Showing posts with label இந்தோனேசியா. Show all posts
Showing posts with label இந்தோனேசியா. Show all posts

Thursday, April 30, 2015

மயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்


"மனிதாபிமான உணர்வு இனம் பார்த்துத் தான் வரும்" என்பதை, மீண்டும் பல "தமிழர்கள்" நிரூபித்து வருகின்றனர். போதைவஸ்து கடத்திய குற்றத்திற்காக மயூரன் என்ற, அவுஸ்திரேலிய பிரஜையான தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கியதை நியாயப் படுத்த முடியாது. ஆனால், இந்த விடயத்தில் நிறையப் பேர் இரட்டை வேடம் போடுகின்றனர்.

பல தசாப்த காலமாகவே மரண தண்டனை ஒழிப்பிற்காக குரல் கொடுத்து வரும் மனிதநேய ஆர்வலர்கள் இந்தோனேசிய அரசை விமர்சிப்பது நியாயமானது. ஆனால், அமெரிக்கா முதல் இந்தோனேசியா வரையில் போதைவஸ்து கடத்தும் கிரிமினல்களுக்கு மரண தண்டனை வழங்குவதை, நேற்று வரையில் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த பலர், இன்று திடீர் மனிதாபிமானவாதிகளாக மாறியுள்ளனர்.

ஒரு தமிழரும், சீனரும், தனது நாட்டு பிரஜைகள் என்பதால், மரண தண்டனையை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு பாடுபட்டுள்ளது. தனது வேண்டுகோள் புறக்கணிக்கப் பட்ட படியால், தூதுவரை திரும்பப் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள இராஜதந்திர பிரச்சினைகளையும் மறைக்க முடியாது.

ஏற்கனவே மலேசியா, சிங்கப்பூரில் இதே போதைவஸ்து கடத்தல் குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. அப்போது இந்தளவு கண்டனங்களும், ஊடக கவனமும் அவற்றிக்கு கிடைக்கவில்லை.

மரண தண்டனையை வைத்து அரசியல் இலாபம் பெற நினைக்கும், தமிழ் தேசியவாதிகள் உதிர்க்கும் கருத்துக்கள் அரைவேக்காட்டுத் தனமானவை. "தமிழனுக்கு என்றொரு நாடு இருந்திருந்தால் பிரச்சினை இந்தளவு தூரம் வந்திருக்காது" என்று காமெடி பண்ணுகின்றனர்.

உலகில் மிகவும் செல்வாக்குள்ள, ஒரு பணக்கார மேற்கத்திய நாடான அவுஸ்திரேலியா, தனது பிரஜைகளை காப்பாற்ற முயற்சித்தும், மரண தண்டனையை தடுக்க முடியவில்லை. இந்த இலட்சணத்தில், தமிழ் தேசியவாதிகள் தனி நாடு கண்டிருந்தால் கிழித்திருப்பார்கள்.

முன்பு ஈழப்போர் நடந்த காலங்களில், வட மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், அல்லது கெரில்லாப் போர் நடத்திய பிரதேசங்களில், பல சமூகவிரோதிகளுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். தந்திக் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த சடலங்களுக்கு அருகில், அவர்கள் செய்த குற்றமும் எழுதப் பட்டிருக்கும். சில பத்துப் பேருக்காவது, போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்திருப்பார்கள்.

அப்போதெல்லாம், மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல்காரர்களுக்காக, "தமிழர்கள்" யாரும் இரக்கப் படவில்லை. இன மான உணர்வு பீறிட்டுக் கிளம்பவில்லை. இத்தனைக்கும் கொல்லப் பட்டவர்களும் தமிழர்கள் தான். ஆனால், "வித்தியாசமான" தமிழர்கள். அவர்கள் ஒரு பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். அல்லது சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வறுமையில் வாழும், தாழ்த்தப் பட்ட சாதியினராக இருந்திருப்பார்கள். அதனால், அன்று அவர்களுக்காக யாரும் அழவில்லை.

ஓர் அவுஸ்திரேலிய பிரஜையான மயூரன், தனது வயிற்றுப் பசியை, அல்லது குடும்பக் கஷ்டத்தை போக்குவதற்காக போதைவஸ்து கடத்தியதாக தெரியவில்லை. அப்படி அவரும் வாக்குமூலம் கொடுக்கவில்லை. அவுஸ்திரேலியா "ஒரு வறிய நாடு, வேலையில்லாப் பிரச்சினை அதிகம், அதனால் மயூரன் வேறு வழியின்றி போதைவஸ்து கடத்தினான்..." என்று திடீர் மனிதநேயவாதிகள் யாரும் சொல்லவும் மாட்டார்கள். இங்கே பல "தமிழர்களுக்கு" மனிதாபிமான உணர்வு இனம் பார்த்து மட்டும் வருவதில்லை. அது வர்க்கம் பார்த்தும் வரும்.


மயூரன் சுகுமாரனின் மரண தண்டனையை கடுமையான வார்த்தைகளில் கண்டித்த, அவுஸ்திரேலிய அரசையும், ஊடகங்களையும் பற்றி, இன்று வரையில் பல தமிழர்கள் சிலாகித்துப் பேசியுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு, மற்றும் ஊடகங்களின் இரட்டை வேடம் பற்றி எதுவும் தெரியாதா? அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா? 

இதே அவுஸ்திரேலிய அரசு தான், தமிழ் அகதிகளை நாட்டுக்குள் நுளைய விடாமல், தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தது. அப்போது எங்கே போனது மனிதாபிமானம்? அவுஸ்திரேலிய விபச்சார ஊடகங்கள் என்ன குறைந்தவையா? 

போதைப்பொருள் கடத்தி பிடிபட்ட, மயூரனின், ஷான் ஆகிய இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளின் மரண தண்டனை காரணமாக, இந்தோனேசியா அரசின் கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளது என்று தலையங்கம் தீட்டிய Daily Telegraph பத்திரிகை, சில வருடங்களுக்கு முன்பு என்ன எழுதியது? 

அதே Daily Telegraph பத்திரிகை, மரண தண்டனைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியது. ஆயிரக் கணக்கான உயிர்களை பலி கொண்ட போதைப்பொருளை கடத்தியவர்களின் உயிரைப் பறிப்பதற்கு கருணை காட்டக் கூடாது என்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. இவங்களை இன்னுமா இந்த உலகம் நம்புது? 

அவுஸ்திரேலிய ஊடகங்களின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டும் கட்டுரை: A tale of two headlines


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, June 18, 2013

புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு

[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை] 

 (மூன்றாம் பாகம்)


ஈழத் தமிழர்கள், மொலுக்கர்கள் ஆகிய தேசிய இனங்களுக்கு இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். இரண்டு தேசிய இனங்களும், போர்த்துக்கேயர்கள், டச்சுக்காரர்கள் ஆகிய ஐரோப்பிய காலனியாதிக்க எஜமானர்களால் ஆளப்பட்டன. காலனிய காலத்தில் சிறப்புரிமை பெற்ற இனங்களாக இருந்தன. அவர்களின் முன்னோர்கள் காலனிய எஜமானர்களினால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். ஆனால், பிற்காலத்தில் வந்த தலைமுறையினர் அதே காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் இருந்து சில உதாரணங்களை காட்டலாம்.

இலங்கையில் போர்த்துக்கேய காலனியாதிக்கம் பரவிய காலத்தில், யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவ - தமிழர்களை இனப்படுகொலை செய்தான். அதற்குப் பதிலடியாக, போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர், அங்கு வாழ்ந்த இந்து - தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள். மொலுக்கு தீவுகள், வாசனைத் திரவியங்களுக்கு பேர் போனது. அங்கு சென்ற டச்சுக்காரர்கள், மொலுக்கு விவசாயிகள் பணப் பயிர்களை உற்பத்தி செய்ய ஊக்குவித்தார்கள். ஆனால், அங்கு விளைந்த வாசனைத் திரவியங்களை டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கு மட்டுமே விற்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார்கள். உள்ளூர் மக்கள், ஆங்கிலேய வர்த்தகர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதை அறிந்த டச்சுக் காரர்கள், அதற்கு தண்டனையாக ஆயிரக் கணக்கான மக்களை இனப்படுகொலை செய்தார்கள். 

காலப்போக்கில் தென் மொலுக்கு தீவுகளில் வாழ்ந்த மக்களை, டச்சுக் காரர்கள் தமக்கு விசுவாசமானவர்களாக மாற்றினார்கள். அந்த விசுவாசம் எந்தளவுக்கு தீவிரமாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணத்தை கூறலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் போது, அந்தப் பிராந்தியம் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அங்கு பல வீடுகளில் வைக்கப் பட்டிருந்த, நெதர்லாந்து இராணியின் உருவப் படத்தை அகற்றுமாறு, ஜப்பானிய படையினர் உத்தரவிட்டனர். பல மொலுக்கர்கள், அதற்கு மறுத்து சித்திரவதைகளை அனுபவித்தனர். மொலுக்கர்களின் காலனிய விசுவாசத்திற்கு, கிறிஸ்தவ மயமாக்கல் ஒரு முக்கிய காரணமாகும்.

மொலுக்கர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் நெதர்லாந்து இராணிக்கு காட்டிய விசுவாசத்தை பெருமையுடன் நினைவு கூர்வார்கள். அதே போன்று தான், ஈழத் தமிழர்களும் தாம் பிரிட்டிஷ் இராணிக்கு காட்டிய விசுவாசம் குறித்து சிலாகித்து பேசுவதில் பெருமைப் படுவார்கள். காலனிய எஜமானர்கள், ஒரு குறிப்பிட்ட பிரதேச மக்களை கிறிஸ்தவ மயமாக்குவதற்கு வணிகமும் முக்கிய காரணமாக இருந்தது. அதாவது, அன்றைய சர்வதேச வணிகம் இஸ்லாமிய மொலுக்கர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதனை முறியடிக்க வேண்டிய தேவை இருந்தது. இதே போன்று, அன்றைய வட இலங்கையிலும் சர்வதேச வர்த்தகம் இஸ்லாமிய தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. காலனியாதிக்க வாதிகள் கணிசமான தமிழர்களை கிறிஸ்தவ மயப் படுத்தி, தமக்கு ஆதரவான சக்தியாக வளர்த்தெடுத்தனர். 

இன்றைய இலங்கையின் இனப் பிரச்சினையில் காணப்படும், "தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டின் தோற்றுவாய்" காலனிய கால கட்டத்தில் உருவாகி விட்டது. இன்று தமிழ் - முஸ்லிம் முரண்பாடு, சிங்கள பேரினவாதத்திற்கு பயனளிக்கத் தக்கதாக மாறி விட்டது. அதே போன்று, இன்றைய இந்தோனேசிய அரசும், மொலுக்கர் சமூகத்தில் உள்ள கிறிஸ்தவ - முஸ்லிம் முரண்பாட்டை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. மொலுக்கு தீவுகளில் காணப்படும் கிறிஸ்தவ - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பகைமை உணர்ச்சியும் காலனிய காலத்திலேயே வேரூன்றி விட்டது. கிழக்கிலங்கையில் நடந்த தமிழ் - முஸ்லிம் கலவரங்கள், தமிழீழத்திற்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக குறைத்தது. அதே போன்று, மொலுக்கு தீவுகளில் நடந்த கிறிஸ்தவ - முஸ்லிம் கலவரங்கள், மொலுக்கு தேசியத்திற்கு பின்னடைவாக அமைந்தது. 

ஆரம்பத்தில், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஈழத் தமிழ் தேசியம், வெகு விரைவில், கிறிஸ்தவ - இந்து தமிழர்களுடைய வடக்கு-கிழக்கு மாகாணங்களை மட்டுமே உள்ளடக்கிய தமிழீழமாக குறுகிப் போனது.மொலுக்கு தேசியமும் அதே மாதிரியான பரிணாம வளர்ச்சியை கண்டது. கிறிஸ்தவர்கள் மட்டும் வாழும் தென் மொலுக்கு தீவுகளை மட்டுமே உள்ளடக்கிய, தென் மொலுக்கு தேசியமாக குறுகிப் போனது. அது மொலுக்கு தேசியத்தின் முக்கியமான தவறு என்பதை, இரண்டாவது தலைமுறையினர் மட்டுமே உணர்ந்தார்கள். ஆனால், அதற்குள் பல கசப்பான பின்னடைவுகளை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. 

மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று குடியேறிய ஈழத் தமிழர் மத்தியில், தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கணிசமான அளவு ஆதரவு இருந்தது. பெரும்பாலான தருணங்களில், புலிகளின் போர் வெற்றிகள், தமிழ் மக்கள் மீதான சிங்களப் படைகளின் அட்டூழியங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நம்பியிருந்த ஊடகங்களும், தாயகத்து தொடர்புகளும் அந்த தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தன. அதே மாதிரியான நிலைமையில் தான், நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கு அகதிகளும் இருந்தனர். மொலுக்கு குடியரசுவாதிகளின் ஆயுதப் போராட்டம், இந்தோனேசியப் படைகளின் அட்டூழியங்கள் போன்றன அவர்களின் உரையாடல்களில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். 

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை, புலிகள் இயக்கத்திற்கான நிதியாக வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதே போன்று, நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கு அகதிகளும் குடும்பத்திற்கு 400 டச்சு கில்டர்ஸ் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். (இன்று அதன் மதிப்பு 500 யூரோவாக இருக்கலாம்.) இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது, ஐம்பதுகளில் நெதர்லாந்து முகாம்களில் வாழ்ந்த மொலுக்கு அகதி ஒருவருக்கு, வாரத்திற்கு மூன்று டச்சு கில்டர்ஸ் மட்டுமே செலவுக்கு கொடுக்கப் பட்டது. (எல்லா முகாம்களிலும் உணவு சமைத்துப் பரிமாறப் பட்டது.) ஒரு அகதியின் அத்தியாவசிய செலவுகளுக்கு, 3 கில்டர்ஸ் போதாது. புது உடுப்பு வாங்க முடியாது. வருடத்திற்கு ஒரு தடவை, மாற்று உடைகள் கொண்டு வந்து கொடுப்பார்கள். 

மொலுக்கர்கள் என்றோ ஒரு நாள் இந்தோனேசியாவுக்கு திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என்பதால், அவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப் படவில்லை. அதனால், அவர்கள் வேலை செய்யவும் அனுமதிக்கப் படவில்லை. அப்படியான இக்கட்டான நிலையிலும், பல அகதிகள் முகாமுக்கு அருகில் இருந்த வயல்களில், பண்ணைகளில் வேலை செய்து சிறிது பணம் சம்பாதித்தார்கள். அந்தப் பணத்தில் இருந்து தான், மொலுக்கு தீவுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கத்திற்கு நிதியுதவி செய்தார்கள். நிதி மட்டுமல்ல, ஆயுதங்களும் வாங்கி அனுப்பினார்கள். மொலுக்கு தேசியவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட, லக்சம்பேர்க் நாட்டில் நிறுவனத்தை வைத்திருந்த, டச்சு வர்த்தகர் ஒருவர் தாராளமாக உதவினார். புலம்பெயர்ந்த மொலுக்கர்களின் பணத்தில், ஹங்கேரி ஆயுதங்களை வாங்கி அனுப்பி உதவினார். 

புலிகளுக்கு உதவிய புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், மொலுக்கு விடுதலை இயக்கத்திற்கு உதவிய புலம்பெயர்ந்த மொலுக்கர்களும் இதனை தமது தார்மீகக் கடமையாக கருதினார்கள். அப்படி உதவியவர்களின் மனதில் ஒரேயொரு சிந்தனை மட்டுமே இருந்தது. அதாவது, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து செல்லும் உதவி காரணமாக, தாயகத்தில் போராடும் போராளிகள் வெற்றிகளைக் குவிப்பார்கள். ஒரு நாளைக்கு, தாயகப் பகுதிகளை விடுதலை செய்து, அங்கே தனி நாடு பிரகடனம் செய்வார்கள். அதன் பிறகு சுதந்திரமடைந்த நாட்டில் சென்று வாழலாம். ஆனால், தாயகத்தில் நிலைமை வேறு விதமாக இருந்தது. அங்கு போராடிக் கொண்டிருந்தவர்கள் எந்தளவு நெருக்கடிக்குள் இருந்தனர் என்ற உண்மை, புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு தெரிந்திருக்கவில்லை. 

ஈழத் தமிழர்களுக்கு, 2009 ஆண்டு ஏற்பட்ட அனுபவம், 1963 ம் ஆண்டு மொலுக்கர்களுக்கு கிடைத்தது. ஈழப்போரின் இறுதியில் புலிகள் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே முடக்கப் பட்டதைப் போன்று, 1963 ம் ஆண்டு, மொலுக்கு போராளிகள் சேரம் தீவினுள் முடக்கப் பட்டனர். ஏற்கனவே அவர்கள் தமது  கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் படிப்படியாக இழந்து கொண்டிருந்தனர். சேரம் தீவில் மட்டுமே நீண்ட காலம் நின்று பிடித்து போராடிக் கொண்டிருந்தனர்.

1962 ம் ஆண்டு, மொலுக்கு தீவுகளுக்கு அருகாமையில் உள்ள பாபுவா நியூ கினியா, இந்தோனேசியா வசம் சென்றது. அது வரையும், டச்சு காலனிய படைகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாபுவா நியூ கினியாவை, மொலுக்கு போராளிகள் பின் தளமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், நெதர்லாந்து அரசு பாபுவா நியூ கினியாவை இந்தோனேசியாவுக்கு தாரை வார்த்தமை, மொலுக்கு போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவாகும். மொலுக்கு தேசியவாதத்தை நியாயமான விடுதலைப் போராட்டமாக கருதி ஆதரிப்பதாக பாசாங்கு செய்த டச்சு காலனிய எஜமானர்கள், முதுகில் குத்தினார்கள்.  

1963 ம் ஆண்டு, மொலுக்கு விடுதலை இயக்கம், இந்தோனேசியப் படைகளால் முற்றாக அழிக்கப் பட்டது.  அதன் தலைவரான ஸௌமொகில் கைது செய்யப் பட்டார். 1965 ம் ஆண்டு, இந்தோனேசியாவில் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சுஹார்ட்டோ, தடுப்புக் காவலில் இருந்த சௌமொகிலை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். மொலுக்கு விடுதலை இயக்கத் தலைவரின் படுகொலை, நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கர்கள் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது. பலரால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. 

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் எந்தளவு அதிர்ச்சியை உண்டாக்கியது என்பது தெரிந்ததே. புலம்பெயர்ந்த மொலுக்கு சமூகமும், அதேயளவு அதிர்ச்சியில் உறைந்து போனது. அதற்கு காரணமான இந்தோனேசிய போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும், இந்தோனேசிய அரசு பழிவாங்கப் பட வேண்டும் என்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள், அன்றைய புலம்பெயர்ந்த அரசியலை தீர்மானித்தன. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள், புலிகளின் தோல்விக்கு உலக நாடுகள் எல்லாம் காரணம் என்று குற்றஞ் சாட்டியதைப் போல, மொலுக்கர்கள் நெதர்லாந்து அரசின் மீது குற்றஞ் சாட்டினார்கள். 

நெதர்லாந்து அரசு, மொலுக்கர்களின் இனப் பிரச்சினையை ஏறத்தாள மறந்து விட்டது. இந்தோனேசிய அரசுடன் நல்லுறவைப் பேணுவதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். இந்தோனேசியாவில் ஒரு சிறுபான்மையினமான மொலுக்கர்கள், பாரம்பரியமான மேற்குலக விசுவாசம் காரணமாக, தனது துரோகத்தை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நெதர்லாந்து நினைத்திருக்கலாம். ஆனால், முதலாம் தலைமுறையினரைப் பொறுத்த வரையில் அந்தக் கணிப்பீடு சரியாக இருக்கலாம். நெதர்லாந்தில் வாழ்ந்த இரண்டாம் தலைமுறையினர் மேற்கத்திய மாயைகளை கண்டு மயங்கத் தயாராக இருக்கவில்லை. 

"மேற்கத்திய நாடுகளை விமர்சிப்பதே ஒரு பாவச் செயல்" என்று நினைத்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள், 2009 ம் ஆண்டு ஐரோப்பிய, அமெரிக்க நகரங்களை, ஸ்தம்பிக்க வைத்தார்கள். இலங்கைக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்த தமிழீழப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக பரிணமித்தது. அறுபதுகளில், நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கர்களும் அதே மாதிரியான ஏகாதிபத்திய எதிர்ப்பு பாடங்களை கற்றுக் கொண்டார்கள். நெதர்லாந்து ஏகாதிபத்தியமும், தனது சுயரூபத்தை அவர்களுக்கு காட்டும் தருணம் வந்தது.  

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்

Monday, June 17, 2013

இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்


[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை]

(இரண்டாம் பாகம்)

ஐரோப்பிய மையவாத சிந்தனை எமது மனதையும் ஆட்கொண்டுள்ளதால், ஐரோப்பிய காலனியாதிக்கம் உருவாக்கிய "தேசிய அரசுகள்" மட்டுமே எனது கண்களுக்கு தெரிகின்றன. இந்தோனேசியாவை ஒரே மொழி பேசும், ஓரின மக்களின் நாடு என்று தவறாக அனுமானித்தால், அது எம் தவறல்ல. எமக்கு அப்படி நினைக்க கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய மையவாத சிந்தனையால், பல முன்னாள் காலனிய  நாடுகளுக்குள் அடக்கப் படும், சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகள் வெளியுலகில் முக்கியத்துவம் பெறுவதில்லை. மொலுக்கு மக்களின் இனப் பிரச்சினை, ஈழத் தமிழரின் இனப் பிரச்சினை ஆகியன, வெளியுலகின் கவனத்தை கவராத காரணம், காலனிய கடந்த காலத்தினுள் மறைந்திருக்கிறது. உண்மையில், ஐரோப்பிய காலனியாதிக்கம் பூர்த்தி செய்யாமல் தவற விட்ட இடத்தில் இருந்து, இந்தோனேசிய, சிங்கள பேரினவாத அரசுகள் தமது பணியை ஆரம்பித்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால்,  காலனியாதிக்கத்தின் நவீன வடிவமான நவ காலனித்துவம், இன்றைய ஆட்சியாளர்களுக்கும், ஐரோப்பிய எஜமானர்களுக்கும் மிகவும் வசதியானது.

மொலுக்கு இன மக்கள், அவுஸ்திரேலிய அபோரிஜின் பூர்வ குடிகள் போன்றிருப்பார்கள். ஆனால், இருபதாம் நூற்றாண்டு வரையில் மொலுக்கர்கள் நாகரீகமடையவில்லை என்று தவறாக நினைக்கக் கூடாது. ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பு, ஜாவா, மலேசியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு இருந்தது. இதனால் வர்த்தக நோக்குடன் வந்தவர்கள் அங்கே குடியேறி இருக்க வாய்ப்புண்டு. இன்று மொலுக்கர்கள் பல விதமாக தோன்றுவதற்கு, ஆயிரக் கணக்கான வருடங்களாக நடந்த இனக் கலப்பு காரணமாக இருக்கலாம்.

மொலுக்கு தீவுகளில் வாழும் மக்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்லர். சிறு சிறு குழுக்களாக நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும் மக்கள் வாழ்ந்தனர். ஒவ்வொரு இனக் குழுவும் தனக்கென பூர்வீக கதையை கொண்டிருக்கிறது. Saparua தீவில், Ihamahu எனுமிடத்தில் வாழும் இனக் குழுவினர் தம்மை இந்திய வம்சாவளியினர் என்று கூறிக் கொள்கின்றனர். தென் கிழக்கு இந்தியாவில் இருந்த, காலிங்க நாட்டில் இருந்து புறப்பட்ட கப்பல் உடைந்த பின்னர் இந்தத் தீவில் தங்கி விட்டதாக, ஒரு கர்ண பரம்பரைக் கதை உலாவுகின்றது.

மொலுக்கு தீவுகளில் பெரிய நகரமான அம்பொன், இன்றைக்கும் சனத்தொகை அடர்த்தி கூடிய இடமாகும். அவர்கள் பேசும் "அம்பொன் மொழி", இன்று பெரும்பான்மை மக்களால் பேசப் படுகின்றது. அது பூர்வீக அபோரிஜின் மொழிகளும், மலே மொழியும் கலந்த புது மொழி ஆகும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, அதாவது இந்தோனேசியாவில் இஸ்லாம் பரவிய காலத்தில், மொலுக்கு தீவுகளிலும் இஸ்லாமிய சுல்த்தான்களின் ஆட்சி ஏற்பட்டது. அப்போதிருந்தே மொலுக்கு மக்கள் முஸ்லிம்களாக மாறி விட்டனர். 

500 வருடங்களுக்கு முன்னர், போர்த்துக்கேய காலனியாதிக்க வாதிகளின் தொடர்பால், அந்த தீவுகளில் கிறிஸ்தவ மதம் பரவத் தொடங்கியது. போர்த்துக்கேயரிடம் இருந்து டச்சுக் காரர்கள் கைப்பற்றிய பின்னர், கிறிஸ்தவ மதம் பரப்புவோர் முழு மூச்சுடன் செயற்பட்டனர். இன்று, வட மொலுக்கு தீவுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள். தென் மொலுக்கு தீவுகளில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்தக் கட்டுரை முழுவதும், கிறிஸ்தவ தென் மொலுக்கர்கள் குறித்தும், அவர்களது தனி நாட்டுக்கான போராட்டம் குறித்தும் தான் பேசுகின்றது.

இந்தோனேசியா சுதந்திரம் அடையும் வரையில், முஸ்லிம், கிறிஸ்தவ மொலுக்கர்களுக்கு இடையில் எந்த முரண்பாடும் தோன்றி இருக்கவில்லை. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், தமிழரும், முஸ்லிம்களும், "பிட்டும், தேங்காய்ப் பூவும் மாதிரி" சகோதர உணர்வுடன் கலந்து வாழ்ந்ததாக சொல்லப் படுவதுண்டு. அதே மாதிரி தான், மொலுக்கு தீவுகளிலும் நிலைமை இருந்தது. ஆனால், டச்சு காலனியாதிக்க ஆட்சியாளர்கள், கிறிஸ்தவ மொலுக்கர்களுக்கு பல சலுகைகள் வழங்கி வந்தனர். அது மட்டுமல்லாது, RMS  என்ற தென் மொலுக்கு குடியரசு என்ற தனி நாட்டுக் கோரிக்கை எழுவதையும் ஊக்குவித்தனர். ஆரம்பத்தில், மொலுக்கு தனி நாட்டுக் கோரிக்கையை டச்சுக் காரர்கள் ஊக்குவித்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: 

1. கம்யூனிச கொள்கை பரவுவதை தடுக்க முடிந்தது. 1965 ம் ஆண்டு, இந்தோனேசியா முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடி அழித்தொழிக்கப் பட்டனர். ஆனால், மொலுக்கு தீவுகளில் கம்யூனிஸ்டு என்ற பெயரில் யாரும் கொல்லப் படவில்லை. அந்தளவுக்கு, மொலுக்கு தேசியவாதம் "கம்யூனிச அபாயத்தை" தடுத்து நிறுத்தி இருந்தது. 
2. காலனிய எஜமானர்களின் வழமையான பிரித்தாளும் சூழ்ச்சி. ஒரு பக்கம் மொலுக்கு சிறுபான்மை இனத்தின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொண்டார்கள். மறு பக்கம் மொலுக்கு தேசியவாதிகளை அழித்தொழித்த இந்தோனேசிய பேரினவாதிகளை ஆதரித்தார்கள். இந்த இரண்டு தரப்பும் தங்களை நம்பும் படி பார்த்துக் கொண்டார்கள். 

கிட்டத்தட்ட இதே மாதிரியான தந்திரோபாய அரசியல், இலங்கையில் பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களால் மேற்கொள்ளப் பட்டது.  

RMS என்ற தென் மொலுக்கு குடியரசு இயக்கம், இராணுவப் பிரிவையும் கொண்டிருந்தது. டச்சு காலனிய படைகளில் (KNIL) இருந்த அதிகாரிகள் அதில் சேர்ந்து கொண்டனர். இந்தோனேசியா சுதந்திரமடைந்த பின்னரும், டச்சு காலனிய படைகள் மொலுக்கு தீவுகளில் இருந்த தளங்களை எடுக்கவில்லை. இந்தோனேசிய அரசின் அழுத்தத்தால், டச்சு படைகளை விலக்கிக் கொள்ள சில வருடங்கள் எடுத்தன. அதற்குப் பிறகு தான், இந்தோனேசிய படை நடவடிக்கைகள் இடம்பெற்றன. அப்போது தான், தென் மொலுக்கு குடியரசு பிரகடனம் செய்யப் பட்டது. (அதனை நெதர்லாந்து உட்பட, உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.) இந்தோனேசிய படைகளுக்கு எதிரான கெரில்லா யுத்தம் நடந்தது. அதே நேரம், டச்சு காலனிய படைகளில் பணியாற்றிய 4000 வீரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நெதர்லாந்து நோக்கி பயணமானார்கள். 

நெதர்லாந்து வந்து சேர்ந்த கிறிஸ்தவ - தென் மொலுக்கு மக்கள், "நாடற்றவர்" என்ற நிலைக்கு தள்ளப் பட்டனர். அதாவது, அவர்கள் இந்தோனேசிய குடியுரிமையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதே நேரம், நெதர்லாந்து அரசு அவர்களுக்கு டச்சு குடியுரிமை கொடுக்க மறுத்தது. ஒரு வகையில், மொலுக்கு அகதிகள் அதனை எதிர்பார்க்கவுமில்லை. ஏனென்றால், அவர்கள் நெதர்லாந்தில் தற்காலிகமாக 6 மாதங்கள் மட்டுமே தங்கப் போகிறார்கள் என்றும், மொலுக்கு தீவுகளுக்கான "சுயநிர்ணய உரிமை" வழங்கப் பட்ட பின்னர் திரும்பிச் செல்லலாம் என்று கூறப் பட்டது. நமது தமிழ் தேசியவாதிகள், சுயநிர்ணய உரிமை என்றால் தனித் தமிழீழம் என்று புரிந்து கொள்வதைப் போன்று தான், அன்றைய மொலுக்கு தேசியவாதிகளும் நினைத்தார்கள். ஆனால், நெதர்லாந்து அரசைப் பொறுத்த வரையில், அது அதிக பட்சம் சமஷ்டியை நோக்கிய அதிகாரப் பரவலாக்கல் மட்டுமே. ஆனால், அந்த உறுதிமொழியை கூட நெதர்லாந்து அரசு நிறைவேற்றவில்லை.

நெதர்லாந்து வந்து சேர்ந்த மொலுக்கு அகதிகள், டிரெந்தெ (Drenthe) எனும் மாகாணத்தில் பல இடங்களில் குடி இருத்தப் பட்டனர். ஜெர்மனி எல்லைக்கு அருகில் உள்ள, வட கிழக்கு மாகாணமான டிரெந்தெ யில், நான் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தங்கியிருந்தேன். நெதர்லாந்து நாட்டில், அபிவிருத்தியில் பின்தங்கிய, "வறிய" மாகாணம் அது தான். இப்போதும் அங்கே குறிப்பிட்டுச் சொல்லும் படியான பொருளாதார விருத்திகள் எதுவும் நடப்பதில்லை. "தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது." என்று அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள், தமது அரசை குறை கூறுவார்கள். 

ஸ்வேலோ (Zweeloo)  என்ற ஒரு சிறிய கிராமத்தில், காட்டுப் பகுதியில் அமைந்திருந்த அகதி முகாமில், ஒரு காலத்தில் நானும் தங்கியிருந்தேன். வெளியுலகில் இருந்து தனிமைப் படுத்தப் பட்ட அந்த முகாமில், ஐம்பதுகளில் மொலுக்கர்கள் தங்க வைக்கப் பட்டனர். அன்றிலிருந்து இன்று வரையில், முகாம் நிலைமை பெரிதாக மாறி விடவில்லை. ஸ்வேலோ கிராமத்தில் இருந்த ஒரு சிறிய நூலகத்தில் தான், முதன் முறையாக மொலுக்கர்களின் வரலாற்றை பற்றி அறிந்து கொண்டேன். அன்று எனக்குத் தெரிந்த அடிப்படை டச்சு மொழி அறிவைக் கொண்டு, அங்கிருந்த பத்திரிகை துணுக்களை வாசித்தேன். அப்போது, நான் அது வரையும் அறிந்திராத சில தகவல்கள் கிடைத்தன. 

இன்று அமைதிப் பூங்காவாக காணப்படும் டிரெந்தெ மாகாணம், எழுபதுகளில் பெரும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னரான அரசியல் வன்முறைகள் பலவற்றை கண்டது. இந்தோனேசியாவில் வாழும் மொலுக்கு மக்களின் தனி நாட்டுக் கோரிக்கையை உலகம் அறியச் செய்த பல சம்பவங்கள் அங்கே இடம்பெற்றன.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

1. மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை

Friday, June 14, 2013

மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை



  • "ஈழத் தமிழரின் இனப்பிரச்சினை தனித்துவமானது" என்றும், அதனை "உலகில் பிற இனங்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட முடியாது" என்றும், ஒரு தவறான எண்ணம் காணப் படுகின்றது. இன்று பல உலக நாடுகளில் காணப்படும் இனப் பிரச்சினையானது, கடந்த கால காலனிய ஆட்சியின் விளைவாகவே  இருந்து வருகின்றது. முன்னாள் ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களுக்கும் அவற்றில் பங்கிருக்கிறது என்பதை பலர் உணர்வதில்லை. ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் "தமிழ் இளையோர்" அதனை உணர்ந்து கொள்ளும் காலம் ஒன்று வரும். மொலுக்கு இன மக்களின் கதையை அறிந்து கொள்வதன் மூலம், தமிழர்களும் தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளலாம்.


இந்தோனேசியாவில் தனி நாடு கோரும், மொலுக்கு இன மக்களின் வரலாறு குறித்து இங்கே அலசப் படவில்லை. இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்து சுதந்திரமடைந்த 1945 - 1949 கால கட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். நாங்களும் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தை, தமிழீழ போராட்டத்தின் தொடக்கமாக கருதுவதுண்டு. அதே போன்ற நிலையில் தான், மொலுக்கு மக்களின் தனி நாட்டு போராட்டமும் ஆரம்பமாகியது. ஆகவே அதற்குப் பிந்திய காலத்தில் நடந்தவை குறித்து கவனம் செலுத்துவோம். 

இந்தோனேசியா எனும் நாடு, ஆயிரக் கணக்கான தீவுகளை கொண்டது. அந்த நாட்டில் நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும் மக்கள் வாழ்கிறார்கள். மலேசிய மொழிக்கு மிகவும் நெருக்கமான, இந்தோனேசிய மொழி அவற்றில் ஒன்று. ஆனால், அதுவே பிற மொழிச் சிறுபான்மையின மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய காலனிய காலகட்டத்திற்கு முன்னர், பல்வேறு இஸ்லாமிய சுல்த்தான்களின் ஆட்சிக்குட்பட்ட ராஜ்யங்கள் இருந்தன. ஆனால், அப்போதெல்லாம் இந்தோனேசிய மொழி இன்று ஆங்கிலம் போன்று ஒரு தொடர்பாடல் மொழியாக மட்டுமே இருந்தது. ஆனால், காலனிய காலகட்டத்தின் பின்னர் ஒரு தேசிய அரசு உருவானது. அது இந்தோனேசிய பேரினவாதமாக உருமாறியது. 

மொலுக்கர்கள் எங்கே வாழ்கிறார்கள்? அவுஸ்திரேலியாவுக்கு மேலே கிழக்கு தீமோர் உள்ளது. அதற்கும் மேலே உள்ள தீவுகளை மொலுக்கு தீவுகள் என்று அழைப்பார்கள். அவற்றில் அம்பொன், சேரம் போன்ற தீவுகளில் வாழும் மக்களைப் பற்றி தான் இந்தக் கட்டுரை பேசுகின்றது. அந்த மக்கள் தம்மை "தென் மொலுக்கர்கள்" என்று அழைத்துக் கொள்கின்றனர். 25 ஏப்ரில் 1950, அந்த தீவுகளை இணைத்து, "தென் மலுக்கு குடியரசு" (Republik Maluku Selatan, சுருக்கமாக RMS)  பிரகடனம் செய்யப் பட்டது. 

மொலுக்கு இன மக்கள் அந்த தீவுகளில் வாழும் பூர்வ குடிகள். பார்ப்பதற்கு அவுஸ்திரேலிய அபோரிஜின்கள் போன்றிருப்பார்கள். அனேகமாக, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறிய இனங்களின் வம்சாவளியினராக இருக்கலாம். ஆனால், எல்லோரும் கருப்பாக தோன்ற மாட்டார்கள். பலர் சிவப்பாகவும் இருப்பார்கள். உலகில் நாகரீகமடைந்த எந்த இனமும், தனது இனத் தூய்மையை பேணி வருவதாக பெருமையடித்துக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு வகையில் வேறு இனங்களுடன் கலந்திருப்பார்கள். 

இந்தோனேசியா வரலாற்றில் முதன் முறையாக, மொலுக்கு தீவுகள் தான் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளுடன் தொடர்பு கொண்டன. அனேகமாக, மகலனின் கடற்பயணத்தின் விளைவாக இருக்கலாம். ஏனெனில், மொலுக்கு தீவுகளுக்கு மேலேயுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகளில், ஸ்பானிஷ் காரர்கள் காலூன்றி இருந்தனர். ஐரோப்பியருடனான நீண்ட கால தொடர்பு காரணமாக, பிற்காலத்தில் வந்த டச்சுக் காலனிய ஆட்சியாளர்களுடன் விரும்பி ஒத்துழைத்தார்கள். இதனால், இயல்பாகவே மொலுக்கு இன மக்கள் மேலைத்தேய விசுவாசிகளாக மாறி விட்டிருந்தனர்.  

மொலுக்கர்களின் மேற்கத்திய சார்புத் தன்மையை, நாங்கள் எமது நாடுகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற இலங்கையின் கரையோரப் பகுதிகளும், சென்னை போன்ற இந்திய கரையோரப் பகுதியும் தான், முதல் தடவையாக ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் கீழ் வந்தன. நீண்ட கால ஐரோப்பிய மேலாண்மை  காரணமாக, இன்றைக்கும் பல தமிழர்கள் மேலைத்தேய விசுவாசிகளாக இருப்பதைப் பார்க்கலாம். (கொழும்பு போன்ற மேல் மாகாணத்தில் வாழும், கரையோர சிங்கள மக்களும் அவ்வாறு தான்.) தங்களது விசுவாசத்தை புரிந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகள், என்றைக்காவது ஒரு நாள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தில், தமிழர்களுக்கும், மொலுக்கர்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகளை காணலாம். 

காலனிய தொடர்பு காரணமாக, பெரும்பாலான மொலுக்கு மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தனர். மொலுக்கர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள் அல்ல. சனத்தொகையில் கணிசமான அளவு இஸ்லாமிய மொலுக்கர்களும் இருக்கின்றனர். ஈழத்தில் இந்து-கிறிஸ்தவ தமிழர்கள் மட்டுமே தமிழீழம் கேட்டது போன்று, கிறிஸ்தவ மொலுக்கர்கள் தான் தனி நாட்டுக் கோரிக்கையை வைத்தனர். ஈழப்போர் நடந்த காலத்தில், முஸ்லிம்கள் ஒதுங்கி இருந்தது போன்று தான், மொலுக்கு விடுதலைப்  போராட்டத்தில் (மொலுக்கு) முஸ்லிம்கள் ஒதுங்கி இருந்தனர். இந்தப் பிரிவினையை, ஈழத்தில் எவ்வாறு இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டதோ, அதே மாதிரித் தான் இந்தோனேசிய அரசு மொலுக்கு பிராந்தியத்தில் பயன்படுத்திக் கொண்டது.

இலங்கையில், ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில், ஈழத் தமிழர்கள் பல சலுகைகளை பெற்றனர். குறிப்பாக கிறிஸ்தவ தமிழர்கள், காலனிய நிர்வாகத்தில் பதவிகளைப் பெற்றனர். இலங்கை முழுவதும் அரசாங்க அதிகாரிகளாக பணியாற்றினார்கள். காலனிய இராணுவத்திலும் சில உயர் பதவிகளில் இருந்தனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கமாண்டராக பதவி வகித்த அன்டன் முத்துக்குமாரு போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். காலனிய அரசாங்கத்தில் தமிழர்களுக்கு சிறப்பான இடம் அளிக்கப் பட்டதைப் போன்று தான், டச்சு காலனிய அரசாங்கத்தில் மொலுக்கு இன மக்களுக்கு சிறப்பான இடம் கிடைத்திருந்தது. இதனால், பிற இனத்தவர்கள் அவர்களை  "Belanda Hitam" (கருப்பு டச்சுக்காரர்கள்) என்று அழைத்தார்கள். 

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், இலங்கையில் பெரும்பான்மையினமான சிங்களவர்களிடம் ஆட்சியை மாற்றிக் கொடுத்த பின்னர் தான், தமிழர் என்ற சிறுபான்மை இனத்தின் பிரச்சினைகள் ஆரம்பமாகின. இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான காலத்தில்,  தங்களது பதவிகள் பறிபோகாது என்று தமிழர்கள் நினைத்திருக்கலாம். அதனால், தமிழீழக் கோரிக்கையும் பல வருடங்கள் தாமதமாகவே எழுப்பப் பட்டது. ஆனால், மொலுக்கு மக்களுக்கு அந்த அவசியம் உடனேயே எழுந்தது. ஏனென்றால், இந்தோனேசியாவிற்கான டச்சு காலனிய படைகளில் (Koninklijk Nederlands Indisch Leger; சுருக்கமாக KNIL) ஏராளமான மொலுக்கு வீரர்கள் சேர்ந்திருந்தனர். சாதாரண காலாட் படையினராக இல்லாமல், அதிகாரிகள் தரத்திலும் இருந்தனர். இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுத்த நெதர்லாந்து அரசுக்கு, அவ்வளவு படையினரையும் என்ன செய்வது என்ற பிரச்சினை எழுந்தது. 

மொலுக்கு வீரர்கள், புதிதாக உருவான இந்தோனேசிய தேசிய இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு, நெதர்லாந்து கூறியது. ஆனால், மொலுக்கர்கள் யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தோனேசியா ஒரு சமஷ்டிக் குடியரசாக இருக்கும், அதாவது ஐக்கிய அமெரிக்கா போன்று, "ஐக்கிய இந்தோனேசியக் குடியரசுகள்" ஏற்படுத்தப் படும் என்று நெதர்லாந்து உறுதிமொழி அளித்தது. இவை எல்லாம் வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டத்திலேயே நின்று விட்டன. நடைமுறையில் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தோனேசிய அரசு, மொலுக்கு தீவுகள் மீதான இறையாண்மையை வலியுறுத்திக் கொண்டிருந்தது. 

எதிர்பார்த்த எதுவும் நடக்காததால் ஏமாந்த மொலுக்கர்கள், தாமாகவே "தென் மொலுக்கு குடியரசு" ஒன்றை பிரகடனம் செய்தனர். உலகில் எந்த நாடும், நெதர்லாந்து கூட, அந்த தனி நாட்டை அங்கீகரிக்கவில்லை. இறுதியில், இந்தோனேசிய படைகள் மொலுக்கு தீவுகளை ஆக்கிரமித்தன. அப்போதும், நெதர்லாந்து பாராமுகமாக இருந்தது.  Dr. Chris Soumokil தலைமையில் ஒரு கெரில்லா இயக்கம்,  இந்தோனேசியப் படைகளுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடியது. அதற்கும் நெதர்லாந்து உதவவில்லை. நட்டாற்றில் விடப் பட்ட மொலுக்கு மக்களுக்கு, நெதர்லாந்து அரசு ஒரேயொரு உதவியை மட்டும் செய்ய முன் வந்தது. 

இந்தோனேசியாவுக்கான முன்னாள் டச்சு காலனிய படையை சேர்ந்த 4000 முன்னாள் படைவீரர்களை, அவர்களது குடும்பங்களுடன் நெதர்லாந்து நாட்டில் தங்க வைப்பதாக உறுதியளித்தது. அதுவும் தற்காலிகமாகத் தான். ஆறு மாதங்களுக்கு மட்டுமே நெதர்லாந்தில் தங்கியிருந்து விட்டு, தென் மொலுக்கு பிராந்தியத்திற்கு சுயாட்சி கிடைத்த பின்னர் திரும்பி வரலாம் என்று கூறியது. நெதர்லாந்து அரசின் உறுதிமொழியை ஏற்று, 4000 படையினரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுமான 12500 பேர் நெதர்லாந்து நோக்கி கப்பலில் பயணமானார்கள். தாங்கள் மலை போல் நம்பியிருந்த காலனிய எஜமானர்கள் தங்களை ஏமாற்றுவதற்கு திட்டம் தீட்டுகிறார்கள் என்றோ, தென் மலுக்கு என்ற தனிநாடு பகற்கனவாக போய் விடும் என்றோ, அன்று அந்த மக்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை. 

(தொடரும்)


Wednesday, April 17, 2013

அமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடகங்களில் இருட்டடிப்பு

[இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை] 
(இரண்டாம் பாகம்)



இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டது. ஆனால், சுகார்னோ தலைமையிலான இந்தோனேசிய தேசியவாதிகள், ஜப்பானுடன் ஒத்துழைத்தார்கள். ஜப்பானிய ஏகாதிபத்திய படைகளின் பாதுகாப்பு நிழலின் கீழே ஒரு தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தேசியவாதியான நேதாஜியும், அதே மாதிரியான திட்டத்தை மனதில் வைத்திருந்தார். அதாவது, இந்தியாவை ஜப்பானிய படைகள் கைப்பற்றிய பின்னர், அங்கே நேதாஜி தலைமையில் "இந்தியர்களின் நாடு" உருவாகி இருக்கும்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், பழைய ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், ஆசியாவில் தாம் இழந்த காலனிகளுக்கு உரிமை கோரினார்கள். நெதர்லாந்து, இந்தோனேசியாவை மீண்டும் தனது அதிகாரத்தின் கீழே கொண்டு வர விரும்பியது. ஆனால், போருக்கு பின்னர் புதிய உலக வல்லரசாகி இருந்த அமெரிக்கா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்தது. அமெரிக்க அழுத்தம் காரணமாகத் தான், பிரிட்டனும் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது. ஆசியக் கண்டத்தின், இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும், இந்தோனேசியாவும், சில ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இந்தியாவில் நேரு எந்த வகையான கொள்கைகளை கொண்டிருந்தாரோ, அதே மாதிரியான கொள்கைகளை, இந்தோனேசியாவில் சுகார்னோ கொண்டிருந்தார்.

நேருவும், சுகார்னோவும் சேர்ந்து, காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க விரும்பினார்கள். அதற்காக, இந்தோனேசியாவில் பாண்டுங் என்ற இடத்தில் ஒரு மகாநாடு நடந்தது. இலங்கையில் இருந்து பண்டாரநாயக்கவும் கலந்து கொண்டார். உண்மையில், அமெரிக்கா இந்தக் கூட்டமைப்பை விரும்பவில்லை என்று தெரிகின்றது. அதனால் தான், CIA பண்டாரநாயக்கவை கொலை செய்தது என்றும் ஒரு கதை உலாவுகின்றது. நேருவை விமான விபத்தொன்றில் கொல்வதற்கு CIA சதி செய்ததாகவும் ஒரு தகவல். (De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski ) இதன் தொடர்ச்சியாக, சுகார்னோவை அகற்றிய 1965 சதிப்புரட்சி அமைந்தது. அந்த சதிப்புரட்சியில், CIA யின் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை, பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

பாண்டுங் மகாநாட்டுக்கு போட்டியாக, இன்னொரு கூட்டமைப்பு உருவானது. யூகோஸ்லேவியாவில் டிட்டோ, எகிப்தில் நாசர் ஆகியோரின் முயற்சியில் "அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாடு" நடந்தது. சுகார்னோ தனது பாண்டுங் மகாநாட்டு திட்டங்களை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியாமல் இருந்தது மட்டுமல்ல, அவரும் அணிசேரா மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. இந்தப் போட்டியின் காரணமாக, இறுதி வரைக்கும் சுகார்னோவுக்கு உறுதுணையாக இருந்தது சீனா மட்டுமே. அதனால், இந்தோனேசியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது.

