Wednesday, February 06, 2019

அன்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு....


எச்சரிக்கை!
கம்யூனிச வைரஸ் கிருமிகள் பரவி வருவதால், கம்யூனிச தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்.
கம்யூனிச வைரஸ் பின்வரும் நோய்களை உண்டாக்க வல்லது என்று கண்டறியப் பட்டுள்ளது: 
- அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி
- அனைத்து மட்டத்திலும் இலவசமான பொதுக் கல்வி 
- இனவாதம், ஆணாதிக்கம் போன்றவற்றை எதிர்த்துப் போராடுதல்
- அனைவரும் சமத்துவமாக நடத்தப் படும் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம்

மேற்குறிப்பிட்ட தொற்று நோய்களை தடுக்க விரும்புவோர், அருகில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு மருத்துவ நிலையத்தில் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். 
(கம்யூனிச எதிர்ப்பு மருத்துவர்கள், முதலில் இலவச ஆலோசனை வழங்கி விட்டு, பின்னர் உங்களிடம் இருக்கும் பணத்தை எல்லாம் சுரண்டி எடுத்து விடுவார்கள்.) 


சில நண்பர்கள், மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களில் வெளியாகும், கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரைகளை வாசிக்குமாறு, எனக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வெகுளித்தனத்தை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. பாவம், உலகம் அறியாப் பாலகர்கள்!

எதற்காக ஒரு முதலாளித்துவ ஊடகம், தனது ஜென்ம விரோதியாக கருதும் ஒன்றைப் பற்றி (கம்யூனிசம்) சாதகமான தகவல்களை வெளியிட வேண்டும்? உலகில் யாராவது தனது எதிரியை புகழ்ந்து பேசுவதைக் கண்டிருக்கிறீர்களா? உதாரணத்திற்கு, சிறிலங்கா அரசுக்கு சார்பான ஊடகம், புலிகளை புகழ்ந்து எழுதுமா? அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றால், இதுவும் முட்டாள்தனம் தான்.

பனிப்போர் காலத்தில், சிறந்த கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரை எழுதிக் கொடுப்போருக்கு தகுந்த சன்மானம் வழங்கப் பட்டது. இது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். அது மட்டுமல்ல, சோவியத் யூனியன், மற்றும் பல கம்யூனிச நாடுகளில் இருந்து, ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியேறி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோரியோர் பலருண்டு. அவர்களும் தமது கற்பனைக்கு எட்டிய புளுகுக் கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.

நாங்கள் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அது பனிப்போர் காலகட்டம். ஒரு கம்யூனிச நாட்டிலிருந்து வந்து அகதித் தஞ்சம் கோரும் ஒருவரை எடுத்த உடனே நம்ப முடியாது. கே.ஜி.பி. கூட அகதி என்ற போர்வையில் உளவாளிகளை அனுப்பலாம். உண்மையில் அப்படியும் நடந்துள்ளது.

அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோரி விட்டு, சோவியத் யூனியனுக்காக உளவு பார்த்த பலர் பிடிபட்டிருக்கிறார்கள். இதனால் சி.ஐ.ஏ. யாரையும் நம்பாமல் கடுமையாக விசாரணை செய்தது. சிலர் சித்திரவதை தாங்காமல் இறந்துள்ளனர்.

அவர் சிலநேரம் நேர்மையான அகதியாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும், சி.ஐ.ஏ. நம்பத் தயாராக இருக்கவில்லை. மேற்குலகிற்கு தப்பியோடிய சிலருக்கு இந்த விடயம் தெரிந்திருக்கலாம். அதற்காக தன்னை தயார்படுத்த வேண்டி இருந்தது.

அதைவிட, தனிப்பட்ட பொருளாதார நலன்களுக்காக தஞ்சம் கோரிய பொருளாதார அகதிகளும் இருந்தனர். ஒரு கம்யூனிச நாட்டில் இருந்து ஓடி வந்த அகதி என்றால் தனி மரியாதை கிடைக்கும். அவருக்கு வேண்டிய சலுகைகளை செய்து கொடுத்தனர். சிலநேரம், உள்நாட்டவரே பொறாமைப்படும் அளவிற்கு, நேற்று வந்த அகதிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

சரி, மேற்குலகில் அகதித் தஞ்சம் கோருவதற்கு என்ன செய்ய வேண்டும்? அது பெரிய கஷ்டமான விடயம் இல்லை. கம்யூனிச நாடுகளில் என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்று கதை புனைந்து சொல்லத் தெரிந்திருந்தால் போதும். யாருக்கு கற்பனை வளம் அதிகமோ, அவருக்கு தஞ்சம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதனால் பல திடுக்கிடும் திகில் கதைகளை சொன்ன கதாசிரியர்கள் இருந்தனர்.

இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே தெரிந்த விடயம். பெர்லின் மதில் விழுந்து, சோஷலிச நாடுகள் காணாமல்போன பின்னர், இந்தக் கதாசிரியர்களின் புளுகுக் கதைகள் பற்றிய உண்மையும் தெரிய வந்தது. தாம் எந்தளவு தூரம் முட்டாளாக்கப் பட்டிருக்கிறோம் என்று, மேற்கத்திய அரசுகள் வெட்கித்து நின்றிருக்கும். இருப்பினும் இன்றும் சில மேதாவிகள், அந்தக் கதைகளை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள். என்ன செய்வது? அவர்களது அப்பாவித்தனத்தை எண்ணி பரிதாபப் படத் தான் முடியும்.

கம்யூனிச எதிர்ப்பு காமெடிகள்: கம்யூனிச எதிர்ப்பாளர்கள் எப்போதும் "தானே ஜோக் சொல்லி தானே சிரிக்கும் வெகுளிகள்" போன்றவர்கள். அவர்களது பிரபலமான காமெடிகளில் ஒன்று:"முன்னாள் சோஷலிச நாடுகளில் வாழ்ந்த மக்கள் சர்வாதிகார ஆட்சிக்கு அஞ்சி நடந்தார்கள். அதனால், சர்வாதிகாரம் பற்றிப் பேசும் இலக்கியங்கள் கூட தடை செய்யப் பட்டன..." இது முழுக்க முழுக்க மேற்குலகத்தினர் மட்டும் நம்பிய கற்பனைக் கதை.

அதற்கான மூன்று முக்கிய காரணங்கள்: 
1. கம்யூனிச ஆட்சியாளர்கள் யாருமே தம்மை சர்வாதிகாரிகளாக எண்ணிக் கொள்ளவில்லை. அவர்கள் எல்லோரும் தம்மை ஜனநாயகவாதிகள் என்று தான் கருதிக் கொண்டனர்.

2. சரியோ, பிழையோ, அந்நாடுகளின் பிரஜைகளும் தாம் ஒரு சிறந்த ஜனநாயக அரசமைப்பின் கீழ் வாழ்வதாக எண்ணிக் கொண்டனர். பள்ளிக்கூடங்களிலும் அவ்வாறு தான் கற்பிக்கப் பட்டது.

3. எத்தகைய அரசியல் அமைப்பு சிறந்தது என்பதை தெரிவு செய்வதற்கு அந்த நாட்டிற்கு உரிமை உண்டு. மேற்கத்திய அமைப்பு மட்டுமே சரியென்று கூற அது ஒன்றும் புனிதமானது அல்ல.

ஆகையினால், மேற்கத்திய நாடுகள் தயாரித்து அனுப்பிய "சர்வாதிகார எதிர்ப்பு இலக்கியங்கள், திரைப்படங்கள்" எதையும் கம்யூனிச ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. பொய்களை மட்டுமே கூறும் (விரும்பினால் அதை "விவாதத்திற்குரியது" என்று சொல்லுங்கள்) அவதூறு பரப்புரைகளை தவிர, ஏனையவற்றை தடை செய்யவில்லை.

உதாரணத்திற்கு Blakes 7 என்ற சயின்ஸ் பிக்சன் தொலைக்காட்சித் தொடர் எழுபதுகளில் பிரபலமாக இருந்தது. பிரித்தானியாவில் தயாரிக்கப் பட்ட அந்தத் தொடர், உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு முன்னாள் சோஷலிச நாடுகளில் காண்பிக்கப் பட்டன.

பிளேக்ஸ் செவன் தொடரின் கதை இது தான். பூமியும், வேறு கிரகங்களும், Terran Federation எனும் சர்வாதிகார (Totalitarian) அரசினால் ஆளப் படுகின்றன. அங்கு அரசுக்கு எதிரான அரசியல் கைதிகள் சிறை வைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் சிறை உடைத்து, Liberator என்ற விண்கலத்தில் தப்பிச் செல்கின்றனர். அதை விரட்டிச் செல்லும் அரச படையினருடன் நடக்கும் போர் தான் கதைச் சுருக்கம்.

மேற்கத்திய பார்வையாளர்களை பொறுத்தவரையில், "Totalitarian, Liberator..." போன்ற சொற்களைக் கேள்விப் பட்டாலே "கம்யூனிச சர்வாதிகாரம்" நினைவுக்கு வரும் வகையில் மூளைச்சலவை செய்யப் பட்டுள்ளனர். ஆகவே இதை ஒரு "கம்யூனிச எதிர்ப்பு படம்" என்றும் கருதிக் கொள்ள வாய்ப்புண்டு.

அந்தோ பரிதாபம்! மேற்குலகில் நீங்கள் ஆவலுடன் கண்டு களித்த "கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்க்கும்" தொலைக்காட்சித் தொடர், கம்யூனிச நாடுகளில் அரசு அனுமதியுடன் ஒளிபரப்பானது. அதைப் பார்த்த மக்களில் ஒருவர் கூட இது தமது அரசை கிண்டல் அடிக்கிறது என்று நினைக்கவில்லை. அல்லது தொலைக்காட்சித் தொடரின் தூண்டுதலால் கிளர்ந்தெழவில்லை.

பிற்காலத்தில், சோஷலிச அரசுகள் வீழ்வதற்கான காரணம் வேறு. மேற்கைரோப்பாவில் இருந்து ஒலி/ஒளிபரப்ப பட்ட வானொலி, தொலைக்காட்சிகளில், "மேற்கில் பாலும், தேனும் ஆறாக ஓடுவதாக" பிரச்சாரம் செய்தனர். மக்கள் அதை உண்மை என்று நம்பினார்கள். அங்கு சென்றால் பணத்தில் மிதக்கலாம் எனக் கனவு கண்டார்கள்.

மேற்கைரோப்பாவில் அகதி தஞ்சம் கோரியவர்களுக்கு உடனே வீடும், வேலையும் கிடைக்கிறது. குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகி விட்டார்கள். சொந்தமாக வீடு, கார் வாங்கி வசதியாக வாழ்கிறார்கள். இப்படியான கதைகளை அவிழ்த்து விட்டால் யாருக்கு தான் ஆசை வராது?

இது ஒரு வகையில் இன்றைய இலங்கை, இந்திய மக்களின் மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. மேற்குலகில் தான் சொர்க்கம் இருப்பதாக எத்தனை பேர் நம்புகிறார்கள்? எப் பாடு பட்டாவது ஒரு மேற்கத்திய நாட்டிற்கு சென்று விட்டால் பணக்காரர் ஆகலாம் என கனவு காண்பவர் எத்தனை பேர்?

கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும், மத்தியதர வர்க்க இளைஞர்களிடம், அவர்களது மேட்டுக்குடி சிந்தனையை சுட்டிக் காட்டினால், பின்வருமாறு பதில் கூறுவார்கள்: "என்னைப் பற்றி தெரியுமா? நானும் ஏழைக் குடும்பத்தில் தான் பிறந்தேன்" என்று சொல்வார்கள்.

ஏழைக் குடும்பமோ, பணக்கார குடும்பமோ, பிறப்பினால் ஒருவரும் வர்க்க உணர்வு பெறுவதில்லை. ஏழையாக பிறந்தவர் முதலாளித்துவத்தை ஆதரிக்கலாம். அதே நேரம், மேட்டுக்குடியில் பிறந்தவர் கம்யூனிசத்தை ஆதரிக்கலாம். அதற்கு உண்மையில் நடந்த குட்டிக் கதையை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஒரு தடவை, சோவியத் யூனியன் அதிபர் குருஷேவும், சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சூ என் லாயும் சந்தித்துப் பேசினார்கள். அந்த நேரத்தில், குருஷேவ் சோவியத் யூனியனில் முதலாளித்துவ சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தினார். அதற்கு மாறாக, மாவோவின் சீனா, கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில், கடுமையான வர்க்கப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

அப்படியான ஒரு நேரத்தில், குருஷேவ் தன்னை நியாயப் படுத்த வேண்டிய தேவையேற்பட்டது. "நான் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். நீங்களோ வசதியான மேட்டுக்குடியில் பிறந்தவர்." என்று குருஷேவ் சூ என் லாயிடம் கூறினார். அதற்குப் பதிலளித்த சூ என் லாய்: "அது உண்மை தான். ஆனால், எமக்கிடையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது பாருங்கள். இருவருமே எமது சொந்த வர்க்கத்திற்கு துரோகம் செய்துள்ளோம்!"

