Tuesday, August 05, 2014

தமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்களும்


இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள் தான் போராட முன்வருவார்கள்." என்ற மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் தான், தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டமும் நடந்து முடிந்துள்ளது. "மார்க்சியம் ஒரு வரட்டு சூத்திரம்" என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமது நடுத்தர வர்க்க நிலைப்பாட்டில் இருந்தே உலகைப் பார்க்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், பல்வேறு கருதுகோள்களை வைத்து தவறென நிறுவ முயற்சிக்கின்றனர். அவர்கள் யாரும், தமிழ் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல.

வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், வசதியான நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. வெளிநாடுகளில் வசதியாக வாழ்வோர், தமக்குத் தெரிந்த குடும்ப உறுப்பினர்கள் பலர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த உதாரணங்களை கொண்டு வந்து காட்டுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் வாழுவோர் எல்லோரும், "நடுத்தர வர்க்கம்" என்று எப்படி உறுதியாகக் கூற முடிகின்றது? இதே நிலைமை தான், பணக்கார வளைகுடா நாடுகளிலும் உள்ளது.

ஒரு நாட்டில் அனைவரினதும் வாழ்க்கை வசதி உயர்ந்திருக்கிறது என்பதாலேயே அவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக மாறி விடுவார்களா? "பணக்கார" நாடுகளில் நிலவும், பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய போதுமான அறிவு எம்மிடம் இருக்கிறதா? அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, சவூதி அரேபியாவில் எத்தனை இலட்சம் ஏழைகள் வாழ்கின்றனர் என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்த மக்கள் எத்தனை பேர் என்ற விபரம், அங்கு பணியாற்றிய அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடம் (NGO) உள்ளது. ஐ.நா.வின் நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் ஆகியனவும் அந்த விபரங்களை வைத்திருந்தன.

மேலும், நிவாரணப் பொருட்கள் யாவும் புலிகளின் மேற்பார்வையின் கீழ் தான் வழங்கப் பட்டன. மாவீரர் குடும்பங்கள், போராளிக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப் பட்டது. புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மை தமிழ் மக்கள் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் என்பது ஒரு "வரட்டு சூத்திரம்" அல்ல. அது யதார்த்தம்.

வெளிநாடுகளில் வசதியாக வாழும் பலரின் உறவினர்களும், போராளிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால், ஈழத்தில் வாழும் மொத்த தமிழ் சனத் தொகையில் வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் மிகக் குறைந்தளவு சதவீதம் தான் போராளிக் குடும்பங்களாக இருந்துள்ளன. அனேகமாக, பெருமளவு வசதியான தமிழர்கள் வாழ்ந்த, யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தான் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தார்கள்.

வன்னி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் வாழ்ந்த, தமிழ் மாவட்டங்களில் இருந்து, வெளிநாடுகளுக்கு சென்றோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஆனால், புலிகள் அமைப்பின் போராளிகளில் பெரும்பான்மையானோர், மேற்குறிப்பிட்ட பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

இந்த உண்மையை தெரிந்து கொள்வதற்கு, நாங்கள் அதிக சிரமப் படத் தேவையில்லை. புலிகளுக்காக வேலை செய்த சர்வதேசப் பொறுப்பாளர்களிடம், மாவீரரான போராளிகளின் பட்டியல் நிச்சயமாக இருக்கும். அதை எடுத்து ஆய்வு செய்தாலே தெரிந்து விடும்.

முன்பு ஆப்கானிஸ்தானிலும், இன்று சிரியாவிலும் நடக்கும் ஜிகாதிப் போராட்டங்களில், மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் ஈடுபடுகின்றனர். அதற்காக, அவர்கள் எல்லோரும் தமது வசதியான வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு, உணர்வுபூர்வமாக போராளிகள் ஆனார்கள் என்று கருத முடியாது. அந்த இளைஞர்களின் இஸ்லாமிய மதப் பற்று மட்டுமே எங்கள் கண்களுக்கு தெரிகின்றது. ஆனால், அவர்களின் பொருளாதாரப் பின்னணி பற்றி நாங்கள் ஆராய்வதில்லை.

மேற்கத்திய நாடொன்றில், அல்லது வளைகுடா அரபு நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதாலேயே, அவர்கள் எல்லோரும் மத்திய தர வர்க்கத்தினர் என்று நினைத்துக் கொள்வது தவறு. அந்த நாடுகளில் உள்ள பொருளாதார பிரச்சினைகள் வெளியே பேசப் படுவதில்லை. பணக்கார நாடுகளில் வாழுவோர் எல்லோரும் நடுத்தர வர்க்கத்தினர் அல்ல.

அமெரிக்காவில் மட்டும் இருபது மில்லியன் ஏழைகள் வாழ்கிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், அங்கேயும் இருபது மில்லியனுக்கும் குறையாத ஏழைகள் இருப்பார்கள். மேலைத்தேய நாடுகளில் வாழும், அரபு - இஸ்லாமிய சமூகப் பின்னணி கொண்ட மக்கள் பலர், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர்.

அதற்காக, போராடச் சென்றவர்கள் "எல்லோரும்" ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் என்று கூறவில்லை. உயர்கல்வி கற்றவர்கள், நல்ல சம்பாத்தியம் தரும் வேலையில் இருந்தவர்கள் கூட போராடச் சென்றார்கள். ஆனால், அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியானவர்கள், அதிக பட்சம் ஒரு சதவீதம் கூட இல்லை. பெரும்பாலும் 0,01% ஆக இருக்கலாம்.

உலகில் உள்ள அத்தனை இயக்கங்களுக்கும் தலைமை தாங்குவது நடுத்தர வர்க்கமாக உள்ளது. இது தற்செயல் அல்ல. பல நூறு வருடங்களாக ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் தான் வசதி வாய்ப்புகளை அனுபவித்து வந்துள்ளனர். ஆகையினால், எத்தகைய சமூக மாற்றமும் அவர்கள் மத்தியில் இருந்து தான் உருவாகும். மார்க்சிய இயக்கமாக இருந்தாலும் அது தான் நிலைமை.

கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ, ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா போன்று, அனேகமாக எல்லா மார்க்சிய தலைவர்களும் நடுத்தர வர்க்கத்தினர் தான். இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் மட்டுமே போராடுவார்கள் என்று அவர்களும் தான் நம்பினார்கள். அவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அதற்காக, தமது வர்க்கத்தின் நலன்களை பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. அதனால் தான், ஏழை உழைக்கும் மக்களின் தலைவர்களாக போற்றப் பட்டார்கள்.

நடுத்தர வர்க்க இளைஞர்கள் மட்டுமே போராடிய நாடுகளில், அந்தப் போராட்டம் இலகுவில் தோற்கடிக்கப் பட்டது. உதாரணத்திற்கு, உருகுவேயில் நடந்த கெரில்லாப் போராட்டம். 90% போராளிகள் நடுத்தர வர்க்க மாணவர்கள். பொலிவியாவில் போராடிய சேகுவேராவின் இயக்கத்தை சேர்ந்தவர்கள், நடுத்தர வர்க்க பிரதிநிதிகள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள், நடுத்தர வர்க்க மாணவர்கள். அவர்கள் எல்லோரும் மார்க்சியக் கொள்கைகளை பின்பற்றியவர்கள் தான். ஆனால், அவர்களது ஆயுதப் போராட்டங்கள் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டன. என்ன காரணம்? ஏனென்றால், அந்த இயக்கங்களினால், கடைசி வரையிலும் பெரும்பான்மை ஏழை உழைக்கும் மக்களை அணிதிரட்ட முடியவில்லை.