ஸ்டாலினின் மரணத்தின் பின்னர், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு தோன்றியது. சில கட்சிகள் குருஷேவின் சோவியத் யூனியனையும், சில கட்சிகள் மாவோவின் சீனாவையும் ஆதரித்தன. இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி (PKI)  சீன சார்பு நிலைப்பாடு எடுத்து. இதனால், சுகார்னோ, சீனா, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (PKI) இடையில் ஒரு முக்கோண உறவு உருவானது. இந்தோனேசிய அரசில், PKI யின் செல்வாக்கு அதிகரித்தது. அது "கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு புரட்சியை வெல்லலாம்..." என்ற மாயையை தோற்றுவித்திருக்கலாம். அன்றிருந்த PKI தலைவர் அய்டீத், அது போன்ற ஒரு திரிபுவாத பாதையை தேர்ந்தெடுத்ததாக, புலம்பெயர்ந்து வாழும் PKI உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அது உண்மையாயின், "கத்தியின்றி, இரத்தமின்றி" புரட்சி நடத்தும் கோட்பாடு, இறுதியில் கட்சியின் அழிவுக்கே வழிவகுத்தது.

இதற்கிடையே, இந்தோனேசியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு சர்வதேச அரசியல் நிலைமை பற்றியும் குறிப்பிட வேண்டும். இந்தோனேசிய மொழி பேசும் மக்களும், மலே மொழி பேசும் மக்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். இரண்டு மொழிகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழும், மலையாளமும் மாதிரி என்ற அளவுக்கு கூட வித்தியாசம் கிடையாது. ஈழத் தமிழும், இந்தியத் தமிழும் மாதிரி நெருக்கமானவை.  ஆனால், இரண்டு வேறு மொழிகளாக வளர்க்கப் பட்டன.  இந்தோனேசியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான மிகப்பெரிய பிரிவினை, காலனியாதிக்க காலத்தில் ஏற்பட்டது. அதாவது ஆங்கிலேயர்கள் காலனிப் படுத்திய பகுதி தான், இன்றைய மலேசியா. இந்தோனேசியா நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரமடைந்த பின்னரும், மலேசியா பிரிட்டிஷ் காலனியாக தொடர்ந்தது.

1963 ம் ஆண்டு, மலேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் நேரம், அந்த நாடு இந்தோனேசியாவுக்கு சொந்தமானது என்று சுகார்னோ உரிமை கோரினார். இந்தோனேசியப் படைகள், மலேசியப் பகுதிகளினுள் ஊடுருவி மட்டுப்படுத்தப் பட்ட இராணுவ நடவடிக்கையிலும் இறங்கியது. இறுதியில், மலேசியா கையை விட்டுப் போனதால் ஏற்பட்ட விரக்தி, இந்தோனேசிய அரசின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கியது. இராணுவத்திற்குள் தேசிய உணர்வு மேலோங்கியது. PKI அதை சாட்டாக வைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வலைகளை தூண்டி விட்டது. உண்மையில், மலேசிய பிரச்சினையின் எதிர்வினையாக, அரசுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சி பலம்பெற்று வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி (Pemuda Rakjat) யும், மகளிர் அணி (Gerwani) யும் தீவிரமாக இயங்கத் தொடங்கின. கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு, கல்லூரிகளில் இயங்கிக் கொண்டிருந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டுமென கோரியது. பொதுவாக, நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் இளைஞர்களின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்பட்டது. இது பலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. ஒரு பக்கம், நிலப்பிரபுக்கள் கம்யூனிஸ்டுகளை வெறுத்தார்கள். ஏனென்றால், நிலமற்ற விவசாயிகள், தமக்கு வேண்டிய நிலங்களை ஆக்கிரமிக்குமாறு, கம்யூனிஸ்ட் கட்சி ஊக்குவித்தது. மறுபக்கத்தில், இஸ்லாமிய மதகுருக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.

இஸ்லாமிய மதகுருக்கள், வெளிப்படையாகவே நிலப்பிரபுக்களின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்.  "கடவுள் மறுப்பாளர்களான கம்யூனிஸ்டுகளை அழிப்பதற்கு, அமெரிக்காவுடன் மட்டுமல்ல, எந்தப் பிசாசுடனும் கூட்டுச் சேரலாம்." இஸ்லாமிய மதவாதிகளின் நாஸ்திக எதிர்ப்பு பிரச்சாரம், கடவுள்  நம்பிக்கையுள்ள ஏழை விவசாயிகளை மனம் திரும்ப வைத்தது. இது பின்னர் நடந்த இனப்படுகொலையில் திருப்புமுனையாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த, ஏழை விவசாயிகளான கீழ் மட்ட உறுப்பினர்கள் கூட, கம்யூனிச அழிப்பு படுகொலைகளில் பங்கெடுத்தனர். அதற்கு காரணம், குறிப்பிட்ட அளவு நிலத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற உத்தரவாதத்தை, இஸ்லாமிய மதகுருக்கள் நிலப்பிரபுக்களிடம் இருந்து பெற்றுக் கொடுத்தனர்.

30 செப்டம்பர் 1965, அன்றைய தினம் இந்தோனேசியாவின் தலைவிதியை தீர்மானித்தது. அன்றிரவு ஏழு இராணுவ உயர் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு கீழே வேலை செய்த, கீழ் நிலை அதிகாரிகள், அவர்களுக்கு விசுவாசமான இராணுவத்தினர், திடீர் சதிப்புரட்சியை நடத்தி இருந்தனர். சதிப்புரட்சியை அடக்கி, சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்த சுகார்ட்டோவும், சில மேற்கத்திய ஊடகங்களும் அறிவித்தது போன்று, அது ஒரு கம்யூனிச சதிப்புரட்சி அல்ல. இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல், ஆடம்பரமான வாழ்க்கை, அதிகார துஷ்பிரயோகம், இவற்றினால் வெறுப்புற்ற படையினரில் ஒரு பிரிவினரின் வேலை அது.

வான்படையில் சில  முற்போக்கான அதிகாரிகள், அந்த சதிப்புரட்சிக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கு, இரகசியமாக சீன ஆயுதங்கள் வந்திறங்கி இருந்தன. PKI தலைவர் அய்டீத் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கம்யூனிச இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு, வான்படைத் தளத்தில் இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டது. இருப்பினும், வான்படை கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக, தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. வான்படை தளபதிகள், எந்தளவு முற்போக்காக இருந்த போதிலும், ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு ஆதரவளிக்கவில்லை. காலம் தனக்கு சார்பாக கனிந்து வருவதாக,  PKI தப்புக் கணக்குப் போட்டது. (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)

சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு, PKI அரசியல் ஆதரவு மட்டுமே வழங்கியது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் செக்கோஸ்லேவியாவில் நடந்தது போன்று, ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப் பட்டால், அது சில வருடங்களின் பின்னர், உழவர், தொழிலாளரின் புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கனவு கண்டது. ஆனால், அது வெறும் கனவாகவே இருந்து விட்டது. சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் நிர்வாக சீர்கேடுகள், திட்டமிடல் குறைபாடுகள், பிற படைப்பிரிவுகளுடன் தொடர்பின்மை, இவை போன்ற காரணங்களினால், சதிப்புரட்சி அதிக பட்சம் 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை. அந்நாட்களில் அதிகம் கவனிக்கப்படாத இராணுவ அதிகாரியான சுகார்ட்டோ, தனக்கு விசுவாசமான படையினருடன் தலைநகரை முற்றுகையிட்டார். வெளியுதவி எதுவும் கிடைக்காததால், சதிப்புரட்சியில் ஈடுபட்ட படையினர், எதிர்ப்பு காட்டாமல் சரணடைந்தனர்.

உண்மையில், அதற்குப் பிறகு தான் படுகொலைகள் தொடங்கின. விமானப்படை முகாமுக்கு அருகில் கொன்று புதைக்கப்பட்ட ஆறு இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. சில உடல்கள் சிதைவடைந்து காணப்பட்டதால், அதை வைத்து வதந்திகள் பரப்பப் பட்டன. கம்யூனிசக் கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பெண்கள், அந்த அதிகாரிகளை சித்திரவதை செய்ததாகவும், கண்களை தோண்டியெடுத்து, பிறப்புறுப்புகளை அறுத்ததாகவும் கதைகள் புனையப்பட்டன. அந்தக் கதையில் எந்தவித உண்மையும் இல்லாத போதிலும், பெருமளவு அப்பாவி மக்கள் அதனை நம்பினார்கள். இப்போதும் நம்புகின்றார்கள். ஏனென்றால், இராணுவ அதிகாரிகளின் கொலைகளை பிரச்சாரம் செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் காண்பிக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது.

சதிப்புரட்சிக்கு முன்னர், கல்லூரிகளில் மத அடிப்படைவாதம் பேசிய, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தடை செய்ய வேண்டுமென, கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்து வந்தது.  கல்லூரிகளுக்குள் இரண்டு பிரிவினரும் எதிரிகள் போல நடந்து கொண்டாலும், அப்போது எந்த கைகலப்பும்  நடைபெறவில்லை. சுஹார்ட்டோவின் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கை ஓங்கியது. கம்யூனிச எதிரிகளுடன் கணக்குத் தீர்த்துக் கொள்ளுமாறு, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தூண்டி விட்டது. இந்தோனேசியாவின் இனப்படுகொலை கல்லூரி மாணவர் விடுதிகளில் ஆரம்பமாகியது.

ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படையினரும் கூட்டுச் சேர்ந்து இனப்படுகொலை செய்யக் கிளம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அவ்வாறு சந்தேகிக்கப் பட்டவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும், ஆயுதமேந்திய காடையரினால் படுகொலை செய்யப் பட்டனர். சில சமயம், அயல் வீட்டுக்காரனுடன் காணித் தகராறு காரணமாக பகை இருந்தாலும், கம்யூனிஸ்ட் என்று பிடித்துக் கொடுத்தார்கள். இவ்வாறு கம்யூனிஸ்ட் அழிப்பு என்ற பெயரில், பலர் தமக்குப் பிடிக்காதவர்களையும் கொலை செய்தனர். மொத்தம் எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற விபரம் யாருக்கும்  தெரியாது. குறைந்தது பத்து இலட்சம் அல்லது இருபது இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் என கணக்கிடப் பட்டுள்ளது.

உண்மையில், இந்தோனேசியாவில் ஒரு இனப்படுகொலை நடத்தப்பட வேண்டுமென,  சிலர் முன்கூட்டியே இரகசியமாக திட்டம் தீட்டி இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில், அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அந்த சந்தேகம் ஏற்படுவது இயல்பு. இனப்படுகொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, 30 செப்டம்பர் நடந்த சதிப்புரட்சி ஒரு சாட்டாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணம், பாதுகாப்புப் படைகளின் உள்ளே நிகழ்ந்த அதிகார மோதல் என்பதை நிரூபிக்க பல சான்றுகள் இருந்தன. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்பு படுத்துவதற்கான ஆதாரங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இருந்த போதிலும், "கம்யூனிஸ்ட் அழித்தொழிப்பு" என்ற அளவுக்கு செல்ல வேண்டிய காரணம் என்ன?

ஏற்கனவே, CIA க்கும், சுஹார்ட்டோவுக்கும் இடையில் இரகசிய தொடர்பிருந்திருக்கலாம்.  கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 5000 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலினை, அமெரிக்க தூதரகம் சுஹார்ட்டோவுக்கு விசுவாசமான படைகளிடம் கொடுத்திருந்தது. இந்த தகவலை ஜகார்த்தாவில் பணியாற்றிய CIA அதிகாரியான Clyde McAvoy  உறுதிப் படுத்தி உள்ளார். அவரின் வாக்குமூலத்தின் படி, தீர்த்துக் கட்ட வேண்டிய கம்யூனிஸ்டுகளின் பட்டியலையும், வாக்கிடோக்கி கருவிகளையும், CIA  வழங்கி இருந்தது. அதற்கு முன்னரே, கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதிகளையும், படையினரையும் விலைக்கு வாங்கும் பொறுப்பு, அன்றைய வெளிவிவகார அமைச்சர், ஆதம் மாலிக்கிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.  (ஆதாரம்: Legacy of Ashes: The History of the CIA, by Tim Weiner) ஆகவே, இந்தோனேசிய இனப்படுகொலையில், அமெரிக்க அரசும் சம்பந்தப் பட்டிருந்தமை, இத்தால் உறுதிப் படுத்தப் படுகின்றது.

"கொள்கை வேறுபாடு காரணமாக, பெருந்தொகையான மக்களை படுகொலை செய்தால், அதனை இனப்படுகொலை என்று அழைக்கலாமா?"  என்று சிலர் கேள்வி கேட்கலாம். இன்னொரு இனத்தை, அல்லது மதத்தை சேர்ந்தவர்களை கொன்று குவிப்பது மட்டுமே இனப்படுகொலை ஆகும், என்று சிலர் கறாராக வரையறுக்கலாம்.  அதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இந்தோனேசியாவில், எல்லா இடங்களிலும் பரவலாக வாழும், சீன சிறுபான்மை இனத்தவர்கள் நிறையப்பேர், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். வேற்று மொழி பேசும் சீனர்கள், கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததால், ஈவிரக்கமின்றி  படுகொலை செய்யப்பட்டனர். கல்லூரிகளில் நடந்த படுகொலைகளில், சீன மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளை குறிவைத்து தாக்கினார்கள். (அந்தக் காலத்திலும், பிற்காலத்தில் சுஹார்ட்டோவின் இறுதிக் காலத்தில், தொன்னூறுகளில் நடந்த சீன விரோத இனக்கலவரங்களிலும், சீன பெரு முதலாளிகள் பாதுகாக்கப் பட்டனர்.)

அதே போல, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பாலித் தீவிலும், பெருமளவு மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அந்த தீவின் சனத்தொகையில் பத்தில் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கிழக்கு இந்தோனேசிய தீவுகளான, புலோரெஸ், அம்பொன் ஆகிய இடங்களில் பெருமளவு கிறிஸ்தவர்கள், வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கேயும் படுகொலைகள் நடந்துள்ளன. கிறிஸ்தவ பாதிரியார்களும், இனப்படுகொலையாளிகளுடன் ஒத்துழைத்தனர். கொலைப் பட்டியலில் தமது பெயர்களும் இருப்பதாக நினைத்தவர்கள், தேவாலய உறுப்பினர் அத்தாட்சிப் பத்திரம் கேட்ட பொழுது, அதைக் கொடுக்க பாதிரிகள் மறுத்துள்ளனர். சில சமயம், பாவமன்னிப்பு கேட்க வரும் நபர், தான் ஒரு PKI உறுப்பினர்/ஆதரவாளர் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு விட்டால், அவரை பாதிரியாரே கொலைகாரர்களிடம் பிடித்துக் கொடுத்தார். (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)

இன்று வரையில், இனப்படுகொலை என்றால் என்னவென்பதற்கு, சரியான வரைவிலக்கணம் கிடையாது. நாஜிகளின் யூத இன அழிப்பை குறிப்பதற்கு உருவாக்கப்பட்ட சொல், இன்று பல நாடுகளிலும் பயன்படுத்தப் படுகின்றது. இந்தோனேசியாவில், "கம்யூனிஸ்டுகளை கொன்றது இனப்படுகொலை ஆகாது" என்று வாதாடுபவர்கள், எதனை  அடிப்படையாக கொண்டு கம்போடியாவில் இனப்படுகொலை நடந்ததாக கூறுகின்றார்கள்? பொல்பொட் ஆட்சிக் காலத்தில் நடந்த, "கம்போடிய இனப்படுகொலையை" விசாரிப்பதற்கு ஐ.நா. சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஏன் இந்தோனேசியாவில் அத்தகைய நீதிமன்றம் ஒன்று செயற்படவில்லை? ஏன் சர்வதேச சமூகம் அது குறித்து பாராமுகமாக இருக்கிறது?

(முற்றும்)

முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு:
இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை


உசாத்துணை:
1. De Stille Genocide, Lambert J.Giebels
2. De Groene Amsterdammer 28.02.2013
3. De Indonesische coup van 1965 (Historisch Nieuwsblad)
4. De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski
5. Legacy of Ashes: The History of the CIA, Tim Weiner

1965 ம் ஆண்டு, ஜகார்த்தா நகரில் நடந்த, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மகாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ:

Friday, March 08, 2013

இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை



"மேற்குலகிற்கு கிடைத்த நற்செய்தி!"
- இந்தோனேசிய இனப்படுகொலையை மகிழ்வுடன் வரவேற்று தலையங்கம் தீட்டிய டைம்ஸ் வார இதழ் (ஜூலை 1966).

"கம்யூனிஸ்டுகளை கொலை செய்வது ஒரு சுகமான அனுபவம்! அவர்களை  (இனப்) படுகொலை செய்ததற்காக பெருமைப் படுகிறேன். போர்க்குற்றம் என்றால் என்னவென்று வென்றவர்களே தீர்மானிக்கின்றனர். கம்யூனிசத்திற்கு எதிரான போரில் நாங்கள் வென்று விட்டோம்."
- 1965 ம் ஆண்டு, இந்தோனேசிய இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒரு கொலைகாரனின் சாட்சியம்.

உலகம் முழுவதும் நடக்கும் இனப்படுகொலைகளை பற்றிய தகவல்களை சேகரிக்கவும், மக்களுக்கு நினைவு படுத்தவும் தயங்காத மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும், இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலை பற்றி வாயைத் திறப்பதில்லை. எங்காவது ஒரு நாட்டில், இனப்படுகொலை நடந்த பிறகாவது, ஐ.நா. மன்றத்தை கூட்டி விசாரணை நாடகமாடும் சர்வதேச சமூகம், இந்தோனேசிய இனப்படுகொலை நடந்து ஐம்பது வருடங்கள் கடந்த பின்னரும், ஒரு கண்டனத் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை. ஏனிந்த இருட்டடிப்பு? ஏனிந்த பாரபட்சம்? ஏனிந்த புறக்கணிப்பு? காரணம்: இந்தோனேசிய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள், கம்யூனிஸ்டுகள். எந்த நாட்டிலாவது, கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டால், சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐ.நா. மன்றமோ தலையிட்டு விசாரிக்க மாட்டாது. இந்தோனேசியா மட்டுமல்ல, சிலி, குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடந்த "கம்யூனிஸ எதிர்ப்பு இனப்படுகொலைகள்", இன்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன.



அண்மையில் இந்தோனேசியாவுக்கு ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க சென்ற இயக்குனர்  Joshua Oppenheimer, ஐம்பது வருடங்களுக்கு முன்னர், அந்த நாட்டில் நடந்த இனப்படுகொலை பற்றி அறிந்து கொண்டார்.  இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும், கொலைகாரர்களும் அருகருகே வாழ்ந்து வருவதைக் கண்டார். பாதிக்கப்பட்ட மக்கள் குற்ற உணர்ச்சியுடன் வாழ்வதையும், இனபடுகொலை செய்தவர்கள் அதனை பெருமையுடன் சொல்லிக் கொண்டு திரிவதையும் நேரில் பார்த்தார். அப்படியானவர்கள் சிலரை தெரிந்தெடுத்து, ஒரு ஆவணப்படம் தயாரித்தார். அதிலே இனப்படுகொலை செய்தவர்கள், தாமாகவே முன்வந்து நடித்திருந்தனர். "கம்யூனிஸ்டுகளை கொல்வது எந்தளவு சுகமான அனுபவம். எத்தனை கம்யூனிஸ்டுகளை, எத்தனை விதமாக கொலை செய்தோம்..."  என்று கமெராவுக்கு முன்னால் தைரியமாகக் கூறுகின்றனர். சொல்வதோடு நின்று விடாமல், கொலை செய்த முறையை மீண்டும் ஒரு தடவை நடித்துக் காட்டுகின்றனர். முன்னாள் இனப்படுகொலையாளர்கள் நடித்த, The Act of Killing என்ற ஆவணப்படம், இந்த மாதம் உலகத் திரையரங்குகளில் காண்பிக்கப் படவுள்ளது.   

இனப்படுகொலை செய்தவர்கள், எவ்வாறு இந்தளவு தைரியமாக, சுதந்திரமாக நடமாட முடிகின்றது? "இனப்படுகொலையில் ஈடுபட்டதற்காக பெருமைப் படுகின்றோம்." என்று, எவ்வாறு பகிரங்கமாக கூற முடிகின்றது? எல்லாம் அமெரிக்கா கொடுக்கும் தைரியம் தான். ஒரு நாட்டில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்ற விடாமல் தடுக்க வேண்டுமானால், எத்தனை இலட்சம் போரையும் இனப்படுகொலை செய்யலாம். அது தவறென்று சர்வதேச சமூகம் கூறாது. அது பாவம் என்று மத நம்பிக்கையாளர்கள் கூற மாட்டார்கள். எந்த ஊடகமும் அதைப் பற்றி ஆராய மாட்டாது. எந்தக் கல்லூரியும் அதைப் பற்றி மாணவர்களுக்கு போதிக்க மாட்டாது.

 இந்தோனேசியாவில் இனப்படுகொலை செய்த ஒரு கொலைகாரன் சொன்னதைப் போல, "போர்க்குற்றம் என்றால் என்னவென்று, வென்றவர்களே தீர்மானிக்கிறார்கள்."  கடந்த மூவாயிரம் வருட உலக வரலாறு முழுவதும், அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய உலகம் மாறி விட்டதாகவும், நியாயத் தீர்ப்பு வழங்குவதற்கென இயங்கும், ஐ.நா. போன்ற சர்வதேச ஸ்தாபனங்கள் கடமையைச் செய்து வருவதாகவும், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும், அதற்கு டச்சுக்காரர்கள் உரிமை கோரியதால், அங்கே ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. இடையில் சில வருடங்கள், ஆக்கிரமித்த ஜப்பானியர்களுடன், இந்தோனேசிய தேசியவாதிகள் ஒத்துழைத்தனர். இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் மட்டுமே, டச்சுக்காரரையும், ஜப்பானியரையும் எதிர்த்து போராடினார்கள்.  இறுதியில்,  தேசியவாதிகளிடம் சுதந்திரத்தை கையளிக்குமாறு அமெரிக்கா வற்புறுத்தியதால், டச்சு காலனிய படைகள் வெளியேறின. 

அன்று இந்தோனேசியாவை ஆண்ட சுகார்னோவும், அவரது ஆதரவாளர்களும் கம்யூனிஸ்டுகளோ, சோஷலிஸ்டுகளோ அல்லர். அவர்கள் தேசியவாதிகள். உண்மையில் இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகியது. உண்மையான, நேர்மையான தேசியவாதிகள், சிலநேரம் மேற்குலக நலன்களுக்கு எதிரானவர்களாக மாறலாம். சுகார்னோ, காலனிய முதலாளிகளின் நிறுவனங்களை தேசியமயமாக்கினார். அமெரிக்காவையோ, ரஷ்யாவையோ ஆதரிக்காத, அணிசேரா  நாடுகளின் கூட்டமைப்பை ஸ்தாபித்ததில் சுகார்னாவுக்கு பெரும் பங்குண்டு. மேலும், சீனாவுடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தார். "இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனாதிபதி சுகார்னோவை பொம்மை போல ஆட்டி வைத்ததாக," சில சரித்திர ஆசிரியர்களும் எழுதியுள்ளனர். ஆனால், அது எந்தளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குறி. இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிப்பதற்காக, அவ்வாறு வரலாற்றை திரித்திருக்கலாம். 

1913 ம் ஆண்டு, ஹென்க் ஸ்னேவ்லீட் (Henk Sneevliet) என்ற டச்சு கம்யூனிஸ்ட், "இந்தோனேசிய சமூக ஜனநாயக கூட்டமைப்பு" என்ற, கம்யூனிஸ்டுகளுக்கு முன்னோடியான சோஷலிசக் கட்சியை உருவாக்கினார். இவர் நெதர்லாந்து நாட்டின் தேசிய நாயகன். அதற்கான காரணம் வேறு. கம்யூனிசத்தின் பெயரால், இந்தோனேசிய மக்களையும் ஒன்று திரட்டி வந்ததை விரும்பாத டச்சு காலனிய அரசு, அவரை வெளியேற்றியது.  ஹென்க் தாயகம் திரும்பி வந்த காலத்தில், நெதர்லாந்து ஜெர்மன் நாஜிப் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நாஜிகளின் யூத மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியதால், ஜெர்மன் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

1924 ம் ஆண்டு,   "இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி" (Partai Komunis Indonesia) உருவாகியது. (சுருக்கமாக PKI). 1926 ம் ஆண்டு, டச்சு காலனிய அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி ஒன்று இடம்பெற்றது. அது தோல்வியடைந்ததும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டது. 13000 கம்யூனிஸ்டுகள் கைது செய்யப் பட்டனர். டச்சு காலனிய அரசு, ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளை நியூ கினியா தீவுக்கு நாடு கடத்தியது. (இந்தியாவை ஆண்ட  ஆங்கிலேயருக்கு அந்தமான் தீவுகள் போன்று, இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக் காரருக்கு நியூ கினியா). இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் உருவான, சுகார்னோவின் தேசிய அரசுக்கு எதிராகவும், கம்யூனிஸ்டுகள் மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள். 

