Saturday, November 08, 2014

கருவிலே அழிக்கப் பட்ட துருக்கியின் பத்து மாதப் புரட்சி


பத்சா (Fatsa), கருங்கடலுக்கு அருகில் உள்ள துருக்கியின் ஒர்டு மாகாணத்தில் ஒரு நகரம். எழுபதுகளில், இருபதாயிரம் பத்சா வாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். உணவுக்கான சாக்லேட் களி செய்ய பயன்படும் மூலப் பொருளான hazel nut உற்பத்தியாகும் அரிதான இடங்களில் அதுவும் ஒன்று. விவசாயிகள் தவிர்ந்த ஏனையோர் மீனவர்கள்.

1965 ஆம் ஆண்டு, பத்சா நகரில், துருக்கி உழைப்பாளர் கட்சி (TIP) உருவாக்கப் பட்டது. உழைப்பாளர் கட்சியானது, மாணவர்கள், தொழிலாளர்கள் மத்தியில், தொழிற்சங்கம், விவாத அரங்கம் போன்றவற்றின் ஊடாக இயங்கத் தொடங்கியது. குறிப்பாக விவசாயிகள் சுரண்டப் படுத்தல், கந்து வட்டிகாரர்களின் கொடுமை, இடைத் தரகர்களின் மோசடி  போன்றவற்றை விவாதப் பொருளாக்கியது.

TIP கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, மஹிர் ஜயான் (Mahir Çayan)  தலைமையில், "மக்கள் விடுதலை இயக்கம் - துருக்கி முன்னணி" (THKP-C) ஸ்தாபிக்கப் பட்டது. துருக்கி, கோடீஸ்வர தொழிலதிபர்களினால் ஆளப்படுகின்றது என்றும், நவ- தாராளவாத பிடியின் கீழ் இருக்கிறது என்பதும் அவர்களது கொள்கையாக இருந்தது. ஆளும் வர்க்கத்தை அடக்க வேண்டுமானால், ஆயுதப் போராட்டம் அவசியம் என்பது அவர்களது பாதை. பத்சா நகரில் அந்த இயக்கத்திற்கு ஆதரவுத் தளம் இருந்தது.

12-5-1971 அன்று, துருக்கியில் ஒரு சதிப்புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ ஆட்சியாளர்கள் புரட்சிகர இடதுசாரி சக்திகளை அடக்க முனைந்தனர். அதனால் THKP-C ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டது. இதே நேரம், இராணுவத்தினர் மூன்று இடதுசாரி மாணவர் தலைவர்களை (Deniz Gezmis, Hüseyin Inan, Yusuf Aslan) கைது செய்து தூக்கில் போட இருந்தனர்.

மாணவர் தலைவர்களின் மரண தண்டனையை தடுக்கும் நோக்கில், THKP-C கெரில்லாக்கள், நேட்டோ வில் வேலை செய்த மூன்று ரேடார் தொழில் நுட்ப நிபுணர்களை கடத்திச் சென்றனர். அவர்கள் கிசில்டேரே(Kizildere) எனும் கிராமத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்தனர். 30-3-1972 அன்று, அந்தக் கிராமத்தை படையினர் சுற்றி வளைத்தனர். இராணுவத்தினருடன் நடந்த மோதலில், ஜயான் உட்பட பத்து போராளிகளும், மூன்று நேட்டோ பயணக்கைதிகளும் கொல்லப் பட்டனர்.

இராணுவ சர்வாதிகார ஆட்சி, கிசில்டேரே தாக்குதல் காரணமாக, பத்சா கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. ஏனெனில், கொல்லப் பட்ட போராளிகளில் பலர் அந்த நகரத்தை சேர்ந்தவர்கள். எழுபதுகளின் மத்தியில், பாராளுமன்ற ஜனநாயகம் மீட்கப் பட்டு, அங்காராவில் சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது இராணுவ அடக்குமுறை ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட, இடதுசாரி ஆர்வலர்கள் பலர் விடுதலை செய்யப் பட்டனர். அவர்களில் ஒருவர், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான "பிக்ரி சென்மெஸ்" (Fikri Sönmez). அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர், பத்சா நகரில் ஒரு தையல்காரராக தொழில் புரிந்து வந்தவர்.

பிக்ரி சென்மெஸ் (Fikri Sönmez)

பிக்ரி சென்மெஸ், ஜோர்ஜிய மொழி பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர். அதனால் இன வேற்றுமைகளை கடந்து மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது. விடுதலையாகி வரும் பொழுது, அவரின் வயது 36 மட்டுமே. அதனால், இரண்டு தலைமுறைகளை சேர்ந்தவர்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்தார். பத்சா உதைபந்தாட்ட கழகத்தின் நிறுவனராக இருந்தார். மேலும் மக்களைக் கவரும் பேச்சு வன்மை கொண்டவர்.  பிக்ரி சென்மெஸ், அடுத்து வரப் போகும் பத்சா நகர புரட்சியில் முக்கிய பாத்திரம் வகிக்க இருந்தார்.  

பிக்ரி சென்மெஸ், THKP-C இயக்கத்தின் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கினார். பத்சா விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அதிக பட்ச விலை நிர்ணயம் செய்தல், அரிதாகக் கிடைத்த பாவனைப் பொருட்களின் பதுக்கலை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தார்.

அந்தக் காலத்தில், துருக்கி கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளினால் பாதிக்கப் பட்டிருந்தது. சீனி, மார்ஜரீன், சலவைத் தூள், சீமென்ட், சிகரட் போன்ற பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. வர்த்தகர்கள் அவற்றை பதுக்கி வைத்திருந்து, அதிக விலைக்கு விற்று வந்தனர்.

இடதுசாரி ஆர்வலர்கள், பதுக்கப் பட்ட களஞ்சிய அறைகளை உடைத்து, அந்தப் பொருட்களை மக்களுக்கு நியாய விலையில் விற்பனை செய்தனர். விற்பனையில் கிடைத்த இலாபத்தை, சம்பந்தப் பட்ட வர்த்தகர்களிடம் கொடுத்தனர். இடதுசாரி இளைஞர்களின் இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, உள்ளூர் மக்கள் மத்தியில் சோஷலிசவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது.

எழுபதுகளின் மத்தியில், நாடு முழுவதும் இடதுசாரி அலை வீசியது. பத்சாவில் மட்டுமல்லாது, வேறு பல இடங்களிலும் பல்வேறு சோஷலிச, கம்யூனிச இயக்கங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. 

1971 ஆம் நடந்த இராணுவ சதிப்புரட்சியின் எதிர்விளைவாக, மக்கள் இடதுசாரி கட்சிகளை ஆதரிக்கத் தொடங்கி இருந்தனர். துருக்கியின் "ஜனநாயக அரசாங்கத்திற்கும்" அது ஒரு பெரும் தலையிடியாக இருந்தது. அன்று உலகம் முழுவதும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலமாகையினால், அதன் தாக்கம் துருக்கியிலும் உணரப் பட்டது. 

இடதுசாரிகளை அடக்குவதற்கு, ஆளும் வர்க்கத்திற்கு இன்னொரு இராணுவ சதிப்புரட்சி தேவைப் படவில்லை. அதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படைகளுக்கும், பாசிஸ இயக்கங்களுக்கும் இடையில் ஓர் உடன்பாடு எட்டப் பட்டது. சாம்பல் ஓநாய்கள், தேசிய செயற்பாட்டுக் கட்சி (MHP) என்பன, அரச இயந்திரத்தின் கைக்கூலிகளாக இயங்க முன் வந்தன. 