தேசியவாத, மதவாத இயக்கங்கள், வெகுஜன தளத்தில் பிரபலமான கருத்துக்களை பிரச்சாரம் செய்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில், பெரும்பான்மையான ஏழை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்களிடம் எதுவும் இல்லை. "பணம் இல்லை. படிப்பு இல்லை. வேலை இல்லை..." இவ்வாறு அவர்கள் வாழ்க்கை முழுவதும் குறை கூறுவதற்கு நிறைய "இல்லைகள்" உள்ளன. ஓர் இயக்கம் அவர்களிடம் சென்று, "நாங்கள் மதத்திற்காக போராடுகின்றோம்" என்றால் ஆதரிக்காமல் விடுவார்களா?

தேசியவாதமும் அப்படித் தான். "உங்களுடைய பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம், எமது இனத்திற்கு தனியான நாடு இல்லாதது தான்" என்று சொல்வார்கள். தனி நாடு கிடைத்து விட்டால், எமது வாழ்வு வளம் பெறும் என்று தான் சாதாரண ஏழை மக்கள் நம்புவார்கள். அந்த எதிர்பார்ப்பில் எந்தத் தவறும் இல்லை.

உண்மையில், ஈழத் தமிழ் நடுத்தர வர்க்கத்தை மட்டுமே நம்பி போராடத் தொடங்கி இருந்தால், விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட ஒரு சில வருடங்களிலேயே காணாமல் போயிருக்கும். எழுபதுகளில் அடித்தட்டு ஏழை மக்களையும் கவர வேண்டும் என்பதற்காக, புலிகளும் மார்க்சியம் பேசினார்கள். சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொண்டார்கள்.

எழுபதுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஸ்தாபிக்கப் பட்ட காலத்தில், நாட்டில் கடுமையான வரட்சி நிலவியது. மழை வீழ்ச்சி குறைவாக இருந்தது. வட மாகாணத்தில், மழையை நம்பி நடக்கும் பெரும்போக நெற் செய்கை தான் அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார முதுகெலும்பு. பரம்பரை பரம்பரையாக விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த மக்கள், பல வருடங்களாக தொடர்ந்த வரட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

ஒரு நாட்டின் விவசாயப் பொருளாதாரம் நலிவடைந்தால், அது விவசாயிகளை மட்டும் பாதிப்பதில்லை. அதை நம்பியிருக்கும் கூலித் தொழிலாளர்கள், வணிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் என்று ஏராளமானோர் பாதிக்கப் படுகின்றனர். வசதியானவர்களுக்கு வெளிநாடு சென்று பிழைக்கும் வாய்ப்புக் கிட்டியது. அது கூட முடியாதவர்களுக்கு?

எண்பதுகளில் போர் தீவிரமடைந்த காலத்தில், அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள் அடித்தட்டு ஈழத் தமிழர்கள் தான். போர் நடக்கும் நாடுகளில் எல்லாம், ஏழைகள் தான் அதிக விலை கொடுக்கிறார்கள். பாதுகாப்பான இடத்திற்கு, இடம்பெயர்ந்து செல்லும் அளவிற்கு கூட வசதி இல்லாதவர்கள். அப்படியானவர்கள் போராடுவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

மார்க்சியம் என்பது இயங்கியல் தத்துவ அடிப்படை கொண்டது. அது ஒரு வரட்டு சூத்திரம் அல்ல. ஏற்கனவே, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மெய்ப்பிக்கப் பட்ட சமூக விஞ்ஞானம்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, August 04, 2014

உலக நாடுகளை சேர்ந்த பல்லின மக்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பது ஏன்?


பாலஸ்தீனர்களின் பிரச்சினையை, இன்றைக்கும் பலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். யானை பார்த்த குருடர்கள் போன்று, தாம் தவறாக புரிந்து கொள்வது மட்டுமல்லாது, அதையே உண்மை என்றும் நம்புகிறார்கள். பாலஸ்தீன இனப் பிரச்சினை, பல உலக நாடுகளில் உள்ள ஒடுக்கப்படும் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட முடிந்தாலும், அதற்கும் அப்பால் ஏதோ ஒரு முக்கியமான காரணம் இருக்க வேண்டும். அதனால் தான், ஒருவருக்கொருவர் தொடர்பற்ற பல்வேறு இன மக்களும் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர்.

உலக முஸ்லிம்கள், பாலஸ்தீனர்களை ஆதரிப்பது, இந்திய இந்துக்கள் ஈழத் தமிழர்களை ஆதரிப்பது போன்றது. அரபு நாடுகளை சேர்ந்த அரேபியர்களின் ஆதரவை, இந்தியா மற்றும் பல உலக நாடுகளை சேர்ந்த தமிழர்களின் ஈழ ஆதரவுடன் ஒப்பிடலாம். ஆனால், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், லத்தீன் அமெரிக்கர்கள்.... இவர்களும் எதற்காக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும்? அவர்கள் எல்லோரும் அரேபியர்களா? அல்லது முஸ்லிம்களா? அந்த மக்களின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை, நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்?

பாலஸ்தீனப் பிரச்சினை, ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது பாலஸ்தீனர்களோடு தொடங்கவுமில்லை, அவர்களோடு முடியப் போவதும் இல்லை. 

பாலஸ்தீனர்களை இனச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றி விட்டு, அவர்களது நாட்டை அபகரித்தது மட்டும் இஸ்ரேலின் குற்றம் அல்ல. எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய அண்டை நாடுகளுடன் போருக்கு சென்று, அவற்றின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பது, இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிப்பதில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. 

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை கண்டித்து, ஐ.நா. சபை நூற்றுக் கணக்கான தீர்மானங்களை போட்டு விட்டது. ஆனால், இஸ்ரேல் அவற்றை தூக்கி குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டது. ஐந்து வல்லரசுகளை தவிர, உலகில் வேறெந்த நாடாவது இஸ்ரேல் அளவுக்கு தைரியமாக ஐ.நா. வை எதிர்த்து நிற்க முடியுமா?

மேற்கத்திய நாடுகளில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்துவோரும், அவற்றில் பங்குபற்றுவோரும், அந்தந்த நாடுகளில் வாழும் அரபு அல்லது முஸ்லிம் இளைஞர்கள் "மட்டுமே" என்று நினைப்பது மிகவும் தவறான கருத்து. ஐம்பதுகளில் இருந்தே பாலஸ்தீன பிரச்சினைக்காக, மேற்குலகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, அமைதி வழி ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்ல, ஆயுதமேந்திய போராட்டங்கள் கூட நடந்துள்ளன என்பதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். பாலஸ்தீன விடுதலைக்காக, ஐரோப்பிய நகரங்களில் தமது உயிரைக் கொடுத்து போராடியவர்களில் பலர் ஐரோப்பிய வெள்ளையர்கள். அதை விட, ஜப்பானியர்களின் தியாகத்தையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் யாரும் மதத்தால் முஸ்லிமும் அல்ல, யாருக்கும் அரபு மொழியில் ஒரு சொல் கூடத் தெரியாது.

ஐரோப்பாவில், பாலஸ்தீன ஆதரவு ஆயுதப் போராட்டம் நடந்த காலங்களில், இன்று ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும், அரபு - முஸ்லிம் இளைஞர்கள் பலர் பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்த இளைஞர்கள், ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறையினர் தான். ஆனால், அவர்களின் பெற்றோரான முதலாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம்கள், அந்தக் காலங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். தனது நாட்டு அரசியலில் அக்கறை இல்லாதவர்களிடம், பாலஸ்தீன பிரச்சினை பற்றிய அறிவு இருந்திருக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், ஆரம்ப காலங்களில் இருந்து, இடதுசாரிகள் மட்டுமே பாலஸ்தீன சுதந்திரத்திற்காக போராடினார்கள். அதற்குக் காரணம், பாலஸ்தீனர்கள் தனி நாடு கேட்கிறார்கள் என்பதற்காக அல்ல. செவ்விந்தியர்களின் நாடுகளில் ஐரோப்பிய வெள்ளையர்கள் குடியேறி விட்டு, அதற்கு அமெரிக்கா, கனடா என்று பெயர் சூட்டியதைப் போன்றது தான், இஸ்ரேலிய - பாலஸ்தீன பிரச்சினையும்.

