Sunday, October 19, 2014

அனைவருக்கும் இலவச மருத்துவம், அது தாண்டா "கம்யூனிச சர்வாதிகாரம்"!


ஜெர்மன் மொழிப் படமான "Barbara", முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில், எண்பதுகளில் நடக்கும் கதை ஒன்றை சொல்கின்றது. பெர்லின் நகரில் கடமையாற்றிய இளம் பெண் மருத்துவரான பார்பரா, விசாவுக்கு விண்ணப்பித்த காரணத்தால், புலனாய்வுத்துறையின் (Stasi)  சந்தேகத்திற்கு ஆளாகின்றார். அதனால், தொலைதூரத்தில் உள்ள பால்ட்டிக் கடலோரம், ஒரு நாட்டுப்புற மருத்துவமனைக்கு இடம் மாற்றப் படுகின்றார்.

 "சோஷலிச சர்வாதிகாரத்தை" வெறுக்கும் பார்பரா, மேற்கு ஜெர்மனியில் இருந்து வர்த்தக நோக்குடன் வந்து செல்லும் ஒருவனைக் காதலிக்கிறாள். காட்டிலும், ஹோட்டலிலும் இரகசியமாக சந்தித்து, விலை உயர்ந்த மேற்கத்திய பாவனைப் பொருட்களை பரிசாகப் பெற்றுக் கொள்கிறாள். எப்படியாவது அவனுடன் மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச் செல்லத் திட்டமிடுகிறாள். இரகசியமாக கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக பயணம் செய்யத் தயாராகும் நேரத்தில், ஓர் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது.

பார்பரா வேலை செய்யும் மருத்துவமனையில், சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட பெண் கைதி ஒருவரை அனுமதிக்கிறார்கள். பார்பரா அந்தக் கைதியின் நன்மதிப்பை பெற்ற வைத்தியர் ஆகிறார். வருத்தம் குணமானவுடன் மீண்டும் சிறை முகாமுக்கு கொண்டு செல்லப்படும் அந்தப் பெண் கைதி, எதிர்பாராத விதமாக கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பி ஓடுகிறாள். பார்பராவின் வீட்டிற்கு வரும் அவளை, இரகசியமாக கொண்டு சென்று தன்னை கூட்டிச் செல்ல வரும் பயண முகவரிடம் ஒப்படைக்கிறாள். பார்பரா இறுதியில் மனம் மாறி, கிழக்கு ஜெர்மனியில் தங்கி விடுவது தான் கதை.

மருத்துவமனையில் தலைமை மருத்துவரான அன்ட்ரே ரைசர், பார்பராவின் கடமை உணர்ச்சி மீது நன்மதிப்பு வைத்திருக்கிறார். காலப்போக்கில் அவரை விரும்புகிறார். ஆனால், பார்பரா நாகரிகமாக ஒதுங்கிக் கொள்கிறார். இதற்கிடையே, அன்ட்ரே ரைசர் புலனாய்வுத்துறைக்கு தகவல் அனுப்பும் உளவாளி என்ற உண்மை தெரிய வருகின்றது. அதற்காக அன்ட்ரே கூறும் காரணத்தை நம்ப மறுக்கிறாள். 

சோஷலிச அமைப்பிற்கு விசுவாசமான அன்ட்ரே, மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மருத்துவரின் கடமை உணர்ச்சி பற்றி, அடிக்கடி பார்பராவுக்கு அறிவுறுத்துகிறார். அவரது கருத்துக்கள் மட்டுமல்லாது, நோயாளிகளுக்கு சேவை செய்யும் அர்ப்பணிப்பு உணர்வும், பார்பராவின் மனதை மெல்ல மெல்ல மாற்றுகின்றது. அதனால், இறுதியில் மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓடாமல், அன்ட்ரேயுடன் கிழக்கு ஜெர்மனியில் தங்கி விடுகிறார்.

பார்பரா, கிழக்கு ஜெர்மன் அரசையும், வாழ்க்கையையும் வெறுப்பதை, படம் முழுவதும் வெளிப்படுத்தி வருகிறார். ஓரிடத்தில், சோஷலிச அரசாங்கம் தனது இட மாற்றத்திற்கு தெரிவித்த காரணத்தை விரக்தியுடன் கூறுகின்றார்: "உனது மருத்துவப் படிப்புக்கு தொழிலாளர்களும், விவசாயிகளும் செலவு செய்துள்ளனர். நீ அந்தக் கடனை அடைக்க வேண்டும்..." அதைக் கேட்கும், தலைமை மருத்துவர், "அந்தக் காரணம் தவறானது அல்லவே!" என்று பதிலளிக்கிறார்.

இந்தத் திரைப்படம் சோஷலிச ஜெர்மன் அரசுக்கு சார்பானது அல்ல. (2012 ஆம் ஆண்டு தயாரிக்கப் பட்டு வெளியானது.) மேலைத்தேய பார்வையாளர்களை திருப்திப் படுத்தும் வகையில், "கம்யூனிச சர்வாதிகாரத்தைக்" காட்டும், பல எதிர்மறையான காட்சிகள் உள்ளன. இருப்பினும், ஒரு நகரத்தில் பணியாற்றிய மருத்துவரை, நாட்டுப்புற மருத்துவ மனைக்கு இடம் மாற்றிய காரணம், படத்தில் அப்படியே பதிவு செய்யப் பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது.

குறிப்பாக, இலங்கையில் பல மருத்துவர்கள் மக்களின் வரிப் பணத்தில் படித்து முடித்தவுடன், நகர்ப்புறங்களில் தங்கி வேலை செய்கின்றனர். இந்தியாவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எத்தனை மருத்துவர்கள், கிராமப்புற மக்களுக்கு சேவை செய்கின்றனர்?

ஒரு சோஷலிச நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் படித்த மருத்துவர்கள், அந்த மக்களுக்கு கடமைப் பட்டுள்ளதை உணர்த்துகின்றனர். அவர்களை வசதியான நகரங்களில் தங்க விடாது, வசதி குறைந்த கிராமங்கள், நாட்டுப்புற மருத்துவ மனைகளுக்கு அனுப்புகின்றனர்.

முன்னாள் சோஷலிச நாடுகளின் "சர்வாதிகாரம்" பற்றி, மேட்டுக்குடியினர் அழுது புலம்புவது இதனால் தான். இந்தியா, இலங்கை போன்ற வறிய நாட்டு மக்களின் வரிப் பணத்தில் படித்த மருத்துவர்கள், அந்த மக்களுக்கு சேவை செய்யாமல், அமெரிக்கா சென்று டாலர்களுக்காக வேலை செய்கின்றனர். அப்படிப் பட்ட அயோக்கியர்கள், கம்யூனிசத்தை வெறுப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது?


திரைப்படத்திற்கான இணைப்புகள்:

No comments: