை சேர்ந்த இடதுசாரி அரசியல் ஆர்வலர்கள் மட்டுமே, எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வார்கள். ஈராக், ஈழம், குர்திஸ்தான், பாலஸ்தீனம் என்று எங்கெல்லாம் ஒடுக்கப் படும் மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடக்கின்றதோ, அங்கெல்லாம் இடதுசாரி ஆர்வலர்களை நீங்கள் காணலாம். ஐரோப்பிய இடதுசாரிகள் மட்டுமல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க இடதுசாரிகளும் பாரபட்சமின்றி எல்லா ஊர்வலங்களிலும் கலந்து கொள்வார்கள். 

தமிழர்களான நாங்கள், உலகில் எந்த இனம் படுகொலை செய்யப் பட்டாலும் அதற்காக கவலைப் பட மாட்டோம். ஆனால், உலகம் முழுவதும் எங்களுக்காக அழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையான அரசியல் தார்மீகம் என்பது தெரியவில்லை. தமிழர்கள் இது வரை காலமும் அமெரிக்காவை நம்பி ஏமாந்தார்கள். இனிமேலாவது சர்வதேச மட்டத்தில் தமது நட்புச் சக்திகள் யார் என்பதைக் கண்டுணர வேண்டும்.

Monday, July 14, 2014

பாலஸ்தீன பிரச்சினையால் உலக பொருளாதார நெருக்கடி உண்டாகும்

பாலஸ்தீன பிரச்சினை, எந்தளவு தூரம் உலகப் பொருளாதாரத்தை, தங்களது சொந்த வாழ்க்கையையும் பாதிக்க வல்லது என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.

அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எண்ணை தர மாட்டோம் என்று பகிஷ்கரிப்பு செய்தால் என்ன நடக்கும்? அது உலகம் முழுவதும், இது வரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை கொண்டு வரும். அந்த நிலைமை ஏற்கனவே ஒரு தடவை ஏற்பட்டிருந்தது என்பதை பலர் மறந்து விட்டார்கள்.

1967 ம் ஆண்டு நடந்த போரில் தான் இஸ்ரேல் இன்றுள்ள பாலஸ்தீன பிரதேசங்களை (காஸா, மேற்குக் கரை) ஆக்கிரமித்தது. அத்துடன் நில்லாது, சிரியாவின் கோலான் குன்றுகளையும், எகிப்தின் சினாய் பகுதியையும் ஆக்கிரமித்தது.

1973 ம் ஆண்டு, ஆறு வருடங்களுக்கு முன்னர் தாம் இழந்த பிரதேசங்களை மீட்பதற்காக, சிரியாவும், எகிப்தும், இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தன. இஸ்ரேலில் அது யொம் கிப்பூர் யுத்தம் என்று அழைக்கப் படுகின்றது. அந்தப் போரிலும், அதற்கு முன்னரும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தது. உண்மையில் அமெரிக்க உதவி காரணமாகவே இஸ்ரேல் போர்களில் வென்று வந்தது. 

இதனால், இஸ்ரேலுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளை தண்டிப்பதற்காக, அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எண்ணை தர மறுத்து விட்டன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள், எண்ணை ஏற்றுமதித் தடையால் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தன. அந்தக் காலங்களில் வீதிகளில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை.

எண்ணைத் தடையானது, பல மேற்கத்திய நாடுகளை, அமெரிக்காவின் மத்திய கிழக்கு நிலைப்பாட்டில் இருந்து விலக வைத்தது. நேட்டோ கூட்டமைப்பில், அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிச் சென்றன. எண்ணைத் தடை இன்னும் சில மாதங்கள் நீடித்து இருந்தால், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் சுக்கு நூறாக நொறுங்கி இருக்கும்.

உண்மையில், அன்றைய நெருக்கடி காரணமாக மேற்குலக நாடுகள் நேரடியாக பாதிக்கப் பட்டாலும், பிற உலக நாடுகளிலும் அது பல பொருளாதாரப் பிரச்சனைகளை உண்டாக்கியது. அன்றிருந்த சோவியத் எதிர் முகாம் இன்று இல்லை. உலகில் அனேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தங்கி உள்ளன. அப்படியான நிலையில், இன்று ஓர் எண்ணைத் தடை ஏற்பட்டால்? விளைவுகளை கற்பனை செய்து பார்க்கவே முடியாது.

அன்றைய காலங்களில், மத்திய கிழக்கு முழுவதும் முற்போக்கு அரபு தேசியவாதம் பிரபலமாக இருந்தது. எகிப்து, சிரியா, ஈராக் ஆகிய நாடுகள், அரபு தேசியவாதத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டமாக மாற்றிக் காட்டின. தாங்கள் ஒன்று பட்டால், உலக வல்லரசான அமெரிக்காவை கூட காலடியில் விழ வைக்கலாம் என்று உணர்ந்து கொண்டன. சவூதி அரேபியா போன்ற பிற்போக்கான மன்னராட்சி நாடுகள் கூட, வேறு வழியின்றி அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால், அரபு நாடுகளின் ஒற்றுமையை குலைப்பதற்காக அமெரிக்கா பல சூழ்ச்சிகளில் இறங்கியது.

உலகில் இனியொரு தடவை எண்ணைத் தடை வரக் கூடாது என்பதற்காக அமெரிக்கா பல திட்டங்களை வகுத்தது. அதில் முக்கியமானது இஸ்லாமியவாதம். எண்ணைத் தடை காரணமாக, உலகச் சந்தையில் எண்ணையின் விலை நான்கு மடங்கு அதிகமாக உயர்ந்தது. சவூதி அரேபியாவின் கஜானா நிரம்பி வழிந்தது. உலகம் முழுவதும் கடும்போக்கு இஸ்லாமியவாத வளர்ப்பதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்துமாறு அமெரிக்காவே ஆலோசனை வழங்கியது. இன்று பல உலக நாடுகளில் அட்டகாசம் செய்யும் வகாபிச தீவிரவாதக் குழுக்கள் பல, அன்றைய சவூதி பெட்ரோலிய டாலரில் உருவாக்கப் பட்டவை தான்.

யாரை எப்படி வளைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வஞ்சகப் புகழ்ச்சியில் அமெரிக்கர்களை வெல்ல ஆள் கிடையாது. முன்னொரு காலத்தில் இந்தியாவை காலனிப் படுத்திய பிரிட்டிஷ்காரர்கள், "நீங்கள் ஆன்மீகத்தில் சிறந்த மதத்தை கொண்டிருக்கிறீர்கள்" என்று இந்துக்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். "முன்தோன்றிய மூத்த குடி உங்களுடையது" என்று தமிழர்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். அமெரிக்கர்களும் அதே வழியை பின் பற்றி, இஸ்லாமியர்களின் "மதப் பெருமைகளை" மீட்டுக் கொடுத்தார்கள். இன்று எல்லா அரபு நாடுகளிலும், நாசர் முன்மொழிந்த முற்போக்கு அரபு தேசியவாதம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டது.

பாலஸ்தீன பிரச்சினையை "முஸ்லிம்களின் பிரச்சினை" என்று மதவாத நோக்கில் பார்ப்பவர்கள் தான் அதிகம். முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாதவர்களும் அப்படியான கருத்துக்களை பரப்புவதற்கு, தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். "உலகில் இத்தனை முஸ்லிம் நாடுகள் இருந்தும், எதற்காக பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முடியவில்லை?" என்று சிலர் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்புகின்றனர். அடிப்படையில் அவர்களும் மதவாதிகள் தான். "உலகில் இத்தனை கிறிஸ்தவ நாடுகள் இருந்தும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்ற கேள்வியை அவர்கள் கேட்க மாட்டார்கள்.

பாலஸ்தீனர்களில் குறைந்தது பத்து சத வீதமானோர் கிறிஸ்தவர்கள். அது மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹெம் உட்பட, விவிலிய நூலில் கூறப்படும் பல இடங்கள் பாலஸ்தீனத்தில் உள்ளன. அந்த இடங்களில் இப்போதும் வாழும் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் பாலஸ்தீன அரேபியர்கள். எதற்காக உலக கிறிஸ்தவர்கள் யாரும் தமது புனித பூமியை பாதுகாக்க முன்வரவில்லை? கிறிஸ்துவின் காலத்தில் இருந்து அங்கு வாழும் கிறிஸ்தவ- பாலஸ்தீனர்களை காப்பாற்ற முன் வரவில்லை?

