Showing posts with label தொலைக்காட்சி சீரியல். Show all posts
Showing posts with label தொலைக்காட்சி சீரியல். Show all posts

Monday, June 07, 2021

James Bond முதல் Family Man வரை

- ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் சோவியத் ரஷ்யாவையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் வில்லன்களாக காட்டி எடுத்திருந்தார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் ரஷ்யர்களும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- வியட்கொங் விடுதலைப் போராளிகளால் தென் வியட்நாம் விடுதலை செய்யப்பட்டு சில வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட ராம்போ போன்ற திரைப்படங்களில் வியட்நாமிய போராளிகளை வில்லன்களாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரை ஹீரோக்களாகவும் காட்டினார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் வியட்நாமியரும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- ராம்போ-2 வில் சோவியத் செம்படையினரை கொடூரமான வில்லன்களாக காட்டினார்கள். ஆப்கான் இஸ்லாமியவாத ஜிகாதிகளை ஹீரோக்களாக காட்டினார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- ரோஜா என்ற தமிழ்த் திரைப்படத்தில் காஷ்மீர் விடுதலைப் போராளிகளை இஸ்லாமிய மதவெறி பிடித்த கொடூரமான வில்லன்களாக காட்டி இருந்தார்கள். நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் காஷ்மீரிகளும் அல்ல, இஸ்லாமியரும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- உயிரே எனும் தமிழ்த் திரைப்படத்தில் அசாமிய விடுதலைப் போராளிகளை வில்லன்களாக காட்டி இருந்தார்கள். நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் அசாமியர் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- கடந்த இருபது வருட காலமாக பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாதிகளை வில்லன்களாக காட்டும் திரைப்படங்கள் ஏராளம் வந்து விட்டன. ஹாலிவூட் ஆங்கிலத் திரைப்படங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் தயாரிக்கப் பட்ட ஏராளமான ஹிந்தி, தமிழ்ப் படங்கள் அது போன்ற கதைக்கருவை கொண்டிருந்தன.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பிராந்திய வல்லரசும் தமது நலன்களுக்கு எதிரான இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்து தடைசெய்திருந்தன. அப்போதெல்லாம் எந்தவிதமான அரசியல் புரிதலும் இல்லாமல் நடந்து கொண்டோம். உலகத்தை அல்லது பூகோள அரசியலை புரிந்து கொள்வதற்கு, எமது குறுகிய சிந்தனை கொண்ட தமிழ்த்தேசியம் அனுமதிக்கவில்லை. அதைக் கூட ஒரு குறைபாடாக நினைக்காமல், பெருமையாக நினைத்துக் கொண்டோம்.

நாங்கள் தொடர்ந்தும் அமெரிக்க- இந்திய நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டோம். இப்போதும் காட்டிக் கொள்கிறோம். எஜமானின் காலடியில் விழுந்து கிடந்தோம். ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மகாநாட்டில் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தமிழர்கள் பக்கம் நிற்பதாக எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டோம். தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் சீனா, கியூபாவை மட்டும் தேர்ந்தெடுத்து திட்டித் தீர்த்தோம். அப்போது தான் அமெரிக்காவின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று உண்மையிலேயே நம்பினோம்.

அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப் படுத்துவதற்காக நாங்களும் சீனாவை திட்டினோம். இலங்கையில் சீன மொழித் திணிப்பு நடக்கிறது, சீனாவின் காலனி உருவாகிறது என்று பிரச்சாரம் செய்தால் இந்தியா தமிழர்களை ஆதரிக்கும் என்று நம்பினோம். சர்வதேச மட்டத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை கண்டித்தோம். "இஸ்லாமியர்களை நம்ப முடியாது... குண்டு வைப்பார்கள்..." என்று ஏகாதிபத்தியம் சொல்லித் தந்த பாடத்தை மனனம் செய்து ஒப்புவித்தோம். அத்துடன் இஸ்ரேலை இருக்க விடாமல் அரபு- இஸ்லாமியர்கள் தாக்குகிறார்கள் என்று சொல்லி, பாலஸ்தீனர்களின் போராட்டத்தை எதிர்த்து வந்தோம். இஸ்ரேலை நிபந்தனை இன்றி ஆதரித்தோம். இதன் மூலம் அமெரிக்க எஜமான் மனத்தைக் குளிர வைத்தோம்.

இவ்வாறு எந்தவிதமான அரசியல் புரிதலுமற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் குறுந் தேசியவாதிகளின் பலவீனத்தை பயன்படுத்தி Family Man - 2 சீரிஸ் தயாரித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சில எடுத்துக்காட்டுகள்:

1. இறுதிப்போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பி விட்டதாகவும் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தமிழ்த் தேசியவாதிகள் தான் கதைகளை கட்டி விட்டார்கள். அனைத்து தமிழர்களும் தாம் சொல்வதை உண்மை என்று நம்ப வேண்டும் என அடம்பிடித்தார்கள். இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. பாஸ்கரன் என்ற பாத்திரப் பெயருடன் வரும் பிரபாகரன் போர்க்களத்தில் இருந்து உயிருடன் தப்பி விட்டதாக சொல்கிறது.

2. வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற தமிழக அரசியல்வாதிகளை "உண்மையான தமிழினப் பற்றாளர்கள்" என்று தமிழர்கள் பலர் (இன்றும்) நம்புகிறார்கள். அன்று புலிகளும் அவர்களை நம்பினார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. ஆரம்பத்திலேயே வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இந்தியப் புலனாய்வுத்துறையின் தொடர்பில் இருப்பவர்களாக காட்டப் படுகின்றனர். அவர்கள் புலிகளின் தலைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது விசுவாசம் இந்திய இறையாண்மை மீதே இருக்கிறது. (இந்த உண்மையை சீமானும் மறுக்கவில்லை.)

3. இறுதிப்போரில் புலிகளின் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாத தமிழ்த் தேசியவாதிகள், "இருபது சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்து விட்டன" என்று சொல்லித் திரிந்தார்கள். இப்போது கேட்டாலும் அதைத் தான் சொல்வார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. புலிகளை அழித்த இந்த சர்வதேச நாடுகள் எல்லாம்,  இஸ்லாமியவாதிகளுக்கும் எதிரி நாடுகள் தான். ஆகவே லண்டனுக்கு தப்பிச் சென்ற புலிகளின் தலைவர் அங்கிருந்த படியே ISI உடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதாக கதை அமைத்திருக்கிறார்கள்.

4. அமெரிக்காவில் ஸ்தாபிக்கப் பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபதிபத்திய, அல்லது இந்திய பிராந்திய வல்லரசின் நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறது. இதை அவர்கள் எந்த ஒளிவுமறைவும் இன்று நேரடியாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எந்தக் கட்டத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளாது. மாறாக, இந்திய அரசுடன் ஒத்துழைப்பார்கள் என்று கதை அமைத்திருக்கிறார்கள். 

 *****

சரி, இனிமேல் Family Man - 2 சர்ச்சைக்கு பிறகாவது இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ்த்தேசியவாதிகள் திருந்தி நடப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இப்போதும் கம்யூனிஸ்டுகள், காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்றவர்களுடன் அவர்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான நிலைமையில், Family Man - 2 க்கு எதிரான எதிர்ப்புகள் அதற்கான விளம்பரமாக அமையுமே தவிர வேறெந்த பலனையும் தரப் போவதில்லை. இனி வருங்காலத்தில் இது போன்ற படங்கள் தயாரிப்பதற்கான ஊக்குவிப்பாகவே, அவர்கள் இந்த எதிர்ப்புகளை கருதிக் கொள்வார்கள்.

Wednesday, March 11, 2020

Crash Landing on You: ஒரு வட கொரிய - தென் கொரிய காதல் கதை

Crash Landing on You - அவசியம் பார்க்க வேண்டிய Netflix தொலைக்காட்சித் தொடர். வட கொரியாவில் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் கண்டு களிக்கலாம். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப் பட்டுள்ளது.

இது ஒரு தென் கொரிய தொலைக்காட்சித் தொடர். கதையின் பெரும் பகுதி வட கொரியாவில் நடப்பதைப் போன்று ஸ்டூடியோவில் படமாக்கப் பட்டது. இதற்காகவே வட கொரிய மாதிரிக் கிராமம் ஒன்றை அமைத்திருந்தனர். தென் கொரியாவில் வாழும் வட கொரிய அகதிகளும் தமது தாயகத்திற்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டதாக பாராட்டி உள்ளனர்.

இந்தத் தொடரின் கதையும், அதில் வரும் பாத்திரங்களும் கற்பனை தான். சுருக்கமாக ஒரு வழமையான காதல் கதை. மென்மையான காதல் உணர்வுகள், நகைச்சுவைக் காட்சிகள், வில்லனின் சூழ்ச்சிகள், மர்ம முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் அடங்கிய ஒரு சாதாரண தொலைக்காட்சித் தொடர். சிலநேரம் ஒரு தமிழ்த் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

தென் கொரியாவில் ஒரு பெரிய குடும்ப வணிக நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபரின் மகளான கதாநாயகியை சுற்றி கதை நகர்கிறது. அவள் ஒரு தடவை பொழுதுபோக்காக பாரசூட்டில் பறக்கும் போது அடித்த சூறாவளிக்குள் மாட்டிக் கொண்டதால் வாழ்க்கை திசை மாறுகிறது. தற்செயலாக வட கொரியாவுக்குள் வந்து இறங்கி விடுகிறாள். அங்கு எல்லைக் காவல் பணியில் இருக்கும் கதாநாயகனான வட கொரிய இராணுவ கேப்டன் மேல் வந்து விழுகிறாள்.

அங்கிருந்து தப்பி தென் கொரியாவுக்கு சென்று விட வேண்டும் என்பதற்காக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப் பட்ட சூனியப் பிரதேசத்தின் ஊடாக ஓடுகிறாள். இருப்பினும் வழி தவறி திரும்பவும் வட கொரியாவுக்குள் வந்து விடுகிறாள். அதுவும் கதாநாயகன் குடியிருக்கும் கிராமத்திற்கே நேரே வந்து விடுகிறாள்! கதாநாயகன் அவளைத் தனது வீட்டில் மறைத்து வைத்திருக்க உடன்படுகிறான். அவனது படைப்பிரிவில் பணியில் உள்ள வீரர்களும் அந்த இரகசியத்தை பாதுகாக்கிறார்கள்.

காதாநாயகன் ஒரு சாதாரணமான கடைநிலை இராணுவ கேப்டன் போன்று காட்டப் பட்டாலும், அவனும் அரசியல் செல்வாக்கு மிக்க ஒரு வட கொரிய தலைவரின் மகன் தான். முன்பொரு தடவை எல்லைப்புற பகுதியில் நடந்த தனது சகோதரனின் மர்ம மரணத்திற்கு காரணம் யார் என்று துப்புத் துலக்குவதற்காக எல்லைப் படையில் சேர்ந்திருக்கிறான். சகோதரனின் கொலைக்குக் காரணமான இராணுவ அதிகாரி தான் வில்லன். மாபியாக் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கிறான்.

ஒரு தடவை எல்லைப் பகுதி கிராமத்தில் நடக்கும் வழமையான தேடுதலின் பொழுது வீட்டிற்குள் மறைந்திருந்த கதாநாயகி கண்டுபிடிக்கப் படுகிறாள். அந்நேரம் தலைநகர் பியாங்கியாங் சென்றிருந்த கதாநாயகன் விடயத்தை கேள்விப் பட்டு உடனே அங்கே வருகிறான். கதாநாயகி தென் கொரியாவில் இரகசிய உளவு வேளைகளில் ஈடுபட்டு நாடு திரும்பி இருப்பதாகவும், அவள் தனக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் என்றும் பொய் சொல்லி காப்பாற்றுகிறான். இருப்பினும் வில்லனான இராணுவ அதிகாரிக்கு சந்தேகம் தீரவில்லை. தொடர்ந்து ஆராய்கிறான். இதற்கிடையில் பியாங்கியாங் நகரில் இருந்து கதாநாயகனுக்கு பெற்றோரால் நிச்சயிக்கப் பட்ட முறைப்பெண் அவனைத் தேடி வருகிறாள்.

கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையிலான காதல் நிறைவேறியதா? கதாநாயகி தென் கொரியாவுக்கு திரும்பிச் சென்றாளா? மிகுதியை தொலைக்காட்சி தொடர் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற கதை வேறொரு இடத்திலும் நடக்கலாம். தற்செயலாக வழிதவறிச் செல்லும் ஒரு பணக்கார வீட்டுப் பெண், திக்குத் தெரியாத கிராமத்தில் மாட்டிக் கொள்வதும், மாளிகை போன்ற வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்தவள் ஏழையின் குடிசையில் எளிமையாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும், ஏற்கனவே பல தமிழ்த் திரைப்படங்களில் வந்த கதை. அதே தான் இந்த தென் கொரிய படத்தின் கதையும்! வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான கலாச்சார வேறுபாடுகள் மட்டும் இதில் உள்ள சிறப்பம்சம் எனலாம்.

வட கொரிய கிராமத்தில் வந்து சேரும் முதல் நாளில் இருந்து, கதாநாயகி கலாச்சார அதிர்ச்சிக்கு பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுகிறது. அங்கு யாரிடமும் மொபைல் போன் கிடையாது. (ஆனால் தலைநகர் பியாங்கியாங்கில் வசிப்பவர்கள் மொபைல் போன் பாவிக்கிறார்கள்.) வீட்டில் குளிர் சாதனப் பெட்டி கிடையாது. அதற்குப் பதிலாக, காய்கறிகளை ஒரு கிடங்கிற்குள் போட்டு மூடும் (kimchi) பாரம்பரிய குளிரூட்டும் முறையை பயன்படுத்துகிறார்கள். (கதாநாயகி அதை இயற்கை வழியிலான "Organic" முறை என்று புரிந்து கொள்கிறாள்.) அத்துடன் குளிப்பதற்கு சுடு நீர் கிடையாது. தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு தொட்டிக்குள் ஊற்றி விட்டு, நீராவி வெளியேற விடாமல் சுற்றிவர பொலிதீன் திரையால் மூடிக் கொண்டு குளிக்க வேண்டும்.

கொரிய மொழி ஒன்று தான் என்றாலும், வடக்கிலும் தெற்கிலும் பேசப்படும் மொழயில் வேறுபாடு இருக்கிறது. அது பிராந்திய பேச்சு மொழி வேறுபாடு என்பதற்கும் அப்பால், சில சொற்களின் பயன்பாடும் மாறுபடுகின்றது.(படத்தில் தென் கொரிய நடிகர்கள் வட கொரிய வட்டார மொழி பேசுகின்றனர்.) அதனால் கதாநாயகி தென் கொரியாவில் இருந்து வந்தவள் என்பதை அனைவரும் எடுத்த உடனே புரிந்து கொண்டு விடுவார்கள். அவளும் தான் "தென் கொரியாவில் வசிக்கும் இரகசிய உளவாளி" என்று சொல்லித் தான் ஊர் மக்களுடன் பழகுகிறாள். அதை அவர்களும் நம்புகிறார்கள். வட கொரிய பெண்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் இந்தப் படத்தில் மிகவும் இயல்பாகக் காட்டப் படுகின்றது. பெண்கள் ஊர் வம்பளப்பது எங்கும் உள்ள வழக்கம் தான். தமிழ்நாட்டுப் பெண்கள் எப்படியோ, அப்படித் தான் வட கொரியப் பெண்களும் இருக்கிறார்கள்.

கிராமிய மக்களின் கள்ளங்கபடம் அற்ற மனப்பான்மையும், நகரத்து மனிதர்களின் சூது வாது கொண்ட மனமும் தொடரில் சிறப்பாகக் காட்டப் படுகின்றது. உதாரணத்திற்கு, தென் கொரியாவில் கதாநாயகி காணாமல்போன நாள் முதல் அவளது சகோதரர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதும், நிறுவனத்தில் அவளின் பெயரில் உள்ள பங்குகள் தமக்குச் சேர வேண்டும் என்று சண்டை பிடிப்பதும் தத்ரூபமாக காட்டப் படுகின்றது. வட கொரிய கிராமத்தில் வசிப்பவர்களுக்கு பங்கு என்றால் என்னவென்று தெரியாது. அதைப் பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு எளிமையாக வாழ்கிறார்கள்.

இன்றைய வட கொரியா சோஷலிச நாடும் அல்ல, அதே நேரம் முதலாளித்துவ நாடும் அல்ல. அது இரண்டும் கலந்த சமூக பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ளது. பியாங்கியாங் நகரில் தனியார் நிறுவனங்களை நிர்வகிக்கும் வட கொரிய தொழிலதிபர்கள் வசதியாக வாழ்கிறார்கள். அவர்களது நுகர்வுக்கு தேவையான நவீன பாவனைப் பொருட்கள் அனைத்தும் அங்கு கிடைக்கின்றன. கடத்தல் மூலம் கொண்டுவரப்படும் தென் கொரிய பாவனைப் பொருட்கள் கிராமிய சந்தைகளிலும் விற்கப் படுகின்றன. அது எல்லோருக்கும் தெரிந்த "இரகசியம்"! அத்துடன் தென் கொரிய தொலைக்காட்சி டிராமா சீரியல்களும் வட கொரியர்களால் விரும்பிப் பார்க்கப் படுகின்றன. அரசாங்கம் இவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறது.

நீங்கள் இதுவரை காலமும் வட கொரியா பற்றி கேள்விப் பட்ட கட்டுக்கதைகள் எல்லாம் இந்தத் தொடரை பார்த்த பின்னர் விலகி விடும். வேண்டுமென்றே வட கொரியா பற்றிய பொய்ச் செய்திகளை பரப்பி வரும் விஷமிகள் இதைப் பார்த்தாலும் திருந்தப் போவதில்லை. தென் கொரியாவில் இந்த தொலைக்காட்சித் தொடர் வெளியானதும், வலதுசாரி கிறிஸ்தவ லிபரல் கட்சி அதற்கு எதிராக வழக்குப் போட்டது. அதாவது, வட கொரியா பற்றி நல்லபடியாக பேசுவது தென் கொரியாவில் ஒரு குற்றமாம்! அந்நாட்டில் அப்படியும் ஒரு சட்டம் உள்ளது!! அதனால் தான் பலர் வட கொரியா பற்றி இல்லாத பொல்லாத கதைகளை எல்லாம் மனம்போன போக்கில் அடித்து விடுகிறார்கள். 


Thursday, January 09, 2020

மேசியா : "இயேசு கிறிஸ்து ஒரு ஈரானியர்!"


Messiah:
"இயேசு கிறிஸ்து ஒரு ஈரானியர்!" 
"இயேசு இன்று எம் மத்தியில் வாழ்ந்தால், அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்திருப்பார்!!"

நெட்பிலிக்ஸ் (Netflix) தளத்தில் புதியதொரு தொடர் ஒளிபரப்பாகிறது. மேசியா என்ற அந்தத் தொடர் முற்றிலும் மாறுபட்ட கதையமைப்பைக் கொண்டது. இயேசு கிறிஸ்து அல்லது அவர் போன்ற ஒரு மீட்பர் இன்று எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தால், உலகம் அவரை எப்படிப் பார்க்கும் என்ற கற்பனையை வைத்து இதைத் தயாரித்துள்ளனர். அதிலும் தற்காலத்தில் நடக்கும் உலக அரசியலை களமாகக் கொண்டு இந்தக் கதை நகர்கிறது.

சிரியாவில், டமாஸ்கஸ் நகரில் ISIS முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட பாலஸ்தீன அகதிகள் மத்தியில் ஒருவர் அன்பையும் சமாதானத்தையும் பற்றிப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார். அவர் சாதாரண மக்களைப் போன்று ஜீன்ஸ், டி சேர்ட் அணிந்திருக்கிறார். மக்கள் அவரது பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பாலைவன மணல் சூறாவளி வீசுகிறது. அதனால் ISIS படையினர் அழிக்கப் பட பாலஸ்தீன அகதிகள் தப்பிப் பிழைக்கிறார்கள்.

இந்த அற்புதத்தை நேரில் கண்ட மக்கள், பிரசங்கம் செய்தவரிடம் தெய்வ சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் அவரை "அல் மசீ" என்று அழைக்கிறார்கள். அரபி மொழியில் அல் மசீ என்பது ஆங்கிலத்தில் மேசியா எனப்படும். (தமிழில் மீட்பர் என்று சொன்னாலும் அது மிகச் சரியான அர்த்தம் அல்ல. இறைவனின் தூதுவர் என்ற அர்த்தமும் உள்ளது.)

அல் மசீ, பாலஸ்தீன அகதிகளை இஸ்ரேலை நோக்கி வழிநடத்திச் செல்கிறார். எல்லையை அடைந்ததும், இஸ்ரேலிய படைகள் தடுத்து நிறுத்துகின்றன. தாயகம் திரும்பும் பாலஸ்தீன அகதிகளை உள்ளே விட மறுக்கின்றனர். எல்லை தாண்டிச் சென்ற அல் மசீ கைது செய்யப் படுகிறார். அகதிகள் எல்லையில் தற்காலிக முகாம் அமைத்து பசியிலும், பிணியிலும் வாடுகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலிய தொண்டு நிறுவனங்கள் உதவுகின்றன.

இஸ்ரேலிய ஷின் பெட் புலனாய்வுத் துறையினர் அல் மசீயை சிறையில் அடைத்து வைத்து விசாரணை செய்கின்றனர். அவர் தனது சொந்தப் பெயரை சொல்ல மறுக்கிறார். அரபி, ஹீபுரு, ஆங்கிலம் பேசுகிறார். அவர் ஒரு யூதரா, இஸ்லாமியரா, அல்லது கிறிஸ்தவரா? எதுவுமே புரியவில்லை. எதற்குமே பதில் கூற மறுக்கிறார்.

இதே நேரம் ஒரு சி.ஐ.ஏ. பெண் அதிகாரி அல் மசீ என்ற இந்த ஆசாமி உண்மையில் யார் என்று ஆராய்வதற்காக அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு வருகிறார். இஸ்ரேலின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிடுவதாக புலனாய்வுத்துறை அதிகாரி குற்றம் சாட்டுகிறார். இதற்கிடையே திடீரென ஒரு நாள் மேசியா மறைந்து விடுகிறார். இதனால் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியின் வேலை பறிபோகிறது.

சில தினங்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் அடித்த சூறாவளியில் மேசியா தோன்றுகிறார். அங்குள்ள மக்களும் மேசியாவுக்கு தெய்வ சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். அவரை ஒரு நவீன கால இயேசு கிறிஸ்து போன்று பார்க்கிறார்கள். இதனால், ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன. அமெரிக்க அரசு அவரை சட்டவிரோத குடியேறி என்று குற்றம் சுமத்தி பிற அகதிகளுடன் சிறையில் அடைத்து வைக்கிறது. அனால், அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி அகதித் தஞ்சம் கொடுத்து விடுவிக்கிறார்.

இதற்கிடையே சந்தேகக் கண்ணுடன் விசாரித்துக் கொண்டிருக்கும் சி.ஐ.ஏ. பெண் அதிகாரி, அவர் ஓர் ஈரானியர் என்ற உண்மையை கண்டுபிடிக்கிறார். அவரது உண்மையான பெயர், கல்வி கற்ற இடங்கள், மருத்துவக் குறிப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. இவற்றை வைத்துக் கொண்டு, இந்த மர்ம ஆசாமி மேசியா போன்று நடித்து ஊரை ஏமாற்றும் பேர்வழி என நிறுவ முயற்சிக்கின்றனர்.

மேசியா தன்னைப் பின்தொடர்பவர்களை தலைநகர் வாஷிங்டன் நோக்கி அழைத்துச் செல்கிறார். அங்கே இயேசு கிறிஸ்து மாதிரி தண்ணீர் மேலே நடந்து அற்புதம் செய்து காட்டுகிறார். இதனால் மேசியாவின் புகழ் அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. ஆனால் சி.ஐ.ஏ. மேற்கொண்டு விசாரிக்கிறது. "இவர் என்ன நோக்கத்திற்காக அமெரிக்கா வந்திருக்கிறார்? அமெரிக்காவில் ஒரு புரட்சி நடத்த திட்டமிடுகிறாரா? இவர் ரஷ்யாவின் ஆளா? இவர் ஒரு பயங்கரவாதியா? இவர் ஒரு மனநோயாளியா?" என்று பல கேள்விகளை எழுகின்றன.

ஒரு தடவை அமெரிக்க ஜனாதிபதியே மேசியாவை நேரில் கண்டு பேசுகிறார். அப்போது மேசியாவின் நோக்கம் என்ன என அறிய விரும்புகிறார். 
- "உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொண்டால் சமாதானம் உண்டாகும்." என மேசியா பதில் கூறுகின்றார். 
- "அமெரிக்கப் படைகள் இருப்பதால் தான் அந்தப் பிராந்தியத்தில் சமாதானம் நிலவுகிறது" என்கிறார் ஜனாதிபதி. 
- "ஐரோப்பியர்கள் தான் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் எல்லைகளை பிரித்து விட்டார்கள். அந்த நாடுகளில் சர்வாதிகாரிகளை பதவியில் அமர்த்தி மக்களை ஒடுக்கினார்கள்..." மேசியாவின் பதிலைக் கேட்டு ஜனாதிபதி வாயடைத்துப் போகிறார். 
- "அமெரிக்க இராணுவத்தை திருப்பி அழைக்க மறுத்தால் என்ன நடக்கும்?" என்று கேட்கிறார். 
- "கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இயற்கைப் பேரழிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்..." 
"பயமுறுத்தலா?" 
"இல்லை, எச்சரிக்கை!" 
அடுத்து வந்த சில தினங்களில் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.

அமெரிக்க அரசு தொடர்ந்தும் மேசியா ஒரு மோசடிப் பேர்வழி என்று நிரூபிக்க முயற்சிக்கிறது. அவரது பெயரைக் கெடுப்பதற்காக மனநோயாளி என்ற மருத்துவ சான்றிதழ் கொண்ட இரகசிய ஆவணங்களை ஊடகங்களுக்கு கசிய விடுகிறார்கள். அரசாங்கமே அவரைக் கடத்திச் சென்று இஸ்ரேலிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறது.

இந்த தொலைக்காட்சித் தொடர் இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. அன்று வாழ்ந்த இயேசு கிறிஸ்துவும் எம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதராகத் தான் இருந்திருப்பார். அதே இயேசு இன்று எம் மத்தியில் வாழ்ந்தாலும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருப்போம். அன்றைய இயேசு ரோம ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மாதிரி, இன்றைய இயேசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்திருப்பார்.

இந்தத் தொடரில் மேசியா பேசும் வசனங்கள் யாவும் மிக எளிமையான தத்துவார்த்த அடிப்படை கொண்டவை. ஆன்மீகத்தின் பெயரால் மூடி மறைக்கப்படும் உண்மைகளையும் இலகுவாக புரிய வைக்கிறது.

Wednesday, March 28, 2018

அரபு தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் வர்க்கப் போராட்டம்


Secret of the Nile - எகிப்தில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பற்றிய அரபு மொழி தொலைக்காட்சித் தொடர். இது Netflix இணைய வீடியோ சேவையில் வெளியாகியுள்ள டிவி நாடகம். ஒரு துப்பறியும் மர்மக் கதையாக விறுவிறுப்பாக செல்லும் இந்தத் தொடர், எகிப்திய சமூகத்தில் ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான வர்க்க முரண்பாடுகளை மிக எளிமையாக விளக்குகிறது. படக் கதை ஐம்பதுகளில் நடக்கிறது. அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் உடை, உடை, பாவனைகள் தத்ரூபமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

 எகிப்தின் தென் பகுதியில், நைல் நதியோரம் அமைந்துள்ள அஸ்வான் நகரில் உள்ள Grand Hotel தான் கதைக் களம். அங்கு பணிப்பெண்ணாக வேலை செய்யும் தங்கை டோஹாவை தேடி ரயிலில் வரும் கதாநாயகன் அண்ணன் அலியுடன் படம் ஆரம்பிக்கிறது. ஒழுங்காக கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டிருந்த தங்கையிடம் இருந்து மாதக் கணக்காக எந்தப் பதிலும் இல்லாத படியால் தேடி வருகிறான்.

அஸ்வான் நகரை வந்தடைந்த பின்னர், ஹோட்டல் நிர்வாகம் நகை திருடிய குற்றச்சாட்டில் தங்கையை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக அறிகிறான். தனது சகோதரி திருடி இருக்க மாட்டாள் என்று நம்பும் அண்ணன் அலி, ஹோட்டலில் வேலை செய்யும் அமீனின் நட்பைப் பெற்று, உணவு பரிமாறுபவர் வேலையில் சேர்ந்து கொள்கிறான்.

டோஹா எதையும் திருடவில்லை என்பதும், அவள் காணாமல் போனதிற்கு வேறு காரணம் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுகிறது. அது பற்றி ஆராயும் அலி, ஹோட்டல் மனேஜருக்கும் டோஹாவுக்கும் இடையிலான காதல் உறவை கண்டறிகிறான். கதாநாயகியான நஸ்லி என்ற மைத்துனியை திருமணம் செய்யவிருக்கும், மனேஜர் மூராட், ஏற்கனவே ஹோட்டலில் வேலை செய்யும் இன்னொரு பணிப்பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கி விடுகிறான்.

படத்தின் தொடக்கத்தில் காணாமல் போன டோஹா அப்போது கொலை செய்யப் படவில்லை. அவள் பின்னர் ஒரு கட்டத்தில் திரும்பி வந்து ஹோட்டேல் உரிமையாளர் பற்றிய இரகசியக் கடிதத்தை பகிரங்கப் படுத்த நினைக்கையில் தான் கொல்லப் படுகிறாள். இதற்கிடையே கதாநாயகன் அலியுடன் நட்பாகப் பழகும் கதாநாயகி நஸ்லியுடன் காதல் உண்டாகிறது. ஆனால், ஆழமான வர்க்க வேறுபாடு இருவரும் ஒன்று சேரத் தடுக்கிறது.

மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது போன்ற கதை பல தமிழ் சினிமாக்களில் வந்துள்ளன. ஆனால், பணக்கார வீட்டுப் பெண்ணை ஏழைக் கதாநாயகன் காதலிப்பதாக வரும் தமிழ்ப் படங்களில், அதை "அதிர்ஷ்டமாக", அல்லது "காதலின் மகத்துவமாக" காட்டி திசைதிருப்புவார்கள். தப்பித் தவறிக் கூட வர்க்கம் என்ற சொல் படத்தில் இடம்பெறாது.

ஆனால், இந்த அரபி மொழி பேசும் படத்தில் வர்க்கப் பிரச்சினை பற்றிய உரையாடல்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. கதாபாத்திரங்கள், சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் வர்க்க முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றார்கள். உதாரணத்திற்கு சீமாட்டி நஸ்லியை காதலிக்கும் ஏழை அண்ணனுக்கு தங்கை அறிவுறுத்துகிறாள். "இந்த மேட்டுக்குடி வர்க்கத்தில் அவள் ஒருத்தி மட்டும் நல்லவளாக இருக்கலாம்... ஆனால் அவள் பிறந்து வளர்ந்த வர்க்கம் எதுவென்பதையும், அதன் குணங்குறிகளையும் மறந்து விடாதே!"

ஆடம்பரமாக வாழும் மேட்டுக்குடி வர்க்கத்தினுள், ஹோட்டேல் உரிமை சம்பந்தமாக நடக்கும் சூழ்ச்சிகள், கழுத்தறுப்புகள், காழ்ப்புணர்வுகள் வெளிப்படும் தருணங்களில் அவர்களது நாகரிக முகமூடி கிழிகிறது. மேட்டுக்குடியினர் தமது கௌரவத்தை காப்பாற்ற கொலை செய்வதற்கும் அஞ்சாதவர்கள். போலிஸ் சட்டப் படி கைது செய்தாலும் பணத்தை வீசியெறிந்து வழக்காடி வெல்கிறார்கள். அரசாங்கத்தை வளைத்துப் போடும் செல்வாக்கும் இருக்கிறது.

அதே நேரம், அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களிடையே நிலவும் தூய்மையான அன்பும், பாசமும், காதலும் அவர்களை உயர்ந்த இடத்தில் தூக்கி நிறுத்துகிறது. உதாரணத்திற்கு மனேஜருடனான உறவால் கர்ப்பம் உண்டாகி வஞ்சிக்கப் பட்ட பணிப்பெண்ணை, தனது மனைவியாக ஏற்றுக் கொள்ளும் சக தொழிலாளி அமீன். அதே மாதிரி, மனேஜர் அனுப்பிய கொலையாளியால் கத்தியால் குத்தப் பட்ட பணிப்பெண் டோஹாவை காப்பாற்றி, தனது வீட்டில் மறைத்து வைக்கும் சக தொழிலாளி மஹேர். இத்தகைய கதாபாத்திரங்கள், பணமில்லாத இடத்தில் தான் அன்பிருக்கும் என்பதை நிரூபிக்கின்றன.

வர்க்கப் போராட்டம் என்பது சமூக யதார்த்தம். அது ஒன்றும் "நடைமுறைக்கு உதவாத", "மார்க்சியத் தத்துவம்" அல்ல. வர்க்கப் போராட்டம், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. அதை நாங்கள் காண மறுக்கிறோம். உணர மறுக்கிறோம்.

தமிழ் சினிமாக்கள், தமிழ் சீரியல்கள் வேண்டுமென்றே வர்க்க முரண்பாடுகளை மூடி மறைத்து அல்லது திரிபுபடுத்தி தயாரிக்கப் படுகின்றன. அந்த வகையில், வர்க்க முரண்பாட்டு உண்மையை நேரடியாகக் கூறும் இந்த அரபிப் படம் யதார்த்தத்தை தொட்டு நிற்கிறது.

Secret of the Nile என்ற அரபி மொழி டிவி சீரியல் மிக நீளமாக இருந்தாலும், ஒவ்வொரு பகுதியிலும் அவிழும் மர்ம முடிச்சுகளால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. இருந்த இடத்தை விட்டு எழும்ப விடாமல், ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டும் படம். அனைவரும் அவசியம் பாருங்கள். தமிழ் சமூகத்திற்கும், அரபு சமூகத்திற்கும் இடையில் அடிப்படையில் எந்த வித்தியாசம் இல்லை என்பதை கண்டுகொள்வீர்கள். உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் மனிதர்களின் குணம் மாறுவதில்லை. வர்க்கக் குணாம்சமும் மாறுவதில்லை.

- கலையரசன்

Tuesday, October 20, 2009

இஸ்ரேலில் சர்ச்சையை கிளப்பிய துருக்கி டி.வி. சீரியல்

தற்போது துருக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "மெகா தொடர்" சீரியல் ஒன்று இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவில் விரிசலைஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சித் தொடரில் வரும் இஸ்ரேலிய இராணுவம், ஒரு (பாலஸ்தீன) சிறுமியை அருகில் நின்று சுட்டுக் கொல்வதைப் போல காட்சி இடம்பெற்றுள்ளதே சர்ச்சைக்கு காரணம்.(Israel: Turkish TV paints troops as child-killers) இஸ்ரேலிய அரச மட்டத்தில் இருந்து கண்டனக்கணைகள் வந்த போதிலும், குறிப்பிட்ட தொடரை நிறுத்துவதற்கு துருக்கிஅரசு மறுத்து விட்டது. காஸா மீதான இராணுவ நடவடிக்கை, இஸ்ரேலிற்கும், துருக்கிக்கும் இடையிலான நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய துருக்கி சீரியலில் இருந்து சில காட்சிகள்: