Showing posts with label மேற்குலகம். Show all posts
Showing posts with label மேற்குலகம். Show all posts

Wednesday, July 02, 2014

அரபு - கிறிஸ்தவ இனச் சுத்திகரிப்பு : மேற்குலக "கிறிஸ்தவ" நாடுகள் பாராமுகம்


ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில், அரபி மொழி பேசும் கிறிஸ்தவர்கள், இனப்படுகொலை அல்லது இனச் சுத்திகரிப்பு செய்யப் படுகின்றனர். ஆனால், அமெரிக்கா உட்பட எந்தவொரு மேலைத்தேய கிறிஸ்தவ நாடும், அது குறித்து அக்கறையற்று இருக்கின்றன. அரபு நாடுகளில் இருந்து, "கிறிஸ்தவர்களை ஒட்டுமொத்தமாக இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான சர்வதேச சதி வலை" பின்னப் பட்டுள்ளதாக, குறிப்பாக ஈராக் கிறிஸ்தவர்கள் அஞ்சுகின்றனர்.

ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், ஒவ்வொரு பிரஜையும் சர்வாதிகாரிக்கு விசுவாசமாக இருக்கிறார்களா என்பது மட்டுமே முக்கியமாக கருதப் பட்டது. அதனால் கிறிஸ்தவ சிறுபான்மையினர் எந்த தொந்தரவும் இன்றி வாழ அனுமதிக்கப் பட்டனர். 2003 ம் ஆண்டு, அமெரிக்கப் படையெடுப்புடன் நிலைமை தலைகீழாக மாறியது. அமெரிக்கா ஒரு "கிறிஸ்தவ நாடு" என்பதால், ஈராக் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கும் என்று யாராவது அப்பாவித்தனமாக நம்பினால் அவர்கள் ஏமாந்து போவார்கள்.

ஈராக் அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த காலத்தில், ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். அந்த சமூகம் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களில், திட்டமிட்ட வகையில் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டார்கள். உலகில் கிறிஸ்தவ மதம் தோன்றிய காலத்தில் இருந்து நிலைத்து நின்ற, ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயங்கள், குண்டு வைத்து தகர்க்கப் பட்டன. கிறிஸ்தவ பாதிரியார்கள் கொலை செய்யப் பட்டனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் நடக்கும் பொழுது, அமெரிக்க "கிறிஸ்தவப்" படைகள் என்ன செய்து கொண்டிருந்தன? ஒன்றுமேயில்லை. கையைக் கட்டிக் கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில், ஈராக்கில் ஒன்றரை மில்லியன் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். இன்று வெறும் மூன்று இலட்சம் கிறிஸ்தவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று விட்டனர். ஈராக் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் புராதன கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த அசிரிய கிறிஸ்தவர்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களாக, தொடர்ச்சியான வாழிடத்தை கொண்டவர்கள். இன்றைய ஈராக், சிரியாவில் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அசிரிய இனத்தவர்களின் வழித்தோன்றல்கள் என்று, ஈராக்கிய கிறிஸ்தவர்கள் தம்மை அழைத்துக் கொள்கின்றனர்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னரே, ஈராக் ஒரு கிறிஸ்தவ நாடாக இருந்தது. இறைதூதர் முகமது காலத்தில் நடந்த அரேபியப் படையெடுப்புகளின் பின்னரும், கிறிஸ்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வரியை செலுத்தி விட்டு, அமைதியாக தங்கள் வேலையை பார்க்க முடிந்தது. அனேகமாக, அன்று ஈராக்கில் வாழ்ந்த பெரும்பான்மை கிரேக்க கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.  ஆனால், அசிரிய கிறிஸ்தவர்கள் தமது தனித் தன்மையை தொடர்ச்சியாக பேணி வருவதாக, இன்றைக்கும் பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர். 

சதாம் ஹுசைன், அவருக்கு முந்திய இராணுவ சர்வாதிகாரிகள் ஆண்ட காலகட்டத்தில், பாத் கட்சியின் அரபு தேசியவாத சித்தாந்தம் கோலோச்சியது. ஆகையினால், முஸ்லிம்களுடன், கிறிஸ்தவர்களும் ஒரே அரேபிய தேசிய இனத்தை சேர்ந்தவர்களாக கருதப் பட்டனர். பல கிறிஸ்தவர்கள், சதாம் அரசில் முக்கிய பதவிகளை வகிக்கும் அளவிற்கு சுதந்திரம் கிடைத்திருந்தது.