ஒரு காலத்தில் பாலஸ்தீன இயக்கங்கள், ஈழ விடுதலை அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கின. அந்தக் காலங்களில், ஈழத்திற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் பேணப் பட்டு வந்தன. அந்த உண்மையை இன்றைக்கு பலர் மறந்து விட்டார்கள். சிலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

பாலஸ்தீனர்களையும், தமிழர்களையும் ஒன்று சேர விடாது பிரித்து வைத்ததில், மொசாட், சிஐஏ உளவாளிகளின் பங்கு இருந்ததை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த சூழ்ச்சி வெற்றி பெற்றதன் பின்னணியில், அந்நிய கைக்கூலிகளின் ஏகாதிபத்திய ஆதரவு பிரச்சாரமும் இருந்துள்ளது. அதன் மூலம் பல தசாப்தங்களாக, தமிழர்கள் பாலஸ்தீனத்தை பற்றி நினைக்க விடாது தடுத்து வந்தனர். பழைய தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப் பட்டு விட்டன.

இன்று பாலஸ்தீனத்தில் வாழும் சாதாரண மக்களுக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. ஈழப்போர் குறித்த செய்திகளுக்கு மேற்கத்திய ஊடகங்களே ஆர்வம் காட்டாத நிலையில், அரபு ஊடகங்களை பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. பாலஸ்தீனம் மட்டும் அல்ல, இஸ்ரேலில் வாழும் மக்களுக்கும் இலங்கையில் நடந்த போர் பற்றி எதுவும் தெரியாது. பெரும்பான்மையான இஸ்ரேலிய யூதர்களுக்கு, தமிழர்கள் என்ற இனம் உலகில் வாழும் உண்மை கூடத் தெரியாது. இந்த நிலைமையில், பாலஸ்தீனர்களை மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான யூதர்கள் 

Thursday, July 10, 2014

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன்னொரு ஈழப் போர்


ஈழப் போராட்டம் தொடங்கிய எழுபதுகளில், பாலஸ்தீனர்கள் மட்டுமே தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார்கள். ஈழ விடுதலைக்காக போராடப் புறப்பட்டவர்களுக்கு லெபனானில் போர்ப் பயிற்சி கொடுத்தார்கள். ஒரே ஆசியக் கண்டத்தில் உள்ள, இரண்டு நவ- காலனித்துவ நாடுகளில் நடக்கும் ஈழப் போராட்டமும், பாலஸ்தீன போராட்டமும் ஒன்று என்று உளப்பூர்வமாக நம்பினார்கள்.

அன்றைக்கு தமிழ்நாட்டில் கூட அந்தளவு ஈழ ஆதரவு இருக்கவில்லை. "இந்தியாவில் இருந்து பிழைக்கப் போனவர்கள் தனி நாடு கேட்பது நியாயமா?" என்று தமிழர்கள் கூட கேட்டார்கள். தமிழகத்தில் புகலிடம் கோரிய ஈழப் போராளிகள், தங்குவதற்கு இடம் தேடித் திரிந்த காலம் ஒன்றிருந்தது. தமிழினப் பெருமை பேசிய அரசியல்வாதிகள் கூட ஆதரிக்கவில்லை.

அந்த வரலாற்றை பலர் இன்று மறந்து விட்டதற்கு, பிற்காலத்தில் ஊடுருவிய மொசாட், ரோ உளவாளிகளின் சூழ்ச்சிகளும் ஒரு காரணம். இடை நடுவில் புகுந்து, ஈழப் போராட்டத்தை கடத்திச் சென்றுள்ள இந்துத்துவா வாதிகள், ஈழத் தமிழர்களையும், பாலஸ்தீனர்களையும் நிரந்தரமாக பிரித்து விடப் பார்க்கிறார்கள்.


இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் மத்தியில், மீண்டும் ஹமாஸ் மீதான ஆதரவு அதிகரித்து வருகின்றது. முன்பு ஈழத்தில் வன்னிப் பிரதேசத்தில் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவை தெரிந்தவர்களுக்கு, இன்றைய காஸா நிலைமையை புரிந்து கொள்வது எளிது.

காஸா போரை ஹமாஸ் தான் ஆரம்பித்து வைத்தது என்று இஸ்ரேல் வழமை போல குற்றம் சாட்டியுள்ளது. முன்னர் ஈழப்போர் நடந்த காலங்களிலும், சிறிலங்கா அரசு எப்போதும் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்தார்கள் என்று குற்றம் சாட்டுவது வழமை. ஆனால், மிகவும் சக்தி வாய்ந்த இராணுவத்தை வைத்திருக்கும் அரசுகள், போரின் போக்கை நிச்சயிக்கும் வல்லமை பெற்றிருக்கின்றன.

2009 ம் ஆண்டு, இறுதிப் போரில் புலிகள் அழிக்கப் பட்டது மாதிரி, இந்த வருடம் காஸாவில் ஹமாஸ் அழிக்கப் படா விட்டாலும், ஒரேயடியாக அங்கிருந்து விரட்டியடிக்கப் படலாம். ஏனெனில், அந்தளவுக்கு ஹமாஸ் பலவீனமாக உள்ளது. இந்தப் போரை ஹமாஸ் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், ஹமாஸ் கிளர்ச்சிப் படையினரை ஆதரித்தது. அதனால், ஆசாத் அரசு ஹமாசுக்கு வழங்கிய உதவிகளை நிறுத்திக் கொண்டது. கூடவே ஈரானும் கைவிட்டு விட்டது. அடுத்ததாக, அயல்நாடான எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் ஹமாசுக்கு நிறைய உதவிகள் கிடைத்தன. ஆனால், புதிய எகிப்திய அரசாங்கம், எந்த உதவியும் செய்யாதது மட்டுமல்ல, ஆயுதங்கள், அத்தியாவசியப் பொருட்களை கடத்துவதற்கு பயன்பட்டு வந்த இரகசிய சுரங்கப் பாதைகளையும் மூடி விட்டது. ஈழத்தில் இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியா, வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு சென்ற விநியோகப் பாதைகள் தடுக்கப் பட்டமை இங்கே நினைவுகூரத் தக்கது.

ஈழத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த சமாதான காலத்தில், வன்னியில் புலிகளின் நிர்வாகம் குறித்து, அங்கு வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பல விமர்சனங்கள் இருந்தன. சமாதான காலங்களில் மக்களை தம்மோடு வைத்திருப்பதற்காக புலிகள் பெரும்பாடு பட வேண்டி இருந்தது. வழமையாக, போர் நடக்கும் காலங்களில், புலிகளுக்கான தமிழ் மக்களின் தார்மீக ஆதரவு உச்சத்தில் இருக்கும். பாலஸ்தீனத்திலும் அது தான் நிலைமை.

வன்னியில் புலிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், காஸாவில் ஹமாசுக்கு ஏற்பட்டன. 2006 ம் ஆண்டு நடந்த தேர்தலில், காஸாவில் ஹமாஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அந்தக் காலங்களில், ஹமாஸ் மட்டுமே தங்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று மக்கள் அவர்கள் மேல் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள்.

ஆயினும், ஹமாஸ் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், காஸாவில் பல பொருளாதாரப் பிரச்சினைகள் தலைகாட்டின. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடைகள், எரிபொருள், தண்ணீர் தட்டுப்பாடுகள், இது போன்ற குறைகளை ஹமாஸ் நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், காஸா மக்களுக்கும், ஹமாசுக்கும் இடையில் விரிசல் காணப் பட்டது. ஆனால், தற்போது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையானது அந்த நிலைமையை மாற்றியுள்ளது. 

ஈழப்போர் நடந்த காலங்களில் தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தது போன்று, இன்று மீண்டும் காஸா மக்கள் பெருமளவில் ஹமாஸை ஆதரிக்கின்றனர். அவர்களுக்கும் வேறு வழியில்லை. இஸ்ரேலிய படையினரின் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு எதிராக, ஏதாவது செய்யக் கூடியவர்கள் ஹமாஸ் மட்டுமே என்பது அந்த மக்களின் நம்பிக்கை. முன்பு வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்களும், அவ்வாறு தான் தங்களை பாதுகாப்பதற்காக புலிகள் மட்டுமே இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தார்கள்.

வன்னி மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் நடந்த காலங்களில், புலிகளை விட்டு மக்கள் விலகி இருக்க வேண்டுமென கோரும் துண்டுப் பிரசுரங்களை, சிறிலங்கா வான் படையினர் தூவினார்கள். அதே மாதிரி, இன்று காஸா பகுதியில் இஸ்ரேலிய வான் படையினர் செய்கின்றனர். ஹமாஸ் உறுப்பினர்களை விட்டு விலகி இருக்குமாறு மக்களை எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் விசிறப் படுகின்றன. ஆனால், யார் ஹமாஸ் உறுப்பினர் என்று யாருக்குத் தெரியும்? மேலும் காஸா பிராந்தியத்தில் ஹமாஸ் நிர்வாகம் தான் நடக்கின்றது. அதனால், எல்லா இடங்களிலும் ஹமாஸ் உறுப்பினர்கள் பரவலாக காணப் படுவார்கள்.

காஸா என்பது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை. இஸ்ரேலுடனான அனைத்து எல்லைகளும் மூடப் பட்டுள்ளன. கடலிலும் இஸ்ரேலிய கடற்படை ரோந்து சுற்றித் திரிகின்றது. எகிப்துடனான சிறு துண்டு எல்லைப் பிரதேசத்திலும் யாரையும் வர விடாமல், எகிப்திய இராணுவம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு பிரதேசத்தில் இருந்து, யாரும் அகதியாகக் கூட வெளியேற முடியாது.

பாலஸ்தீனத்தில் நடப்பது போரல்ல. அது ஓர் இனப்படுகொலை. ஆனால், உலக நாடுகள் அதைப் பற்றிக் கவலைப் படாமல், உலக கால்பந்தாட்டப் போட்டிகளை கண்டுகளித்துக் கொண்டிருக்கின்றன.

Friday, February 10, 2012

ஆவணப் படம் : "காஸாவின் கண்ணீர்" (Tears of Gaza)

ஈழத்தில் தமிழ் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், காஸாவில் பாலஸ்தீன இனப்படுகொலை நடந்தது. இரண்டையும் இன்று உலகம் மறந்து விட்டது. பாலஸ்தீனர்கள் வாழும் திறந்தவெளிச் சிறையான காஸா பகுதியை, இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவங்களை வைத்து இந்த திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நோர்வே நாட்டு மருத்துவரும், சமூக ஆர்வலருமான Vibeke Lokkeberg காஸாவின் அவலத்தை, Tears of Gaza எனும் ஆவணப் படமாக பதிவு செய்துள்ளார். ஐரோப்பிய நகர திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட திரைப்படம், தற்பொழுது இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளது. (குறிப்பு: நெஞ்சை உறைய வைக்கும் கோரமான காட்சிகள் இருப்பதால், இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.)

Part 1

Part 2

Part 3

Part 4

Part 5

Part 6

Saturday, December 25, 2010

இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்


["தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"](பகுதி: ஆறு)

இஸ்ரேலின் காஸா பிரதேசமும், கிழக்கிலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வாகரை பிரதேசமும், பல ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இரண்டுமே ஒடுக்கமான நிலப்பரப்புகள். நீளத்தால் கூடியவை, அகலத்தால் குறுகியவை. இரண்டு பிரதேசங்களும் மூன்று பக்கமும் எதிரி தேசத்தால் சூழப்பட்டிருந்தன. ஒரு பக்கம் கடலைக் கொண்டிருந்தது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், வாகரை ஒரு சிறிய நிலப்பரப்பு. ஆனால் செறிவான சனத்தொகையைக் கொண்டிருந்தது. மேலும் வன்னி பெரு நிலப்பரப்புடன் சேராமல் தனித்துக் காணப்பட்டது. காஸாவும் பாலஸ்தீன பெரு நிலப்பரப்பான மேற்குக்கரையுடன் சேராமல் தனித்துள்ளது. மிகவும் ஒடுக்கமான காஸா பிரதேசத்தினுள் அதிகளவு பாலஸ்தீனர்கள் வாழ்கின்றனர்.
வாகரையிலும் வாழ்ந்த தமிழர்களில் பலரும், காஸா வாழ் பாலஸ்தீனரில் பலரும் ஒரே மாதிரியான கடந்த காலத்தைக் கொண்டவர்கள். திருகோணமலை, மட்டக்களப்பு மாகாணங்களில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களால் பாதிக்கப்பட்டு வெளியேறிய மக்கள் வாகரையில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆயுதமேந்திய சிங்கள ஊர்காவல் படைகள் அந்த தமிழர்களை இருப்பிடங்களை விட்டு விரட்டினார்கள். காஸாவில் வாழும் பாலஸ்தீனர்கள் ஹைபா (வட இஸ்ரேல்), பெர்ஷேபா, அஷ்கெலோன் (தென் இஸ்ரேல்) ஆகிய நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள். 1948 ம் ஆண்டின் பின்னர், அந்த நகரங்களில் யூத குடியேற்றங்கள் அதிகரித்தன. யூத ஆயுதக் குழுக்கள், அங்கு வாழ்ந்த பாலஸ்தீனர்களை காஸா வரை அடித்து விரட்டினர். தமிழர்களினதும், பாலஸ்தீனர்களினதும் எதிர்ப்பு நடவடிக்கையும் ஒரே மாதிரியாக இருந்தது. வாகரையில் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தாக்குதலால், ஒரு காலத்தில் தமிழ்க் கிராமங்களாக இருந்த சிங்களக் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. காஸாவில் நிலை கொண்டிருந்த ஹமாசின் ஷெல் தாக்குதலால் ஒரு காலத்தில் அரபு கிராமங்களாக இருந்த யூத கிராமங்கள் பாதிக்கப்பட்டன. சர்வதேச சமூகம் இரண்டையும் பயங்கரவாதமாக பார்த்தது.

இலங்கையில் சிங்களக் குடியேற்றங்கள், மகாவலி ஆற்றை திசைதிருப்பி அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழே இடம்பெற்றது. அதை சாட்டாக வைத்து கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம், பிரிட்டிஷ் கடற்படை முகாம் திருகோணமலையில் இருந்தது. இலங்கை சுதந்திரமடைந்த போதிலும், நாட்டின் தலைவியாக பிரிட்டிஷ் மகாராணி விளங்கினார். 1972 ம் ஆண்டு, குடியரசான பின்னரே பிரிட்டனுடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப் பட்டன. ஆகவே இலங்கை சுதந்திரமடைந்த சில வருடங்களிலேயே இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்கள் பிரிட்டனின் கண்ணுக்கு முன்னால் தான் நடந்து கொண்டிருந்தது. யூத குடியேற்றங்கள் இடம்பெற்ற காலங்களில், அன்றைய பாலஸ்தீனா பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பிரிட்டன் யூத குடியேற்றங்களை கண்டும் காணாமல் இருந்தது. இஸ்ரேலியர்கள் "சுதந்திரத்திற்கான போர்" புரிந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆயுதங்களைக் கொண்ட யூத இராணுவம் பலமாக இருந்தது. 1948 ல், பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு விலகிய பின்னர், இராணுவ பலத்தைக் கொண்டிருந்த யூதர்கள் இஸ்ரேலை பொறுப்பேற்றனர்.

அதே வருடம் பிரிட்டன் இலங்கையை விட்டு வெளியேறியது. பிரிட்டன் அதற்கு முன்னர், சிங்களவர்களை மட்டுமே இராணுவமயமாக்கியது. சில பரங்கி அதிகாரிகளும், மிகக் குறைந்தளவு தமிழர்களும் அன்று சிறிலங்கா இராணுவத்தில் இருந்தனர்.
எண்ணிக்கையில் குறைந்த சிறிய இஸ்ரேலிய இராணுவம், பெருந்திரளான அரபு படைகளுடன் மோதி வென்றதாக பரப்புரை செய்யப்படுகின்றது. அன்றைய நிலையை தெரிந்த ஒருவருக்கு அந்தக் கதையை நம்புவது கடினமாக இருக்கும். இஸ்ரேலை சூழ இருந்த அரபு நாடுகள் அன்று இராணுவ பலத்துடன் இருக்கவில்லை. லெபனான், சிரியா ஆகியன 1946 ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலையடைந்தன. ஜோர்டான் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. எகிப்தில் மன்னர் பிரிட்டிஷாரின் தலையாட்டும் பொம்மையாக இருந்தார். அன்றைய போரில் ஈடுபட்ட படைகளின் விபரம் பின்வருமாறு. யூத ஆயுதக் குழுக்கள் கிஷ், கிம், இர்குன், பல்மாச், மொத்தம்: 97000. அரபு படையணிகள், மொத்தம்: 20000. இவை அமெரிக்க அரசு எடுத்திருந்த கணக்கெடுப்பு. (From Haven to Conquest , by W .Khalidi )

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் சிங்களப் பகுதிகளான கொழும்பு, காலி போன்ற நகரங்களில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். சிங்களவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை மூலம், தமிழர்களை இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்குள் சென்று முடங்க வைத்தார்கள். இனக்கலவரங்களின் பின்னர், தமிழர்களின் வாழிடங்கள்
சிங்களவர் வசமாகின. இஸ்ரேலிலும் அதே போன்ற காட்சிகள் அரங்கேறின. தலைநகரான கொழும்பில் நடந்த படுகொலைகள் அதிகமாக உலகின் கவனத்தை பெற்றன. சிங்களப் பேரினவாத வெறியை உலகம் அறிந்து கொண்டது. அதே போல ஜெருசலேம் அருகில் நடந்த டெய்ர் யாசின் படுகொலைகள், யூத பேரினவாத வெறிக்கு எடுத்துக்காட்டு. ஜெருசலேம் அருகில் யூத குடியிருப்புகளால் சூழப் பட்டிருந்த, டெய்ர் யாசின் என்ற ஊரில் 610 அரேபியர்கள் வாழ்ந்தனர். கிட்டத்தட்ட 50 பேர் மட்டுமே அங்கிருந்து உயிரோடு தப்பினார்கள். மிகுதி ஊர்வாசிகள் அனைவரும் இர்குன் என்ற யூத ஆயுதக் குழுவால் படுகொலை செய்யப்பட்டனர். சியோனிஸ்ட்கள் அந்த சம்பவத்தை மறைக்கவில்லை. படுகொலைச் செய்தியை உளவியல் யுத்தத்திற்கு சார்பாக பயன்படுத்தினார்கள்.(Deir Yassin Massacre) அன்று இனப்படுகொலையை நடத்திய இர்குன் ஆயுதக் குழுவின் தலைவர் மெனகம் பெகின் பின்னர் இஸ்ரேலின் பிரதமராக தெரிவானார். "டெய்ர் யாசின் படுகொலை இடம்பெற்றிரா விட்டால், இஸ்ரேல் தோன்றியிருக்காது." இவ்வாறு தனது சுயசரிதையில் எழுதியுள்ளார் மெனகம் பெகின்.

இஸ்ரேலின் உருவாக்கத்தின் பின்னர், யார் இஸ்ரேலியப் பிரஜை என்பதை வரையறை செய்தார்கள். உலகில் உள்ள யூதர்களுக்கு எல்லாம் இஸ்ரேல் தாயகம் என்று பிரகடனம் செய்தார்கள். அதே காலப்பகுதியில், சிறிலங்கா சிங்கள பௌத்த மக்களின் தாயகம் என்று பிரகடனம் செய்யப்பட்டது. இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுக்கு தனியான சட்டம் இயற்றினார்கள். அவர்கள் இஸ்ரேலிய குடியுரிமை பெற்றிருக்கலாம், ஆனால் இஸ்ரேலிய தேசியத்தைக் கொண்டிருக்க முடியாது. அதற்கும் பல நிபந்தனைகள் உள்ளன:
- 1948 ம் ஆண்டுக்கு முன்னர், (பிரிட்டிஷ்) பாலஸ்தீன பிரஜையாக இருந்தவர்.
- குடிசன பதிவுப் புத்தகத்தில் பெயரிருக்க வேண்டும்.
- இஸ்ரேல் சுதந்திரம் அடைந்த காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் நீண்ட காலம் வசித்திருக்க வேண்டும்.

யூத ஆயுதக்குழுக்களின் வன்முறைக்கு இலக்காகாத சில அரபுக் கிராமங்களை சேர்ந்த பாலஸ்தீனர்கள் மட்டுமே மேற்படி நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தனர். அதாவது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பாலஸ்தீனர்களுக்கு மட்டுமே இஸ்ரேலிய குடியுரிமை கிடைத்தது. இடம்பெயர்ந்தவர்கள், அகதிகளாக வெளியேறியோர் அந்த சட்டத்திற்குள் அடங்க மாட்டார்கள். மேற்குறிப்பிட்ட பிரஜாவுரிமைச் சட்டம் மேற்குக்கரை, காஸா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த பாலஸ்தீன மக்களை கணக்கெடுக்கவில்லை. அவர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். சிறிலங்காவின் பேரினவாத அரசும், சுதந்திரத்தின் பின்னர் இஸ்ரேலிய பாணி குடியுரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்கள் மட்டுமே புதிய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப் பட்டனர். இந்தியாவில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளிகளாக கொண்டு வரப்பட்ட, மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப் படவில்லை. அவர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள்.

சிறிலங்காவும், இஸ்ரேலும் ஒரே காலத்தில் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றன. சிறிலங்காவில் பௌத்த மதமும், இஸ்ரேலில் யூத மதமும் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முக்கிய இடம் பிடித்தன. சிறிலங்காவின் சிங்கள பேரினவாதம், தனக்கடுத்த சிறுபான்மை இனமான தமிழர்களை ஒடுக்கி வருகின்றது. அதற்காக முஸ்லிம்கள், பறங்கியர், மலேய் போன்ற பிற சிறுபான்மை இனங்களுக்கு சலுகைகள் கொடுத்து ஆதரவை பெற்றுக் கொண்டது. இஸ்ரேலிலும் அதே கதை தான். யூதர்களுக்கு அடுத்த பெரிய சிறுபான்மை இனமான பாலஸ்தீனர்களை ஒடுக்குவதே இஸ்ரேலிய பேரினவாதத்தின் கொள்கை. அதற்காக டுரூசியர்கள், பெதூயின்கள் போன்ற பிற சிறுபான்மை இனங்களுக்கு சலுகைகளை வழங்கி, ஆதரவை வாங்கியது. தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் சிறிலங்கா அரசுக்கு ஆதரவானவர்களாக சந்தேகின்றனர். பாலஸ்தீனர்கள், பெதூயின்கள் அனைவரும் இஸ்ரேலிய அரசுக்கு ஆதரவானவர்களாக சந்தேகிக்கின்றனர். சிறுபான்மை இனங்களை பிரித்து வைத்து, சிறிலங்காவும், இஸ்ரேலும் தமது பேரினவாத நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன.


(தொடரும்)

Friday, December 24, 2010

பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பத்து)

1982 ல், ஈழ - பாலஸ்தீன ஆதரவு துண்டுப்பிரசுரங்கள், "ஈழப் புரட்சி அமைப்பினரால்" வெளியிடப்பட்டன. அந்த வருடம் லெபனானில் ஷப்ரா, ஷட்டிலா என்ற இரு பாலஸ்தீன அகதி முகாம்களில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு ஈழத்தமிழர் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈழத்தில் மெல்ல மெல்ல ஆயுதப் போராட்டம் துளிர் விட்டுக் கொண்டிருந்த காலம் அது. பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் கொலைவெறிக்கு சற்றும் சளைக்காமல், சிங்கள இராணுவம் படுகொலைகளை செய்தது. இருப்பினும் அந்த வருடம் (1982) இஸ்ரேலியரின் பாலஸ்தீன இனப்படுகொலை ஈழத்திலும் அனுதாப அலையை தோற்றுவித்தது.

ஷப்ரா, ஷட்டிலா படுகொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் லெபனான் பாசிஸ்ட்களான பலாங்கிஸ்ட்கள். இருப்பினும் இஸ்ரேலும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தது. இஸ்ரேலிய படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட அகதி முகாம்களில், தொடர்ந்து மூன்று நாட்கள் படுகொலை இடம்பெற்றது. கசாப்புக் கடையில் ஆடு வெட்டுவதைப் போல, கொலைஞர்கள் சாவகாசமாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். அன்று அந்த இனப்படுகொலையை அரங்கேற்றிய இஸ்ரேலிய படைத் தளபதி ஷரோன், பின்னாளில் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஷரோனுக்கு எதிராக பெல்ஜியத்தில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இருந்தாலும் என்ன, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு இருந்தால், எந்தவொரு போர்க்குற்றவாளியும் விசாரணைக்கு அஞ்சத் தேவையில்லை.

லெபனானில் இஸ்ரேலிய படையெடுப்பின் பின்னர், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கு பாதுகாப்பான பின்தளம் என்று கூறக் கூடிய நாடு எதுவும் இருக்கவில்லை. ஏற்கனவே ஜோர்டானில் விரட்டப்பட்டு தான் லெபனான் வந்தார்கள். லெபனானிலும் அவர்களுக்கு வரவேற்புக் கிட்டவில்லை. வேண்டா விருந்தாளிகளாக நடத்தப் பட்டார்கள். எண்பதுகளில் லெபனானில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, PLO வேறு வழியின்றி பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. அன்று PLO உலகில் "பணக்கார இயக்கம்" என்று பேசப்பட்டது. அனைத்து அரபு நாடுகளும் அளித்த தானங்கள், அவர்களது பணப்பெட்டியை நிரப்பின. யாசிர் அரபாத் வெளிநாட்டுப் பயணங்களுக்கு என தனியான விமானம் வைத்திருந்தார். உலகில் முதன்முதலாக விமானம் வாங்கிய விடுதலை இயக்கம் என்ற பெயரும் PLO வுக்கு இருந்தது. அந்நிய நாடுகளில் அளவுக்கதிகமாக தங்கியிருந்தால் விடுதலையைப் பெற முடியாது என்பதை, பாலஸ்தீனர்கள் காலந் தாழ்த்திப் புரிந்து கொண்டனர். இஸ்ரேலிய இராணுவம் பலமாக இருந்ததால், PLO வின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்று எதுவும் இருக்கவில்லை. அதனால், இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் யாவும், அயல் நாடுகளில் இருந்தே நெறிப் படுத்தப் பட்டன.

