Saturday, January 07, 2017

முன்னாள் போராளிகளின் உரிமைகளுக்காக "எழுக தமிழ்" வேலை நிறுத்தம்!


கிளிநொச்சி - இரணைமடுவில் உள்ள சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள் ஒன்று சேர்ந்து தமக்கு வேலை வாய்ப்பு வேணும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பலர், தங்கள் கைக்குழந்தையுடன் வந்து நின்றனர்.

2.1.2017 அன்று, காலை 10.30 மணியளவில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள், தாங்கள் புனா்வாழ்வுப் பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இல்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகச் சொன்னார்கள். புனா்வாழ்வு பெற்ற காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு வேலை வாய்ப்பை வழங்குமாறும் கேட்டனர்.

ஈழப் போர் முடிந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னரும், முன்னாள் புலிப் போராளிகள் வேலை வாய்ப்பில்லாமல் வறுமையில் வாடுவது தொடர்கதையாக உள்ளது. போர் நடந்த காலத்தில், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கோடி கோடியாக பணம் வந்து குவிந்து கொண்டிருந்தது. அதனால் அந்தக் காலத்தில் அங்கவீனர்களான முன்னாள் போராளிகளையும் பராமரிக்கும் பொறிமுறை இருந்தது. அவர்களுக்கான இலகுவான வேலை வாய்ப்புகளும் வழங்கப் பட்டன.

ஐந்து வருடங்கள் போராளியாக கடமையாற்றியவர்கள் திருமணம் செய்து குடும்பம் நடத்த அனுமதிக்கப் பட்டிருந்தது. முன்னாள் போராளிகளாக கருதப் பட்ட அவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் இருந்தன. இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவெனில், விடுதலைப் புலிகள் இயக்கமே மிகப் பெரிய வேலை வழங்குனராக இருந்தது. அவர்களால் நடத்தப் பட்ட பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு வகைப் பட்ட தொழில் வாய்ப்புகள் இருந்தன.

சிறிலங்கா அரசின் முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் வேலை வாய்ப்புகளையும், சம்பளத்தையும் சந்தையே தீர்மானித்தது. அதே மாதிரியான பொறிமுறை புலிகளின் "நடைமுறை தமிழீழ அரசில்" இருக்கவில்லை. எல்லாவற்றையும் புலிகள் இயக்கத் தலைமையே தீர்மானித்தது. எந்த நிறுவனம் நடத்த வேண்டும்? எத்தனை தொழில் வாய்ப்புகள்? யாருக்கு வேலை கொடுக்க வேண்டும்? சம்பளம் எவ்வளவு? இது எல்லாவற்றையும் அவர்களே தீர்மானித்தார்கள்.

போர் முடிந்த பின்னர், பல்லாயிரக் கணக்கான முன்னாள் போராளிகளை பராமரிப்பதற்கான பொறிமுறை இல்லாமல் போனது. அதாவது அவர்கள் இப்போது போராளிகள் அல்ல. ஆகையினால் அவர்களை வைத்து பராமரித்து வந்த முகாம் என்ற அமைப்பு தற்போது இல்லை. அப்படியானால் அவர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக வேலை செய்ய வேண்டும். ஆனால், இலங்கையின் முதலாளித்துவப் பொருளாதார கட்டமைப்பில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு இருப்பதில்லை. புதிய தொழில்களை உருவாக்குவதற்கான பொறிமுறைகளும் இல்லை. அதை சந்தை தான் தீர்மானிக்க வேண்டும். இதன் மூலம் அரசு தனது கடமையை தட்டிக் கழிக்கிறது.

சிறிலங்கா அரசு முன்னாள் போராளிகளை இரண்டு வருடங்கள் புனர்வாழ்வு முகாம்களில் வைத்திருந்து, அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தது. அந்தக் காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளும், அவற்றின் தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து வந்தன. அவர்கள் வெளியே வந்த பின்னர் யதார்த்தம் முகத்தில் அறைந்தது. அவர்கள் போராளியாவதற்கு முன்பிருந்த அதே சமுதாய அமைப்பு இப்போதும் மாறாமல் அப்படியே இருக்கின்றது. பெரும்பாலான முன்னாள் போராளிகள் ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு உதவும் அளவிற்கு பெற்றோரிடம், அல்லது உறவினரிடம் வசதி இருக்கவில்லை. அவர்களும் வசதி, வாய்ப்புகளற்ற ஏழைகள் தானே?

புனர்வாழ்வு அளிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுக்கும் கடமை தனக்கு இருப்பதாக அரசு கருதுவதாக தெரியவில்லை. நீங்களாகவே வேலை தேடிக் கொள்ளுங்கள் என்று கைவிட்டு விட்டது. அதே நேரம், தமிழர்கள் வாழும் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்த நிதி ஒரேயடியாக நின்று விட்டது. உள்ளூர் தமிழ் முதலாளிகள், அல்லது தொழில் முனைவோர் யாரும், முன்னாள் போராளிகளை பணியில் அமர்த்த விரும்பவில்லை.

உள்ளூர் தமிழ் முதலாளிகள் முன்னாள் போராளிகளை புறக்கணிப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. புலிகளின் ஆட்சிக் காலத்தில் போராளிகளுக்கு பெரும் மதிப்பு இருந்தது. சிலர் பொது மக்களின் மீது அதிகாரத்தை பிரயோகிப்பவர்களாக இருந்தனர். அப்போது பலரின் மனதில் ஏற்பட்ட வெறுப்பை வைத்து இப்போது பழிவாங்குகிறார்கள். இரண்டாவது காரணம், முன்னாள் போராளிகளுடன் தொடர்பு கொள்ள பலர் அஞ்சுகின்றனர். தேவையில்லாமல், புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்புக்கு ஆளாக வேண்டி வரும் என நினைக்கிறார்கள். அது மட்டுமல்ல, தற்போது முன்னாள் போராளிகள் புலனாய்வுத்துறைக்கு வேலை செய்வதாகவும் சந்தேகப் படுகிறார்கள்.

இது போன்ற காரணங்களினால், ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் முன்னாள் போராளிகள் வேலை இல்லாமல் வறுமையில் வாடும் அவலம் தொடர்கின்றது. இந்த இடத்தில் ஒரு நியாயமான கேள்வி எழலாம். வேலையில்லாதவர்கள் எவ்வாறு இவ்வளவு காலமும் உயிர் வாழ முடிந்தது? சிலநேரம் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்திருக்கலாம். ஆனால், போர் முடிந்த பின்னர் அவற்றின் உதவிகள் வர வர குறைந்து கொண்டே செல்கின்றன. அப்படியானால் வேறென்ன வழி இருந்தது?

இலங்கை மாதிரியான வறிய நாடுகளில் வேலை இல்லாமல் ஒருவர் உயிர் வாழ முடியாது. அவர் இல்லாவிட்டால் யாராவது ஒரு குடும்ப உறுப்பினர் அவருக்காக வேலை செய்வார். பெரும்பாலும் இவை தற்காலிகமான வேலைகளாக இருப்பதால், வறுமையில் இருந்து மீள முடியாத நச்சுச் சுழல் ஒன்றிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

"தமிழர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளை பெற வேண்டும்" என்று இருபத்திநான்கு மணிநேரமும் பேசிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாதிகள் யாரும், முன்னாள் போராளிகளின் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. சக தமிழனின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் வாய்மூடி மௌனிகளாக இருந்தனர். கிளிநொச்சியில் நடந்த முன்னாள் போராளிகளின் வேலை தேடும் போராட்டம் பற்றிய தகவல், சமூக வலைத் தளங்களில் பரவலாக பலரை சென்றடைந்தது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த தமிழ்த் தேசியவாதிகள் கன்னாபின்னாவென்று உளறத் தொடங்கினார்கள். இருப்பினும், ஆய்வு மனப்பான்மை கொண்ட தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூல் நிலைத்தகவலில் கொடுத்த விளக்கம் மட்டும் பிரச்சினைக்கான தீர்வு பற்றியதாக இருந்தது. தீவிர வலதுசாரி தமிழ்த் தேசிய இயக்கமான தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டளராக அறியப்படும் அந்த ஊடகவியலாளர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு:

//7 வருடங்களுக்கு முன்னர் எந்த இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதே இராணுவத்திடம் மீள்வாழ்வுக்கு கையேந்தி நிற்க வேண்டிய நிலையை முன்னாள் போராளிகள் எதிர்நோக்கியிருக்கின்றனர். வெளிச்சூழலில் அவர்களுக்குப் பொருத்தமான வேலைகள் இல்லாமயே இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவிடம் வேலை கேட்டுச் செல்லக் காரணம் எனச் சொல்லியிருக்கின்றனர். அப்படியாயின் சிவில் பாதுகாப்பு படையினரிடமே முன்னாள் போராளிகளுக்குப் பொருத்தமான வேலைகள் உண்டு. சிவில் பாதுகாப்பு படையினரிடம் இருக்கும் வேலைகள் என்னவெனில், விவசாய பண்ணைகள் செய்தல், கல்லறுத்தல், கட்டுமானப்பணிகளில் ஈடுபடல், உயர்தரம் வரை கல்வி கற்றிருந்தால் முன்பள்ளி ஆசிரியர் இவைகளைத் தான் முன்னாள் போராளிகள் தங்களுக்குப் பொருத்தமான வேலைகள் என்கின்றனர். இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா? தாராளமாகவே உண்டு. வன்னியில் பாரம்பரியமான விவசாய கிராமங்களில் விவசாய நடவடிக்கைகளைப் பலரும் கைவிட்டிருக்கின்றனர். அதற்குப் பிரதான காரணம் கூலியாட்கள் இன்மையே. நாளொன்றுக்கு 1500 ரூபா சம்பளம் கொடுத்தும் கூலியாட்களைப் பெறமுடியாத சூழல் இருக்கின்றது. தொழிலாளிகள் இன்மையால் உப உணவுப் பயிர்ச்செய்கை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளதையும் அவதானிக்கின்றேன்.// (- Jera Thambi; https://www.facebook.com/JERA.jeyarajh/posts/1219723188111232?pnref=story)

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிங்களப் பேரினவாத அரசின் தமிழர் விரோதப் போக்கை அம்பலப் படுத்த தயங்காத கடும்போக்கு ஊடகவியலாளர், இந்த விடயத்தில் மட்டும் அரசைக் கண்டிக்காமல் மென்போக்குடன் நடந்து கொள்வது ஆச்சரியத்திற்குரியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேலை கொடுக்காத அரசை திட்டித் தீர்ப்பார் என்று எதிர்பார்த்தால், நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே.

"ஏய், சிங்கள அரசே! முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடு!" என்று சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அறச்சீற்றம் கொள்ள வேண்டிய கடும்போக்கு தமிழ்த் தேசியவாதிகள், மென்போக்காக அடக்கி வாசிக்கிறார்கள். "எழுக தமிழ்" என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்த் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்தி வட மாகாணத்தை ஸ்தம்பிதமடைய வைத்திருக்கலாம். அவ்வாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், முன்னாள் போராளிகளை தனியார் துறையில் வேலை தேடுமாறு அறிவுறுத்துவதன் மூலம் ஒரு ஒடுக்குமுறை அரசை பாதுகாக்கிறீர்கள் என்பதை உணரவில்லையா?

இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவு அரச இயந்திரத்தின் ஓர் அங்கம் என்பது அவர் அறியாதது அல்ல. முன்னாள் போராளிகள் இராணுவத்தில் போர்வீரர்களாக சேர்வதற்காக அங்கே வேலை கேட்டுச் செல்லவில்லை. அதை மேற்படி ஊடகவியலாளர் உறுதிப் படுத்துகின்றார். ஆனால், "எதற்காக அரசிடம் வேலை கேட்டு கையேந்துகிறீர்கள்?" என்பது தான் அவரது "ஆதங்கம்"! அதனால் தான் "இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா?" என்று கேட்கிறார்.

சிங்கள அரசு நிறுவனத்தில் உத்தியோகம் பார்க்கும் பல தமிழ்த் தேசியவாதிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டளர்களாக உள்ளனர். அதற்கு ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும். தமிழ்த் தேசிய ஆர்வலர் ஒருவர், பாடசாலை ஆசிரியராக இருந்தாலும், வட மாகாணத்தின் கீழான நிறுவனம் ஒன்றில் வேலை செய்தாலும், அவர் அரசுக்குவேலை செய்கிறார். அதாவது சிங்கள அரசிடம் கைநீட்டி சம்பளம் வாங்குகிறார். பல்கலைக்கழக பட்டதாரிகளான இவர்களுக்கு, "இந்த வேலைகள் வெளிச்சூழலில் இல்லையா?" சிங்கள அரசுக்கு கீழே அடிமையாக வேலை செய்வதை விட, ஒரு தமிழ் முதலாளியின் கீழ்  வேலை செய்வதை பெருமையாகக் கருதவில்லையா?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களும் அரசுக்கு வரி கட்டுகிறார்கள். நேரடியான வரிகள், மறைமுகமான வரிகள் என்று பலவுண்டு. அரசு மக்களிடம் இருந்து அறவிடும் வரிப் பணத்தை என்ன செய்கிறது? அதை மீண்டும் மக்களுக்கே செலவிட வேண்டாமா? ஆசிரியராக அரசு உத்தியோகம் பார்க்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எங்கிருந்து சம்பளம் வருகின்றது? மக்களிடம் இருந்து எடுக்கும் வரிப்பணம் தானே சம்பளமாக மாறுகின்றது?

பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை கொடுக்கலாம் என்றால், பத்தாம் வகுப்பை முடிக்காத முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுப்பது எப்படி தவறாகும்? அரசிடம் வேலை கேட்டு போராடுவது எப்படித் தவறாகும்? தனது பிரஜைக்கு வேலை கொடுப்பது அரசின் கடமைகளில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக, அதன் சாத்தியப்பாடுகள் குறைவு என்பதால், தனிநபருக்கு வேலை கொடுக்காததற்காக அரசின் மீது வழக்குப் போட முடியாது. ஆனால், வேலை வாய்ப்புகளை உருவாக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

ஒரு தொழிலை பெற்றுக் கொள்வதும், வறுமையில் இருந்து மீளுவதும் மனித உரிமைகள் இல்லையா? குறிப்பாக, அவை தமிழர்களின் உரிமைகள் இல்லையா? அதையெல்லாம் புறக்கணித்து விட்ட, எந்த உரிமைகளுக்காக போராடுகின்றீர்கள்? மனிதன் வாழ்வதற்கான உரிமை தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது.

வாழ்வாதாரத்திற்காக தான் முன்னாள் போராளிகள் போராடுகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டாமா? அவர்களுக்கு வேலை கொடு என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமா? அரசு இறங்கி வரவில்லை என்றால், "எழுக தமிழ்" கோஷத்துடன் வேலை நிறுத்தம் ஒன்றை அறிவியுங்கள். சிங்களப் பேரினவாத அரசை பணிய வைக்கக் கூடிய அருமையான சந்தர்ப்பம் கிடைத்தும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவது ஏன்?

No comments: