Friday, April 17, 2015

ஊழல் மலிந்த ஹிட்லரின் ஆட்சி



ஹிட்லர் அனுதாபிகளான அனைத்து பாசிஸ்டுகளுக்கும்: 
"உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். தவழவும் முடியா விட்டால் தற்கொலை செய்து கொள்ளுங்கள். அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது."


ஜெர்மன் நாஸிகள் "ஊழலற்ற ஆட்சி" நடத்தியதாக புளுகித் திரியும், தமிழ் பேசும் நாஸி அபிமானிகள் பலர் இருக்கின்றனர். "வெள்ளை ஐரோப்பியர்கள் ஊழல் செய்வதில்லை" என்று அப்பாவித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் பாமர மக்கள் அதை நம்பலாம்.

ஜெர்மன் வரலாற்றிலேயே நாஸிகளின் ஆட்சிக் காலம் தான் ஊழல் மலிந்திருந்த காலகட்டம். ஹிட்லர் முதல் அடிமட்ட அதிகாரி வரையில் மிகப்பெரிய ஊழல் பெருச்சாளிகளாக இருந்தனர்.

 ஹிட்லர், 1933 ம் ஆண்டு, ஆட்சியைக் கைப்பற்றும் நேரம், ஜெர்மன் அரசுக்கு பல இலட்சம் வரி இன்னும் கட்டப்படாமல் நிலுவையில் இருந்தது. அவரது "மைன் கம்ப்" நூலுக்கான வரியே கட்டப் படாமல் இருந்தது. பதவிக்கு வந்த ஹிட்லர், வருமான வரித் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அந்த வரியை இல்லாதாக்கினார். அது மட்டுமல்ல, அடுத்து வந்த வருடங்களில் விற்கப் பட்ட மைன் கம்ப் நூல் பிரதிகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப் பட்டது. அந்தப் பணத்தை எல்லாம் ஹிட்லர் தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

ஐரோப்பாவில் போர் நடந்து கொண்டிருந்த காலங்களிலும், நாஸி அதிகாரிகள் ஊழலில் திளைத்தார்கள். போர்முனையில் நின்ற ஜெர்மன் படையினருக்கு அனுப்ப வேண்டிய பெட்ரோல், உணவுப் பொருட்களை திருடி கறுப்புச் சந்தையில் விற்றார்கள். 1944 ஆம் ஆண்டு, நார்மாண்டி கடற்கரையில் நின்ற யுத்த தாங்கிகளுக்கு பெட்ரோல் இல்லாத காரணத்தால், படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில், பாரிஸ் கள்ளச் சந்தையில் பெட்ரோல் விற்கப் பட்டுக் கொண்டிருந்தது.

யூதர்கள் அவர்கள் வசித்த வீடுகளில் இருந்து தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்ட நேரம், யூதர்களின் சொத்துக்களை திருடுவதில் ஜெர்மன் அதிகாரிகள் மும்முரம் காட்டினார்கள். தமது வாழ்நாளில் இது போன்ற தளபாடங்களை காணவில்லை என்று, அவற்றை தமது வீடுகளுக்கு திருடிச் சென்ற அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

ஹிட்லரின் வலதுகரமாக விளங்கிய இராணுவத் தளபதி ஹெர்மன் கெரிங், ஒரே நேரத்தில் பல பதவிகளை வகித்து வந்தார். பிரைசன் மாநில முதலமைச்சர், பொருளாதார அமைச்சர், பாராளுமன்றத் தலைவர்... இப்படிப் பல பதவிகள் காகிதத்தில் மட்டும் இருந்துள்ளன. அதற்கெல்லாம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். 

அது மட்டுமல்ல, உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் வாகன தயாரிப்பாளர்களான BMW, Benz நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கி வைத்திருந்தார். கெரிங்கின் அன்றைய வருட வருமானம் 1250000 மார்க்குகள். அதே நேரம், ஜெர்மனியில் ஒரு தொழிலாளரின் வருடாந்த வருமானம் 5000 மார்க்குகளுக்கு மேலே கூடவில்லை.