இடதுசாரிகளின் கோட்டைகள் எனக் கருதப் படும் இடங்களுக்குள் மோட்டார் சைக்கிள்களில் திரியும் பாசிஸ காடையர்கள், இலக்கின்றி சகட்டுமேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். புரட்சிகர சோஷலிச இயக்கங்களின் உறுப்பினர்களை தேடிச் சென்று தாக்கினார்கள். தெருக்கள், பாடசாலைகள் போன்ற எந்தப் பொது இடத்திலும், இடதுசாரிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. அதனால், இடதுசாரி ஆர்வலர்கள், தற் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆதரவாளர்கள் குறைவான பகுதிகளில், தலைமறைவாக வாழ வேண்டி இருந்தது. அங்கெல்லாம் பாசிஸ இயக்கங்களின் கை ஓங்கியது. 

1977 ஆம் ஆண்டு, பத்சா நகரில் இயங்கிய மக்கள் குழுத் தலைவரும், சென்மெஸ்ஸின் கூட்டாளியுமான கெமல் கரா (Kemel Kara) படுகொலை செய்யப் பட்டார். அந்தக் கொலை மூலம், மக்கள் மனதில் பீதியை உண்டாக்கலாம் என்று பாசிஸ்டுகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், விளைவு அதற்கு மாறாக அமைந்தது. மக்கள் மத்தியில் பாசிஸ எதிர்ப்புணர்வு அதிகரித்தது. அதனால், பத்சாவை சேர்ந்த சாம்பல் ஓநாய்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தமது பாதுகாப்புக் கருதி ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

மேலும் 1977 ஆம் ஆண்டு படுகொலைச் சம்பவம், புதியதொரு புரட்சிகர இயக்கத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. டெவ்ரிம்சி யொல் (Devrimci Yol: புரட்சிகர பாதை) எனும் பெயரிலான இயக்கத்தில், முன்னாள் THKP-C உறுப்பினர்கள் சிலருடன், மக்கள் குழுக்களின் பிரதிநிதிகளும், தொழிற்சங்க வாதிகளும் அங்கம் வகித்தனர். 

டெவ்ரிம்சி யொல் துருக்கி முழுவதுக்குமான இயக்கமாக இயங்கியது. பத்சா நகரில் சென்மெஸ்ஸும், அவரின் தோழர்களும் முக்கிய பங்கு வகித்தனர். அது ஒரு மார்க்சிய இயக்கம் தான். ஆனால், பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருந்து வேறு பட்டிருந்தது. அதாவது, டெவ்ரிம்சி யொல் சோவியத் யூனியனையோ, அல்லது சீனாவையோ பின்பற்றவில்லை. 

துருக்கி பற்றிய டெவ்ரிம்சி யொல்லின் அரசியல் நிலைப்பாடு இது: "துருக்கியில் முதலாளித்துவம் மேலிருந்து திணிக்கப் பட்டது. பிற்காலத்தில் வெளிநாட்டு உதவியுடன் நிலைநாட்டப் பட்டது. அந்தக் காரணத்தினால், துருக்கி முதலாளித்துவம் பலவீனமானதாகவும், நிலப்பிரபுத்துவ பிரச்சினைகளுடன் போராட வேண்டிய நிலையிலும் உள்ளது. ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தியங்கும், தொழிலதிபர்கள், நிலவுடமையாளர்கள், மேட்டுக்குடி வர்க்கத்தினர், துருக்கியில் முதலாளித்துவத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அந்த ஆளும் வர்க்கம், பாசிஸ்டுகளை அடியாட்படையாக வைத்துக் கொண்டுள்ளது. அதனால், பாசிஸ்டுகளை தோற்கடிப்பது சோஷலிச புரட்சிக்கு முன் நிபந்தனையாக உள்ளது."  

முந்திய THKP-C இயக்கத்திற்கும், பிந்திய டெவ்ரிம்சி யொல் இயக்கத்திற்கும் இடையில் ஒரு பிரதானமான கொள்கை வேறுபாடு இருந்தது. முன்னையது ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தது. பிந்தியது மக்கள் விழிப்புக் குழுக்கள் அமைத்து, மக்கள் போராட்டமாக மாற்ற விரும்பியது. முதலில் மக்கள் புரட்சிக் கமிட்டிகள் உருவாக்கி, பின்னர் தேவைப் பட்டால் அவற்றை ஆயுதபாணிகளாக்கலாம் என்றது. 

மக்கள் கமிட்டிகள், எதிர்கால சோஷலிச மாற்று சமூகத்திற்கான வித்துகள் என்று சொல்லப் பட்டது. மக்கள் தமது அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு பயிற்சிக் களமாக மக்கள் கமிட்டிகள் இருக்கும். குறிப்பாக, பத்சா நகரில், மக்கள் கமிட்டிகள் செயற்பட ஆரம்பித்தன. அங்கே பாசிஸ்டுகள் விரட்டப் பட்ட பின்னர், பெருமளவு மக்கள் ஆதரவு கிடைத்தது. 

1979 ஆம் ஆண்டு, பத்சா நகர சபையை நிர்வகித்த, சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மேயர் காலமானார். அதனால் அங்கே இடைத் தேர்தல் வந்தது. டெவ்ரிம்சி யொல் இடைத்தேர்தலில் பங்கெடுப்பதா, அல்லது பகிஷ்கரிப்பதா என்று விவாதம் நடந்தது. அரச அடக்குமுறைக்குள் சுதந்திரமான தேர்தல் நடக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி, கட்சித் தலைமை முடிவு செய்தது. இருப்பினும், பத்சா நகரில் கணிசமான அளவு மக்கள் ஆதரவு இருந்த படியால், டெவ்ரிம்சி யொல் தேர்தலில் போட்டியிட்டது. 

டெவ்ரிம்சி யொல் ஒரு அங்கீகரிக்கப் பட்ட கட்சியாக இருக்கவில்லை. அதனால், சென்மெஸ் ஒரு சுயேச்சை உறுப்பினராக நிறுத்தப் பட்டார். பிற கட்சிகளின் வேட்பாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை விட வித்தியாசமாக, சென்மெஸ் நேரடி ஜனநாயகத்தை கொண்டு வரப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். 

நகர சபை நிர்வாகத்தில் ஊழல், அணைவு அரசியல், போன்ற தீமைகளை இல்லாதொழிப்பதற்கு மக்கள் கமிட்டிகள் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். 14-10-1979 அன்று நடந்த தேர்தலில், சென்மெஸ்  61சதவீத வாக்குகளைப் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.  அவருடன் போட்டியிட்ட சமூக ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு 22 சதவீத ஓட்டுக்கள் விழுந்தன. 

உள்ளூராட்சி சபைக்கான இடைத் தேர்தல் முடிந்தவுடனே, 11 மக்கள் கமிட்டிகள் உருவாக்கப் பட்டன. அவற்றின் பொறுப்பாளர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப் பட்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கமிட்டிக் கூட்டங்கள், வெளிப்படையாக நடத்தப் பட்டன. 

மக்கள் கமிட்டிக் கூட்டங்களில் நடக்கும் விவாதங்கள், நகரின் பல பகுதிகளிலும் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகள் மூலம், மக்கள் அனைவருக்கும் கேட்கும் வசதி செய்யப் பட்டது. மக்களின் பல்வேறு பிரச்சினைகள், தேவைகளுக்காக, தனித் தனி கமிட்டிகள் நியமிக்கப் பட்டன.    

மக்களின் பிரதான பிரச்சினைகளான, பாதைகளை செப்பனிடுவது, கால்வாய் அமைத்தல், குடி நீர் மற்றும் மின்சார விநியோகம், போன்றவற்றை கவனிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில், மக்கள் கமிட்டிகள் பரித்துரைக்கும் திட்டமொன்றை நிறைவேற்றுவதற்கு, "சட்ட பூர்வமான" நகர சபையின் அங்கீகாரம் தேவைப் பட்டது. 

அன்று நடைபெற்ற தேர்தல் மேயர் பதவிக்கானது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் நகரசபை உறுப்பினர்களாக இருந்தனர். சமூக ஜனநாயகக் கட்சி பெருமளவு ஆசனங்களில் அமர்ந்திருந்தது. இருந்த போதிலும், மக்கள் கமிட்டிகள் பரிந்துரைத்த திட்டங்களுக்கு அந்தக் கட்சி உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினார்கள். 

மேயர் சென்மெஸ், மாதத்திற்கு இரண்டு தடவைகள் மக்கள் கமிட்டிக்கு முன்னால் சமூகமளித்தார். நகர சபை நிர்வாகத்தில் நடக்கும் விடயங்கள் தொடர்பாக, கமிட்டியில் கேட்கப் படும் கேள்விகளுக்கு பதில் கூறும் பொறுப்பை ஏற்றிருந்தார். 

நகர சபையின் கீழ் வேலை செய்த அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக ஒரு பொது ஒப்பந்தம் போடப் பட்டது. புரட்சிகர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (DISK) முன்மொழிந்த ஊழியர் சம்பளத் திட்டம், துருக்கி முழுவதற்கும் முன்னுதாரணமாக விளங்கியது. உதாரணத்திற்கு, அரசியல் ஈடுபாடு தொடர்பாக ஓர் அரச ஊழியர் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் பட்டாலும், அவரது சம்பளம் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வழங்கப் படும். அதற்குப் பிறகு, நான்கு வருடங்களுக்கு 25% கிடைத்துக் கொண்டிருக்கும். 

துருக்கியில் முன்னெப்போதும் கேள்விப் பட்டிராத நேரடி ஜனநாயகம், மக்களுக்கு புதுமையாக இருந்தது. உண்மையில், பத்சா நகரில் இரண்டு அதிகார மையங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. வழமையான அரச இயந்திரமான பொலிஸ், நீதிமன்றம் போன்றன அப்படியே இருந்தன. ஆனால், மக்கள் அவற்றின் உதவியை நாடுவது குறைந்து கொண்டே சென்றது. அதற்குப் பதிலாக, மக்கள் கமிட்டிகள் மக்களின் குறை, நிறைகளை கேட்டு நிவர்த்தி செய்தன. 

மக்கள் கமிட்டிகள் உள்ளூர் பொருளாதாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. முன்னர் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டிருந்த நிறுவனங்களை, மீண்டும் அரசுடமையாக்கியது. உதாரணத்திற்கு, குடிநீர், தானிய விநியோகம், பொதுப் போக்குவரத்து, துறைமுக மேற்பார்வை போன்றவற்றை குறிப்பிடலாம். அதனால், நகர சபைக்கு நிறைய வருமானம் கிடைத்தது. 

நீண்ட காலமாக, சட்டவிரோதமாக நடந்து கொண்டிருந்த வர்த்தகம் தடை செய்யப் பட்டது. கந்துவட்டிக் காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டது. பத்சா நகரவாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள் என்பதால், வருடத்திற்கு ஒரு தடவை தான் பணத்தை கண்ணால் காண்பார்கள். அதாவது, அறுவடைக் காலத்தில் விளைச்சலை விற்றால் தான் பணம் கிடைக்கும். அதனால், இடைப்பட்ட காலத்தில் கந்துவட்டிக் காரர்களிடம் கடன் வாங்கி, அநியாய வட்டி கட்டிக் கொண்டிருந்தார்கள். விவசாயிகள் வாங்கிய கடனை மட்டுமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கமிட்டிகள் உத்தரவு பிறப்பித்தன. 

புரட்சியின் இன்னொரு முக்கியமான சாதனையாக, தெருக்கள் அமைத்ததை குறிப்பிடலாம். பத்சா நகரில் பெரும்பாலான தெருக்கள் செப்பனிடப் படாமல் இருந்தன. மழைக் காலத்தில் சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். அதனால், அவற்றை தார் போட்டு நிரப்பும் பணிகள் ஆரம்பமாகின. தெருக்களை புனரமைப்பதற்கு, ஆயிரக் கணக்கான தொண்டர்கள் தாமாகவே முன்வந்து வேலை செய்தனர். 

துருக்கியின் பல பாகங்களில் இருந்தும், புரட்சியாளர்கள் திரண்டு வந்தார்கள். அயலில் இருந்த நகரங்களில் இருந்தும், வாகன, உபகரண உதவி கிடைத்தது. அதனால், தொடங்கப் பட்டு சில வாரங்களிலேயே அனைத்து தெருக்களும் செப்பனிட்டு முடிக்கப் பட்டன. 

1980 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பத்சா நகரில் "மக்கள் பண்டிகை" அறிவிக்கப் பட்டது. நகர மத்தியில் மேடைகள் அமைக்கப் பட்டு, ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டம் நடைபெற்றது. துருக்கி முழுவதிலும் இருந்து பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட வெகுஜன கலாச்சாரத்திற்கு மாற்றாக, இடதுசாரி கலாச்சார விழுமியங்களை வெற்றிகரமாக மேடையேற்றினார்கள். 

நிச்சயமாக, துருக்கி அரசாங்கம் பத்சா புரட்சியை கலக்கத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. தலைநகர் அங்காராவில் இருந்து, வெறும் 500 கிலோ மீட்டர் தூரத்தில் பத்சா இருந்தது. 1978 ம் ஆண்டு. ஜோரும், மாராஸ், ஆகிய இடங்களில், சாம்பல் ஓநாய் பாசிஸ்டுகள், அலாவி சிறுபான்மையின மக்களை படுகொலை செய்திருந்தனர். அந்த இனப்படுகொலை துருக்கியை உலுக்கி இருந்தது.

பிரதமர் டெமிரேல், அந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தி, பாசிஸ்டுகளை தூண்டி விடும் வகையில் உரையாற்றினார்: "ஜோருமை மறந்து விடுங்கள்... பத்சாவை பாருங்கள்... இப்போதே நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால், எதிர்காலத்தில் நூறு பத்சாக்கள் உருவாகும்."

அரசு நிறுவனங்கள், பத்சா நகர சபை நிர்வாகத்தின் மேல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தன. பெட்ரோல் போன்ற பொருட்களின் விநியோகம் தடுக்கப் பட்டது. ஆடிட்டர் பரிசோதகர்களை அனுப்பி, நகர சபை கணக்குகளை ஆராய்ந்தது.

இதற்கிடையே, முதலாளிய ஊடகங்கள் அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டன. பத்சாவில் "ஒரு குட்டி மொஸ்கோ" உருவாகி விட்டது என்று பதறின. அது ஒரு தனியான குடியரசாக பிரிந்து சென்று விட்டதாகவும், பாஸ்போர்ட் இல்லாமல் யாரும் அங்கே செல்ல முடியாதென்றும், கட்டுக்கதைகளை பரப்பின. 

நகர சபை கட்டிடம், காவல்துறையினரால் அடிக்கடி காரணமின்றி சோதனையிடப் பட்டது. அங்கு வேலை செய்த ஊழியர்கள் துன்புறுத்தப் பட்டனர். பத்சா நகரவாசிகள், அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கு செல்லும் போதெல்லாம் தாக்கப் பட்டனர். அவர்கள் வைத்திருந்த பணம், பொருட்கள் வழிப்பறி செய்யப் பட்டன. பாசிஸ்டுகள் அவர்களைக் கண்டால் குண்டாந்தடிகளால் தாக்கினார்கள். 

பத்சா நகரம் அமைந்துள்ள, ஒர்டு மாகாணத்தின் ஆளுநராக, பாசிஸ MHP கட்சியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப் பட்டார். அவர் "பத்சாவை மீட்டெடுக்கப் போவதாக" சூளுரைத்தார். பாதுகாப்புப் படைகளையும், பாசிஸ குண்டர்களையும், பத்சாவை நோக்கி நகர்த்தினார். 

11-7-1980 அன்று, பத்சா மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியது. அயல் நாட்டின் மீது படையெடுப்பது போன்று, பாதுகாப்புப் படைகள் கவச வாகனங்கள், தாங்கிகள் சகிதம் முன்னேறிச் சென்றன. கடலில் இரண்டு போர்க் கப்பல்கள் ரோந்து சுற்றின. இவை யாவும் அங்கே ஒரு யுத்தம் நடப்பது போன்ற பிரமையை உண்டாக்கின. 

இராணுவ நடவடிக்கையின் போது, சென்மெஸ் உட்பட, 600 பேரளவில் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப் பட்டனர். தப்பி ஓடக் கூடியவர்கள், காடுகளுக்குள்ளும், மலைகளிலும் மறைந்து கொண்டார்கள். பெரும் படையை எதிர்த்து நிற்பது தற்கொலைக்கொப்பானது என்பதால், யாரும் ஆயுதமேந்திப் போராடவில்லை. அவ்வாறு போராடி இருந்தாலும், ஆயுத வன்முறையை துருக்கி அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நினைத்தனர். 

கைது செய்யப் பட்டவர்கள், முகமூடி அணிந்த தலையாட்டிகளின் முன்னால் நிறுத்தப் பட்டனர். முன்னர் பத்சாவில் வாழ்ந்த, இடதுசாரிகளினால் விரட்டப்பட்ட பாசிஸ இளைஞர்களே, படையினருடன் கூட வந்து காட்டிக் கொடுத்தனர். இராணுவ நடவடிக்கையின் பின்னர், பாசிஸ்டுகள் பத்சா நகரில் சுதந்திரமாக தங்க முடிந்தது. பத்சா இராணுவ நடவடிக்கையானது, துருக்கியில் வரப் போகும் இராணுவ ஆட்சிக்கு ஒத்திகையாக அமைந்திருந்தது. 12-9-1980 அன்று, துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி நடந்தது. 

சென்மெஸ்ஸுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப் பட்டது. அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்றுவதற்கு முயற்சித்தமை ஒரு குற்றமாக தீர்ப்புக் கூரப் பட்டது. சிறையில் அடைக்கப் பட்டிருந்த சென்மெஸ், தனது 47 வது வயதில், 4-5-1985 அன்று மாரடைப்பினால் காலமானார். 

பத்சா புரட்சி பத்து மாதங்கள் நீடித்தது. அதற்கு காரணமான புரட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். மார்க்சிஸ்டுகள் ஆனால் லெனினிஸ்டுகள் அல்லர். இடதுசாரி சோஷலிஸ்டுகள் என்று கூறலாம். அவர்களால் பூரணமான சோஷலிச சமுதாயத்தை உருவாக்க முடியவில்லை. அரசு இயந்திரத்தின் மேல் கை வைக்கவில்லை. அரசு நிறுவனங்கள் வழமை போல இயங்கிக் கொண்டிருந்தன. தனியுடைமை, சொத்துரிமை ஆகியவற்றில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. மேலும் சில கலாச்சார மரபுகள், இடதுசாரி ஒழுக்கக் கோட்பாட்டின் பெயரில் நீடித்தன. 

பத்து மாத பத்சா புரட்சியானது, ஒரு ஜனநாயக மறுமலர்ச்சியை உண்டாக்கி விட்டிருந்தது. அடக்குமுறை இல்லாதிருந்தால், அது இன்னும் சிறப்பாக வளர்ந்திருக்கும். ஆயினும், கோட்பாடுகளில் காலம் கழிக்காமல், மக்கள் கமிட்டிகள் மூலம் மாற்று உலகை சிருஷ்டிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தது. மக்கள் சுதந்திரமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தனர். 

(நன்றி: Doorbraak, oktober 2012, Mehmet Kirmaci எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.)

Thursday, November 06, 2014

மொன்ட்ராகொன் : ஸ்பெயினில் ஒரு சோஷலிச மாற்றுப் பொருளாதார அதிசயம்


கம்யூனிச உற்பத்தி முறையில் அமைந்த சமுதாயம், கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரிய, தனித்துவமான இலட்சியம் அல்ல. 19 ம் நூற்றாண்டில், தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட முதலாளித்துவத்தின் தீமைகள், பலரை மாற்று வழி குறித்து சிந்திக்கத் தூண்டியது. 

 பல ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவ மத நம்பிக்கையையும், தனியுடைமை உரிமையையும் கைவிட விரும்பாத சோஷலிஸ்ட் சிந்தனையாளர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த கிறிஸ்தவ - சோஷலிஸ்டுகள், கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் முதலாளித்துவத்தின் தீமைகளை வெறுத்தாலும், தனியுடைமையை ஆதரித்தார்கள். அதே நேரம், தொழிலாளர்கள், நுகர்வோருக்கு நன்மை பயக்கும் வகையில், முதலாளிகள் அற்ற பொருள் உற்பத்தியை தெரிவு செய்தனர். அதுவே கூட்டுறவு இயக்கத்தின் தோற்றம். 

ஸ்பெயினில், பாஸ்க் மொழி பேசும் மக்கள் வாழும் மாகாணத்தில், மொன்ட்ராகொன் (Mondragon) எனும் இடத்தில், ஒரு கத்தோலிக்க பாதிரியார் உள்ளூர் மக்களின் உதவியுடன் கூட்டுறவு தொழிற்சாலைகளை அமைத்தார். அவற்றின் தொழிலாளர்கள் தான், நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தனர். மொன்ட்ராகொன் கூட்டுறவு தொழிற்சாலைகள் இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

ஒரு தொழிற்சாலையாக ஆரம்பித்த மொன்ட்ராகொன் கூட்டுறவு இயக்கம், இன்று பல தொழிற்சாலைகளை கட்டி, நிர்வகித்து வருகின்றது. அவற்றில் முதலாளிகள் யாரும் கிடையாது. தொழிலாளர்களே நிர்வாகிகளாகவும் உள்ளனர். இலாபத்தை தமக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். கூட்டுறவு இயக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்ததுடன் நில்லாது, தொழிலாளர்களினதும் அவர்களது குடும்பத்தினரினதும் நலன்களையும் கவனித்து வருகின்றது. 

 மொன்றாகன் கூட்டுறவு இயக்கம் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இந்த ஆவணப் படத்தை பார்க்கவும்:

 

Monday, November 03, 2014

கார்ப்பரேட் ஆதரவு அரசியல் பேசும் கத்தி - சினிமா விமர்சனம்


ஏற்கனவே, "கத்தி ஒரு கம்யூனிச படம்" என்று மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் பயமுறுத்தி இருந்த படியால், "கம்யூனிச தடுப்பு மருந்து" போட்டுக் கொண்டு கத்தி படத்தை பார்த்து முடித்தேன். தொடக்கம் முதல் முடிவு வரை, அந்தப் படத்தில் மருந்துக்குக் கூட கம்யூனிச வாசனை வரவில்லை. ஒரு காட்சியில், கதாநாயகன் "கம்யூனிசம்" என்ற தலைப்பைக் கொண்ட புத்தகம் வைத்திருப்பான். "கம்யூனிசம் என்றால் என்ன அண்ணா?" என்ற கேள்விக்கு, "நம்ம பசி தீர்ந்ததற்கு அப்புறம் சாப்பிடுகிற இட்லி இன்னொருவருடையது...!" என்று பதில் கூறுவான். அந்த "ஒரு வரி விளக்கம்" மிகவும் சிறுபிள்ளைத் தனமாக உள்ளது. இது கம்யூனிசம் பற்றிய இயக்குனர் முருகதாசின் அறிவுக்கெட்டிய புரிதல் என்று நினைக்கிறேன்.

கொக்கோ கோலா, பல்தேசியக் கம்பனிகளை எதிர்ப்பவர்கள் "கம்யூனிஸ்டுகளாக" இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வது மத்தியதர வர்க்கத்தின் வெகுளித்தனம். அதைத் தான் முருகதாசும் கத்தி படத்தில் காட்சிப் படுத்தி உள்ளார். வசூலில் சாதனை படைக்கும் ஒரு வெற்றிப் படத்தை தர வேண்டும் என்பதற்காக, முருகதாஸ் வித்தியாசமான கதை ஒன்றை தெரிவு செய்துள்ளார். மொத்தத்தில், கத்தி இன்னொரு மசாலா படம் தான். ஆனால், பொதுவாக தமிழ் சினிமாக்கள் தொடாத கதையை தெரிவு செய்திருக்கிறார். தமிழில் இதுவே முதலாவது "கார்ப்பரேட் எதிர்ப்புப் படம்" என்று சொல்ல முடியாது. சூரியா நடித்த மாற்றான் திரைப்படமும், கார்ப்பரேட் கம்பனிகளை வில்லத்தனமாக சித்தரித்த திரைப் படம் தான்.

A. R. முருகதாஸ், சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து, திரைக்கதை எழுதி இருக்கிறார். கேரளாவில் கொக்கோ கோலா கம்பனிக்கு எதிரான பிளாச்சி மாடா மக்களின் போராட்டம், முழு இந்தியாவிலும் மட்டுமல்ல, உலகளவில் பரபரப்பாக பேசப் பட்ட விடயம் ஆகும். ஏற்கனவே ஊடகங்களின் கவனத்தை பெற்றிருந்த மக்கள் போராட்டத்தை, தமிழ் சினிமாவின் வழமையான பாணியான தனி நபர் சாகசங்கள் மூலம் திரிபு படுத்தும் வேலையை தான் முருகதாஸ் செய்திருக்கிறார். இதற்காக, கார்ப்பரேட் கம்பனிகள் அவர் மீது கோபப் படப் போவதில்லை. மாறாக தட்டிக் கொடுத்து பாராட்டி இருப்பார்கள்.

மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் நினைப்பது போல, இந்தக் காலத்தில் கார்பரேட் கம்பனிகளின் அராஜகங்களுக்கு எதிராக பேசுவது கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட சிறு முதலாளிகளும் தான். அது மட்டுமல்லாது, ஜனநாயகத்தை பேண விரும்பும் ஊடகங்கள், சில அரசு சாரா நிறுவனங்கள், இதை விட மிகவும் ஆணித்தரமாக கார்ப்பரேட் எதிர்ப்புக்குரல்களை எழுப்பி வருகின்றன. மேற்கத்திய நாடுகளில், அவற்றின் மூலமாக சாதாரண பொது மக்களுக்கும் கார்ப்பரேட் அராஜகங்கள் பற்றிய தகவல்கள் போய்ச் சேர்ந்துள்ளன.

மேற்கத்திய நாடுகளில், குறைந்தது எழுபது சதவீத பத்திரிகைகள், சஞ்சிகைகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் நடக்கின்றன. அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGO) மேலைத்தேய அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் நிதி வழங்குகின்றன. இது ஏற்கனவே பலருக்குத் தெரிந்திருக்கும். அப்படி இருந்தும், எவ்வாறு அவர்களால் கார்பரேட் எதிர்ப்பு தகவல்களை தெரிவிக்க முடிகின்றது? ஏனென்றால், முதலாளித்துவம் என்பது அதற்கே உரிய சுதந்திரத் தன்மை கொண்டது. அதாவது, தன்னியல்பாக வளரும் பொருளாதார அமைப்பு முறை ஆகும். அதனால் எல்லாவற்றையும் மூடி மறைக்க முடியாது. மேலும், மேற்கத்திய நாட்டு மக்களின் பொது அறிவு முன்னரை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரண அடித்தட்டு மக்களும், பொருளாதாரப் பிரச்சனைகளை அலசி ஆராயத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அடக்குமுறை கொண்டு, நாலாபுறமும் மக்களை அமுக்கினால், ஏதோ ஒரு பக்கத்தால் உடைத்துக் கொண்டு வெளியேறப் பார்ப்பார்கள். அதைத் தான் புரட்சி என்று அழைக்கிறோம். அப்படியான புரட்சிகர சூழ்நிலை கம்யூனிஸ்டுகளுக்கு உகந்ததாக மாறி விடும். அதைத் தடுக்க வேண்டுமானால், மூச்சு விடுவதற்கு ஜன்னலை திறந்து விடுவது அவசியம். அதனால் தான், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இந்த மாற்றங்கள் ஏற்பட்டன.

கார்ப்பரேட்களை எதிர்க்கும் இடதுசாரிகளுக்கும், சுதந்திரத்தை அமைத்துக் கொடுக்கிறார்கள். அரசுகள் அவர்களின் கருத்துக்களை அடக்குவதில்லை. கார்ல் மார்க்ஸ் கூறியது போன்று, மக்களை ஒடுக்குபவன் நிம்மதியாக வாழ முடியாது. தன்னால் சுரண்டப் படுபவர்கள், ஒரு நாளைக்கு தன்னைக் கொல்லவும் வருவார்கள் என்று ஒவ்வொரு முதலாளியும் அஞ்சிக் கொண்டிருக்கிறான். அதைத் தடுப்பதற்கான ஒரே வழி, குறைந்த பட்சம் தகவல் சுதந்திரத்திற்கு வழி திறந்து விடுவது தான். அது தான், மேற்குலகில் போற்றப் பட்டுக் கொண்டிருக்கும் கருத்துச் சுதந்திரம் உருவான பின்னணிக் கதை.

கார்பரேட் பணத்தில் கார்பரேட் எதிர்ப்பு கருத்துக் கூறுபவர்கள், மக்களின் கோபாவேசத்தை தணிப்பதற்கும் உதவுவார்கள். அது எப்படி சாத்தியமாகும்? ரொம்ப இலகு. "மக்களே வன்முறையில் இறங்காதீர்கள். அது "பயங்கரவாதமாக" கருதப்படும். கம்யூனிஸ்டுகளை பின்பற்றாதீர்கள். ஏனென்றால், அவர்கள் "கொடுங்கோலர்கள்", ஏற்கனவே "பல இலட்சம் பேரை கொன்று குவித்தவர்கள். நாங்கள் உங்களுக்கு வழி காட்டுகிறோம்... அஹிம்சா வழியில் போராடுங்கள். ஊடகங்களின் கவனத்தை கவரும் நடவடிக்கை எடுங்கள்..."