அமெரிக்க காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக செவ்விந்தியர்கள் மட்டுமே போராட வேண்டுமென்பதில்லை. உலகில் உள்ள மனிதநேயவாதிகள் யாரென்றாலும், செவ்விந்தியரின் மண் உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம். அந்த அடிப்படையில் தான், பாலஸ்தீன பிரச்சினை சர்வதேசத்தில் பலரது கவனத்தை ஈர்க்கின்றது. அதனை வெறுமனே அரேபியரின் அல்லது முஸ்லிம்களின் பிரச்சினையாக குறுக்கிப் பார்ப்பது அறியாமை.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம் இளைஞர்கள், பெருமளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு, வெறுமனே அரபு இன உணர்வோ அல்லது முஸ்லிம் மத உணர்வோ காரணம் அல்ல. இரண்டாம் உலகப் போருடன் ஐரோப்பிய காலனிய காலகட்டம் முடிவடைந்தாலும், நவ காலனிய காலகட்டம் ஆரம்பமாகியது. 

"அது என்ன நவ காலனியம்?" என்று அப்பாவித் தனமாக கேட்பவர்களுக்கு, பாலஸ்தீன பிரச்சினை கண் முன்னே தெரியும் உதாரணமாக உள்ளது. அதைப் புரிந்து கொள்வதற்கு, அவர்களுக்கு பெரிய அரசியல் அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேற்கத்திய செய்தி ஊடகங்களில், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. அமெரிக்கா, கனடா மற்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் கற்பிக்கப் படும் சரித்திர பாட நூல்களில், குறைந்தது ஓர் அத்தியாயமாவது இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை பற்றியதாக இருக்கும். 

ஆனால்... கொஞ்சம் பொறுங்கள். அந்தத் தகவல்கள் எதற்காக இஸ்ரேல் சார்புடையதாக இருக்கின்றன? அரபு மொழி பேசும் சமூகத்தினர் மத்தியில் வாய் வழியாக உலாவும் கதைகளுக்கும், பாடப் புத்தகங்கள், ஊடகங்கள் கூறும் கதைகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றதே? ஒரு சாதாரண அறிவுள்ள பிள்ளை அது குறித்து கேள்வி எழுப்ப மாட்டாதா? அவர்களது கேள்விகளுக்கு பதில் கிடைக்காத படியால் தான், தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். 

அத்துடன், மேற்கத்திய நாடுகளில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளும், அரசுக்களின் இன ரீதியிலான பாரபட்சமும், அவர்கள் மனதில் போராட்டக் குணாம்சத்தை உண்டாக்குகின்றன. சாதாரண மக்களுக்கு தமது பிரச்சனைகளை நேரடியாக வெளிப்படுத்த தெரியாது. பாலஸ்தீன ஆதரவு, அவர்களது அதிருப்தியை தெரிவிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதனால் தான், பாரிஸ் நகரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டதன் எதிரொலியாக கலவரங்கள் ஏற்பட்டன.

அரேபியர்கள் ஒற்றுமையான இனம் என்று கருதுவதும், இஸ்லாமியர்கள் ஒற்றுமையான மதத்தவர்கள் என்று நம்புவதும் பேதைமை. ஐரோப்பாவில் வாழும் மொரோக்கோ, அல்ஜீரிய முஸ்லிம்களுக்கும், துருக்கியருக்கும் இடையில் மதத்தை தவிர வேறெந்த ஒற்றுமையும் கிடையாது. ஈராக், ஈரான், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் கொளுந்து விட்டு எரியும், இஸ்லாமிய மதத்தில் உள்ள சன்னி - ஷியா மார்க்க வேறுபாடு, இன்று வெளியுலகில் ஓரளவு தெரிய வந்துள்ளது. ஆயினும், இன்னும் சில இஸ்லாமிய மதப் பிரிவினரின் பிரச்சினைகள் வெளியே தெரிய வருவதில்லை. 

மொரோக்கோ, அல்ஜீரியாவில் பெர்பெர் எனும் இன்னொரு மொழி பேசும் இனம் வாழ்வது எத்தனை பேருக்குத் தெரியும்? லிபியாவில் இனக் குழுக்களுக்கு இடையிலான பகை முரண்பாடுகள் இன்று மிகப் பெரிய இரத்தக் களரியை உண்டாக்கும் ஆயுத மோதல்களாக பரிணமித்துள்ளன. லெபனானில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள். 

இதைத் தவிர அரேபியருக்கு இடையிலான வர்க்க முரண்பாடுகள், கலாச்சார முரண்பாடுகள், யேமன், மொரிட்டானியா ஆகிய நாடுகளில் உள்ள சாதி முரண்பாடுகள்..... இப்படி எல்லாவற்றையும் கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தால், ஒரு புத்தகமே எழுதி விடலாம். இத்தனை முரண்பாடுகளை கொண்ட அரேபியர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடியது, பாலஸ்தீன பிரச்சினை மட்டுமே.

Wednesday, July 30, 2014

புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"


"குழந்தைப் போராளிகள்" என்ற கலைச் சொல்லை, யார் தமிழில் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சொற்பதம் உண்டாக்கும் தாக்கம் பெரிது என்பதை மறுப்பதற்கில்லை. புலி எதிர்ப்பாளர்கள் அந்த சொல்லை மிகவும் விருப்பத்துடன் உபயோகித்து வருகின்றனர். புலி ஆதரவாளர்களும் அதையே திருப்பிச் சொல்ல வைப்பதன் மூலம், அகராதியில் இடம்பெற வைக்க முயற்சிக்கின்றனர்.

உண்மையில், புலிகள் இருந்த காலத்தில், "Baby Brigade" என்ற சொல்லை, சில மேற்கத்திய ஊடகவியலாளர்கள் புலிகளை கிண்டலடிக்க பயன்படுத்தி வந்தனர். சிங்கள ஊடகவியலாளர்களும் அதை விரும்பி ஏற்றுக் கொள்ளவே, தமிழில் சிலர் குழந்தைப் போராளிகள் என்று மொழிபெயர்த்து இருக்கலாம். ஆனால், பிபிசி தமிழோசை பல வருட காலமாகவே "சிறார் போராளிகள்" என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றது.

பல புலி ஆதரவாளர்கள் நினைத்துக் கொள்வதைப் போல, குழந்தைப் போராளிகள் அல்லது சிறார் போராளிகள் பற்றிய பிரச்சினையை முதலில் கையில் எடுத்துக் கொண்டது புலி எதிர்ப்பாளர்கள் அல்ல. ஏனெனில், ஆரம்ப கால புலி எதிர்ப்பாளர்கள் பலர், புலிகளால் தடை செய்யப்பட்ட ஆயுதபாணி இயக்கங்களில் இருந்து வந்தவர்கள். அப்போது அவர்களும், 16 வயது சிறார் போராளிகளை சேர்த்துக் கொள்வதை தவறாகக் கருதாதவர்கள்.

உண்மையில், மேற்கத்திய மனித உரிமை நிறுவனங்களும், ஐ.நா. வும் தான், சிறார் போராளிகள் விடயத்தை ஒரு முக்கியமான பிரச்சினையாக மாற்றினார்கள். ஐ.நா. அதற்கென்று விசேட பிரிவை உருவாக்கியது. ராதிகா குமாரசாமி என்ற ஒரு யாழ்ப்பாணத் தமிழ் அறிவுஜீவியை அதற்குப் பொறுப்பாகப் போட்டது. தற்போதுள்ள நவநீதம் பிள்ளை, பிற்காலத்தில் ராதிகா குமாரசாமியின் இடத்திற்கு நியமிக்கப் பட்ட ஒருவர் தான்.

அமெரிக்க சி.ஐ.ஏ., தனது இலங்கை தொடர்பான வருடாந்த அறிக்கைகளில், புலிகளின் சிறார் போராளிகளைப் பற்றிக் குறிப்பிட்டு வந்தது. முரண்நகையாக, சி.ஐ.ஏ. அதற்கு ஆதாரமாகப் பயன்படுத்திய வளங்களில் பெரும்பகுதி புலிகளின் பிரச்சார சாதனங்களில் இருந்து பெறப் பட்டன.

உதாரணத்திற்கு, மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த சமாதிகளில், பிறந்த ஆண்டும், மரணமடைந்த ஆண்டும் பொறிக்கப் பட்டிருந்தன. சி.ஐ,ஏ, அதை சுட்டிக் காட்டி, மரணமடைந்த போராளிகளின் வயதைக் கணக்கிட்டு கூறி வந்தது. விழிப்புற்ற புலிகள் இயக்கம், அதற்குப் பின்னர் போராளிகளின் சமாதிகளில் பிறந்த வருடம் குறிப்பிடும் வழக்கத்தை நிறுத்திக் கொண்டது.

ஆயினும், ஐ.நா.வும், மனித உரிமை ஸ்தாபனங்களும், சிறார் போராளிகள் விடயத்தை ஒரு பூதாகரமான பிரச்சினையாக்கி, அதை சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. இறுதிப் போருக்கு முந்திய சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், புலிகளிடம் இருந்து, சிறுவர்களை படைகளில் சேர்ப்பதில்லை என்ற வாக்குறுதியை பெறுவதற்கு கடுமையாக முயற்சித்தன. புலிகளும் சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்து நடப்பதைப் போன்று காட்டிக் கொண்டனர்.

தற்போதும் சிலர், புலிகளின் சிறார் போராளிகள் விடயத்தில் அதிக கவனம் குவிப்பதை, வெறுமனே புலி எதிர்ப்புவாதமாக குறுக்கிப் பார்க்க முடியாது. இது மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜனநாயகம். ஆப்கானிஸ்தான், ஈராக்கிற்கு அமெரிக்க ஜனநாயகம் ஏற்றுமதி செய்யப் பட்டமை பலருக்குத் தெரிந்திருக்கும். அதே மாதிரியான ஒரு முயற்சி தான் இதுவும். சில புலி எதிர்ப்பாளர்களும், சில இடதுசாரிகளும், ஜனநாயக உரிமையை பாதுகாப்பது என்ற பெயரில், மேற்கத்திய நிகழ்ச்சிநிரலை செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில், புலிகள் இயக்கத்திற்கு ஆட்களை தெரிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். துடிதுடிப்பான, இராணுவ சாகசம் செய்யும் ஆர்வம் கொண்ட கட்டிளம் காளைகளை மட்டுமே தெரிந்தெடுத்தனர். ஆரம்பத்தில் பெண்களையும், சிறுவர்களையும் போராளிகளாக சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அன்றிருந்த ஐந்து பெரிய இயக்கங்களில், புலிகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பதாக கருதப் பட்டது. 

PLOTE, TELO, EPRLF ஆகியன, ஒரு மரபு வழிப் படையணியை கட்டுவதற்கு தேவையான ஆள் பலம் வேண்டுமென்று கூறி, வருவோர் போவோர் எல்லோரையும் கூப்பிட்டு சேர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், புலிகளோ கமாண்டோ பாணி தாக்குதல்களை செய்யக் கூடிய கெரில்லாப் படையை வைத்திருப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள். திடீர் கெரில்லா தாக்குதல்களில் கிடைத்த வெற்றிகள், புலிகள் மக்கள் மத்தியில் பிரபலமடையக் காரணமாக இருந்தன.

1986 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், ஒரு பெரிய திருப்புமுனை உருவாகியது. வட மராட்சியில் நடந்த ஒப்பெறேஷன் லிபரேஷன் போர் நடவடிக்கை மூலம், சிறிலங்கா இராணுவம் பெரியதொரு பிரதேசத்தை கைப்பற்றி இருந்தது. அந்தப் போரில், புலிகள் இயக்கத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாகவும், பெருமளவு போராளிகள் மரணமடைந்ததாகவும் கருதப் பட்டது. இந்தத் தகவலை, அன்றைக்கு அனுப்பப் பட்ட அமெரிக்க தூதரக கேபிள் தெரிவித்ததை, விக்கிலீக்ஸ் பகிரங்கப் படுத்தி இருந்தது. இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டின் பிற பகுதிகளை கைப்பற்றுவதற்கு முன்னர், இந்தியா தலையிட்டு ஒப்பந்தம் போட்டது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னர், புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. அப்போது தான், குழந்தைப் போராளிகள் என்ற தோற்றப்பாடு வெளித் தெரிய ஆரம்பித்தது. அதற்குக் காரணம், வழமையான புலிப் போராளிகள் யாரும் வெளியில் நடமாட முடியவில்லை. பல சிக்கல்களுக்கு மத்தியில், தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.

இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள், தேடுதல்களுக்குள் அகப்படாமல் தப்புவதற்காக, புலிப் போராளிகள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு, அடிக்கடி நகர்ந்து கொண்டிருக்க வேண்டி இருந்தது. அப்போது வழியில் படையினர் நிற்கின்றனரா என்று உளவு பார்ப்பதற்காக, சிறுவர்களை பிடித்து முன்னுக்கு அனுப்புவார்கள். இந்திய இராணுவமும், எக் காரணம் கொண்டும் சிறுவர்களை சந்தேகிக்கவில்லை. ஊர் மக்களிடையே இரகசியமாக பணம் சேர்ப்பதற்கும் அவர்கள் பயன்படுத்தப் பட்டனர். அப்போது அந்த சிறுவர்கள் வைத்திருந்த ஒரே ஆயுதம், கிரனேட் மட்டுமே. 

இந்தியப் படைகள் இலங்கையை விட்டு வெளியேறிய காலத்தில், உதவியாளர்களாக இருந்த சிறுவர்கள், போராளிகளாக மாற்றப் பட்டனர். புலிகள் தமது முந்திய கொள்கைக்கு முரணாக, சிறுவர்களை படையணியில் சேர்த்துக் கொள்வதற்கு சில சமூகக் காரணிகள் இருந்தன.

1985 - 1986 கால கட்டத்தில் நடந்த இயக்க மோதல்கள், புலிகள் பிற இயக்கங்களை தடை செய்தமை, ஆகிய காரணங்களினால் மக்களுக்கு போராட்டத்தில் ஈடுபடும் ஆர்வம் குன்றி இருந்தது. பல வருடங்களாக, இந்தியா படையனுப்பி தம்மைக் காப்பாற்றும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.  1987 ல், எதிர்பாராவிதமாக இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் நடந்த போர் தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. இதற்கிடையே, வெளிநாடுகளுக்கும், இந்தியாவுக்குமான புலம்பெயர்தல் அதிகரித்திருந்தது.

இந்தியப் படைகள் விலக்கிக் கொள்ளப் பட்ட பின்னர், வட மாகாணத்தில் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகியது. புலிகள் வைத்திருந்த நடைமுறை (de facto) தமிழீழத்தில் இருந்து வெளியேறிச் சென்ற நடுத்தர வர்க்கத்தினரில் பெரும்பான்மையானோர், போராளியாகும் வயதில் இருந்த இளைஞர்கள். அதாவது 16 - 25 வயதிலான இளைஞர்கள் தான் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். 16 வயதுக்கு உட்பட்டோர் விசா எடுக்கத் தேவையில்லை என்ற சட்டத்தை பயன்படுத்தி, ஏராளமான இளைஞர்கள், 17 - 24 வயதானவர்கள் கூட, போலி கடவுச்சீட்டு தயாரித்து ஜெர்மனிக்கு சென்றனர். ஓரளவு வசதியானவர்கள் கூட, தம்மிடம் சொந்தமாக இருந்த நிலத்தை, நகைகளை அடைவு வைத்து விட்டு, அல்லது அவற்றை விற்று பணம் சேர்த்துக் கொண்டு, வெளிநாடுகளுக்கு செல்ல முடிந்தது.

மூளைசாலிகளின் வெளியேற்றம் ஒரு வளர்ந்து வரும் நாடொன்றின் பொருளாதாரத்தை பாதிப்பது போன்று, போராளிகளின் வயதையொத்த தமிழ் இளைஞர்களின் வெளியேற்றம், புலிகளின் போராட்டத்தை பாதிக்கும் என்று உணரப் பட்டது. அதனால், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து, 45 வயதுக்கு உட்பட்டோர் யாரும் வெளியேறக் கூடாது என்று, புலிகள் சட்டம் போட்டார்கள். விசா போன்று, பாஸ் நடைமுறை கொண்டு வந்தார்கள். ஏதாவது அலுவலாக கொழும்புக்கு செல்வதாக இருந்தால், நெருங்கிய உறவினரை பணயம் வைத்து விட்டு செல்ல வேண்டும். ஆயினும், வசதி படைத்தவர்கள் பெருமளவு பணம் கொடுத்து, பாஸ் எடுத்துக் கொண்டு சென்றனர். அவ்வாறு வெளியேறிய பெரும் பகுதியினர், வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், "அன்று ஈழத்தில் வாழ்ந்த காலங்களில், போராளியாக மாறக் கூடிய அருமையான சந்தர்ப்பத்தை உதறித் தள்ளி விட்டு"  வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாக தங்கி விட்டவுடன், "புலி ஆதரவாளர்" வேஷம் போடத் தொடங்கினார்கள். வெளிநாடு செல்லும் வரையில், அவர்களுக்கும் புலிகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இருக்கவில்லை. தமிழீழப் போராட்டம் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை. 

புலிகளின் செயல்களை எல்லாம் நியாயப் படுத்தி வாதாடிக் கொண்டிருக்கும் பலர், தமது வர்க்க நலன் சார்ந்தே அதைப் பார்க்கின்றனர்.  குழந்தைப் போராளிகள் பிரச்சினை, அவர்கள் மனதில் எந்த மாற்றத்தையும் உண்டாக்காத காரணமும் அது தான். ஏனென்றால்... இங்கே தான் அவர்களது நடுத்தர வர்க்க மனோபாவம் தலை காட்டுகின்றது. 

இறுதி யுத்தம் வரையில், புலிகளின் படையணிகளில் இருந்த பெரும்பான்மையான போராளிகள், குழந்தைப் போராளிகள் உட்பட, வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். நடுத்தர வர்க்க "குழந்தை அறிவுஜீவிகளை" பின்பற்றி, வெளிநாடு செல்வதற்கு பண வசதி இல்லாதவர்கள். வர்க்க முரண்பாடுகள், வர்க்க ஒற்றுமைகள், எந்த நாட்டு அரசியல் போக்கிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது.

மேற்கத்திய நாடுகளில், வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கையில், திடீரென தமிழ் தேசிய ஞானம் கைவரப் பெற்றவர்கள், விடுதலை உணர்வு பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஈழத்தில் வாழும் வறிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு, விடுதலை உணர்வு, இன மான உணர்வு எல்லாம் தாராளமாகவே இருக்கின்றன. 

மார்க்சிய தத்துவம் காலங் காலமாக கூறி வருவதைப் போன்று, "இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் தான் போராட முன்வருவார்கள்." தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அது தான் உண்மை.  இழப்பதற்கு நிறைய சொத்துக்களை வைத்திருப்பவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று, சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, மற்றவர்களுக்கு தமிழ் தேசியப் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்கள். இது இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கும் இடையிலான வர்க்கப் பிரிவினை.

ஈழத்தில், புலிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் கலை அலாதியானது. அதற்கென்றே பிரச்சாரப் பிரிவு சில ஆட்களை வைத்திருக்கும். குறிப்பாக பாடசாலைகளில் சென்று மாணவர்களுடன் பேச்சுக் கொடுப்பார்கள். "படித்து என்ன செய்யப் போகிறீர்கள்? சிங்களவன் வேலை கொடுப்பானா? சிங்களவன் குண்டு போட்டு கொன்று கொண்டிருக்கும் நேரத்தில் படித்து என்ன பிரயோசனம்? எப்படியும் சாகத் தானே போகிறோம்? போராடிச் சாகலாம் அல்லவா?" இப்படிப் பல கேள்விகள்.

ஆண் மாணவர்களுடன் உரையாடுவது பெண் போராளிகளாகவும், பெண் மாணவர்களுடன் உரையாடுவது ஆண் போராளிகளாகவும் இருக்கும். போராளி வாழ்க்கையின் மகத்துவம் பற்றியும், சாதாரண வாழ்க்கையின் இழி நிலை பற்றியும் எடுத்துரைப்பார்கள். ஆயுதமேந்திப் போராடாமல், வாழ்க்கையை வீணாக்குவதாக அவர்கள் எண்ணி வெட்கப் படும் அளவிற்கு அந்த உரையாடல் அமைந்திருக்கும்.

பொதுவாக புலிகளின் எந்தப் பிரச்சாரமும், தற்போது வெளிநாடுகளில் தீவிர தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும், நடுத்தர வர்க்க மாணவர்கள் மனதில் எந்த சலனத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு நன்றாகத் தெரியும், படித்தால் தமக்கு எதிர்காலம் உண்டென்று. குறைந்த பட்சம், தமது பெற்றோர் தம்மை வெளிநாட்டுக்காவது அனுப்பி வைப்பார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். 

மத்திய தர வர்க்கத்திலும் விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். தாமாகவே விரும்பி போராளியாக சேர்ந்து கொள்வார்கள். அப்படியான சிலரை, பெற்றோர் தமது செல்வாக்கை பயன்படுத்தி, முகாமில் இருந்து விடுவித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகும் தமது பிள்ளை ஊரில் இருந்தால் இயக்கத்தில் சேர்ந்து விடுவான் என்று நினைத்து, வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பார்கள். 

ஏழை மக்களின் நிலைமை வேறு. அவர்களிடம் வெளிநாடு செல்லும் அளவிற்கு வசதி, வாய்ப்புகள் எதுவும் கிடையாது. ஏழை மாணவர்கள் மனதில், புலிகளின் பிரச்சாரங்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிவிடும். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்தும் பலர் போராளியாக சேர்ந்து கொள்ள முன்வருவதுண்டு. அப்படியாவது, தாம் பெற்றோருக்கு பாரமாக இருக்க மாட்டோம் என்று அந்த பிஞ்சு உள்ளங்கள் நினைத்துக் கொண்டன.

வெளிநாடுகளுக்கு செல்லும் மத்தியதர வர்க்கத்தினரை குறி வைத்தும், அவர்கள் புலம்பெயர்வதை தடுப்பதற்காகவும் புலிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். "வெளிநாடு சென்று வெள்ளையனுக்கு அடிமை வேலை செய்யப் போகிறீர்களா? அதை விட எமது தாயகத்தில் சுதந்திரமாக போராடிச் சாகலாமே?" என்று நேரடியாகவும், தமது ஊடகங்கள் மூலமும் சொல்லி வந்தனர். புலிகளின் பிரச்சாரத்திற்கு மயங்கும் நிலையிலா, எமது நடுத்தர வர்க்கம் இருக்கிறது?

மத்தியதர வர்க்க "குழந்தை அறிவுஜீவிகள்", சக மாணவர்கள் அரசியலில் நாட்டம் கொள்வதையே கண்டிப்பார்கள். "நமக்கு முக்கியம் படிப்பு, பல்கலைக்கழக அனுமதி, அதற்குப் பிறகு உத்தியோகம், கடைசியாக ஒரு மேற்கத்திய நாடொன்றில் நிரந்தரமாக தங்கி விடுதல்..." என்று அறிவுரை கூறுவார்கள். ஊரில் ஒரு பாடசாலை மாணவனாக வாழ்ந்த காலங்களில் அரசியலை நினைத்துப் பார்க்க மறுத்தவர்கள், பல்கலைக்கழக பட்டம், வெளிநாட்டு வாழ்க்கை கைவரப் பெற்ற பின்னர் தான், "நமக்கு தமிழீழம் வேண்டும்" என்று உணர்ந்து கொண்டார்கள்! அவர்கள் தான் தற்போது இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகளின் குழந்தைப் போராளிகள் இன உணர்வு பெற்று போராடச் சென்றிருக்கலாம். ஆனால், அதற்கு முன்னர் அவர்களுக்கு வர்க்க உணர்வு என்ற ஒன்று இருந்துள்ளது. இழப்பதற்கு எதுவுமற்ற மக்களுக்கு, போராட்டத்தை தவிர வேறு வாழ்க்கை இல்லை. போராளியாக ஆயுதமேந்திய சிறுவனுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரம், அவன் ஒரு ஏழைக் குடும்பத்தில் அவல வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் கிடைக்கவில்லை. போராளியான பின்னர் கிடைத்த சமத்துவ உணர்வு, சிறார் போராளிகளுக்கு ஓர் உத்வேகத்தை கொடுத்தது.

மறு பக்கத்தில், பண வசதி படைத்தவர்களுக்கு போராடமாலே ஒரு நல்வாழ்வு அமைந்து விடுகின்றது. அவர்கள் சமத்துவத்தை, சமூக அங்கீகாரத்தை தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை. அதை நாம் கேள்வி கேட்டால், "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆன்மீக சொற்பொழிவாற்றத் தொடங்கி விடுவார்கள். 

அண்மையில் தமிழகத்தில் பரப்பரப்பாக பேசப்பட்ட, புலிப் பார்வை திரைப்படத்தின் இயக்குனர், பாலச்சந்திரன் என்ற சிறுவனுக்கு புலிச் சீருடை அணிவித்திருப்பது பற்றி எழுந்த சர்ச்சை தொடர்பாக கூறிய விளக்கம் இது: "அந்தப் பாலகனுக்கு சீருடை அணிவித்து அழகு பார்த்திருக்கிறோம்."  அதே போன்று, நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு சீருடை அணிவித்து அழகு பார்ப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்கிறார்கள். ஈழத்தில், போர்க் களத்தில் சீருடை அணிந்திருந்த சிறுவர்களுக்கு அது வெறும் அலங்காரப் பொருள் அல்ல. போராளி ஆகி விட்டதால், சமூக அந்தஸ்தில் உயர்ந்து விட்டதாக பெருமிதம் கொள்ளும் கனவு. அந்தக் கனவு மாவீரர் துயிலும் இல்லங்களில் மண்ணோடு மண்ணாக மறைந்து போனது.

Monday, July 28, 2014

அவர்கள் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை, இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்!



"எதற்காக பாலஸ்தீனத்திற்காக அழுகிறீர்கள்?""தமிழர்கள் அழ வேண்டியது முள்ளிவாய்காலுக்காக மட்டுமே!"
தமிழர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சிலர் சமூக வலைத் தளங்களில் சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எதிரிகளின் சூழ்ச்சிகளில் முதன்மையானது, ஒடுக்கப் பட்ட மக்களை பிரித்து வைப்பது. அதை இப்படியான வழிகளிலும் சாதிக்கலாம்.

வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கண்களை மூடிக் கொண்டிருந்த, ஓய்வு பெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரன், வட மாகாண முதலமைச்சராக பதவி வகிக்கிறார். வன்னியில் முற்றுகைக்குள் அகப்பட்ட மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவில் சில தமிழ் தனவந்தர்கள், ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வழங்கினார்கள்.

வன்னியில் மக்கள் செறிவாக கூடுமிடங்களை செய்மதிப் படங்கள் மூலம் காட்டிக் கொடுத்து, தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்க உதவிய ஒபாமாவுக்கு ஆதரவாக, அமெரிக்காவில் ஓர் தமிழர் அமைப்பு இயங்கியது. இந்தியாவில் அதே காலகட்டத்தில், சோனியா அல்லது கருணாநிதி பெயரில் ஒரு தமிழ் இன உணர்வாளர்களின் அமைப்பு இயங்கினால், அது எந்தளவு எதிர்ப்பை சம்பாதித்திருக்கும்? ஆனால், தமிழ் இனப்படுகொலையில் பங்காளியான ஒபாமாவுக்கு ஆதரவான தமிழர் அமைப்பு, யாருடைய கண்களையும் உறுத்தவில்லை.

அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களையும், பண வசதி படைத்தவர்களையும் கேள்வி கேட்கும் அளவிற்கு முதுகெலும்பில்லாத "மாற்றுக்" கருத்தாளர்கள் சிலர், முள்ளிவாய்க்கால் - காஸா படுகொலைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைப் பார்த்து நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலையும், காஸாவையும் ஒப்பிட்டால் ஒரு சில "மாற்றுக்" கருத்தாளர்களுக்கும், போலித் "தமிழ் இன உணர்வாளர்களுக்கும்" பிடிப்பதில்லை. முள்ளிவாய்க்கால் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு, தம்மிடம் மட்டுமே காப்புரிமை இருப்பது போன்று நடந்து கொள்கின்றனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் பேசினால், "எமக்கு தமிழீழம் மட்டுமே முக்கியம்" என்று விதண்டாவாதம் செய்வார்கள். ஒரு சில "மாற்றுக்" கருத்தாளர்கள் குறுக்கே புகுந்து, "உலகில் எவனும் தமிழன் சாகும் போது கண்டு கொள்ளவில்லை. அதனால் பாலஸ்தீனர்கள் பற்றி எமக்கு அக்கறை இல்லை..." என்று ஒரு சாட்டு சொல்வார்கள். "இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை, ஒரு சர்வதேச பிரச்சினை" என்பது இந்த "மாற்றுக்" கருத்து அறிவுஜீவிகளுக்கு தெரியாமல் போனது அதிசயமல்ல. ஏனென்றால், அமெரிக்கா உதவியின்றி அவர்களது அரசியல் நடக்காது.

இஸ்ரேலில் ஒரு கொலை நடந்தால் அது உலகச் செய்தி. அதே நேரத்தில் இன்னொரு நாட்டில் ஆயிரம் பேர் இறந்தாலும், அந்தத் தகவல் எந்த ஊடகத்திலும் வருவதில்லை. இன்று நேற்றல்ல, கடந்த எழுபது வருடங்களாக சர்வதேச சமூகம் இஸ்ரேல் மீது அளவுக்கு அதிகமான கரிசனை காட்டி வருகின்றது. மேற்கத்திய ஊடகங்கள் எந்தத் தகவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவோ, அதே தான் உலகம் முழுவதும் பிரபலமாக பேசப் படும்.

காஸா போர் தொடங்கி நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், இன்னொரு அரபு நாடான லிபியாவில் ஒரு போர் நடந்து கொண்டிருந்த தகவலை எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? அதுவும் சாதாரணமான யுத்தம் அல்ல. கிளர்ச்சிக் குழுக்கள் திரிப்பொலி சர்வதேச விமான நிலையத்தை தாக்கி உள்ளன. அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமானங்களை தகர்த்துள்ளன.

திரிபோலி விமான நிலைய தாக்குதல் 

லிபியா வான் பரப்பின் மேல் விமானங்கள் பறப்பதற்கு, சர்வதேச தடையுத்தரவு போடப் பட்டுள்ளது. அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேறி உள்ளனர். பிரெஞ்சுப் பிரஜைகளை வெளியேறுமாறு பணிக்கப் பட்டுள்ளது. இந்த தகவல் எல்லாம் எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள். எதற்காக எந்த ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை? அதற்கு விடை ஒன்று தான். இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, சர்வதேச கவனம் முழுவதும் அங்கே தான் குவிந்திருக்கும்.

2008 இறுதியிலும், 2009 தொடக்கத்திலும், வன்னியிலும், காஸாவிலும் ஒரே நேரத்தில் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், சர்வதேச நாடுகள் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும்? இந்த உண்மைகளை மறைக்கும் போலித் தமிழ் இன உணர்வாளர்கள் சிலர், தமது இஸ்ரேலிய சார்பு அரசியலை மறைப்பதற்காக பல தகிடுதத்தங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை. ஆனால், இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்.


********


பிற்குறிப்பு:
"ஈழத் தமிழர்கள் இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" (?) என்று, இஸ்ரேல் கொடுத்த ஆயுதங்களை பாவித்து நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஓய்ந்த பின்னர், நிராஜ் டேவிட் என்ற ஊடகவியலாளர் கூறி வந்தார். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர், லங்காஸ்ரீ (தமிழ்வின்) என்ற தமிழர்கள் மத்தியில் பிரபலமான இணையத்தளத்தில், இஸ்ரேலை புகழ்ந்து தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார்.
ஈழத் தமிழர்கள் இஸ்ரேலுக்கு விசுவாசமானவர்களாக இருந்தால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அவரது வாதம். GTV எனும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சியில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். GTV, லங்காஸ்ரீ என்பன மிகத் தீவிரமான தமிழ்தேசிய ஊடகங்கள் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். நிராஜ் டேவிட் கூட தன்னை தீவிரமான தமிழ் தேசியவாதியாக காட்டிக் கொள்ளும் ஒருவர் தான்.
லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் IBC வானொலியும், மிகத் தீவிரமான தமிழ் தேசிய ஊடகம் தான். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்த யூதர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது, "இஸ்ரேலில் சந்திப்போம்" என்று விடை பெறுவார்களாம். அதே மாதிரி, தமிழர்கள் எல்லோரும் "தமிழீழத்தில் சந்திப்போம்" என்று கூறிக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தி வந்தது.
ஸ்ரீதரன், இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். கட்சிக்குள்ளேயே மிகவும் தீவிரமான தமிழ் தேசியவாதி என்று, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெயரெடுத்தவர். அவர் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது: "உலகிலேயே மூன்று புத்திசாலித்தனமான இனங்களின் பெயர்கள் J என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறது. அவை முறையே Jews, Japanese, Jaffna Tamils!" என்று கூறினார்.
மே 17 இயக்கம், அனைத்து தமிழ் தேசியவாதிகள் சார்பாக, தமிழ்நாட்டில் பாலஸ்தீன ஆதரவுக் கூட்டம் போடுகின்றதாம். இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. மே 17 இயக்கத்தினர் "அசல் தமிழ் தேசியவாதிகள்" என்றால், மேலே குறிப்பிடப் பட்டவர்கள் "போலித் தமிழ் தேசியவாதிகளா?" இவர்களில் யார் உண்மையான தமிழ் தேசியவாதி? இந்தக் குழப்பத்திற்கு காரணம், உலகில் "பொதுவான தமிழ் தேசியம்" என்ற ஒன்று கிடையாது. ஏற்கனவே, தமிழ் தேசியவாதிகள் மத்தியிலும் வலதுசாரி, இடதுசாரி பிரிவினை காலம் காலமாக இருந்து வந்துள்ளது.
பெரும்பான்மை ஆதரவாளர்களைக் கொண்ட, வலதுசாரித் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலும் ஒரே மாதிரியான கொள்கை கிடையாது. ஈழத்து தமிழ் தேசியத்திற்கும், தமிழகத் தமிழ் தேசியத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள், கொள்கை முரண்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் எதிரொலிக்கிறது. வலதுசாரி தமிழ் தேசியவாதிகளில் ஒரு பிரிவினர் இஸ்ரேலை ஆதரிக்கையில், இன்னொரு பிரிவினர் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர். எது எப்படியோ, இஸ்ரேலுக்கு தலையையும், பாலஸ்தீனர்களுக்கு வாலையும் காட்டுவதற்கு விசேட திறமை வேண்டும்.

Wednesday, July 23, 2014

காஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு!


“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு காஸாவில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு போர்களுக்குமான தயாரிப்புகளும் முன்னெடுப்புகளும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளன. புலிகளின் இடத்தில் ஹமாசும், சிறிலங்கா அரசின் இடத்தில் இஸ்ரேலிய அரசும் உள்ளன.

ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போருக்கு அயலில் இருந்த பெரிய நாடான இந்தியா ஆதரவளித்தது. அதே மாதிரி, இஸ்ரேலுக்கு அயலில் உள்ள பெரிய நாடான சவூதி அரேபியா, இன்றைய காஸா இன அழிப்புப் போருக்கு உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மையை சொன்னால், பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஈழத்தில் கொல்லப் பட்ட பெரும்பான்மை தமிழ் மக்கள் இந்துக்களாக இருந்த போதிலும், ஓர் "இந்து நாடான" இந்தியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்தது. காஸாவில் கொல்லப்பட்ட பெரும்பான்மை அரபு மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், ஒரு "முஸ்லிம் நாடான" சவூதி அரேபியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்துள்ளது. "ஒரே மதத்தவருக்கு இடையிலான ஒற்றுமை" வெளியில் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே பயன்படும். உள்ளுக்குள்ளே அவரவர் பொருளாதார நலன்கள் மட்டுமே முக்கியமாக கருதப் படுகின்றன.

இஸ்ரேலிய தொலைக்காட்சியான சனல் 10 ல் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சாகுல் மபாஸ் (Shaul Mofaz) அதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். (Mofaz proposes role for Saudi Arabia and UAE to disarm Gaza; https://www.middleeastmonitor.com/news/middle-east/12931-mofaz-proposes-role-for-saudi-arabia-and-uae-to-disarm-gaza)  காஸாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போருக்கு சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் நிதியுதவி செய்யுமளவிற்கு சென்றுள்ளன! அதற்கு என்ன காரணம்?

பாலஸ்தீன பிரச்சினையில், “முஸ்லிம் நாடுகள்” எல்லாம் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை. வரலாறு நெடுகிலும், இஸ்ரேலுடன் ஒத்துழைத்த “முஸ்லிம் நாடுகள்” பலவுள்ளன. ஜோர்டான் பகிரங்கமாகவும், சவூதி அரேபியா மறைமுகமாகவும், தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுடன் நட்புறவை பேணி வந்துள்ளன. அவை பாலஸ்தீனத்தில், இஸ்ரேலுடன் சமரச உடன்படிக்கை செய்து கொண்ட அப்பாசின் கட்சியை ஆதரிக்கின்றன. ஹமாஸ், புலிகள் போன்று, நீண்ட காலமாக எந்த வித விட்டுக் கொடுப்புகளுக்கும் முன்வரவில்லை. ஆயுதப் போராட்டம் மூலம், பாலஸ்தீன விடுதலை அடையாமல் ஓயப் போவதில்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது.

சவூதி மன்னர் அப்துல்லாவின் மைத்துனர் துர்க்கி, புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாக இருப்பவர். அவர் அண்மையில், பெல்ஜியம் சென்று இஸ்ரேலிய ஜெனரல் ஆமோஸ் யால்டின் (Amos Yadlin) உடன் சந்தித்துப் பேசி இருக்கிறார். மத்திய கிழக்கில் ஒரு “புதிய சமாதானத் திட்டம்” குறித்து ஆராய்ந்துள்ளனர். அதன் முதற் கட்டமாக, ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும்.

இஸ்ரேலுக்கும், சவூதி அரேபியாவுக்கும் பொதுவான நண்பர்களும், பொதுவான பகைவர்களும் இருக்கின்றனர். இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா சிறந்த நண்பன். அதே மாதிரி, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் ஜென்ம விரோதிகள். அண்மைக் காலம் வரையில், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியும், சிரியாவும், ஈரானும் ஹமாசுக்கு உதவி வந்தன. சிரியா அரசு, உள்நாட்டுப் போரில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப் பட்டது. (முன்னர் எகிப்து பற்றிய பதிவொன்றில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கு சவூதி அரேபியா உதவியதாக தவறுதலாக எழுதி இருந்தேன். அதனை ஏற்கனவே சில நண்பர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர். எனக்குக் கிடைத்த தகவல்களும் அதை உறுதிப் படுத்துகின்றன. அப்போது நடந்த தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றேன்.)

பாலஸ்தீனத்திற்குள் ஈரான் ஊடுருவதற்கு முன்னர், ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும் என்பது இரண்டு கூட்டுக் களவாணிகளின் இரகசியத் திட்டம். (ஏற்கனவே இப்படி எல்லாம் நடக்கும் என்று மோப்பம் பிடித்த ஈரான், “பாலஸ்தீன மீட்புப் படை” ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆனால், அவர்களால் காசாவுக்குள் ஊடுருவ முடியுமா என்பது சந்தேகமே.) 

இதற்கிடையே, சூடான் தலைநகர் கார்ட்டூமுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது, இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன. (Israel said to bomb Sudan weapon warehouse; http://www.timesofisrael.com/israel-said-to-bomb-sudan-weapon-warehouse/) அந்த தாக்குதலில் சிலருக்கு காயமேற்பட்டதுடன், அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் வெடித்து நாசமாகியுள்ளன. அனேகமாக, ஈரானில் இருந்து ஹமாசுக்கு அனுப்பப் பட்ட ஏவுகணைகள் அங்கே பாதுகாத்து வைக்கப் பட்டதாகவும், அதனாலேயே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் கூட்டுச் சேர்ந்து, பாலஸ்தீன பிரச்சினையை தமது பாணியிலேயே தீர்க்க விரும்புகின்றன. அது ஏற்கனவே தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான “முள்ளிவாய்க்கால் தீர்வு”. அதன் முதல் கட்டமாக, இஸ்ரேல் காஸா மீது வான் வழித் தாக்குதல்களை நடத்தியது. இரண்டாம் கட்டமாக, தரை வழியாக படையினரை நகர்த்தியுள்ளது. இந்த யுத்தம் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்பதை ஏற்கனவே இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சில இனவாதிகள் “இனப்படுகொலை செய்வதில் தவறில்லை” என்று பகிரங்கமாக பேசி வருகின்றனர்.

காஸா ஆக்கிரமிப்புப் போரின் இறுதியில், இஸ்ரேலிய இராணுவம் ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து விட்டிருக்கும். ஆனால், ஹமாஸ் முற்றிலுமாக அழித்தொழிக்கப் பட்டதை தனது வெற்றியாக பறை சாற்றிக் கொள்ளும். அதற்குப் பின்னர், காஸாவில் எஞ்சியுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகிறோம் என்று சொல்லிக் கொண்டு, சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் களத்தில் இறங்கும்.

ஹமாஸ் அழிக்கப் பட்ட பின்னர், அந்த அரசியல் வெற்றிடத்தில் அப்பாசின் பதா கட்சி பதவியில் அமர்த்தப் படும். “அழிவுகளில் இருந்து மீண்டெழுதல், மீள் கட்டுமானம், இன நல்லிணக்கம்….” இது போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களுடன் அந்தத் திட்டங்கள் நிறைவேறும். 

இதெல்லாம் நடக்கும் வரையில் சர்வதேச சமூகம் கண்களை மூடிக் கொண்டிருக்கும். ஐ.நா. ஒப்புக்கு விசாரணை செய்து, காஸாவில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் பட்டதாக ஓர் அறிக்கை சமர்ப்பிக்கும். போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கும். ஜெனீவாவில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப் படும். அதற்கும் அப்பால் எதுவும் நடக்காது.

இவை எல்லாம் ஏற்கனவே ஈழத் தமிழர்கள் கண்டு அனுபவித்த சம்பவங்கள் தான். ஏகாதிபத்திய நாடுகளால் வன்னியில் நிறைவேற்றப் பட்ட நகல் திட்டம், இந்த முறை காஸாவில் பிரயோகிக்கப் படுகின்றது. ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாமல், “ஈழப் பிரச்சினை வேறு, பாலஸ்தீன பிரச்சினை வேறு” என்று இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளப் போவதில்லை.

*******


இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியுடன், உலக நாடுகளில் உள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிரான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலின் போர்க்குற்றங்களில் பங்காளிகள் எனக் குற்றம் சாட்டியுள்ளன. பாலஸ்தீன மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், படுகொலைகளையும் கண்டிப்பதுடன், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். 

கூட்டறிக்கையில் விடுக்கப் பட்டுள்ள கோரிக்கைகள்: 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் கண்டிக்கப் பட வேண்டும். 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். 
  • இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற வேண்டும். 
  • இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப் பட வேண்டும். - காஸா, ஜெருசலேம், மேற்குக்கரை பகுதிகளில் வாழும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விலக்கப் பட வேண்டும். 
  • 1967 ம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைக்கு அப்பாலான குடியேற்றங்கள் அகற்றப் பட வேண்டும். 
  • ஐ.நா. தீர்மானத்திற்கு அமைய பாலஸ்தீன அகதிகளின் தாயகம் திரும்புதல் உறுதி செய்யப் பட வேண்டும். - இஸ்ரேலுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகள் இரத்து செய்யப் பட வேண்டும். 
  • கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட, 1967 ம் ஆண்டின் எல்லைக் கோட்டின் அடிப்படையில் பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப் பட வேண்டும்.


இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் விபரம் : 
1. Communist Party of Albania
2. Algerian Party for Democracy and Socialism
3. The Communist Party of Australia
4. Democratic Progressive Party (Bahrain)
5. Communist Party of Bangladesh
6. Bangladesh Workers Party
7. Communist Party of Brazil
8. British Communist Party
9. New Communist Party of Britain
10. Communist Party of Canada
 11. Chilean Communist Party
12. Croatia, Socialist Workers Party
13. AKEL (Cyprus)
14. Communist Party of Denmark
15. FARC-EP, PCCC, (Colombia)
16. Communist Party of Finland
17. The German Communist Party
18. Communist Party of Greece
19. Hungarian Workers' Party
20. Communist Party of India (Marxist)
21. The Tudeh Party (Iran)
22. Communist Party of Ireland
23. The Communist Party of Israel
24. The Italian Communist Party
25. Jordanian Communist Party
26. Communist Party of Luxembourg
27. Communist Party of Mexico
28. Popular Socialist Party - National Political Union, Mexico
29. New Communist Party of the Netherlands
30. Communist Party of Norway
31. Palestinian Communist Party
32. Palestinian People's Party
33. Communist Party of Peru
34. Philippine Communist Party (PKP-1930)
35. Communist Party of Poland
36. Portuguese Communist Party
37. Romanian Communist Party
38. The Communist Party of the Russian Federation
39. South African Communist Party
40. Russian Communist Workers' Party
41. Yugoslavia, New Communist Party
42. Communist Party of Serbia
43. Communist Party of Slovakia
44. Communist Party of the Peoples of Spain; Catalonia,
45. Communist Party of Spain
46. Sudanese Communist Party
47. Communist Party of Sweden
48. Syrian Communist Party
49. League of Communists of Ukraine
50. Austrian Workers' Party
51. Belarusian Communist Workers' Party
52. Communist Party of Sweden