ஜெர்மன் அரசாங்கத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு, நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் தான் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடியது. பெரும்பாலும் அதிகாரத்தில் இருந்தவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்குத் தான் அரசுப் பதவிகள் கொடுக்கப் பட்டன. ஜெர்மனி முழுவதும் வேலை வாய்ப்புக் கிடைக்க வேண்டுமானால் மேலிடத்தில் உள்ளவரைத் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.

(நன்றி : Historia, Nr.1/2015)



கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் எப்படியானவர்கள்? 
- பாசிஸ்டுகள் 
 - நாஸிகள் 
 - இனவெறியர்கள் 
 - மதவெறியர்கள் 
 - இனப்படுகொலையாளிகள் 
 - போர்க்குற்றவாளிகள் 
அல்லது அப்படியானவர்களை ஆதரிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள்.

Thursday, April 16, 2015

சிலி இனப்படுகொலை : வர்க்கத் துவேஷிகளும் ஆபத்தான தீய சக்திகள் தான்


வர்க்கத் துவேஷம் என்பது, இனத் துவேஷத்திற்கு சற்றிலும் குறைவில்லாத தீய குணம் தான். அதனால், வர்க்க விரோதிகளும், இனவெறியர்கள் போன்றே ஆபத்தானவர்களாக கருதப் பட வேண்டும். 

1973 ஆம் ஆண்டு, சிலியில் பினோச்சேயின் சர்வாதிகார ஆட்சி வரும் வரையில், அங்கே எந்தவொரு இடதுசாரி தீவிரவாத அமைப்பும் ஆயுதப் போராட்டம் நடத்தவில்லை. சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஜனநாயக சோஷலிசத்தை கொண்டு வர விரும்பிய அய்யேண்டே ஆட்சிக் காலத்தில், வலதுசாரிகள், முதலாளிய ஆதரவாளர்கள் யாரும் தண்டிக்கப் படவில்லை. 

ஆயினும், இராணுவ ஜெனரல் பினோச்சே தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றிய, CIA மற்றும் வலதுசாரி சதிப்புரட்சியாளர்கள், இடதுசாரி, கம்யூனிச சக்திகள் மீது கொலைவெறி கொண்டு பாய்ந்தார்கள். ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று குவித்தார்கள். சமுதாயத்தில் நிலவும் வர்க்கத் துவேஷம் கூட, இனப்படுகொலைக்கு வழிவகுக்கலாம் என்பதை சிலியில் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன. 

ஜனநாயகப் பொதுத் தேர்தலில் தெரிவான சோஷலிச ஜனாதிபதி அய்யேண்டே ஆட்சி நடத்திய காலத்திலேயே, CIA அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டி விட்டது. வெனிசுவேலாவில் நடந்ததைப் போன்று, சிலியிலும் மத்தியதர வர்க்க மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். முகாம்களில் இருந்த படையினரை உசுப்பி விடுவதற்காக, மத்தியதரவர்க்க பெண்கள் முகாம்களுக்குள் தானியங்களை வீசினார்கள். படையினர் கோழைகள், கோழிகள் போன்றவர்கள் என்று சீண்டுவதே அதன் நோக்கம். அரசுக்கு எதிராக இராணுவத்தை திருப்பி விட இது போதாதா?

இராணுவ சர்வாதிகார அரசு, அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தது. பிரஜைகளுக்கான சட்டப் பாதுகாப்பை இரத்து செய்தது. சோஷலிசம் மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஆதரவானவர்கள் கூட கைது செய்யப் பட்டு துன்புறுத்தப் பட்டனர். அவர்களை அடைத்து வைப்பதற்கு நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான தடுப்பு முகாம்கள் உருவாகின.

தலைநகரில் உள்ள மிகப் பெரிய விளையாட்டு மைதானமான Estadio Nacional இல், சதிப்புரட்சிக்கு அடுத்த நாள் மட்டும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களான 600 பேர் கொண்டு வரப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் உயிரோடு திரும்பிச் செல்லவில்லை. இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த 17 வருட காலங்களில், குறைந்தது 40000 பேர் அங்கு கொண்டு வரப் பட்டுள்ளனர்.

அய்யேண்டே பதவிக்கு வருவதற்கு தேர்தலில் ஒட்டுப் போட்ட, பெருமளவு வாக்காளர்கள் வாழ்ந்த இடங்களின் மீது ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தப் பட்டது. பினோச்சேயின் நேரடி உத்தரவின் பேரில், நூற்றுக்கணக்கான கைதிகள் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர். படையினர் அங்கு அவர்களை துண்டு துண்டாக வெட்டினார்கள். சிலரை உயிரோடு கொளுத்தினார்கள். பலரது கால் எலும்புகள் முறிக்கப் பட்டன. கண்கள் தோண்டியெடுக்கப் பட்டன. உயிரற்ற உடல்கள் குப்பைக் குவியல்களுடன் வீசப் பட்டன. அன்று பலியானவர்கள் செய்த ஒரேயொரு குற்றம், சோஷலிச மாற்றத்திற்காக ஒரு ஜனநாயக அரசை ஆதரித்தது தான்.

நிச்சயமாக, எல்லா இராணுவ அதிகாரிகளும் மக்களுக்கு எதிரான அராஜகச் செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால், மறுத்தவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் கைது செய்யப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். இரக்கமற்று கொலை செய்யப் பட்டனர். Carlos Prats என்ற இராணுவ அதிகாரி, சதிப்புரட்சியில் ஈடுபட மறுத்து ஆர்ஜெந்தீனாவுக்கு தப்பியோடினார். அங்கு வைத்து கார்க் குண்டுவெடிப்பு மூலம் கொலை செய்யப் பட்டார்.

மக்கள் மத்தியில் பயங்கரத்தை விதைப்பதற்காகவே DINA (Dirección de Inteligencia Nacional) என்றொரு புலனாய்வுப் பிரிவு உருவாக்கப் பட்டது. அந்தப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த Villa Grimaldi எனும் சித்திரவதை முகாமில் சொல்லொணா கொடுமைகள் நடந்துள்ளன. 

1978 ம் ஆண்டு முகாம் மூடும் வரையில், குறைந்தது 4500 இளைஞர்களும், யுவதிகளும் சித்திரவதை செய்யப் பட்டனர். வன்புணர்ச்சி, மின்சார அதிர்ச்சி கொடுத்தல், நீருக்குள் அமிழ்த்தல், போன்ற கொடுமைகள் தினந்தோறும் நடந்துள்ளன. பெண்கள் விசேடமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டனர். பெண்ணுறுப்புக்குள் எலியை அல்லது சிலந்தியை பிடித்து விட்டார்கள். நாய்களுடன், ஆண் குடும்ப உறுப்பினருடன் உடலுறவு கொள்ள வேண்டுமென பலவந்தப் படுத்தப் பட்டனர்.

17 வருட கால இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில், பினோச்சே இடதுசாரிகள் அனைவரையும் அழிக்க விரும்பினான். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், மற்றும் ஜனநாயக இடதுசாரிகள் எல்லோரையும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உட்பட அழித்தொழிப்பதே நோக்கமாக இருந்தது. 

சிலியில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த காலங்களில், குறைந்தது 82000 பேர் கைது செய்யப் பட்டனர். 30000 பேர் சித்திரவதை செய்யப் பட்டனர். 3000 பேர் கொல்லப் பட்டனர். சிலியில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள், Report of the Chilean National Commission for Truth and Reconcilliation இல் பதிவு செய்யப் பட்டுள்ளன.  

இராணுவ சதிப்புரட்சியின் பின்னர், அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் சிலி மறுசீரமைக்கப் பட்டது. தென் அமெரிக்காவின் நவ தாராளவாத கொள்கையின் பரிசோதனைச் சாலையாக பயன்படுத்தப் பட்டது. அதாவது, பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது. முதலாளிகளுக்கு வேண்டியளவு சுதந்திரம் வழங்கப் பட்டது. இதனை நிறைவேற்றிய நிபுணர் குழுவில், நோபல் பரிசு பெற்ற மில்ட்டன் பிறீட்மன் கூட அங்கம் வகித்திருந்தார். சிலி சதிப்புரட்சியிலும், அதற்குப் பின்னரான இனப்படுகொலையிலும் அமெரிக்காவின் பங்களிப்பு இருந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

வலதுசாரி இராணுவ சர்வாதிகாரி பினோச்சேயினால், இடதுசாரி சக்திகளை பலவீனப் படுத்த முடிந்ததே தவிர, முற்றாக அழிக்க முடியவில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் மீண்டும் ஜனநாயக ஆட்சி கொண்டு வரப் பட்டது. அப்போது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்ட சிலி கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிசக் கட்சி என்பன தற்போது வளர்ந்து வருகின்றன. 2006 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஒரு சோஷலிஸ்ட், சிலியின் முதலாவது பெண் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப் பட்டார். 

2014 ம் நடந்த தேர்தலில், இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியான Michelle Bachelet, பினோச்சே சர்வாதிகாரத்தினால் பாதிக்கப் பட்டவர். அவரது தந்தை அல்பேர்ட்டோ படையினரால் கொலை செய்யப் பட்டார். அப்போது நாட்டை விட்டு வெளியேறிய Michelle Bachelet, 1979 ம் ஆண்டு திரும்பி வந்து அரசியலில் ஈடுபட்டார்.

சிலி தொடர்பான முன்னைய பதிவு:
9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்

Tuesday, April 14, 2015

நடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்


ஈழப்போர் நடந்த காலங்களில், போர்க்களங்களில் காயமடைந்த போராளிகளின் உயிரைப் பாதுகாக்கும் முதலுதவிச் சிகிச்சை செய்வதற்கு தயாரான நிலையில் சில மருத்துவ வாகனங்களை வைத்திருந்தார்கள். அதில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியருக்கு ஓர் உண்மை தெரிந்திருக்காது. அதாவது, போர்க்களங்களில் நடமாடும் மருத்துவ சிகிச்சை வழங்கும் அமைப்பை உருவாக்கியவர் ஒரு கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர். அவர் பெயர் Dr. நார்மன் பெதியூன் (Dr.Norman Bethune)

மருத்துவ வரலாற்றில் நீண்ட காலமாகவே, குருதி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன. ஆயினும், போர்க்களத்தில் காயப்பட்ட வீரர்களை அயலில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. 1935 ம் ஆண்டு, அதிலே ஒரு புரட்சிகர மாற்றம் நடைபெற்றது. காயமடைந்த வீரர்களை தேடி மருத்துவமனை வந்தது. அதாவது, குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் வைக்கப்பட்ட குருதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு வாகனம் ஓடித் திரிந்தது. அந்த வாகனம் போர்க்களத்திற்கே சென்று சிகிச்சை அளித்தது.

அப்போது ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. பிராங்கோவின் பாஸிசப் படைகளை எதிர்த்து, கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும், குடியரசுவாதிகளும் தனித்தனி இராணுவங்களை அமைத்து போரிட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக, கம்யூனிஸ்டுகளின் படையணிக்கு உதவுவதற்காக, பன்னாட்டு தொண்டர்கள் வருகை தந்தனர். குறைந்தது 35000 தொண்டர்கள், 60 நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது வெவ்வேறு பட்ட இனத்தவர்கள், அன்று ஸ்பெயினில் போரிட்டனர். அவ்வாறு கனடாவில் இருந்து சென்ற தொண்டர்களில் பெதியூனும் ஒருவர்.

கனடாவில் வாழ்ந்த காலங்களிலேயே, கம்யூனிச சித்தாந்தம் பால் கவரப் பட்ட பெதியூன் 1935 ம் ஆண்டு, கனடிய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தக் கட்சியின் ஏற்பாட்டில் இயங்கிய தொண்டு நிறுவனமான Committee to Aid Spanish Democracy (CASD) பெதியூனை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தது. 

பெதியூன் மாட்ரிட் நகருக்கு வந்து சேர்ந்த பொழுது, வைத்தியசாலைகளில் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்ததால், காயமடைந்தவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட தங்க வைக்கப் பட்டனர். அங்குள்ள நிலைமைகளை பார்த்த பெதியூன், அதிகளவு இரத்தப் போக்கு காரணமாக இளம் வீரர்கள் பலியாகிக் கொண்டிருந்ததை கண்டார். அப்போது தான் அவர் மனதில் அந்த எண்ணம் உதயமானது.

பிரிட்டனில் இருந்து விசேடமான வேன் ஒன்றை தருவித்தார். அதற்குப் பின்னால் ஒரு குளிர்சாதனப் பெட்டியை இணைத்தார். அதில் குருதி எந்நேரமும் உறை நிலையில் வைக்கப் பட்டிருக்கும். மாட்ரிட் நகரில் குருதியை சேகரிப்பதற்காக ஓர் இரத்த வங்கியை நிறுவினார். 

அன்றிருந்த போர்ச் சூழலில் அனைவரும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பற்றாக்குறையினால் கஷ்டப் பட்டனர். அதனால், கொடையாளிகளின் இரத்தமும் தரம் குறைந்து காணப் பட்டது. பெதியூன் கொடையாளிகளுக்கு முதலில் நல்ல உணவு உண்ணக் கொடுத்து விட்டு தான், அவர்களிடம் இருந்து இரத்தம் சேகரித்தார்.

பார்சலோனா நகரில் ஏற்கனவே ஓர் இரத்த வங்கி இருந்த படியாலும், போர்க்களத்தில் இருந்து எட்டத்தில் இருந்த படியாலும், அந்த நகரை மையமாகக் கொண்டு செயற்படத் தொடங்கினார். பெதியூன் அனுப்பிய அம்புலன்ஸ் வண்டிகள், தினசரி பகலும் இரவுமாக ஓடிக் கொண்டிருந்தன. போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடி இரத்தம் வழங்கி, அவர்களை சாக விடாமல் காப்பாற்றின. 

நடமாடும் இரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை திறம்பட செயற்பட வைத்ததன் மூலம், கம்யூனிச/சோஷலிசப் படையினர் அனைவருக்கும் இரத்தம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சில காரணங்களுக்காக, ஸ்பெயின் அரச படைகளின் சுகாதார நிறுவனமான Sanidad Militair அதனைப் பொறுப்பெடுத்தது. 

ஸ்பெயினை விட்டுச் சென்ற பெதியூன் அதற்குப் பிறகு அந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கவில்லை. அதே நேரம், சீனாவில் மாவோவின் கம்யூனிசப் படைகள், ஜப்பானிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. பெதியூன் மாவோவின் அழைப்பை ஏற்று சீனா சென்றார். அங்கு அவர் மக்கள் விடுதலைப் படையின் தொண்டராக சேர்ந்தார். 

பெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939 ல், பெதியூன் சீனாவில் காலமானார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ சிகிச்சைகள் காரணமாக, அவரது இரத்தத்தில் நஞ்சு ஏறியிருந்தது. நார்மன் பெதியூனின் சேவையை நினைவுகூரும் முகமாக, சீனா முழுவதும் நூற்றுக் கணக்கான சிலைகள் வைக்கப் பட்டன. இன்றைக்கும் அந்தச் சிலைகள் சீனாவில் உள்ளன.

பெதியூன் பற்றிய திரைப்படம் : Dr Bethune

Monday, April 13, 2015

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் துரோகி ஹிலாரி கிளிண்டன்


தமிழர்களுக்கு துரோகம் செய்த ஹிலாரி கிளிண்டன், 2016 தேர்தலில் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவுக்கு விசுவாசமான வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகள், ஹிலாரி கிளிண்டனை வாழ்த்தி வரவேற்க தயாராவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஹிலாரி கிளிண்டன், 2007 ம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட நேரம், அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO கோடிக்கணக்கான டாலர்கள் தேர்தல் நிதியாக வழங்கியிருந்தது. அதே ஆண்டு, புலிகளுக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியதற்கான சன்மானம் அது.

புலிகளிடம் இருந்து தேர்தல் நிதி வாங்கிக் கொண்ட ஹிலாரி கிளிண்டன், அதற்கான நன்றிக் கடனாக, 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் புலிகளை அழிப்பதற்கு துணை போனார். முள்ளிவாய்காலில் பிரபாகரனை கொல்வதற்கு உடந்தையாக இருந்த அதே ஹிலாரி கிளிண்டன், 2011ம் ஆண்டு, லிபியாவில் கடாபியை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தார்.

ஹிலாரி போன்ற தமது மேற்கத்திய நண்பர்களின் துரோகம் குறித்து வாயே திறக்காத போலித் தமிழ் தேசியவாதிகள், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கியூபா போன்ற நாடுகளை வம்புக்கு இழுத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தைரியம் தானே?

"ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்!" வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! தமிழ் மக்கள் மத்தியில் கியூபா எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் பொழுது, இந்தப் புகைப்படத்தையும் காட்ட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: "ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்!"இனி ஈழ விவகாரத்தில் ஐ நா வில் அமெரிக்காவுக்கு அதரவாக ஒட்டு போடுமா?


பதில்: ஐ.நா.வில் ஈழ விவகாரம்? ராஜபக்ச ஒரு "சிங்களப் பிரபாகரனாக" வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு காரணமாகத் தான்., அமெரிக்கா ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வந்தது. பிரபாகரனை அகற்றுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு போர் தேவைப்பட்டது. ஆனால் ராஜபக்சவை அகற்றுவதற்கு தேர்தல் போதுமானதாக இருந்தது. அத்துடன் அமெரிக்காஅல்லது ஐ.நா.வின் கவலையும் மறைந்து விட்டது.

பல வருட காலமாகவே, புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்ட வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தயவை நம்பி இருந்தார்கள். அதற்காக, மேற்கத்திய விசுவாசிகளாக பெருமையுடன் காட்டிக் கொண்டார்கள். அதனால், கியூபா போன்ற சோஷலிச நாடுகளின் அனுதாபத்தை இழந்ததில் வியப்பில்லை. அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. 

தமிழ்தேசியவாதிகளின் அலட்சிய மனோபாவத்தை, இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது உண்மை. அதே நேரம், ஐ.நா. கூட்டங்களில் அமெரிக்காவின் இரட்டைவேடத்தை காட்டித் தான், கியூபா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

துரோகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? முள்ளிவாய்க்காலில் நின்றுகொண்டு அமெரிக்கா கப்பல்அனுப்பிகாப்பாற்றும் என்று நம்பி இருந்தார்கள். அந்தளவு அமெரிக்கா மீதான நம்பிக்கை. ஆனால், எதிர்பார்த்த படி அமெரிக்க கப்பல் வரவில்லை. அது தான் உண்மையான துரோகம். இந்த உண்மைகளை பேச மறுப்பது ஏன்?

சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலாவது, புலிகள் ஒரு குழுவை கியூபாவுக்கு அனுப்பி இருக்கலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றவர்களுக்கு, இதுவும் முக்கியம் என்பது தெரியாமல் போனது ஏனோ? நாங்களே வேண்டாம் என்று உதைத்துத் தள்ளி விட்டு, பிறகு அவன்வரவில்லை, இவன் வரவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?குறைந்த பட்சம் ஈழப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்றாவது சொன்னோமா? அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த நேரம், அதை எதிர்த்துக் குரல் கொடுத்தோமா?

வெனிசுவேலா கம்யூனிச நாடல்ல. ஆனால், சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது. அதே நேரம், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிச்சலைக்காட்டியுள்ளது. வன்னியில் இருந்த de facto தமிழீழம் நடைமுறைப் படுத்திய சோஷலிசம் பற்றிக் கூறமுடியுமா? புலிகள் அமெரிக்காவுக்கு சவால் விட்ட உரைகளை எடுத்துக் காட்டமுடியுமா?

"தமிழ் தேசியவாதிகள்" என்று அழைத்துக் கொள்ளும் நாங்கள், எப்போதும் அமெரிக்காவுக்கும், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும் ஆதரவாக இருப்போம். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான "கம்யூனிச" நாடுகள், எங்களை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வகை நியாயம்?

Sunday, April 12, 2015

எச்சரிக்கை : சிறுவர்களை நல்வழிப் படுத்துவது "கம்யூனிச மூளைச்சலவை" ஆகலாம்!


"சோவியத் யூனியனில், முன்னாள் சோஷலிச நாடுகளில் சிறுவர்கள், மாணவர்கள் மீதும் கம்யூனிச போதனைகளை திணிப்பார்கள்..." என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் விஷமிகள் இன்றைக்கும் இருக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரையில், "தீமையின் வடிவமான" சோவியத் யூனியனில், "கொடுங்கோல் சர்வாதிகாரிகளினால்" சிறுவர்கள் "மூளைச்சலவை செய்யப் பட்டதை" காட்டும் சுவரொட்டிகள் இவை. "மூத்தோருக்கு உதவி செய்! வீட்டுவேலைகளில் பெற்றோருக்கு உதவி செய்! பேருந்து வண்டிகளில் முதியோருக்கு எழுந்து இடம் கொடு!" என்றெல்லாம் சிறுவர் நன்னடத்தை போதிப்பது கம்யூனிச கொள்கைகள் ஆகலாம்! 
எச்சரிக்கை: உங்களது பிள்ளைகளை நல்வழிப் படுத்துவது கூட "கம்யூனிச சர்வாதிகாரம்" ஆகலாம்!

வீட்டுவேலைகளில் பெற்றோருக்கு உதவி செய்!
பேருந்து வண்டிகளில் முதியோருக்கு எழுந்து இடம் கொடு!
வயதில் மூத்தோருக்கு உதவி செய்!


*******

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஐந்து மில்லியன் குழந்தைகள் பசியால் இறக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் சத்துணவு குறைபாடு காரணமாக எடை குறைவான ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 146 மில்லியன் உள்ளன. ஆனால், "கம்யூனிச சர்வாதிகார ஆட்சி நடப்பதாக" மேட்டுக்குடி அறிவுஜீவிகளால் வெறுக்கப்படும் கியூபாவில் மாத்திரம், சத்துணவு குறைபாடு கொண்ட குழந்தைகள் எதுவும் இல்லை. ஒரு சோஷலிச நாட்டில் எந்தக் குழந்தையும் பசியால் இறப்பதில்லை. சமீபத்திய UNICEF அறிக்கையில் இது குறிப்பிடப் பட்டுள்ளது. 

ஐ.நா. வெளியிட்ட Progress for Children, A Report Card on Nutrition என்ற UNICEF அறிக்கையை வாசிப்பதற்கு:
http://www.unicef.org/publications/files/Progress_for_Children_-_No._4.pdf

********

ருமேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில், அதன் தலைநகர் புகாரஸ்ட் பற்றிய ஆவணப்படக் காட்சிகள். மேற்குலகில் பரப்பப் பட்ட பொய்ப் பிரச்சாரத்திற்கு மாறாக, சந்தையில் உணவுப்பொருட்கள் குவிந்திருப்பதைப் பார்க்கலாம். உள்ளூர் மக்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லை. அது மட்டுமல்ல, "பணக்கார" மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களைப் போல, சோஷலிச ருமேனிய மக்களும் தமது ஓய்வுநேரத்தை மகிழ்ச்சியாக களிப்பதைக் காணலாம். 

இது ருமேனிய கம்யூனிச அரசின் பிரச்சார வீடியோ அல்ல. மேற்கத்திய படப்பிடிப்பாளர்களினால் எடுக்கப்பட்டது.
மன்னிக்கவும், கம்யூனிச எதிர்ப்பாளர்களை ஏமாற்றமடைய வைத்தமைக்காக வருந்துகிறேன்.