Showing posts with label கடன் நெருக்கடி. Show all posts
Showing posts with label கடன் நெருக்கடி. Show all posts

Wednesday, July 08, 2015

கிரேக்க கடன் நெருக்கடி பற்றி ஒரு வலதுசாரியின் பிதற்றல்கள்

கிரீஸ் நாஸி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பின் கீழிருந்த காலத்தில்... 

கிரேக்க நிலவரம் தொடர்பாக, ஏன் இன்னும் எந்தவொரு வலதுசாரியும் எதிர்வினையாற்றவில்லை என்று பலர் நினைத்திருக்கலாம். தமிழ் பேசும் வலதுசாரிகளில் முக்கிய பிரமுகரான பத்ரி சேஷாஸ்திரி, தனக்குப் பிடித்த கட்டுரை ஒன்றை எங்கேயோ தேடி எடுத்துப் போட்டிருக்கிறார்.

நமது தமிழ் வலதுசாரிகள் பலருக்கு, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற காலனிய எஜமான்களின் நாடுகளை விட்டால், ஏனைய நாடுகளைப் பற்றிய அறிவு பூஜ்ஜியமாக இருக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்னர் வரை கூட, கிரீஸ் பற்றிய தகவல் எதுவும் தமிழ் ஊடகங்களில் இடம்பெறுவதில்லை. 

கிரேக்க நாட்டில், எண்பதுகள் வரையில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது என்பது பலருக்குத் தெரியாது. இராணுவ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள், மக்களின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் மேற்கத்திய ஊடகங்களிலேயே இருட்டடிப்பு செய்யப்பட்டன. தமிழ் ஊடகங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த விடயங்களை எல்லாம், நானும் ஐரோப்பா வந்த பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

மேற்கத்திய நாடுகளில், வெள்ளையும், சொள்ளையுமாக இருப்பவர்கள், பொய் பேசாத அரிச்சந்திரர்கள் என்று தான் தமிழ் வலதுசாரிகள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் தான், ஊடகவியலாளர் என்ற பெயரில், ஜெர்மன் அரசுக்கு ஆதரவான ஒருவர் எழுதிய அரசியல் பிரச்சாரக் கட்டுரையை பத்ரி சேஷாஸ்திரி எம்முடன் பகிர்ந்திருக்கிறார்.







"Germany Deserved Debt Relief, Greece Doesn't" (http://www.bloombergview.com/articles/2015-01-27/germany-deserved-debt-relief-greece-doesn-t-i5fdca2y) என்ற அந்தக் கட்டுரை, இது வரையில் நான் வாசித்த மகா மொக்கையான பதிவு. Leonid Bershidsky என்ற அதன் எழுத்தாளர், தனது ஒரு பக்கச் சார்பான அரசியலை நிறுவுவதற்காக முட்டாள்தனமான வாதங்களை அடுக்குகிறார்.

"இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் கடன்களை தள்ளுபடி செய்தது மாதிரி, தற்போது கிரீஸ் பட்ட கடன்களை தள்ளுபடி செய்தால் என்ன?" என்று கிரேக்க அரசு முன்வைத்த வாதத்தில் இருந்து தொடங்குகிறார். அவரைப் பொறுத்தவரையில், அப்படி ஓர் ஒப்பீட்டை செய்வதே அபத்தமானது என்கிறார். ஏன் என்பதற்கு அவர் கூறும் காரணங்கள் தான் சிரிப்பை வரவழைக்கின்றன.

"ஜெர்மனி பட்ட கடன்கள் முதலாம் உலகப்போர் முடிந்த காலத்தில் கட்டியிருக்க வேண்டியவை. அதனால் தான் நாஸிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அந்தக் கடன்கள் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரும் கட்டி முடிக்கவில்லை. போருக்கு முன்னர் இருந்த நாணய மதிப்புகள் சீர்குலைந்திருந்தன. அதனால் கடன்களின் மதிப்பை கணக்கெடுக்க முடியவில்லை."

இவை அந்த எழுத்தாளர் முன்வைக்கும் வாதங்கள். அவை எவ்வளவு முட்டாள்தனமானவை என்பது ஓரளவு வரலாறு, பொருளாதாரம் பற்றிய அறிவுள்ளவர்களுக்கு தெரியும். முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் கடன்கள் இமய மலை அளவு அதிகரித்திருந்தமையும், அதன் விளைவாக நாஸிகள் ஆட்சியைக் கைப்பற்றியதும் உண்மை தான். ஆனால், இந்த எழுத்தாளர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை முற்றாக மறந்து அல்லது மறைத்து விடுகிறார். நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் எப்படி இருந்தது?

நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருந்தது. முழு ஐரோப்பாக் கண்டத்திலும் முன்னேறிய தொழிற்துறை வளர்ச்சி கண்டிருந்தது. நாஸிகள் ஆட்சிக்கு வந்தவுடனே, அமெரிக்கா தனது முந்திய கடன்களை தள்ளுபடி செய்து விட்டிருந்தது. பிரிட்டன் தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளை பற்றி சொல்லத் தேவையில்லை. அவை ஜெர்மனியின் தயவில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அன்றைய நிலவரம் அப்படி இருக்கையில், ஜெர்மனி முதலாம் உலகப்போர் காலத்தில் கட்டியிருக்க வேண்டிய கடன்களை, இரண்டாம் உலகப்போர் வரைக்கும் இழுத்துச் சென்றது என்பது அறியாமை.

இவர் கூறும் அடுத்த அபத்தம், நாணயங்களின் பெறுமதி குறைந்தது காரணமாக, போருக்கு முந்திய கடன்களின் மதிப்பை யாராலும் கணக்கிட முடியவில்லையாம். அன்றைய ஐரோப்பாவில், ஒவ்வொரு நாட்டினதும் நாணய மதிப்பு, போருக்கு முன்னரும், பின்னரும் எப்படி இருந்தது என்பதை வரலாற்றுப் புத்தகங்களை புரட்டிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அது ஒன்றும் பெரிய ராக்கட் தொழில்நுட்பம் அல்ல. கறுப்புச் சந்தையில் விசாரித்தால் பணத்தின் உண்மையான மதிப்புத் தெரியும்.

இந்த வலதுசாரி எழுத்தாளர், இன்னொரு "நியாயமான" வாதத்தையும் வைக்கிறார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி மிக மோசமான அழிவுகளை சந்தித்திருந்தது. அதனால் அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து, நாட்டைக் கட்டியெழுப்ப கடன் தள்ளுபடி செய்தல் அவசியமானது என்கிறார். அப்பப்பா! என்னே மனிதநேயம்! நினைத்தால் புல்லரிக்கிறது. ஜெர்மனி பேரழிவை சந்தித்தது உண்மை தான். ஆனால், இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப் பட்டது ஜெர்மனி மட்டுமல்லவே? சோவியத் யூனியனின் மேற்குப் பகுதிகளில் ஜெர்மன் படைகள் ஏற்படுத்திய அழிவுகள் அதை விட பல மடங்கு அதிகம். அதற்கெல்லாம் எவனிடம் போய் நஷ்டஈடு கேட்பதாம்?

இரண்டாம் உலகப்போரில் கிரீஸ் கூட, ஜெர்மன் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டதும், அவை அங்கே விமானக் குண்டுகளை வீசி பெரும் நாசம் விளைவித்திருந்ததும் வரலாறு. கிரீஸ் நாட்டில் பண்டைய காலத்து நாகரிகங்களின் அழிபாடுகள் மட்டுமே இருக்கின்றன என்று இந்த எழுத்தாளர் கிண்டல் அடிக்கிறார். 

இந்த சிறுபிள்ளைத்தனமான உளறலைக் கேட்டு சிரிப்பு வரவில்லை. அருவருப்பு தான் வருகின்றது. அன்று கிரீஸ், நாஸிகளால் தனக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு, ஜெர்மனியிடம் நஷ்டஈடு கோராதது மட்டுமல்ல, தனக்கு கொடுக்க வேண்டிய கடன்களைக் கூட தள்ளுபடி செய்த பெருந்தன்மையை மெச்ச வேண்டும்.

கிரீஸ் போன்ற நட்பு நாடுகளின் பெருந்தன்மை காரணமாகத் தான், ஐரோப்பாவின் வளர்ச்சி அடைந்த நாடாக மாறியது. அதை இந்தக் கட்டுரையாளரே ஏற்றுக் கொள்கிறார். கிரேக்கம் அன்று செய்த உதவிக்கு பிரதியுபகாரமாக, இன்று கஷ்டப்படும் தனது நண்பனுக்கு ஜெர்மனி உதவி செய்தால் என்ன குறைந்து விடும்? 

செய்நன்றி மறப்பது தான் ஜெர்மனியின் கொள்கை என்றால், அதைவிட அயோக்கியத்தனம் உலகில் வேறு இருக்க முடியாது. கட்டுரையாளர் திரிப்பது போல, இது "வெறும் ஒப்பீடு" அல்ல. நன்றி கெட்ட ஜெர்மனியின் சுயநலத்தை தோலுரித்துக் காட்டும் யதார்த்தம்.

"போரில் அழிவை சந்தித்த நாட்டின் கடன்களை தள்ளுபடி செய்வது முறையானது." ஒரு பேச்சுக்கு, அப்படியே வைத்துக் கொள்வோம். கடந்த பல தசாப்த காலங்களாக, உலகில் எத்தனை நாடுகளில் பேரழிவைத் தந்த போர்கள் நடந்துள்ளன? உதாரணத்திற்கு, முன்னாள் பிரெஞ்சுக் காலனியான இந்தோசீனாவில் அமெரிக்கா ஏற்படுத்திய அழிவுகள் எத்தனை? 

இரண்டாம் உலகப்போர் முழுவதும் போடப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கையை விட, மூன்று மடங்கு அதிகமான குண்டுகள் அங்கே போடப்பட்டதாக சொல்லப் படுகின்றது. அத்தனை அழிவுகளுக்குப் பின்னர் சுதந்திரம் அடைந்த, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய மூன்று நாடுகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டனவா?

இவரது இன்னொரு நகைச்சுவை, ஜெர்மனி இரண்டாகப் பிரிந்தது பற்றியது. கிழக்கு ஜெர்மன் பகுதிகளை சோவியத் இராணுவம் ஆக்கிரமித்த படியால், அங்கிருந்து "பத்து மில்லியன்" அகதிகள் மேற்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரினார்களாம். அதனால் ஏற்பட்ட மனிதப் பேரவலம் காரணமாக, மேற்கு ஜெர்மன் அரசு அவர்களையும் பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாம். 

இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகியிருக்கும் என்று எம்மையெல்லாம் பரிதாபப்பட வைக்கிறார். இவரது கணக்குப் படி, கிழக்கு ஜெர்மனியில் இருந்து, ஏறக்குறைய அத்தனை மக்களும், ஒருவர் விடாமல் மேற்கு ஜெர்மனிக்குள் ஓடி விட்டார்கள். பெர்லின் மதில் கட்டப்படும் வரையிலும், அந்த நகரத்தில் இரண்டு பக்கமும் மக்களின் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது என்பதை அவர் படிக்கவில்லை போலும்.

கிரீஸின் கடன் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதையும் அவரே கண்டுபிடித்து சொல்லி விடுகிறார். ஐந்தாண்டுகளுக்கு முன்னர், கிரேக்க பொருளாதார நெருக்கடி தோன்றிய காலத்தில் இருந்து கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன காரணங்கள் தான். நமது தமிழ் வலதுசாரிகள் அதை தமது சட்டைப் பைக்குள் எப்போதும் கொண்டு திரிவார்கள். வேறென்ன? இந்தப் பாழாப் போன "சோஷலிசம்" தான் காரணம்! "கிரீஸ் என்றைக்கு சோஷலிச நாடாக இருந்தது?" என்று யாரும் குறுக்குக் கேள்வி கேட்டு விடக் கூடாது.

உலகில் எந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை வந்தாலும், அதற்கு அடிப்படைக் காரணம் "சோஷலிசமாகத் தானிருக்கும்"! வலதுசாரிகளின் "கண்டுபிடிப்பு" எப்போதும் அப்படித் தானிருக்கும். ஒரு அரசாங்கம், சாதாரண மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு என்ன செய்தாலும் அது "சோஷலிசம்" தான்! அரசு தனது செலவில், பொது மக்களுக்கான கழிப்பறை கட்டிக் கொடுக்கிறதா? அதுவும் "சோஷலிசம்" தான்! "கண்ட கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதற்கும் என்ன பெயர்? திறந்த சந்தைப் பொருளாதாரமா?" என்று கேட்டு விடாதீர்கள். வலதுசாரிகளுக்கு பிடிக்காது.

கட்டுரைக்கு வருவோம். 1974 ம் ஆண்டு, "இராணுவ சர்வாதிகார ஆட்சி" முடிந்த பின்னர்... என்று ஆரம்பிக்கிறார். அடடே.... இராணுவ சர்வாதிகாரிகள் வலதுசாரிகளின் கூட்டாளிகள் போலிருக்கிறது. அதனால் தான் "இராணுவ ஆட்சியின் முடிவின் பின்னர்..." பார்க்கச் சொல்கிறார். 

அதற்குப் பின்னர் வந்த ஜனநாயக அரசு, பெருந்தொகை ஓய்வூதியம், அனைவருக்கும் மருத்துவ வசதி, அரசு வேலை வாய்ப்பு, என்று அரசு கஜானாவை காலியாக்கி, பொருளாதாரத்தை பாழ் படுத்தி விட்டதாம். ம்ம்ம்...அப்புறம்... பயணிகளில் இல்லாமல் ஓடிய ரயில்களில் வேலை செய்த ஊழியர்கள் அதிகமாம். இதைத் தானே நமது இந்திய வலதுசாரிகளும் "நேரு சோஷலிசம்" என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்?

வலதுசாரி "அறிவாளிகளே"! ஒரு பேச்சுக்கு, நீங்கள் சொல்வது போன்று "சோஷலிசம்" தான் கிரேக்க பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்த வரையில், கிரேக்க வயோதிபர்களின் ஓய்வூதியம், என்றைக்குமே ஜெர்மனியில் இன்றிருப்பதை விட அதிகமாக இருந்ததில்லை. பிரிட்டனிலும் அனைவருக்கும் அரசு செலவில் மருத்துவ வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளில், பொருளாதாரத்தில் அரசுத் துறை நிறுவனங்களின் பங்கு, கிரீஸில் இருப்பதை விட மிகவும் அதிகம்.

ஸ்கண்டிநேவிய நாடுகளில், இன்றைக்கும் அமுல்படுத்தப்படும் "சோஷலிசத்" திட்டங்களை, கிரீசுடன் ஒப்பிடவே முடியாது. அந்த நாடுகளில் வாழும் மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகள் பலவற்றை, கிரீசில் உள்ளவர்கள் கேள்விப் பட்டிருக்கவே மாட்டார்கள். வலதுசாரி ஆய்வாளர்களின் கணிப்பு சரியாக இருக்குமானால், "சோஷலிச" ஸ்கண்டிநேவிய நாடுகள் தான் முதலில் பொருளாதார வீழ்ச்சி கண்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லையே?

இப்படியான மொக்கையான கட்டுரைகளுக்கும், முட்டாள்தனமான வாதங்களுக்கும் பதில் கூறிக் கொண்டிருப்பதே நேர விரயம். ஆனால், பாவம் வலதுசாரிகள்! காலங்காலமாக மக்களை ஏமாற்றியவர்கள், இப்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் கூறத் தெரியாமல் முழிக்கிறார்கள். அதனால், நாளைக்கு தமது இருப்பிற்கு பாதிப்பு வந்து விடும் என்ற அச்சத்தில் ஏதோதோ உளறிக் கொட்டுகிறார்கள். 

பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் இடதுசாரி சீரிசா அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதைக் கண்டு மருண்டு போயுள்ள கிரேக்க மேட்டுக்குடி வர்க்கம், விரைவில் கிரேக்கம் சோவியத் யூனியனாகி விடும் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

அதே மாதிரித் தான், நமது வலதுசாரிகளின் பிரபல அரசியல் ஆய்வாளரும் கூறுகின்றார்:  "ஆளும் இடதுசாரிக் கட்சியான சீரிசா தலைமையில், கிரீஸ் கிழக்கு ஜெர்மனி போன்று சோஷலிச நாடாகப் போகின்றது..." என்று இந்த எழுத்தாளர் எம்மை எல்லாம் பயமுறுத்துகிறார். "கிரீஸ் நாட்டில், கம்யூனிச டைனோசர் உயிர் பெற்று வருகின்றது." பால்குடிக் குழந்தைகள் நாங்கள் எல்லாம், அதைக் கேட்டு அப்படியே பயந்து விட்டோம். 


கட்டுரையை வாசிப்பதற்கு:
Germany Deserved Debt Relief, Greece Doesn't 
http://www.bloombergview.com/articles/2015-01-27/germany-deserved-debt-relief-greece-doesn-t-i5fdca2y

Saturday, June 06, 2015

கடன்கள் : வங்கிகளின் பணம் பெருக்கும் இயந்திரம்


மிலேச்சத்தனமான முதலாளித்துவ சர்வாதிகாரம் பற்றிய உண்மைகளை உரைப்பவர்கள், "நீர்க்குமிழிக்குள் வாழ்கிறார்கள்" என்று ஒரு நண்பர் விமர்சித்திருந்தார். இன்றுள்ள முதலாளித்துவ பொருளாதாரம், அடிப்படையில் ஒரு நீர்க்குமிழி பொருளாதாரம் என்பதற்கு அடுத்தடுத்து வந்த நெருக்கடிகளே சாட்சியம் கூறுகின்றன. அண்மையில் அமெரிக்காவில் வந்த கடன் நெருக்கடி, கடந்த நூறாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

கடன் என்றால் என்ன? அதனால் நன்மை அடைவோர் யார்? பாதிக்கப் படுவோர் யார்? இது பற்றிய ஆவணப் படம் ஒன்று, நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. பொது மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில், Zembla ஊடகவியலாளர்கள் தயாரித்தளித்த நிகழ்ச்சியில் பேசப் பட்ட விடயங்களை இங்கே சுருக்கமாகத் தருகிறேன்.

பண்டைய காலத்தில், மெசப்பத்தோமியா நாட்டில் பணம் புழக்கத்தில் இருக்கவில்லை ஆனால் கடன் இருந்தது. கடன் பத்திரங்களை கல்வெட்டுகளில் பொறித்து வைத்தார்கள். மத்திய காலத்தில், போர்ச் செலவுகளுக்காக, மன்னர்கள் வணிகர்களிடம் கடன் வாங்கும் வழக்கம் இருந்துள்ளது. அது நவீன கால கடன் வழங்கும் வங்கிகளின் தோற்றத்திற்கு வித்திட்டது.

நாங்கள் எல்லோரும் கடன் வாங்குகிறோம். தனி மனிதர்கள் கடன் வாங்குவது போல, அரசுகளும் கடன் வாங்குகின்றன. அரசு என்பதற்காக, கடன் கொடுப்பவர்கள் தமது நிபந்தனைகளை தளர்த்திக் கொள்வதில்லை. ஒரு சாதாரண மனிதன், அளவுக்கு மிஞ்சி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் என்ன நடக்கும்? அவனது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், பட்டினி கிடந்தாயினும், கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுவார்கள். 

அதையே தான், நாடுகள் விடயத்திலும் பின்பற்றுகிறார்கள். கடன் வாங்கிய அரசுகள், தமது செலவுகளை சிக்கனப் படுத்தி கடனை அடைக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதை நாங்கள் அரசியல்-பொருளாதார கலைச்சொல்லில் சிக்கனப் படுத்தும் கொள்கை (Austerity) என்று சொல்கிறோம். ஆனால் விஷயம் ஒன்று தான். "உன்னுடைய செலவுகளை குறைத்து, மிச்சம் பிடித்து, வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடு."

இன்று கிரீஸ் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் அது தான். ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப் பட்ட காலத்தில் ஒரு சட்டம் இயற்றினார்கள். ஒரு ஐரோப்பிய நாடு அந்த அமைப்பில் உறுப்புரிமை பெறுவதற்காக, கடன்களை குறைவாக வைத்திருக்க வேண்டும். அது அந்த தேசத்தின் மொத்த பொருளாதார உற்பத்தியின் அளவுக்கு கீழே, அதாவது 60% க்கும் கீழே இருக்க வேண்டும். 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், மொத்த பொருளாதார உற்பத்தியையும் (BNP), மொத்த கடன்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். கடன் தொகை BNP யை விட அதிகரித்து விட்டால், அந்த நாடு திவாலாகி விடும். கிரேக்க நாட்டில் அது தான் நடந்தது. மொத்த கடன் தொகை, மொத்த பொருளாதார உற்பத்தியை விட, 129% அதிகமாக இருந்தது!

கடன் வழங்கும் வங்கிகள், நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை விட, அரசாங்கங்களுக்கு கடன் கொடுப்பதை பெரிதும் விரும்புகின்றன. கடன் வாங்கிய நிறுவனம் ஒன்று திவாலாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். கடனை திருப்பி வாங்க முடியாத நிலைமை ஏற்படும். ஆனால், நாடுகள் விடயத்தில் அப்படி அல்ல. ஓர் அரசு கடன் வாங்கினால், அந்த நாடு கடனை குறுகிய காலத்தில் திருப்பிக் கொடுக்கா விட்டாலும், வங்கிகள் கவலைப் படப் போவதில்லை. ஏன்?

இலங்கை, இந்தியா போன்ற ஏழை நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன், போன்ற பணக்கார நாடுகளும் கடன் வாங்குகின்றன. கடன் விடயத்தில், ஏழை நாடு, பணக்கார நாடு என்ற பாகுபாடு கிடையாது. அதாவது, கடன் வழங்கும் வங்கிகளை பொறுத்தவரையில் எல்லா அரசுகளும் ஒன்று தான். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்தால் சரி.

இந்தக் கடன்களை யார் அடைக்கப் போகிறார்கள்? நிச்சயமாக, வரி கட்டும் சாதாரண மக்கள் தான். ஒவ்வொரு நாளும் இலட்சக் கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. வருங்காலத்தில் அவர்கள் வரி கட்டுவார்கள். அதாவது, தனது சொந்த நாட்டு மக்களை பிணை வைத்து தான், அரசுகள் கடன் வாங்குகின்றன. எமது அரசுக்கள் வாங்கிய கடன்களையும், வட்டிகளையும் நாங்கள் தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். 

அதனால் தான், எந்த நாட்டு அரசு கடன் கேட்டாலும், அது இலங்கை மாதிரி போரினால் அழிந்து கொண்டிருக்கும் ஏழை நாடாக இருந்தாலும், வங்கிகள் தயங்காமல் கடன் கொடுக்கின்றன. அதற்குக் காரணம், அந்தப் பணத்தை எந்தக் காலத்திலும் திருப்பி வாங்கலாம். நூறு வருடங்களுக்குப் பிறகு அங்கு பிறக்கும் பிள்ளைகளிடம் இருந்தென்றாலும் வட்டியோடு வாங்கலாம். 

கடன்களுக்காக கட்டப் படும் வட்டித் தொகையினால், வங்கிகளின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன. வங்கிகளைப் பொறுத்தவரையில், கடன் என்பது பணம் பெருக்கும் இயந்திரம். இதனால், உலகின் ஒரு மூலையில் பெரும் கோடீஸ்வரர்களிடம் உள்ள பணம் பெருகிக் கொண்டே செல்கிறது. அதே நேரத்தில், ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் அரசுகள், வங்கிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு சிக்கன நடவடிக்கைகளை எடுக்கின்றன. அதனால் பொது மக்கள் நலன் பேணும் திட்டங்களை கைவிடுகின்றன. அதன் விளைவு என்ன? மக்கள் தமது அரசுகள் மீது நம்பிக்கை இழக்கின்றனர். அதற்குப் பதிலாக, ஒரு பலமான தலைவருக்காக ஏங்குகிறார்கள். 

அந்தப் புதிய அரசியல் தலைவர் ஒரு பாசிஸ்டாக இருந்தாலும், மக்கள் அதைப் பற்றி கவலைப் படப் போவதில்லை. சாதாரண மக்களின் பிரச்சனைகளை பற்றி எவர் பேசினாலும், அவரது அரசியல் பின்னணி பற்றி ஆராயாமல் ஆதரிக்கிறனர். ஜெர்மனியில் நாஸிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பிருந்த நிலைமையில், இன்றைய ஐரோப்பா உள்ளது. அந்த ஆபத்து குறித்து அரசியல் தலைவர்கள் மத்தியில் எச்சரிக்கையுணர்வு இல்லை. இருந்தாலும் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவில்லையா? இருக்கிறது. புரட்சி மட்டுமே தீர்வைக் கொண்டு வரும். ஒரு நாட்டில் புரட்சி நடந்து புதிதாக ஆட்சியமைக்கும் அரசு புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதன் மூலம் கடன்களை இரத்து செய்ய முடியும். அது மட்டுமல்ல, உலகப்போர்களும் கடன்களை இரத்து செய்வதற்கான காரணங்களை வழங்குகின்றன. 

உதாரணத்திற்கு, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் பழைய கடன்கள் யாவும் இரத்து செய்யப் பட்டன. அதனால் தான் ஜெர்மனி ஒரு பொருளாதார வல்லரசாக வளர்ச்சி அடைய முடிந்தது. அன்று கடன்களை இரத்து செய்தபடியால் நன்மை அடைந்த ஜெர்மனி, இன்று கிரீசுக்கு தான் வழங்கிய கடன்களை இரத்து செய்ய மறுத்து வருகின்றது!

ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு:
De schuldenmachine; http://www.npo.nl/zembla/20-05-2015/VARA_101372895

Tuesday, March 17, 2009

பொருளியல்: கடன் நெருக்கடி உருவானது எப்படி?

வீட்டுக் கடன் நெருக்கடி உருவானது எப்படி? ஒரு போதும் இறங்காது என நம்பப்பட்ட வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தது எப்படி? அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவாறு தயாரிக்கப்பட்ட விவரணப் படம்.

The Crisis of Credit Visualized

The Crisis of Credit Visualized from Jonathan Jarvis on Vimeo.