Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Saturday, June 26, 2021

மேதகு - திரைக்கதைக்கு பின்னால் உள்ள நிஜக்கதை

 


மேதகு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். ஜகமே தந்திரம் போன்ற குப்பைப் படங்களை விட இது பல மடங்கு மேலானது. குறிப்பாக நாட்டுக்கூத்துடன் கதை சொல்லும் பாணி அருமை. சிறந்த படப்பிடிப்பு. எந்த இடத்திலும் தொய்வில்லாத அளவுக்கு தரமான எடிட்டிங்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையில் சில மிகைப் படுத்தல்கள் இருந்தாலும், அவை படம் பார்ப்பதற்கு உறுத்தலாக இருக்கவில்லை. பெருமளவு சம்பவங்கள், களம் சார்ந்து கதை நகர்கிறது. பாடல்கள் கேட்டு இரசிக்கும் படி உள்ளன. தமிழாராய்ச்சி மகாநாட்டு நடனமும் அருமை. குறைந்த பட்ஜெட்டில் எடுத்த ஒரு படத்திற்கு இவையெல்லாம் அதன் மதிப்பைக் கூட்டுகின்றன.

இருப்பினும் படத்தில் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. பொதுவாக இந்தப்படம் தமிழ்தேசிய கொள்கை சார்ந்த பார்வையாளர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், ஆங்காங்கே கிளம்பும் பிரச்சார வாடையை குறைத்திருக்கலாம். முடிந்த அளவு தவிர்த்திருக்கலாம். இது ஓர் ஆவணப்படம் இல்லைத் தான். ஆனால், வரலாற்றைப் பதிவு செய்யும் படம்.

படம் தொடங்கும் போதே சொல்லப்படும் குமரிகண்டம் பற்றிய புனைகதை ஒரு தேவையற்ற காட்சி. தமிழினவாத கண்ணோட்டத்தில் சொல்லப்படும் இது போன்ற பிரச்சாரங்கள், படத்தின் நம்பகத்தன்மையை பாதித்து விடும். இந்தப் படத்தை எடுத்தவர்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அந்தக் கட்சியினருக்கு மட்டுமே உவப்பானதாக இருக்கும்.

இலங்கை என்ற தமிழ்ச் சொல் எப்போதும் பாவனையில் இருந்து வந்த போதிலும், படத்தில் எதற்காக சிலோன் என்று வலிந்து திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ்காரரின் பட்டியில் கூட சிலோன் போலிஸ் என்று இருக்கிறது. அப்படி எந்தக் காலத்திலும் வந்த சீருடையிலும் இருக்கவில்லை.

இந்தப் படத்தில் சிறிலங்கா போலிஸ் என்றால் அது சிங்களவர்கள் என்பது போன்று காட்சிப் படுத்தி உள்ளனர். அது தவறு. எழுபதுகளில் வட மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தமிழ்ப் போலீஸ்காரர்கள் மட்டுமே அதிகமாக இருந்தனர். சிங்களவர்கள் அனேகமாக அதிகாரிகளாக இருந்தனர். (தமிழ் அதிகாரிகளும் இருந்தார்கள்.) ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்ததும் தமிழ்ப் போலீசார் தான். அதனால், அந்தக் காலங்களில் நடந்த கெரில்லாத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களும் (பெரும்பாலும்) தமிழ்ப் போலீஸ்காரர்கள் தான்.

படத்தில் பிரபாகரனின் முதலாவது வன்முறைத் தாக்குதலாக ஒரு பஸ்ஸை எரிப்பது காட்டப் படுகின்றது. அந்தக் காலங்களில் பஸ் கொளுத்தும் போராட்டம் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தாலும் ஒருபோதும் பிரபாகரன் அதில் ஈடுபட்டிருக்கவில்லை. வேறு சில இளைஞர் குழுக்கள் அதைச் செய்தன. ஆனால், புலிகள் இயக்கத்தில் இது போன்ற போராட்டத்தை நிராகரிக்கும் போக்கு காணப்பட்டது. (காரணம்: பஸ் எரிப்பதும் வழமையான "அஹிம்சைப் போராட்டம்" என்ற கருத்து நிலவியது.)

பொன் சிவகுமாரன் போலிஸ் ஜீப் மீது தாக்குதல் நடத்த முனைந்த சம்பவம் சிறப்பாக படமாக்கப் பட்டுள்ளது. அந்த வரலாறு சரியானது தான். இருப்பினும் அந்த சம்பவத்தில் அவர் போலிஸ் ஜீப் மீது கையெறி குண்டை வீசியெறிந்தார் என நினைக்கிறேன். அது வெடிக்கவில்லை. உண்மையில் பிரபாகரனுக்கு முன்னர், சிவகுமாரன் தான் பல தாக்குதல்களை நடத்தி இருந்தார். அவற்றில் பல வெற்றி அளிக்கவில்லை என்பது வேறு விடயம். இறுதியில் போலிஸ் தேடுதலில் சிக்காமல் ஓடிய பொழுது புகையிலைத் தோட்டத்தில் தான் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். படத்தில் அந்த சம்பவம் ஒரு தெருவில் நடப்பது போன்று காட்டுவது தவறு.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு மூலகாரணம் புத்த பிக்குகள் என்பது போலவும், அவர்கள் தான் தேசத்தை ஆள்கிறார்கள் என்பது போலவும் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களை கொடூரமான வில்லன்களாக காட்டுகிறார்கள். உண்மையில் புத்த பிக்குகளில் இனவாதிகள் (எல்லோரும் அல்ல) இருந்த போதிலும், அவர்கள் எப்போதும் அரசின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டில் சங்கராச்சாரியார், நித்தியானந்தா மாதிரி அரசியலில் தலையிட்டுக் கொண்டிருக்கும் பௌத்த மதகுருக்கள் இன்னும் உள்ளனர். ஆனால், படத்தில் காட்டப் படுவது போன்று அவர்கள் ஒரு தீர்மானகரமான சக்தியாக இல்லை.

இலங்கையில் புத்த பிக்குகளை, பேரினவாத அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியது. அப்படியானால் ஒரு பிரதமரான பண்டாரநாயக்கவை சுட்டதும் புத்த பிக்கு தானே என்று கேட்கலாம். அது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட சதி. அதன் பின்னணியில் சிஐஏ இருந்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. இன்று வரையில் பண்டாரநாயக்க கொலை தொடர்பான மர்மங்கள் துலங்கவில்லை. அது தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன.

மேதகு படத்தில் வரும் புத்த பிக்குகள் என்ன மொழி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. நிச்சயமாக அது சிங்களம் அல்ல! படத் தயாரிப்பாளர்கள் சிங்களம் மாதிரி ஒரு புதிய மொழியை உருவாக்கி விட்டிருக்கிறார்கள்!! அது என்ன? பாளியா? தெலுங்கா? சமஸ்கிருதமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்! பண்டாரநாயக்கவுக்கு ஆங்கிலம் முதல் மொழி தான். ஆனால், அவரது மனைவி சிறிமாவோவும் ஆங்கிலத்தில் உரையாடுவது மாதிரிக் காட்டி இருப்பது படத்துடன் ஒட்டவில்லை.

பண்டா - செல்வா ஒப்பந்தம் ஸ்ரீ எதிர்ப்பு கலவரத்திற்கு பிறகு வந்தது. இங்கே அவை இரண்டும் கால வரிசை மாற்றிக் காண்பிக்கப் படுகின்றன. 1958 ம் ஆண்டு பிரதமராக தெரிவான பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தார். தமிழரசுக் கட்சியினர் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். சிங்கள சிறியை தார் பூசி அழித்தனர். அதற்கு எதிராக சிங்கள இனவாதிகள் ஸ்ரீ பாதுகாப்பு கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது தான் படத்தில் காட்டப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கலவரக் காலத்தில் தமிழரின் முதுகில் கத்தியால் ஸ்ரீ எழுதியமை, தமிழ்க் கடைகளை உடைத்தமை போன்ற கொடுமைகள் தென்னிலங்கையில் மட்டுமே நடந்துள்ளன. அப்போது வடக்கு அமைதியாக இருந்தது.

வடக்கு- கிழக்கில் தமிழை நிர்வாக மொழியாக்கும் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க தானாக கிழித்தெறியவில்லை. அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக புத்த பிக்குகள் மட்டுமல்லாது, எதிர்கட்சியான யு.என்.பி. யும் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தன. படத்தில் எதிர்க்கட்சி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்தியா மாதிரி, இலங்கையும் ஆளும் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியால் பாதிக்கப்பட்ட நாடு தான்.

பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் பற்றி இந்தப் படத்தில் எதுவுமே பேசப் படவில்லை. ஆளும் வர்க்கம் தவறாக கையாண்ட பிரச்சினைகள் பற்றியும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அனைவரும் தமிழர்களை ஒடுக்குவதில் மட்டும் குறியாக இருந்ததாக ஒரே முனைப்பான அரசியல் பேசுகின்றது. இலங்கை அரசியல் நிலவரம் அந்தளவு கருப்பு - வெள்ளை அல்ல. இது குறித்த புரிதல்கள், இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு இருந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.

சிங்களம் மட்டும் சட்டம் முதல், தரப்படுத்தல் வரை பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப் படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டன. அதிலும் தரப்படுத்தல் மாவட்ட வாரியாக செயற்படுத்தப் பட்டது. இந்தியாவில் இட ஒதுக்கீடு போன்று பின்தங்கிய மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தது. இதனால் தமிழர்களில் ஒரு பகுதியினரும் நன்மை அடைந்தனர். இருப்பினும் பெரும்பான்மை சிங்களவர்கள் அதிக இலாபம் அடைந்தனர் என்பதை மறுக்க முடியாது.

துரையப்பா பற்றிய காட்சிகளிலும் அதீத மிகைப்படுத்தல்கள் உள்ளன. அவர் மேயர் வேலையை விட்டு விட்டு தமிழரசுக் கட்சியை ஒழிப்பது தான் தனது இலட்சியம் போன்று நடந்து கொண்டதாக காட்டுகிறார்கள். தமிழாராய்ச்சி மகாநாட்டில் போலிஸ் கரண்ட் கம்பிகளை அறுத்து விட்டு சிலரை சுட்டுக் கொன்று விட்டு, அந்தக் கொலைகளை விபத்து மாதிரி நடத்தி இருந்தது. அது திட்டமிடப்பட்ட கொலைகள் தான். ஆனால் படத்தில் காட்சிப் படுத்தப் பட்டது மாதிரி போலிஸ் சுற்றிவளைத்து பிடித்து அடித்துக் கொல்லவில்லை.

துரையப்பா சிறிமாவோவின் SLFP கட்சிக்காரர் தான். ஆனால், தமிழரசுக் கட்சியை இல்லாதொழிக்கும் நோக்கம் எதுவும் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை. அதற்கு மாறாக தமிழரசுக் கட்சியினர் துரையப்பாவை துரோகி என்று சாடி வந்தனர். அதற்குக் காரணம் தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கொலைகள் மட்டுமல்ல. தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலும் காரணம். 

அன்றைய காலங்களில் ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் கொண்ட பிரபாகரன் போன்ற இளைஞர்கள், தமிழரசுக் கட்சியினரின் கையாட்கள் போன்றே செயற்பட்டனர். துரையப்பா கொலையில் அந்தக் கட்சிக்கும் பங்கிருந்தது. ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட சில வருடங்கள், தமிழரசுக் கட்சிக்கும் ஆயுதபாணி இளைஞர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்தன. அவர்கள் அரசியல் தலைமைத்துவம் கொடுப்பதென்றும், இவர்கள் இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதென்றும், எழுதப்படாத ஒப்பந்தம் இருந்து வந்தது.

Sunday, June 20, 2021

ஜகமே தந்திரம் - ஈழத்தமிழர்களையும், புலிகளையும் கொச்சைப் படுத்தும் படம்!

 


நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் தமிழ் இன உணர்வாளர்களை குஷிப் படுத்தும் நோக்கில் வைக்கப் பட்ட வசனங்கள்:

"இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பி காப்பாற்றும்...!"

"எதற்கு இவ்வளவு ஆயுதங்கள்?" "தலைவன் மீண்டும் வருவான்... மக்களுக்காக போராடுவான் என்று நம்பினோம்... இன்னும் நம்புறம்!"

ஜெகமே தந்திரம் படத்தை The Family Man - 3 என்று சொல்லலாம். இது அதை விட மோசமான படம். புலிகளையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் கேவலப் படுத்தி உள்ளது.

"புலிகள் போதைவஸ்து கடத்தினார்களா?" இந்த சர்ச்சையை திமுக சார்பு அரக்கர் குழுவினர் ஆரம்பித்து வைத்திருந்தனர். ஒரு கிளப் ஹவுஸ் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டது. அரக்கர் கூட்டத்தினர் பத்திரிகை செய்திகள் அடிப்படையில் பேசுவதாக சொன்னார்கள். அப்போது மே- 17காரர் ஒருவர் அதை மறுத்துப் பேசினார். "புலிகள் போதைவஸ்து கடத்தவில்லை என்பதற்கு ஐ.நா. ஆதாரம்(?) இருக்கிறது" என்றார்.

ஜகமே தந்திரம் படம் புலிகளை ஒரு சர்வதேச மாபியாக் குழு என்ற மாதிரி கொச்சைப் படுத்தி உள்ளது. சில நேரம் கவனிக்காமல் விட்டு விடுவோமோ என்ற நினைப்பில் "புலிகள்... தலைவன்... புனிதப் போராட்டம்... இயக்கம்..." போன்ற சொற்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த புதுமாத்தளன் பகுதியை காட்டுகிறார்கள்.

ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவுவதாக காட்டப்படும் மாபியாக் குழுவினர், லண்டனில் இருந்து கொண்டு பிற நாடுகளுக்கு தங்கமும், ஆயுதங்களும் கடத்துகிறார்கள். அதனால் வெள்ளையினத்தவரின் மாபியாக் குழுவுடன் மோதல் ஏற்படுகிறது. இது தான் படக்கதை. இந்தப் படத் தயாரிப்பில் "தீவிர புலி ஆதரவாளர்கள்" பங்களித்துள்ளனர்.

ஜகமே தந்திரம், தமிழர்கள் காதில் முழம் முழமாக பூச்சுற்றும் தந்திரம்! லண்டனில் இயங்கும் ஒரு மாபியாக் குழு "தனது சொந்த செலவில்", ஈழப்போரில் பாதிக்கப்பட்ட அகதிகளை ஐரோப்பாவுக்கு கடத்திக் கொண்டு வருகிறதாம். அந்த செலவுக்காக தான் தங்கம், ஆயுதங்களை கடத்துகிறார்களாம். இப்படிப் போகிறது கதை...

நான் அறிந்த வரையில், இதுவரையில் எந்தவொரு கிரிமினல் கேங், அல்லது மாபியாக் குழுவும் (ஸாரி... "இயக்கம்" என்று சொல்லணுமாம்!) இப்படி நடந்து கொண்டதில்லை. அவர்களைப் பொருத்தவரையில் சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்துவதும் ஒரு வருமானம் ஈட்டும் தொழில் தான். யாரும் இங்கே கொடை வள்ளல் அல்ல. இலவச தொண்டூழியம் அல்லது தான, தருமம் செய்யவில்லை.

அவர்கள் யாரையும் ஐரோப்பாவுக்கு "இலவசமாக" கூட்டி வந்ததாக நான் கேள்விப் படவில்லை. விதிவிலக்காக தமது உறவினர், நண்பர்கள், வேண்டப் பட்டவர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே தமது செலவில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களை விரல் விட்டு எண்ணலாம். இல்லாவிட்டால் புலிகள் இயக்கத்தால் தமது தேவைகளுக்காக அனுப்பப்பட்ட அவர்களது உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அப்படி "இலவசமாக" வெளிநாட்டுப் பயணம் செய்து வந்த சிலர் இன்றைக்கும் கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்கள். இங்கே நான் இப்படியானவர்கள் பற்றிப் பேசவில்லை. சாதாரணமான அகதிகளைப் பற்றி பேசுகிறேன்.

ஜகமே தந்திரம் சித்தரிக்கும் கிரிமினல் குழுக்களைப் பொருத்தவரையில், ஆட்களைக் கடத்துவதும் அதிக இலாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில் தான். சில நேரம், தங்கம், ஆயுதம் கடத்துவதை விட அதிகமாக சம்பாதிக்கலாம். ஒருவரை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வதற்கு 10000 - 20000 யூரோக்கள் அறவிடுகிறார்கள்! இத்தனைக்கும் அவர்களுக்கு அந்தளவு அதிக செலவு எடுக்காது. அதிக பட்சம் சட்டவிரோதமாக ஐரோப்பிய எல்லை கடப்பதற்கு மட்டும் தான் அதிக பணம் செலவாகும். அதையும் ஒரு பெரிய குழுவாக கூட்டிச் செல்வதன் மூலம் செலவைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

ஆமாங்க! நான் பொய் சொல்லலீங்க!! இன்று ஐரோப்பா வரும் தமிழ் அகதிகள் பத்தாயிரம், இருபதாயிரம் யூரோ கட்டித் தான் வருகிறார்கள். அதுவும் ஜகமே தந்திரம் படத்தில் காட்டுவது மாதிரியான "தமிழர்களின் கேங்" தான் அந்தளவு பணம் வாங்குகிறது. பொதுவாக ஆட்கடத்தும் கிரிமினல் குழுக்கள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செல்லும் அகதிகளிடம் அதிக பட்சம் ஐயாயிரம் யூரோக்கள் அறவிடுகிறார்கள். இவர்கள் எதற்காக பத்தாயிரம், இருபதாயிரம் கேட்கிறார்கள்? வேறென்ன? பேராசை தான். இது தமிழனை தமிழனே சுரண்டும் கொடுமை.

இந்த இலட்சணத்தில் "இது கள்ளக் கடத்தல் இல்லையாம்... அரசியல் போராட்டமாம்...!" அடி செருப்பாலே! கிரிமினல்களுக்கு வெள்ளை அடிப்பதற்கு இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க?

ஈழ அரசியலின் பெயரால் தமிழர்களின் காதுல நல்லாத் தான் பூச் சுத்துகிறீங்க!

Wednesday, June 09, 2021

The Family Man - 2 விமர்சனம்: "தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது?"

 

அமேசன் தொலைக்காட்சித் தொடர் பேமிலி மேன் பற்றிய விமர்சனம். சுருக்கமாக சொன்னால் ஒரு மொக்கைத் தொடரை சர்ச்சைக்குள்ளாக்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இறுதியில் அமேசன் தளத்திற்கு அதிகளவு சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுத்தது தான் மிச்சம். சில நேரம் எதிர்ப்புக் கூட, ஒரு படத்திற்கு விளம்பரமாகி விடும் என்பதற்கு பேமிலி மேன் ஒரு சிறந்த உதாரணம்.

இதுவும் வணிக நோக்கில் தயாரிக்கப்படும் பிற திரைப்படங்கள் போன்று, ஹிந்தி பேரினவாத கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்திய தேசபக்தி படம் தான். இந்தத் தடவை குறிப்பாக தமிழர்கள் மீது இனவாத வன்மம் காட்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதிலும் காஷ்மீரிகளுக்கு எதிரான வன்மம், பாகிஸ்தான் எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்பு (லவ் ஜிகாத்) என்று வழமையான இனவாத மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப் பட்ட ஒரு குப்பைப் படம். இதற்கு இந்தளவு ஆரவாரம் செய்யத் தேவையில்லை. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலே தோல்வி அடைந்திருக்கும்.

இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நாளில் இருந்து இன்று வரையில், so called "புலி ஆதரவாளர்கள்", அல்லது வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள், கொஞ்சம் ஓவராகவே பொங்கிப் படைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். புலிகள் தொடர்பாக அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதப் பிம்பம் உடைக்கப் படும் போது ஏற்பட்ட வலி காரணமாக கதறி இருக்கிறார்கள். "புலிகளைப் பற்றி உனக்கென்ன தெரியும்?" என்ற கணக்காக பொரிந்து தள்ளி விட்டார்கள். ஒருவர், ஹிந்திக்காரர்களுக்கு தமிழ் புரியாதே என்ற ஆதங்கத்தில், யூடியூப்பில் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டு இருந்தார்.

பேமிலி மேன் தொடர் புலிகளை கொச்சைப்படுத்தி உள்ளது என்பது உண்மை தான். ஏற்கனவே காஷ்மீர் போராளிகளை கொச்சைப் படுத்தியவர்கள் புலிகளை மகிமைப் படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது எமது மடமைத்தனம். ஆனால், பார்வையாளர்கள், (தமிழர் அல்லாத வேற்றின) மக்கள், இந்தப் படத்தை பார்த்து தான் புலிகளை மதிப்பிடப் போகிறார்கள் என நினைப்பது வேடிக்கையானது.

உண்மையில் பேமிலி மேன் தொடர் புலிகளை சித்தரித்துள்ள விதம் சிறுபிள்ளைத்தனமானது. நகைப்புக்குரியது. தொடக்கத்தில் இருந்து "குறிப்பிட்ட ஐந்து நபர்களைத் தான்" படம் முடியும் வரை காட்டுகிறார்கள். ஒரு சிறு குழுவின் சாகசக் காட்சிகளை பார்த்தால், அதை ஒரு போராட்டம் என்று எவனும் நம்ப மாட்டான். சுருக்கமாக சொன்னால், ஒரு மாபியாக் குழு மாதிரி சித்தரித்து இருக்கிறார்கள். இதை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்? புலிகளை மறந்து விட்டு பார்த்தால், இதுவும் அரைத்த மாவை அரைத்த அரைவேக்காட்டு படம் தான்.

ஏற்கனவே செய்திகளில் கேள்விப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு படக்கதை எழுதப் பட்டிருந்தாலும், யதார்த்த அரசியலில் இருந்து வெகுதூரம் சென்று விடுகின்றது. அதனால் ஒரு செயற்கைத்தன்மை உண்டாகின்றது. இதைவிட சில வருடங்களுக்கு முன்பு வெளியான மெட்ராஸ் கபே திரைப்படம், ஓரளவு வரலாற்று உண்மைகளுடன் ஒத்துப் போகின்றது. அதனுடன் ஒப்பிட்டால் பேமிலி மேன் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்ட சராசரி மொக்கைப் படம். 

உண்மையில், வட இந்திய ஹிந்திக்காரர்கள் என்றாலும், அன்றாடம் செய்தி வாசிப்பவர்களுக்கு புலிகளைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்களுக்கு, சிறு குழந்தைக்கு கதை சொல்வது மாதிரி, புலிகள் இந்தப் பேமிலி மேன் படத்தில் வருவது மாதிரி இருப்பார்கள் என்று சொல்லி ஏமாற்ற முடியாது. அரசியலில் நாட்டமில்லாத மக்கள் மட்டும், இதையும் இன்னொரு "காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய படம்" என்பது மாதிரி பார்த்து விட்டு கடந்து செல்வார்கள். (அவர்களில் பலருக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்றும் தெரியாது.) அதற்கு ஏற்றவாறு கதாசிரியர் காஷ்மீர், ISI பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஈழத்திலும் பொதுவாக புலிகளை ஆதரிக்கும் தமிழர்களின் விகிதாசாரம் மிகக் குறைவாகத் தான் இருக்கும். நாற்பது சதவீதம் ஆதரிக்கிறார்கள் என்பதே ஒரு மிகைப்படுத்தல் தான். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களிடமும் புலிகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இருப்பினும் அதே மக்கள் வெளியுலகில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு வழங்குவது போன்று காட்டிக் கொள்வார்கள். இது அவர்களது இருப்பு சார்ந்த விடயம்.

குறிப்பாக சிங்கள அல்லது ஹிந்தி பெரும்பான்மையினத்தின் அடக்குமுறையை, பேரினவாத மேலாண்மையை எதிர்கொள்ளும் போதெல்லாம், தமிழர்கள் தமது முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஓரினமாக ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் காணப்படும் இந்த ஒற்றுமை உணர்வு தான் பேமிலி மேன் படத்தில் மிகுந்த வெறுப்புடன் அணுகப் படுகின்றது. அதை நெறியாளர் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார். 

கவனிக்கவும்: "தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை" என்று தமிழினவாதிகள்(வலதுசாரிகள்) மட்டும் தான் சொல்லிக் கொள்கிறார்கள். அது அவர்களது வழமையான அரசியல் பிரச்சாரம். ஆனால், வெளியுலகம் தமிழர்களை அப்படிப் பார்ப்பதில்லை. சிங்களவர்களை அல்லது ஹிந்திக்காரர்களை கேட்டால், தமிழர்களிடம் உள்ள ஒற்றுமை தமது மக்களிடம் இல்லை என்பார்கள்!

இதை "ஆரிய - திராவிட முரண்பாடு" என்று சொல்லலாம். அதை ஏற்க மறுப்பவர்கள் "சிங்கள - தமிழ் முரண்பாடு" அல்லது "ஹிந்தி - தமிழ் முரண்பாடு" என்று சொல்லலாம். அது அவரவர் அடையாள அரசியல் குறித்த பிரச்சினை. எது எப்படி இருப்பினும் ஹிந்தி மொழி பேசும் வட இந்தியர்களுக்கும், தமிழ் மொழி பேசும் தென்னிந்தியர்களுக்கும் இடையில் ஏதோ ஒரு பரம்பரைப் பகை இருந்து வருவது மட்டும் உண்மை. இந்த இன முரண்பாட்டை பேமிலி மேன் படம் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே காட்டி விடுகின்றது.

இந்தப் படத்தில் வட இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளாக வரும் கதாபாத்திரங்கள் (திவாரி, ஜேகே, மிலிந்த்) வாழும் இடங்களைப் பார்த்தால் ஐரோப்பா மாதிரி இருக்கிறது. அவர்களது வீடுகளும், வேலை செய்யும் இடங்களும் மிக நவீனமாக உள்ளன. அவர்களது நடை, உடை, பாவனை, கலாச்சாரமும் மேற்கத்திய நாட்டவர் போன்றிருக்கிறது. நிச்சயமாக, குடும்பக் காட்சிகளை பார்க்கும் ஐரோப்பியர்கள் அதில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும். அந்தளவு மேற்கத்திய வாடை அடிக்கிறது.

ஆனால், கதை சென்னைக்கு நகர்ந்ததும் காட்சியமைப்புகள் தலைகீழாக மாறி விடுகின்றன. அப்போது தான் சன நெருக்கடியும், இரைச்சலும் மிக்க, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஒரு மாநிலத்தை பார்க்கிறோம். "இதுவும் இந்தியாவிலா இருக்கிறது?" என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். பேமிலி மேன் படம் தமிழ்நாட்டை சித்தரிக்கும் காட்சிகளை பார்ப்பவர்கள், அது எங்கோ ஆப்பிரிக்காவில் இருப்பதாக நினைப்பார்கள். அந்தளவு மோசமாகக் காட்டி இருக்கிறார்கள்.

பேமிலி மேன் காட்டும் தமிழ்நாடு எந்த வித மாற்றமும் இல்லாமல் எழுபது வருடங்களுக்கு முந்திய பழைய வீடுகளுடன் உள்ளது. தமிழர்களின் உடுத்துவதிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே "பழைய பஞ்சாங்கம்" தானாம்! காலனிய காலத்தில் வெள்ளையர்கள் தமக்கு கருப்பர்களை நாகரிகமயப் படுத்தும் கடமை இருப்பதாக கருதிய மாதிரித் தான், வட இந்தியர்கள் தமிழர்களை பார்க்கிறார்கள். 

தமிழ்நாட்டில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தெருவில் மக்கள் குடங்களுடன் குழாயடியில் தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள். வெயில் கொடுமை தாங்க முடியவில்லை என்று வட இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி புலம்புகிறார்கள். அவர்கள் எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது!

இதெல்லாம் படத்தில் எந்தளவு தூரம் தமிழர்களுக்கு எதிரான இனவாதம் கட்டமைக்கப் படுகின்றது என்பதற்கான உதாரணங்கள். இந்தக் காட்சியமைப்புகளுக்கு பின்னால் ஒரு மேட்டுக்குடி மனப்பான்மை மட்டுமல்லாது, தமிழர்களுக்கு எதிரான இனவாத வெறுப்புணர்வும் காணப்படுகின்றது. இது தான் நாங்கள் எதிர்க்க வேண்டிய விடயம்.

பொதுவாகவே வட இந்தியர்கள் தம்மை உயர்வாகவும், தென்னிந்தியர்களை தாழ்வாகவும் கருதும் போக்கு உள்ளது. இருப்பினும், பிற தென்னிந்திய மாநிலங்களை விட்டு விட்டு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து எதிர்ப்பதற்கு சில விசேட காரணங்கள் உள்ளன.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் ஹிந்தி மொழி மேலாதிக்கம் தீவிரமாக எதிர்க்கப் பட்டு வருகின்றது. அரசியல் களத்தில் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பவர்கள் மத்தியில் கூட தமிழ் மொழி பேசுவதில் ஒரு பெருமிதம் இருக்கும். இந்த விடயத்தில் வலதுசாரிகளும், இடதுசாரிகளும் கட்சி வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு வேற்றுமை கூட அங்கே மறைந்து விடும். தமிழர்களின் இந்த ஒற்றுமை உணர்வு வட இந்தியர்களுக்கு மிகுந்த எரிச்சல் ஊட்டி வருகின்றது.

இதனை என்னுடன் பேசிய சில வட இந்திய நண்பர்கள் நேரடியாகவே தெரிவித்துள்ளனர். அதிலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கடல் கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் மீது காட்டும் "தொப்புள்கொடி உறவு பாசம்" கண்டு அவர்கள் இன்னும் பல மடங்கு எரிச்சல் அடைகிறார்கள். இந்த வெறுப்புணர்வை பேமிலி மேன் படத்தில் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஈழத்தவர் என்றாலும், தமிழ்நாட்டவர் என்றாலும் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்று இந்திய நடுவண் அரசுக்கு "போட்டுக்" கொடுக்கிறது. தமிழ்நாட்டில் பேரினவாத மொழியான ஹிந்தியும் பேசத் தெரிந்த அதிகார வர்க்கத்தினரை நம்பலாம். ஆனால், தமிழ் மட்டுமே பேசும் மக்களை நம்ப முடியாது. ஆகவே, தமிழ்நாட்டை விரைந்து ஹிந்தி மயப் படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு. இது தான் இந்திய அரசுக்கும், பார்வையாளர்களுக்கும் பேமிலி மேன் தெரிவிக்கும் செய்தி.

