Showing posts with label கிரேக்கம். Show all posts
Showing posts with label கிரேக்கம். Show all posts

Sunday, September 30, 2018

மசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது?

மசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை இன்றுடன் (30-9-18) முடிவுக்கு வருகிறது. பொது வாக்கெடுப்பில் பெருமளவு மக்கள் ஆம் என்று வாக்களிப்பார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது. 

இவ்வளவு காலமும் "முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான மசிடோனியா" (FYROM) என்ற பெயர் நீக்கப் பட்டு, "வடக்கு மசிடோனியா" என்ற புதிய பெயர் சூட்டப் படும். இது தொடர்பாக மசிடோனியா, கிரேக்க வெளிவிவகார அமைச்சர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஐரோப்பாவில், கடந்த 27 வருடங்களாக, தேசியவாதிகளால் (அல்லது பேரினவாதிகளால்) தீர்க்க முடியாத இனப்பிரச்சினையை இடதுசாரிகள் தீர்த்து வைத்திருக்கிறார்கள். யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த மசிடோனியா (அல்லது மக்கெதோனியா) என்ற புதிய நாட்டிற்கு பெயரிடுவது பற்றிய பிரச்சினை தற்போது தான் (பெருமளவு) ஓய்ந்துள்ளது.

உலகப் பேரரரசை கட்டி ஆண்ட மகா அலெக்சாண்டர் பிறந்த இடம் மசிடோனியா என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எங்கே இருக்கிறது என்பதிலும், அலெக்சாண்டர் காலத்தில் என்ன மொழி பேசினார்கள் என்பதிலும் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது. இது குறித்து, ஒரு பக்கம் கிரேக்க தேசியவாதிகளும், மறு பக்கம் மசிடோனியா தேசியவாதிகளும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடாமல் மயிர்பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.

இலங்கையில் தமிழரும், சிங்களவரும் (குறிப்பாக தேசியவாதிகள்) இராவணன் தமது மொழி பேசிய மன்னன் என்று உரிமை கோருவார்கள். அதே மாதிரித் தான், கிரேக்கர்களும், மசிடோனியர்களும் (குறிப்பாக தேசியவாதிகள்) அலெக்சாண்டர் தமது மொழி பேசிய மன்னன் என்று உரிமை கோருகிறார்கள். பழம் பெருமை பேசி மகிழ்வதும் ஒரு தேசியவாத கருத்தியல் தான்.

பண்டைய காலத்து மசிடோனியர்கள் கிரேக்க மொழி பேசியதாக கிரேக்க தேசியவாதிகள் நம்புகின்றனர். அதற்கு மாறாக அவர்கள் தனியான மசிடோனிய மொழி பேசியதாக மசிடோனியா தேசியவாதிகள் நம்புகிறார்கள். இருப்பினும், இன்றைய மசிடோனிய மொழி கிரேக்க மொழியுடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.

சுமார் 1500 வருடங்களுக்கு முன்னர், அதாவது அலெக்சாண்டர் காலத்திற்கு பின்னர் தான், தென் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்லாவிய மொழி பேசும் மக்களின் இனப் பரம்பலும், ராஜ்ஜியங்களும் தோன்றின. பல நாடுகளில் மொழிக்கும் இனத்திற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மசிடோனியாவில் வாழ்ந்த பண்டைய இன மக்களில் ஒரு பகுதியினர் கிரேக்கர்களாகவும், இன்னொரு பகுதியினர் ஸ்லாவியர்களாகவும் மாறி இருக்கலாம்.

இன்றைய மசிடோனியா மொழியும், பல்கேரிய மொழியும் ஒன்று தான். வித்தியாசம் மிகக் குறைவு. தமிழ்நாட்டுத் தமிழும், ஈழத் தமிழும் போன்றது. இருப்பினும் மசிடோனியர்கள் தாம் தனித்துவமான மொழி பேசுவதாக உரிமை கோருகிறார்கள். பல்கேரியர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், வல்லரசுகளின் தலையீடு காரணமாக, மசிடோனியாவின் அரைவாசிப் பகுதி கிரேக்க நாட்டிற்கு சொந்தமானது. மிகுதிப் பகுதி யூகோஸ்லாவியாவுடன் இணைக்கப் பட்டது. இன்று கிரேக்க மாகாணமாக உள்ள மசிடோனிய பகுதிகளில் வாழ்ந்த, மசிடோனிய மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப் பட்டனர். அவர்கள் யூகோஸ்லேவிய மாசிடோனியாவில் மீள்குடியேற்றம் செய்யப் பட்டனர்.

1991 ம் ஆண்டு யூகோஸ்லேவியாவில் இருந்து மசிடோனியா தனியாக பிரிந்து சென்றது. ஆனால் அது ஐ.நா. சபையில் சேர்வதற்கு கிரீஸ் தடைபோட்டது. பின்னர், "முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசு" என்ற அடைமொழியுடன் சேர்த்துக் கொள்ள சம்மதித்தது. இருப்பினும், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளில் சேர விடாமல், கிரீஸ் தொடர்ந்தும் வீட்டோ உரிமையை பயன்படுத்தி தடுத்து வந்தது. 

மசிடோனியாவுக்கு உரிமை கோரும் கிரேக்க தேசிய (பேரின)வாதிகளின் சுவரொட்டி 

கடந்த கால் நூற்றாண்டு காலமாக, மசிடோனியா தேசியவாதிகளும், கிரேக்க தேசியவாதிகளும் விட்டுக்கொடாமல் எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருந்தனர். அதனால் பெயர் தொடர்பான சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. அண்மையில், கிரேக்க நாட்டில் ஆட்சி பீடம் ஏறிய பிரதமர் சிப்ராசின் இடதுசாரி அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது. உலகில் எந்த நாடாக இருந்தாலும், பொதுவாக இடதுசாரிகள்  கடும்போக்கு தேசியவாதிகளின்  விதண்டாவாதங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

கிரீசில் ஆளும் சீரிஸா இடதுசாரி அரசு, "வடக்கு மசிடோனியா" என்ற பெயரை ஏற்றுக் கொள்வதாகவும், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு சம்மதிப்பதாகவும் அறிவித்தது. இது தொடர்பாக மசிடோனியா அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் விளைவாகத் தான் பொது வாக்கெடுப்பு நடக்கிறது. இருப்பினும் தேசியவாதிகள் இன்று வரைக்கும் எதிர்ப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் எந்த நாட்டிலும் தேசியவாதிகளின் பேச்சைக் கேட்டால் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது. பிரச்சினை தீர்ந்தால் அவர்களது இருப்புக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் தீவிரமாக எதிர்ப்பு அரசியல் செய்வார்கள். அதனால், தேசியவாதிகளை புறக்கணித்து ஒதுக்கி விட்டுத் தான் தீர்வு ஒன்றைக் காண முடியும். மசிடோனியா பிரச்சினையும் அதைத் தான் நிரூபிக்கின்றது.

Friday, January 30, 2015

கிரேக்க நாட்டில் இடதுசாரிப் பூகம்பம்! அதிர்ச்சியில் ஐரோப்பா!!


2015 ஜனவரி 25, கிரேக்க பொதுத் தேர்தலில் வென்ற சீரிசா (Syriza) பற்றி சில குறிப்புகள்:

Syriza என்ற பெயர் எப்படி வந்தது? SYnaspismós RIZospastikís Aristerás: தீவிர இடதுசாரிகளின் கூட்டணி என்ற பெயர் சுருங்கி சீரிசா ஆனது.

மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் அதனை ஒரு "தீவிர" இடதுசாரிக் கட்சி என்று அழைக்கின்றன. ஏனென்றால், மேற்கு ஐரோப்பாவில் சமூக ஜனநாயக கட்சிகளை தான், இவ்வளவு காலமும் "இடதுசாரி" கட்சிகள் என்று கூறி வந்தனர். நம்மைப் பொறுத்தவரையில் அவை வழமையான முதலாளித்துவ கட்சிகள். அதனால், மேற்குலக ஊடகங்கள் படம் காட்டுவதற்கு மாறாக, சீரிசா ஒரு மிதவாத இடதுசாரிக் கட்சி என்று அழைப்பதே பொருத்தம்.

அதனை நாங்கள், புரட்சிகர கட்சி அல்லது திரிபுவாத கட்சி போன்ற வரையறைக்குள் அடக்க முடியாது என்று நினைக்கிறேன். அதனை ஒரு ஜனநாயகக் கட்சி என்று கூறலாம். பெரும்பான்மை கிரேக்க மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்த இடதுசாரி சக்திகள் ஒன்று சேர்ந்து அதை உருவாக்கி இருந்தன. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் என்பது போல, ஜனநாயகம் பேசும் மேற்கத்திய நாடுகளை (குறிப்பாக: ஜெர்மனி போன்றநாடுகள்) அவர்களின் வழியில் சென்று கோரிக்கைகளை வைப்பது தான் நோக்கம்.

Syriza பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று, அதற்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லோரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எங்கோ ஒரு இடத்தில் தொடங்க வேண்டுமே? புரட்சி எங்களது வீட்டுக் கதவை தட்டும் வரையில் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா? Syriza தனது கடமையை செய்ய தவறினால், அல்லது தனது முயற்சிகளில் தோல்வி அடைந்தால், அதில் பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.

கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் (Alexis Tsipras) பதவியேற்றவுடன் முதல் வேலையாக, கிரேக்க புரட்சிக்காக போராடி மறைந்த கம்யூனிசப் போராளிகளின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் சாத்தினார். அலெக்சிஸ் சிப்ராஸ், முன்பு கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) இளைஞர் அணி உறுப்பினராக இருந்தவர்.

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், கிரீஸ் நாஸி ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. தலைமறைவாக இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சி, நாஸி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கெரில்லாப் போர் ஒன்றை நடத்தியது. கம்யூனிச கெரில்லாப் படைகள், பல இடங்களில் விடுதலைப் பிரதேசங்களை உருவாக்கி இருந்தன.

போரின் முடிவில் வந்திறங்கிய பிரிட்டிஷ் படைகள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான, முன்னாள் நாஸி ஆதரவு கிரேக்க ஒட்டுக் குழுக்களுக்கு உதவினார்கள். 1946–49 காலப் பகுதியில், மீண்டும் வெடித்த உள்நாட்டுப் போரில், கம்யூனிஸ்டுகள் தோற்கடிக்கப் பட்டனர். அன்று நடந்த போரில், வீர மரணத்தை தழுவிக் கொண்ட, பல்லாயிரக் கணக்கான போராளிகளின் நினைவு ஸ்தூபி, ஏதென்ஸ் நகரில் வைக்கப் பட்டுள்ளது.

ஒரு முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் கட்சியை, பொதுத் தேர்தலில் வெல்ல வைத்த, கிரேக்க வாக்காளர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

சீரிசா எவ்வாறு வெற்றியை நோக்கிப் பயணித்தது? அந்தக் கட்சியின் தேர்தலுக்கு முந்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஆவணப் படம்:


GREECE: THE END OF AUSTERITY? from Theopi Skarlatos on Vimeo.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !
கிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்

Friday, March 01, 2013

ஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு



மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், "வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே,  நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநாயகம், பெண்ணுரிமைக்கு மதிப்பளித்து வந்தது போலவும்", பலர் இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாமர மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட அவ்வாறான நம்பிக்கையை கொண்டுள்ளனர். புராதன ஐரோப்பியர்களின் தலை சிறந்த  நாகரீகம், நமது காலத்திய சவூதி அரேபியர்களும், தாலிபான்களும் நடைமுறைப் படுத்திய "இஸ்லாமிய மத அடிப்படைவாத" நாகரீகத்தை பெரிதும் ஒத்திருந்தது, என்பது ஆச்சரியத்திற்குரியது. பலருக்கு இது புதிய தகவலாக இருக்கலாம்.

இன்றைக்கும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பாடநூல்களில் கிரேக்க நாகரீகம் பற்றி வியந்து பேசப் படுகின்றது. "ஏதென்ஸ் தான், உலகில் முதன் முறையாக ஜனநாயகத்தை கண்டுபிடித்து, நடைமுறைப் படுத்திய நாடு என்று, இன்றைய ஜனநாயக காவலர்கள் புகழ்ந்து பேசுகின்றனர். ஏதென்ஸ் நகரம், ஐரோப்பிய நாகரீகத்தின் தொட்டில் எனவும், அங்கிருந்து தான் ஐரோப்பிய நாகரீகம் தோன்றி வளர்ந்தது என்றும் போதிக்கின்றார்கள். அத்தகைய பெருமைக்குரிய கிரேக்க நாகரீகம் எவ்வாறு இருந்தது? அங்கு பெண்களின் உரிமைகள் மதிக்கப் பட்டனவா? இது பற்றி எந்த பாடநூலும், தமது மாணவர்களுக்கு சொல்வதில்லை.

ஐரோப்பிய பெண்களின் நிலைமை, பண்டைய ஐரோப்பிய நாகரீகத்தில் எந்த வகையிலும் சிறந்ததாக இருக்கவில்லை.நாகரீகத்தில் சிறந்த கிரேக்க நாட்டு பெண்கள், அங்கிருந்த அடிமைகளை விட சிறிதளவே சுதந்திரம் பெற்றவர்களாக இருந்தனர். குறிப்பாக திருமணமான பெண்கள், வீட்டு வேலைகள் செய்வதற்கும், குழந்தை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட அடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர். "எமது அன்றாட பாலியல் இச்சைகளுக்கு அடிமைப் பெண்களையும், சட்டபூர்வ குழந்தைகளை பெறுவதற்காக மனைவியரையும் வைத்திருக்கிறோம்..." என்று ஒரு கிரேக்க அறிஞர் எழுதுமளவிற்கு, அது சர்வ சாதாரண விடயமாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் போது, பெண்கள் மீதான அடக்குமுறை, தற்போது சவூதி அரேபியாவில் பெண்கள் சுதந்திரமற்று இருக்கும் நிலைமை, இஸ்லாம் என்ற மதம் சார்ந்தது என்று பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். அது அந்தப் பிராந்திய மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் என்ற உண்மை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இஸ்லாத்துக்கு முந்திய அரேபியாவை, கிரேக்க- ஐரோப்பியர்களே பல நூற்றாண்டுகளாக ஆண்டு வந்தனர். அதே போல, ஆப்கானிஸ்தானும் அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு பின்னர், கிரேக்கர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த நாடுகளில், கிரேக்கர்களின் கலாச்சாரம் பரவாமலா இருந்திருக்கும்? ஒரு காலத்தில் கிரேக்கர்களாக இருந்த மக்கள், இன்றிருக்கும் அரேபியர்களுடனும், ஆப்கானியர்களுடனும் ஒன்று கலக்காமல் இருந்திருப்பார்களா? இதையெல்லாம் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை.

கற்பு குறித்த இந்தியர்களின் புரிதல் என்னவென்று, தமிழ் வாசகர்களுக்கு நான் கூறத் தேவையில்லை. ஆனால், பெண்களின் கற்பு பற்றிய விதிகள் யாவும், பண்டைய கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டு வந்தன என்பது வியப்புக்குரியது அல்லவா?  "கற்பு நெறியானது ஆரியர்களால் புகுத்தப் பட்டது," என்று திராவிட அரசியல் சார்ந்த அறிஞர்கள் கூறி வருகின்றனர். அப்படியானால், இந்தியாவுக்குள் நுளைந்த ஆரியர்களும், கிரேக்கர்களும் ஒரே மாதிரியான இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது சரித்திர பூர்வமாக நிரூபிக்கப் பட்ட விடயம் தான். இன்றைய ஈரான் முதல் பாகிஸ்தான் வரையிலான பிரதேசங்களில் "சீத்தியர்கள்" என்ற ஈரானிய மொழி ஒன்றை பேசும் இனம் வாழ்ந்ததாக, கிரேக்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

"இந்து பண்பாடு" என்று கருதப்படும், இறந்த கணவனின் சிதையில் மனைவி உடன்கட்டை ஏறுவது சீத்தியரின் (Scythian)  கலாச்சாரம் ஆகும். வட இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஆரியர்கள் சீத்திய இனத்தவர்களாக இருக்கலாம்.  வட இந்திய ஆரியர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசியவர்கள் என்று கருத முடியாது. அலெக்சாண்டர் இந்தியா வரை படையெடுத்து வந்த போதிலும், இந்தியாவை வெல்ல முடியாமல் திரும்பிச் சென்றான் என்று நமது சரித்திர நூல்கள் கூறுகின்றன. ஆனால், அலெக்சாண்டரின் படையில் இருந்த கிரேக்கர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி விட்டனர். கிரேக்க தளபதி, பிற்காலத்தில் ஆப்கானிஸ்தானில் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்தான். அந்த ராஜ்ஜியம் ஒரு காலத்தில் இந்தியாவின் வட-மேற்குப் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. இதைப் பற்றி எந்த சரித்திர நூலும் தெரிவிப்பதில்லை. ஏனிந்த வரலாறு இருட்டடிப்பு செய்யப் படுகின்றது?

இன்று உலகம் முழுவதும், ஐரோப்பிய மையவாத கருத்துக்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்றைய ஐரோப்பிய ஆட்சியாளர்கள், பண்டைய கிரேக்க வரலாற்றில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டுமே தெரிவு செய்து படிக்கிறார்கள். அவற்றை எமக்கும் படிப்பிக்கிறார்கள். அதிலிருந்து தான் இன்றைய ஆதிக்க அரசியல் கட்டமைக்கப் படுகின்றது. 

"உலகிற்கு நாகரீகத்தை போதிப்பது, நாகரீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த வெள்ளை இன மனிதனின் கடமை" என்று ஐரோப்பிய மையவாதிகள் நம்புகிறார்கள். இந்த காலனிய கால சிந்தனை இன்றைக்கும் கோலோச்சுகின்றது. 2001 ம் ஆண்டு, "பெண்களை கொடுமைப் படுத்தும் காட்டுமிராண்டி தாலிபானின் பிடியில் இருந்து, ஆப்கான் பெண்களை விடுதலை செய்வதற்காக படையெடுத்ததாக," அமெரிக்கா ஒரு காரணத்தை கூறியது.  ஆனால், மறந்து விடாதீர்கள். 19 ம் நூற்றாண்டில், இதே காரணத்தை கூறித் தான் பிரித்தானியா இந்தியா மீது படையெடுத்தது! "பெண்களை உடன்கட்டை ஏற வைத்து கொடுமைப் படுத்தும், காட்டுமிராண்டி இந்துக்களிடமிருந்து இந்தியப் பெண்களை விடுதலை செய்வதற்காக..." என்று ஒரு காரணத்தை கூறித் தான், பிரிட்டன் இந்தியாவை காலனிப் படுத்தியது. 

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, கிரேக்கத்தில் இருந்து தான் உலகிற் சிறந்த நாகரீகத்தை ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். அதன் அர்த்தம், அன்று கிரேக்கத்தை தவிர, பிற ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். ஆகவே அவர்களைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஜனநாயகத்தை கண்டுபிடித்த ஏதென்ஸ் நாட்டு நாகரீகம் எப்படி இருந்தது? ஏதென்ஸ் நாட்டவரின் ஜனநாயகம் ஆண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சம். கிரேக்க பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. அவர்கள் மக்கள் மன்றத்திற்கு சென்று அரசியல் விவாதம் செய்யவும், கருத்துரைக்கவும் தடை இருந்தது.  பெண்கள் மட்டுமல்ல, அடிமைகளும் கிரேக்க ஜனநாயகத்தில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. அதற்குப் பெயர் ஜனநாயகமா?

பெண்களை திருமணம் செய்து வைப்பதற்கு, பெற்றோர்கள் சீதனம் கொடுப்பது,  இந்தியர்களின் பாரம்பரியம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பண்டைய கிரேக்க சமுதாயத்திலும், சீதனம் கொடுக்கும் மரபு பின்பற்றப் பட்டு வந்தது. பணக்காரப் பெற்றோர்கள், தமது சொத்து வெளியில் போகக் கூடாது என்பதற்காக, தமது மகளுக்கு ஒரு உறவுக்கார பையனாகப் பார்த்து மணம் முடித்து வைப்பார்கள். Medea என்ற கிரேக்க நாடகத்தில் பின்வரும் வசனம் ஒன்று வருகின்றது. "ஒரு ஆணை வாங்குவதற்கு மலையளவு பணம் தேவை. அப்படிக் கொடுத்த பின்னர், அந்த ஆண்  எமது உடலுக்கு உரிமை கொண்டாடுவது இன்னும் மோசமானது."

ஒரு சராசரி கிரேக்கப் பெண், 14 வயதிலேயே திருமணம் செய்து விட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தானில், 13-14 வயது சிறுமிகள், முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டத்தை, செய்திகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். பண்டைய கிரேக்கத்திலும், 14 வயது பருவ மங்கை,  30 வயதுக்கு மேற்பட்ட ஆடவனை திருமணம் செய்வது சட்டப்படி அனுமதிக்கப் பட்டது. திருமணம் முடிக்கும் நேரத்தில், அந்தப் பெண் கன்னியாக இருக்க வேண்டும். மணப்பெண் கன்னித் தன்மை இழந்துள்ளமை கணவனுக்கு தெரிய வந்தால், அவளை அடிமையாக விற்கலாம்.

"பெண்கள் படிக்கக் கூடாது" என்று, ஆப்கானிஸ்தானில் சட்டம் போட்ட தாலிபான்கள், பெண்களின் பாடசாலைகளையும் மூடினார்கள். எவராவது காரணம் கேட்டால், "அது தான் இஸ்லாமிய ஷரியா சட்டம்" என்று நியாயம் கற்பித்தார்கள். படிப்பறிவற்ற ஆப்கான் பாமர மக்களும், மெத்தப் படித்த சர்வதேச சமூகமும், அதனை உண்மை என்று நம்பியது. உண்மையில் அதுவும், இஸ்லாத்துக்கு முந்திய கிரேக்க நாகரீகம் என்று அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பண்டைய ஏதென்ஸ் நாகரீகத்தில், ஆண் பிள்ளைகளை மட்டுமே கல்வி கற்க பாடசாலைக்கு அனுப்பினார்கள். பெண்பிள்ளைகள் வீட்டில் இருக்க வேண்டும். 

படித்த மனைவியை எந்த ஆணும் விரும்பவில்லை. கிரேக்க நாடக ஆசிரியர் Menander  பின்வருமாறு எழுதுகின்றார்: "எவனொருவன் ஒரு பெண்ணுக்கு எழுதப் படிப்பிக்கிறானோ, அவன் ஒரு பாம்புக்கு நஞ்சைக் கொடுக்கிறான்." பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கும், குழந்தைகளை பெற்று பராமரிக்கவும் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்பதே, பண்டைய கிரேக்கர்களின் நிலைப்பாடு. பொதுவாக நல்ல தண்ணீர் கிணறுகள் வீட்டுக்கு வெளியே சிறிது தூரத்தில் இருந்ததால், பெண்களே தண்ணீர் அள்ளிவர வேண்டியிருந்தது. ஆனால் அவ்வாறு வெளியே போகுமிடத்தில், அந்நிய ஆண்கள் பார்த்து விடுவார்கள் என்ற அச்சம் இருந்தது. அதனால், பணக்கார வீட்டுப் பெண்கள், தமது அடிமைகளையே தண்ணீர் அள்ளி வருமாறு வெளியே அனுப்புவார்கள்.  

ஆண் விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால், பெண்கள் சமையலறைக்குள், அல்லது படுக்கையறைக்குள் சென்று விட வேண்டும். விருந்தினர்களின் கண்ணில் படுமாறு வெளியே நடமாடக் கூடாது. இது ஏதோ சவூதி அரேபியா அல்லது ஆப்கானிஸ்தானில் மட்டுமே காணக்கூடிய பெண் அடக்குமுறை என்று நினைத்து விடாதீர்கள். பண்டைய கிரேக்க சமுதாயத்திலும் அது தான் நடைமுறை. நான் சிறுவனாக இருந்த காலத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் பல சைவத் தமிழர்கள் வீடுகளில், இது போன்ற நடைமுறை இருந்ததை நேரில் கண்டிருக்கிறேன்.  எனது உறவினர்கள் சிலர் கூட அத்தகைய வழக்கத்தை பின்பற்றினார்கள். இன்றைய தலைமுறையில் அது பெருமளவு மாறியிருக்கலாம். 

பாலியல் சுதந்திரம், ஆண்கள் மட்டுமே அனுபவிக்கும் உரிமையாக இருந்தது. கிரேக்க ஆண்கள், வீட்டில் வேலைக்கு வைத்திருக்கும் பெண் அடிமைகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது மட்டுமல்ல, வெளியே பாலியல் தொழிலாளிகளிடமும் சென்று வந்தனர்.  இந்தக் காரணங்களாலும்,   தேவையான அளவு பிள்ளைகளை பெற்ற பின்னரும், கிரேக்க ஆண்கள் தங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்வதை பெருமளவு குறைத்துக் கொள்வதுண்டு. ஆனால், அது பற்றி ஒரு மனைவி யாரிடமும் முறையிட முடியாது. ஒரு மாணவி, மாதத்தில் மூன்று தடவை உடலுறவு கொள்ள உரிமையுடையவள் என்று கிரேக்க சட்டம் ஒன்றில் எழுதப் பட்டிருந்தது.

கிரேக்க மனைவிமார், கணவனுடன் மட்டுமே உடல் உறவு வைத்து, தமது கற்பை பாதுகாக்க வேண்டும். கணவன் வெளியூர் சென்றிருந்தாலும், பல வருடங்களாக காணாமல்போனாலும், அல்லது மரணமடைந்தாலும், வேறொரு ஆடவனோடு உறவு வைக்கக் கூடாது. பெண்கள் விவாகரத்து பெறுவதை கிரேக்க சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. "ஒரு தடவை, ஒரு பெண் விவாகரத்து கோரி  சட்ட மன்றத்திற்கு செல்லும் வழியில், இடைமறித்த கணவனால் பலவந்தமாக கடத்திச் செல்லப் பட்டதாகவும், தெருவில் நின்ற யாரும் தலையிடவில்லை என்றும்..." கிரேக்க இலக்கியம் ஒன்றில் எழுதப் பட்டுள்ளது. 

சரஸ்வதி என்ற பெண் கல்வித் தெய்வத்தை வழிபட்ட பண்டைய கால இந்து மதத்தில், பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப் பட்டிருந்தது. அவர்களுக்கு கலைகளை பயிலும் சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை. அதே நேரம், மேட்டுக்குடியினரின் பாலியல் அடிமைகளான "தேவ தாசிகள்" என்ற பெண்கள் மட்டுமே, நடனம், இசை போன்ற கலைகளை கற்றிருந்தனர். அதே மாதிரியான "தேவ தாசிகள்" பண்டைய கிரேக்கத்திலும் இருந்தனர். அவர்களின் பெயர் "Hetaeren".  "கிரேக்க தேவதாசிகள்" மட்டுமே, பண்டைய கிரேக்கத்தில் ஓரளவு கல்வியறிவு பெற்ற பெண்கள், என்று சொன்னால் அது மிகையாகாது. அவர்கள் தாம் பெற்ற அறிவுக்கு விலையாக, உடலை விற்றுக் கொண்டனர்.  

கிரேக்க மேட்டுக்குடி பாலியல் தொழிலாளர்கள், தமது வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துவதற்காக, நடனம், இசை போன்ற கலைகளை கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஏதென்ஸ் நகர ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் பலர் விபச்சார விடுதிக்கு வந்து செல்வதால், அங்கே அரசியல் விவாதங்களும் நடக்கும். இதனால் கிரேக்க தேவதாசிகள் சிலர் அரசியல் அறிவு கைவரப் பெற்றிருந்தனர். அஸ்பாசியா (Aspasia) என்ற பெண், மதி நுட்பம் மிக்கவர் என்றும், அரசியல் உரைகளை எழுதுமளவு அறிவாளி என்றும் புகழப் படுகின்றார். தத்துவ அறிஞர்களுடன் வாதிடும் அளவுக்கு புலமை பெற்றிருந்தார். Pericles என்ற அரசவை உறுப்பினரின் வைப்பாட்டியாக இருந்ததால், அவருக்கு அரசாங்க அலுவல்களில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அஸ்பாசியா தான்,  புராதன ஐரோப்பாவின் வரலாற்றில், பெண்கல்வியை ஊக்குவித்த, முதலாவது பெண் உரிமைப் போராளியாக இருக்க வேண்டும்.  

(இந்தக் கட்டுரை, Historia (2/2013) சஞ்சிகையில் பிரசுரமான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்டது.)

******************************

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.மேலைத்தேய நாசகார நாகரீகம்
2.வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்
3.முஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்

Friday, December 07, 2012

300 ஸ்பார்ட்டா வீரர்களின் நாட்டில் ஒரு நாள்

கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்  (பகுதி - 3)

"300"  என்ற ஹாலிவூட் திரைப்படம் வந்த பின்னர், ஸ்பார்ட்டாவின் பெயர், உலகம் முழுவதும் அறிமுகமானது. கிறீசின் பெலோப்பனோஸ் குடாநாடு, பண்டைய காலத்தில் ஸ்பார்ட்டா என்ற தனி நாடாக இருந்தது. ஒரு பக்கத்தில் ஏதன்ஸ், மறு பக்கத்தில் ஸ்பார்ட்டா, இரண்டு வல்லமை பொருந்திய சுதந்திர நாடுகளுக்கும் இடையில், வர்த்தகப் போட்டிகளும், இராணுவத் தகராறுகளும் இருந்தன. அப்பொழுது கிழக்கே (இன்றைய துருக்கி) இருந்த பாரசீக சாம்ராஜ்யம் அவர்களை மிரட்டிக் கொண்டிருந்தது. கிரேக்கத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் அடிக்கடி படையெடுத்தது. இதனால் ஏதென்ஸ் அடிக்கடி பாதிக்கப் பட்டது. ஆரம்பத்தில் ஒத்துழைக்கா விட்டாலும், பிற்காலத்தில் ஏதன்ஸ் தேசத்தின் போரில், ஸ்பார்ட்டாவும் சேர்ந்து கொண்டது. அதுவே கிரேக்கம் என்ற ஒரு புதிய தேசம் உருவாக அடிப்படையாக அமைந்தது. இதற்குப் பின்னர், நகரங்களை மையப் படுத்திய தனியரசுகள் மறைந்து, கிரேக்கப் பேரரசு உருவானது. 

இன்று ஸ்பார்டா நகரம் பெருமளவு அழிந்து விட்டது. அதனால் அங்கு பார்ப்பதற்கு எதுவும் இல்லை. சில கட்டிட இடிபாடுகளைத் தவிர. ஸ்பார்ட்டாவுக்கு அருகில், கிறிஸ்தவ கால புராதன நகரம் ஒன்றுள்ளது. மிஸ்த்ரா என்ற இடத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முந்திய நகரம் அழியாமல் உள்ளது. பிசாந்தின் என்ற, கிரேக்க மொழி பேசும் ரோம சாம்ராஜ்யத்தின் எச்சம் அது. பிசாந்தின் சாம்ராஜ்யத்தில், கிரேக்கம் அரச கரும மொழியாகவும், கிறிஸ்தவம் அரச மதமாகவும் இருந்தன. அந்த அரசாங்கத்தில், கிறிஸ்தவ தேவாலயங்கள், மடாலயங்களின் பங்களிப்பு அளவுக்கு அதிகமாகவே இருந்தது. பிற்காலத்தில் பிசாந்தின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்று, அந்த இடத்தில் துருக்கியரின் ஓட்டோமான் சாம்ராஜ்யம் உருவானது. ஏதென்ஸ் வரையில் துருக்கியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலத்தில், பெலோப்பெனோஸ் குடா நாடு மட்டுமே சுதந்திரமாக இருந்துள்ளது. அந்தப் பிரதேசம், முழுக்க முழுக்க கிறிஸ்தவ தேவாலயங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்ட நிர்வாகத் தலைநகரம் தான் மிஸ்த்ரா. அதே காலகட்டத்தில் தான், பிற்காலத்திய கிரேக்க தேசியவாதமும் தோன்றியது. பல அழகிய புராதன கட்டிடங்களை, மிஸ்த்ராவில் இன்றைக்கும் பார்த்து மகிழலாம். 

பெலோப்போனோஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் ஏதென்ஸ் திரும்பி வந்தேன். ஏதென்சில் நான் தங்கியிருந்த "யூத் ஹாஸ்டல்", பெயரளவில் மட்டுமே "இளையோரின் விடுதி" யாக இருந்தது. வயதுக் கட்டுப்பாடின்றி, எல்லோரையும் தங்க அனுமதித்தார்கள். செலவும் அதிகமில்லை. ஒரு நாள் கட்டணம் 12 யூரோக்கள் மட்டுமே. ஒரு அறையில், நான்கு பேர் தங்கி இருந்தார்கள். என்னுடன் ஒரு பிரிட்டிஷ் முதியவரும், அயர்லாந்து இளைஞனும் தங்கியிருந்தனர். பிரிட்டிஷ் முதியவர், சுமார் ஐம்பது  வருடங்களுக்கு முன்பு இலங்கையில் வசித்துள்ளார்! திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் கடற்படைத் தளத்தில் பணியாற்றியுள்ளார். (இலங்கை குடியரசான பின்னர், அந்த தளம் மூடப்பட்டது.)  அவர் தனது இலங்கை அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். பிரிட்டிஷ் கடற்படைத் தளம் அகற்றப் பட்ட பின்னர், இலங்கையுடனான பிரிட்டனின் காலனிய கால தொடர்பு துண்டிக்கப் பட்டது. அது வரையில், இலங்கையில் வசித்த பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு கிடைத்த சலுகைகளை விவரித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. அந்த முன்னாள் கடற்படை வீரருடன் தற்போதைய இலங்கை நிலவரம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். "திருகோணமலை கடற்படைத் தளம் மூடப்பட்டதற்கும், சில வருடங்களின் பின்னர், இனப்பிரச்சினை கூர்மை அடைந்ததற்கும் தொடர்பிருந்தது" என்பதை, அவருடன் உரையாடிய பொழுது புரிந்தது. 

என்னுடன் தங்கியிருந்த அயர்லாந்து இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஐரிஷ்காரர்கள் எந்தளவு தூரம் பிரிட்டனை வெறுக்கின்றனர் என்பது புரிந்தது. "ஆங்கிலேயர்கள்  இலங்கையையும், பிற உலக நாடுகளையும் காலனிப் படுத்துவதற்கு முன்பே, அருகில் இருந்த அயர்லாந்தை காலனியாக்கி வெள்ளோட்டம் பார்த்துள்ளனர். அந்த ஐரிஷ் இளைஞர், "சுதந்திரமடைந்த" அயர்லாந்தின் இன்றைய அரசியல் நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தார். தான் மட்டுமல்ல, தனது தந்தை, தாத்தா காலத்திலிருந்தே ஆங்கில மொழியை, அதாவது ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை, தமது தாய்மொழியாக பேசி வருவதாக கூறினார். அதாவது, சொந்த மொழியான ஐரிஷ் மொழியை மூன்று தலைமுறையாக மறந்து விட்டார்கள். தனக்கு ஐரிஷ் ஒரு அந்நிய மொழியாக தெரிவதாகவும், தான் சிந்திப்பது கூட ஆங்கில மொழியில் தான் என்றும் தெரிவித்தார். ஐரிஷ் மொழி பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டாலும், பலருக்கு அதில் ஆர்வமில்லை என்றும், அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் மட்டுமே ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறினார்.அதாவது பதவியேற்கும் பொழுது, ஐரிஷ் மொழியில் சத்தியப் பிரமாணம் செய்தால் போதுமானதாம். நான் ஈழத் தமிழரின் மொழிப் பிரச்சினை பற்றி அந்த நண்பருக்கு எடுத்துக் கூறினேன். "இன்னும் பத்து வருடங்களில், ஈழத்தில் வாழும் தமிழர்கள் எல்லோரும் சிங்களம் மட்டுமே பேசுவார்கள்," என்று பலர் ஆரூடம் கூறுகின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிச்சுவட்டை பின்பற்றும் ஸ்ரீலங்கா அரசு வேறெப்படி நடந்து கொள்ளும்? தாயை சந்தையில் பார்த்தால், மகளை வீட்டில் பார்க்க வேண்டுமா?

கிறீஸை சுற்றி பல தீவுகள் உள்ளன. எல்லாத் தீவுகளுக்கும் ஏதென்சில் இருந்து அதி விரைவுப் படகுச் சேவை உள்ளது. மேற்கே உள்ள தீவுகளுக்கு, பாட்ரா துறைமுகத்தில் இருந்து கப்பல் சேவை நடக்கிறது.
ஏதென்ஸ் நகரத்திற்கு அருகில் உள்ள தீவுக்கு பெயர் ஏகினா. அதற்கு பிராயஸ் துறைமுகத்தில் இருந்து படகு செல்கின்றது. பிராயஸ் ஏதென்ஸ் நகரின் துறைமுகம் மட்டுமல்ல, அனைத்து சர்வதேச கப்பல்களும் அங்கே வருகின்றன. ஏகினா தீவில் வாழும் மக்கள், பெரும்பாலும் மீனவர்கள். உல்லாசப் பிரயாணத் துறையினால், மேலதிக வருமானம் கிடைக்கிறது. தலைநகரத்திற்கு அருகில், கடற்கரையில் ஏகாந்தமாக பொழுது போக்க விரும்புவோருக்கு ஏகினா சிறந்த இடம். அங்குள்ள மெல்லிய நீல நிறக் கடற்கரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. பண்டைய கிரேக்க நாகரீகத்தின் தடயங்கள் ஏகினா தீவிலும் காணக் கிடைக்கின்றன. அவை இடிபாடுகளுடன் காட்சி தரும் ஆலயங்கள் தான். ஆதி கால கிறிஸ்தவ போதகர்களும், ஏகினாவில் தமது தடயங்களை பதித்து விட்டுச் சென்றுள்ளனர்.  

ஆதி கால கிறிஸ்தவ சபைகள் ஏகினா தீவு, ஏதென்ஸ், பெலோப்போனோஸ் குடா நாடு, மற்றும் துருக்கியிலும் நிறுவப் பட்டன. துருக்கி பிற்காலத்தில் ஓட்டோமான் சாம்ராஜ்யமாக மாறியது. துருக்கி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களாக மாறினார்கள். இஸ்லாமிய துருக்கியர்கள் கிரேக்கம் முழுவதையும் கைப்பற்றி, தமது சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இணைத்தனர். அப்பொழுது அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மதத் துறவிகள் பலர் தலைமறைவாக இயங்கினார்கள். ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில், கிறிஸ்தவ மதம் தடை செய்யப் படவில்லை. ஆனால், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை எதிர்த்து அரசியல் நடத்திய துறவிகள் மட்டுமே தலைமறைவாக வாழ்ந்தனர். அவர்கள் மறைந்து வாழ்வதற்கு ஏற்ற இடம் ஒன்று, மத்திய கிரேக்கத்தில் கிடைத்தது. இயற்கை அரண்களால் சூளப்பட்ட, எதிரிகளால் இலகுவில் கண்டறிய முடியாத இரகசிய இடம். அது ஒரு மலைப் பிரதேசம். ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உயரமான மலைப்பாறைகளை கொண்டது. அவற்றின் உச்சியில் மடாலயங்களை கட்டி, அங்கேயே தங்கி இருந்தார்கள். சிறுவர்களின் மாயாஜாலக் கதைகளில் மட்டுமே அப்படியான இடங்களை கற்பனையில் தரிசிக்கலாம். அந்த மர்ம மடாலயங்களின் கதை அடுத்து வரும்.

(தொடரும்)


கிரேக்க பயணக் கதையின் முன்னைய பதிவுகள்: 

1.கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்
2.ஒலிம்பிக்ஸின் தாயகம்

Sunday, February 19, 2012

எங்களால் முடியும்! தொழிலாளர் நிர்வாகத்தில் பத்திரிகை நிறுவனம்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, திவாலான கிரேக்க பத்திரிகை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள், தாமே நிர்வாகத்தை எடுத்து நடத்தும் நிலைக்கு வந்து விட்டனர். நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், பங்குதாரரின் கடனை அடைக்க முடியாத முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். இதை அடுத்து வேலை நிறுத்தத்தில் குதித்த ஊழியர்கள், தற்பொழுது தாமே நிறுவனத்தை பொறுப்பெடுத்து இயக்குகின்றனர். பெப்ரவரி 15 முதல், கிரேக்க தொழிலாளர்களின் Eleftherotypia பத்திரிகை, கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை தரும் செய்தியை, ஊடகத் துறையை சேர்ந்தவர்களே புறக்கணித்து வருவது கவனத்திற்குரியது. நாம் செய்திக்காக தங்கியிருக்கும் வெகுஜன ஊடகங்கள், எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக பாடுபடுகின்றனர் என்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் தெரிய வருகின்றது.

கிறீஸ் நாட்டில், Eleftherotypia என்ற தினசரி பத்திரிகையை நடத்தி வரும் நிறுவனமான, H.K. Tegopoulos தின் 800 ஊழியர்கள், 22 டிசம்பர் 2011 முதல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். ஆகஸ்ட் 2011 லிருந்து, ஊழியர்களின் சம்பளம் கொடுக்கப் படவில்லை. கடன்காரர்களின் தொல்லையில் இருந்து தப்புவதற்காக, பத்திரிகை நிறுவன முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். அதே நேரம், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 7 மில்லியன் யூரோ சம்பளப் பாக்கி பற்றி எந்தக் கதையும் இல்லை. இதனால், வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள தொழிலாளர்கள், போராட்டத்தை ஒழுங்கு படுத்தல், சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் நில்லாது, தாமாகவே பத்திரிகையை எடுத்து நடத்துகின்றனர். புதிய தொழிலாளர்களின் பத்திரிகை, வழமையான விநியோகஸ்தர்களால் நாடு முழுவதும் விநியோகிக்கப் படும். ஆனால், வழமையான வெகுஜன பத்திரிகைகளை காட்டிலும் சிறிது விலை குறைந்துள்ளது. பத்திரிகை விற்பனையால் கிடைக்கும் வருமானம், தொழிலாளர்களின் போராட்ட செலவுகளுக்கும், அவர்களது குடும்பங்களை பராமரிக்கவும் பயன்படுகின்றது.

கடந்த ஏழு மாதங்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு, பல இடதுசாரி அமைப்புகளும், தனிநபர்களும் நிதி சேர்த்து கொடுத்து வந்துள்ளன. மீண்டும் தொடங்கப் பட்டுள்ள பத்திரிகை விநியோகம், தொழிலாளர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கு வழி வகுத்துள்ளது. "முதலாளியும், மனேஜர்களும் இல்லாமலே, ஒரு நிறுவனத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நிர்வகிக்க முடியும்," என்ற கம்யூனிசக் கொள்கையை, கிரேக்கத் தொழிலாளர்கள் மெய்ப்பித்து வருகின்றனர். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஒன்று கூடி வாக்களித்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்துள்ளனர். இந்த புதிய நிர்வாகம், பத்திரிகையின் ஆசிரியர் குழுவாக இயங்கி வருகின்றது. நிறுவனத்தின் அதிகாரம் தொழிலாளர் கைகளில் சென்றுள்ளதால் கலக்கமடைந்துள்ள பழைய நிர்வாகம், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி வருகின்றது. மூலதன சர்வாதிகாரத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஊடக சர்வாதிகாரிகள், நாட்டின் உண்மையான நிலவரத்தை மக்களுக்கு தெரிவிப்பதில்லை. தொழிலாளர்களின் மாற்றுப் பத்திரிகை, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் என்பதால், பிற ஊடகவியலாளர்களும் வரவேற்றுள்ளனர்.

Eleftherotypia


கீழே: பத்திரிகை நிறுவன தொழிலாளர்களின், கடந்த வருட வேலை நிறுத்தம் குறித்த வீடியோ.

Wednesday, February 15, 2012

பொருளாதார நெருக்கடி, கிரேக்கத் தலைநகரம் எரிகின்றது!

12.02.2012, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் கிரேக்க அரசு, ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிந்த சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்த ஒத்துக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தினுள் "மக்கள் பிரதிநிதிகள்", மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த வேளை, ஏதென்ஸ் நகரில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக, தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் வேளை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்டது. புரட்சிகர அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, இலட்சக்கணக்கான மக்கள், ஏதென்ஸ் நகரில் திரண்டனர். அரபுலக வசந்தம் பற்றிய செய்திகளை நாள் தவறாமல் அறிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், கிரேக்க மக்கள் எழுச்சியை இருட்டடிப்பு செய்தன.

12 .02 .2012 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தேசிய வரித் திணைக்களம் ஆக்கிரமிக்கப் பட்டது. அங்கிருந்த தஸ்தாவேஜுகள் நாசமாக்கப் பட்டன. நாடு முழுவதும் பின்வரும் அரச நிறுவனங்கள் மக்களால் ஆக்கிரமிக்கப் பட்டன. Athens Law School, Ministry of Health in Athens, Building of the Regional government. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் வங்கிகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. ஒரு வங்கிக் கட்டிடம் முற்றாக எரிந்தது. போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால், சரமாரியாக பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. இதனால் ஏதென்ஸ் நகரம் எங்கும் தீச்சுவாலைகள் பரவின. நகரம் முழுவதும் தீப்பற்றி எரிவதைப் போன்றிருந்தது. அங்கு நடந்த சம்பவங்களை, கீழேயுள்ள வீடியோக்களில் பார்வையிடலாம்.









கிரேக்க மக்கள் எழுச்சி பற்றிய முன்னைய பதிவுகள்:
1. வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது
2.ஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது
3.கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது

Tuesday, July 22, 2008

சைப்பிரசில் ஓர் ஈழம்

ஒரு காலத்தில் இனப்பிரச்சினை முற்றி, ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த போரின் பின்னர், இரண்டு தேசங்களான சைப்பிரஸ், இன்று மீண்டும் சேரத் துடிக்கின்றது. இரு வேறு மொழிகள்(கிரேக்கம்,துருக்கி), மதங்கள்(கிறிஸ்தவம்,இஸ்லாம்), ஆகியன ஒரு சிறிய தீவின் மக்களை எப்படி பிரித்ததன? தற்போது அவர்களை சேர்க்கும் காரணம் எது?  
 
ஐரோப்பாக் கண்டத்தையும், ஆப்பிரிக்கா கண்டத்தையும் பிரிக்கும் மத்தியதரைகடலில் உள்ள குட்டித்தீவு சைப்பிரஸ். அதன் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக அன்னிய படையெடுப்புகளுக்கு அடிக்கடி ஆளானது. எகிப்து, சிரியா, பெர்சியா ஆகிய பண்டைய சாம்ராஜ்யங்கள் அதற்கு உரிமை கோரியுள்ளன. இருப்பினும் இன்றைய கிரீஸ் மட்டுமல்ல, துருக்கி, சைப்பிரஸ் என்பனவும் ஒரு காலத்தில் கிரேக்க இனங்களால் நிறைந்திருந்தன. 
 
மத்திய ஆசியாவில் இருந்து வந்த துருக்கி நாடோடிக் குழுக்களின் படையெடுப்புகள், அந்த பிரதேச மொழியியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. துருக்கிய பிரதேசத்தில் வாழ்ந்த (கிரேக்க) மக்கள் மெல்ல, மெல்ல துருக்கி மொழியை தமது தாய்மொழியாக்கிக் கொண்டனர். ஒரு காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான பாக்தாத் நகரையே முற்றாக அழித்த துருக்கிய நாடோடிகள், பின்னர் அங்கு வாழ்ந்த மக்களின் உயர்ந்த நாகரீகம் கண்டு வியந்து, தாமும் முஸ்லீம்களாக மாறினர். இதன் பின்னர் தான் துருக்கிய சுல்தான்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். அவ்வாறு சென்றவிடமெல்லாம் வெற்றி கண்ட ஒஸ்மான் அலியின், ஓட்டோமான் அரச பரம்பரையினர், இன்றைய கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகளையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். 
 
சைப்பிரஸ் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில்(250 வருடங்கள்) , துருக்கி பெருநிலப்பரப்பில் இருந்து, துருக்கி மொழி பேசும் மக்கள் சென்று குடியேறியதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் கணிசமான கிரேக்க மொழி பேசும் மக்களும், அரசாங்கத்திடம் சலுகைகள் பெறுவதற்காக, அல்லது தமது குடும்ப நலன் கருதி, அரச மதமான இஸ்லாத்திற்கு மாறி, அரச கரும மொழியான துருக்கியை தமது தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு, துருக்கியராகவே மாறியிருக்க வாய்ப்புண்டு. அல்லது துருக்கியராகியிருக்கலாம். 
 
இந்த சரித்திர உண்மையை இன்றைய கிரேக்கசைப்பிரஸ் வலதுசாரிகள் நம்ப மறுப்பார்கள். ஆனால் ஒரு சில கல்விமான்கள் சொல்வதைப்போல, மரபணு சோதனை செய்து பார்த்தால், சிப்ரியோட்(சைப்பிரஸ் மக்களை பிரிட்டிஷ் நிர்வாகம் "கிரேக்க சிப்ரியோட்", "துருக்கி சிப்ரியோட்" என பெயரிட்டழைத்தது.) என்று அழைக்கப்படும், கிரேக்கர்களுக்கும், துருக்கியருக்குமிடையில் ஒற்றுமை இருப்பதை நிரூபிக்கலாம். வெறும் மொழி அடிப்படையில் மட்டுமே, சைப்பிரஸ்- துருக்கியர் தம்மை துருக்கி- துருக்கியருடனும், அதே போல சைப்பிரஸ்- கிரேக்கர்கள் தம்மை கிரீஸ்- கிரேக்கர்களுடனும் இனம்காண்கின்றனர். இத்தகைய இனவாத சிந்தனை இன்றுவரை சைப்பிரசை பிரிக்கும் முக்கிய காரணியாகும்.  
 
19 ம் நூற்றாண்டில் உலகிலேயே சிறந்த கடற்படையை வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், மத்திய தரைக் கடலிலும் ஆதிக்கம் செலுத்த வந்தது. ஸ்பெயினின் தென் முனையில் உள்ள ஜிப்ரால்டர், இத்தாலிக்கு கீழே உள்ள மால்ட்டா, ஆகியனவற்றை கைப்பற்றி தனது காலனியாக்கியத்துடன் நில்லாது, சைப்பிரசை அபகரிக்கும் நோக்கில் ஓட்டோமான் அரசுடன் பேரம் பேசியது. அந்தக்காலத்தில் நலிவடைந்து "ஐரோப்பாவின் நோயாளி" என்றழைக்கப்பட்ட ஓட்டோமான் சாம்ராஜ்யம், சைப்பிரசை பிரிட்டனுக்கு விற்றுவிட்டது. 
 
1878 ல் நிர்வாக பொறுப்பை மட்டுமே ஏற்பதாக கூறிய பிரித்தானியா, முதலாம் உலகப்போரில் துருக்கி தோல்வி அடைந்த தருணத்தை பயன்படுத்தி, சைப்பிரஸ் தனது காலனி என்று அறிவித்தது. இருந்தாலும் துருக்கியர்களை தனது நண்பர்களாக பார்த்த பிரிட்டன், சைப்பிரசிலும் தனது காலனிய நிர்வாகத்தில் துருக்கி மொழி பேசுவோருக்கு பதவிகளை வழங்கியது. இதனால் அனைத்து கீழ்மட்ட நிர்வாகிகளும், அரச எழுதுவினைஞர்களும், மட்டுமல்ல காவல்துறையை சேர்ந்தோரும் துருக்கியராகவே இருந்தனர். மொத்த சனத்தொகையில் 18 வீதமேயான, துருக்கியருக்கு ஆங்கிலேயர் வழங்கிய சலுகைகள், அதே இனங்களை பிரித்தாளும் சூழ்ச்சி தான்.

நவீன கால வரலாற்றில் கிறிஸ்தவ மதம் அரசியலில் ஈடுபடவில்லை என்று, மேற்கு-ஐரோப்பிய உதாரணத்தை மட்டுமே எல்லோரும் கவனிக்கின்றனர். கிரீசிலும், சைப்பிரசிலும் அரசியலே கிறிஸ்தவ மடாலயங்களில் இருந்து தான் பிறந்தது. தனித்துவமான கிரேக்க கிறிஸ்தவ நிறுவனம், சைப்பிரசிற்கு என சுயாதீனமான தலைமை மதகுருவை கொண்டிருந்தது. அவ்வப்போது நடந்த ஓட்டோமான் அரசுக்கெதிரான, அல்லது இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சிகளுக்கு மதகுருக்களே தலைமை தாங்கினர். 
 
சைப்பிரஸ் பிரிட்டிஷ் காலனியாகிய போது, கிறிஸ்தவ சபைகள் அதை வரவேற்கவே செய்தன. ஆயினும் கிரீசுடன் ஒரு பகுதியாக இணையும் அபிலாசை, பிரிட்டிஷ் நிர்வாகத்துடன் முரண்பாடுகளை தோற்றுவித்தது. முதலாம் உலகயுத்த முடிவில், துருக்கியிடம் இருந்து கிரீஸ் பரிபூரண சுதந்திரம் பெற்றிருந்தது. பல தீவுகள் புதிய கிரீஸ் தேசிய அரசின் வசமான போது, சைப்பிரசில் உள்ள கிரேக்க மொழி பேசும் மக்கள் கிரீசுடன் இணைய விருப்பம் தெரிவித்ததில் வியப்பில்லை. ஆனால் பிரிட்டன் அந்த விருப்பத்திற்கு தடையாக இருந்தது. இதனால் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் வெடித்த போது, இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. கிறிஸ்தவ மதகுருக்கள் நாடுகடத்தப்பட்டனர்.

இருப்பினும் கிரீஸ் தான் தமது தாய் நாடு என்று கருதும் கிரேக்க-சிப்ரியோட்கள் "எநோசிஸ்" என்றழைக்கப்படும் இணைப்பிற்கான கொள்கையை கைவிடவில்லை. "எயோகஸ்"(EOKAS) என்ற கிரேக்க தேசியவாத இயக்கம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டது. சந்தேகத்திற்கிடமில்லாமல் துருக்கி-சிப்ரியோத்கள் கிரீசுடன் இணைவதை எதிர்த்தனர். ஓட்டோமான் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஒரு காலத்தில் பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில், சைப்பிரஸ் துருக்கிக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பதாக வாதிட்டனர். சைப்பிரஸ் தனியான சுதந்திர நாடாக வர வேண்டும் என்று எதிர்பார்த்த பிரித்தானியா, துருக்கியர் பக்கம் சாய்ந்தது. எயோகஸ் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு, துருக்கி துணை இராணுவக்குழுவை உருவாக்கியது.

ஆரம்பத்தில் எயோகஸ் ஆங்கிலேய அதிகாரிகளையும், கிரேக்க பொலிஸாரையும் குறி வைத்து தாக்கிக் கொண்டிருந்தது. இதனால் கிரேக்கர்கள் அரச தொழில்களை கைவிட்டு ஓட, துருக்கி துணைப்படை தாக்குதல் இலக்கானது. இதனால் ஏற்பட்ட இரு இனங்களுக்கிடையிலான பதற்றம் ஒருபக்கம், கிரேக்க பேரினவாத கனவு மறுப்பக்கம், எல்லாம் சேர்ந்து துருக்கியரை பிரிவினை நோக்கி தள்ளியது. முரண்பாடுகள் கூர்மையடையும் வேளை, மிதவாத கிரேக்கர்கள் 1960 ல் சைப்பிரசை தனியான குடியரசாக்க ஒப்புக்கொண்டனர். மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கிறிஸ்தவ தலைமை மதகுரு மகாரியோஸ் பிரதமராக வந்தார்.


சுதந்திரம் வழங்கப்பட்ட போதும், பிரிட்டன் தனது இரண்டு படைத்தளங்களை தொடர்ந்து வைத்திருக்க அனுமதி வாங்கியது. இன்றும் கூட பிரிட்டனுக்கு "சொந்தமான" அந்த நிலங்களில், பிரிட்டிஷ் இராணுவம் முகாமிட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னரான சைப்பிரசில் இனப்பிரச்சினை பற்றி கிரேக்க-துருக்கி பிரதிநிதிகளுக்கிடையில் பலதடவைகள் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 
 
தற்போது ஆட்சியதிகாரத்தை தம் கையில் வைத்துக்கொண்ட கிரேக்க சிப்ரியோட்கள், 78 % பெரும்பான்மையை கொண்டிருந்ததால், சிறுபான்மை துருக்கி சிப்ரியோட்கள் வைத்த அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தினர். துருக்கியர் தமக்கென தனியான தன்னாட்சிப்பிரதேசத்தை கோரினர். கிரேக்க அரசியல் தலைவர்களோ அதைப்பற்றி நினைத்துப்பார்க்கவும் விரும்பவில்லை. தொடர்ந்து பலவருடங்கள் இப்படியே, பேச்சுவார்த்தைகள், சில அதிகார அலகுகளுக்கான இணக்கப்பாடுகள், நடைமுறைக்கு வராத ஒப்பந்தங்கள், என்று காலம் கழிந்ததே தவிர இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

1974 ல் அதற்கொரு முடிவு வந்தது. கிரேக்க-சிப்ரியோட் இனவாத இராணுவ அதிகாரிகள் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியதை காரணமாக காட்டி, துருக்கி சைப்ரஸ் மீது படையெடுத்தது. நடந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரண்டு பக்கமும் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டன. கிரேக்க சிப்ரியோட்கள் வடக்கிலிருந்தும் (துருக்கி பெரும்பான்மை மாகாணங்கள்), துருக்கி சிப்ரியோட்கள் தெற்கிலிருந்தும் (கிரேக்க பெரும்பான்மை மாகாணங்கள்) விரட்டப்பட்டனர். விரைவில் போர்நிறுத்தம் ஏற்பட்டு நாடு இரண்டாகப்பிரிக்கப்பட்டது. ஐ.நா. தலையீட்டால் "பச்சைக்கோடு எல்லை" வகுக்கப்பட்டு, எல்லைகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. 
 
தீவின் மத்தியில் அமைந்திருக்கும் தலைநகரம் நிக்கோசியா கூட இரண்டாகப்பிரிக்கப்படது. வடக்கு சைப்பிரஸ் துருக்கியின் இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் வந்த போதும், இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீடித்தன. சைப்பிரஸ் ஒரு சமஷ்டி குடியரசு ஆகும் வரை தான் வெளியேறப் போவதில்லை என்று துருக்கி அடம்பிடித்தது. 
 
அதேநேரம் துருக்கி நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான துருக்கி இனத்தவரை வடக்கு சைப்பிரசில் கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர். இது சைப்பிரசின் சனத்தொகையில், இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே நடைபெறுகின்றது என்பதில் சந்தேகமில்லை. தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கூட, பிரச்சினை தீர்ந்தால் குறைந்தது 50000 குடியேறிகளை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக, கிரேக்க-சிப்ரியோட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983 ல் ஒருதலைப்பட்சமாக "வடக்கு சைப்பிரஸ் குடியரசு" பிரகடனம் செய்யப்பட்டாலும், அந்த புதிய தேசத்தை துருக்கியை தவிர, உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் ஒன்றிணைந்த சைப்பிரசை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றது. கிரேக்க-சைப்பிரஸ் பகுதி ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடாகிய பிறகு, துருக்கி-சைப்பிரஸ் மக்களுக்கு துருக்கிய இராணுவம் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரத்தடை அந்தப்பகுதியை வெகுவாகப் பாதித்துள்ளது. 
 
இதனால் ஒப்பீட்டளவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் விரக்தியுற்ற இளம்தலைமுறை, மீண்டும் சைப்பிரஸ் ஒரே நாடாக வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆயினும் இரண்டு பக்கமும் இருந்த வலதுசாரி கடும்போக்காளர்கலால் அண்மைக்காலம் வரை ஒற்றுமைக்கான முயற்சி எதுவும் கைகூடி வரவில்லை. கிரேக்க பகுதியில் கடந்த வருடம் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகு தான் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மே தினத்தன்று, நீண்ட காலத்திற்கு பிறகு, கிரேக்க-துருக்கி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர். இன்றைய நிலைமை இது.

துருக்கி-சிப்ரியோட் அரசியல்தலைவர்கள் சுயநிர்ணய உரிமை, அல்லது அதிக அதிகாரம் கூடிய சமஷ்டி ஆட்சிக்கு குறையாத தீர்வை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். துருக்கி அரசாங்கம், வேண்டுமென்றே பொருளாதார தடை போட்டு, தம்மோடு சேர்க்கப் பார்ப்பதாக கிரேக்க-சிப்ரியோட் பக்கம் குற்றம்சாட்டுகின்றது. அதே நேரம் துருக்கி எதிரிநாடாக இருப்பதால் (கிரேக்க)சைப்பிரஸ் சில பொருளாதார (கப்பல், விமான போக்குவரத்து) பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது கிரேக்க-சிப்ரியோட் அரசியல்தலைவர்கள் சமஷ்டிக்கு மறுத்து, ஒற்றையாட்சியே நீடிக்க வேண்டும் எனக்கூறுகின்றனர். அதே நேரம் பெருமளவு துருக்கி சிப்ரியோட் மக்கள் பொருளாதார நலன் கருதி இணைப்பிற்கு ஆதரவாகவும், கிரேக்க-சிப்ரியோட் மக்கள் பேரினவாத எண்ணத்தால், சமஷ்டிக்கு எதிராகவும் உள்ளனர். துருக்கி தான் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு சைப்பிரஸ் பிரச்சினையை துருப்பு சீட்டாக பயன்படுத்துகின்றது.

ஐரோப்பிய யூனியனோ, ஐரோப்பா என்ற எதிர்கால ஏகாதிபத்தியக்கனவுகளுடன் இந்தப்பிரச்சினையை பார்க்கின்றது. ஐரோப்பிய யூனியனின் நெருக்குவாரங்களால், சைப்பிரஸ் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரலாம். எதிர்பாராதவிதமாக இயற்கை ஒன்றிணைவுக்கு துணை செய்கின்றது. உல்லாசப்பிரயான, ரியல் எஸ்டேட் தொழிற்துறைகள், அதிக வருமானத்தை ஈட்டித்தரும் அதேநேரம், பாவனையாளர் அதிகரித்து, வரட்சியும் சேர்ந்து கொள்ள, தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் கிரீசில் இருந்து கப்பல்களில் தண்ணீர் இறக்குமதி செய்யவேண்டிய நிலைமை. இதற்கு அதிக செலவாகின்றது. அதேநேரம் 83 கி.மி. தூரத்தில் இருக்கும் துருக்கியில் இருந்து, குழாய் மூலம் தண்ணீர் வாங்குவது செலவு குறைந்த வழி. ஏற்கனவே துருக்கி, குழாய் மூலம் இஸ்ரேலுக்கு தண்ணீர் விற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. 
 
சைப்பிரஸ் துருக்கியிடம் போக தடுப்பது அரசியல் மட்டும் தான். பொதுநலன் கருதி, பழைய பகையை மறந்து செய்யற்படும் காலம் நெருங்கி வருகின்றது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, அரசியல் அல்லது இன முரண்பாடுகளால், பிரிந்துள்ள இரண்டு சைப்பிரஸ்களும், பொருளாதார காரணங்களால் ஒன்று சேர்கின்றன. ஒரு காலத்தில், பிரிட்டிஷ் காலனியாதிக்கநிர்வாகம், தனக்கெதிரான விடுதலைபோரட்டத்தை, இனங்களுக்கு இடையேயான போராக மாற்றிவிட்டது. இனவாதிகள் அதனை தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தினர். இறுதியில் பொருளாதார நலன்கள் எல்லாவற்றையும் மேவி நிற்பது வெள்ளிடைமலை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
(படம் 2 : நிகோசியா ஐ.நா. எல்லைக்கோடு )

 

 

 

 

 

(உயிர்நிழல் Januari-March/April -June 2008 ல் பிரசுரிக்கப்பட்டது)

_____________________________________________________________________________________ ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம் _____________________________________________________________________________________