1967 ம் ஆண்டு யுத்தத்தின் பின்னரே, ஆயுதமேந்திய பாலஸ்தீன அமைப்புகள் வளர்ச்சி அடைந்தன. ஜெருசலேம், மேற்குக் கரை, காஸா பிரதேசங்களை, இஸ்ரேல் போரில் கைப்பற்றியது. ஜோர்டானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மேற்குக்கரை (ஜெருசலேம் உட்பட), எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா என்பன, பாலஸ்தீனரின் புகலிடமாக விளங்கியது. அதாவது 1948 ல் இஸ்ரேல் உருவானதால் வெளியேற்றப் பட்ட பாலஸ்தீன அகதிகள், அந்தப் பிரதேசங்களில் அடைக்கலம் கோரி இருந்தனர். 1967 போரின் பின்னர், மில்லியன் கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ வேண்டிய நிலை வந்தது. ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்வதென்பது, ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும் இடர். அதாவது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை சேர்ந்த பாலஸ்தீனர்களுக்கு பிரஜாவுரிமை கிடையாது. அதனால் கடவுச் சீட்டும் எடுக்க முடியாது. வாக்குரிமை கிடையாது. அதனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க முடியாது. வீடு, காணி சொந்தமாக வைத்திருக்கும் உரிமை கிடையாது. அதனால் அவர்களது வீடுகள் இடிக்கப்படுகின்றன. நிலங்கள் பறிமுதலாகின்றன. நிச்சயமாக அத்தகைய சூழ்நிலையில் மக்கள் ஆயுதப் போராட்டத்தை முழு மனதுடன் ஆதரிப்பார்கள். 1967 ம் ஆண்டின் பின்னர், விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்கு ஏதுவான சமூகக் காரணி அங்கே காணப்பட்டது.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் குறித்த அவா, சில இளைஞர்களிடம் காணப்பட்ட போதிக்கும், அது வளர்ச்சி அடைய ஒரு உந்துசக்தி தேவைப்பட்டது. இஸ்ரேலில் 1967 யுத்தம், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன இளைஞர்களை விடுதலை இயக்கங்களில் சேரத் தூண்டியது. அதே போல, இலங்கையில் 1983 இனக்கலவரம், ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களை விடுதலை இயக்கங்களில் சேர்த்து விட்டது. அன்று ஈழத்தில் இயக்கங்களில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள், பயிற்சிக்காக இந்தியா சென்றார்கள். ஏனென்றால், அனைத்து இயக்கங்களும், இந்தியாவில், தமிழ் நாட்டில் தான், பயிற்சி முகாம்களை கொண்டிருந்தன. அதே போல அன்று பாலஸ்தீன இயக்கங்கள் யாவும், ஜோர்டானில் நிலை கொண்டிருந்தன. இஸ்ரேலின் எல்லையான ஜோர்டான் நதிக்கரை அருகில், பயிற்சி முகாம்கள் அமைந்திருந்தன. ஈழ விடுதலை அமைப்புகளின் தலைமையகங்கள் சென்னையில் இருந்ததைப் போல, பாலஸ்தீன இயக்கங்கள் ஜோர்டானின் தலைநகர் அம்மானில் தலைமையகங்களை கொண்டிருந்தன. அன்று தமிழ் நாட்டில் ஈழப் போராளிக் குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடுமளவிற்கு சுதந்திரம் இருந்தது. இந்திய அரசு, தமிழ்நாடு மாநில அரசு ஆகியனவற்றின் செல்வாக்கு அவர்களுக்கு இருந்தது.

ஆரம்ப காலத்தில் முப்பதுக்கும் குறையாத ஈழ விடுதலை அமைப்புகள் தோன்றியிருந்தன. ஒரு சில, நாலைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட சிறிய இயக்கங்களாக இருந்தன. அன்று ஜோர்டானிலும் ஐம்பதுக்கும் குறையாத பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் தோன்றின. அரபு நாடுகளில் இருந்து பணம் வருகின்றது என்பதற்காக இயக்கம் தொடங்கியவர்களும் உண்டு. பதா போன்ற தேசியவாத அமைப்புகளும், PFLP போன்ற மார்க்சிய அமைப்புக்களுமாக அவர்களுக்கிடையில் கொள்கை வேறுபாடு காணப்பட்டது. அதே போன்று ஈழ விடுதலை அமைப்புகளிலும், ஒரு சில தேசியவாதத்தையும், வேறு சில மார்க்சியத்தையும் தமது கொள்கைகளாக கொண்டிருந்தன. 1984 ம் ஆண்டு யாழ் குடாநாடு போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்தக் காலத்தில் A .K . 47 துப்பாக்கிகளை ஏந்திய இயக்க உறுப்பினர்கள், "பிக்-அப்" வாகனத்தில் பவனி வருவார்கள். அதே போன்ற காட்சிகளை அன்று ஜோர்டானில் இருந்தவர்கள் கண்டிருப்பார்கள். ஆமாம், அதே A .K . 47, அதே பிக் அப் வண்டி, போராளிகளின் தோற்றமும் ஒரே மாதிரித் தான் இருக்கும். (வெளியே இழுத்து விடப்பட்ட சட்டை. மார்பில் சன்னக் கூடுகளை வைக்கும் "ஹோல்சர்" பை. இத்தியாதி.)
ஒரு காலத்தில், தமிழக மக்களுக்கு ஈழப் போராளிகள் மீது மதிப்பும், மரியாதையும் இருந்தது. பின்னர் சில துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் அது இறங்குமுகமாகியது. ஜோர்டானிலும் அதே போன்ற நிலை காணப்பட்டது. உதாரணத்திற்கு குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு பாலஸ்தீன போராளியை ஜோர்டான் போலீசார் கைது செய்திருந்தனர். கைதியை விடுவிக்குமாறு, சம்பந்தப் பட்ட போராளியின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போலிஸ் நிலையம் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இது போல நிறைய சம்வங்கள் இடம்பெற்றன. தமிழகத்தில் போராளிக் குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்ட "பர்மா பஜார் சம்பவம்" போன்ற பல ஜோர்டானிலும் இடம்பெற்றன.

அன்று ஈழ விடுதலை அமைப்புகள் தமிழகத்தை பின்தளமாக பயன்படுத்துவதற்கு சில குருட்டு நம்பிக்கைகள் காரணமாக இருந்தன. "இந்தியாவிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். அதனால் இந்திய அரசு எப்போதும் ஈழத்தமிழருக்கு சார்பாகவே நடக்கும். ஒரு போதும் ஈழ விடுதலை அமைப்புகளை அடக்க துணியாது. அது தமிழகத்தில் கிளர்ச்சியை தோற்றுவிக்கும்...." இவ்வாறு அந்த நம்பிக்கை அமைந்திருந்தது. ஜோர்டானில் தளம் அமைத்திருந்த பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் அதே போன்ற குருட்டு நம்பிக்கையுடன் செயற்பட்டார்கள். "ஜோர்டானில் பெருமளவு பாலஸ்தீனர்கள் வாழ்கின்றனர். (1948 ல் இஸ்ரேலை விட்டு வெளியேறிய பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் குடியுரிமை வழங்கப்பட்டது.) அதனால் ஜோர்டான் அரசு விடுதலை அமைப்புகளை அடக்குமாகில், பாலஸ்தீன பிரஜைகள் கிளர்ந்தெழுவார்கள்..." 1970 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அந்த நம்பிக்கை தவிடுபொடியாகியது.

பேசும் மொழி ஒன்றாகிலும், பாலஸ்தீன, ஜோர்டானிய மக்கள் மத்தியில் கலாச்சார வேறுபாடுகள் உண்டு. பாலஸ்தீனர்கள் நகர்ப்புற கலாச்சாரத்தை கொண்டவர்கள். மேலைத்தேய கல்விகற்ற மத்தியதர வர்க்கத்தைக் கொண்டிருந்தது. அதற்கு மாறாக ஜோர்டானியர்கள் "பெதூயின்" என்ற நாடோடி சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களது கலாச்சாரமும் நாட்டுப்புறம் சார்ந்தது. மன்னர் ஹுசைன் ஹஷமித் குலத்தை சேர்ந்தவர். மன்னரின் குல விசுவாசம், பெதூயின் படைவீரர்களின் விசுவாசம் என்பன, பாலஸ்தீனருக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உதவின.
மன்னர் ஹுசைனுக்கு விசுவாசமான ஜோர்டானிய படைகள், பாலஸ்தீன ஆயுதபாணி இயக்கங்கள் மீது யுத்தம் தொடுத்தது. "கறுப்பு செப்டம்பர்" என்று அழைக்கப்படும் அந்தப் போரின் பின்னர், ஒரு பாலஸ்தீன போராளியை கூட ஜோர்டானில் விட்டு வைக்கவில்லை. போராளிகள் மத்தியில் இழப்பு அதிகமாக காணப்பட்டது. அனைத்து பாலஸ்தீன விடுதலை இயக்கங்களும் ஜோர்டானை விட்டு வெளியேறி, லெபனானில் தளம் அமைத்தன.

1983 ம் ஆண்டு, இந்தியா ஆயுதம் கொடுக்கிறது, பயிற்சி கொடுக்கிறது என்று, அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளும் இந்தியாவில் தளமமைத்தன. இருந்தாலும் அன்று சில மார்க்சிய அமைப்புகள் இந்தியாவை "பிராந்திய வல்லரசு" என்றன. பங்களாதேஷில் இந்திய தலையீட்டை விளக்கும், "வங்கம் தந்த பாடம்" என்று ஒரு நூல் கூட வெளிவந்தது. "முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான புரட்சி என்ற கொள்கை, இந்திய முதலாளித்துவ அரசுக்கும் எதிரானது தான்." என்பதை ஒத்துக் கொண்டன. அதெல்லாம் சொல்லில் மட்டுமே, செயலில் காட்ட தயங்கினார்கள். ஆனால் ஜோர்டானில் நிலைமை வேறாக இருந்தது. மார்க்சிய PLFP ஜோர்டானிய தொழிற் சங்கங்களுக்குள் ஊடுருவியது. பொதுவுடைமை புரட்சிக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் தலைநகர் அம்மானில் கூட காணப்பட்டன. PFLP உறுப்பினர்கள் மசூதிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்கு பதிலாக, கார்ல் மார்க்சின் மேற்கோள்கள் ஒலிபரப்பாகின. பிற்காலத்தில் ஒரு நேர்காணலின் போது, "மார்க்சிஸ்ட்கள் ஜோர்டானில் குட்டையை குழப்பியதாக...." யாசிர் அரபாத் தெரிவித்தார். இருப்பினும் சில சம்பவங்கள், அமெரிக்கா, ஜோர்டான் அரசு மீது அழுத்தம் பிரயோகிக்க காரணமாக இருந்தது உண்மை தான். அது வேறொன்றுமில்லை. PFLP, சில மேற்குலக நாடுகளின் விமானங்களை வெற்றிகரமாக கடத்தி, ஜோர்டானுக்குள் கொண்டு வந்து விட்டது!

இந்தியாவுக்கும், ஈழத்திற்கும் நடுவில் 20 மைல் கடற்பரப்பு இருந்தது. ஆரம்ப காலங்களில், ஈழப் போராளிகள் இந்தியாவில் இருந்து இலங்கை சென்று தாக்குதல் நடத்தி விட்டு திரும்பிச் சென்றனர். அதே போல, பாலஸ்தீன போராளிகளும் ஜோர்டானில் இருந்து இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி விடுவார்கள். ஜோர்டான், இஸ்ரேலிய எல்லையான ஜோர்டான் நதி எல்லை தாண்டுவதற்கு இலகுவானது. பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலால், இஸ்ரேலிய அரசுக்கும், ஜோர்டானிய அரசுக்கும் இடையில் முறுகல் நிலை இருந்தது. ஈழப் போராளிகளின் தாக்குதலால், இலங்கை, இந்திய அரசுகள் ஒன்றையொன்று பகைத்துக் கொண்டன. ஆனால் அந்தப் பகைமை எல்லாம் இந்திய - இலங்கை ஒப்பந்தம் வரையில் தான். அதன் பிறகு இந்திய இராணுவமே ஈழப் போராளிகளை எதிர்த்துப் போரிட்டது. 1970 கறுப்பு செப்டம்பரும், அதே போன்ற அரசியல் மாற்றத்தின் விளைவாகும். இஸ்ரேலிய அரசுக்கும், ஜோர்டான் அரசுக்கும் இடையில் இரகசியமாக நட்புறவு ஏற்பட்டது. ஜோர்டான் மன்னர் ஹுசைன் ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்பது பின்னர் பகிரங்கமாகியது. மார்க்சிய PFLP கூட அதைக் காரணமாக காட்டி ஹுசைன் எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் அன்று அயலில் இருந்த அரபு நாடுகள், ஹுசைன் அரசு கவிழ்வதை விரும்பவில்லை என்பது யதார்த்தம்.

பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை ஜோர்டான் தனது நலன்களுக்காக பயன்படுத்தியது. மேற்குக்கரை, காஸா போன்ற பகுதிகளில் செல்வாக்கு செலுத்துவது ஜோர்டானின் உள்நோக்கம். அதற்கு இஸ்ரேலின் ஒத்துழைப்பு கிட்டியதும் பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை கைவிட்டது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் பங்கும் அதே போன்றதே. இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. இலங்கை அரசு அதற்கு விட்டுக் கொடுத்ததும், ஈழ விடுதலை அமைப்புகள் இந்தியாவுக்கு தேவைப் படவில்லை. பாலஸ்தீன-ஈழப் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச சமூகமும் ஒரே முடிவைத் தான் கொண்டிருந்தது. இஸ்ரேலிய அரசு, பாலஸ்தீன விடுதலை இயக்க சமாதான பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராக இருந்தது நோர்வே. இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கும் நோர்வே தான் அனுசரணையாளர். இந்த உதாரணம் ஒன்றே போதும், பாலஸ்தீனரும், ஈழத் தமிழரும் ஒரே விதியை கொண்ட சகோதர இனங்கள் என்பதை நிரூபிக்க.

(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:

9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு

6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

Monday, December 28, 2009

ஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம்

("போர்க்களமான புனித பூமி" - பாலஸ்தீன தொடரின் ஆறாம் பகுதி)
மறைந்த தலைவர் யாசீர் அரபாத் காலத்தில் இருந்தே பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட போராளிகளுக்கிடையே சகோதரச் சண்டை நடைபெற்று வந்துள்ளது. அரபாத்தின் ஃபதா இயக்கம் பெருந்தொகையான உறுப்பினர்களையும் நிதிவளங்களையும் கொண்டிருந்ததால் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற அகிம்சாவழியில் இயங்கிய உதவி நிறுவனத்தைக் கைப்பற்றி முழு பாலஸ்தீனர்களுக்குமான பிரதிநதிகளாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். பிற விடுதலை இயக்கங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அளவில் சிறியதாக இருந்ததால் ஃபதாவின் தலைமையின் கீழ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினுள் (PடO) உள் வாங்கப்பட்டனர். இந்த நிறுவனமயமாக்கலுக்குள் வர மறுத்தவர்கள் வேட்டையாடப்பட்டு ஒழிக்கப்பட்டனர்.

பாலஸ்தீன விடுதலையை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ஃபதா இஸ்ரேலுடன் சமரசப் போக்கையே நாடியது. அதாவது, உண்மையான இறுதி இலக்கு பாலஸ்தீனம் என்ற தனிநாடு அல்ல. இஸ்ரேலுக்குள் சுயநிர்ணய உரிமைகளைக் கொண்ட சுயாட்சிப் பிரதேசம். அரபாத்தின் சமரசப் போக்கை பல சுயாதீனப் பத்திரிகையாளர்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தி உள்ளனர்; இஸ்ரேலிய அரசுக்குத்தான் இதனைப் புரிந்துகொள்ள நீண்டகாலம் எடுத்தது
அல்லது பாலஸ்தீன தேசியவாதம் என்ற சித்தாந்தமே தனது இருப்புக்கு ஆபத்து என்று அஞ்சியதால் PடO வை பலவீனப்படுத்தும் நோக்கோடு இஸ்லாமிய மத அடிப்படைவாத HAMAS சிற்கு மறைமுக ஆதரவு அளித்தது. அதாவது விடுதலைப் போராட்டத்தினுள் மதத்தைப் புகுத்துவதன்மூலம் கிறிஸ்தவ மற்றும் மதச்சார்பற்ற பாலஸ்தீனர்களை அந்நியப்படுத்திப் பார்த்தது. அந்த நோக்கம் கணிசமானளவு வெற்றி பெற்றுள்ளதைக் கண்கூடாகக் காணலாம்.

சமாதான ஒப்பந்தத்தின் பிரகாரம் பாலஸ்தீன அதிகாரசபை அமைக்கப்பட்ட பின்னர் கூட யாசீர் அரபாத் இஸ்ரேலிடம் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கவில்லை. குறிப்பாக, அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் பாலஸ்தீன அகதிகளின் நாடு திரும்புவதற்கான உரிமையை அரபாத் வலியுறுத்தி வந்தார். இஸ்ரேலோ அந்த உரிமையை மறுத்தது. அதை ஏற்றுக்கொள்ளும் பாலஸ்தீனத் தலைமையை விரும்பியது. அதற்கு ஏற்ற ஆளாகத் தற்போது அப்பாஸ் கிடைத்துள்ளார். அரபாத் எப்போது சாவார் என்று இஸ்ரேல் மட்டுமல்லாது அப்பாஸ் போன்ற ஃபதா தலைவர்களும் எதிர்பார்த்ததை, “தனது கணவனை உயிரோடு குழியில் போட்டு மூட காத்திருப்பதாக” அரபாத்தின் மனைவி கூறுமளவுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. பாலஸ்தீனப் பிரதேசங்களின் ஜனாதிபதியாக அப்பாஸ் தெரிவானதும் இனித்தான் நினைத்தபடி ஆட்டுவிக்கலாம் என்று இஸ்ரேலும் பெருமூச்சு விட்டது. ஆனால், HAMAS வடிவில் வந்தது சோதனை.

பாலஸ்தீன அதிகாரசபை நிறுவப்பட்டு செயல்படத் தொடங்கியபிறகுதான் ஃபதா எதற்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்தது என்பது மக்களுக்குப் புரிந்தது. அரசாங்கம் மட்டுமல்லாது அரசு சார்ந்த நிறுவனங்களிலெல்லாம் ஃபதா ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் நண்பர்கள் வர்த்தக நிறுவனங்களை ஸ்தாபித்தனர். வர்த்தகர்கள் கொடுத்த லஞ்சத்தில் அரசு அதிகாரிகள் கொழுத்தனர். இதனால் மொத்த அதிகார சபையும் ஊழல் மயமாகி, சாதாரண பொது மக்களை வறுமைக்குள் தள்ளியது. மக்களின் உள்ளக் குமுறலை வாக்குகளாக மாற்றிக் கொண்ட HAMAS பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதில் அதிசயம் என்னவென்றால் ஃபதாவின் ஊழலாட்சி நடந்தபோது கண்ணை மூடிக்கொண்டிருந்த சர்வதேச சமூகம், HAMAS அமைத்த புதிய அரசாங்கம் இயங்கவிடாமல் தடுத்தது. பாலஸ்தீன அதிகார சபைக்கு வழங்கிக் கொண்டிருந்த நிதியுதவிகளை ரத்து செய்தது. பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து வரும் வரித்தொகையை இஸ்ரேலுக்குத் திருப்பிக் கொடுக்க மறுத்தது.

இதனால் பாலஸ்தீன அரசாங்கத்திற்கு எந்த ஒரு வருமானமும் இல்லாமல் போக அரச நிறுவனங்களில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனது. மாதக் கணக்காக வழங்கப்படாத சம்பளத்தைக் கேட்டு அரச ஊழியர்கள் போராடியபோது HAMAS சிடம் போய் வாங்குமாறு கூறி விரட்டியது ஃபதா. உண்மையில் தொழிலாளர்களின் கஷ்டத்தை ஃபதா தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது. பாடசாலை ஆசிரியர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறும் HAMAS அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுமாறும் தூண்டியது. ஏ.கே.47 சகிதம் சென்ற பொலிசார், HAMAS அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து நாசம் விளைவித்தனர். தெருக்களில் (ஃபதா ஆதரவு) பொலிஸ்காரர்கள் ஆயுதமேந்திய HAMAS உறுப்பினர்களை வலுச்சண்டைக்கு இழுத்தனர். இது ஃபதா - HAMAS இடையிலான சகோதர யுத்தமாகப் பரிணமித்தது.

பாலஸ்தீனத்தினுள் உண்மையில் என்ன நடக்கிறது? அங்கே ஒரு சதிப் புரட்சிக்கு ஒத்திகை பார்க்கப் படுகின்றது! அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் ஆகிய பாலஸ்தீன விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் சக்திகள் ஃபதா போன்று தம்மோடு ஒத்துழைக்கக் கூடியவர்களையே எவ்வழியிலும் ஆட்சியிலிருத்த விரும்புகின்றனர். பெரும்பான்மை மக்கள் HAMAS போன்ற எதிர்க்கட்சிகளைத் தெரிவு செய்தாலும் அந்த ஜனநாயகத்திற்கு மதிப்புக் கொடுப்பதில்லை. இருப்பினும் ஃபதா நண்பர்களுக்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாவிட்டால், வேறுவழியில்லாமல் சதிப்புரட்சி மூலம் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான அடிப்படையை உருவாக்கும் பொருட்டு HAMAS ஆட்சி மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்களையும் கலவரங்களையும் இன்னபிற இன்னல்களையும் மட்டுமே கொடுக்க முடியும் என்ற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

இறுதியில் தனது கையாலாகாத்தனத்தை உணர்ந்த HAMAS அரசாங்கம் மக்கள் நலன் கருதி பதவி துறக்கவும் ஃபதாவுடன் தேசிய ஐக்கிய முன்னணிக்கு உடன்பட்டதையிட்டு நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம். HAMAS அரசாங்கத்தை இயங்கவிடாமல் தடுக்கும் பொருட்டு ஏற்கனவே இஸ்ரேலிய படைகள் HAMAS அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பயங்கரவாதத் தொடர்பு குற்றம் சாட்டி சிறையில் அடைத்தும், அது போதாதென்று மீதமிருந்த HAMAS அரச அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் யாவும் ஃபதா குண்டர்களால் தாக்கி நாசமாக்கப்பட்டன. அவ்வதிகாரிகளுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைவிட, ஒருமுறை பாப்பரசர் முஸ்லிம்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து பிரச்சினை எழுந்த காலத்தில், சில பாலஸ்தீன கிறிஸ்தவ தேவாலயங்கள் இனந்தெரியாதவர்களால் தீயிடப்பட்டன. அந்த இனந்தெரியாதவர்கள் ஃபதா குண்டர்களாக இருக்கலாம் என்றும் கிறிஸ்தவர்களை HAMAS சிற்கு எதிராகத் திருப்பிவிடும் நோக்கோடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

இதற்கிடையில் மிக இரகசியமாகப் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பாலஸ்தீன அதிகாரமையம் இருக்கும் 'ரமலா' நகரம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்படுகின்றது. அந் நகரத்தில் பாராளுமன்றம், அமைச்சுகள் ஆகியவற்றோடு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பாலஸ்தீன மத்தியதர வர்க்கத்தின் வசிப்பிடங்களும் அமைந்துள்ளன. சுருக்கமாக, வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் நகரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்கும் விற்பனை நிலையங்கள் உள்ளன. ரமலாவிற்கு சிறிது தூரத்தில் இரகசியமான இடத்தில் ஜனாதிபதி அப்பாஸிற்கு விசுவாசமான சிறப்புப் பாதுகாப்புப்படை முகாமிட்டுள்ளது. இந்த முகாமில் அமெரிக்க, எகிப்து,ஜோர்தானிய இராணுவ ஆலோசகர்கள் பயிற்சியளிக்கின்றனர். இந்தச் சிறப்புப் படைக்கென மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்ள இஸ்ரேலும் அனுமதியளித்துள்ளது. இன்றைய நிலையில் HAMAS பல பின்னடைவுகளைச் சந்தித்தபோதும் அதன் பலம் குறையவில்லை. பல ஆயுதங்களை HAMAS இன்னமும் பயன்படுத்தாமல் பதுக்கி வைத்துள்ளது. இதனைக் கவனத்தில் எடுத்துத் தான் அப்பாஸின் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு புதிய ஆயுதங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.


பாலஸ்தீனத் தொடரின் முன்னைய பதிவுகள்:
பகுதி 5: இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்
பகுதி 4: ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்
பகுதி 3: இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்
பகுதி 2: தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனர்களும்

பகுதி 1: போர்க்களமான புனித பூமி


[உயிர்நிழல் (அக்டோபர்- டிசம்பர் 2006 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]

Sunday, December 27, 2009

இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்

("போர்க்களமான புனித பூமி" - பாலஸ்தீன தொடரின் ஐந்தாம் பகுதி)
"மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், அது வருங்காலத்தில் பல விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படும்." இந்த எச்சரிக்கையை விடுத்தது, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நண்பனான சவூதி மன்னன் அப்துல்லா. அமெரிக்காவின் பிற கூட்டாளிகளான ஜோர்டான், பாஹ்ரைன் போன்ற நாடுகளும் இது போன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இது வரை காலமும் அரபு நாடுகளில் இருந்து வரும் அமெரிக்க சார்பு மேட்டுக்குடியினரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக வளர்ந்த அரபு மத்திய தர வர்க்கம் ஆட்சியாளருக்கு சவாலாக கிளம்பியுள்ளது.

முன்பெல்லாம் அரபு நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அரசால் ஒழுங்கமைக்கப்பட்டன. தற்போது பல்கலைக்கழக மாணவர்கள், அல்லது சமூக ஆர்வலர்கள் ஊர்வலங்களை ஒழுங்கு செய்கின்றனர். பொது ஜனங்களின் எழுச்சி வெறும் வாய்ப்பேச்சோடு நிற்காது செயலிலும் இறங்கியுள்ளது. முதற்படியாக அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்கும் இயக்கம் தோன்றியுள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவு, பொது மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது. லெபனானில் கல்லூரி மாணவர்கள், அமெரிக்க பொருட்கள் எவை என்றும், அதற்கு மாற்றாக வாங்கக்கூடிய உள்ளூர் மற்றும் ஆசிய உற்பத்திப் பொருட்கள் எவை என்றும் பட்டியலிட்டுள்ளனர். இந்தப் பட்டியலை துண்டுப் பிரசுரமாக வீடு வீடாக விநியோகித்துள்ளனர். அரபு நாடுகள், சர்வதேச வர்த்தகத்தில் டாலரை புறக்கணித்து யூரோவுக்கு மாற வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

பொருளாதாரத் தாக்கம் இஸ்ரேலிலும் உணரப்படுகின்றது. பெரும் லாபமீட்டிய சுற்றுலாத் துறை, பயணிகளின் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியர் என்ன தான் வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பீதி, அவர்களை வீட்டுக்குள்ளே முடங்க வைத்தது. எதிர்காலம் கேள்விக்குறியான இஸ்ரேலியர்கள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி வருகினறனர். பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றது. அதனால் வரி அதிகரிப்பு, மானிய வெட்டு என்பன யூத உழைக்கும் மக்களை பாதிக்கின்றன.

வெறும் பாலைவனத்தை, தாம் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியதாக, யூதர்கள் பெருமையாக சொல்வார்கள். ஆனால் அதற்கு ஒரு விலை இருந்தது. தண்ணீர். வறண்ட நிலத்தை பண்படுத்த பிரமாண்டமான நீர்ப்பாசன திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாள்தோறும் வந்து குடியேறிக் கொண்டிருக்கும் யூதர்கள், இன்று ஆறு மில்லியனாக பல்கிப் பெருகி விட்டனர். பெரும்பாலும் வறண்ட நிலங்களைக் கொண்ட இஸ்ரேல், ஆறு மில்லியன் ஜீவன்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது. அதற்கு தீர்வு? அரபுக்களின் தண்ணீரை திருடுவது!
1967 யுத்தம் கூட, தண்ணீர் தேடி நடந்ததாக கருதப்படுகின்றது. இந்த யுத்தத்தின் பின்னர் இரு முக்கியமான நீர் நிலைகள் இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டன. பாலஸ்தீன மேற்குக்கரையை சேர்ந்த ஜோர்டான் நதி, சிரியாவுக்கு சொந்தமான நன்னீர் ஊற்றுகளைக் கொண்ட கோலான் குன்றுகள். இவற்றில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் இன்று மூன்றில் ஒரு பங்கு தேவையை பூர்த்தி செய்கின்றது. இஸ்ரேலியப் படைகள் தென் லெபனானை 20 வருடங்களாக ஆக்கிரமித்திருந்தன. அதற்குக் காரணமும் தண்ணீர்க் களவு. லெபனானின் வற்றாத லித்தானி நதி, வட இஸ்ரேலியரின் தேவையை பூர்த்தி செய்தது. இந்த தண்ணீர் எல்லாம் பகற்கொள்ளை மூலம் பெறப்படுவதால், யூதர்களுக்கு குறைந்த செலவில் விற்க முடிகின்றது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் திருடுவது, சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் தண்ணீர்க் கொள்ளையை நிரந்தரமாக்கும் பொருட்டு, திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஜெருசலேமில் இருந்து ஜெரிக்கோ வரை, அதாவது ஜோர்டான் நதிக்கரையோரம் நூற்றுக்கணக்கான யூதக் குடியிருப்புகள் காணப்படுகின்றன. எல்லைப்புற யூத குடியேற்றங்களை அப்படியே விட்டு விடும் படி, அரபாத்திடம் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. நோர்வே அனுசரணையிலான சமாதான ஒப்பந்தம், ஒரு நாளும் சுதந்திர பாலஸ்தீனத்தை சாத்தியமாக்கியிருக்காது. அது ஏன் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

"மேகொரோட்" என்ற இஸ்ரேலிய கம்பெனி தான், யூதர்களின் வீடுகளுக்கு மட்டுமல்ல, பாலஸ்தீன வீடுகளுக்கும் நீர் விநியோகம் செய்கின்றது. ஒரு நாளைக்கு, ஒரு சராசரி யூதர் 350 லீட்டர் தண்ணீரைப் பெறுகின்றார். அதே நேரம், சராசரி பாலஸ்தீனர் பெறுவதோ வெறும் 70 லீட்டர் தான்! உலக சுகாதாரக் கழகத்தின் அளவீட்டின் படி, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 100 லீட்டர் தண்ணீர் தேவை. கோடை காலங்களில், நீர் நிலைகள் வறண்டு, தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் போது, பாலஸ்தீன வீடுகளுக்கான விநியோகம் நாட்கணக்காக நிறுத்தப்படும். குடிப்பதற்காகவும், சமைப்பதற்காகவும் பாலஸ்தீனியர்கள் பக்கத்து வீடுகளில் தண்ணீர் கடன் வாங்குவார்கள். அப்போதெல்லாம் யூதக் குடியேற்றங்களில் நீச்சல் குளங்கள் நிரம்பி வழியும்.

பாலஸ்தீனப் பகுதிகளில் கிணறு தோண்டுவதற்கு கூட, இஸ்ரேலிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். யூதக் குடியேறிகளின் அட்டகாசம் குடிநீரையும் விட்டு வைப்பதில்லை. பாலஸ்தீனர்களின் கிணறுகளில் குப்பை கொட்டி நீரை அசுத்தமாக்குவது, குடிநீர் கொண்டு செல்லும் 'பௌசரை' வழிமறித்து, நீரை நிலத்தில் கொட்டி பாழாக்குவது. இப்படி பல அட்டூழியங்கள் வெளியே தெரிய வருவதில்லை. இஸ்ரேலிய படையும் தன் பங்குக்கு தண்ணீர்க் குழாய்களை உடைத்து நாசப்படுத்துகின்றது.
ஒஸ்லோ ஒப்பந்தத்தின் பிரகாரம் நீர் நிலைகள் பாலஸ்தீன அதிகார சபையின் கைகளுக்கு சென்று விடும் என்ற அச்சம் காரணமாக, மீண்டும் யுத்தம் ஏற்பட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. எது எப்படி இருப்பினும், அபரிதமான நீர்ப் பாவனையால் ஜோர்டான் நதி வற்றி வருகின்றது. கோலான் குன்றுகளின் நீரூற்றுகளும் ஒரு நாள் வற்றிவிடலாம். மறுபுறம் இஸ்ரேலிய/பாலஸ்தீன சனத்தொகை பெருகி வருகின்றது. அவர்களின் தேவைக்கேற்ற நீர் வளம் குறைந்து வருகின்றது. நிலைமை இப்படியே போனால், இன்னும் 50 வருடங்களில் அந்தப் பிராந்தியம் வறண்ட பாலைவனமாகி விடும். அப்போது இந்த புனித பூமிக்காக சண்டை போட யாரும் இருக்க மாட்டார்கள்.

பாலஸ்தீனத் தொடரின் முன்னைய பதிவுகள்:


பகுதி 4: ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்
பகுதி 3: இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்

(உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)