உதாரணத்திற்கு புலனாய்வுத்துறை அதிகாரியாக வரும் முத்து அரசுக்கு விசுவாசமாக இருக்கிறார். அதே மாதிரி இயக்கத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டே காட்டிக் கொடுக்கும் இன்போர்மர் செல்லமும் ஹிந்தி பேசுகிறார். துரோகிகள் ஆட்சியாளர்களின் நண்பர்கள் என்பது உண்மை தானே? இதன் இன்னொரு வடிவம் தான், லண்டனில் இயங்கும் நாடுகடந்த ஈழ அரசின் தலைவராக காட்டப்படும் தீபன் என்ற பாத்திரம். அவரும் தனக்குத் தெரிந்த இரகசியங்களை எல்லாம் இந்திய அரசுக்கு தெரிவித்து விடுகிறார். படத்தின் முடிவில் இவர்களுக்கு மெடல் கொடுத்து கௌரவிக்காதது மட்டுமே குறை.

எப்போதும் இந்திய மத்திய அரசுடன், அதாவது ஹிந்தி பேரினவாதத்துடன் ஒத்தோடிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளை இந்த பேமிலி மேன் படம் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது. அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதைத் தான் அவர்களது கதறல்களும் வெளிப்படுத்துகின்றன. தங்களுக்கு "தமிழீழம் பிரிவது மட்டுமே முக்கியம் என்றும், தமிழ்நாடு எப்போதும் போல இந்திய இறையாண்மையை ஏற்று நடக்கும் என்றும்..." வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் சொல்லி வருகின்றனர்.

அதற்கு பேமிலி மேன் சொல்லும் பதில் என்ன? "நீங்கள் இலங்கையின் இறையாண்மையை எதிர்க்கிறீர்கள் என்றால், இந்தியாவின் இறையாண்மையையும் எதிர்க்கிறீர்கள் என்று அர்த்தம்! அதனால் நாங்கள் உங்களை பாகிஸ்தான் ISI உடனும், காஷ்மீர் தீவிரவாதிகளுடனும் சேர்த்துத் தான் பார்ப்போம்!"

இங்கே சில உதாரணங்களை பார்ப்போம்: 
- இந்தப் படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் ராஜி என்ற பெண் போராளியை, ஒரு கட்டத்தில் வேதாரணியத்தில் (பெயர் மாற்றி இருக்கிறார்கள்) பிடித்து உள்ளூர் போலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் எல்லோரும் இயக்கத்திற்கு ஆதரவானவர்கள். அதனால் உளவுத்துறையினரின் விசாரணையில் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். மாறாக, மக்கள் ஒன்று சேர்ந்து புலனாய்வுத்துறை அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். போலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி பெண் போராளி ராஜியை விடுவித்து விடுகிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது ஒரு காஷ்மீர் போராளி!

- லண்டனில் மறைந்து வாழும் "புலிகள்"(?) இயக்கத் தலைவருக்கு உற்ற நண்பனாக வருபவர் ஒரு ISI அதிகாரி. யாருக்கும் தெரியாமல் இயக்கத் தலைவர் பாஸ்கரனை பாதுகாப்பாக பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த இயக்கத்தின் "உப தலைவர்" தீபனை கூட நம்ப முடியாது. ஏனென்றால் அவர் இந்திய அரசுடன் ஒத்துழைப்பவர். இறுதியில் தீபனின் காட்டிக்கொடுப்பால் தலைவர் பாஸ்கரன் சயனைட் கடித்து தற்கொலை செய்து கொள்கிறார். அதாவது, பாகிஸ்தானிகளும், காஷ்மீரிகளும் ஈழத்தமிழர்களுடன் மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால், இந்தியர்களை (ஹிந்தி பெரும்பான்மையினரின் அரசு) வெறுக்கிறார்கள்.

இப்படிப் போகிறது கதை!

Sunday, December 27, 2020

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் பற்றிய திரைப்படம்

அவுஸ்திரேலிய அரசு, தனது நாட்டில் வந்து தஞ்சம் கோரும் அகதிகளை, தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்து வருடக் கணக்காக கொடுமைப் படுத்துவதை Stateless என்ற பெயரில் படமாக்கி உள்ளார்கள். பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப் பட்ட இந்தப் படத்தை Netflix இல் பார்க்கலாம். 


இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் வரும் அகதிகள் தடுப்பு முகாம்களில் அடைத்துக் வைக்கப் படுகின்றனர். அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் காரணமாக அகதிகள் அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். படத்தின் தொடக்கத்திலேயே இரண்டு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கூரையின் மேலே நின்று ஆர்ப்பாட்டம் செய்வதைக் காட்டுகின்றனர்.

அந்த தடுப்பு முகாமில் அவுஸ்திரேலிய பிரஜையான மனநலம் பாதிக்கப் பட்ட பெண் ஒருவரும் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் உண்மையாக நடந்ததாக படத்தின் முடிவில் காட்டுகிறார்கள். அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் முரண்பட்டதாலும், ஒரு cult அமைப்பில் நடந்த அத்துமீறல்களாலும் மனநலம் பாதிக்கப்பட்டு தப்பியோடுகையில் போலீசிடம் பிடிபடும் பொழுது தான் ஒரு ஜெர்மன் பிரஜை என்று பொய் சொல்லி விடுகிறாள். அதனால் அவளை விசா இல்லாத விரும்பத்தகாத வெளிநாட்டவரை தங்க வைக்கும் தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுகின்றனர். இருப்பினும் கடைசி வரையில் யாரும் அவளது அவுஸ்திரேலிய ஆங்கில உச்சரிப்பு (accent) குறித்து சந்தேகப் படாதது ஆச்சரியத்திற்குரியது. அன்றைய காலத்தில், இந்த தவறானது ஊடகங்களில் வெளியாகி, அவுஸ்திரேலிய அரசுக்கு பெருத்த அவமானத்தை தேடித் தந்தது.

அரசு ஒரு தனியார் நிறுவனத்திடம் முகாமை காவல் காக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் காவலாளிகளில் சிலர் மனிதாபிமானமற்று நடந்து கொள்வதுடன், ஒரு கேள்வி கேட்ட அகதியை அடித்து நொறுக்குகின்றனர். அதற்காக சம்பந்தப் பட்ட காவலாளிகள் இடைநிறுத்தம் செய்யப் படவில்லை. அரசும் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்வதில்லை.

காவலாளிகள் ஒரு அகதியை அடித்து காயப்படுத்திய புகைப்படம் அவுஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து யார் கமெரா வைத்திருந்தார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். அகதிகளை பார்வையிட வரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கொண்டு வந்த உணவுப் பொருளை சோதித்து அதற்குள் மறைத்து வைத்திருந்த மொபைல் தொலைபேசியை பறிமுதல் செய்கின்றனர். அதைத் தொடர்ந்து வெளியில் இருந்து பார்வையாளர்கள் வருவதையும், முகாம் தொலைபேசி பாவனையும் தடுக்கின்றனர். உணவுச்சாலையும் மூடப் படுகிறது. அகதிகள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து தான் உரிமைகளை வென்றெடுக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வரும் முக்கிய பாத்திரமான ஆப்கான் அகதி அமீரின் கதை படத்தில் தெளிவாக சொல்லப் படவில்லை. அமீர் முதலில் தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு, பின்னர் இன்னொரு படகில் அவுஸ்திரேலியாவுக்கு வருகிறான். அங்கு வந்த பின்னர் தனது ஒரு மகள் மட்டுமே தப்பி வந்ததை அறிந்து கொள்கிறான். மனைவியும் இன்னொரு மகளும் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி விட்டனர். அமீர், இந்தோனேசியாவில் படகில் ஏறும் பொழுது தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு அவன் மட்டும் ஏன் திரும்பிச் சென்று கடத்தல்காரர்களிடம் அடி வாங்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை. படத்தில் கூறப்படும் அமீரின் கதையானது அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் பார்வைக் கோணத்தில் இருந்து சொல்லப் படுவதாக நான் கருதுகிறேன். விசாரணை அதிகாரி அவனை ஒரு கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டி தஞ்சக் கோரிக்கையை நிராகரிக்கிறாள். அதற்கு காட்டப் படும் ஆதாரங்களிலும், சொல்லப் படும் கதைகளிலும் பல ஓட்டைகள் உள்ளன.

குடிவரவு அமைச்சு "நம்பத் தகுந்தது" எனக் காட்டும் ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல. இதை படத்தில் முக்கியமான பாத்திரமாக வரும் இன்னொரு குடியேற்ற அதிகாரியே கூறுகிறார். உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானில் அப்போதிருந்த தாலிபான் அரசுடன் தொடர்பு கொண்டு அமீரின் சகோதரனின் மரணச் சான்றிதழ் எடுத்த விடயம் நம்பத் தகுந்ததாக இல்லை. அத்துடன் Smart phone வந்திராத காலத்தில், இந்தோனேசியாவில் அகதிகளை ஏமாற்றி பணம் பறித்த கிரிமினலுடனான சந்திப்பை, யாரோ ஒருவர் பதிவு செய்ததாக விசாரணை அதிகாரி காட்டும் வீடியோ நம்பும் படியாக இல்லை. அநேகமாக அமீரின் தஞ்சக் கோரிக்கையை நிராகரிப்பதற்கு காரணம் தேடி, அவுஸ்திரேலிய அரசு தானாகவே ஒரு கற்பனைக் கதையை புனைந்துள்ளதாக தெரிகின்றது.

இது போன்ற சில குறைகள் இருந்தாலும், மொத்ததில் படம் சொல்ல வந்த விடயத்தை அழகாக சொல்லி விடுகின்றது. அதாவது அவுஸ்திரேலிய அரசு அகதிகளை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை மனதில் பதியும் வண்ணம் படமாக்கி உள்ளனர். அத்துடன், இப்படியான சந்தர்ப்பங்களில் பன்னாட்டு அகதிகளுக்கு இடையில் ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் அழகாகக் காட்டப் பட்டுள்ளது. அவர்கள் தமக்குள் முரண்பட்டு மோதிக் கொள்ளாமல், அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Saturday, February 22, 2020

பாரசைட் vs மின்சார கண்ணா: முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டு! அதை வழிபடாதே!!


Parasite vs Minsara kanna : Fuck the Capitalism! Don't worship it!! 
பாரசைட் vs மின்சார கண்ணா : முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டு! அதை வழிபடாதே!!

ஆஸ்கார் விருதுகள் வென்ற தென் கொரிய திரைப்படமான Parasite, முன்பு தமிழகத்தில் வெளியான மின்சார கண்ணா திரைப் படக் கதையை தழுவி எடுக்கப் பட்டதாக, அதன் தயாரிப்பாளர் தேனப்பன் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ல் வெளியான மின்சார கண்ணா திரைப்படமும், Bong Joon Ho இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான Parasite திரைப்படமும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத மாறுபட்ட கதைகளை கொண்டுள்ளன. அது பற்றிய ஒரு சிறிய அலசல்.

- Parasite, மின்சார கண்ணா இரண்டும் முற்றிலும் வேறுபட்ட கதையமைப்பை கொண்ட திரைப்படங்கள். இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளை விட வேற்றுமைகளே அதிகம். இரண்டும் எதிரெதிரான வர்க்கப் பார்வை கொண்டவை.

- பாரசைட் படக்கதை முழுக்க முழுக்க ஓர் ஏழைக் குடும்பத்தின் கண்ணோட்டத்தில் நகர்கிறது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா திரைக்கதை ஒரு பணக்காரக் குடும்பத்தின் பார்வையில் இருந்து சொல்லப் படுகிறது. இரண்டும் முற்றிலும் முரண்பாடான வர்க்க அரசியல் கருத்துக்களை கருப்பொருளாகக் கொண்ட திரைப்படங்கள்.

- தமிழகத்திலும், தென் கொரியாவிலும் வர்க்க நிலைப்பாடு ஒன்று தான். பணக்கார வீட்டில் பிறந்த பிள்ளை பணத்தில் புரளுவதும், ஏழை வீட்டில் பிறந்த பிறந்த பிள்ளை வறுமையில் வாடுவதும் இரண்டு நாடுகளுக்கும் பொதுவான சமூக யதார்த்தம். அது என்றும் மாறாத முதலாளித்துவ பொருளாதார நியதி. பாரசைட் திரைப்படம் இந்த உண்மையை உள்ளபடியே காட்டுகிறது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் காட்டுகிறது. "ஏழைகள் கஷ்டப் பட்டு உழைத்தால் பணக்காரர் ஆகலாம்..." என்ற பொய்யை நம்ப வைக்க முயல்கிறது.

- பாரசைட் படத்தில் வரும் ஏழைக் குடும்பத்தினர் அடித்தட்டு வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களது வர்க்கக் குணாம்சம் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. உழைக்கும் வர்க்க மக்களை சுரண்டிக் கொழுத்த பணக்காரர்களை நம்மால் முடிந்த அளவு சுரண்டுவதில் தவறில்லை என நினைக்கிறார்கள். அவர்கள் பணக்கார குடும்பத்தில் வேலைக்கு சேர்வதற்கு பின்னணியில் உழைக்கும் வர்க்கம் சார்ந்த பழிவாங்கும் குணாம்சம் உள்ளது. இந்த வர்க்கப் போராட்டம் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. முதலாளிக்கு போலி விசுவாசம் காட்டுவது, வேலை செய்யாமல் இழுத்தடிப்பது, கம்பனி பொருட்களை திருடுவது... இப்படிப் பலவுண்டு.

- அதற்கு மாறாக மின்சாரக் கண்ணாவில் காட்டப் படுவது உண்மையில் ஓர் ஏழைக் குடும்பம் அல்ல! ஏற்கனவே மேல்தட்டில் இருந்த பணக்காரக் குடும்பம்! படத்தின் கதாநாயகன் விஜய்யின் காதலுக்காக அவனது குடும்பத்தினர் "ஏழைகளாக நடிக்கிறார்கள்"! ஜெர்மனியில் வசதியாக வாழ்ந்த மல்ட்டி மில்லியனர் குடும்ப உறுப்பினர்கள், இந்தியா வந்து கஷ்டப்பட்டு வீட்டு வேலைகள் செய்கிறார்களாம்! மகனின்/சகோதரனின் காதலுக்காக இந்த கஷ்டங்களை பொறுத்துக் கொள்கிறார்களாம்! இதன் மூலம் "பணக்காரர்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள் பார்த்தீர்களா?" என்று கதாசிரியர் நமது காதுகளில் முழம் முழமாக பூச்சுற்றுகிறார். படத்தில் ஆண்களை வெறுக்கும் பணக்காரியாக வரும் வரும் குஷ்பு ஆரம்பத்தில் ஏழைத் தொழிலாளியாக இருந்து "உழைப்பால் உயர்ந்து" பணக்காரியாக வந்தவர் என்பது அடுத்த பூச்சுற்றல்.

- பாரசைட் திரைப்படத்தின் நோக்கம் இன்றைக்கும் சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுவது. காலங்காலமாக முதலாளித்துவத்தால் ஒடுக்கப்பட்டு வரும் அடித்தட்டு வர்க்கம் திருப்பித் தாக்க வேண்டும் என்பது தான் பாரசைட் படக் கதை. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா ஆண்- பெண் எனும் பாலின முரண்பாட்டை முன்வைக்கிறது. படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையில் ஆண்களை வெறுக்கும் ஒரு பணக்காரியின் விசித்திரமான நடத்தை தான் காட்டப் படுகிறது. சமூகத்தில் நிலவும் பிரதானமான வர்க்க முரண்பாடு பற்றிப் பேசாமல், "ஆண்-பெண் பாலின முரண்பாடு" என்று திரிப்பது ஒருவகையில் முதலாளித்துவ அடிவருடி அரசியல்.

- பாரசைட் படத்தின் நோக்கம் முழுவதும் பார்வையாளர்களுக்கு அடித்தட்டு ஏழை மக்கள் மீது அனுதாபத்தை உண்டாக்குவது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா பணக்கார வர்க்கத்தினர் மீது அனுதாபத்தை உண்டாக்கும் நோக்கில் எடுக்கப் பட்டுள்ளது. இது முற்றிலும் முரண்பாடான வர்க்கக் கண்ணோட்டம். இரண்டு திரைப்படங்களையும் எடுத்த டைரக்டர்கள் எதிரெதிரான வர்க்க நிலைப்பாட்டில் உள்ளவர்கள். பாரசைட் திரைப்பட இயக்குனர் Bong Joon Ho "முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவோம்!" (Fuck the capitalism!) என்று ஆஸ்கார் விழா மேடையில் முழங்கியவர். மின்சாரக் கண்ணா திரைப்பட இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் வாயில் இருந்து முதலாளித்துவம் என்ற சொல் கூட வராது. அவருக்கு அந்தளவு தைரியம் இல்லை. தற்போதும் அவர் இயக்கும் தமிழ்ப் படங்கள் நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்களை கொண்டுள்ளன. இப்படியானவர்கள் ஆஸ்கார் விருது குறித்து கனவு கூட காணமுடியாது.

- பாரசைட் திரைப்படம் மின்சாரக் கண்ணா திரைப்படத்தின் தழுவல் என்பது சுத்த அபத்தமானது. அது ஒரு மலினமான விளம்பர உத்தி. வர்க்க அரசியல் பற்றி தெளிவில்லாத தற்குறிகள் மத்தியில் மட்டுமே இந்த மலினப் பிரச்சாரம் எடுபடும். ஆஸ்கார் விருதுக்கேற்ற தமிழ்ப் படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் சமூகப் பிரச்சினைகள் குறித்த அரசியல் அறிவு இருக்க வேண்டும். மின்சாரக் கண்ணா எடுத்தவர்களிடம் அது துளி கூட இருக்கவில்லை. வழக்குப் போடுவதற்கு முன்னர் வர்க்க அரசியல் படியுங்கள்!

Wednesday, October 09, 2019

ஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்


புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது. கிட்டத்தட்ட ஐம்பது பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். படம் அனைவரையும் கவர்ந்தது. பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இது போன்ற திரைப்படம் இதற்கு முன்னர் வந்ததில்லை என்பதே எல்லோருடைய கருத்துமாக இருந்தது. குறிப்பாக கதாநாயகனாக வரும் புதியவன் ராசையா, தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் சுந்தரம் என்ற பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார்.


2009 ம் ஆண்டு இறுதிப் போரின் முடிவுடன் படம் தொடங்குகிறது. ஒரு போர்க்களத்தில் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப் பட்ட பின்னர் தனித்து நிற்கும் கஸ்தூரி எனும் பெண் போராளியுடன் கதை தொடங்குகிறது. தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் சுந்தரம் (புதியவன் ராசையா) அவரை தனது மனைவி என்று சொல்லி கூட்டிச் சென்று இராணுவத்திடம் சரணடைகின்றனர். கூடவே அஜாதிக்கா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை்யை சுந்தரம் தனது மகள் என்று சொல்லி கூட்டிக் கொண்டு வருகிறார். (படத்தில் அஜாதிக்கா பாத்திரத்தில் நடித்திருப்பவர் டைரக்டரின் சொந்த மகள்.) இந்த மூவரும் ஒரே குடும்பமாக புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வருகிறார்கள்.

இந்தத் தொடக்கக் காட்சிகள், முன்னர் வெளிவந்த தீபன் திரைப்படத்தை நினைவுபடுத்தின. அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட முன்பின் தெரியாத மூன்று மனிதர்கள் குடும்பமாக ஒன்று சேரும் கதை தான். ஆனால், இரண்டுக்கும் இடையில் வித்தியாசமும் உள்ளது. தீபன் திரைப்படம் ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலத்தை பேசுகின்றது. அதற்கு மாறாக ஒற்றைப் பனைமரம் வன்னியில் தங்கிவிட்ட அகதிகளின் வாழ்வில் நடக்கும் அவலங்களை பற்றிப் பேசுகின்றது.

போர் முடிந்த பின்னர், யாழ்ப்பாண சமூகத்தில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஒற்றைப் பனைமரம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இது அங்குள்ள சமூக யதார்த்தம். இந்த உண்மை பலரது முகத்தில் அறைந்து முகமூடிகளை கிழித்துள்ளது. இல்லாவிட்டால் இந்தத் திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்குமா?

நெதர்லாந்திலும் இந்தப் படம் திரையிடப் படுவதை சிலர் தடுத்தார்கள். "தேசியத்திற்கு எதிரான படம்" என்று காரணம் சொன்னார்கள். ஆனால், படத்தில் அப்படி எந்த "தேசிய எதிர்ப்பையும்" காணவில்லை. படத்தில் சொல்லப் படும் உண்மைகள் சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். சம்பவங்கள், பாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் எதுவுமே கற்பனை அல்ல. நிஜத்தில் நடந்தவை தான். ஒருவேளை கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக வந்திருக்கும். அப்படி நடக்காமல், எல்லோரும் பார்த்து இரசிக்கும் வகையில் படத்தை தயாரித்து வெளியிட்ட டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், முன்னாள் போராளிகளின் அவலங்களும், வறுமையின் கொடுமையும் சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. ஏழை, எளியவர்களை சுற்றியே கதை பின்னப் பட்டுள்ளது. உதாரணமாக, தனது இரண்டு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு சம்மதிக்கும் விமலா என்ற இளம் தாய். லண்டனில் இருந்து வந்த தமிழ்ப் பணக்காரனின் காமவெறிக்கு பலியாகி தற்கொலை செய்து கொள்ள சென்ற அவலம். இவை இரக்கமற்ற வர்க்க பேதமுள்ள சமூகத்தில் நடக்கும் கொடுமைகள்.

விமலா போன்ற அபலைகள் வாழ்வதைக் கூட ஏற்றுக் கொள்ள விரும்பாத அயோக்கியர்கள் எம்மத்தியில் உள்ளனர். அப்படியானவர்கள், படத்தில் அந்த இளம் பெண்ணை சீரழித்த லண்டன் பணக்காரன் போன்ற கொடியவர்களை மறைத்து வைப்பார்கள். ஒற்றைப் பனைமரம் திரைப்படம் இது போன்ற அயோக்கியர்களின் இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகின்றது. அதே நேரம், நிஜ உலகில் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தினரும் அப்படியான மனிதர்கள் தான்.

திரைப்படம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. சுருக்கமாக சொன்னால், இதுவும் ஒரு விடுதலைப் போராட்டக் கதை தான். கடந்த கால போராட்டத்தில் நடந்த தவறுகளை திருத்தி, சரியான வழியில் கொண்டு செல்வதைப் பற்றிப் பேசுகின்றது. இந்தத் திரைப்படத்தில் கடந்த கால அரசியல் விமர்சிக்கப் படுகிறது. அதே நேரம் நிகழ்கால அரசியல் பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் ஆணித்தரமாக முன்வைக்கிறது. எதிர்கால அரசியலை தீர்மானிப்பது பார்வையாளர்களான எமது கைகளில் உள்ளது.

இந்தத் திரைப்படம் ஈழப்போரில் சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினரையும் விமர்சிக்கிறது. அந்த விமர்சனம் ஊடாக தீர்வுகளை தேடுகிறது. உதாரணத்திற்கு, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய வரலாறு ஒரு சில காட்சிகளில் நிகழ்த்திக் காண்பிக்கப் படுகிறது. அதை முன்னாள் புலிப் போராளியான கஸ்தூரிக்கு, அவளது இஸ்லாமிய நண்பி சொல்வதைப் போன்று காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதைக் கேட்டு வருத்தப்படும் கஸ்தூரி மன்னிப்புக் கோருகிறாள். இன்னொரு காட்சியில், மாற்று இயக்கம் ஒன்றை சேர்ந்த சுந்தரம் புலிகளால் சித்திரவதை செய்யப் பட்ட கதையை கஸ்தூரி வாயால் சொல்ல வைக்கிறது.

இறுதிப்போருக்கு முன்பிருந்த, புலிகள், மாற்று இயக்கத்தினர், முஸ்லிம்கள் போன்ற அடையாளங்கள் இங்கே களையப் படுகின்றன. தற்போது அவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய அடையாளத்தை தேடுகிறார்கள். இது தான் படக் கதை கூறும் அரசியலின் சாராம்சம். வர்க்க அரசியலின் தாக்கம் பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது.

பிரான்சில் இருந்து வந்தவர் முன்னாள் போராளிக்கு உதவி செய்வதாக காட்டி போட்டோ எடுக்க முயற்சிக்கிறார். இதைக் கண்டவுடன் அந்த உதவியை மறுக்கும் முன்னாள் போராளியான கஸ்தூரி, ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறார். அதே மாதிரி, முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக வேலைக்கு சேர்க்க மறுக்கும் புடவைக்கடை உரிமையாளர் உதவிக்கு கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறாள்.

ஒரு மலையகத் தமிழ்ப் பெண்ணான கஸ்தூரியின் குடும்பத்தினர், லண்டன் பணக்காரனின் காணிக்குள் கொட்டில் கட்டி வாழ்ந்தவர்கள். தற்போது லண்டனில் இருந்து திரும்பி வந்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமையாளரை "வெளியே போடா!" என்று சொல்லும் தைரியம் வரக் காரணம், கஸ்தூரியின் கடந்த கால போராளி வாழ்க்கை தான். அன்று நடந்தது வெறுமனே தமிழீழத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற போராளிகளுக்கு, அதுவே வர்க்கப் போராட்டமாகவும் இருந்துள்ளது.

முன்னாள் போராளிகள் சிலர் பணக்காரர்களின் அடியாட்களாக வேலை செய்கிறார்கள். லண்டனில் இருந்து வந்த பணக்காரனின் வீட்டில் தான் முன்னாள் போராளி கஸ்தூரி குடியிருக்கிறாள். அவளை வெளியேற்ற அனுப்பிய அடியாட்கள் கஸ்தூரியின் பேச்சால் மனம் திருந்தி சுந்தரத்தின் அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள். கஸ்தூரி அவர்களை புலிகள் இயக்கத்தின் நற்பண்புகளை சொல்லி திருத்துவதாக காட்சி அமைந்துள்ளது. ஆனால், சுந்தரத்தின் அரசியலுடன் ஒன்று சேர்வதற்கு வர்க்க உணர்வு அவசியம்.

லண்டனில் புலிகளுக்காக காசு சேர்த்து பணத்தை பதுக்கியவர், இலங்கை வந்த நேரம் தனது சொந்த நலனுக்காக சிங்களப் புலனாய்வுத் துறையினருடன் கூட்டுச் சேர்கிறார். பணம் இனபேதம் பார்ப்பதில்லை. பணம் இருக்கும் இடத்தில் அதிகாரமும் கூட்டுச் சேரும். கள்ளுக் கடையில் அரசியல் பேசிய சுந்தரத்தை சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்ய வேண்டிய காரணம் என்ன?

ஈழத்தில் இப்போதும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வர்க்க அடிப்படையில் புதிய நண்பர்கள் கூட்டுச் சேர்கிறார்கள். புதிய எதிரிகள் உருவாகிறார்கள். கூடவே துரோகிகளும் இருக்கிறார்கள். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி இந்த சமூகம் அக்கறை படுவதில்லை. அவர்கள் முன்னாள் புலிப் போராளிகளாக இருந்தாலும் கழிவிரக்கம் கொள்வதில்லை.

படத்தின் தொடக்கத்தில் கஸ்தூரி கேட்கிறாள்: "எம்மைப் பற்றி சனம் கேவலமாக பேசுவதை கேட்கும் பொழுது, இந்த மக்களுக்காகவா இவ்வளவு காலமும் போராடினோம் என்ற வெறுப்பு ஏற்படுகிறது." அதே கஸ்தூரி படத்தின் முடிவில் சொல்கிறாள்: "சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கும் மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?" திரைப்படத்தில் பேசப்படும் வசனங்கள் கூரான அம்புகளாக இதயத்தை துளைக்கின்றன.

எந்தத் தலைமையையும் எதிர்பாராமல் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக ஒன்று திரண்டு போராடக் கிளம்பினால்....? ஒற்றைப் பனைமரம் தோப்பாகுமா? இது ஒரு பொழுதுபோக்கு திரைப் படம் அல்ல. இந்தத் திரைப்படம் பன்முகத்தன்மை கொண்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசியல், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்தத் திரைப் படத்தைப் பார்க்க வேண்டும்.

Tuesday, June 26, 2018

மெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி

முதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரைப்படத்தை பாருங்கள். ஓரளவு வசதியான மத்தியதர வர்க்க குடும்ப இளைஞர்கள் கூட, விலை உயர்ந்த ஆடம்பர நுகர் பொருட்களுக்கு ஆசைப்பட்டு திருடர்களாக மாறுகிறார்கள்.

இது வெறும் சினிமாக் கற்பனை அல்ல. அன்றாட வாழ்க்கையின் யதார்த்தம். அந்தப் படத்தில் வருவதைப் போன்று, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் பவனி வர ஆசைப்பட்டு நச்சரிக்கும் யுவதிகளை, ஐபோன் வைத்திருக்க ஆசைப்படும் இளைஞர்களை, இன்று நாங்கள் கிராமங்களிலும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, "வீரஞ் செறிந்த விடுதலைப் போராட்டம் நடந்த மண்" என்று போற்றப்படும் ஈழத்திலும் இது தான் நிலைமை. சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் Mahathevan Nadanathevan தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட நிலைத் தகவல் இது. தமது பிள்ளைகளின் துர்நடத்தைகள் பற்றி போலீஸில் முறைப்பாடு செய்யும் பெற்றோர் பற்றிய பின்வருமாறு எழுதி உள்ளார்:
//உயர்தரம் படிக்கும்போதே விலை கூடின போன், விலை கூடின ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை வாங்கித்தருமாறு சண்டை பிடிப்பதாகவும், அவ்வாறு மறுக்கும் சந்தர்ப்பங்களில் தமக்கு அடிப்பதாகவும், கூடாத சினேகிதர்களுடன் சேர்ந்து ஊரைச்சுற்றிவிட்டு தாங்கள் நினைத்த நேரத்தில் வீடு வருவதாகவும் கூறுகின்றனராம்.//(26-6-18)

இது "தமிழர்களுக்கு மட்டுமே வரும் வியாதி" அல்ல. உலகம் முழுவதும் இது தான் நடக்கிறது. அத்துடன், வறிய நாடுகளில் மட்டுமே நடப்பதாகவும் சொல்ல முடியாது. பணக்கார நாடுகளும் விதிவிலக்கு அல்ல. "எல்லோரும் எல்லாமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதாக" நினைத்துக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் கூட திருட்டுக்களும், வழிப்பறிகளும் பெருமளவில் நடக்கின்றன.

நியூ யோர்க், டொராண்டோ, லண்டன், பாரிஸ் என்று எந்தப் பெரு நகரத்திலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பதின்மூன்று வயதிலேயே திருடத் தொடங்கும் இளைஞர்கள் செல்வந்த நாடுகளிலும் உண்டு. பருவ வயதில் விபச்சாரம் செய்ய தொடங்கும் யுவதிகளும் உண்டு. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், "விலை உயர்ந்த நுகர் பொருட்களின் மீதான மோகம்" என்று பதில் வரும். ஆடம்பர வசதி வாய்ப்புகளை பணக்கார குடும்பத்து பிள்ளைகள் மட்டும் அனுபவிக்க வேண்டுமா? ஏழைக் குடும்பத்து பிள்ளைகளுக்கு ஆசை இருக்காதா?

மேற்கத்திய நாடுகளில் கேங் (Gang) கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது. பதினைந்துக்கும், இருபத்தைந்துக்கும் இடைப்பட்ட வயதினர் ஒரு குழுவாக சேர்ந்து திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர். இளம் குற்றவாளிகளின் நடத்தைகளை ஆராய்ந்தால் பெரும்பாலும் கிடைக்கும் முடிவு இது தான். முதலாளித்துவ நுகர்பொருட்கள் மீதான வெறி குற்றங்களை செய்யத் தூண்டுகிறது.

சந்தையில் புதிதாக வரும் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பாவனைப் பொருட்களை வாங்கும் வசதியற்ற குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், எங்காவது திருடியாவது வாங்க நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் திருட்டு ஒரு குற்றம் அல்ல. ஆனால், குறிப்பிட்ட ஒரு பிராண்ட் பொருள் தன்னிடம் இல்லை என்பதை ஒரு பெரும் குறையாகக் கருதுகிறார்கள். இது குறித்து பிராண்ட் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் "பெருமைப்" பட்டுக் கொள்ளலாம்.

முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. அப்போது உலகமயமாக்கல் இருக்கவில்லை. இலங்கை, இந்தியா மட்டுமல்லாது, பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் சந்தை பெரும்பாலும் உள்ளூர் உற்பத்தியை நம்பி இருந்தது. மேலைத்தேய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தன. அவற்றை வாங்குவதற்கான கடை குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருக்கும். அப்படி ஒரு கடை இருப்பதே பலருக்கும் தெரியாது.

அந்தக் காலங்களில், பணக்காரர்கள் மொத்த சனத்தொகையில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த படியால் சற்று அடக்கமாக இருந்தனர். விலை உயர்ந்த   ஆடம்பர பொருட்களை பகிரங்கப் படுத்தாமல் தமக்குள்ளே வைத்துக் கொண்டார்கள். ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. பண வசதி படைத்த உயர் மத்திய தர வர்க்கத்தின் பெருக்கம், ஆடம்பரப் பொருட்களுக்கான சந்தையை விஸ்தரிக்க வைத்துள்ளது. அது கிராமங்களை கூட விட்டு வைக்காமல் எங்கும் வியாபித்துள்ளது.

உலகமயமாக்கல் காரணமாக, இன்று அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப் படும் ஒரு பொருள், நாளைக்கே உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்து விடும். ஒவ்வொரு நாட்டிலும் பெரிய நகரங்கள் மட்டுமல்லாது, சிறிய நகரங்களிலும் உள்ள இலட்சக் கணக்கான கடைகளுக்கு விநியோகிக்கப் பட்டிருக்கும். ஒரு பொருள் சந்தைக்கு வரும் முன்னரே, அது தொடர்பான ஆரவாரமான விளம்பரங்கள் அறைகூவல் விடுக்கும். அது போதாதென்று, "சராசரி" இளைஞர்களின் "சாதாரணமான" உரையாடல்களில் அது பற்றிய தகவல்கள் பரிமாறப் படும்.

எமக்கு அவசியமான பாவனைப் பொருள் சந்தையில் மலிவான விலையில் கிடைத்தாலும் வாங்க மாட்டோம். ஏனென்றால் அது "பெயர் தெரியாத", "யாராலும் விரும்பப் படாத" பொருள். எல்லோராலும் விரும்பி வாங்கப் படும் பிராண்ட் பொருட்களையே வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் படுகிறோம்.

"அனைவராலும் விரும்பப் படும்" நுகர் பொருட்கள்,  அவற்றின் பிராண்ட் பெயருக்காக மட்டும் செயற்கையாக விலை கூட்டி விற்கப் படும். ஒரு ஐபோனின் உற்பத்திச் செலவு ஐம்பது டாலர்களாக இருக்கலாம். ஆனால், அது ஐநூறு டாலர்களுக்கு விற்கப் படும். அதை விட அதிக விலை வைத்தாலும் வாங்குவதற்கு ஏராளமானோர் போட்டி போடுவார்கள். 

இவ்வாறு முதலாளித்துவம் மனிதர்கள் எல்லோரையும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருளை வாங்க முடியாத அளவுக்கு வருமானம் குறைந்தவர்களின் நிலைமை தான் சங்கடமானது. பலர் அது பற்றிய ஏக்கத்துடனே பொழுதைக் கழிப்பார்கள். நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதற்கு கூட வெட்கப் படுவார்கள். இதைவிட இளம் பிராய நண்பர்களுக்கு இடையிலான ஏளனப் பேச்சுக்கள், சீண்டல்கள் மன உளைச்சல் உண்டாக்கும் அளவிற்கு மோசமாக இருக்கும்.

அதை விடக் கொடுமை, சமூகத்தில் இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு இல்லாமை தான். மேற்குறிப்பிட்ட விடயங்கள் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் கூட, அதற்குக் காரணம் முதலாளித்துவம் என்று வாய் திறந்து சொல்ல மாட்டார்கள். மெத்தப் படித்தவர்களிடம் கூட இது குறித்த அறியாமை உள்ளது. அதனால் தான் பல்கலைக்கழக மாணவர்கள் கூட நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாகிறார்கள். குற்றச் செயல்களில் கூட ஈடுபடுகிறார்கள்.

மெட்ரோ திரைப்படத்தில், நுகர்பொருள் கலாச்சாரத்தால் சமூகத்தில் விளையும் தீமைகள்  மிகவும் தெளிவாக காட்டப் படுகின்றன. ஒரு அப்பாவி கல்லூரி மாணவன், விலை உயர்ந்த நுகர்பொருள்களுக்கு ஆசைப் பட்டு, தெருவில் பெண்களின் தங்கச் சங்கிலி அறுக்கும் திருடனாக மாறுகிறான். முதலாளித்துவ நுகர்வு வெறி ஒரு மனிதனை மிருகமாக்குகிறது. ஒரு கட்டத்தில் பெற்ற தாயையே கொலை செய்யும் அளவிற்கு இரக்கமற்ற ஜடமாக மாற்றுகிறது.

திரைப்படத்தில் வரும் உணர்ச்சிகரமான காட்சிகளை பார்த்து கண்ணீர் விட்டவர்கள் பலரிருப்பார்கள். ஆனால், அவர்களது கோபம் எப்போதும் தனி மனிதர்களின் மீது மட்டுமே இருக்கும். எந்தக் கட்டத்திலும், இந்த முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு எதிராகத் திரும்பாது. அந்த விடயத்தில் திரைப்படமும் மௌனம் சாதிக்கிறது. ஆனால், படம் வெளியிட அனுமதிக்க முடியாமல் தணிக்கை சபைக்கு மட்டும் ஏதோ நெருடி இருக்கிறது. வயது வந்தோர் மட்டும் பார்க்கலாம் என A சேர்ட்டிபிகேட் கொடுப்பதற்கும் தயங்கி இழுத்தடித்ததாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். என்ன செய்வது? முதலாளித்துவ அரக்கனின் அடிமடியில் கை வைத்தால் சும்மா விடுவார்களா?

Wednesday, June 20, 2018

இரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே!

முதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் மாதிரி, இதுவும் குற்றச் செயல்களில் ஈடுபடும் தனிநபர்களே பிரச்சினைக்கு காரணம் என்பது போல சித்தரித்து திசைதிருப்பி விடுகின்றது. எந்த இடத்திலும் முதலாளித்துவம் மீதான விமர்சனம் கிடையாது.

பேஸ்புக் "இலவசமாக" கிடைப்பதற்குக் காரணம் தகவல் திருட்டு என்பது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க், அமெரிக்க காங்கிரஸ் விசாரணைக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. கூகிள் கூட தகவல் திருட்டில் ஈடுபடும் நிறுவனம் தான். இவ்வாறு பல பன்னாட்டு IT நிறுவனங்கள் சட்டபூர்வமான தகவல் திருட்டில் ஈடுபட்டிருக்கின்றன.

இந்தத் தகவல் திருட்டு, சட்டபூர்வமான வழிகளில் நடக்கிறது. உதாரணத்திற்கு நாம் புதிதாக பேஸ்புக் கணக்கு திறக்கும் பொழுது, அவர்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக சம்மதம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் பாவிக்க முடியும். பேஸ்புக் நிறுவனம் நமது தகவல்களை மூன்றாம் நபருக்கு விற்பதற்கு அனுமதிப்பதும் நிபந்தனைகளில் ஒன்று.

நமது தகவல்களை திருடி விற்காமல், மார்க் சுக்கர்பெர்க் உலகில் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக வந்திருக்க முடியுமா? அமெரிக்க பங்குச் சந்தையில் குறிப்பிடும் அளவிற்கு பேஸ்புக் நிறுவனம் கோடிக் கணக்கான இலாபம் சம்பாதிக்க முடியுமா? சுருக்கமாக, இரும்புத்திரை திரைப்படத்தில் வரும் வில்லன் பாத்திரமான சத்தியமூர்த்தியின் (அர்ஜுன்) இடத்தில் மார்க் சுக்கர்பெர்க்கை வைத்துப் பார்த்தால் தவறேதும் இல்லை.

ஆனால், இரும்புத்திரை திரைப்படம் அதைப் பற்றிப் பேசாமால், ஸ்மார்ட் போன்களை ஹேக் செய்யும் கிரிமினல் கும்பல்கள் பற்றி மட்டுமே பேசுகின்றது. இது படத் தயாரிப்பாளர், இயக்குனரை பொறுத்தவரையில் "பாதுகாப்பான அரசியல்". இப்படித் தான், இது போன்ற பல அரசியல் படங்கள், மக்களை அரசியல் மயப் படுத்தாமல், பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருப்திப் பட வைக்கின்றன.

ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய 1984 நாவலில், மக்கள் அனைவரையும் கண்காணித்து, அவர்களது சிந்திக்கும் திறனையும் மாற்றும் சக்திவாய்ந்த அரசு பற்றி எழுதி இருந்தார். இன்று அந்த நாவலில் கற்பனை செய்ததை விட பல மடங்கு அதிகமாக கண்காணிக்கப் படுகிறோம். "பெரியண்ணன் கண்காணிக்கிறான்" (Big brother is watching) என்று நாவலில் ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய வாசகம் உண்மையாகி உள்ளது.

ஒரு வீட்டிற்குள், நான்கு சுவருக்குள் என்ன நடக்கிறது என்பதை மொபைல் போன், தொலைக்காட்சி பெட்டி என்பன மூலம் இலகுவாக உளவறிய முடியும். இதற்காகவே எல்லா ஸ்மார்ட் போன்களிலும் அமெரிக்கா ஒரு மென்பொருளை பொருத்தி விட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கல் கூட அமெரிக்காவினால் ஒட்டுக் கேட்ட விவகாரம் வெளியாகியது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து மக்களின் வாழ்க்கையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும்,அது மக்களை நுகர்வோர் எனும் விலங்குகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. எமது விருப்பங்களை துல்லியமாக அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு பொருட்களை விளம்பரம் செய்கிறார்கள்.

நூறு வருடங்களுக்கு முன்பிருந்த முதலாளிகளுக்கு, வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. மக்களின் விருப்பங்கள் மாறும் பொழுது, அல்லது குறையும் பொழுது நட்டம் ஏற்பட்டு, மூடப் பட்ட வணிக நிறுவனங்கள் பலவுண்டு. இனிமேல் அந்தப் பிரச்சினை இல்லை. 

தகவல் தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவரதும் மூளைகளை கட்டுப்படுத்துகின்றது. உலகில் மிகவும் சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களே இந்தக் குற்றங்களில் பகிரங்கமாக ஈடுபடுகின்றன. அதை அமெரிக்கா உட்பட உலகில் எந்த அரசும் கட்டுப்படுத்துவதில்லை. தாராளமாக திருடலாம் என வசதி ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது.

இரும்புத்திரை திரைப்படத்தில் கடன் எனும் அடிமை விலங்கு, அதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் விரிவாக காட்டப் படுகின்றது. இன்றைய காலத்தில் முதலாளித்துவ பொருளாதாரம் முழுவதும் கடனை நம்பியே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்பை தீர்மானிப்பது தங்கம் அல்ல, கடன் என்பது பலர் அறியாத தகவல். 

"பணக்கார நாடுகள்" என்று கருதப்படும் மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மை மக்கள், கடந்த பல தசாப்த காலமாக கடனில் தான் வாழ்கிறார்கள். வெளிநாட்டு மோகத்தில் மேற்குலகு செல்லும் நம்மவர்கள், இந்த உண்மையை அங்கு சென்ற பின்னர் தான் அறிந்து கொண்டனர்.

கடன் விடயத்தில் வங்கிகள் நேர்மையாக நடந்து கொள்வது போலவும், இடைத் தரகர்களான கிரிமினல்கள் ஏமாற்றுவது போலவும், இரும்புத்திரை திரைப்படத்தில் காட்டுவது மாதிரி எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. பத்திரங்களை பார்க்காமல் இலகு கடன் கொடுக்கும் விடயத்தில் வங்கிகளிலும் ஊழல் நடக்கிறது. 

இதற்கு சிறந்த உதாரணம், அமெரிக்காவில் 2008 ம் ஆண்டு ஏற்பட்ட சப் பிரைம் மோசடியும், அதனால் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியும் ஆகும். தகுதி இல்லாதவர்களுக்கு கடன் கொடுத்த மோசடி காரணமாக, Lehman Brothers போன்ற அமெரிக்காவின் மிகப் பழமையான வங்கிகள் கூட திவாலாகின. இதே பிரச்சினை காரணமாக, ஒரு குட்டி ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் வங்கிகள் திவாலான படியால், அந்த நாட்டுப் பொருளாதாரமே ஸ்தம்பிதம் அடைந்தது.

தற்போது வரும் பல தமிழ்த் திரைப்படங்கள், மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றன. அந்தளவுக்கு ஒரு குறைந்த பட்ச விழிப்புணர்வு உருவாகி உள்ளது. இருப்பினும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும், தனி நபர்களை வில்லன்களாக காட்டுவதாலும், திரைப்படம் சொல்ல வரும் செய்திகளை மக்கள் கவனத்தில் எடுக்காமல் விடுகின்றனர்.

இறுதியாக, இந்தத் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து அல்லது வாங்கி வெளியிட்டுள்ளமை ஒரு வேடிக்கையான முரண்நகை. மொபைல் போன் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுவது முதல், கிரிமினல்களின் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்தது வரையில், லைக்கா நிறுவனம் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இரும்புத்திரை படத்தில் காட்டப்படும் தகவல் திருட்டை லைக்கா நிறுவனமே செய்து கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் லைக்கா சிம் கார்ட் "இலவசமாக" கொடுக்கும் பொழுது, அதில் ஒரு கவர்ச்சியான விளம்பரம் இருக்கும். லைக்காவின் இணையப் பக்கத்தில், மொபைல் போன் இலக்கத்துடன், எமது பெயர், முகவரி போன்ற விபரங்களை பதிவு செய்தால் 5-10 யூரோ/பவுன்ஸ் "இலவசமாக" கொடுக்கிறார்கள்.

இந்த "இலவச" சலுகைக்கு ஆசைப்பட்டு, பல பாவனையாளர்கள் தமது பெயர் விபரங்களை பதிவு செய்வார்கள். லைக்கா நிறுவனம் அவற்றை ஏதாவதொரு கால் சென்டருக்கு நல்ல விலைக்கு விற்று விடும். லைக்கா விற்பனை செய்யும் ஒரு தகவலின் விலை நூறு யூரோ/பவுன் என்று வைத்துக் கொண்டாலும், நமக்கு "இலவசமாக" தரும் பணம் அதில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. இந்த விபரங்களை லைக்காவில் வேலை செய்த ஒருவரே என்னிடம் தெரிவித்திருந்தார்.

சுருக்கமாக, இரும்புத்திரை படத்தில் சொல்லப்படும் குற்றச் செயலை, அதைத் தயாரித்த லைக்கா நிறுவனமே செய்கிறது. அந்தத் திரைப்படத்தின் கதை தனது நிறுவனத்தின் மோசடிகளை அமபலப் படுத்துகிறது என்று தெரிந்து கொண்டே, லைக்கா நிறுவனம் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்வில் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட, இந்த முதலாளித்துவ எதிர்ப்புத் திரைப் படத்தை இரசித்து பார்த்து விட்டு பாராட்டுகிறார்கள்! இதிலிருந்தே, தமிழ் மக்களின் அரசியல் அறிவு எந்தளவு மந்தமாக இருக்கிறது என்பது புரியும். மக்களின் அறியாமை தான் அரசியல்வாதிகளின் முதலீடு என்று சொல்வார்கள். லைக்கா வெளியிட்ட  இரும்புத்திரையும் அந்த ரகம் தான். 

Tuesday, January 30, 2018

வேலைக்காரன் - திரையில் ஒலிக்கும் உழைக்கும் மக்களின் கலகக் குரல்

வேலைக்காரன் திரைப்படம்: ஒரு நிகழ்கால அரசியல்- பொருளாதாரக் கண்ணோட்டம்


"எங்களோட இந்த முயற்சியே ஒரு மார்க்கெட்டிங் தான். நல்லது ஜெயிக்கும் என்று sample காட்ட..."

படத்தின் முடிவில் வரும் இந்த வசனம் தான், இதன் "மார்க்கெட்டிங் வெற்றி" எனலாம். மார்க்ஸிய சொல்லாடலான "உழைக்கும் வர்க்கம்" என்பதை, இந்தத் திரைப்படத்தில் "வேலைக்காரர்கள்" என்று மக்களின் பேச்சு மொழியில் பயன்படுத்துகின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இதுவே படத்தின் வெற்றிக்கு காரணம். அதாவது, கம்யூனிசத்தை உழைக்கும் மக்களின் மொழியில் புரிய வைப்பதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். அது நிறைவேறியுள்ளது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இந்திய மத்தியதர வர்க்கத்தினர் கார்பரேட் நிறுவனங்களை கைநீட்டி வரவேற்றனர். துரித உணவுகளை Junk food என்றும் பாராமல் உண்டு களித்தனர். அன்று அது "நாகரிகமாக" கருதப் பட்டது. மேலைநாட்டு கார்ப்பரேட் கலாச்சாரத்தை வெறித்தனத்துடன் பின்பற்றுவதில் பெருமைப் பட்டனர்.

ஆனால், காலப்போக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல், துரித உணவுகளில் கலந்துள்ள இரசாயன நஞ்சு போன்ற விடயங்கள் வெளித் தெரியவாரம்பித்தன. அதன் எதிரொலி தான் வேலைக்காரன் திரைப்படம். இது "முதலாளித்துவம் தனது சவக்குழியை தோண்டுகின்றது" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னதை நினைவுபடுத்துகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் "படிப்புக்கேற்ற ஊதியம் தருகிறார்கள்" என்று இறுமாந்திருந்தனர். தற்போது தாமும் உழைக்கும் வர்க்கம் தான் என்பதையும், முதலாளிகள் ஈவிரக்கமின்றி தமது உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதையும் உணர்கிறார்கள். இவர்கள் நவீன பாட்டாளிவர்க்கமாக மாறியுள்ளனர். 

அத்தகைய சமூகப் பின்னணியில் இருந்து வந்தவன் தான் வேலைக்காரன் படக் கதாநாயகன். இவன் போன்ற குட்டி முதலாளிய இளைஞர்கள், ஆரம்பத்தில் முதலாளிக்கு விசுவாசமாக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் சமூக விழிப்புணர்வு பெற்று, பாட்டாளி வர்க்க நலன்களுக்காக வென்றெடுக்கப் படுவார்கள். இது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் கூறியது. வர்க்க சிந்தனையில் ஏற்படும் பண்பு மாற்றத்தை வேலைக்காரன் திரைப்படம் திறம்பட எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில்,விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்கு சேரும் கதாநாயகன் அறிவு, முதலாளிக்கு விசுவாசமாக பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு குப்பத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, உழைக்கும் வர்க்கப் பின்னணி கொண்ட அறிவு, தனக்குக் கிடைத்த கார்ப்பரேட் வேலையை பெரிதாக எண்ணுகிறான். தனது குப்பத்து இளைஞர்களை அடியாட்களாக பயன்படுத்தி, கூலிக்கு கொலை செய்யும் தாதாவான காசியை வெறுக்கிறான். ஆனால், ஒரு கட்டத்தில் காசி தனது நண்பனை கொல்லும் போது உண்மை தெரிய வருகின்றது.

காசி போன்ற பேட்டை ரவுடிகளையும் காரப்பேட் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அப்போது ஓர் உண்மை உரைக்கிறது. முதலாளிகளின் அடியாட்களாக கூலிக்கு கொலை செய்யும் ரவுடிக் கும்பலுக்கும், சம்பளம் வாங்கிக் கொண்டு மனச்சாட்சியை அடைவு வைத்து விட்டு வேலை செய்யும் மத்தியதர வர்க்க அடியாட்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு தரப்பினரும் முதலாளிய நிறுவனங்களின் குற்றங்களுக்கு உடந்தையாகின்றனர்.

தமக்கு எதிரானவர்களை அடிப்பது, கொலை செய்வது போன்ற "சட்டவிரோத  செயல்களை" கூலிக்கு மாரடிக்கும் அடியாட்களிடம் ஒப்படைத்து விட்டு, தமது கை சுத்தம் என்று மேட்டுக்குடி கனவான்களாக நடந்து கொள்வது தான் கார்ப்பரேட் கலாச்சாரம். அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் இது தான்  நடக்கிறது. 

இருபது வருடங்களுக்கு முன்னர், எண்ணை வள நாடான நைஜீரியாவில், எண்ணைக் கழிவால் மக்களின் வாழ்விடம் மாசடைவதை எதிர்த்துப் போராடிய, ஒரு பிரபல சூழலியல்வாதி (Ken Saro-Wiwa) கொலை செய்யப் பட்ட சம்பவத்திற்குப் பின்னால் ஷெல் நிறுவனம் இருந்தது. அது அப்போது உலகச் செய்தியாகி ஷெல் நிறுவனத்திற்கு அவமானத்தை தேடித் தந்தது.

நெதர்லாந்தில் ஒரு தடவை, "உங்களுக்குப் பிடிக்காத விடயம் எது?" என்று ஒரு கார்ப்பரேட் நிர்வாகியிடம் கேட்ட நேரம், "எல்லாம் தெரிந்து வைத்திருப்பவர்கள்" என்று பதில் கூறினார். அவர் சுட்டிக் காட்டிய "எல்லாம் தெரிந்தவர்கள்" இடதுசாரி சமூக ஆர்வலர்கள் தான். உண்மை தெரிந்தவர்கள், அதை மக்களுக்கு சொல்லி விடக் கூடாது என்பதில் முதலாளிகள் கவனமாக இருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனம், எங்கெல்லாம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது? அவற்றின் சட்டவிரோத செயல்கள், நிதி மோசடிகள், உழைப்புச் சுரண்டல்கள் போன்ற பல விபரங்களை தேடி அறியும், மேற்கத்திய இடதுசாரி அமைப்புகள், அந்த அறிவை மக்களிடம் பரப்புவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. வேலைக்காரன் திரைப்படத்தில் மேற்படி இடதுசாரி செயற்பாட்டாளர்களின் மொத்த உருவமாக கதாநாயகன் அறிவு காட்டப் படுகின்றான். இங்கே அறிவு என்பது ஒரு தனி மனிதன் அல்ல. சமூக உணர்வாளர்களின் பொது வடிவம்.

மேற்குலக நாடுகளில் உழைக்கும் வர்க்கம் உரிமைக்காக போராடும் ஒவ்வொரு தடவையும், முதலாளிய வர்க்கம் அதைக் கடுமையாக எதிர்த்து நிற்கும். ஆனால், ஒரு தடவை தொழிலாளர்கள் (அல்லது நுகர்வோர்) தமது நியாயமான உரிமைகளை வென்று விட்டால், அந்த வெற்றிக்கு முதலாளிகளும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

மேற்கைரோப்பிய நாடுகள் மனித உரிமைகள் விடயத்தில் "நாகரிக வளர்ச்சி" கண்டுள்ளது என்றால், அதற்குக் காரணம் அங்கு நடந்த தொழிலாளர் போராட்டங்கள் தான். ஆனால், அயோக்கியத்தனமாக அந்த உண்மையை மறைக்கும் மேற்கத்திய முதலாளிய வர்க்கம், அதை தானே செய்ததாக தம்பட்டம் அடிக்கும். இந்த அயோக்கியத்தனம், வேலைக்காரன் திரைப்படத்தில் ஆதி என்ற பாத்திரம் மூலம் காட்டப் படுகின்றது.

திரைப்படத்தில் தான் வேலை செய்யும் கம்பனி தயாரிக்கும் பொருட்களில் இரசாயன நஞ்சு கலந்துள்ளது என்ற உண்மையை தெரிந்து கொள்ளும் அறிவு, இரண்டு நாட்களுக்கு தரக் கட்டுப்பாட்டுக்கு ஏற்றவாறு வேலை செய்யும் திட்டத்தை கொண்டு வருகிறான். அறிவின் மேலாளரும், போட்டி நிறுவன முதலாளியின் மகனுமான ஆதி, தந்திரமாக அதற்கு உடன்படுகிறான்.

அதற்குப் பின்னால், போட்டி நிறுவனத்தை கழுத்தறுக்கும் முதலாளிகளின் சுயநலம் ஒளிந்துள்ளது. அது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் ஆதி தானே தொழிலாளர்களின் பாதுகாவலன் என்றும் காட்டிக் கொள்வான். நிஜ வாழ்வில், இந்த விடயங்கள் பல்வேறு கம்பனிகளில் பல வருட கால இடைவெளிகளுக்குள் நடந்துள்ளன. 

அவற்றை கோர்வையாக்கி, ஒரே கதையாக கூறத் தெரிந்த டைரக்டரின் திறமையை பாராட்ட வேண்டும். பெரும்பாலும் படித்தவர்களும் கவனம் செலுத்தாத, கார்ப்பரேட் ஊழல்களை, பொருளாதார நுணுக்கங்களை, மிகவும் எளிமையாக பாமர மக்களுக்கும் புரிய வகையில் கூறியிருக்கும் டைரக்டரை மெச்சலாம்.

இரண்டு மணிநேர திரைப்படத்தில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பது உண்மை தான். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் எளிதான விடயம் அல்ல. இருட்டைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்காமல், ஒரு மெழுவர்த்தியை ஏற்றி வைக்கலாம். அதைத் தான் வேலைக்காரன் திரைப்படம் கூற முனைகின்றது. 

உலகில் எதுவும் போராடாமல் கிடைப்பதில்லை. அதை புதிய சிந்தனைகளுடன் வடிவமைப்பதும் அவசியமாகின்றது. உதாரணத்திற்கு, வேலைநிறுத்தம் செய்வது மட்டும் போராட்டம் அல்ல. "வேலை செய்வதும்" ஒரு போராட்ட வடிவம் தான்.

அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் உள்ளிருந்து வேலை செய்து கொண்டு போராடிய சம்பவங்கள் நடந்துள்ளன. (பார்க்க: சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது) அதாவது, வழமை போல முதலாளிக்கு விசுவாசமாக உற்பத்தி செய்யாமல், சமூகத்திற்காக உற்பத்தி செய்யும் போராட்டம்.

ஒரு தொழிலகம், சமூகத்தில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்கப் பட்ட முடிவுப் பொருட்களை அந்த சமூகத்திற்கே விற்கிறது. (இது முதலாளித்துவ மார்க்கெட்டிங் பாடநூலில் எழுதப் பட்டுள்ளது.) அதன் அர்த்தம், தொழிலாளர்கள் சமூகத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கான நஷ்டஈடாக சம்பளம் பெற்றுக் கொள்கிறார்கள். எதற்காக முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்? இந்தக் கேள்வியை வேலைக்காரன் திரைப்படம் எழுப்புகின்றது.

தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியான அறிவுக்கும், முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியான ஆதிக்கும் இடையில் நடக்கும் விட்டுக்கொடுக்காத போராட்டமே படத்தின் பின்பாதிக் கதை. அறிவின் யோசனைப் படி, தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் தரக் கட்டுப்பாடுடன் தயாரித்த பொருட்களை, ஆதி எரித்துக் கொளுத்தி நாசமாக்கி விடுகிறான். இதனால் தரமான பொருள் சந்தைக்கு வருவது தடுக்கப் படுகின்றது. 

இறுதியில், தொழிலாளர்கள் நேர்மையாக வேலை செய்யும் விழிப்புணர்வு பெற்றதே வெற்றி தான் என்பது அறிவின் வாதம். அது இன்னொரு கட்டத்திற்கு நகர வேண்டும். தொழிலாளர்கள் தாமே நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்த வேண்டும். குறைந்த பட்சம், கம்பனி நிர்வாகிகள் குழுவில் தொழிலாளர் பிரதிநிதிகளை சேர்த்துக் கொள்ள வற்புறுத்த வேண்டும்.

Sunday, October 08, 2017

க்மெர் ரூஜ் ஏன் ஒரு சிறுமியின் தந்தையைக் கொன்றார்கள்?


"முதலில் அவர்கள் எனது தந்தையைக் கொன்றார்கள்" (First They Killed My Father) - க்மெர் ரூஜ் பற்றிய கம்போடிய திரைப்பட விமர்சனம்.

 கம்போடியாவில், க்மெர் ரூஜ் கால கொடுமைகளை கூறுவதற்காக, பிரச்சார நோக்கில் எடுக்கப் பட்ட ஹாலிவூட் திரைப்படங்களுக்கு மத்தியில் First They Killed My Father ஒரு மாறுபட்ட படைப்பு எனலாம். நிச்சயமாக, இந்தப் படமும் க்மெர் ரூஜை வில்லன்களாக தான் சித்தரிக்கிறது. இருப்பினும் மிகைப்படுத்தல்கள் இல்லாமல், உண்மையில் நடந்த சம்பவங்களை மட்டும் படமாக்கியுள்ளனர்.

எண்பதுகளில் வெளியாகி, உலகம் முழுவதும் பிரபலமாக்கப் பட்ட, The Killing Fields என்ற, ஹாலிவூட்டின் அரசியல் பிரச்சாரப் படத்துடன் ஒப்பிடும் பொழுது, இது எவ்வளவோ மேல் என்று சொல்லலாம். இதுவும் அடிப்படையில் ஒரு க்மெர் ரூஜ் எதிர்ப்புப் படமாக இருந்தாலும், அன்று நடந்த சம்பவங்களை உள்ளதை உள்ளபடியே காட்டியிருக்கும் நேர்மையை பாராட்டலாம்.

இரண்டு திரைப்படங்களுக்கும் என்ன வித்தியாசம்? குறிப்பாக சொல்வதென்றால், The Killing Fields படத்தில் "க்மெர் ரூஜ் எனப்படுவோர் மனநோய் பிடித்த கொலைகாரர்கள்" என்பதைப் போல காட்டி இருப்பார்கள். ஏன் கொலை செய்தார்கள் என்ற கேள்வி எதுவும் கேட்கப் படாது. அதற்கான பதிலும் கிடைக்காது. க்மெர் ரூஜ் என்றால் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள் என்ற பிம்பத்தை பார்ப்பவர் மனதில் பதிய வைக்க வேண்டும். அது தான் நோக்கம்.

First They Killed My Father திரைப்படத்தின் தொடக்கத்தில், தலைநகர் ப்னோம்பென்னில் வாழும் மத்தியதர வர்க்க குடும்பத்தைக் காட்டுகிறார்கள். ஒரு தகப்பன், தாய், மூன்று பிள்ளைகள். மூத்த பெண் பிள்ளைக்கு பன்னிரண்டு வயது இருக்கலாம். அவள் எழுதிய சுயசரிதையை தான் படமாக்கியுள்ளதாக கூறுகிறார்கள். கம்போடியாப் போரில் க்மெர் ரூஜ் வென்றதும், ப்னோம்பென் வாசிகளை வெளியேற்றுவதில் இருந்து படம் ஆரம்பிக்கிறது.

அவர்கள் முதலில் எனது தந்தையைக் கொன்றார்கள் என்ற தலைப்பின் படி, க்மெர் ரூஜ் அந்த சிறுமியின் தந்தையை கொன்ற பின்னர், குடும்பம் சிதறுகின்றது. பிள்ளைகள் தப்பியோடி வேறு இடங்களில் உள்ள க்மெர் ரூஜ் முகாம்களில் சரணடைகிறார்கள். வியட்நாம் படையெடுப்பின் பின்னர் ஒன்று சேருகிறார்கள். இதற்கிடையில், அவர்களது தாயையும் க்மெர் ரூஜ் கொன்று விட்டிருப்பார்கள். இது தான் கதைச் சுருக்கம்.

ஏன் க்மெர் ரூஜ் ஒரு சிறுமியின் தந்தையைக் கொன்றார்கள்? இதைப் போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் அந்தப் படத்தில் உள்ளன. ஆனால், பார்ப்பவரின் வர்க்கத் தன்மைக்கு ஏற்றவாறு, அதை சரியாகவோ, தவறாகவோ புரிந்து கொள்ளலாம். அந்தத் தந்தையை வசதியாக வாழும் மத்தியதர வர்க்கப் பிரதிநிதியாக மட்டும் படத்தில் காட்டவில்லை. முந்திய அடக்குமுறை அரசில் பணியாற்றிய, இராணுவ சீருடை அணிந்த அதிகாரியாகவும் காட்டுகிறார்கள். க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்ற பிறகு, அவரது உயிருக்கு எந்நேரமும் ஆபத்து வரலாம்.

எழுபதுகளில் வியட்நாம் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டம். கம்யூனிசத்தை தடுப்பது என்ற பெயரில் அமெரிக்கா கம்போடியாவிலும் இராணுவ நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அன்றிருந்த அமெரிக்க சார்பு கம்போடிய அரசு, அமெரிக்க இராணுவ உதவியுடன் சொந்த மக்களை அடக்கியொடுக்கி ஆண்டு வந்தது. அரச கொலைப் படையினரால் கொல்லப் பட்ட மக்கள் ஒரு புறம். அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சுகளால் கொல்லப் பட்ட மக்கள் மறுபுறம். அப்போதே குறைந்தது இரண்டு மில்லியன் கம்போடிய மக்கள் இனப் படுகொலை செய்யப் பட்டனர்.(இதற்காக அமெரிக்கர்கள் யாரையும் ஐ.நா. நீதிமன்றம் விசாரிக்கவில்லை.)

இத்தகைய மனிதப் பேரவலங்களுக்கு மத்தியில் தான், கம்போடிய விடுதலைக்காக போராடிய க்மெர் ரூஜ் இயக்கம் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து தலைநகரைக் கைப்பற்றியது. அமெரிக்க சார்பு அடக்குமுறை அரசு கவிழ்ந்தது. இருந்தாலும் அதை இறுதி வெற்றியாக கருத முடியாது. எந்நேரமும் அமெரிக்க விமானங்கள் குண்டு வீச வரலாம். கம்யூனிசத்தை முளையிலே கிள்ளி ஏறிய வேண்டுமென்ற வெறியுடன் இலட்சக் கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்கா, தற்போது கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றி விட்டார்கள் என்றவுடன் சும்மா இருக்குமா?

மில்லியன் கணக்கான சனத்தொகை கொண்ட தலைநகர் ப்னோம்பென்னை விட்டு மக்களை வெளியேறுமாறு, க்மெர் ரூஜ் ஒலி பெருக்கிகளில் அறிவித்தார்கள். இந்தக் காட்சி திரைப்படத்தில் இடம்பெறுகின்றது. நெடுஞ் சாலைகளில், ஆயுதமேந்திய க்மெர் ரூஜ் படையணிகள் தலைநகரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அதே சாலையின் மறு புறத்தில், சாரி சாரியாக பொது மக்கள் கிராமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர், ஈழத்தில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதே காட்சிகளைக் காணக் கூடியதாக இருந்தது. சிறிலங்கா இராணுவம், யாழ் குடாநாட்டை பிடிப்பதற்கான போர் நடந்து கொண்டிருந்தது. இராணுவம் வருவதற்கு முன்னர், யாழ்நகரில் இருந்து காங்கேசன்துறை வரையிலான அத்தனை ஊர்களிலும் இருந்த மக்கள் வெளியேற்றப் பட்டனர். தமிழ் மக்களின் பாதுகாப்புக் கருதியே இதைச் செய்வதாக புலிகள் கூறினார்கள்.

போகும் வழியில், க்மெர் ரூஜ் சோதனைச் சாவடிகளில், மக்கள் கொண்டு சென்ற ஆடம்பரப் பாவனைப் பொருட்கள் பறிக்கப் படுகின்றன. வசதியாக வாழ்ந்த மத்தியதர வர்க்க குடும்பங்களுக்கு இவையெல்லாம் "பெரிய இழப்புகள்" தான். ஆயினும், தனது உயிர்ப் பாதுகாப்பு கருதி, சிறுமியின் தந்தை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டு நகர்கிறார்கள். க்மெர் ரூஜ் மக்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். கிராமங்களில் அவர்களுக்கு எந்த வசதியும் இல்லை. தாமாகவே குடிசை வீடுகளை கட்டிக் கொள்ள வேண்டும்.

இங்கே குறிப்பிடப் பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. எமது தாயகத்தில், நகரத்தில் வாழும் மத்தியதர வர்க்கத்தினர் உடுப்பதற்கும், கிராமங்களில் வாழும் ஏழை விவசாயிகள் உடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு நாள், நகர மாந்தர்கள் எல்லோரும் கிராமப்புற உடைகளில் காட்சியளித்தால் எப்படி இருக்கும்? அந்த மாற்றம் தான் அப்போதைய கம்போடியாவில் நடந்தது. தலைநகரை விட்டுக் கிளம்பும் பொழுது, ஆடம்பரமாக உடையணிந்திருந்த நகர வாசிகள், க்மெர் ரூஜ் கிராமங்களில் சாதாரணமான ஏழை விவசாயிகளின் உடைகளை அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. மத்திய தர வர்க்கத்தினரை பொறுத்தவரையில் இது மிகப் பெரிய கொடுமை அல்லவா?

இதற்கு முன்னர் வந்த க்மெர் ரூஜ் எதிர்ப்புப் படங்களில், க்மெர் ரூஜ் தமது "தடுப்பு முகாம்களில்  குடும்பங்களைப் பிரித்து வைத்திருந்ததாக" காட்டி இருந்தனர். அதாவது, "ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் தனித் தனியாக பிரிக்கப் பட்டு வெவ்வேறு முகாம்களில் தங்க வைக்கப் பட்டதாக" சொல்லி இருந்தனர். அது வெறும் பிரச்சாரம். உண்மையில் அப்படி நடக்கவில்லை. இந்தப் படத்திலும், ஒவ்வொரு குடும்பமும் தனித் தனியான வீடுகளில் வசிப்பதாக காட்டுகிறார்கள். அவை மரத்தாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட குடிசை வீடுகள் தான்.

க்மெர் ரூஜ் கிராமங்களில் பொருத்தப் பட்டுள்ள ஒலி பெருக்கிகளில்  மக்களுக்கான இயக்கத்தின் அறிவிப்புகள் மட்டுமல்லாது, அரசியல் பிரச்சாரப் பாடல்களும் ஒலிபரப்பாகின்றன. முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்களுக்கு இது புதிய விடயம் அல்ல. ஊருக்கு ஊர் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளில், புலிகளின் அறிவிப்புகளும், அரசியல் பிரச்சாரப் பாடல்களும் ஒலிபரப்பாகின. அப்போதெல்லாம் சினிமாப் பாடல்களை கேட்பதே அபூர்வம். 

கம்போடியாவில், க்மெர் ரூஜ் பொதுவாக மக்கள் மத்தியில் "இயக்கம்" என்றே அழைக்கப் பட்டது. "இயக்கம் அப்படிச் சொல்கிறது, இயக்கம் இப்படிச் சொல்கிறது" என்று தான் பேசிக் கொள்வார்கள். புலிகளின் de facto தமிழீழத்திலும் அதே நிலைமை தான் இருந்தது.

திரைப்படத்தில் வரும் குடும்பம், க்மெர் ரூஜ் சந்தேகப் பார்வை தம் மீது விழாமல் கவனமாக நடந்து கொள்கிறது. தமது கடந்த கால மத்தியதர வர்க்க அடையாளங்களை தாமாகவே மறைத்துக் கொள்கின்றனர். இருப்பினும் சிறுமியின் தந்தை யார் என்ற உண்மை ஒருநாள் தெரிய வருகின்றது. அவர்கள் இருக்கும் வீட்டிற்கு இரண்டு க்மெர் ரூஜ் போராளிகள் தந்தையை தேடி வருகிறார்கள். 

க்மெர் ரூஜ் யாரையாவது "தட்டி விட" நினைத்தால் எப்படி நடந்து கொள்ளும் என்பது மக்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. யாரையும் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்வதில்லை. அயலவருக்கு சந்தேகம் எழாதவாறு நடந்து கொள்வார்கள். அதன் படி, இந்தப் படத்தில் வரும் தந்தையையும் "உங்களோடு கதைக்க வேண்டும். வேறொரு இடத்தில் வேலைக்கு வரச் சொல்கிறார்கள்..." என்று கனிவாகப் பேசி அழைத்துச் செல்கிறார்கள். 

இருப்பினும் அவர்கள் தன்னை கொல்லத் தான் வந்திருக்கிறார்கள் என்பதை, அந்தத் தந்தை புரிந்து கொள்கிறார். குடும்ப உறுப்பினர்களுடன் பிரியாவிடை வாங்கிக் கொண்டு செல்கிறார். ஆளரவம் இல்லாத ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்ற பின்னர், க்மெர் ரூஜ் அவரை சுட்டுக் கொல்கின்றனர். 

ஈழத்தில் புலிகள் இருந்த காலத்திலும் இப்படித் தான் கைது செய்வார்கள். புலிகள் யாரையாவது கொல்வதாக இருந்தால், அவருடைய வீட்டுக்கு சென்று, "உங்களோடு கொஞ்சம் கதைக்க வேண்டும்... நாளைக்கு விட்டு விடுகிறோம்..." என்று சொல்லி அழைத்துச் செல்வார்கள்.

க்மெர் ரூஜ் காலத்தில், சில இடங்களில் உணவுப் பற்றாக்குறை இருந்திருக்கலாம். ஆனால், எல்லோரும் சேர்ந்து வேலை செய்த படியால், காய்கறித் தோட்டங்களிலும், வயல்களிலும் விளைச்சல் அதிகமாக இருந்தது. அதை இந்தப் படத்திலும் காட்டுகிறார்கள். இருப்பினும் அவற்றை உற்பத்தி செய்தவர்களுக்கு போதுமான அளவு பகிர்ந்து கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப் படுகின்றது. யாராவது பசியால் திருடினாலும் கடுமையாக தண்டிக்கப் பட்டனர். 

க்மெர் ரூஜ் மக்களை துன்புருத்திய காட்சிகள் படத்தில் வருகின்றன. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. இருப்பினும் நாடு முழுவதும் இது தான் நடந்தது என்று பொதுமைப் படுத்தவும் முடியாது. ஒவ்வொரு ஊரிலும் இருந்த பிரதேசப் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவிதமாக நடந்து கொண்டார்கள். க்மெர்ரூஜ் தமது அடாவடித்தனம் காரணமாக, சில இடங்களில் மக்களின் வெறுப்பை சம்பாதித்து இருந்தனர். அதேநேரம், வேறு இடங்களில் மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தனர். 

க்மெர் ரூஜ் அரசுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான எல்லைப் போர், திரைப் படத்தில் திருப்புமுனையாக வருகின்றது. மீண்டும் ஒரு போருக்கு ஆயத்தப் படுத்துவதற்காக, க்மெர் ரூஜ் சிறுவர்களையும் படையணியில் சேர்த்துக் கொள்கிறது. அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப் பட்டன. 

இதுவும் ஈழத்துடன் ஒப்பிடத் தக்கவாறு ஒரே மாதிரி நடந்துள்ளது. க்மெர் ரூஜ் மாதிரி, விடுதலைப் புலிகளும் சிறுவர்களை படையணிகளில் இணைத்தமை குறித்து கடுமையாக விமர்சிக்கப் பட்டனர். அதற்கு புலிகள் கூறிய பதில்களும், க்மெர் ரூஜ் கூறிய பதில்களும் ஒரே மாதிரி இருக்கின்றன. மேலும், இரண்டு இயக்கங்களும் அனாதைப் பிள்ளைகளை ஆயுதபாணிகள் ஆக்குவதில் அதிக அக்கறை காட்டியுள்ளன.

வியட்நாமிய படையெடுப்புக்கு பின்னர் தான், க்மெர் ரூஜ் பிடியில் இருந்த மக்களுக்கு விடுதலை கிடைத்தது என்று படத்தில் காட்டி இருக்கிறார்கள். இதுவும் ஒரு பக்கச் சார்பான பிரச்சாரம் தான். இராணுவ பலத்தில் மேலோங்கி இருந்த வியட்நாமிய படைகளை எதிர்த்துப் போரிட முடியாமல், க்மெர் ரூஜ் பின்வாங்கினார்கள். க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த மக்கள், வியட்நாமிய படையினர் பக்கத்திற்கு செல்கின்றனர்.

"வியட்நாமிய படையினர் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வந்த கம்போடியர்களை மனிதாபிமானத்துடன் நடத்தியதாக இந்தப் படத்தில் காண்பிக்கிறார்கள். வன்னியில் இறுதிப்போரின் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து சென்ற தமிழ் மக்களை சிங்கள இராணுவம் மனிதாபிமானத்துடன் நடத்தியதாக சொல்லப் படுவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

கம்போடியாவில் எல்லோரும் க்மெர்ரூஜை ஆதரிக்கவில்லை. அதே நேரம், கணிசமான அளவு தீவிர க்மெர் ரூஜ் ஆதரவாளர்களும் இருந்தனர் என்பதை மறுக்க முடியாது. இதையும் ஈழத்தின் நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த அனைவரும் புலிகளை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிர புலி ஆதரவாளர்களும் இருந்தனர். இரண்டும் மறுக்க முடியாத உண்மைகள் தான்.

இறுதியாக, திரைப் படத்தின் தலைப்புக்கு வருவோம். ஏன் க்மெர் ரூஜ் ஒரு சிறுமியின் தந்தையைக் கொன்றார்கள்? அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: 
  1. இந்தப் படத்தின் நாயகியான சிறுமியின் தந்தை, முன்பிருந்த அடக்குமுறை அரசின் கீழ் அதிகாரியாக பணிபுரிந்தவர். அரசுடன் ஒத்துழைத்த அனைவரும், க்மெர் ரூஜ் பார்வையில் துரோகிகள் தான். அவர்களைப் பொறுத்தவரையில், துரோகிகளை அழிப்பது தவறல்ல. அதையே தான் ஈழத்தில் விடுதலைப் புலிகளும் செய்தனர். சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்தவர்கள் தமிழர்களே ஆனாலும் துரோகிகளாக கருதப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டனர். 
  2. க்மெர் ரூஜ் நம்பிய அரசியல் சித்தாந்தப் படி, பணக்காரர்களும், நகரங்களில் வசதியாக வாழ்ந்த மத்தியதர வர்க்கத்தினரும்,  மக்கள் விரோதிகளாக கருதப் பட்டனர். அதாவது, உடல் வருத்தி உழைக்கும் பாட்டாளி வர்க்க மக்களின் உழைப்பில், சொகுசாக வாழும் ஒட்டுண்ணிகளாக கருதப் பட்டனர்.

க்மெர் ரூஜ் போராளிகளில் பெரும்பான்மையானோர் சாதாரண கிராமப்புற, அடித்தட்டு வர்க்க இளைஞர்கள் தான். அவர்களது சமூகப் பின்னணி வேறு. படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு மார்சியம் அல்லது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், வசதியாக, பணக்காரர்களாக வாழும் சமூகப் பிரிவினரை மனதிற்குள் வெறுத்திருப்பார்கள். க்மெர் ரூஜ் அந்த வர்க்க முரண்பாட்டை கூர்மைப் படுத்தி, அடித்தட்டு வர்க்க வாலிபர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்து, அவர்களை வர்க்க எதிரிகளுக்கு எதிராக திருப்பி விட்டது. இந்தப் பின்னணியில் தான், அங்கு நடந்த சித்திரவதைகள், படுகொலைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

Monday, July 25, 2016

கபாலி சொல்லாத "மண்ணின் மைந்தர்களின்" கதை


ரஜனிகாந்த் நடித்துள்ள க‌பாலி திரைப்ப‌ட‌ம் ம‌லேசிய‌ த‌மிழ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் பிர‌ச்சினையை மைய‌மாக‌ வைத்து எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அந்த‌ விட‌ய‌த்தில் இது பாராட்ட‌த் த‌க்க‌ ப‌டைப்பு. ப‌ட‌ம் முழுவ‌தும் காட்பாதர் திரைப் ப‌ட‌த்தை நினைவுப‌டுத்தினாலும், இது ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் நடைமுறைப் பிர‌ச்சினையை கூறும் த‌னித்துவ‌ம் கொண்ட‌து.

அர‌சிய‌ல் பேசும் ப‌ட‌மாக‌ இருந்தாலும், அது ம‌லேசிய‌ அர‌சின் விளையாட்டு விதிக‌ளுக்கு அமைய‌வே எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. ப‌ட‌த்தின் தொட‌க்க‌த்தில் ஒரு த‌மிழ் சிறை அதிகாரி சொல்வார்: "வெளியே போய் ப‌ழைய‌ப‌டி ஆர‌ம்பிக்காதிங்க‌... த‌மிழ‌ர்க‌ளுக்கு இங்கே கெட்ட‌ பெய‌ர் இருக்கிற‌து." இது தான் எம‌க்கு ம‌லேசிய‌ அரசு சொல்ல‌ விரும்பும் "அறிவுரை"!

கேங்ஸ்ட‌ர் க‌லாச்சார‌ம் உல‌க‌ம் முழுவ‌தும், குறிப்பாக‌ வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ (அல்லது அடைந்து வ‌ரும்) நாடுக‌ளில் உள்ள‌ பிர‌ச்சினை. ல‌ண்ட‌ன், பாரிஸ், டொர‌ன்டோ ஆகிய‌ மேற்க‌த்திய‌ ந‌க‌ர‌ங்க‌ளில், ஈழ‌த் த‌மிழ் இளைஞ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ள் இருக்கின்ற‌ன‌. அந்த‌க் குழுக்க‌ள் த‌ம‌க்குள் மோதிக் கொள்ளும். ஹாலிவூட் திரைப் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌து போன்ற‌ துப்பாக்கிச் சூட்டு ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் ந‌ட‌க்கும்.

ஒரு த‌ட‌வை ல‌ண்ட‌ன் போயிருந்த‌ நேர‌ம், "ல‌ண்ட‌னில் உள்ள‌ த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் என்ன‌ செய்கிறார்க‌ள்? " என்று ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்தேன். "த‌மிழ் ம‌க்க‌ளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்க‌ள்.... அத‌னால் எம‌க்கு ந‌ல்ல‌து செய்கிறார்க‌ள்." என்றார்க‌ள். அப்ப‌டி என்ன‌ ந‌ன்மை செய்து விட்டார்க‌ள்? க‌ட‌ன் அட்டை மோச‌டி போன்ற‌வ‌ற்றில் த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் ஈடுப‌ட்டாலும், அவர்க‌ளால் த‌மிழ‌ர்க‌ளும் பெரும‌ள‌வு பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். கோஷ்டி மோத‌ல்க‌ளில் ப‌லியாகுப‌வ‌ர்க‌ளும் த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் தான்.

க‌பாலி ப‌ட‌ம் சொல்லாத‌ க‌தையும் இது தான். கேங்ஸ்ட‌ர் க‌லாச்சார‌ம் த‌மிழ‌ர்களுக்கு ந‌ன்மை உண்டாக்குவ‌தாக‌ நினைத்துக் கொள்வோர் ப‌ல‌ருண்டு. இன்னொரு ப‌க்க‌மாக‌ பார்த்தால், இதுவும் "சிறுபான்மையின‌ருக்கு எதிரான‌ ஒடுக்கு முறையின் இன்னொரு வ‌டிவ‌ம்" என்றும் சொல்ல‌லாம். மேற்க‌த்திய‌ நாடுக‌ள் போன்று, ம‌லேசிய‌ அர‌சும் த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் மீது க‌டுமையான‌ நட‌வடிக்கை எடுப்ப‌தில்லை. கார‌ண‌ம்? த‌மிழ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்குள்ளே மோதிக் கொண்டு சாக‌ட்டும் என்ற‌ அல‌ட்சிய‌ ம‌ன‌ப்பான்மை!

வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ முத‌லாளித்துவ‌ நாடுக‌ளில், சிறுபான்மையின‌த்த‌வ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ள், அந்த‌ ச‌முக‌த்தின‌ர் பொருளாதார‌ ரீதியாக‌ "முன்னேறுவ‌தை" குறிக்கோளாக‌ கொண்டுள்ள‌ன‌. ஆனால், இது அர‌சு அனும‌திக்கும் "சுத‌ந்திர‌த்திற்குள்" சாத்திய‌மாகும். ஏனென்றால், கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ளில் சேர்ப‌வ‌ர்க‌ள் ஒரு பேரின‌வாத‌ அர‌சை தட்டிக் கேட்ப‌தில்லை. அது ம‌ட்டும‌ல்ல‌, பெரும் முத‌லாளித்துவ‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் மேலாதிக்க‌த்தை கேள்வி எதுவுமின்றி ஏற்றுக் கொள்வார்க‌ள்.

தமிழன் முன்னேறாமல் இருப்பதற்கு தமிழன் தான் காரணம் என்று, ரஜனி ஒரு "நண்டுக் கதை" சொல்கிறார்.அதாவது, ஒரு நண்டு மேலே ஏறினால், அடுத்த நண்டு இழுத்து விழுத்துமாம். தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லையென்று புலம்பும் தமிழ் தேசியவாதிகளின் அரதப் பழசான பிரச்சாரம் இது. அன்றைய கருணாநிதி முதல் இன்றைய சீமான் வரையில் "நண்டு அரசியல்" தான் பேசிவருகிறார்கள். தமிழ் மக்களை சினிமா போதைக்கு அடிமைகளாக்கி, பணத்தை சுரண்டி வாழும் "கார்ப்பரேட் நடிகன்" ரஜனிகாந்த், இதைச் சொல்வது தான் வேடிக்கை. பெரிய பெரிய பண முதலைகள், தமிழர்களை பிடித்து விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

கபாலி சொல்லும் அந்த "நண்டுகள்" எவை? படத்தில் கபாலிக்கு எதிரான கேங்க்ஸ்டர்கள். குறிப்பாக, "கபாலியை காட்டிக் கொடுத்தவர்கள், எதிரியான சீன கேங்க்ஸ்டருடன் ஒத்துழைப்பவர்கள்". மலேசிய அரசுடன் ஒத்துழைக்கும் தமிழ் அமைச்சர்களை படத்தில் மிகவும் கவனமாக தவிர்த்திருக்கிறார்கள். மலேசிய அரசு கடைப்பிடிக்கும் "பூமி புத்திரர்கள் கொள்கை" வெளிப்படையானதொரு பேரினவாதக் கொள்கை. இவ்வளவு யுத்த அழிவைக் கண்ட இலங்கையில் கூட, அந்தளவு மோசமான இனப்பாகுபாட்டுக் கொள்கை கிடையாது.

அது என்ன "பூமி புத்திரர்கள் கொள்கை"? அந்த சம்ஸ்கிருத சொல்லை தமிழில் மொழிபெயர்த்தால் மண்ணின் மைந்தர்கள் என்று அர்த்தம் வரும். அதாவது, மலே மொழி பேசும் இனத்தவர்கள் மட்டுமே மண்ணின் மைந்தர்கள். ஏனையோர் எல்லாம், சீனர்கள், தமிழர்கள் வந்தேறுகுடிகள்! இது வெளிப்படையான இனவாதக் கொள்கை என்று பலரால் கண்டிக்கப் பட்டாலும், மலேசிய அரசு இன்றைக்கும் அதை நடைமுறைப் படுத்தி வருகின்றது.

மலே இனத்தில் பிறந்தவர்கள், பணக்காரர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் வீட்டு மனை போன்ற பல துறைகளில் அரசு மானியம் கொடுக்கும். பிற இனங்களில் உள்ள ஏழைகளுக்கு அந்தச் சலுகை கிடையாது. மலேசிய அரசின் இன ஒதுக்கல் கொள்கையால் பெரியளவில் பாதிக்கப் பட்டவர்கள் தமிழர்கள் தான். பொருளாதார வல்லரசான சீனாவின் தொடர்பு காரணமாக, தனியார் முதலீடுகளில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் சீன சமூகத்தினருக்கு தனியார் துறை ஆதரவு கிடைக்கிறது.

மலேசியாவில் தமிழர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகமாக இருப்பதால், அவர்கள் மத்தியில் வேலையற்றோரும், ஏழைகளும் அதிகம். கேங்க்ஸ்டர் கலாச்சாரம் பரவுவதற்கு அதுவும் ஒரு காரணம். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அது ஏற்ற வழி. மலேசியத் தமிழ் சமூகம் முழுவதும் அப்படி என்று நினைப்பதும் தவறு. பெரும்பாலான மலே,சீன மக்கள், தமிழர்கள் பற்றி எதிர்மறையான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.

மலேசியத் தமிழர்களில் உயர் கல்வி கற்று உத்தியோகம் பார்ப்பவர்களும் ஏராளம் பேருள்ளனர். இவர்களில் சிலர் தமது மத்தியதர வர்க்க மனப்பான்மை காரணமாக மலேசிய பேரினவாத அரசுக்கு வக்காலத்து வாங்குவதுமுண்டு. மலேசிய அரசும் வேண்டுமென்றே வர்க்கப் பிரிவினையை உருவாக்கி வளர்த்து வருகின்றது. இல்லாவிட்டால் பூமி புத்திரர்களின் நாட்டு அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்களுக்கு இடம் கிடைத்தது எப்படி? தமிழ் அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட மலேசிய பேரினவாத அரசுடன் இணக்க அரசியல் நடத்துபவர்கள் தான். இதையெல்லாம் கபாலி பேச மாட்டார். படத்தை தணிக்கை செய்து விடுவார்கள் என்று பயம்.

இது காலனிய காலத்தில் இருந்து தொடரும் பிரித்தாளும் சூழ்ச்சி. மலேசியா பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்தில், ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியத் தமிழ்க் கூலிகளை தருவித்தனர். அதே நேரம், அவர்களை மேற்பார்வை செய்வதற்கு, யாழ்ப்பாணத் தமிழ் கங்காணிகளை (கண்காணிப்பாளர்) பதவியில் அமர்த்தினார்கள். பெருந்தோட்டப் பக்கம் வெள்ளைக்கார முதலாளி வரா விட்டாலும், தமிழ்க் கங்காணிகள் தமிழ்க் கூலிகளை வருத்தி வேலை வாங்கினார்கள். ஒரு காலத்தில், இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்ற பகை முரண்பாடு ஏற்படவும் அதுவே காரணமாக இருந்தது.

தமிழ் கூலித் தொழிலாளர்கள் வறுமையில் இருந்து மீள முடியாமல் தவிக்கையில், தமிழ் மேற்பார்வையாளர்கள் செல்வம் சேர்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் ஓய்வு பெறும் வயதில் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிச் சென்று, வசதியான வீடு கட்டி வாழ்ந்தார்கள். யாழ்ப்பாணத்தில் மக்கள் அவர்களை "மலேசியா பென்சனியர்" என்று அழைத்தார்கள். எழுபதுகளில், மலேசியா பென்சனியர் என்றால் பணக்காரன் என்றும் இன்னொரு அர்த்தம் இருந்தது.

தமிழர்கள் மத்தியில் இருந்த சாதிப் பாகுபாட்டையும் ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். தொழிலாளர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சாதியினராகவும், அவர்களை மேற்பார்வை செய்தவர்கள் ஆதிக்க சாதியினராகவும் இருந்தனர். மலேசியாவில் மட்டுமல்ல, இலங்கையின் மலைநாட்டில் இருந்த பெருந் தோட்டங்களிலும் அதே நிலைமை காணப் பட்டது. அதாவது, இந்தியத் தமிழ் கூலித் தொழிலாளர்கள், இலங்கைத் தமிழ் மேற்பார்வையாளர்கள். இந்தவிரு சமூகங்களுக்கு இடையில் பிளவை உண்டாக்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரம்.

கபாலி படத்தில் நண்டுக் கதை சொல்லும் ரஜனி, அதை வெறுமனே "தமிழர் எதிர் தமிழர்" என்று விளக்கம் கொடுப்பது எதற்காக? வேறொன்றுமில்லை. அப்போது தான், தமிழர்கள் மத்தியில் உள்ள வர்க்க வேற்றுமைகளை மறைக்க முடியும். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் உள்ள தமிழ்த் தேசியவாதிகளும், கபாலியின் நண்டுக் கதை சொல்லித் தான் வர்க்க முரண்பாடு வெளித்தெரிய விடாமல் பூசி மெழுகி வருகின்றனர்.