அந்தக் காலத்தில், இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த மூசோ, ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர். இரண்டாம் உலகப்போரில், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போரிட்ட கம்யூனிச கெரில்லாப் படைகளுக்கு சோவியத் யூனியன் உதவி வந்தது. ஆனால், இந்தோனேசியா குடியரசானதும், தேசியவாதிகளுடன் இணைந்து ஒரு தேசிய அரசமைக்குமாறு சோவியத் யூனியன் அறிவுறுத்தியது. ஆனால், மூசொவின் தலைமை அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. 1948 ம் ஆண்டு, டச்சு காலனியாதிக்க படைகளின் வெளியேற்றத்தை பயன்படுத்திக் கொண்ட கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், கிழக்கு ஜாவா பகுதியில் ஒரு விவசாயிகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கினார்கள். 

கிழக்கு ஜாவா விவசாயிகளின் புரட்சி வெற்றி பெற்றதால், அங்கு ஒரு "இந்தோனேசிய சோவியத் குடியரசு" உருவானது. அன்றைய சுகார்னோ அரசு பிரச்சாரம் செய்ததற்கு மாறாக, சோவியத் ஒன்றியம் அந்த கம்யூனிஸ்ட் எழுச்சியை அங்கீகரிக்கவில்லை. ஜாவா விவசாயிகளின் புரட்சிக்கு, வெளியுலக ஆதரவு கிடைக்காத நிலையில், சுகார்னோவின் படைகளால் கடுமையாக அடக்கப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மூசொவும், அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டார். ஆகவே, "சுகார்னோ கம்யூனிஸ்ட் கட்சியின் பொம்மை போல ஆட்சி நடத்தியதாக" கூறுவது, பின்னாளில் நடந்த இனப்படுகொலைக்கு ஒரு காரணத்தை கண்டு பிடிப்பதற்காக என்பது இங்கே தெளிவாகும்.

1955 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி பதினாறு சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டில் நான்காவது பெரிய கட்சியாக உருவானது, சிலர் கண்களை உறுத்தி இருக்கலாம். 1965 ம் ஆண்டு, கட்சி அழிக்கப்பட்ட காலம் வரையில், மூன்று மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அன்றிருந்த சோஷலிச நாடுகளுக்கு வெளியே இருந்த எந்த நாட்டிலும், இவ்வளவு பெருந்தொகையிலான உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்ததில்லை. மேலும், கட்சியோடு சேர்ந்தியங்கிய விவசாயிகள் முன்னணியில் எட்டு மில்லியன் உறுப்பினர்கள் இருந்தனர். இந்த விபரங்கள் யாவும், சிலருக்கு எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்திருக்கலாம். அன்று அடுத்தடுத்து பல ஆசிய நாடுகளில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்ததால், இந்தோனேசியாவிலும் ஒரு கம்யூனிசப் புரட்சி உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று பலர் நம்பினார்கள்.   

இந்தோனேசியாவில் மிக முக்கியமாக, நான்கு அரசியல் சக்திகள், கம்யூனிஸ்ட் கட்சியை கருவறுக்க கங்கணம் கட்டின. அவையாவன: 
1. இராணுவத்திற்குள் ஒரு பிரிவினர். வலதுசாரி முதலாளித்துவ நலன் சார்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு, சுகார்ட்டோ தலைமை தாங்கினார்.
2. நிலவுடமையாளர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக, நிலமற்ற விவசாயிகள் பெருமளவு நிலங்களை ஆக்கிரமித்து வந்தனர். அதனால் நாடு முழுவதும் இருந்த நிலவுடமையாளர்கள், தமது எதிர்காலம் சூனியமாகி விடும் என்று அஞ்சினார்கள்.
3. கடும்போக்கு இஸ்லாமிய மதவாதிகள். இந்தோனேசியா, உலகிலேயே அதிகளவு முஸ்லிம் சனத்தொகையை கொண்ட நாடு. இஸ்லாமிய மதவாதிகள், "நாஸ்திக கம்யூனிஸ்டுகளை" வெறுத்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களாக கருதப்பட்ட மத அடிப்படைவாத அமைப்புகள், அன்றைய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இனப்படுகொலையின் ஊடாக வளர்ந்தவை. 
4. அமெரிக்கா. அமெரிக்க தூதரகமும், சி.ஐ.ஏ. யும் மிகத் தீவிரமாக இந்தோனேசிய அரசியல் விவகாரங்களில் தலையிட்டு வந்தன. அவர்கள் மேலே குறிப்பிட்ட மூன்று பிரிவினருடனும், மிகவும் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தனர். சுகார்ட்டோ என்ற கொடுங்கோல் சர்வாதிகாரியையும், இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதிகளையும், அமெரிக்கர்களே உருவாக்கினார்கள். 

30 செப்டம்பர் 1965, ஜகார்த்தா நகரில் இராணுவ தளபதிகளின் வீடுகளின் முன்னால் ஒரு டிரக் வண்டி வந்து நின்றது. மிகவும் முக்கியமான ஏழு படைத்தளபதிகளை பிடித்துச் செல்வதே, டிரக் வண்டிகளில் வந்தவர்களின் நோக்கம். கைது செய்ய வந்தவர்களுடன் எதிர்த்துப் போராடியதால், மூன்று பேர் ஸ்தலத்திலே கொல்லப் பட்டனர். மூன்று பேர் அழைத்துச் செல்லப் பட்டு, அடுத்த நாள் கொல்லப் பட்டனர். ஒருவர் பிடிபடாமல் தப்பி ஓடி விட்டார். அடுத்தநாள், 1 ஒக்டோபர் 1965, ஆறு இராணுவ தளபதிகள் கொலை செய்யப் பட்ட செய்தி நாடு முழுவதும் பரவியது.  "30 செப்டம்பர் குழு" என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள், ஒரு சதிப்புரட்சி நடந்துள்ளதாக வானொலியில் அறிவித்தனர். ஆனால், யார் இந்த சதிப்புரட்சியாளர்கள்? உலகில் இன்று வரை துலக்கப் படாத மர்மங்களில் அதுவும் ஒன்று. அந்த சதிப்புரட்சி, CIA தயாரிப்பில் உருவான நாடகம் என்று சிலர் சந்தேகப் படுகின்றனர். அது உண்மையா? இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலையில், அமெரிக்காவுக்கும் பங்கு உண்டா?

Friday, May 14, 2010

"ஜாவா இனப்படுகொலை", நெதர்லாந்து அரசின் போர்க்குற்றங்கள்

9 செப்டம்பர் 1947, இந்தோனேசியா, ஜகார்த்தா நகரில் இருந்து நூறு கி.மீ. தூரத்தில் உள்ள ராவகேடே கிராமம். மேஜர் வைனன் (Wynen) தலைமையிலான நெதர்லாந்து படைகள் கிராமத்தை சுற்றி வளைக்கின்றன. இந்தோனேசியாவை ஆக்கிரமித்த நெதர்லாந்து காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. விடுதலைப் படைத் தலைவர்களில் ஒருவனான லூகா, ராவகேடே கிராமத்தில் மறைந்திருக்கிறான் என்றொரு வதந்தி. அவனைப் பிடிப்பதற்காக தான் நெதர்லாந்து படையினர் வந்தார்கள். ஆனால் எங்கு தேடியும் லூகா அங்கில்லாதது படையினருக்கு ஏமாற்றமளிக்கின்றது. பலரை கைது செய்து அழைத்துச் சென்றனர். ஊருக்கு வெளியே வயல் பக்கமாக நிற்க வைத்து அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள். பிணங்களைத் தூக்கி கிணற்றில் வீசினார்கள். கிராமத்தில் இருந்த பிற ஆண்கள், உயிர் பிழைக்க தப்பியோடியவர்கள் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்று நெதர்லாந்து படையினரின் வெறியாட்டத்திற்கு 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியானார்கள். ஐக்கிய நாடுகள் சபை கூட அன்று நடந்த இனப்படுகொலையை கண்டித்திருந்தது.

இந்தோனேசிய இனப்படுகொலைகள் நடந்து அறுபது வருடங்கள் உருண்டோடி விட்டன. போர்க்கால குற்றம் புரிந்த நெதர்லாந்து படையினரில் ஒருவர் கூட இன்று வரை கைது செய்யப்படவில்லை. மேஜர் வைனன் உட்பட அனைத்து குற்றவாளிகளும் நெதர்லாந்தில் நலமாக வாழ்ந்தனர். அரசு அவர்களை எந்த விசாரணைக்கும் உட்படுத்தவில்லை. அதை விட இன்று வரை போர்க்கால குற்றங்களுக்கான பொறுப்பை நெதர்லாந்து அரசு ஏற்கவில்லை. இனப்படுகொலை விவகாரம் நினைவுபடுத்தப் படும் போதெல்லாம், வருத்தம் தெரிவிப்பதுடன் நின்று கொள்கின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டஈடாக வழங்கப்படவில்லை.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் Liesbeth Zegveld பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக, நெதர்லாந்து அரசு மீது வழக்குத் தொடுத்துள்ளார். இந்தோனேசியாவில் படுகொலை செய்யப்பட்ட ஆண்களின் விதவைகளையும், பிற உறவினர்களையும் கண்டு பேசி, வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளார். (கீழே உள்ள வீடியோவில் அவர்களது சாட்சியங்கள் பதிவாகியுள்ளன.) நெதர்லாந்து அரசு மீதான குற்றச்சாட்டு இனப்படுகொலைக்கு பொறுப்பு ஏற்க வைப்பது மட்டுமல்ல. படுகொலைகளை விசாரணை செய்யாமல் புறக்கணித்த குற்றத்திற்குமாகத் தான். "அறுபது வருடங்கள் கடந்து விட்டதால் குற்றங்கள் காலாவதியாகி விட்டன." என்று வாதிடுகின்றது நெதர்லாந்து அரசு. ஆனால் இரண்டாம் உலகப்போர் கால குற்றங்களுக்காக இன்றைக்கும் வழக்குகள் நடைபெறுகின்றன. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


இந்தோனேசியாவில் நெதர்லாந்து படையினரின் போர்க்குற்ற வழக்கு தொடர்பாக நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் வீடியோ:


Thursday, April 29, 2010

கிழக்கு தீமோர்: சுதந்திரம் உண்டு, சோறு இல்லை!

20 ம் நூற்றாண்டின் இறுதியில் உருவான புதிய சுதந்திர நாடு கிழக்குத் திமோர். முன்னாள் போரத்துக்கீச காலனியான இந்தத் தீவு 1975 ல் இந்தோனேசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருந்தது. இந்தோனேசியாவின் முன்னாள் சர்வாதிகாரி சுஹார்த்தோவின் பதவி விலகலுக்குப் பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்குப் பின்னாலிருந்த அந்நிய நாடுகளின் தலையீடு மே 2002 ல் கிழக்குத் திமோரக்கான சுதந்திரத்தில் போய் முடிவடைந்தது. சுதந்திர விழாக் கொண்டாடி ஆறு மாதங்களான நிலையில் டிசம்பர் மாதம் தலைநகர் டிலியில் ஏற்பட்ட கலவரம் அந்த தேசத்தின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

டிலி பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற சகமாணவனை சுதந்திரத் திமோர் போலிஸ் கைது செய்ததையெதிர்த்து நடந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஆத்திரமுற்ற மாணவர்கள் நகரின் வியாபார ஸ்தாபனங்கள், ஹோட்டல்கள், ஆகியவற்றைத் தாக்கிக் தீயிட்டனர். சுதந்தித்தின் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான இந்தக் கலவரத்திற்கு நாட்டின் வறுமை நிலையும் , வேலையில்லாப் பிரச்சினையும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. இக்கலவரத்தில் சில முக்கிய இடங்கள் தேர்ந்தெடுத்துத் தாக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவிற்குச் சொந்தமான சுப்பர் மாக்கட், கிழக்குத் திமோர் பிரதமரின் இல்லம் என்பன கலவரத்தில் பாதிக்கப்பட்டவற்றில் குறிப்பிடத்தக்கவை.

கிழக்குத் திமோர் ஆசியாவின் மிகவறுமையான நாடாகத் திகழ்கிறது. 40 வீதத்திறகுமதிகமான சனத்தொகை வேலையற்றிருக்கின்றனர். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வேலைதேடும், வறுமைநிலையைப் போக்கும் ஏக்கம் தெரிகிறது. மதப்பிரச்சாரம் செய்யப்போகும் கிறிஸ்தவப் பிரச்சார அமைப்புகள் எதிர் கொள்ளும் முதற் கேள்வி உணவைப் பற்றியதாகவே இருக்கின்றது.

கிழக்குத் திமோர் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்வகிக்கப்பட்ட காலத்திலேயே இந்தப் பிரச்சினைகள் தலைகாட்ட ஆரம்பித்திருந்தன. அப்போது ஒரு நாள் நம்பிக்கையிழந்த வேலையற்ற மக்கள் ஐ.நா உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஐ.நா சபையில் தொழில் புரிந்த உத்தியோகத்தர்கள் வேறு உள்ளூர் மக்கள் மத்தியில் பொறாமையை கிளப்பியிருந்தனர். சராசரித் திமோர் தொழிலாளியின் மாத வருமானம் சில பத்து டொலர்களாக இருக்கும் பட்சத்தில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐ.நா உத்தியோகத்தர்கள் ஆடம்பரம் காட்டி எரிச்சலைக் கிளப்பிவிட்டிருந்தனர். இதற்கிடையே அந்நிய நாட்டு அவுஸ்ரேலிய இராணுவம் நாட்டாண்மை காட்டிக்கொண்டிருந்தது.

தற்போது பொதுத்தேர்தல்கள் நடாத்தப்பட்டு திமோரியர்கள் கையில் ஆட்சிப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலையியக்க வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு மந்திரிகளாகப் பவனிவருகின்றனர். நாட்டில் நிலவும் குழப்ப நிலைக்கு ஜனநாயகத்தில் அனுபவமற்ற அரசியல்வாதிகள், கஜானாவிலான நிதிப்பற்றாக்குறை கொண்ட அரசாங்கம் என்பன காரணமாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் வர்த்தகத்திற்கு எதிர்காலம் இல்லையென்று அவுஸ்திரேலிய சூப்பர் மாக்கட் முதலாளியொருவர் அவநம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

திமோர் தீவில் வாழும் மக்கள் பல்வேறு மொழிகள் பேசும் பழங்குடியினர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமக்குரிய ஊர்களில், பண்டைய சம்பிரதாயங்களுடன் வாழ்ந்து வந்தவர்கள். காலனியக் காலகட்டத்தில் அந்த நிலை மாறியது. மேற்குத் திமோரை ஒல்லாந்து கைப்பற்ற கிழக்குத் திமோரைப் போர்த்துக்கல் கைப்பற்றி தமது காலனி ஆட்சியை நிறுவினர். அதனால், போர்த்துக்கேயர் விடடுச்சென்ற பின்பு, போரத்துக்கீச மொழி பேசிய கிழக்குத் திமோரிப் படித்த வர்க்கம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தற்போது புதிய அரசாங்கத்தில் இருப்பவர்களும் இதே பிரிவினர்தான். ஆயினும் இந்தோனிஷிய ஆட்சியின் கீழ் இருந்த இடைப்பட்ட காலத்தில் பாடசாலைகளில் இந்தோனிசிய மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது. இதனால், இந்தோனிஷிய மொழிபேசும் இளஞ் சமூகம் போர்துக்கீச மொழி பேசும் ஆளும் வர்க்கத்துடன் பல விடயங்களில் முரண்படுகின்றது. போர்த்துக்கீச மொழி பேசுபவர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற அரசாங்க அறிவிப்பும் , இதனால் பின்தங்கி நிற்கும் இளைஞர்களும் இதற்கு ஒரு எடுத்தக்காட்டு.

பெரும்பான்மைத் திமோரிய மக்கள் தெட்டுன் என்ற மொழி பேசுபவர்கள். போர்த்துக்கிச மொழிக்குப் பதிலாக, உள்ளூர் மக்களின் தெட்டுன் மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கினால், பல பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு மாறாக போர்த்துக்கீச மொழியைத் தமது தொண்டைக்குள் திணிப்பதாக பலர் வெறுப்புற்றுள்ளனர். அதிகமானோர் வேலையற்றிருப்பதற்கு மொழிப்பிரச்சினையும் ஒரு காரணமாகும். உலகின் மிகவறிய நாடுகளில் ஒன்றாக கிழக்குத் திமோர் கணிக்கப்பட்டாலும் அந்நாட்டில் இயற்கை வளத்திற்குக் குறைவில்லை. மிக முக்கியமாக அபரிதமான எண்ணைவளம் திமோரைச் சுற்றியுள்ள கடலில் இருப்பதால் தான், திமோரின் சுதந்திரத்தை அந்நிய நாடுகள் தலையிட்டுப் பெற்றுக் கொடுத்தனர்.

ஐ.நா சபையின் பெயரில் வந்திறங்கிய "பன்னாட்டுப்" படைகளுக்கு அவுஸ்ரேலியா காரணமில்லாமல் தலைதாங்கவில்லை. அவுஸ்திரேலியாவிற்கும், திமோரிற்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் இருக்கும் எண்ணையை அன்றுமுதல் இன்றுவரை அவுஸ்திரேலியப் பெற்றோலிய நிறுவனங்கள்தான் அகழ்ந்தெடுத்து வருகின்றன. ஏற்கெனவே முன்னாள் இந்தோனேசிய சர்வாதிகாரி சுகார்த்தோவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அவுஸ்திரேலியா இந்த உரிமையைப் பெற்றது. சர்வதேசச் சட்டத்தின் படி இரு நாடுகளுக்குமிடையிலான கடலெல்லை சம தூரத்தில் பிரிக்கப்படவேண்டும். ஆனால், இதற்கு மாறாக அவுஸ்திரேலியா தனது பக்க எல்லையை விரிவாக்கி 85 வீதக் கடற்பரப்பை பெற்றுக்கொண்டது.

தற்போது சுதந்திரத் திமோர் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த்தின் பிரகாரம் 80 கோடி டொலர்கள் உரிமைத் தொகையாகவும், எண்ணை உற்பத்தியில் 90 வீத பங்கையும் கொடுக்க அவுஸ்திரேலியா சம்மதித்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மையான எண்ணை வயல்கள் இந்த ஒப்பந்தத்தில் அடங்காத கடற்பரப்பில் இருக்கின்றன, என்பது பலரறியாத விடயம். சில இடங்களில் அவுஸ்ரேலியா நூறுவீத உரிமையைக் கொண்டுள்ளது. ஆகவே சுதந்திரம் கிடைத்த பின்பும் அவுஸ்திரேலியாவின் எண்ணைக் களவு தொடர் கதை தான். எல்லையைச் சரியாக வரையறுக்குமாறு திமோர் அரசு கேட்டபோதும் அவுஸ்திரேலியா ஏதாவது சாட்டுச்சொல்லி 30 வருடங்களுக்கு அதைப்பின்போடும் உள்நோக்கோடு செயற்பட்டுவருகிறது. அதற்குள் இருக்கும் எண்ணை முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிடும் திட்டமிருக்கலாம். கிழக்குத் திமோர் ஒரு வறியநாடு. அந்நிய நாடுகள் தமது பொருளாதார நலன்களைக் கருதாமல், வறிய மக்களின் வாழ்க்கைத்தரமுயற்றும் முயற்சிகளை முன்னெடுக்காவிடில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

Sunday, December 13, 2009

இந்தோனேசிய சதியில் டச்சு அரச குடும்பத்தின் பங்கு

எந்தவொரு காலனியாதிக்க நாடும், தனது காலனியின் சுதந்திரத்தின் பின்னரும், சொந்த நலன்களை நிலை நிறுத்திக் கொள்ள தயங்கியதில்லை. செல்வம் கொழிக்கும் இந்தோனேசியாவை நெதர்லாந்து காலனியாக வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியரால் சில காலம் ஆக்கிரமிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் இந்தோனேசியாவிற்கு சுதந்திரம் கொடுக்க நெதர்லாந்து முன்வரவில்லை. நான்காண்டு காலம் நீடித்த சுதந்திரத்திற்கான போர், டச்சுப் படையினரின் இனப்படுகொலைகள், போன்ற கசப்பான அனுபவத்திற்குப் பின்னர் தான் சுதந்திரம் வழங்கப்பட்டது.

சுகார்னோ தலைமையில் சுதந்திர இந்தோனேசியக் குடியரசு மலர்ந்தது. சுகார்னோவின் தேசியமயமாக்கல் கொள்கையினால், ஏகபோக உரிமை கொண்டாடிய நெதர்லாந்து கம்பனிகள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியது. ஒரு பணக்கார காலனி தனது கையை விட்டுப் போவதை, நெதர்லாந்து இராணியின் கணவரான பெர்னார்ட் பிரபுவால் பொறுக்க முடியவில்லை. இந்தோனேசிய மக்களை இனவழிப்பு செய்த டச்சு ஜெனரல்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். இதன் படி இரகசியமாக ஆயுதங்களைக் கடத்துவதற்கும், சதிப்புரட்சி மூலம் சுகார்னோவை ஆட்சியில் இருந்து அகற்ற திட்டம் தீட்டப்பட்டது.

டச்சு அரச குடும்பத்தினரின் கிரிமினல் சதிவேலைகள் பற்றிய தகவல்கள், இதுவரை திறக்கப்படாத ஆவணம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. அரச ஆவணங்களை ஆய்வு செய்த ஒரு பத்திரிகையாளரும்(Jort Kelder), சரித்திரவியலாளரும் (Harry Veenendaal) இது சம்பந்தமாக நூல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அண்மையில் இந்த நூலின் சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் குறித்து நெதர்லாந்து ஊடகங்கள் பரபரப்பூட்டின. (செய்தி வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) நெதர்லாந்து அரச குடும்பத்தினரின் சொத்து மதிப்பு காரணமாக, இராணி உலகின் இரண்டாவது பணக்கார பெண்மணியாக திகழ்கின்றார். இந்தோனேசியா போன்ற காலனிகளில் கொள்ளையடித்து சொத்து சேர்த்ததனால் பணக்காரர் ஆனவர்கள். இலகுவில் தமது வருமானத்தை இழக்க முன்வருவார்களா?


இந்நாள் நெதர்லாந்து இராணி Beatrix சின் தந்தையும், முன்னாள் இராணி Juliana வின் மறைந்த கணவருமான Bernhard சர்ச்சைக்குள் மாட்டியது இதுவே முதல் தடவையல்ல. ஏற்கனவே அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான Lockheed , ஒரு மில்லியன் டாலர் லஞ்சம் வழங்கிய விவகாரம் வெளிவந்து, பெருத்த அவமானத்தை தேடித் தந்தது. ஜெர்மன் பிரபுக் குடும்பத்தை சேர்ந்த பெர்னார்ட், நாஸிஸ அரசுடனும் நெருக்கமான உறவைப் பேணி வந்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு:
Historians quarrel about prince's role in Indonesia coup

Sunday, September 20, 2009

1965 இந்தோனேசிய இனப்படுகொலையை நினைவுகூறுவோம்

44 வருடங்களுக்கு முன்னர், இந்தோனேசியாவில் அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட சுகார்ட்டோ தலைமையிலான இராணுவ சதிப்புரட்சி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை அகற்றியது. சதிப்புரட்சியை தொடர்ந்துகம்யூனிஸ்ட்கள், சோஷலிஸ்ட்கள் அனைவரும் நர வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டனர். இந்தோனேசிய வரலாறு காணாத இனப்படுகொலையில் இலட்சக்கணக்கானோர் கொள்கைக்காக கொல்லப்பட்டனர். இந்தோனேசிய இனப்படுகொலையை ஆவணப்படுத்திய Mass Grave in Indonesia ஆவணப்படம் கீழே: