Showing posts with label புலம்பெயர்ந்தோர். Show all posts
Showing posts with label புலம்பெயர்ந்தோர். Show all posts

Saturday, August 03, 2013

புலம்பெயர்ந்த மண்ணில் இன விடுதலைப் போராட்டம் நடத்தலாமா?

[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை]

(இறுதிப் பகுதி)


புலம்பெயர்ந்த மொலுக்கர்களின் ஆயுதப் போராட்டம், ஆறு தாக்குதல்களின் பின்னர் முடிவுற்றள்ளது. இறுதியாக 'அசன்' நகரில் உள்ள மாகாண சபை கட்டிடத்தை ஆக்கிரமித்தார்கள். அங்கே வேலை செய்த ஊழியர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார்கள். அப்போது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற அவசரத்தில் ஒரு கொலை நடந்தது. ஆனால், இந்த முறையும், நெதர்லாந்து அரசு விட்டுக் கொடுக்கவில்லை. பணய நாடகம் முடிவுக்கு வந்து, மொலுக்கர்களும் சிறைப் பிடிக்கப் பட்டார்கள்.

ஈழத் தமிழர்களின் ஏக பிரதிநிதியாக கூறிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும், அவர்களை நோக்கி மையப் படுத்தினார்கள். ஆனால், மொலுக்கர்கள் மத்தியில் அப்படியான மையவாத அமைப்பு எதுவும் இருக்கவில்லை. மொலுக்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை எந்த இயக்கமும் கட்டுப்படுத்தவில்லை.  

ஒவ்வொரு ஆயுதமேந்திய தாக்குதலையும், ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற சிறு சிறு குழுக்களே நிறைவேற்றின. அவர்களுக்கு இடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஒரே கொள்கை மட்டுமே அவர்களை ஒன்றிணைத்தது. ஒரே மாதிரி செயற்பட வைத்தது. இந்தக் காலத்தில் அவற்றை "சிலிப்பர் செல்" (Sleeper Cell) என்று அழைப்பார்கள். அதனால் தான், இதுவரையில் எந்தவொரு ஆயுதபாணி நடவடிக்கையையும், டச்சு புலனாய்வுத் துறையால் முன் கூட்டியே கண்டுபிடிக்க முடியவில்லை.  

புலம்பெயர்ந்த மொலுக்கர்கள், நெதர்லாந்தில் ஒரு ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு தூண்டுகோலாக இருந்த புறக் காரணிகளையும் கவனிக்க வேண்டும். எழுபதுகளில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும், அதற்கு ஆதரவான சர்வதேச கம்யூனிஸ்ட்களின் போராட்டமும் தீவிரமடைந்திருந்தது. PFLP போன்ற இடதுசாரி பாலஸ்தீன இயக்கத்துடன் தொடர்புடைய, ஐரோப்பிய இடதுசாரி இளைஞர்கள் பலர் இருந்தனர். அவர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக, ஐரோப்பிய நகரங்களில் பல குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. விமானங்கள் கடத்தி பணயம் வைக்கப் பட்டன.

குறிப்பாக ஜப்பானிய தீவிரவாதிகளின் தாக்குதல் ஒன்று நெதர்லாந்தில் இடம்பெற்றது. பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவான ஜப்பானியர் ஒருவர் பிரான்சில் பிடிபட்டார். போலி கடவுச் சீட்டுகள், ஆயுதங்கள் கடத்திய குற்றச் சாட்டில் கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தார். அதற்குப் பதிலடியாக, மூன்று ஜப்பானிய ஆயுதபாணிகள் நெதர்லாந்தில் உள்ள பிரெஞ்சு தூதுவராலயத்தினுள் நுழைந்தார்கள். தூதுவரையும் பிற ஊழியர்களையும் துப்பாக்கி முனையில் பணயம் வைத்தார்கள். இறுதியில் பிரெஞ்சு அரசு, அவர்களின் கோரிக்கைக்கு இணங்கியது. தான் பிடித்து வைத்திருந்த ஜப்பானியரை விடுதலை செய்து, ஒரு மில்லியன் டாலர் பணமும் கொடுத்து, தனியான ஜெட் விமானம் ஒன்றில் தப்பியோட உதவியது. 

ஜப்பானிய ஆயுதபாணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை தரையிறக்க, அன்றைய ஈராக்கிய அரசு ஒத்துக் கொண்டது. அதே போன்று, தம்மையும் ஒரு நாடு ஏற்றுக் கொள்ளும் என்று மொலுக்கு ஆயுதபாணிகள் எதிர்பார்த்தனர். ஜப்பானியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட காரணம் என்ன? அவர்கள் இடதுசாரி சிந்தனை கொண்ட ஆயுதபாணிகள் என்பதால், பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள், பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவான அரபு நாடுகள், மற்றும் சோஷலிச நாடுகள் உதவ முன்வந்தன. மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பல இடதுசாரி தீவிரவாதக் குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆகையினால், ஆயுதபாணிகளின் கோரிக்கைகளை அரசு ஒரு தடவை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், வேறு ஒரு நாட்டில், வேறு ஒரு இயக்கம் தாக்குதல் நடத்த தயாராக இருந்தது. 

மொலுக்கு இளைஞர்களின் போராட்டம், ஒரு தேசியவாதப் போராட்டம் ஆகும். அதற்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஆனால், இந்தோனேசியாவில் போரிட்டுக் கொண்டிருந்த மொலுக்கு விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள், ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டுடன் சிறந்த உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதனால் உலகில் பெனின் மட்டுமே, தென் மொலுக்கு குடியரசை ஒரு இறைமையுள்ள தனி நாடாக அங்கீகரிக்க முன்வந்தது.  

நெதர்லாந்தில் ஆயுதபாணித் தாக்குதல்களில் ஈடுபட்ட மொலுக்கு இளைஞர்கள், பெனின் தங்களை ஏற்றுக் கொள்ளும் என்று நம்பினார்கள். பணயக் கைதிகளை பிடித்து வைத்துக் கொண்டு, நெதர்லாந்து அரசை வற்புறுத்தி ஒரு விமானத்தை அமர்த்திக் கொண்டு, பெனின் நாட்டுக்கு தப்பிச் செல்ல முடியும் என்று கனவு கண்டார்கள். ஆனால், அந்தக் கனவு இறுதி வரையில் நனவாகவில்லை. அவர்களை பணயக் கைதிகளுடன் தப்பியோட நெதர்லாந்து அரசு சம்மதித்திருக்குமா என்பது ஒரு புறமிருக்க, தீவிரவாத இளைஞர்களை பொறுப்பேற்க பெனின் அரசு தயாராக இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. 

ஆயுதமேந்திய தாக்குதல்கள் நடந்த காலங்களில், மொலுக்கு குடிமக்கள் மீது குறிப்பிட்டளவு அடக்குமுறை பிரயோகிக்கப் பட்டது. மொலுக்கு குடியேறிகள் அடர்த்தியாக வாழும் நெதர்லாந்துக் கிராமங்கள் சுற்றி வளைக்கப் பட்டன. ஆயுதங்களை தேடி, வாகனங்கள், வீடுகள் சோதனையிடப் பட்டன. 1977 ம் ஆண்டு, ரயிலைக் கடத்தியவர்கள், சரணடைந்த பின்னரும் சுட்டுக் கொல்லப் பட்டமை தான், அரசின் உச்சக்கட்ட  அடக்குமுறை ஆகும். அந்தச் சம்பவங்கள், இப்போதும் மொலுக்கர்கள் மனதில் மாறாத வடுக்களாக மாறி விட்டன. அன்று நடந்த படுகொலைகளை விசாரிப்பதற்கு, விசாரணைக் குழு ஒன்று அமைக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். நெதர்லாந்து அரசு, போர்க் குற்றத்திற்காக தனது சொந்தப் படையினரை தண்டிக்க முன் வருமா என்பது சந்தேகமே.

மொலுக்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டம், வெறும் பழிவாங்கும் நடவடிக்கையாகவோ, அல்லது இனவாதப் போராட்டமாகவோ இருக்கவில்லை. அது ஒரு அரசியல் தத்துவார்த்த போராகவும் இருந்தது. ரயிலை பணயம் வைத்திருந்த காலத்தில், தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பணயக்கைதிகளை சிறந்த முறையில் பராமரித்தார்கள். அவர்களுக்கு தமது போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைத்தார்கள். பணயக் கைதிகள் வாசிப்பதற்காக, மொலுக்கு இனத்தவரின் பிரச்சினைகள் பற்றிய நூல்களை கொண்டு சென்று கொடுத்தார்கள். 

ஆயுதபாணிகள், தமது பக்க நியாயத்தை வெளிப்படுத்த தம்மாலான முயற்சிகளை செய்த போதிலும், அது பெரும்பான்மை டச்சு மக்களின் மனதை மாற்றவில்லை. பணயக்கைதிகளாக வைக்கப் பட்டிருந்தவர்களும், பெரும்பான்மை டச்சுப் பிரஜைகளும், அந்த நடவடிக்கைகளை "அர்த்தமற்ற பயங்கரவாதமாக" கருதினார்கள். பலர் மனதில் மொலுக்கர்களுக்கு எதிரான துவேஷமும் மேலெழுந்து வந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. மொலுக்கு இளைஞர்களின் ஆயுதபாணி நடவடிக்கைகளின் பின்னரே, டச்சுப் பிரஜைகள் பலர், மொலுக்கர்களின் தேசிய இனப் பிரச்சினையை முதன் முதலாக அறிந்து கொண்டார்கள்.

ஒரு சிறுவர் பாடசாலையில் நடந்த பணய நாடகம், மொலுக்கு மக்களின் போராட்டத்திற்கு பாதகமாக அமைந்திருந்தது. அங்கே நிறைய மொலுக்கு பிள்ளைகளும் படித்ததால், ஆசிரியர், பெற்றோருக்கு மொலுக்கர்களை பற்றிய நல்ல அபிப்பிராயம் இருந்தது. "சில பொறுப்பற்ற இளைஞர்களின் செயல்" அவர்களுக்கு சினத்தை ஏற்படுத்தியது. முதலாவது காரணம், அவர்கள் பணயம் வைத்தது ஒரு சிறுவர் பாடசாலை. இரண்டாவது காரணம், தீவிரவாத இளைஞர்கள் தாம் வாழ்ந்த அதே ஊரில் இருந்த பாடசாலை ஒன்றைத் தான் தேர்ந்தெடுத்திருந்தனர். 

நல்ல மனம் படைத்த டச்சு பிரஜைகள் சிலர், ரயில் பணய நாடகத்திற்கு பின்னர், மொலுக்கு மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். சமூக முன்னேற்ற அமைப்புகளை உருவாக்க உதவினார்கள். ஆனால், அதற்காக பெரிய விலை கொடுக்க வேண்டி இருந்தது. அவர்களது உறவினர்கள் யாரும் ஆதரிக்கவில்லை. "எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்த துரோகிகள்" போன்று கருதி, ஒதுக்கி வைத்தார்கள். 

கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, நெதர்லாந்தில் நடந்த மொலுக்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் மறு ஆய்வு செய்யப் பட்டது. தொலைக்காட்சி நிலையங்கள், நேரடி கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தின. தாக்குதலில் ஈடுபட்ட, தற்போது விடுதலையான முன்னாள் தீவிரவாதி, நிலைமையை கையாண்ட அரசாங்க மந்திரி, மற்றும் முன்னாள் பணயக் கைதி, ஆகியோர் பங்குபற்றிய நிகழ்ச்சிகளினால் எந்தத் தீர்வையும் காண முடியவில்லை.

நெதர்லாந்து அரசு, தனது அன்றைய நிலைப்பாட்டை இன்றைக்கும் மாற்றிக் கொள்ளவில்லை. அனைத்து மேற்கத்திய நாடுகளும், புலம்பெயர்ந்த சமூக மக்களின் பிரச்சினை தொடர்பாக பின்வரும் அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.: 
"இன விடுதலைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் போன்ற விடயங்களை, உங்கள் தாயகத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். புலம்பெயர்ந்த மண்ணில் அது வேண்டாம்."

(முற்றும்)

உசாத்துணை:
1. De Molukse Acties, Peter Bootsma
2. Ambon, Kolonisatie, dekolonisatie en neo-kolonisatie, Ernst Utrecht
3. Een jaar in de Molukken, H.R. Roelfsema
4. Knipselkrant van de afdeling Voorlichting der provincie Drente

Web Sites:
http://www.republikmalukuselatan.nl/nl/content/home.html


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:
1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்
3.புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு
4.நாடு கடந்த மொலுக்கு அரசாங்கத்துடன் முரண்படும் இளையோர்
5.ரயிலைக் கடத்தி பணயம் வைத்த தனி நாட்டுக் கோரிக்கையாளர்கள்

Monday, July 01, 2013

ரயிலைக் கடத்தி பணயம் வைத்த தனி நாட்டுக் கோரிக்கையாளர்கள்


[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை] 

 (ஐந்தாம் பாகம்)


சிறு வயதிலேயே புலம்பெயர்ந்த, அல்லது நெதர்லாந்து மண்ணில் பிறந்து வளர்ந்த மொலுக்கு இளையோர், அவர்களது தாயக கலாச்சாரத்துடன் வளர்க்கப் பட்டனர். குறைந்தது, ஐந்து வருடங்களாவது, டச்சுக் கலாச்சாரத்துடன் எந்த வித தொடர்புமற்று வளர்ந்தார்கள். அதற்குப் பின்னர், வழமையான நெதர்லாந்து பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப் பட்டாலும், வெள்ளையின டச்சு மாணவர்களுடன் பழக முடியாமல் தாழ்வுச் சிக்கலுக்குள் தள்ளப் பட்டனர்.  இழந்த தாயகம் குறித்த ஏக்கம், புலம்பெயர்ந்த மண்ணில் செலவுக்காக வேலை செய்ய வேண்டிய நிலைமை என்பன, பிற மாணவர்களிடம் இருந்து அந்நியப் பட வைத்தது.

மொலுக்கர்களால் தேசியத் தலைவராக கருதப்பட்ட கிரிஸ் சௌமொகில் கொல்லப் பட்ட பின்னர், தலைமறைவாக இருந்த அவரது மனைவியும், பிள்ளையும் நெதர்லாந்து வந்து சேர்ந்தனர். அவரை வரவேற்க, ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் குழுமிய ஆயிரக் கணக்கான மொலுக்கர்கள் மனதில்,  விரக்தியும், வேதனையும் குடி கொண்டிருந்தன. "தோற்றுப்போனவர்கள்" என்ற ஆதங்கமும், இந்தோனேசிய ஆட்சியாளர் சுகார்ட்டோ போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப் பட வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்வும் மேலோங்கிக் காணப் பட்டது. அந்த சூடு தணிவதற்குள், ஹேக்கில் இருந்த இந்தோனேசியா தூதுவராலயத்திற்கு பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன.

நெதர்லாந்து அரசு, இந்தோனேசியாவுடன் நல்லுறவைப் பேண விரும்பியது. அதற்கு சில காரணங்கள் இருந்தன. பிரிட்டன் இலங்கையின் ஆட்சியை சிங்களப் பெரும்பான்மையினரிடம் ஒப்படைத்தது போல, நெதர்லாந்து இந்தோனேசிய பெரும்பான்மை இனத்தை நம்பி ஒப்படைத்திருந்தது. காலனிய காலகட்டத்தில், இலங்கையில் சிங்கள தேசியவாதம் வளர்ந்தது போல, டச்சுக் காலனிய ஆட்சிக்கு எதிராக, இந்தோனேசிய தேசியவாதம் வளர்ந்திருந்தது.

இந்த பெரும்பான்மையின தேசியவாதம், மிகத் தீவிரமான காலனிய எதிர்ப்புச் சக்தியாக வளர்ந்து வந்தது. ஆகவே, இந்தோனேசிய தேசியவாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதன் மூலம், தனது காலனிய கடந்த கால பாவங்களுக்கு, பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம் என்று நெதர்லாந்து எண்ணியது. இதனால், எழுபதுகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சுகார்ட்டோ ஒரு சர்வாதிகாரி என்று தெரிந்து கொண்டும், நெதர்லாந்துக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப் பட்டது.

சுகார்ட்டோ நெதர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் விடயம், மொலுக்கர்கள் மனதில் தீயை மூட்டியது. நெதர்லாந்து அரசு, மொலுக்கு இன மக்களின் அபிலாஷைகளை முற்று முழுதாக கை கழுவி விட்டதாக உணர்ந்தார்கள். இதனால், இந்தோனேசிய பேரினவாத அரசுக்கும், கூடவே நெதர்லாந்து காலனிய அரசுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என எண்ணினார்கள். 

சுமார் 30 மொலுக்கு இளைஞர்கள், ஆயுதங்கள் சகிதம், "வாசனார்"(Wassennaar) என்னுமிடத்தில் உள்ள இந்தோனேசிய தூதுவரின் வீட்டை முற்றுகையிட்டனர். வரப்போகும் ஆபத்தை உணர்ந்து, தூதுவர் தப்பியோடி விட்டாலும், எஞ்சியோரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அந்த சம்பவம் ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்தது. அதைப் பயன்படுத்தி, மொலுக்கு இனப் பிரச்சினை பற்றி சர்வதேசத்திற்கு  அறிவித்து விட்டு, மதியத்துடன் பணய நாடகத்தை முடித்துக் கொண்டு சரணடைந்தனர்.

பிரிட்டனில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புக் காட்டிய நிகழ்வைப் போல, மேற்குறிப்பிட்ட மொலுக்கர்களின் அரசியல் நடவடிக்கைகளும், இந்தோனேசியாவின் உள்வீட்டு பிரச்சினையாக நோக்கப் பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது, வன்முறையில் ஈடுபட்ட மொலுக்கர்கள் மட்டுமே தண்டிக்கப் பட்டார்கள். மற்றவர்கள் விடுதலை செய்யப் பட்டனர். அப்போதும், நெதர்லாந்து அரசு மொலுக்கர்களின் பிரச்சினையை கவனத்தில் எடுக்கவில்லை. அதனால் ஏற்படப் போகும் பாரதூரமான விளைவுகளையும் எதிர்பார்க்கவில்லை.

1975 ம் ஆண்டு, டிசம்பர் மாதம், வடக்கே உள்ள குரொனிங்கன் நகரில் இருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் வண்டி, "வைஸ்டர்" (Wijster) எனுமிடத்தில் திடீரென நின்றது. யாரோ அபாயச் சங்கிலியை பிடித்திழுத்ததால், ரயில் வண்டி வெட்ட வெளி ஒன்றில் வந்து நின்றது. திடீரென தோன்றிய, முகத்தை மூடிய, இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய இளைஞர்கள், பயணிகளை மிரட்டி உட்கார வைத்தனர்.

தாங்கள், "மொலுக்கு குடியரசுக்காக போராடும் போராளிகள்" என்றும், "இந்த ரயில் வண்டி எம்மால்  கடத்தப் பட்டுள்ளது" என்றும் அறிவித்தனர். முதலில் பயணிகள் தரம் பிரிக்கப் பட்டனர். டச்சுக்காரர்கள், இந்தோனேசியர்கள் தவிர்ந்த பிற நாடுகளை சேர்ந்த பயணிகள், வீடு செல்ல அனுமதிக்கப் பட்டனர். அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கடிதத்தையும் அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள்.

உலகிலேயே முதல் தடவையாக ஒரு ரயில் வண்டி கடத்தப் பட்டு பணயம் வைக்கப்பட்ட சம்பவம் அதுவாகும். இதற்கு முன்னர், பாலஸ்தீன போராளிகள் விமானங்களை கடத்தி இருக்கிறார்கள். ஆனால், யாரும் ரயில் வண்டியை கடத்தவில்லை. எழுபதுகளில் நடந்த விமானக் கடத்தல்களை கேள்விப்பட்ட மொலுக்கு இளைஞர்கள் தாமும் அது போன்று செய்ய எண்ணி இருக்கலாம். மேலும், நெதர்லாந்திலேயே ஏற்கனவே ஒரு கடத்தல் நாடகம் அரங்கேறி இருந்தது. ஹேக் நகரில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தை கைப்பற்றிய ஜப்பானிய இடதுசாரி தீவிரவாதிகள், தூதுவரை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்ததுடன், தமது கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றிக் கொண்டு, வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று விட்டனர்.

"நெதர்லாந்து ஜெயிலில் இருக்கும் சக மொலுக்கு போராளிகளை விடுதலை செய்ய வேண்டும்.... மொலுக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நெதர்லாந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...." என்பன போன்ற கோரிக்கைகள், ரயிலைக் கடத்தியவர்களால் வைக்கப் பட்டன. மேலும் பணயக்கைதிகளுடன் தாம் தப்பிச் செல்வதற்கு ஒரு பேரூந்து வண்டியை ஒழுங்கு படுத்துமாறு கோரினார்கள். நேரே, ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திற்கு சென்று, விசேடமாக ஒழுங்கு படுத்தப்பட்ட விமானம் ஒன்றில் தப்பிச் செல்வதே அவர்களது நோக்கம். ஆப்பிரிக்காவில், பெனின் நாடு மட்டும் மொலுக்கு என்ற தனி நாட்டை அங்கீகரித்திருந்தது. அதனால், கடத்தல்காரர்களும் பெனினுக்கு செல்ல விரும்பினார்கள்.

நெதர்லாந்து அரசு, கடத்தல்காரர்களின் கோரிக்கைகளுக்கு இணங்காமல் சாக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. இதனால், கடத்தல்காரர்கள் ஏற்கனவே மிரட்டிய படி, மூன்று பேரை சுட்டுக் கொன்றார்கள். அதில் ஒருவர் ரயில் எஞ்சின் சாரதி. ஆனால், அந்தக் கொலைகளையே காரணமாக காட்டி அரசு பேச்சுவார்த்தை நடத்த மறுத்தது. இப்படியே 12 நாட்கள் கடந்து விட்டன. இறுதியில், நெதர்லாந்து அரசினால் அனுப்பி வைக்கப் பட்ட "நாடு கடந்த மொலுக்கு அரசின்" பிரதிநிதிகளின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மொலுக்கு பிரமுகர்களின் மத்தியஸ்தத்தின் விளைவாக, கடத்தல்காரர்கள் சரணடைந்தார்கள். பணயக்கைதிகள் விடுவிக்கப் பட்டனர். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கடத்தல்காரர்களுக்கு இருபதாண்டு கடூழிய சிறைத் தண்டனை கிடைத்தது.

இதே நேரம், ரயில் கடத்தலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, இன்னொரு குழுவை சேர்ந்த மொலுக்கு இளைஞர்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள இந்தோனேசிய உதவித் தூதரகத்தை ஆக்கிரமித்தனர். அதனால், சர்வதேச ஊடகங்களும் கவனம் செலுத்த தொடங்கின. சர்வதேச ஊடகவியலாளர்கள், தூதரக ஆக்கிரமிப்பையும், ரயில் பணய நாடகத்தையும் மாறி மாறி அறிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களில் பலருக்கு மொலுக்கு இனப் பிரச்சினை குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. நெதர்லாந்து அரசு அதிகாரிகள், சம்பவத்தை விபரிப்பதுடன் நில்லாது, மொலுக்கர்களின் இனப் பிரச்சினை குறித்தும் விளக்க வேண்டியிருந்தது. ரயில் கடத்தல் முடிவுக்கு வந்தவுடன், தூதரக ஆக்கிரமிப்பாளர்களும் காவல்துறையிடம் சரணடைந்தார்கள். 

அனேகமாக, ஏற்கனவே ஒரு ரயில் கடத்தல் நடந்த இடத்தில், மீண்டும் ஒரு ரயிலைக் கடத்த மாட்டார்கள் என்று பலர் நினைத்திருப்பார்கள். ஆனால், அந்த நினைப்பு பொய்த்துப் போனது. 1977 ம் ஆண்டு, அதே வழித் தடத்தில், இன்னொரு ரயில் கடத்தப் பட்டது. மொலுக்கு இளையோருக்கு இடையில், குறிப்பிடத்தக்க அமைப்பு எதுவும் இயங்கவில்லை. யார் வேண்டுமானாலும், குழுவாக இணைந்து ஒரு ஆயுதபாணி அரசியல் நடவடிக்கையில் இறங்கினார்கள். ஒரே சமூகப் பின்னணி, ஒரே வரலாறு, ஒரே கொள்கை அவர்களை ஒன்றிணைத்தது. ஆன படியால், ஆயுதமேந்துவதற்கு தயாரான தாராளமான போராளிகள், மொலுக்கு சமூகத்தினர் மத்தியில் இருந்தனர். 

மொலுக்கு தீவிரவாத இளைஞர்களால் கடத்தப்பட்டு, De Punt என்னுமிடத்தில், மூன்று வாரங்களாக நிறுத்தி வைக்கப் பட்ட ரயில் பணய நாடகம், நெதர்லாந்து வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதிவு செய்யப் பட்டது. 1975 ரயில் கடத்தலில் சம்பந்தப்படாத, புதிய இளைஞர்கள் தான், 1977 ம் ஆண்டு ரயிலைக் கடத்தினார்கள். கடந்த கால தவறுகளில் இருந்து சில படிப்பினைகளை பெற்றிருந்தனர். அதாவது, பணயக் கைதிகளை கொல்லாமல் வைத்திருந்தால், அரசுடன் பேரம் பேசலாம் என்று நம்பினார்கள்.  ஆனால், நெதர்லாந்து அரசு நம்பகத் தன்மையுடன் நடக்கவில்லை. இதனை மிகத் தாமதாக தான் உணர்ந்து கொண்டார்கள். அரசு, கடத்தல்காரர்களின் கோரிக்கைகளுக்கு உடன்படுவதைப் போல நடித்து ஏமாற்றியது. 

அரசு எதற்கும் மசியாமல் மூன்று வாரங்களை இழுத்தடித்தது. கடத்தல்காரர்கள் எதிர்பார்த்தது போல, அவர்களை பொறுப்பேற்க எந்த நாடும் முன்வரவில்லை என்பதும் ஒரு காரணம். பெனின், யேமன், வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதரகங்களை தொடர்பு கொண்டு விசாரித்த போதிலும், யாரும் அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை. அதற்குமப்பால், கடத்தல்காரர்களுக்கு இடம்கொடுக்க கூடாது என்ற, நெதர்லாந்து அரசின் பிடிவாதமும் ஒரு காரணம். மரைன் கமாண்டோக்கள் தாக்குதல் நடவடிக்கை எடுக்கும் நாள் வரையில், பொய், புரட்டு, சுத்துமாத்துக்கள் செய்து காலத்தை கடத்தியது. 

இறுதியில், 11 ஜூன் 1977 அன்று, இரண்டு ஜெட் போர் விமானங்கள் பேரிரைச்சலுடன் ரயிலுக்கு மேலே வட்டமிட்டன. தயாராக காத்திருந்த மரைன் படையினர், ரயில் வண்டிக் கதவுகளை குண்டு வைத்து தகர்த்து, உள்ளே நுழைந்தனர். ஏற்கனவே, கடத்தல்காரர்கள் எந்த இடத்தில் தங்கி இருக்கின்றனர் என்ற தகவல்கள் பெறப் பட்டிருந்தன. மரைன் படை நடவடிக்கைக்கு திட்டமிடும் நேரம், கடத்தல்காரர்களை (அவர்களைப் பொருத்தவரையில்: பயங்கரவாதிகள்) "கழற்றி விட வேண்டும்" என்று படையினருக்கு உத்தரவிடப் பட்டது. 

"Uitschakelen" (கழற்றி விடுதல்) என்ற டச்சு சொல், "பயங்கரவாதிகளை செயற்பட விடாமல் சுட்டு காயப் படுத்தல் வேண்டும்" என்ற அர்த்தத்தில் சொல்லப் பட்டது. ஆனால், "தேவைப்பட்டால் சுட்டுக் கொல்லவும்" அனுமதி வழங்கப் பட்டிருந்தது. இதனால், குறைந்தது நான்கு கடத்தல்காரர்களை, உயிரோடு பிடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்த்திருந்தும், "என்கவுண்டர் பாணியில்" சுட்டுக் கொலை செய்துள்ளதாக தெரிய வருகின்றது. அண்மையில் கூட, அன்று நடந்த நீதிக்கு புறம்பான கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற குரல்கள் கேட்கின்றன. பரம்பரை பரம்பரையாக மேலைத்தேய விசுவாசிகளாக இருந்தாலும், முன்னாள் காலனிய எஜமானுக்கு எதிராக ஆயுதமேந்தத் துணிந்தால், ஈவிரக்கமின்றி நசுக்கப் படுவார்கள் என்பதை, De Punt என்னுமிடத்தில் நடந்த, "என்கௌண்டர்  கொலைகள்" தெரிவிக்கின்றன.

(தொடரும்)


உசாத்துணை:
1. De Molukse Acties, Peter Bootsma
2. Ambon, Kolonisatie, dekolonisatie en neo-kolonisatie, Ernst Utrecht
3. Een jaar in de Molukken, H.R. Roelfsema
4. Knipselkrant van de afdeling Voorlichting der provincie Drente

Web Sites:
http://www.republikmalukuselatan.nl/nl/content/home.html


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:
1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்
3.புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு
4.நாடு கடந்த மொலுக்கு அரசாங்கத்துடன் முரண்படும் இளையோர்

Monday, June 24, 2013

நாடு கடந்த மொலுக்கு அரசாங்கத்துடன் முரண்படும் இளையோர்


[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை] 

 (நான்காம் பாகம்)

2009 ஏப்ரல், நோர்வே ஒஸ்லோ நகரில் உள்ள இலங்கை தூதுவராலயம், ஈழத் தமிழ் இளையோரால் ஆக்கிரமிக்கப் பட்டு, உடைத்து நாசமாக்கப் பட்டது. ஈழப்போரின் எதிரொலியாக, புலம்பெயர்ந்த நாடொன்றில், இலங்கை அரச நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அது இராஜதந்திர விஷயத்தில், இரு நாடுகள் சம்பந்தப் பட்ட விடயமும் ஆகும். முன்னாள் ஐரோப்பிய காலனி நாடொன்றின் இனப் பிரச்சினை, காலனிய எஜமானர்களின் தாயகத்தில் எதிரொலித்தது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே, 1966 ம் ஆண்டு, நெதர்லாந்து, ஹேக் நகரில் அமைந்துள்ள இந்தோனேசிய தூதரகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. அந்த தாக்குதலை நடத்தியவர்கள், புலம்பெயர்ந்த மொலுக்கு இளையோர். ஈழத் தமிழ் இளையோரும், இந்தோனேசிய மொலுக்கு இளையோரும், அவர்களது பெற்றோரால் தான் அரசியல் மயப் படுத்தப் பட்டனர்.

நிச்சயமாக, புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் மற்றும் மொலுக்கு பெற்றோர்கள், ஐரோப்பிய கனவான்களைப் பற்றி பெரு மதிப்பு வைத்திருந்தார்கள். (ஐரோப்பிய) பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த அரசியல் நடவடிக்கையையும் தவறாக கருதியவர்கள். ஆனால், சிறு வயது முதல் புலம்பெயர்ந்த மண்ணில் வளர்ந்த இளையோரிடம் அந்த மனப்பான்மை இருக்கவில்லை. தமது பெற்றோர் புலம்பெயர்ந்து வந்த தாயகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கும், தாம் வாழும் ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கும் நேரடி தொடர்பிருப்பதை புரிந்து கொண்டார்கள்.

நெதர்லாந்து காலனிய எஜமானர்களுக்கு, மொலுக்கு சமூகம் செய்த சேவை அளப்பெரியது. இருப்பினும், இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுத்த நாள் முதல், காலனிய எஜமானின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. வெளிப்படையாகவே இந்தோனேசிய அரசுக்கு சார்பாக நடந்து கொண்டனர். தம்மை நம்பி இருந்த  மொலுக்கு சமூகத்திற்கு துரோகம் இளைத்தனர். நெதர்லாந்து நாட்டிற்கு கொண்டு வரப் பட்ட முன்னாள் காலனியப் படைவீரர்கள் கூட நல்ல முறையில் நடத்தப் படவில்லை.

அன்றைய காலத்தில், நெதர்லாந்து நாட்டில் எல்லோருக்கும் வீடு கிடைப்பது பெரிய பிரச்சினையாக இருந்தது. அதனால், அரசு மொலுக்கு அகதிகளை முகாம்களில் குடியமர்த்தியது. இந்த முகாம்களில் சில, இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜி ஆக்கிரமிப்பாளர்களால் பயன்படுத்தப் பட்டு வந்தன. அங்கே யூதர்களை தற்காலிகமாக அடைத்து வைத்திருந்து, அருகில் இருந்த வெஸ்டர்போர்க் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஜெர்மனிக்கு அனுப்பி, நச்சுவாயு செலுத்தி கொன்று குவித்தமை வரலாறு. முன்னாள் நாஜி தடுப்பு முகாம்களில், மொலுக்கு அகதிகள் தங்க வைக்கப் பட்டுள்ள விபரம், அவர்களுக்கு சொல்லப் படவில்லை. சில மாதங்களுக்குப் பின்னர், அகதிகள் தாமாகவே அறிந்து கொண்டனர். அப்போது அந்த அகதிகளின் உணர்வு எப்படி இருந்திருக்கும் என்பதை, இங்கே விபரிக்கத்  தேவையில்லை. 

மொலுக்கு அகதிகள் ஆறு மாதங்கள் மட்டுமே நெதர்லாந்தில் தங்கியிருப்பார்கள் என்று அரசு கூறி வந்தது. அதனால், அகதிகளும் டச்சு சமூகத்துடன் ஒன்று கலக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அரசும் வற்புறுத்தவில்லை. விளைவு? மொலுக்கு சமூகம் தீவு போன்று தனித்து விடப் பட்டது. பாடசாலை செல்லும் வயதில் இருந்த பிள்ளைகள், முகாம்களுக்குள் இருந்த பாடசாலைகளில் மட்டுமே படித்தனர். அவர்கள் நெதர்லாந்து மொழியில் படித்தாலும், பாடத்திட்டம் மொலுக்கு கலாச்சாரத்திற்கு அமைய உருவாக்கப் பட்டது.

பெற்றோரும் தமது பிள்ளைகளை மொலுக்கு கலாச்சாரத்துடன் வளர்க்க விரும்பினார்கள். பெற்றோருக்கு, ஆசிரியர்களுக்கு கீழ்ப் படிதல், தெய்வ நம்பிக்கை, கண்டிப்பு, கட்டுப்பாடு போன்றன போதிக்கப் பட்டன. இவை சில நேரம் நெதர்லாந்து கலாச்சாரத்திற்கு மாறாக இருந்த போதிலும், அரசு தலையிடவில்லை. என்றாவது ஒரு நாள், மொலுக்கு நாட்டுக்கு (தற்போது இந்தோனேசியா) திரும்பிப் போகப் போகிறவர்கள் என்ற எண்ணம், இரண்டு தரப்பிலும் மேலோங்கிக் காணப் பட்டது.

காலம் உருண்டோடியது. மாதங்கள் வருடமாகின. இப்படியே ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. அது வரைக்கும் மொலுக்கு அகதிகள், நாடற்றவர்களாக முகாம்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தனர். நெதர்லாந்து அரசுக்கு அவர்களைப் பற்றி சிந்திக்க நேரம் இருக்கவில்லை. அதற்கு வேறு பிரச்சினைகள் இருந்தன.  ஐந்து வருடங்கள் கழிந்து விட்ட நிலையில், மொலுக்கர்களுக்கு டச்சுக் குடியுரிமை கொடுத்து, வீடுகளில் தங்க வைப்பதென்று அரசு முடிவெடுத்தது. அப்போது தான், "தாங்கள் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்பதை, மொலுக்கர்கள் உணர்ந்து கொண்டார்கள்."

ஆரம்பத்தில் மொலுக்கர்களுக்கு கொடுக்கப்பட்ட கடவுச் சீட்டும், வழக்கமான கடவுச்சீட்டை விட வித்தியாசமானதாக இருந்தது. "இதனை வைத்திருப்பவர், நெதர்லாந்து பிரஜை போன்று நடத்தப் பட வேண்டும்" என்று அதில் எழுதப் பட்டிருந்தது. இது பல பிரச்சனைகளை உருவாக்கியது. "நெதர்லாந்து பிரஜை போன்று நடத்தப் பட வேண்டும்...." இந்த வாக்கியம் பிற நாடுகளில் இருந்த எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளுக்கு குழப்பத்தை உண்டு பண்ணியது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. மொலுக்கர்கள் தாயக பூமிக்கு சுற்றுலாப் பயணியாக செல்ல விரும்பினாலும் தடைகள் ஏற்பட்டன.

இந்தோனேசியா குடிவரவுத் திணைக்களம், குறிப்பிட்ட பயணி வாழும் உள்ளூராட்சி சபையில் இருந்து கடிதம் கொண்டு வருமாறு கேட்டது. அது பற்றி உள்ளூராட்சி சபையிடம் விசாரித்தால், அவர்கள் அப்படி ஒரு கடிதம் தர மறுத்தார்கள். "நீங்கள் நெதர்லாந்து பிரஜைகள். உங்களுக்கு வதிவிட விபரம் பற்றிய கடிதம் தேவையில்லை." என்று விளக்கம் கூறப் பட்டது. இந்தோனேசிய தூதுவராலயம் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இந்த இழுபறி நிலைமை ஒரு முடிவுக்கு வந்து, மொலுக்கர்கள் "வழமையான" குடியுரிமை பெறுவதற்கு சில வருடங்கள் எடுத்தன.

குடிவரவு-குடியகல்வு துறையில் இவ்வாறான பிரச்சினைகள் இருந்த போதிலும், மொலுக்கர்கள் சுற்றுலாப்பயணியாக தாயகம் சென்று வருவதை நெதர்லாந்தும், இந்தோனேசியாவும் ஊக்குவித்தன. இதனை, ஈழப்போர் முடிந்த பின்னர், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள், சுற்றுலாப்பயணிகளாக இலங்கை சென்று திரும்புவது போன்ற நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். "அங்கே நிலைமை வழமைக்கு திரும்பி விட்டது. யுத்தம் முடிந்து விட்டதால், மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அங்குள்ள மக்கள் எந்தளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை நேரில் சென்று பார்த்து விட்டு வாருங்கள்...." இது தான் அரசுகள் தெரிவிக்க விரும்பிய செய்தியின் சாராம்சம். அது இந்தோனேசியாவிலும், இலங்கையிலும் ஒரே மாதிரியான விளைவுகளை உண்டாக்கியது.

உண்மையில் நேரில் சென்று பார்த்தால், அங்குள்ள மக்கள் "கடந்த கால யுத்தத்தை மறந்து, எந்தப் பிரச்சினையுமின்றி வாழ்வதாக" தோன்றும். அரசியலற்ற சாதாரண மக்கள், "எங்களுக்கென்ன பிரச்சினை" என்று தான் கேட்பார்கள். தாயகம் சென்று வரும் சுற்றுலாப்பயணிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாட்டை வைத்திருப்பார்கள். குடும்பத்துடன் தாயகத்திற்கு பயணம் செய்து, அங்கே தமது உறவினர்களுடன் பொழுதுகளை உல்லாசமாக கழித்து விட்டு வருவார்கள். ஐரோப்பாவுக்கு திரும்பியதும், தாயகத்தில் நிலைமை எந்தளவு மோசமாக இருந்தது என்றும், மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் கதைப்பார்கள். இவை எல்லாம் ஏதோ ஒரு பகுதி உண்மையை மட்டுமே கூறுகின்றன. எல்லோரும் தமது சமூக நலன்களையும், அது சார்ந்த அரசியலையும் மட்டுமே பேச விரும்புகின்றனர்.

இதற்குள் உண்மையான இனப் பிரச்சினை கவனிக்கப் படுவதில்லை. 1963 ம் ஆண்டுடன், ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டாலும், இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்தோனேசிய அரச படைகள், ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் போல நடந்து கொள்கின்றன. மொலுக்கு தேசியவாதத்திற்கு ஆதரவானவர்களின், சுதந்திரம் பறிக்கப் படுகின்றது. கொடியேற்றுவது கூட குற்றமாக பார்க்கப்பட்டு, தண்டிக்கப் படுகின்றனர். மொலுக்கு பிரதேசத்தில், இந்தோனேசிய ஆக்கிரமிப்புப் படைகளின் அத்துமீறல்கள் குறித்து, சர்வதேச மன்னிப்புச் சபை விரிவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. 

குறிப்பாக தாயகம் சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் கூறிய கதைகளும், அதை வைத்து புலம்பெயர்ந்த நாடுகளில் பேசப்படும் அரசியலும், இளைய தலைமுறை மொலுக்கர்களை தீவிரவாதப் பாதை குறித்து சிந்திக்க வைத்தது. குறிப்பாக, இளைய தலைமுறையினர் எல்லோரும் தற்போதைய மொலுக்கு தேசிய தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். நாடு கடந்த தமிழீழ அரசு மாதிரி, "நாடு கடந்த மொலுக்கு அரசு" ஒன்று நெதர்லாந்தில் இயங்கிக் கொண்டிருந்தது. (அது இப்போதும் இருக்கின்றது.) ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டு, இனிமேல் அஹிம்சாவழிப் போராட்டம் மட்டுமே நடத்துவதாக உறுதி பூண்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ பிரதமர் ருத்திரகுமாரன் மாதிரி, நாடு கடந்த மொலுக்கு அரசின் பிரதமரான யோப் மனுசம்மா ஒன்றுமே செய்ய முடியாத மிதவாதி என்ற எண்ணம், இளையோர் மத்தியில் காணப்பட்டது.

இந்த இடத்தில், புலம்பெயர்ந்த தமிழ் தேசியவாதிகளினதும், மொலுக்கு தேசியவாதிகளினதும் அரசியல் பாதைகள் வேறுபட்டு பிரிந்து செல்கின்றன. அதாவது, தாயகத்தில் நிறுத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை, புலம்பெயர்ந்த மண்ணில் தொடர வேண்டும் என்று, மொலுக்கு இளையோர் முடிவெடுத்தனர். அதற்கு கட்டியம் கூறுவதைப் போல, இந்தோனேசிய தூதுவராலயத்தின் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து, நெதர்லாந்து மகாராணி யூலியானாவை கடத்திச் செல்வதற்கு திட்டம் தீட்டப் பட்டது. ஆனால், அந்த திட்டத்தில் ஒரு பெரிய குழு ஈடுபட்டதால், ஓட்டைகள் அதிகமாகி, யாரோ ஒருவர் மூலம் தகவல் கசிந்து விட்டது. அதனால் இராணியை கடத்தும் திட்டம் கைவிடப் பட்டது. ஆனால், அதற்குப் பிறகு நடைபெற்ற, உலகை உலுக்கிய ஆறு ஆயுதபாணித் தாக்குதல்களை, நெதர்லாந்து புலனாய்வுத் துறையால் துப்புத் துலக்க முடியவில்லை. என்ன காரணம்?

(தொடரும்)

உசாத்துணை:
1. De Molukse Acties, Peter Bootsma
2. Ambon, Kolonisatie, dekolonisatie en neo-kolonisatie, Ernst Utrecht
3. Een jaar in de Molukken, H.R. Roelfsema
4. Knipselkrant van de afdeling Voorlichting der provincie Drente

Web Sites:
http://www.republikmalukuselatan.nl/nl/content/home.html

இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்
3.புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு

Tuesday, June 18, 2013

புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு

[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை] 

 (மூன்றாம் பாகம்)


ஈழத் தமிழர்கள், மொலுக்கர்கள் ஆகிய தேசிய இனங்களுக்கு இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். இரண்டு தேசிய இனங்களும், போர்த்துக்கேயர்கள், டச்சுக்காரர்கள் ஆகிய ஐரோப்பிய காலனியாதிக்க எஜமானர்களால் ஆளப்பட்டன. காலனிய காலத்தில் சிறப்புரிமை பெற்ற இனங்களாக இருந்தன. அவர்களின் முன்னோர்கள் காலனிய எஜமானர்களினால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். ஆனால், பிற்காலத்தில் வந்த தலைமுறையினர் அதே காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் இருந்து சில உதாரணங்களை காட்டலாம்.

இலங்கையில் போர்த்துக்கேய காலனியாதிக்கம் பரவிய காலத்தில், யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவ - தமிழர்களை இனப்படுகொலை செய்தான். அதற்குப் பதிலடியாக, போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர், அங்கு வாழ்ந்த இந்து - தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள். மொலுக்கு தீவுகள், வாசனைத் திரவியங்களுக்கு பேர் போனது. அங்கு சென்ற டச்சுக்காரர்கள், மொலுக்கு விவசாயிகள் பணப் பயிர்களை உற்பத்தி செய்ய ஊக்குவித்தார்கள். ஆனால், அங்கு விளைந்த வாசனைத் திரவியங்களை டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கு மட்டுமே விற்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார்கள். உள்ளூர் மக்கள், ஆங்கிலேய வர்த்தகர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதை அறிந்த டச்சுக் காரர்கள், அதற்கு தண்டனையாக ஆயிரக் கணக்கான மக்களை இனப்படுகொலை செய்தார்கள். 

காலப்போக்கில் தென் மொலுக்கு தீவுகளில் வாழ்ந்த மக்களை, டச்சுக் காரர்கள் தமக்கு விசுவாசமானவர்களாக மாற்றினார்கள். அந்த விசுவாசம் எந்தளவுக்கு தீவிரமாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணத்தை கூறலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் போது, அந்தப் பிராந்தியம் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அங்கு பல வீடுகளில் வைக்கப் பட்டிருந்த, நெதர்லாந்து இராணியின் உருவப் படத்தை அகற்றுமாறு, ஜப்பானிய படையினர் உத்தரவிட்டனர். பல மொலுக்கர்கள், அதற்கு மறுத்து சித்திரவதைகளை அனுபவித்தனர். மொலுக்கர்களின் காலனிய விசுவாசத்திற்கு, கிறிஸ்தவ மயமாக்கல் ஒரு முக்கிய காரணமாகும்.

மொலுக்கர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் நெதர்லாந்து இராணிக்கு காட்டிய விசுவாசத்தை பெருமையுடன் நினைவு கூர்வார்கள். அதே போன்று தான், ஈழத் தமிழர்களும் தாம் பிரிட்டிஷ் இராணிக்கு காட்டிய விசுவாசம் குறித்து சிலாகித்து பேசுவதில் பெருமைப் படுவார்கள். காலனிய எஜமானர்கள், ஒரு குறிப்பிட்ட பிரதேச மக்களை கிறிஸ்தவ மயமாக்குவதற்கு வணிகமும் முக்கிய காரணமாக இருந்தது. அதாவது, அன்றைய சர்வதேச வணிகம் இஸ்லாமிய மொலுக்கர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதனை முறியடிக்க வேண்டிய தேவை இருந்தது. இதே போன்று, அன்றைய வட இலங்கையிலும் சர்வதேச வர்த்தகம் இஸ்லாமிய தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. காலனியாதிக்க வாதிகள் கணிசமான தமிழர்களை கிறிஸ்தவ மயப் படுத்தி, தமக்கு ஆதரவான சக்தியாக வளர்த்தெடுத்தனர். 

இன்றைய இலங்கையின் இனப் பிரச்சினையில் காணப்படும், "தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டின் தோற்றுவாய்" காலனிய கால கட்டத்தில் உருவாகி விட்டது. இன்று தமிழ் - முஸ்லிம் முரண்பாடு, சிங்கள பேரினவாதத்திற்கு பயனளிக்கத் தக்கதாக மாறி விட்டது. அதே போன்று, இன்றைய இந்தோனேசிய அரசும், மொலுக்கர் சமூகத்தில் உள்ள கிறிஸ்தவ - முஸ்லிம் முரண்பாட்டை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. மொலுக்கு தீவுகளில் காணப்படும் கிறிஸ்தவ - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பகைமை உணர்ச்சியும் காலனிய காலத்திலேயே வேரூன்றி விட்டது. கிழக்கிலங்கையில் நடந்த தமிழ் - முஸ்லிம் கலவரங்கள், தமிழீழத்திற்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக குறைத்தது. அதே போன்று, மொலுக்கு தீவுகளில் நடந்த கிறிஸ்தவ - முஸ்லிம் கலவரங்கள், மொலுக்கு தேசியத்திற்கு பின்னடைவாக அமைந்தது. 

ஆரம்பத்தில், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஈழத் தமிழ் தேசியம், வெகு விரைவில், கிறிஸ்தவ - இந்து தமிழர்களுடைய வடக்கு-கிழக்கு மாகாணங்களை மட்டுமே உள்ளடக்கிய தமிழீழமாக குறுகிப் போனது.மொலுக்கு தேசியமும் அதே மாதிரியான பரிணாம வளர்ச்சியை கண்டது. கிறிஸ்தவர்கள் மட்டும் வாழும் தென் மொலுக்கு தீவுகளை மட்டுமே உள்ளடக்கிய, தென் மொலுக்கு தேசியமாக குறுகிப் போனது. அது மொலுக்கு தேசியத்தின் முக்கியமான தவறு என்பதை, இரண்டாவது தலைமுறையினர் மட்டுமே உணர்ந்தார்கள். ஆனால், அதற்குள் பல கசப்பான பின்னடைவுகளை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. 

மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று குடியேறிய ஈழத் தமிழர் மத்தியில், தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கணிசமான அளவு ஆதரவு இருந்தது. பெரும்பாலான தருணங்களில், புலிகளின் போர் வெற்றிகள், தமிழ் மக்கள் மீதான சிங்களப் படைகளின் அட்டூழியங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நம்பியிருந்த ஊடகங்களும், தாயகத்து தொடர்புகளும் அந்த தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தன. அதே மாதிரியான நிலைமையில் தான், நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கு அகதிகளும் இருந்தனர். மொலுக்கு குடியரசுவாதிகளின் ஆயுதப் போராட்டம், இந்தோனேசியப் படைகளின் அட்டூழியங்கள் போன்றன அவர்களின் உரையாடல்களில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். 

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை, புலிகள் இயக்கத்திற்கான நிதியாக வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதே போன்று, நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கு அகதிகளும் குடும்பத்திற்கு 400 டச்சு கில்டர்ஸ் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். (இன்று அதன் மதிப்பு 500 யூரோவாக இருக்கலாம்.) இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது, ஐம்பதுகளில் நெதர்லாந்து முகாம்களில் வாழ்ந்த மொலுக்கு அகதி ஒருவருக்கு, வாரத்திற்கு மூன்று டச்சு கில்டர்ஸ் மட்டுமே செலவுக்கு கொடுக்கப் பட்டது. (எல்லா முகாம்களிலும் உணவு சமைத்துப் பரிமாறப் பட்டது.) ஒரு அகதியின் அத்தியாவசிய செலவுகளுக்கு, 3 கில்டர்ஸ் போதாது. புது உடுப்பு வாங்க முடியாது. வருடத்திற்கு ஒரு தடவை, மாற்று உடைகள் கொண்டு வந்து கொடுப்பார்கள். 

மொலுக்கர்கள் என்றோ ஒரு நாள் இந்தோனேசியாவுக்கு திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என்பதால், அவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப் படவில்லை. அதனால், அவர்கள் வேலை செய்யவும் அனுமதிக்கப் படவில்லை. அப்படியான இக்கட்டான நிலையிலும், பல அகதிகள் முகாமுக்கு அருகில் இருந்த வயல்களில், பண்ணைகளில் வேலை செய்து சிறிது பணம் சம்பாதித்தார்கள். அந்தப் பணத்தில் இருந்து தான், மொலுக்கு தீவுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கத்திற்கு நிதியுதவி செய்தார்கள். நிதி மட்டுமல்ல, ஆயுதங்களும் வாங்கி அனுப்பினார்கள். மொலுக்கு தேசியவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட, லக்சம்பேர்க் நாட்டில் நிறுவனத்தை வைத்திருந்த, டச்சு வர்த்தகர் ஒருவர் தாராளமாக உதவினார். புலம்பெயர்ந்த மொலுக்கர்களின் பணத்தில், ஹங்கேரி ஆயுதங்களை வாங்கி அனுப்பி உதவினார். 

புலிகளுக்கு உதவிய புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், மொலுக்கு விடுதலை இயக்கத்திற்கு உதவிய புலம்பெயர்ந்த மொலுக்கர்களும் இதனை தமது தார்மீகக் கடமையாக கருதினார்கள். அப்படி உதவியவர்களின் மனதில் ஒரேயொரு சிந்தனை மட்டுமே இருந்தது. அதாவது, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து செல்லும் உதவி காரணமாக, தாயகத்தில் போராடும் போராளிகள் வெற்றிகளைக் குவிப்பார்கள். ஒரு நாளைக்கு, தாயகப் பகுதிகளை விடுதலை செய்து, அங்கே தனி நாடு பிரகடனம் செய்வார்கள். அதன் பிறகு சுதந்திரமடைந்த நாட்டில் சென்று வாழலாம். ஆனால், தாயகத்தில் நிலைமை வேறு விதமாக இருந்தது. அங்கு போராடிக் கொண்டிருந்தவர்கள் எந்தளவு நெருக்கடிக்குள் இருந்தனர் என்ற உண்மை, புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு தெரிந்திருக்கவில்லை. 

ஈழத் தமிழர்களுக்கு, 2009 ஆண்டு ஏற்பட்ட அனுபவம், 1963 ம் ஆண்டு மொலுக்கர்களுக்கு கிடைத்தது. ஈழப்போரின் இறுதியில் புலிகள் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே முடக்கப் பட்டதைப் போன்று, 1963 ம் ஆண்டு, மொலுக்கு போராளிகள் சேரம் தீவினுள் முடக்கப் பட்டனர். ஏற்கனவே அவர்கள் தமது  கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் படிப்படியாக இழந்து கொண்டிருந்தனர். சேரம் தீவில் மட்டுமே நீண்ட காலம் நின்று பிடித்து போராடிக் கொண்டிருந்தனர்.

1962 ம் ஆண்டு, மொலுக்கு தீவுகளுக்கு அருகாமையில் உள்ள பாபுவா நியூ கினியா, இந்தோனேசியா வசம் சென்றது. அது வரையும், டச்சு காலனிய படைகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாபுவா நியூ கினியாவை, மொலுக்கு போராளிகள் பின் தளமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், நெதர்லாந்து அரசு பாபுவா நியூ கினியாவை இந்தோனேசியாவுக்கு தாரை வார்த்தமை, மொலுக்கு போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவாகும். மொலுக்கு தேசியவாதத்தை நியாயமான விடுதலைப் போராட்டமாக கருதி ஆதரிப்பதாக பாசாங்கு செய்த டச்சு காலனிய எஜமானர்கள், முதுகில் குத்தினார்கள்.  

1963 ம் ஆண்டு, மொலுக்கு விடுதலை இயக்கம், இந்தோனேசியப் படைகளால் முற்றாக அழிக்கப் பட்டது.  அதன் தலைவரான ஸௌமொகில் கைது செய்யப் பட்டார். 1965 ம் ஆண்டு, இந்தோனேசியாவில் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சுஹார்ட்டோ, தடுப்புக் காவலில் இருந்த சௌமொகிலை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். மொலுக்கு விடுதலை இயக்கத் தலைவரின் படுகொலை, நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கர்கள் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது. பலரால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. 

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் எந்தளவு அதிர்ச்சியை உண்டாக்கியது என்பது தெரிந்ததே. புலம்பெயர்ந்த மொலுக்கு சமூகமும், அதேயளவு அதிர்ச்சியில் உறைந்து போனது. அதற்கு காரணமான இந்தோனேசிய போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும், இந்தோனேசிய அரசு பழிவாங்கப் பட வேண்டும் என்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள், அன்றைய புலம்பெயர்ந்த அரசியலை தீர்மானித்தன. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள், புலிகளின் தோல்விக்கு உலக நாடுகள் எல்லாம் காரணம் என்று குற்றஞ் சாட்டியதைப் போல, மொலுக்கர்கள் நெதர்லாந்து அரசின் மீது குற்றஞ் சாட்டினார்கள். 

நெதர்லாந்து அரசு, மொலுக்கர்களின் இனப் பிரச்சினையை ஏறத்தாள மறந்து விட்டது. இந்தோனேசிய அரசுடன் நல்லுறவைப் பேணுவதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். இந்தோனேசியாவில் ஒரு சிறுபான்மையினமான மொலுக்கர்கள், பாரம்பரியமான மேற்குலக விசுவாசம் காரணமாக, தனது துரோகத்தை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நெதர்லாந்து நினைத்திருக்கலாம். ஆனால், முதலாம் தலைமுறையினரைப் பொறுத்த வரையில் அந்தக் கணிப்பீடு சரியாக இருக்கலாம். நெதர்லாந்தில் வாழ்ந்த இரண்டாம் தலைமுறையினர் மேற்கத்திய மாயைகளை கண்டு மயங்கத் தயாராக இருக்கவில்லை. 

"மேற்கத்திய நாடுகளை விமர்சிப்பதே ஒரு பாவச் செயல்" என்று நினைத்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள், 2009 ம் ஆண்டு ஐரோப்பிய, அமெரிக்க நகரங்களை, ஸ்தம்பிக்க வைத்தார்கள். இலங்கைக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்த தமிழீழப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக பரிணமித்தது. அறுபதுகளில், நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கர்களும் அதே மாதிரியான ஏகாதிபத்திய எதிர்ப்பு பாடங்களை கற்றுக் கொண்டார்கள். நெதர்லாந்து ஏகாதிபத்தியமும், தனது சுயரூபத்தை அவர்களுக்கு காட்டும் தருணம் வந்தது.  

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்