Showing posts with label அல்ஜீரியா. Show all posts
Showing posts with label அல்ஜீரியா. Show all posts

Sunday, February 01, 2015

அல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்


பாரிஸ் நகரில் புதிதாக வந்து குடியேறும் தமிழ் இளைஞர்கள் மத்தியில், பிரான்ஸ் பற்றி நிறைய தவறான கருத்துக்கள் காணப்படுவது வழமை. அதற்கு முதல் காரணம் அவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறார்கள். பாரிஸ் நகரை சுற்றிலும், ஏராளமான தமிழர்கள், குறைந்தது ஐம்பதாயிரம் பேர் வாழ்வதால், அது ஒரு மூடுண்ட சமுதாயமாக இருக்கிறது.

Gare du Nord ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள லா சாப்பல் (La Chapelle), பாரிஸ் நகரில் தமிழர்கள் அதிகமாக கூடும் பகுதி ஆகும். அங்கே வரிசைக்கு தமிழ்க் கடைகள் தான் இருக்கும். பலசரக்குக் கடைகள், புடவைக் கடைகள், உணவகங்கள், முடி திருத்தும் சலூன், புத்தகக் கடை போன்ற எல்லாம் அங்கே உண்டு. போதாக்குறைக்கு வார இறுதியில் திரையரங்கில் புதிதாக வந்த தமிழ் சினிமாப்படம் போடுவார்கள்.

உண்மையில், சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் கூட, அந்தப் பகுதியில் அல்ஜீரியர்கள், ஆப்பிரிக்கர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள் தான் பெருமளவில் இருந்தன. புலம்பெயர்ந்த தமிழர்கள் சில தெருக்களை தமக்கென "ஆக்கிரமித்து" விட்டார்கள்.

பாரிஸ் வாழ் தமிழர்கள் பெரும்பான்மையானோர், தமிழரைத் தவிர மற்ற இனத்தவருடனும் பழகுவதில்லை. (தமக்கு அப்படி எந்த தேவையும் இல்லையென்று சிலர் நேரடியாகவே சொல்வதுண்டு.) இது ஒரு வகையில் "கெட்டோ" (Ghetto) மனப்பான்மையை உண்டாக்குகின்றது. 

பெரும்பாலான பாரிஸ் தமிழர்களுக்குகும், அல்ஜீரிய சமூகத்திற்கும் இடையில் நட்பு ரீதியான பழக்கம் மிகவும் குறைவு.  அல்ஜீரியர்களை "அடையார்" என்று பட்டப் பெயர் சூட்டி அழைப்பார்கள். நேரடிப் பழக்கம் இல்லா விட்டாலும், ஆதாரம் இல்லாவிட்டாலும், எப்போதும் அல்ஜீரியர்களைப் பற்றிப் பல எதிர்மறையான கதைகளை மட்டுமே பேசுவார்கள்.

ஏனென்று கேட்டால், அவர்கள் "திருடர்கள், கிரிமினல்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள்," என்று பல காரணங்களை அடுக்குவார்கள். போதாக்குறைக்கு, "சமீப காலமாக பிரான்ஸின் அமைதியைக் குலைக்கும், ஷரியா சட்டம் கோரும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் அவர்கள் தான்..." என்று சொல்வார்கள்.

இன்றைக்கு, பிரான்சில் வாழும் அல்ஜீரியர்களை, "இஸ்லாமிய பயங்கரவாதிகளாக" அல்லது "திருடர்களாக" மட்டுமே கருதி மிரண்டு கொண்டிருக்கும், அரைவேக்காடுகளுக்கு இந்த உண்மை தெரிந்திருக்க நியாயமில்லை. பிரான்சில் வாழும் அல்ஜீரிய குடியேறிகளில் பலர், அந்த நாட்டிற்கு சர்வதேச புகழைத் தேடித் தந்திருக்கிறார்கள்.

அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமாக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என்று பல துறைகளிலும் பிரகாசித்து வந்திருக்கின்றனர். பலரது புகழ் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றது. பிரபல பெண் ஆவணப் பட இயக்குனர் யாமினா (Yamina Benguigui), இன்றுள்ள பிரான்சுவா ஹோலந்த் அரசினால் கடல் கடந்த பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

பிரெஞ்சு தேசிய கால்பந்தாட்ட அணியில் விளையாடிய சிடான் (Zinedine Yazid Zidan) பற்றி கேள்விப் படாத விளையாட்டு இரசிகர்களே இருக்க முடியாது. இப்படிப் பலரது பெயர்களைக் குறிப்பிடலாம்.

அப்படியான, பிரான்சில் குடியேறிய அல்ஜீரிய பிரபலங்களில் ஒருவர் காலித் (Khaled Hadj Ibrahim). உலகப் புகழ் பெற்ற பொப் இசைப் பாடகர். அமெரிக்காவில் சிறந்த பாடகருக்கான கிராமி விருதை (Grammy Awards) பெற்றவர். அல்ஜீரியாவில், காலித் பிறந்த ஊரில், அடித்தட்டு சமூக மக்களால் இசைக்கப்படும், நாட்டார் பாடல்கள் வகையை சேர்ந்த ராய் (Raï) இசை மூலம் உலகப் புகழ் பெற்றார். தமிழக சினிமா மூலம் பிரபலமான "கானா பாடல்கள்" வகையுடன் இதை ஒப்பிடலாம்.

1996 ம் ஆண்டு, ராய் இசையில், காலித் பாடிய "ஆயிஷா... ஆயிஷா..." எனும் பிரெஞ்சு மொழிப் பாடல், பல ஐரோப்பிய நாடுகளில் வருடக் கணக்காக பிரபலமாக இருந்தது. அன்று அந்தப் பாடல் வரிகளை முணுமுணுக்காத ஐரோப்பிய இளைஞர்களின் வாய்கள் இல்லை. MTV போன்ற இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சேனல்களில், வாரக் கணக்காக முதல் பத்து பாடல் தெரிவுகளில் ஒன்றாக இருந்தது.

அந்தக் காலங்களில், காலித்தின் ஆயிஷா ஆயிஷா பாடலின் இசையை நகலெடுத்து, நமது தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்தனர். இன்றைக்கும் அந்தப் பாடல்களை இரசிக்கும் தமிழர்கள் பலருக்கு, தாங்கள் ஒரு அரபி இசையை கேட்கிறோம் என்ற உண்மை தெரியாமல் இருக்கலாம்.

இசைக்கு மொழி கிடையாது. ஓரளவு பிரெஞ்சு மொழி தெரிந்தவர்கள், அந்தப் பாடலை இரசித்துக் கேட்க விரும்புவார்கள் என்பதால், பாடல் வரிகளை கீழே தந்திருக்கிறேன்.

Cheb Khaled - Aicha

Cheb Khaled - Aicha [Official Video] Original https://www.youtube.com/watch?v=8be8zBJWDJw


Comme si je n'existais pas,
elle est passée à côté de moi
Sans un regard, reine de Saba,
j'ai dit, Aïcha, prends, tout est pour toi

Voici, les perles, les bijoux,
 aussi l'or autour de ton cou
Les fruits, biens mûrs au goût de miel,
ma vie, Aicha si tu m'aimes!

J'irai où ton souffle nous mène,
dans les pays d'ivoire et débène
J'effacerais tes larmes, tes peines,
rien n'est trop beau pour une si belle

Aïcha, Aïcha écoute-moi,
Aïcha, Aïcha t'en vas pas,
Aïcha, Aïcha regarde moi,
Aïcha, Aïcha reponds-moi

Je dirais le mots des poèmes,
je jouerais les musiques du ciel,
je prendrais les rayons du soleil,
pour élairer tes yeux de reine

Oooh! Aïcha, Aïcha écoute-moi,
Aïcha, Aïcha t'en vas pas

Elle a dit: "Garde tes trésors, moi,
je vaux mieux que tout ça.
Des barreaux sont des barreaux même en or
Je veux les mêmes droits que toi
Et du respect pour chaque jour,
moi je ne veux que l'amour"

Monday, January 19, 2015

ஹார்கிஸ் : பிரெஞ்சு அடிவருடிகளான அல்ஜீரிய ஒட்டுக் குழுவினரின் கதை


"ஹார்கிஸ்": இவர்கள் யார் என்று தெரியுமா? தெரியாவிட்டால் ஒரு புலி ஆதரவாளரிடம் கேட்டுப் பாருங்கள். "ஒட்டுக்குழு" என்று பதில் சொல்வார். அல்ஜீரிய விடுதலைப் போரை நசுக்குவதற்காக, பிரெஞ்சு பேரினவாத அரசு பயன்படுத்திய துணைப் படையின் பெயர் தான் ஹார்கிஸ். அல்ஜீரியாவில் அவர்களின் பெயர் "ஒட்டுக் குழு!" 

அதாவது, எஜமான விசுவாசம் காரணமாக பிரான்சுக்கு சேவை செய்த அல்ஜீரிய துணைப் படையினர். விடுதலைக்காக போராடிய அல்ஜீரிய மக்களின் பார்வையில்: "இனத் துரோகிகள்". பிரெஞ்சு இராணுவம், தமது சொந்த இன மக்களை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்த நேரத்திலும், ஹார்கி ஒட்டுக் குழுவினர் எஜமானனின் காலை நக்கிக் கொண்டிருந்தனர்.

சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸில், பிரெஞ்சு பேரினவாத அரசுக்கு அடிவருடும் தமிழ் ஒட்டுக் குழுக்கள் பெருகி விட்டன. பிரெஞ்சு ஏகாதிபத்திய எஜமான் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக, தாங்களும் வெள்ளையர்கள் போன்று பாவனை செய்து கொள்கின்றனர். 

"பிரெஞ்சுக் கனவான்கள் தமிழர்களின் "உண்மையான" நண்பர்கள்... பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்... பிரெஞ்சு அரசுக்கு விசுவாசமாக சேவை செய்து நற்பெயரை சம்பாதிக்க வேண்டும்..." என்று, அடிமைகள் போன்று எஜமான விசுவாசம் காட்டும் இவர்கள், ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிறிலங்காவும், ஈழமும் தமிழ் தேசியவாதிகளினால் இரண்டு தேசங்களாக கருதப் படுகின்றன. "சிங்கள சிறிலங்கா, தமிழீழப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது..." என்று அவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அல்ஜீரியா உண்மையிலேயே, நூறு வருடங்களுக்கும் மேலாக, பிரான்சின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டு வந்தது. 

அதன் அர்த்தம், குறைந்த பட்சம் காகிதத்திலாவது, அல்ஜீரியர்களும் பிரெஞ்சுப் பிரஜைகளாக கருதப் பட்டனர். ஆனால், இரண்டாந்தர பிரஜைகளாக உரிமைகள் இன்றி அடக்கப் பட்டனர். "பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்" என்று, இன்றைக்கு நேற்று பிரான்சுக்கு வந்த தமிழ் அடிவருடிகள் கனவு காண்கின்றனர். பிரான்சில் வாழும் அல்ஜீரியர்கள், கடந்த 150 வருடங்களாக, பிரெஞ்சு மொழியை சரளமாகப் பேசிக் கொண்டிருக்கும், பிரெஞ்சு பிரஜைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அல்ஜீரிய- முஸ்லிம் போர் வீரர்கள், பிரெஞ்சு இராணுவத்தில் சேவை செய்வது, ஏற்கனவே பல வருட காலமாக நடந்து வந்துள்ளது. பிரான்சின் காலனியப் போர்களிலும், அல்ஜீரிய வீரர்கள் போரிட்டுள்ளனர். ஆசியாவில் பிரெஞ்சுச் காலனியாகவிருந்த, வியட்நாம், கம்போடியாவில் நடந்த போர்களிலும் ஏராளமான அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள்.

ஐரோப்பாவில் நடந்த முதலாம் உலகப் போரில் மட்டும், கிட்டத் தட்ட ஒரு இலட்சம் அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள். இரண்டாம் உலகப் போரிலும் பல்லாயிரக் கணக்கான அல்ஜீரிய வீரர்கள், பிரான்சின் விடுதலைக்காக மரணத்தை தழுவியுள்ளனர். உண்மையில், பல இலட்சம் அல்ஜீரிய படையினரின் உயிர்த் தியாகம், இரண்டு உலகப் போர்களிலும் பிரான்சின் வெற்றியை தீர்மானித்தது.

தமிழீழம் போன்று, அல்ஜீரியா பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை எழுந்த பின்னர் தான், ஹார்கிஸ் ஒட்டுக்குழு உருவானது. ஏனெனில், அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானதும், அல்ஜீரிய வீரர்கள் ஏதாவது ஒரு பக்கத்தை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல முன்னாள் பிரஞ்சுப் படை வீரர்கள், FLN விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டனர். 

FLN (Front de Liberation Nationale) தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் போன்று ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும். ஈழத்தில் தோன்றிய தமிழ் தேசிய அலை காரணமாக, தமிழர்கள் புலிகளை ஆதரித்தது போன்று, அல்ஜீரியாவில் உருவான அல்ஜீரிய தேசிய அலை காரணமாக, அரேபியர்கள் FLN இயக்கத்தை பெருமளவில் ஆதரித்தனர்.

அதனால், பிரான்ஸ் தனக்கு விசுவாசமான ஒட்டுக்குழுவை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. அது தான் ஹார்கிஸ். ஆரம்பத்தில், பிரான்சுக்கு விசுவாசமான ஊர்க்காவல் படையாக அது தோன்றியது. பின்னர், பிரெஞ்சு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப் படை ஆகியது.

இன்றைக்கு பிரான்சில் வாழும் பல தமிழர்கள் தம்மையும், பிரெஞ்சு வெள்ளையராக பாவனை செய்து கொள்வதைப் போன்று, அன்றைக்கு பல அல்ஜீரியர்கள் தம்மையும் பிரெஞ்சு வெள்ளையர் என்று கருதிக் கொண்டனர். அப்படியானவர்கள் எஜமான விசுவாசம் காரணமாக ஹார்கிஸ் படையில் சேர்ந்து கொண்டனர்.

ஹார்கி வீரர்கள் பல தரப் பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள். பலர் பரம்பரை பரம்பரையாக பிரெஞ்சு எஜமானுக்கு சேவை செய்து சலுகைகளை அனுபவித்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். இருப்பினும், FLN பழிவாங்கல் நடவடிக்கைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் (ஈபிடிபி போன்றவர்கள்), FLN இயக்கத்தினுள் முரண்பட்டு பிரிந்தவர்கள்(கருணா குழு போன்றவர்கள்), போன்றவர்களும் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவில் சேர்ந்து கொண்டனர்.

பிரான்சில் இருந்து அல்ஜீரியா சுதந்திரம் அடைந்ததும், பிரெஞ்சு அரசுக்கு ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் தேவை இருக்கவில்லை. அதனால், பிரெஞ்சு இராணுவத் தளபதிகள் ஹார்கிஸ் படையினரிடம் இருந்த ஆயுதங்களை திருப்பி வாங்கிக் கொண்டு, அல்ஜீரியாவில் தவிக்க விட்டு ஓடி விட்டனர். அல்ஜீரியாவில் முன்பிருந்த பிரெஞ்சு குடியேற்றங்களில் (ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் மாதிரி) இருந்து வெளியேறிய பல இலட்சம் வெள்ளையின பிரெஞ்சுக் காரர்கள் மட்டுமே பிரான்சினுள் அனுமதிக்கப் பட்டனர். 

தங்களையும் நாயகர்கள் போன்று வரவேற்பார்கள் என்றெண்ணி, பிரான்சுக்கு சென்ற ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவர்களை வரவேற்க யாரும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, வருடக் கணக்காக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டனர். அவர்கள் பிரஞ்சு அரசினால் புறக்கணிக்கப் பட்டார்கள். தற்போது, பிரெஞ்சு சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்ந்த போதிலும், பிரெஞ்சு தேசத்திற்காக அவர்கள் புரிந்த தியாகம் உதாசீனப் படுத்தப் படுகின்றது.

அதே நேரம், அல்ஜீரியாவில் தங்கி விட்ட ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெற்றி மமதையில் இருந்த FLN போராளிகளினால் கொல்லப் பட்டனர். மக்களுக்கு முன்னிலையில் மானபங்கப் படுத்தப் பட்டனர். சித்திரவதை செய்யப் பட்டனர். சில இடங்களில், பிரெஞ்சு அடக்குமுறையினால் ஆத்திரமுற்ற பொது மக்களே, முன்னாள் ஹார்கிகளை அடித்துக் கொன்றனர். 

ஆயிரக் கணக்கான ஹார்கி படையினர், முன்பு பிரெஞ்சு அரசு அவர்களுக்கு வழங்கி இருந்த, வீரப் பதங்கங்களை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர். அல்ஜீரியா முழுவதும், மொத்தம் ஒரு இலட்சம் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப் படுகின்றது.

அல்ஜீரியா விடுதலைப் போராட்ட கால கட்டத்தின் போது, பிரெஞ்சுப் படையினரால் கொல்லப் பட்ட அல்ஜீரிய மக்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்திற்கும் அதிகமாகும். ஹார்கி அல்ஜீரியர்களே, தமது சொந்த இனத்தவரை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. சித்திரவதைகள் போன்ற மனித உரிமை மீறல்களிலும், போர்க் குற்றங்களிலும், பிரெஞ்சுப் படையினருடன் ஹார்க்கி ஒட்டுக்குழுவினரும் பங்கெடுத்துள்ளனர். 

அன்று அல்ஜீரியாவில் நடந்த போரில், பல இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்க் குற்றங்கள் அல்லது இனப்படுகொலை என்று நிரூபிக்கத் தக்கன. அந்த நேரம், ஐ.நா. மன்றம் அவற்றை விசாரிக்கவில்லை. ஏனென்றால், பிரான்ஸ் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட மேற்கத்திய வல்லரசு நாடு.

இன்றைக்கு, பிரெஞ்சு பேரினவாத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும், தமிழ் ஒட்டுக் குழுவினர், ஹார்கி ஒட்டுக்குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஒரு காலத்தில் தமிழ் மக்கள் அவர்களை துரோகிகள் என்று ஒதுக்கும் பொழுது, அல்லது பிரெஞ்சு அரசு தனது தேவை முடிந்தவுடன் கை விடும் நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.


மேலதிக தகவல்களுக்கு:

Thursday, January 15, 2015

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஈழத்தில் இருந்து ஒரு கடிதம்

அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு,

இலங்கை அரசும், பிரெஞ்சு அரசும் ஒன்றா? இந்தக் கேள்வியே சிறுபிள்ளைத் தனமானது. அரசு என்பதே அடிப்படையில் ஓர் அடக்குமுறைக் கருவி தான். இலங்கையிலும், பிரான்சிலும் அரசு இயந்திரம் ஒரே மாதிரித் தான் செயற்படும். இரண்டு நாடுகளிலும், அரசுக்கு விசுவாசமாக நடக்கும் பிரிவினரால் அந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது.

பிரான்ஸ் போன்ற மேலைத்தேய காலனியாதிக்க நாடுகள் உருவாக்கியது தான், இலங்கை அரச நிர்வாகம். இன்றைக்கும் ஆங்கிலேயர் எழுதிய அதே யாப்பு சில மாற்றங்களுடன் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. அரசு நிர்வாகம், இராணுவம், பொருளாதாரக் கட்டமைப்புகள் யாவும் பிரிட்டனை பின்பற்றித் தான் அமைந்துள்ளன. 

1978 ம் ஆண்டு உருவான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை குறித்த சட்டத் திருத்தம், பிரான்ஸ் நாட்டை பின்பற்றித் தான் எழுதப் பட்டது. பத்தாண்டுகள் ஈழப்போருக்கு தலைமை தாங்கி நடத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பாரிஸ் சார்போன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். பிரான்சில் இன்றைக்கும் அது ஒரு மேட்டுக்குடியினரின் பல்கலைக்கழகம் என்றே அறியப் படுகின்றது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடப்பதால் அவை ஜனநாயக நாடுகள் என்று தான் மேற்கத்திய அரசுக்கள் கூறிக் கொள்கின்றன. இடையிடையே மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சனம் வைப்பதும், அந்த நாடுகளின் அரசுத் தலைவர்களை மிரட்டி தமது வழிக்கு கொண்டு வருவதற்காகத் தான். 

எது எப்படி இருப்பினும், மேற்கத்திய நாடுகள் கடைசியில் இலங்கை அரசுக்கு தமது ஆதரவை தெரிவித்து விடும். அதனை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப் படத் தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்த புலி ஆதரவாளரிடம் விசாரித்துப் பாருங்கள். "ஈழப்போரின் இறுதியில், பிரான்ஸ் உட்பட, பத்து உலக நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்தன...." என்று அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியில் விளங்கப் படுத்துவார்கள்.

சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்சில் வாழும் இஸ்லாமிய அல்ஜீரியர்களுக்கு எதிரான இனக் கலவரம் எதுவும் நடக்கவில்லை. இதுவே இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடாக இருந்திருந்தால், இந்நேரம் அங்கே ஒரு கலவரம் இடம்பெற்றிருக்கும். ஆகையினால், பிரெஞ்சு ஐரோப்பியர்கள் "நாகரிகமைந்து விட்டனர்" என்று கூற முடியாது. உண்மையில், முஸ்லிம் எதிர்ப்பு இனக்கலவரம், உலகத்தின் முன்னிலையில் பிரான்சை தலைகுனிய வைத்திருக்கும். 

பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், சுமார்  நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தால், நிச்சயமாக அங்கே முஸ்லிம்களுக்கு எதிரான இனக் கலவரம் ஒன்று நடந்திருக்கும். இரண்டாம் உலகப்போர் வரையில், ஐரோப்பாவில் பல நாடுகளில் யூதர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் நடந்துள்ளன. யூதர்கள் அதனை "Pogrom" என்று அழைக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டில் வாழும் பிரெஞ்சுக் காரர்கள், தாங்கள் நாகரிகமடைந்து விட்டதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால், அந்த நிலைமை விரைவில் மாறலாம். பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், பிரெஞ்சு இனவெறியர் மாரி லெ பென் தலைமையிலான FN கட்சியின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். பிரான்சில் ஒரு இனக்கலவரம் நடந்தால், அது அல்ஜீரியர்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கப் போவதில்லை. பிரான்சில் வாழும் தமிழர்களும் பாதிக்கப் படுவார்கள்.

பிரான்ஸ் ஏற்கனவே அல்ஜீரிய சிறுபான்மை இனத்தவரை படுகொலை செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது. அல்ஜீரியாவை காலனிப் படுத்திய பிரான்ஸ், அதனை தனது நாட்டின் மாகாணமாக ஆக்கியிருந்தது. பாரிஸ் நகரில் உள்ள பிரெஞ்சு பாராளுமன்றத்திற்கு, அல்ஜீரியாவில் இருந்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டனர். மேலும், அல்ஜீரியாவில் பத்து இலட்சத்திற்கும் குறையாத பிரெஞ்சுக்காரர்கள் குடியேற்றப் பட்டிருந்தனர். இலங்கையின் வடக்கு, கிழக்கில் சிங்களவர்கள் குடியேற்றப் பட்டத்தை நீங்கள் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வடக்கு இலங்கையை சேர்ந்த ஈழத் தமிழர்கள், சிறிலங்காவின் தலைநகரமான கொழும்பில் குடியேறி வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதே மாதிரி, அல்ஜீரியர்கள் பாரிஸ் நகரில் குடியேறி இருந்தனர். 1961 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் வாழ்ந்த அல்ஜீரிய மக்கள், அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தை கலைத்த பிரெஞ்சுப் போலீசார் தாக்கியதில், குறைந்தது 600 அல்ஜீரிய பொது மக்கள் கொல்லப் பட்டனர்.இனவெறிப் போலீசார் பலரை செயின் நதிக்குள் வீசிக் கொன்றார்கள். அவர்களில் பலர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

பாரிஸ் நகரில் நடந்த அல்ஜீரிய இனப் படுகொலை, 1977 ம் ஆண்டு கொழும்பு நகரில் நடந்த தமிழ் இனப் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. இலங்கையில் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, 1977 ம் ஆண்டு, "தமிழீழம் வேண்டுமென்று கோரிக்கை வைத்து" வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. "உங்களுக்கு தமிழீழம் வேண்டுமா?" என்று கேட்டுத் தான், சிங்கள இனவெறியர்கள் கொழும்பில் தமிழர்களை கொன்றார்கள்.

அதே மாதிரி, அல்ஜீரியாவில் FLN கட்சி, 1961 ம் ஆண்டு, அல்ஜீரியா தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை நிறைவேற்றி இருந்தது. 1961 ம் ஆண்டு, பாரிஸ் இனப்படுகொலையின் போதும், "உங்களுக்கு அல்ஜீரியா என்ற தனி நாடு வேண்டுமா?" என்று கேட்டுத் தான், பிரெஞ்சு இனவெறியர்கள் அல்ஜீரியர்களை கொன்றார்கள்.

இலங்கையிலும், பிரான்சிலும் நடந்த சம்பவங்கள் ஒன்று தான், இனப் பிரச்சினையும் ஒன்று தான். பிரெஞ்சு அரசும், இலங்கை அரசும் ஒரே மாதிரித் தான் சிறுபான்மை இனத்தின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்கி வந்துள்ளன. ஆயினும், ஒடுக்கப்பட்ட இனங்களான அல்ஜீரியர்களும், ஈழத் தமிழர்களும் தமக்குள் ஒன்று சேராத காரணம் என்ன? ஏன் பிரான்ஸ், சிறிலங்கா அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகிறீர்கள்?

யாழ்பாணத்தில் புலிகள் 13 சிங்களப் படையினரைக் கொன்ற பின்னர் தான், அரச அடக்குமுறைகள் அதிகரித்தன. இலங்கையில் இன முரண்பாடுகள் கூர்மையடையும் வரையில், அங்கேயும் கருத்துச் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தது.

எழுபதுகளில் மெல்ல மெல்ல பத்திரிகை தணிக்கைகளை அமுல் படுத்தி வந்த அரசு, எண்பதுகளில் ஒரேயடியாக சட்டம் போட்டு தடை செய்தது. கொடுங்கோல் ஆட்சி வந்தது. பிரிவினை கோருவதும், அதற்கு ஆதரவாகப் பேசுவதும் குற்றமாக்கப் பட்டது. 

பிரான்சிலும் அதே கதை தான் நடக்கிறது. பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலில் 12 பேர் கொல்லப் பட்டத்தை காரணமாகக் காட்டி, மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப் பட்டு வருகின்றது. உலகிலேயே முதல் நாடாக, பிரான்சில் தான் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டன.

இலங்கையில் பிரிவினை கோருவதும், ஆதரிப்பதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டதைப் போன்று, பிரான்சில் யூதர்களுக்கு, யூத மதத்திற்கு எதிராக எழுதுவதும், பேசுவதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டுள்ளது. மேலும், இலங்கையை மாதிரி, பிரான்சிலும் "பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள்" சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

எது பயங்கரவாத ஆதரவுக் கருத்து என்பதை, இரண்டு நாடுகளிலும் சட்டம் சரியாக வரையறுக்கவில்லை. இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது பயங்கரவாதம் ஆகலாம். அதே மாதிரி, பிரான்சில் தற்போது பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது பயங்கரவாதமாக கருதப் படலாம். அது பின்னர் விரிவுபடுத்தப் பட்டு, எதிர்காலத்தில் பிரான்சில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதே பயங்கரவாதம் என்று கூறும் நிலை வரலாம்.

எதற்காக, பிரான்சில் வாழும் தமிழர்கள் பலர், அரச அடக்குமுறைகள் குறித்து எந்த உணர்வுமற்று இருக்கிறார்கள்? எந்த அரசும் அனைத்து சிறுபான்மை இனங்களையும் ஒரே நேரத்தில் அடக்குவதில்லை. இலங்கையில் தமிழ்ச் சிறுபான்மை இனம் அடக்கப் பட்ட நேரம், சிறிலங்கா அரசு முஸ்லிம் சிறுபான்மை இனத்துடன் இணக்கமாக நடந்து கொண்டது. முஸ்லிம்களுக்கு சலுகைகள் கொடுத்து, நன்மதிப்பை சம்பாதித்து இருந்தது.

இலங்கையில் முஸ்லிம் மக்களும், "தமிழீழம் கேட்கும் தமிழர்களை தானே அரசு அடக்கி வருகின்றது? நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லையே...?" என்று திருப்திப் பட்டனர். அதே தான் பிரான்சிலும் நடக்கிறது.

பிரான்சில் வாழும் இந்து- தமிழர்கள், இலங்கை முஸ்லிம்களின் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர். "இஸ்லாமிய கடும்போக்கு ஷரியா சட்டம் கேட்பவர்களை தானே அரசு அடக்கி வருகின்றது? நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செயவில்லையே...?" என்று திருப்திப் பட்டுக் கொள்கின்றனர்.

மேலும், இந்தக் காலத்தில், இன, மத உணர்வுகளுக்கு அப்பால் மக்களிடையே வேறெந்த ஒற்றுமையும் இல்லாமல் இருப்பதும், ஒடுக்கும் அரசுக்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. இலங்கையில், குறிப்பாக கொழும்பில் ஏராளமான மாலைதீவு அகதிகள் வாழ்கிறார்கள். அவர்கள் மத்தியில், தமிழர்களுக்கு ஆதரவான எந்தக் கருத்தும் கிடையாது. ஏனென்றால், தமிழர்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பு எதுவும் கிடையாது.

மாலைதீவு அகதிகள், பொதுவாக, தமிழ் இனப்பிரச்சினையில் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து தான் பேசுவார்கள். அதே நேரம், தமது மாலைதீவு அரசின் ஒடுக்குமுறைகளை விரிவாகப் பேசுவதுடன், அதையும் இதையும் ஒப்பிட மாட்டார்கள். "இலங்கை அரசும், மாலைதீவு அரசும் ஒன்றா?" என்று நமது தமிழ் கருத்துச் சுதந்திரக் கண்மணிகள் மாதிரிக் கேட்பார்கள்.

இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் பலர், காஷ்மீர் நிலவரம் குறித்து எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களில் பெரும்பாலானோர், காஷ்மீர் பயங்கரவாதத்தை குறை கூறுவதுடன், இந்திய அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். மறுபக்கத்தில், பெரும்பாலான காஷ்மீரிகள் தமிழ்ப் பயங்கரவாதத்தை குறை கூறி, சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். ஏனென்றால், காஷ்மீரிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது.

இதே நிலைமை தான் பிரான்சிலும் நிலவுகின்றது. பிரான்சில் வாழும் தமிழர்களுக்கும், அல்ஜீரியர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது. அல்ஜீரியர்களைப் பொருத்தவரையில், இலங்கையில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை தான். தமிழர்களைப் பொறுத்தவரையில், பிரான்சில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை மட்டும் தான்.

அல்ஜீரியர்கள், தமிழர்கள், இரண்டு இனங்களும், ஊடகங்களினால் தவறாக கையாளப் படுகின்றனர். தவறான தகவல்கள் கொடுத்து மூளைச்சலைவை செய்யப் படுகின்றனர். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் அல்ஜீரியர்களும், தமிழர்களும் விழிப்படைந்து தமக்குள் ஒன்று பட்டால், அது ஒடுக்கும் அரசுக்களுக்கு நெருக்கடியாக அமைந்து விடும். ஆகவே, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை குலைப்பதற்கு, அரசு இயந்திரம் தன்னாலான முயற்சிகளை செய்து கொண்டிருக்கும்.

ஆகவே, பிரான்சில் வாழும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை மட்டும் தான், பிரெஞ்சு ஏகாதிபத்தியம், அதன் கைக்கூலியான சிறிலங்கா அரசின் எதேச்சாதிகாரத்தை முறியடிக்கும். இந்த அறைகூவலை வாசித்த பிறகாவது, அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாமல் பிரான்சில் அல்ஜீரியர் - தமிழர்களுக்கு இடையிலான உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,
ஓர் ஈழத் தமிழன்

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, April 02, 2011

அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் பற்றிய திரைப்படம்

பிரெஞ்சு காலனியாதிக்கத்தை எதிர்த்து போராடிய, அல்ஜீரியர்களின் விடுதலைப் போரை சித்தரிக்கும் பிரெஞ்சு மொழித் திரைப்படம்.(ஆங்கில உப தலைப்புகளுடன்) 
இன்றைய இளைய தலைமுறையினருக்கு, பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவில் புரிந்த போர்க்குற்றங்களும், இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப் பட்ட இனப் படுகொலை பற்றியும் எதுவும் தெரியாது. பிரான்ஸில் இன்றைக்கும் தொடரும், அல்ஜீரிய சிறுபான்மையினரின் இனப் பிரச்சினையையும், பிரெஞ்சு காலனிய எஜமானர்களின் இருண்ட பக்கத்தையும் அறிந்து கொள்ள உதவும் திரைப்படம்.

https://www.youtube.com/watch?v=XeMWdueGTZ4