Monday, February 04, 2019

பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்

பிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌து. இர‌ண்டாம் உல‌க‌ப் போர் கால‌த்தில், குறிப்பிட்ட‌ள‌வு கால‌னிய‌ எதிர்ப்புப் போராட்ட‌ம் எதுவும் ந‌ட‌க்க‌வில்லை. ஆனால், கால‌னிய‌ ப‌டையில் இருந்த‌ இராணுவ‌ வீர‌ர்க‌ளின் க‌ல‌க‌ம் ஒன்று இட‌ம்பெற்ற‌து. அந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இன்று வ‌ரையும் இருட்ட‌டிப்பு செய்ய‌ப்ப‌ட்டு வருகின்ற‌து.

கால‌னிய‌ கால‌ இல‌ங்கையில் சிங்க‌ள‌-த‌மிழ் பூர்ஷுவா வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌ "த‌லைவ‌ர்க‌ள்" பிரிட்டிஷ் எஜ‌மானுக்கு விசுவாச‌மான‌ அடிமைக‌ளாக‌ ந‌ட‌ந்து கொண்ட‌ன‌ர். அப்போதே ட்ராஸ்கிச‌ பாதையில் சென்ற‌ LSSP என்ற‌ சோஷ‌லிச‌க் க‌ட்சி, ம‌ற்றும் க‌ம்யூனிஸ்டுக‌ள், இடதுசாரிக‌ள் ம‌ட்டுமே இல‌ங்கைக்கு சுத‌ந்திர‌ம் வேண்டுமென்ற‌ கோரிக்கையை முன்வைத்த‌னர்.

சிறில‌ங்கா இராணுவ‌த்தின் முன்னோடியான‌ Ceylon Defence Force (CDF) என்ற‌ ப‌டையில் பிரிட்டிஷ் அதிகாரிக‌ளின் கீழ் இல‌ங்கை வீர‌ர்க‌ளும் சேர்த்துக் கொள்ள‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதில் ப‌ல‌ சோஷ‌லிஸ்டுக‌ள்‌ இருந்த‌ன‌ர். பெரும்பாலும் LSSP ஆத‌ர‌வாள‌ர்க‌ள். உல‌க‌ப்போரை ப‌ய‌ன்ப‌டுத்தி விடுத‌லைப் போரை ந‌ட‌த்துவ‌த‌ற்கு த‌க்க‌ த‌ருண‌ம் பார்த்துக் காத்திருந்த‌ன‌ர்.

அன்று ந‌ட‌ந்த‌ போரில், ம‌லேசியாவை ஜ‌ப்பானிய‌ரிட‌ம் இழ‌ந்த‌ பிரிட்டிஷார், என்ன‌ விலை கொடுத்தேனும் கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இல‌ங்கைத் தீவை பாதுகாக்க‌ முடிவெடுத்த‌ன‌ர். பிர‌தான‌மாக‌ ர‌ப்ப‌ர் உற்ப‌த்தியால் கிடைத்த‌ வ‌ருமான‌த்தை இழ‌க்க‌ விரும்ப‌வில்லை. அத‌னால் சுமார் 75 CDF வீர‌ர்க‌ள், கொகோஸ் தீவுக‌ளில் இற‌க்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

இன்று அவுஸ்திரேலியாவுக்கு சொந்த‌மான‌ கொகோஸ் தீவுக‌ள், இந்து ச‌முத்திர‌த்தில், ம‌லேசியாவுக்கும் இல‌ங்கைக்கும் ந‌டுவில் அமைந்துள்ள‌ன‌. தீவுவாசிக‌ள் ம‌லே மொழி பேசும் இஸ்லாமிய‌ர் ஆவ‌ர். ஏற்க‌ன‌வே ம‌லேசியா, சிங்க‌ப்பூரை கைப்ப‌ற்றிய‌ ஜ‌ப்பானிய‌ ப‌டைக‌ள், கொகோஸ் தீவுக‌ளையும் பிடித்திருந்தால், இல‌குவாக‌ இல‌ங்கை மீது ப‌டையெடுத்திருப்பார்க‌ள். அதைத் த‌டுப்ப‌தே பிரிட்டிஷாரின் திட்ட‌ம்.

எதிர்பாராத‌ வித‌மாக‌, கொகோஸ் தீவுக‌ளில் நிலைகொண்டிருந்த‌ இல‌ங்கை இராணுவ‌ வீர‌ர்க‌ள் க‌ல‌க‌ம் செய்து தீவின் க‌ட்டுப்பாட்டை கைப்ப‌ற்ற‌ முய‌ன்ற‌ன‌ர். 8 மே 1942, அன்று இர‌வு க‌ல‌க‌ம் செய்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள், தொலைத் தொட‌ர்பு நிலைய‌த்தை கைப்ப‌ற்றி, பிரிட்டிஷ் அதிகாரிக‌ளை கைது செய்ய‌ முய‌ன்ற‌ன‌ர். ஆனால், இறுதி நேர‌த்தில் ஆயுத‌ங்க‌ள் செய‌ற்ப‌ட‌ ம‌றுத்த‌ன‌. அத‌னால் க‌ல‌க‌ம் முறிய‌டிக்க‌ப் ப‌ட்ட‌து.

க‌ல‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு, இல‌ங்கைக்கு கொண்டு செல்ல‌ப்ப‌ட்டு, கொழும்பு வெலிக்க‌டை சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். க‌ல‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள், கொகோஸ் தீவுக‌ளை கைப்ப‌ற்றி, பின்ன‌ர் அதை ஜ‌ப்பானிய‌ ப‌டையின‌ரிட‌ம் ஒப்ப‌டைக்க‌ திட்ட‌ம் திட்ட‌ம் தீட்டிய‌தாக‌ சொல்ல‌ப் ப‌ட்ட‌து. சில‌நேர‌ம் அப்ப‌டி ஒரு நோக்க‌ம் இருந்தாலும் அத‌ற்கு எந்த‌ ஆதார‌மும் இல்லை.

க‌ல‌க‌த்திற்கு த‌லைமை தாங்கிய‌ பெர்னான்டோ என்ப‌வ‌ரும், வேறு இர‌ண்டு பேரும் தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ன‌ர். பெர்னான்டோ விசார‌ணையின் போது த‌ன் மீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌ தேச‌த்துரோக‌ குற்ற‌ச்சாட்டை ம‌றுத்து தான் ஒரு நாட்டுப்ப‌ற்றாள‌ன் என்று வாதாடினார். அவ‌ர் தூக்கில் தொங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் க‌டைசியாக‌ சொன்ன‌ வாச‌க‌ம்: "வெள்ளைய‌ருக்கு விசுவாசமாக‌ இருப்ப‌தென்ப‌து போலித்த‌ன‌மான‌து"

இந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இல‌ங்கையின் ச‌ரித்திர‌ பாட‌நூல்க‌ளில் குறிப்பிட‌ப் ப‌ட‌வில்லை என்ப‌து ஆச்ச‌ரிய‌த்திற்குரிய‌து. சிறில‌ங்கா அர‌சோ, ஊடக‌ங்க‌ளோ நினைவுகூர்வ‌தில்லை. (விதிவில‌க்காக‌, LSSP க‌ட்சியின‌ர் இன்றைக்கும் நினைவுகூர‌ ம‌ற‌ப்ப‌திலை.) அத‌ற்குக் கார‌ண‌ம் என்ன‌?

இராணுவ‌க் க‌ல‌க‌த்தின் பின்ன‌ர் விழிப்ப‌டைந்த‌ பிரிட்டிஷார், இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு அதிக‌ ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்கி கால‌னிய‌ விசுவாசிக‌ளாக‌ வைத்துக் கொண்ட‌ன‌ர். குறிப்பாக‌, இந்திய‌ர்க‌ளை விட‌ இல‌ங்கைய‌ர்க‌ள் கால‌னிய‌ ஆட்சியாள‌ர்க‌ளினால் ந‌ன்றாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். அத‌ன் விளைவாக‌, இன்றும் ப‌ல‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் பிரித்தானியாவுக்கு விசுவாச‌மாக‌ இருப்ப‌தை க‌ண்கூடாக‌க் காண‌லாம்.

அத்துட‌ன், சுத‌ந்திர‌ம் அடைந்த‌ பின்ன‌ர், பிரிட்டிஷாருக்கு விசுவாச‌மான‌ உள்நாட்டு பூர்ஷுவா வ‌ர்க்க‌ம் தான் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள‌து. சோஷ‌லிஸ்டுக‌ள் தான் இல‌ங்கையில் சுத‌ந்திர‌த்திற்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள் என்ற‌ உண்மையை மக்க‌ளுக்கு தெரிய‌ விடாம‌ல் மூடி ம‌றைத்து வ‌ந்த‌ன‌ர்.

Sunday, February 03, 2019

"என் முதல் ஆசிரியர்" - பெண்களை படிக்க வைத்த கம்யூனிச "கொடுங்கோன்மை(?)"


"என் முதல் ஆசிரியர்"- மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை(?)" பற்றி கூறும் குறுநாவல். கிர்கிஸ்தான் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது. பெண்களின் கல்வி உரிமை தொடர்பாக அக்கறை கொண்டோர் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல்.

 சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆப்கான் பெண்களின் கல்வி உரிமை பற்றி உலகம் முழுவதும் விவாதித்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல முடியாத அந்நாட்டு பெண்களின் அவலங்களை எண்ணிப் பரிதாபப் பட்டார்கள். ஆனால், இன்று ஆப்கான் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கபடவேடதாரிகள், அன்று ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார்கள். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல், கூடவே பெண்களின் கல்வி உரிமையையும் எதிர்த்தார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அதே இனத்தவரையும், மத, பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற அயல்நாடுகளில் ஏறத்தாள அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். அந்தக் குடியரசுகள் முன்னர் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதிகளாக இருந்த காரணத்தால் தான் இது சாத்தியமானது என்ற உண்மையை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

பெரும்பாலும் பின்தங்கிய நாடோடி சமூக மக்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளில், கம்யூனிசப் புரட்சிக்கு முன்னர் பள்ளிக்கூடங்களே இருக்கவில்லை. புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ப்பதை மட்டுமே பிரதானமாக கருதிய அந்த மக்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெண்கள் கல்வி கற்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம் இருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையும் பருவமடைந்ததும் பெற்றோரால் மணம் முடித்து வைக்கப் பட்டாள். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் என்றால், வசதி படைத்த வயதான ஆணுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக வாழ்க்கைப் பட வேண்டி இருக்கும். இந்த உண்மைகளின் அடிப்படையில் எழுதப் பட்டது தான் "என் முதல் ஆசிரியர்" எனும் குறுநாவல்.

இந்தக் கதை முழுவதும் ரஷ்யப் புரட்சிக்கு பின்னரான காலத்தில் நடக்கிறது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த கிர்கீசிய மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், நாடோடி மக்கள் சமூகங்களை கொண்ட கிர்கிஸ்தான் பிற்காலத்தில் தனியான குடியரசு ஆகியது. அயலில் உள்ள பிற மத்திய ஆசியக் குடியரசுகளுடன் ஒப்பிட்டால் கூட, கிர்கிஸ்தான் பிராந்தியம் நாகரிகத்தில் பல நூறாண்டுகள் பின்தங்கி இருந்தது.

இந்த நாவலில் வரும் தூய்ஷன் எனும் ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னர், தான் வாழும் குர்கிரி கிராமத்தில் ஒரு பாடசாலையை நிர்மாணிக்கிறார். அங்குள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதில் அவர் பட்ட கஷ்டங்களை இந்த நாவல் விபரிக்கிறது.

அந்தப் பாடசாலையில் படிக்கும் கெட்டிக்கார மாணவியான அல்டினாய் என்ற பதினைந்து வயது சிறுமி, அவளது விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினரால் கட்டாயக் கலியாணம் செய்து வைக்கப் படுகிறாள். அதைத் தடுத்த ஆசிரியர் தூய்ஷன் அடித்து நொறுக்கப் படுகிறார்.

துள்ளித் திரிந்த பள்ளிச் சிறுமியான அல்டினாய், ஒரு வயதான ஆணுக்கு மனைவியாக வீட்டு அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள். ஆசிரியர் தூய்ஷன் செம்படை வீரர்களை கூட்டிக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்கு வந்து காப்பாற்றுகிறார். பின்னர் அவளை தொலைதூர நகரத்திற்கு அனுப்பி உயர்கல்வி படிக்க வைக்கிறார்.

நகரத்தில் விடுதியில் தங்கி படிக்கும் அல்டினாய் மறக்காமல் தூய்ஷனுக்கு கடிதங்கள் எழுதுகிறாள். அவற்றில் தனது காதலை மென்மையாக வெளிப்படுத்துகிறாள். இருப்பினும் ஆசிரியர் தூய்ஷனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சில வருடங்களுக்கு பின்னர் குக்கிரி கிராமத்திற்கு திரும்பும் அல்டினாய் அங்கு தூய்ஷனை காண முடியாமல் ஏமாற்றம் அடைகிறாள். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டதால் தூய்ஷன் போர்முனைக்கு சென்று விட்டதாக அறிந்து கொள்கிறாள்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் வந்த சோவியத் அரசு, பிற நாட்டு அரசுக்களைப் போன்று "உள்ளூர் மக்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து" ஒதுங்கி இருக்கவில்லை. அப்படி ஒதுங்கி இருந்தால், கிர்கிஸ்தான் இன்று இன்னொரு ஆப்கானிஸ்தானாக காட்சி அளித்திருக்கும். உண்மையில், சோவியத் அரசு தனி மனித உரிமைகளுக்கு எந்தளவு மதிப்பளித்துள்ளது என்பதை இந்த நாவலை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்த நாவலில் வரும் பாடசாலை சுவரில் லெனின் படம் மாட்டப் பட்டிருந்தது. லெனின் மரணமடைந்த நேரம் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இது போன்ற பகுதிகளை காட்டி, "பார்த்தீர்களா? கம்யூனிசப் பிரச்சாரம்!" என்று சில விஷமிகள் குறை கூறலாம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கி இருந்த, எழுத்தறிவற்ற மக்கள் கல்வி கற்க வாய்ப்பளித்த, சோவியத் அரசையும், அதன் ஸ்தாபகரான லெனினையும் அந்த மக்கள் போற்றுவதில் என்ன பிழை இருக்கிறது?
நூலில் இருந்து ஒரு பகுதி:  
//குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடங்களுக்கு போக வேண்டும் என்று கூறும் இந்த அறிவிப்புக்கு விரோதமாக நீங்கள் நிற்கிறீர்களா? இதில் சோவியத் அரசாங்க முத்திரை குத்தப் பட்டுள்ளது. உங்களுக்கு வயலும் தண்ணீரும் கொடுத்தது யார்? உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்?.... நாமனைவரும் ஏழை விவசாயிகள். நம் வாழ்க்கை முழுவதும் நம்மை இழிவுபடுத்தி உதைத்துத் தள்ளினார்கள். நாம் கும்மிருட்டில் இதுவரை வாழ்ந்து விட்டோம். சோவியத் அரசாங்கம் நாம் ஒளியைப் பார்க்க வேண்டும் என்கிறது. இதற்காகவே நம்முடைய பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்கிறேன்.// 

பிற்குறிப்பு:
இந்த நாவல் சிங்களத்தில் "குரு கீதய" என்ற பெயரில் ஒரு திரைப்படமாக வந்துள்ளது.

பிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்

அந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro), 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு மாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்கிய கிறிஸ்தவ மதகுரு.

"கம்யூனிசமும், மதமும் வேறு வேறான சித்தாந்தங்கள்" என்ற தவறான எண்ணத்தை, பிரேசில் நாட்டு முன்னாள் அடிமைகளும், ஏழை விவசாயிகளும் உடைத்தெறிந்தனர். Bahia மாநிலத்தில், Canudos எனுமிடத்தில், பிரேசிலின் முதலாவது கம்யூனிச சமுதாயத்தை உருவாக்கினார்கள். 

சுமார் 25000 பேரளவில், அந்தோனியோ என்ற கிறிஸ்தவ மதகுருவின் தலைமையில் அந்த புதிய நகரத்தை தாமே உருவாக்கிக் கொண்டனர். ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்கும் ஒரே வழியாக, அந்தோனியோ "கம்யூனிச கிறிஸ்தவத்தை" போதித்து வந்தார். அவரின் போதனைகளால் கவரப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஏழை விவசாயிகளும், விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமைகளும், வெறுந் தரையில் கனுடோஸ் என்ற புதிய நகரத்தை உருவாக்கி சாதித்துக் காட்டினார்கள். 

அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள், அவரவர் வாழ்க்கைக்கு தேவையான அளவு வேலை செய்தார்கள். வருமானத்தை தமக்குள் பகிர்ந்து கொண்டார்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட கனுடோஸ் கம்யூன் நகரத்தை மேற்பார்வையிட பொலிஸ் இருக்கவில்லை. குற்றச் செயல்கள் எதுவும் நடப்பதில்லை. அதனால் நீதிமன்றமும் இருக்கவில்லை. 

சுமார் 25000 க்கும் அதிகமான மக்கள், பிரேசில் அரசிடம் தங்கியிராமல், தாமாகவே தமது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். மக்கள் தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்ய கற்றுக் கொண்டால், பேராசைக்கார முதலாளிகள் மூலதனத்தை திரட்ட முடியுமா? முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்யும் பிரேசில் அரசு, இராணுவத்தை அனுப்பியது. 

அரச படைகள், கனுடோஸ் நகரை சுற்றி வளைத்தன. துருப் பிடித்த துப்பாக்கிகளை வைத்திருந்த மக்களால், நவீன ஆயுதமேந்திய இராணுவத்தை எதிர்த்து போராட முடியவில்லை. அந்தப் போரில், ஆயிரக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். கம்யூனிச மதகுரு அந்தோனியோ கொன்செஹெரோ பிடிபட்டு சிரச்சேதம் செய்யப் பட்டார். 

"மனிதர்கள் இயற்கையாகவே சுயநலவாதிகள்" என்ற பொய்யை பரப்பி வரும், ஆளும் வர்க்கமும், முதலாளித்துவ ஆதரவாளர்களும், இது போன்ற தகவல்களை மக்களுக்கு வேண்டுமென்றே மறைக்கப் பார்ப்பார்கள். 

மேலதிக விபரங்களுக்கு இந்த திரைப் படத்தை பார்க்கவும்: 
The Battle of canudos (Portuguese) 
https://www.youtube.com/watch?v=HJWn9ySyqEc

Saturday, February 02, 2019

ஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை


ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, தமிழரின் மானம் சந்தி சிரித்தது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், காட்டுப் பகுதியில், பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் சடலம் ஒன்று, அரைவாசி எரிந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டது. ஆரம்பத்தில், வெள்ளையின நாஜி தீவிரவாதிகளே அந்தக் கொலையை செய்ததாக, எல்லோராலும் நம்பப் பட்டது. மரணமடைந்த பெண்ணின் பெற்றோரும் அவ்வாறே வாக்குமூலம் கொடுத்தனர்.

இருப்பினும், ஏதோ ஒரு சந்தேகத்தில் துப்புத் துலக்கிய ஜெர்மன் பொலிஸ், உண்மையான கொலையாளி அந்தப் பெண்ணின் தகப்பன் என்பதை கண்டுபிடித்தது. கொலைக்கான காரணம் என்னவென்பதையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.

உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பருவ மங்கை, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனை காதலித்து வந்தார். அந்தக் காதலை பொறுக்க முடியாத தந்தையே, தனது மகளை அடித்துக் கொலை செய்திருக்கிறார். உடலை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் கொண்டு சென்று போட்டு விட்டு, அவசர அவசரமாக தகனம் செய்து விட்டு வந்திருக்கிறார். நவ-நாசிகளை கை காட்டி விட்டால், குடும்பத்திற்குள் நடந்த கௌரவக் கொலையை மறைக்கலாம் என்ற எண்ணம் ஈடேறவில்லை.

துருக்கிய சமூகத்தில் கௌரவக் கொலைகள் நடப்பது, ஏற்கனவே ஜெர்மானியர்களுக்கு தெரிந்த விடயம். கௌரவக் கொலைகளை செய்வதில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, தமிழர்களும் நிரூபித்தார்கள்.

இந்த சம்பவம் குறித்து, உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் கதைத்த பொழுது, அவர்கள் சம்பந்தப்பட்ட தந்தையை குற்றவாளியாக கருதவில்லை என்பது தெரிந்தது. "மகளை கண்டித்து அடிக்கும் பொழுது, தற்செயலாக படாத இடத்தில் பட்டு இறந்து விட்டதாக..." வக்காலத்து வாங்கினார்கள்.

ஜெர்மனியில், பெற்றோர் பிள்ளைகளை அடிப்பது கூட குற்றம் என்பதையும் மறந்து, காதலித்த பிள்ளையிடம் தவறு காணும் அளவுக்கு தான், புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சமூகத்தில், உண்மையான காதல் சினிமாவில் மட்டுமே உள்ளது. நிஜத்தில் அது சாதிய கட்டுமானங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றது. சாதி கடந்த காதல், பல போராட்டங்களுக்கு பின்னரே நிலைத்து நிற்கின்றது. இளவரசனின் தற்கொலை/கொலை, அந்தப் போராட்டத்தில் ஒரு மைல் கல். அது வெறும் காதல் கதையின் சோக முடிவு அல்ல. சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் நிகழ்ந்த திருப்புமுனை. முத்துக்குமார், செங்கொடியின் மரணங்கள் போன்று, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனச் சாட்சியை உலுக்கிய தியாக மரணம்.

இன்றைக்கும், தமிழர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றினாலும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சாதி பார்த்து தான் திருமணம் செய்து கொள்கின்றனர். காதலிக்கும் பொழுதே, சாதி பற்றி விசாரிக்கின்றனர். திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும், சாதிப் பாகுபாடு காரணமாக பிரிந்து செல்கின்றனர். இது போன்ற பல சம்பவங்களை நேரில் கண்டிருக்கிறேன். 

இது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. "தமிழீழப் போராட்டம் காரணமாக சாதி ஒழிந்து விட்டது", என்று கூறிக் கொள்ளும் ஈழத் தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனை மறுப்பவர்கள், ஒன்றில் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள், அல்லது சாதிய கட்டுமானத்தை பாதுகாப்பவர்களாக இருப்பார்கள்.