முன்பெல்லாம் போர்க் குணாம்சம் கொண்ட மக்களிடம், பாராளுமன்ற தேர்தல் முறையில் நம்பிக்கை வைக்குமாறு கூறி வந்தார்கள். "தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை பிடிக்கவில்லை என்றால், வருகிற தேர்தல்களில் எதிர்க் கட்சிக்கு ஓட்டுப் போட்டு வெல்ல வையுங்கள்." என்று அறிவுரை கூறினார்கள். தற்போது பெரும்பாலான மக்கள் பாராளுமன்ற தேர்தல்களில் நம்பிக்கை இழந்து வருகின்றனர். என்ன செய்வது? தந்திரோபாயத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது தான். ஆடுகிற மாட்டை ஆடித் தான் கறக்க வேண்டும். கார்பரேட் நிதியில் இயங்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இடதுசாரி முகமூடி போட்டு மக்களிடம் அனுப்ப வேண்டும். அவை கார்பரேட் எதிர்ப்பு அரசியல் பேசினாலும் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை. சர்வதேச மூலதனத்தை யாரும் அந்தளவு இலகுவாக அசைத்து விட முடியாது.

கத்தி திரைப்படத்தின் பின்னால் உள்ள அரசியலும் அது தான். படத்தை மிகக் கவனமாகப் பாருங்கள். பிரச்சினைக்கு தீர்வாக கதாநாயகன் என்ன திட்டம் வைத்திருக்கிறான்? சென்னை நகரத்திற்கு தண்ணீர் செல்லும் குழாய்ப் பாதையை தடுக்கிறார்கள். அது ஒரு அஹிம்சைப் போராட்டம். ஊடகங்களின் கவனத்தை தங்கள் மேல் குவிக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், அது மாதிரியான போராட்டங்களைத் தான் கிறீன் பீஸ் (Green Peace) அமைப்பு கடந்த பல தசாப்தங்களாக செய்து வருகின்றது. அவர்களின் எதிரிகளும் கார்பரேட் நிறுவனங்கள் தான். அவர்களின் அறிக்கைகளை படித்தால், கத்தி திரைப்படம் கூறுவதை விட, பல மடங்கு அதிகமான கார்பரேட் இரகசியங்கள் தெரிய வரும். ஒரு தடவை, "உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குபவர்கள் யார்?" என்று ஷெல் நிறுவன அதிபரிடம் கேட்டார்கள். "எங்கள் நிறுவனத்தைப் பற்றி எல்லா விடயங்களையும் தெரிந்து வைத்திருப்பவர்கள்." என்று அதற்குப் பதில் சொன்னார்.

ஆனால்... ஆனால்... கிறீன் பீஸ் இயக்கத்தைக் கண்டு, நமது தமிழ் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் யாரும் "ஐயோ கம்யூனிஸ்டுகள்" என்று விழுந்தடித்து ஓடவில்லையே? அது ஏனுங்கோ? மேலை நாட்டவர்கள் என்பதால், உங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் வரவில்லையோ? கிறீன் பீஸ் இயக்க தொண்டர்களில், குறைந்தது அரைவாசிப் பேராவது இடதுசாரி சூழலியவாதிகள். எனக்குத் தெரிந்த வரையில், தீவிர இடதுசாரிகளான அனார்க்கிஸ்டுகள் பலர் அதனை ஆதரிக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்கு சவாலாக விளங்கும், கிறீன் பீஸ் போன்ற அமைப்புகளே தைரியமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்கிறோம். கத்தி என்ன பெரிய அரசியல் பேசிக் கிழித்து விடப் போகிறது? கத்தி திரைப் படத்தை விட, அமெரிக்காவில் தயாரிக்கப் பட்ட "சிரியானா"(Syriana) மிகவும் அழுத்தமாக கார்ப்பரேட் எதிர்ப்பு அரசியல் கருத்துக்களை பதிவு செய்துள்ளது. மன்னிக்கவும், தயவுசெய்து அதையெல்லாம் "கம்யூனிச படம்" என்று சொல்லி எங்கள் மண்டைகளை காய வைக்காதீர்கள்.

அது சரி, கொக்கோ கோலா, மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்ப்பவர்கள், எல்லோரும் கம்யூனிஸ்டுகள் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? நீங்களாகவே அப்படி நினைத்துக் கொண்டீர்களோ? பல் தேசியக் கம்பனிகளின் வரவால் அழிந்து போன உள்ளூர் கம்பனிகள் எத்தனை? எத்தனை சிறு வணிகர்கள் நஷ்டப் பட்டு வியாபாரத்தை கை விட்டார்கள்? சிறிய அளவில் வியாபாரம் செய்தாலே, தன்னை பெரிய முதலாளியாக நினைத்துக் கொள்ளும் பலர் உண்டு. அவர்களும் தான் பல்தேசியக் கம்பனிகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். விவசாயிகள் மாதிரி அந்த "முதலாளிகளும்" தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கத்தி திரைப்படம் அந்த உண்மையை சொல்லவில்லை.

கத்தி திரைப்படத்தை, லைக்கா கம்பனி தயாரித்தது. அது கோடிக் கணக்கான இலாபம் ஈட்டும் ஒரு "கார்பரேட் நிறுவனம்" என்று சிலர் வாதாடலாம். உண்மையில், லைக்கா கம்பனி, பல்தேசியக் கம்பனிகளுக்கு கிட்டவும் நெருங்க முடியாது. ஒரு சராசரி பல்தேசியக் கம்பனியின் வருமானம், இந்தியாவின் மொத்த பொருளாதார உற்பத்தியை விட அதிகமாக இருக்கும். அவர்களால் இந்திய அரசையே தாங்கள் நினைக்கும் படியாக சட்டம் இயற்ற வைக்க முடியும். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. உலகவங்கி, IMF, அமெரிக்க அரசு என்பன, கார்பரேட் நிறுவனங்கள் சொல்லிக் கொடுப்பதை செய்யும் சேவையாளர்கள் தான்.

இயக்குனர் முருகதாசுக்கும், கத்தி படத்தை தயாரித்தவர்களுக்கும், கம்யூனிசம் பற்றித் தெரியாது என்பது ஒரு புறமிருக்கட்டும். அவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றியும் சரியாகத் தெரியவில்லை. அல்லது வேண்டுமென்றே பார்வையாளர்களுக்கு தவறான தகவல்களை கொடுக்கிறார்கள். கத்தி படத்தில் காட்டுவது மாதிரி, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருப்பதில்லை. அந்தக் காட்சி மிகவும் அபத்தமானது.

உலக யதார்த்தம், சினிமாவுக்கு முற்றிலும் முரணானது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் போட்டி, பொறாமை அதிகம். ஒன்றையொன்று காட்டிக் கொடுப்பது, போட்டுக் கொடுப்பது, எதிராளிகளை போட்டுத் தள்ளுவது.... இப்படி நிறைய தில்லுமுல்லுகள் நடக்கின்றன. சுருக்கமாக சொன்னால், சட்டவிரோத மாபியாக் குழுக்களுக்கு இடையில் நடக்கும் மோதல்கள், கார்ப்பரேட் உலகில் இரகசியமாக நடக்கின்றன. சின்ன மீன்களை பெரிய மீன்கள் பிடித்து சாப்பிடும். ஒன்றின் அழிவில் மற்றொன்று வாழும். வலியது பிழைக்கும், மற்றவை அழிந்து போகும். அது தான் முதலாளித்துவத்தின் இயற்கை நியதி.

"தாயும், பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு." அந்தப் பழமொழி, வர்த்தக உலகின் நிதர்சனம். அண்மையில், பிரிட்டிஷ் உளவுத்துறையின் தொழில்நுட்பப் பிரிவு, பெல்ஜியத்தில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனத்தை உளவு பார்த்தமை கண்டுபிடிக்கப் பட்டது. தொழில் நுட்ப இரகசியங்களை திருடுவது என்று சொல்வார்கள். இன்று இணையம் மூலமாக இலகுவாக நடக்கும் சமாச்சாரமாகி விட்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

உலகில் மிக அதிகமான பல்தேசியக் கம்பனிகளின் தலைமை அலுவலகங்கள், அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் உள்ளன. அதன் அர்த்தம், மேற்கத்திய நாடுகள் "அண்ணன், தம்பி மாதிரி" ஒற்றுமையாக, நம்பிக்கைக்கு உரியவர்களாக நடக்கிறார்கள் என்பதல்ல. திரை மறைவில் எத்தனையோ கழுத்தறுப்புகள், குழி பறிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும், சொந்த இனத்தவரின் கார்ப்பரேட் நிறுவனங்களை, வெளிநாட்டு கார்ப்பரேட்கள் விழுங்கி ஏப்பம் விடுவதைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை விட, 2008 ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியில் காணாமல் போன கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தனை?

நல்ல வேளையாக, உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் அரசு என்ற நிறுவனம் பெயருக்காவது இயங்கிக் கொண்டிருக்கிறது. அது சும்மா தேசியம், தேசியக் கொடி, தேசிய இராணுவம், தேசிய விலங்கு என்றெல்லாம் பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. பல்தேசியக் கம்பனிகள் அவற்றை உள்ளூர வெறுத்தாலும், சட்டத்திற்கு அடி பணிந்து நடப்பது போன்று காட்டிக் கொள்கின்றன. இல்லாவிட்டால், ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென தனியாக இராணுவம் வைத்துக் கொண்டு ஆட்சி செய்யத் தொடங்கி விடும். ஜூராசிக் பார்க் மாதிரி, ஒன்றையொன்று பிடித்து விழுங்கி விடும். பூரண சுதந்திரம் கொண்ட சந்தை அமைப்பும், சுதந்திரமான முதலாளித்துவமும் உலகில் இருக்க முடியாது.


இது தொடர்பான முன்னைய பதிவு:
கத்தி சினிமாவின் "இட்லி கம்யூனிசம்!" - ஒரு கார்பரேட் கனவுப் புரட்சி!!

Sunday, November 02, 2014

பூர்கினா பாசோ: மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்தியம் நடு நடுங்கும்!

"மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்தியம் நடு நடுங்கும்." - தோமஸ் சங்கரா


பூர்கினா பாசோவில் மக்கள் எழுச்சி. ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு சென்று பாராளுமன்றத்தை தீக்கிரையாக்கினார்கள். ஆப்பிரிக்க நாடான பூர்கினா பாசோவில், இப்போது நடந்து கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி பற்றி, பெரும்பாலான ஊடகங்கள் எதுவும் கூறாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றன. ஏனென்றால், அங்கே கடந்த 27 வருடங்களுகளாக அதிகாரத்தில் இருந்தவர், ஒரு மேற்குலக நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்.

முன்னாள் கம்யூனிச ஜனாதிபதி தோமஸ் சங்கராவை படுகொலை செய்து விட்டு, இராணுவ சதிப்புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர் தான், இந்நாள் சர்வாதிகாரி Blaise Compaore. பிரான்ஸ் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன், கடந்த முப்பது வருடங்களாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார்.

பிளேஸ் கொம்பாரே, தனது பதவிக் காலத்தை நீடிக்க விரும்பிய பொழுது, பொறுத்தது போதும் என்ற மனநிலையில் இருந்த மக்கள் கிளர்ச்சி செய்தனர். இலட்சக் கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். பூர்கினா பாசொவை ஒரு சோஷலிச நாடாக ஆட்சி செய்த தோமஸ் சங்கராவின் உருவப் படங்கள், பேரணிகளில் பரவலாகக் காணப் பட்டன. புரட்சியாளர்களை மக்கள் மறப்பதில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் தலைவன் தோமஸ் சங்கராவை படுகொலை செய்தவர்களுக்கு, இன்று மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர்.

தலைநகரில் கூடிய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக, ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டது. அதனால் கலைந்து ஓடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்றத்திற்குள் புகுந்தனர். இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி, பிளேஸ் கொம்பாரேயின் பதவிக் காலத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இருந்தனர். அதனால் சீற்றம் கொண்ட மக்கள் பாராளுமன்றத்தை முற்றாக எரித்து நாசமாக்கியுள்ளனர். அந்தச் சம்மபவம் நடந்த நேரம், அங்கே எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சமூகமளித்திருக்கவில்லை.

அதே நேரம், பிற அரசு அலுவலகங்களும் தாக்கப் பட்டுள்ளன. தொலைக்காட்சி நிலையம் கூட மக்களால் ஆக்கிரமிக்கப் பட்டது. தற்போதைய ஆட்சியாளர் சர்வாதிகாரி பிளேஸ் கொம்பாரேயின் சிலைகள் உடைத்து நொறுக்கப் பட்டுள்ளன.அதே நேரம், அதற்கு அருகில் இருந்த கடாபியின் சிலையை சேதப் படுத்தாமல் விட்டு வைத்தார்கள். பூர்கினா பாசோ மக்கள், தமது ஏகாதிபத்திய அடிவருடியான கொம்பாரேயை எந்தளவு தூரம் வெறுத்தார்கள் என்பதும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான கடாபியை எந்தளவு விரும்பினார்கள் என்பதும் இதிலிருந்து புலனாகும்.

பிளேஸ் கொம்பாரே நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அதற்குப் பின்னர், அவரது பதவிக் கால நீடிப்பு செல்லுபடியாகாது என்று, "பாராளுமன்றம்" (அப்படி ஒன்று இருக்கிறதா?) அறிவித்தமை தான் உச்சகட்ட நகைச்சுவை. தற்போது இராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. தலைநகர் உகாடுகுவில் உள்ள அமெரிக்க, பிரெஞ்சு தூதுவர்கள் எதிர்கால ஆட்சியாளர் தமக்கேற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்றே எத்ரிபார்ப்பார்கள். அதனால், இராணுவ ஆட்சி நடந்தாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால், பூர்கினா பாசோ மக்கள் அதற்கு அடிபணிந்து போகும் நிலையில் இல்லை. தற்போதைய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் அறிவிக்கப் பட்டு வருகின்றன.

"நீங்கள் தனி மனிதர்களான புரட்சியாளர்களை கொலை செய்யலாம். ஆனால் உங்களால் சித்தாந்தங்களை கொல்ல முடியாது." - தோமஸ் சங்கரா ஏகாதிபத்திய கைக்கூலிகளினால் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிய புரட்சியாளர் தோமஸ் சங்கராவின் ஆவி, 27 வருடங்களுக்குப் பின்னர் திரும்பி வந்துள்ளது. பூர்கினா பாசோவில் தோமஸ் சங்கரா விதைத்த புரட்சி விதைகள், இன்று மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது. தலைநகர் உகாடுகுவில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் கைகளில் காணப் பட்ட ஒரு வாசகம்: "தோமஸ் சங்கரா, உனது புதல்வர்களைப் பார்! நாங்கள் உனது போராட்டத்தை முன்னெடுக்கிறோம்."

மார்க்சியப் புரட்சியாளர் தோமஸ் சங்கராவின் ஏகாதிபத்திய எதிர்ப்புவாதமும், அவரது ஆட்சியின் கீழான நான்காண்டு சோஷலிச பொற்காலம் பற்றிய ஏக்கமும், பூர்கினா பாசோ இளந் தலைமுறையினரை போராடத் தூண்டிய காரணங்களாக இருந்துள்ளன. "இருபதாம் நூற்றாண்டில் கம்யூனிசம் செத்து விட்டது. இன்றைய இளந்தலைமுறையினர் முதலாளித்துவத்தை ஆராதிக்கிறார்கள்..." எனும் அறியாமை இருளில் இருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை: 
Spirit of ‘Africa’s Che Guevara’ found in Burkina Faso uprising  http://america.aljazeera.com/articles/2014/10/31/burkina-faso-explainer.html

பூர்கினா பாசோவில், புரட்சியை பாதுகாக்கும் மக்கள் கமிட்டிகள் அமைப்பது தொடர்பாக சங்கரிஸ்ட் கட்சி ஆராய்ந்து வருகின்றது. ஆபிரிக்காவின் 21 ம் நூற்றாண்டின் இளம் மார்க்சிஸ்டுகள், மறைந்த கம்யூனிச தலைவர் தோமஸ் சங்கராவை பின்பற்றி, தங்களை "சங்கிரிஸ்டுகள்" என்று அழைத்துக் கொள்கின்றனர். தென் ஆப்பிரிக்காவின் "பொருளாதார விடுதலைப் போராளிகள்" (EFF) கட்சியினரும் தங்களை சங்கிரிஸ்டுகள் என்றே அழைத்துக் கொள்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில், தற்போது இது ஒரு புதிய அரசியல் கலாச்சாரமாக பரவி வருகிறது. உதாரணத்திற்கு, கொங்கோவில் பட்ரிஸ் லுமும்பாவை பின்பற்றுவோர் தம்மை, "லுமும்பிஸ்ட்" என்று அழைத்துக் கொள்கின்றனர். பெயர் எப்படி இருந்தாலும், சித்தாந்தம் எதுவென்பது தான் முக்கியம். தென் ஆப்பிரிக்காவில் EFF கட்சியினர், ஒவ்வொரு தடவையும் தோமஸ் சங்கரா மீது உறுதிமொழி எடுக்கின்றனர். அதே நேரம், உறுப்பினர்களுக்கு மார்க்சிய லெனினிச வகுப்புகளை நடத்துகிறார்கள். 

பூர்கினா பாசோ நாட்டை சேர்ந்த சங்கிரிஸ்ட்கள் பற்றி எமக்கு தெரிந்தவை மிகச் சொற்பமே. சில நேரம், பிளேஸ் கொம்பாரேயின் 27 வருட கால சர்வாதிகார ஆட்சி காரணமாக அரசியல் பேசாமல் ஒதுங்கி இருந்திருக்கலாம். இனி வருங்காலங்களில் அவர்களது அரசியல் நடவடிக்கை என்ன என்று தெரிந்து விடும்.

"அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே!"


இது தொடர்பான முன்னைய பதிவு: 

Saturday, November 01, 2014

கத்தி சினிமாவின் "இட்லி கம்யூனிசம்!" - ஒரு கார்பரேட் கனவுப் புரட்சி!!


"கத்தி கம்யூனிசப் படமா?" என்று, மீண்டும் வர்க்க வெறுப்புடன் சிலர் பேசி வருகின்றனர். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அநீதியை தட்டிக் கேட்கும் கதாநாயகனின் தனி நபர் சாகசப் படங்கள் எல்லாம் "கம்யூனிசப்" படங்கள் தான். 

சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிரான, உழைக்கும் மக்களின் கோபாவேச உணர்வுகளை கட்டுப்படுத்துவதே, இது போன்ற தனி நபர் சாகச திரைப் படங்களை தயாரிப்பதன் நோக்கம். சினிமாவில் தமிழீழம் கிடைக்கும் என்று நம்பும் காலத்தில் இது ஒன்றும் புதினம் அல்ல.

கத்தி முருகதாசின் முன்னைய படமான ஏழாம் அறிவு, ஒரு "தமிழ் தேசியப் படம்". டி.எஸ்.சேனநாயக்க காலம் தொடங்கி மகிந்த வரைக்கும், இலங்கைத் தமிழ் தேசியவாதிகள் கூடிக் குலாவி அமைச்சர்களாக இருந்து இருக்கிறார்கள். ஜி.ஜி. பொன்னம்பலம் தொடக்கம் டக்லஸ், கருணா வரையில் பல தமிழ் தேசியவாதிகள் அரசுடன் கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை. அது ஏனுங்கோ? என்ன இருந்தாலும், தமிழ் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சி, எளிதில் விட்டுப் போகுமா?

கத்தி திரைப்படம் மூலம் பிரபலமான "இட்லி கம்யூனிசம்", எனது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகின்றது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, எனது வீட்டிருக்கு அருகில் இருந்த அகதி முகாம் ஒன்றுக்கு அடிக்கடி சென்று வந்தேன். அந்த முகாமில் பல ஈழத் தமிழ் அகதிகள் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அப்போது எனக்கு இந்தியாவில் இருந்து அஞ்சலில் வந்து கொண்டிருந்த, "புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம்" போன்ற சஞ்சிகைகளை கொண்டு சென்று வாசிக்கக் கொடுப்பது வழக்கம்.

ஒரு தடவை, இருபதிற்கும் முப்பதிற்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞன், அந்த முகாமிற்கு மாற்றலாகி வந்திருந்தான். அவன் முன்பு ஒரு காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியாக இருந்தவன். பல யுத்த களங்களில் போராடி இருக்கிறான்.

வறுமையான குடும்பப் பின்னணியை கொண்ட போராளி என்ற காரணத்தால், பொதுவாக இடதுசாரிக் கருத்துக்கள் மீது கவர்ச்சி இருந்தது. ஆனால், எதையும் சரியாக அறிந்து வைத்திருக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. (இப்படி நிறைய புலிப் போராளிகளை சந்தித்திருக்கிறேன்.)

அந்த புதிய வாலிபனும், புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களை ஆர்வமாக வாங்கி வாசித்து வந்தான். தான் வன்னியில் போராளியாக இருந்த காலத்தில், முகாம்களில் அந்த சஞ்சிகைகளை பார்த்ததாக கூறினான். தமிழ்நாட்டில் சில நக்சலைட் இயக்கங்களும், ஈழப் போராட்டத்தை ஆதரிப்பதால், புலிகள் இயக்கத் தலைமை, அந்த சஞ்சிகைகளை முகாம்களில் வாழ்ந்த போராளிகளும் வாசிக்க அனுமதித்ததாக தெரிவித்தான்.

சில வாரங்களுக்குப் பின்னர், மீண்டும் அந்த முன்னாள் போராளி இளைஞனை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவன் என்னிடம் கேட்டான்: - "அண்ணே, நீங்க கம்யூனிஸ்டா?"

- "இருக்கலாம்.... உங்களைப் பொறுத்த வரையில், கம்யூனிசம் என்றால் அர்த்தம் என்ன?" என்று ஒரு விவாதத்தை தொடங்கும் ஆர்வத்துடன் நான் கேட்டேன். 

அதற்கு அந்த இளைஞன் கூறிய பதில் என்னை தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பதில் இது தான்: 
- "பிச்சை எடுப்பதென்றாலும், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பிச்சை எடுக்க வேண்டும்...!" 
- "கம்யூனிச சமுதாயத்தில் பணக்காரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதன் அர்த்தம் மற்றைய மக்கள் எல்லோரும் பிச்சைக்காரர்கள் என்பதல்ல. அவர்கள் உழைப்பாளிகள். கம்யூனிசம் என்றால் எல்லோரும் ஒன்றாக பிச்சை எடுப்பதல்ல. எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உழைத்து முன்னேறுவது." என்று சொன்னேன்.

வன்னியில் வாழ்ந்த காலத்தில், தனக்கு இப்படி யாரும் தெளிவாக விளக்கவில்லை என்று, மேலும் அறியும் ஆர்வத்துடன் கூறினான்.

இப்படித் தான், விஜய்-முருகதாஸ் சினிமாக்காரர்களின் "இட்லி கம்யூனிசம்", மக்கள் மனதில் தவறான புரிதல்களை உண்டாக்கி வருகின்றது.