அமெரிக்கர்கள் ஈராக்கில் "ஜனநாயகத்தை கொண்டு வந்து நிலைநாட்டிய பின்னர் தான்", முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இன, மத முரண்பாடுகள் கூர்மை அடைந்தன. இன்றைய ஈராக்கில் பெயரளவில் மட்டுமே ஒரு ஜனநாயக அரசு இருக்கிறது. ஆனால், ஜனநாயகம் வந்த பின்னர் தான், முஸ்லிம்-கிறிஸ்தவ பகை முரண்பாடுகள் தீவிரமடைந்தன. முஸ்லிம்களுக்கு இடையிலும் சுன்னி - ஷியா பகை முரண்பாடு சமூகத்தை பிளவு படுத்தியுள்ளது. 

மதத்தின் பெயரில், அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப் பட்டனர். அதை விட, ஒவ்வொரு இனக்குழுவும் ஆதிக்கம் செலுத்திய இடங்களில், பிரதேசவாதம் தலை தூக்கியுள்ளது. நிலப்பிரபுக்கள் தமக்கு விசுவாசமான கூலிப் படைகளை வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்தனர். இவை எல்லாம் அமெரிக்கா கொண்டு வந்த ஜனநாயகத்தின் தீய விளைவுகள். அமெரிக்க ஜனநாயகம், சாதாரண ஈராக் மக்களுக்கு எந்த விதமான நன்மையையும் கொண்டு வரவில்லை. 

ஈராக் போர் தொடங்கிய நாள் முதல், அங்கு வாழும் குர்து இனத்தவரை பாதுகாப்பதற்கு முன்வந்த அமெரிக்கா, எதற்காக கிறிஸ்தவ சமூகத்தை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தது? ஒவ்வொரு ஈராக்கிய கிறிஸ்தவரும் அன்றாடம் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இது ஒரு சர்வதேச சதியாக இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

மத்திய கிழக்கு அரபு நாடுகள் முன்னொரு காலத்தில் கிறிஸ்தவ நாடுகளாக இருந்த உண்மை வெளியுலகில் பலருக்குத் தெரியாது. இன்றைக்கும் அரபு நாடுகளில் கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருவது குறித்தும் அறியாமல் இருக்கின்றனர். மேலைத்தேய "கிறிஸ்தவ" நாடுகளில் வாழும் ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கே அந்த அறிவு கிடையாது என்றால், உலகின் பிற பாகங்களில் வாழும் மக்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

ஈராக்கில், சிரியாவில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போர்களில் கிறிஸ்தவர்கள் குறி வைத்து தாக்கப் படுவதும், படுகொலை செய்யப் படுவதும் அதிகரித்து வருகின்றது. இதனால், உயிரச்சம் காரணமாக எஞ்சிய கிறிஸ்தவர்களும் அகதியாக வெளியேறி வருகின்றனர். உண்மையில் அதுவொரு திட்டமிட்ட இனப் படுகொலை அல்லது இனச் சுத்திகரிப்பு. இது குறித்து மேற்குலகம் பாராமுகமாக இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்க வேண்டும்.

மத்திய கிழக்கு அரபு நாடுகளில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டால், அங்கு ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள் என்ற சுவடுகள் அழிக்கப் பட்டு விடும். பின்னர் அவை, சவூதி அரேபியா போன்று நூறு சதவீத முஸ்லிம் நாடுகளாக மாறி விடும். அதைத் தான், மேற்கத்திய நாடுகளும் எதிர்பார்க்கின்றன. ஏனென்றால், அப்போது தான் கிறிஸ்தவ மதத்தின் பூர்வீகம் ஐரோப்பா என்று உரிமை கோரலாம். இன்றைக்கும் பலர் அப்படித் தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, April 19, 2014

நொறுங்கிக் கொண்டிருக்கும் மேற்குலகத் திமிர்



மீண்டும் எழுந்து வரும் உக்ரைனிய கம்யூனிஸ்ட் கட்சி.
"விழ விழ எழுவோம், ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்"
"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை" மாதிரி, உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக் கும்பலுக்கு உதவச் சென்ற மேற்குலகிற்கு, அடி மேல் அடி விழுவதால் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. உக்ரைனை வைத்து மணல் கோட்டை கட்டிய ஏகாதிபத்திய கனவுகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. தனது தோல்வி கண்டு பொறுக்க முடியாத மேற்குலகம், பொய்களையும், கட்டுக்கதைகளையும் பிரச்சாரம் செய்து வருகின்றது.

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சி காரணமாக, அந்த மாநிலம் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு" என்ற பெயரில் தனி நாடாக இயங்கப் போவதாக அறிவித்தது. அங்குள்ள அரசாங்க கட்டிடங்கள், தொலைக்காட்சி அஞ்சல் கோபுரம் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் செல்வாக்கு, மக்கள் மத்தியில் அதிகரிப்பதைக் கண்டு பொறுக்க முடியாத மேற்குலகமும், கீவில் உள்ள பாசிச அரசும் சேர்ந்து ஒரு சதித் திட்டம் தீட்டின. தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசின் பெயரில், யூதர்களுக்கு எதிராக, போலியான துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப் பட்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசில் வாழும் யூதர்கள் அனைவரும், உடனடியாக பதிவு செய்ய வேண்டும். பதிவுத் தொகையாக முப்பது டாலர் கட்ட வேண்டும்..." என்று அதிலே எழுதப் பட்டிருந்தது. 

ஒரு யூத ஆலயத்தில் ஒட்டப் பட்டிருந்த துண்டுப்பிரசுரம், டிவிட்டர் இணையம் மூலம் பரவலாக்கப் பட்டது. குறிப்பாக, உக்ரைனிய பாசிச அரசை ஆதரிக்கும் அரசியல் ஆர்வலர்கள், அதனை பரப்புவதில் ஆர்வமாக இருந்துள்ளனர். மேற்கத்திய ஊடகங்களிலும் அந்தத் தகவல் வெளியானது. ஜெனீவாவில் ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் லவ்ரோவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் ஜோன் கெரி, "யூத விரோத துண்டுப்பிரசுரம்" குறித்து தனது கண்டனங்களை தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாள், யூதர்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரம் போலியானது என்ற உண்மை, அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. கிழக்கு உக்ரைனிய மாநிலமான தொனியேட்ஸ்க்கில் வாழும் யூதர்களின் கருத்தும் அதுவாக உள்ளது. இது அநேகமாக, உக்ரைனிய அரச கைக்கூலிகளின் வேலையாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். (பார்க்க: Antisemitic flyer 'by Donetsk People's Republic' in Ukraine a hoax)

மேற்குலக கைக்கூலிகள் தாமாகவே ஒரு போலியான துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிட்டு விட்டு, உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. அதாவது, தோல்விக்கு மேலே தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் உக்ரைனிய பாசிஸ்டுகளும், அவர்களுக்கு முண்டு கொடுக்கும் மேற்குலகமும் செய்வதறியாது நிற்கின்றனர். அவர்களது தான்தோன்றித்தனமான செயல்கள் எல்லாம், கடைசியில் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விடுகின்றன.

ஜெனீவாவில் நடந்த, ரஷ்ய, அமெரிக்க, உக்ரைனிய, ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப் பட்ட தீர்மானம், உக்ரைன் நெருக்கடியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. கிழக்கு உக்ரைனில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அவற்றைக் காலி செய்து விட்டு, ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெனீவாத் தீர்மானம் கூறுகின்றது.

ஆனால், கிழக்கு உக்ரைன் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரு அடி கூட நகரவில்லை. அவர்களைக் காரணம் கேட்டால், "ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட லாவ்ரோவ், ரஷ்யாவுக்கு மட்டுமே வெளிநாட்டு அமைச்சர். நாங்கள் உக்ரைனியர்கள்." என்று சொல்கின்றனர். அதே நேரம், "உக்ரைனிய தலைநகர் கீவில், அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள Euromaidan ஆர்ப்பாட்டக் காரர்கள் முதலில் வெளியேற வேண்டும்" என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைனிய அரசாங்கத்தை, சட்டபூர்வமான அரசாக ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. அவர்களை சதிப்புரட்சியாளர்கள் என்று கூறி, அனைத்துத் தொடர்புகளையும் முறித்துக் கொண்டுள்ளது. உக்ரைனிய ஆட்சியாளர்களும், ஆர்ப்பாட்டங்கள் செய்து, அரச கட்டிடங்களை ஆக்கிரமித்து தான், ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

அவர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் மறுத்து வருகின்றன. அதனால், கிழக்கு உக்ரைனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மேல் செல்வாக்குப் பிரயோகிக்கும் அளவிற்கு, ரஷ்யாவும் நடந்து கொள்ளவில்லை. அது தன்னை ஒரு சர்வதேச சமூகத்தின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது.

இதற்கிடையே, ரஷ்யா மீது மென்மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகின்றது. அதற்கு எதிர்வினையாற்றிய ரஷ்ய அரசு, "அமெரிக்கா தன்னை வீட்டு வேலை செய்யாத பள்ளிக்கூட மாணவன் போன்று நடத்துவதாகவும், அது இராஜதந்திர பொறிமுறை ஆகாது" என்று கூறியுள்ளது.

அமெரிக்கா பயமுறுத்துவது போன்று, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், எந்தளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குறி. ஏனென்றால், அமெரிக்க கார் கம்பனிகள், ரஷ்ய சந்தையில் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. டச்சு- ஆங்கிலேயே ஷெல் நிறுவனம், ரஷ்ய எரிவாயு துறையில் முதலிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றது. இதற்கான ஒப்பந்தம் ஒன்றுக்காக, ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இவர்கள் யாரும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை குறித்து கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

அண்மைக் காலமாக, ரஷ்ய பொருளாதாரம் வளர்ந்து வருகின்றமை, இங்கே கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான விஷயம். மேற்கத்திய முதலீட்டாளர்கள் ரஷ்யாவை புறக்கணிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் நிறையப் பேசும் அளவிற்கு, உக்ரைனிற்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஏற்கனவே பலவீனமான உக்ரைனிய பொருளாதாரம், நெருக்கடி காரணமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது.

உக்ரைனிய நாணயமான ஹிர்வினியாவின்(hryvnya) பெறுமதி பாதியளவு குறைந்துள்ளது. கிழக்கு உக்ரைனிய தொழில்துறை, பெருமளவு ரஷ்ய சந்தையை நம்பி இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், அங்கு நடக்கும் "ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு" பின்னணியில், பொருளாதாரக் காரணங்களும் உள்ளன. ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு, பொருளாதாரப் பிரச்சினை உக்ரைனிய அரசின் கைகளை கட்டிப் போட்டுள்ளது.


உக்ரைனில், பாஸிசத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை ஜீரணிக்க மூடியாத மேற்கத்திய ஊடகங்கள், உண்மையை மறைத்து, பிரச்சார யுத்தம் ஒன்றை முடுக்கி விட்டுள்ளன. கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை நசுக்குவதற்காக, பாசிச ஆட்சியாளர்கள் அனுப்பிய படையினர், மக்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். போராடும் மக்களை நோக்கி சுட விரும்பாத படையினர், தாம் கொண்டு சென்ற ஆயுத தளபாடங்களை மக்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இது வரையில், எட்டு அல்லது ஒன்பது யுத்த தாங்கிகள், பாசிச எதிர்ப்பு புரட்சியாளர்கள் வசம் வந்துள்ளன.

உக்ரைனிய படையினர் கீவில் இருந்து புறப்பட்ட பொழுது, தாங்கிகளில் பறந்து கொண்டிருந்த உக்ரைனிய தேசியக் கொடிகளை தாமே அகற்றி விட்டு, அவற்றில் ரஷ்யக் கொடிகளை பறக்க விட்டுள்ளனர். அதனை பொறுக்க முடியாத மேற்கத்திய ஊடகங்கள், "ரஷ்யா படையெடுத்து வந்து விட்டதாக" தமது மக்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றன. உக்ரைனில், கடந்த சில வாரங்களாக, தோல்விக்கு மேல் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகள், கோயபல்ஸ் பாணியிலான பொய்ப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.

மேற்குலகம் ஆதரிக்கும் உக்ரைனிய அரசாங்கம் அனுப்பிய இராணுவம், "ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளையும், பயங்கரவாதிகளையும்" எதிர்த்து சண்டையிடும் கண்கொள்ளாக் காட்சி. கிழக்கு உக்ரைனில் "உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருப்பதால்," நேட்டோ இராணுவ உதவி கோரப் படுள்ளது.


முதலாளித்துவத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு பற்றிய கிரேக்க ஆவணப் படம்: 


FASCISM INC MULTILINGUAL from infowar on Vimeo.


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, March 14, 2009

மேற்குலகிலும் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன - இதோ ஆதாரம்

இலங்கை அரசு வன்னித் தமிழரை தடுப்பு முகாம்கள் அடைத்து வைப்பதாக, மேற்குலக நாடுகளுக்கு முறைப்பாடு செய்பவர்கள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மேற்குலக நாடுகள் தான், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை, தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. அது மட்டுமல்ல, தற்போதும் இந்த தடுப்பு முகாம்கள், மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய உலகிற்கு உபதேசம் செய்யும் நாடுகளில், நடைமுறையில் உள்ளன. அமெரிக்க, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கு-ஐரோப்பிய நாடுகளில் அகதிகளையும், சட்டவிரோதமாக தங்கி இருப்போரையும், வருடக்கணக்காக தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து வதைப்பது அரசின் கொள்கையாக உள்ளது.

*** நெதர்லாந்தில் உள்ள தடுப்புமுகாம் பற்றிய ஆவணப்படம்
*** "அவுஸ்திரேலியாவின் அகதிகள் சிறைச்சாலை" - ஆவணப்படம்

அவுஸ்திரேலிய தடுப்புமுகாம் பற்றிய காணொளி: