Saturday, February 22, 2020

பாரசைட் vs மின்சார கண்ணா: முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டு! அதை வழிபடாதே!!


Parasite vs Minsara kanna : Fuck the Capitalism! Don't worship it!! 
பாரசைட் vs மின்சார கண்ணா : முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டு! அதை வழிபடாதே!!

ஆஸ்கார் விருதுகள் வென்ற தென் கொரிய திரைப்படமான Parasite, முன்பு தமிழகத்தில் வெளியான மின்சார கண்ணா திரைப் படக் கதையை தழுவி எடுக்கப் பட்டதாக, அதன் தயாரிப்பாளர் தேனப்பன் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ல் வெளியான மின்சார கண்ணா திரைப்படமும், Bong Joon Ho இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான Parasite திரைப்படமும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத மாறுபட்ட கதைகளை கொண்டுள்ளன. அது பற்றிய ஒரு சிறிய அலசல்.

- Parasite, மின்சார கண்ணா இரண்டும் முற்றிலும் வேறுபட்ட கதையமைப்பை கொண்ட திரைப்படங்கள். இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளை விட வேற்றுமைகளே அதிகம். இரண்டும் எதிரெதிரான வர்க்கப் பார்வை கொண்டவை.

- பாரசைட் படக்கதை முழுக்க முழுக்க ஓர் ஏழைக் குடும்பத்தின் கண்ணோட்டத்தில் நகர்கிறது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா திரைக்கதை ஒரு பணக்காரக் குடும்பத்தின் பார்வையில் இருந்து சொல்லப் படுகிறது. இரண்டும் முற்றிலும் முரண்பாடான வர்க்க அரசியல் கருத்துக்களை கருப்பொருளாகக் கொண்ட திரைப்படங்கள்.

- தமிழகத்திலும், தென் கொரியாவிலும் வர்க்க நிலைப்பாடு ஒன்று தான். பணக்கார வீட்டில் பிறந்த பிள்ளை பணத்தில் புரளுவதும், ஏழை வீட்டில் பிறந்த பிறந்த பிள்ளை வறுமையில் வாடுவதும் இரண்டு நாடுகளுக்கும் பொதுவான சமூக யதார்த்தம். அது என்றும் மாறாத முதலாளித்துவ பொருளாதார நியதி. பாரசைட் திரைப்படம் இந்த உண்மையை உள்ளபடியே காட்டுகிறது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் காட்டுகிறது. "ஏழைகள் கஷ்டப் பட்டு உழைத்தால் பணக்காரர் ஆகலாம்..." என்ற பொய்யை நம்ப வைக்க முயல்கிறது.

- பாரசைட் படத்தில் வரும் ஏழைக் குடும்பத்தினர் அடித்தட்டு வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களது வர்க்கக் குணாம்சம் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. உழைக்கும் வர்க்க மக்களை சுரண்டிக் கொழுத்த பணக்காரர்களை நம்மால் முடிந்த அளவு சுரண்டுவதில் தவறில்லை என நினைக்கிறார்கள். அவர்கள் பணக்கார குடும்பத்தில் வேலைக்கு சேர்வதற்கு பின்னணியில் உழைக்கும் வர்க்கம் சார்ந்த பழிவாங்கும் குணாம்சம் உள்ளது. இந்த வர்க்கப் போராட்டம் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. முதலாளிக்கு போலி விசுவாசம் காட்டுவது, வேலை செய்யாமல் இழுத்தடிப்பது, கம்பனி பொருட்களை திருடுவது... இப்படிப் பலவுண்டு.

- அதற்கு மாறாக மின்சாரக் கண்ணாவில் காட்டப் படுவது உண்மையில் ஓர் ஏழைக் குடும்பம் அல்ல! ஏற்கனவே மேல்தட்டில் இருந்த பணக்காரக் குடும்பம்! படத்தின் கதாநாயகன் விஜய்யின் காதலுக்காக அவனது குடும்பத்தினர் "ஏழைகளாக நடிக்கிறார்கள்"! ஜெர்மனியில் வசதியாக வாழ்ந்த மல்ட்டி மில்லியனர் குடும்ப உறுப்பினர்கள், இந்தியா வந்து கஷ்டப்பட்டு வீட்டு வேலைகள் செய்கிறார்களாம்! மகனின்/சகோதரனின் காதலுக்காக இந்த கஷ்டங்களை பொறுத்துக் கொள்கிறார்களாம்! இதன் மூலம் "பணக்காரர்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள் பார்த்தீர்களா?" என்று கதாசிரியர் நமது காதுகளில் முழம் முழமாக பூச்சுற்றுகிறார். படத்தில் ஆண்களை வெறுக்கும் பணக்காரியாக வரும் வரும் குஷ்பு ஆரம்பத்தில் ஏழைத் தொழிலாளியாக இருந்து "உழைப்பால் உயர்ந்து" பணக்காரியாக வந்தவர் என்பது அடுத்த பூச்சுற்றல்.

- பாரசைட் திரைப்படத்தின் நோக்கம் இன்றைக்கும் சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுவது. காலங்காலமாக முதலாளித்துவத்தால் ஒடுக்கப்பட்டு வரும் அடித்தட்டு வர்க்கம் திருப்பித் தாக்க வேண்டும் என்பது தான் பாரசைட் படக் கதை. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா ஆண்- பெண் எனும் பாலின முரண்பாட்டை முன்வைக்கிறது. படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையில் ஆண்களை வெறுக்கும் ஒரு பணக்காரியின் விசித்திரமான நடத்தை தான் காட்டப் படுகிறது. சமூகத்தில் நிலவும் பிரதானமான வர்க்க முரண்பாடு பற்றிப் பேசாமல், "ஆண்-பெண் பாலின முரண்பாடு" என்று திரிப்பது ஒருவகையில் முதலாளித்துவ அடிவருடி அரசியல்.

- பாரசைட் படத்தின் நோக்கம் முழுவதும் பார்வையாளர்களுக்கு அடித்தட்டு ஏழை மக்கள் மீது அனுதாபத்தை உண்டாக்குவது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா பணக்கார வர்க்கத்தினர் மீது அனுதாபத்தை உண்டாக்கும் நோக்கில் எடுக்கப் பட்டுள்ளது. இது முற்றிலும் முரண்பாடான வர்க்கக் கண்ணோட்டம். இரண்டு திரைப்படங்களையும் எடுத்த டைரக்டர்கள் எதிரெதிரான வர்க்க நிலைப்பாட்டில் உள்ளவர்கள். பாரசைட் திரைப்பட இயக்குனர் Bong Joon Ho "முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவோம்!" (Fuck the capitalism!) என்று ஆஸ்கார் விழா மேடையில் முழங்கியவர். மின்சாரக் கண்ணா திரைப்பட இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் வாயில் இருந்து முதலாளித்துவம் என்ற சொல் கூட வராது. அவருக்கு அந்தளவு தைரியம் இல்லை. தற்போதும் அவர் இயக்கும் தமிழ்ப் படங்கள் நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்களை கொண்டுள்ளன. இப்படியானவர்கள் ஆஸ்கார் விருது குறித்து கனவு கூட காணமுடியாது.

- பாரசைட் திரைப்படம் மின்சாரக் கண்ணா திரைப்படத்தின் தழுவல் என்பது சுத்த அபத்தமானது. அது ஒரு மலினமான விளம்பர உத்தி. வர்க்க அரசியல் பற்றி தெளிவில்லாத தற்குறிகள் மத்தியில் மட்டுமே இந்த மலினப் பிரச்சாரம் எடுபடும். ஆஸ்கார் விருதுக்கேற்ற தமிழ்ப் படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் சமூகப் பிரச்சினைகள் குறித்த அரசியல் அறிவு இருக்க வேண்டும். மின்சாரக் கண்ணா எடுத்தவர்களிடம் அது துளி கூட இருக்கவில்லை. வழக்குப் போடுவதற்கு முன்னர் வர்க்க அரசியல் படியுங்கள்!

No comments: