Wednesday, July 21, 2021

ஜகமே தந்திரம் படம் பேசும் புலி எதிர்ப்பு அரசியல்

 2009 ம் ஆண்டு, புலிகள் மக்களைக் கூட்டிக் கொண்டு முள்ளிவாய்க்கால் வரை சென்றமைக்கு "அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும்" என்ற காரணம் சொல்லப் பட்டது. புலிகளின் உறுப்பினர்கள் பகிரங்கமாகவே இதைச் சொன்னதாக முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த பலர் என்னிடம் தெரிவித்து இருந்தனர்.


நான் முன்பு பல தடவைகள் இதைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிய போதெல்லாம், பலர் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு சண்டைக்கு வந்தார்கள். 2009 ம் ஆண்டு மே மாதம், ஐரோப்பாவில் இயங்கிய புலிகளின் ஊடகங்கள் தாமாகவே அப்படி ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார்கள். அதாவது, இரண்டு அமெரிக்க கப்பல்கள் முல்லைத்தீவை அண்டிய ஆழ்கடலில் தரித்து நிற்பதாகவும், மேலிடத்து உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

தற்போது நெட்பிளிக்சில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ஜகமே தந்திரம் படத்தில், இறுதியுத்தம் நடந்த புது மாத்தளன் பகுதியை காட்டுவார்கள். அங்கு இரண்டு பேர் வானொலிப் பெட்டிக்கு அருகில் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் சொல்வார்: "இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பிக் காப்பாற்றும்!" (அமெரிக்கா இந்தியா என்று மாற்றப் பட்டுள்ளது.) ஆகவே, அமெரிக்க (அல்லது இந்திய) கப்பல் வரும் என்று நம்பித் தான் புதுமாத்தலன் கடற்கரை வரை சென்றிருக்கிறார்கள்? அதாவது, புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி இருக்கிறார்கள்? அதைத் தானே இந்தப் படத்தில் சொல்ல வருகிறீர்கள்?

படத்தில் அந்த வசனத்தை பேசுகிறவர் சோமிதரன் என்ற ஈழத்தமிழர். அதுவும் சாதாரணமான ஈழத்தமிழர் அல்ல. ஈழத்தில் யுத்தம் நடந்த காலத்திலும் ஓர் ஊடகவியலாளராக செயற்பட்டவர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் செய்தி சேகரித்தவர். மேலும், ஈழப் பிரச்சினை தொடர்பாக ஆவணப்படங்களை எடுத்தவர். அதைவிட இன்று வரை புலிகளை விமர்சிக்க மறுத்து வருபவர். புலிகள் விட்ட தவறுகளை நேரில் கண்ட போதிலும் அவற்றைப் பற்றி பேச மறுப்பவர். சுருக்கமாக: தன்னை ஒரு புலி ஆதரவாளராக காட்டிக் கொள்வதிலும் எந்த ஆட்சேபனையும் இல்லாதவர்.

அப்பேற்பட்ட பெருமைக்குரிய ஒருவரை, அதிலும் ஒரு புலி ஆதரவாளரை, ஜகமே தந்திரம் என்ற புலி எதிர்ப்புப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இதிலே ஹைலைட் என்னவென்றால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அரசு மட்டுமல்ல, புலிகளும் காரணம் என்று, அவர்களது தவறை சுட்டிக் காட்டும் வகையில் வசனம் பேச வைத்திருக்கிறார்கள்!

புது மாத்தளன், முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம் மிகவும் சிறிது. ஒரு பக்கம் இந்து சமுத்திரம், மறுபக்கம் நந்திக் கடல். இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு குறுகிய நிலப்பரப்பை அரசு பாதுகாப்பு வலையமாக அறிவித்து இருந்தது. அங்கு சென்ற மக்களை கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்தமை அரசின் போர்க்குற்றம். அந்த நேரம் தான் அங்கு ஓர் இனப்படுகொலை நடக்கிறது என்ற செய்தி பல உலக நாடுகளின் தலைநகரங்களிலும் எதிரொலித்தது.

அப்போது இது குறித்து சர்வதேச கண்டனங்கள் எழுந்திருந்த போதிலும், அதையெல்லாம் அரசு அலட்சியப் படுத்தியது. அரசு தானாகவே ஒரு பிரதேசத்தை பாதுகாப்பு வலையம் என்று அறிவித்து விட்டு, அந்த இடத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனால், பாதுகாப்பு வலையத்தில் புலிகள் மக்களோடு பதுங்கி இருப்பதால் தாக்குதல் நடத்துவதாக அரசு தனது போர்க்குற்றத்தை நியாயப் படுத்தியது.

உண்மையில் புதுமாத்தலன் பகுதியில் தான் பெருந்தொகையான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் முள்ளிவாய்க்காலில் தங்கியிருந்த படியால், இராணுவம் முன்னேறுவதை தடுப்பதற்காக மிக உயரமான மண் அணை அமைத்திருந்தார்கள். அதைக் கைப்பற்றுவதற்காக கடுமையான சண்டை நடந்தது.

ஜகமே தந்திரம் படத்தில் புதுமாத்தளன் என்று ஓரிடத்தையும், அங்கு இடம்பெயர்ந்து வந்து தங்கியுள்ள மக்களையும் காட்டுவார்கள். அங்கு நடந்த விமானக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட அழிவுகளையும், மக்களில் சிலர் கொல்லப் படுவதையும் காட்சியாக அமைத்திருக்கிறார்கள். கமெரா என்னவோ பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை சுற்றிப் படமெடுத்தாலும், தூரத்தில் புலிச் சீருடையில் சிலர் நிற்பதாக காட்டுவார்கள். இது எத்தனை பெரிய தவறு என்பது படம் எடுத்தவர்களுக்கு தெரியாதா?

அன்று யுத்தம் நடந்த காலத்தில் புது மாத்தளன் பாதுகாப்பு வலையத்திற்குள் அடங்கியது. அரசிடம் பாதுகாப்புத் தேடி வந்த மக்களை, அரச படையினர் குண்டு போட்டு கொன்றமை ஒரு மன்னிக்க முடியாத போர்க்குற்றம். நாங்கள் இன்றைக்கும் அந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப் பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஜகமே தந்திரம் படத்தை எடுத்தவர்கள், அரசு சொன்ன காரணத்தை நியாயப்படுத்துவது போன்று காட்சி அமைத்திருக்கிறார்கள்!

பாதுகாப்பு வலையத்தில் இருந்த மக்களுக்குள் புலிகள் பதுங்கி இருந்தார்கள் என்பது அரசு தரப்பு குற்றச்சாட்டு. அதைத் தானே இந்தப் படமும் காட்டுகிறது? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று சொல்ல வருகிறார்களா? எதுவென்றாலும் நேரடியாக பேச வேண்டும். மொத்தத்தில் ஜகமே தந்திரம் முழுக்க முழுக்க சிறிலங்கா அரசு சார்பாக எடுக்கப் பட்ட ஒரு தமிழ்ப் படம்.

No comments: