Monday, November 03, 2014

கார்ப்பரேட் ஆதரவு அரசியல் பேசும் கத்தி - சினிமா விமர்சனம்


ஏற்கனவே, "கத்தி ஒரு கம்யூனிச படம்" என்று மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் பயமுறுத்தி இருந்த படியால், "கம்யூனிச தடுப்பு மருந்து" போட்டுக் கொண்டு கத்தி படத்தை பார்த்து முடித்தேன். தொடக்கம் முதல் முடிவு வரை, அந்தப் படத்தில் மருந்துக்குக் கூட கம்யூனிச வாசனை வரவில்லை. ஒரு காட்சியில், கதாநாயகன் "கம்யூனிசம்" என்ற தலைப்பைக் கொண்ட புத்தகம் வைத்திருப்பான். "கம்யூனிசம் என்றால் என்ன அண்ணா?" என்ற கேள்விக்கு, "நம்ம பசி தீர்ந்ததற்கு அப்புறம் சாப்பிடுகிற இட்லி இன்னொருவருடையது...!" என்று பதில் கூறுவான். அந்த "ஒரு வரி விளக்கம்" மிகவும் சிறுபிள்ளைத் தனமாக உள்ளது. இது கம்யூனிசம் பற்றிய இயக்குனர் முருகதாசின் அறிவுக்கெட்டிய புரிதல் என்று நினைக்கிறேன்.

கொக்கோ கோலா, பல்தேசியக் கம்பனிகளை எதிர்ப்பவர்கள் "கம்யூனிஸ்டுகளாக" இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வது மத்தியதர வர்க்கத்தின் வெகுளித்தனம். அதைத் தான் முருகதாசும் கத்தி படத்தில் காட்சிப் படுத்தி உள்ளார். வசூலில் சாதனை படைக்கும் ஒரு வெற்றிப் படத்தை தர வேண்டும் என்பதற்காக, முருகதாஸ் வித்தியாசமான கதை ஒன்றை தெரிவு செய்துள்ளார். மொத்தத்தில், கத்தி இன்னொரு மசாலா படம் தான். ஆனால், பொதுவாக தமிழ் சினிமாக்கள் தொடாத கதையை தெரிவு செய்திருக்கிறார். தமிழில் இதுவே முதலாவது "கார்ப்பரேட் எதிர்ப்புப் படம்" என்று சொல்ல முடியாது. சூரியா நடித்த மாற்றான் திரைப்படமும், கார்ப்பரேட் கம்பனிகளை வில்லத்தனமாக சித்தரித்த திரைப் படம் தான்.

A. R. முருகதாஸ், சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து, திரைக்கதை எழுதி இருக்கிறார். கேரளாவில் கொக்கோ கோலா கம்பனிக்கு எதிரான பிளாச்சி மாடா மக்களின் போராட்டம், முழு இந்தியாவிலும் மட்டுமல்ல, உலகளவில் பரபரப்பாக பேசப் பட்ட விடயம் ஆகும். ஏற்கனவே ஊடகங்களின் கவனத்தை பெற்றிருந்த மக்கள் போராட்டத்தை, தமிழ் சினிமாவின் வழமையான பாணியான தனி நபர் சாகசங்கள் மூலம் திரிபு படுத்தும் வேலையை தான் முருகதாஸ் செய்திருக்கிறார். இதற்காக, கார்ப்பரேட் கம்பனிகள் அவர் மீது கோபப் படப் போவதில்லை. மாறாக தட்டிக் கொடுத்து பாராட்டி இருப்பார்கள்.

மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் நினைப்பது போல, இந்தக் காலத்தில் கார்பரேட் கம்பனிகளின் அராஜகங்களுக்கு எதிராக பேசுவது கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட சிறு முதலாளிகளும் தான். அது மட்டுமல்லாது, ஜனநாயகத்தை பேண விரும்பும் ஊடகங்கள், சில அரசு சாரா நிறுவனங்கள், இதை விட மிகவும் ஆணித்தரமாக கார்ப்பரேட் எதிர்ப்புக்குரல்களை எழுப்பி வருகின்றன. மேற்கத்திய நாடுகளில், அவற்றின் மூலமாக சாதாரண பொது மக்களுக்கும் கார்ப்பரேட் அராஜகங்கள் பற்றிய தகவல்கள் போய்ச் சேர்ந்துள்ளன.

மேற்கத்திய நாடுகளில், குறைந்தது எழுபது சதவீத பத்திரிகைகள், சஞ்சிகைகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் நடக்கின்றன. அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGO) மேலைத்தேய அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் நிதி வழங்குகின்றன. இது ஏற்கனவே பலருக்குத் தெரிந்திருக்கும். அப்படி இருந்தும், எவ்வாறு அவர்களால் கார்பரேட் எதிர்ப்பு தகவல்களை தெரிவிக்க முடிகின்றது? ஏனென்றால், முதலாளித்துவம் என்பது அதற்கே உரிய சுதந்திரத் தன்மை கொண்டது. அதாவது, தன்னியல்பாக வளரும் பொருளாதார அமைப்பு முறை ஆகும். அதனால் எல்லாவற்றையும் மூடி மறைக்க முடியாது. மேலும், மேற்கத்திய நாட்டு மக்களின் பொது அறிவு முன்னரை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரண அடித்தட்டு மக்களும், பொருளாதாரப் பிரச்சனைகளை அலசி ஆராயத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அடக்குமுறை கொண்டு, நாலாபுறமும் மக்களை அமுக்கினால், ஏதோ ஒரு பக்கத்தால் உடைத்துக் கொண்டு வெளியேறப் பார்ப்பார்கள். அதைத் தான் புரட்சி என்று அழைக்கிறோம். அப்படியான புரட்சிகர சூழ்நிலை கம்யூனிஸ்டுகளுக்கு உகந்ததாக மாறி விடும். அதைத் தடுக்க வேண்டுமானால், மூச்சு விடுவதற்கு ஜன்னலை திறந்து விடுவது அவசியம். அதனால் தான், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இந்த மாற்றங்கள் ஏற்பட்டன.

கார்ப்பரேட்களை எதிர்க்கும் இடதுசாரிகளுக்கும், சுதந்திரத்தை அமைத்துக் கொடுக்கிறார்கள். அரசுகள் அவர்களின் கருத்துக்களை அடக்குவதில்லை. கார்ல் மார்க்ஸ் கூறியது போன்று, மக்களை ஒடுக்குபவன் நிம்மதியாக வாழ முடியாது. தன்னால் சுரண்டப் படுபவர்கள், ஒரு நாளைக்கு தன்னைக் கொல்லவும் வருவார்கள் என்று ஒவ்வொரு முதலாளியும் அஞ்சிக் கொண்டிருக்கிறான். அதைத் தடுப்பதற்கான ஒரே வழி, குறைந்த பட்சம் தகவல் சுதந்திரத்திற்கு வழி திறந்து விடுவது தான். அது தான், மேற்குலகில் போற்றப் பட்டுக் கொண்டிருக்கும் கருத்துச் சுதந்திரம் உருவான பின்னணிக் கதை.

கார்பரேட் பணத்தில் கார்பரேட் எதிர்ப்பு கருத்துக் கூறுபவர்கள், மக்களின் கோபாவேசத்தை தணிப்பதற்கும் உதவுவார்கள். அது எப்படி சாத்தியமாகும்? ரொம்ப இலகு. "மக்களே வன்முறையில் இறங்காதீர்கள். அது "பயங்கரவாதமாக" கருதப்படும். கம்யூனிஸ்டுகளை பின்பற்றாதீர்கள். ஏனென்றால், அவர்கள் "கொடுங்கோலர்கள்", ஏற்கனவே "பல இலட்சம் பேரை கொன்று குவித்தவர்கள். நாங்கள் உங்களுக்கு வழி காட்டுகிறோம்... அஹிம்சா வழியில் போராடுங்கள். ஊடகங்களின் கவனத்தை கவரும் நடவடிக்கை எடுங்கள்..."

முன்பெல்லாம் போர்க் குணாம்சம் கொண்ட மக்களிடம், பாராளுமன்ற தேர்தல் முறையில் நம்பிக்கை வைக்குமாறு கூறி வந்தார்கள். "தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை பிடிக்கவில்லை என்றால், வருகிற தேர்தல்களில் எதிர்க் கட்சிக்கு ஓட்டுப் போட்டு வெல்ல வையுங்கள்." என்று அறிவுரை கூறினார்கள். தற்போது பெரும்பாலான மக்கள் பாராளுமன்ற தேர்தல்களில் நம்பிக்கை இழந்து வருகின்றனர். என்ன செய்வது? தந்திரோபாயத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது தான். ஆடுகிற மாட்டை ஆடித் தான் கறக்க வேண்டும். கார்பரேட் நிதியில் இயங்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இடதுசாரி முகமூடி போட்டு மக்களிடம் அனுப்ப வேண்டும். அவை கார்பரேட் எதிர்ப்பு அரசியல் பேசினாலும் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை. சர்வதேச மூலதனத்தை யாரும் அந்தளவு இலகுவாக அசைத்து விட முடியாது.

கத்தி திரைப்படத்தின் பின்னால் உள்ள அரசியலும் அது தான். படத்தை மிகக் கவனமாகப் பாருங்கள். பிரச்சினைக்கு தீர்வாக கதாநாயகன் என்ன திட்டம் வைத்திருக்கிறான்? சென்னை நகரத்திற்கு தண்ணீர் செல்லும் குழாய்ப் பாதையை தடுக்கிறார்கள். அது ஒரு அஹிம்சைப் போராட்டம். ஊடகங்களின் கவனத்தை தங்கள் மேல் குவிக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், அது மாதிரியான போராட்டங்களைத் தான் கிறீன் பீஸ் (Green Peace) அமைப்பு கடந்த பல தசாப்தங்களாக செய்து வருகின்றது. அவர்களின் எதிரிகளும் கார்பரேட் நிறுவனங்கள் தான். அவர்களின் அறிக்கைகளை படித்தால், கத்தி திரைப்படம் கூறுவதை விட, பல மடங்கு அதிகமான கார்பரேட் இரகசியங்கள் தெரிய வரும். ஒரு தடவை, "உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குபவர்கள் யார்?" என்று ஷெல் நிறுவன அதிபரிடம் கேட்டார்கள். "எங்கள் நிறுவனத்தைப் பற்றி எல்லா விடயங்களையும் தெரிந்து வைத்திருப்பவர்கள்." என்று அதற்குப் பதில் சொன்னார்.

ஆனால்... ஆனால்... கிறீன் பீஸ் இயக்கத்தைக் கண்டு, நமது தமிழ் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் யாரும் "ஐயோ கம்யூனிஸ்டுகள்" என்று விழுந்தடித்து ஓடவில்லையே? அது ஏனுங்கோ? மேலை நாட்டவர்கள் என்பதால், உங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் வரவில்லையோ? கிறீன் பீஸ் இயக்க தொண்டர்களில், குறைந்தது அரைவாசிப் பேராவது இடதுசாரி சூழலியவாதிகள். எனக்குத் தெரிந்த வரையில், தீவிர இடதுசாரிகளான அனார்க்கிஸ்டுகள் பலர் அதனை ஆதரிக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்கு சவாலாக விளங்கும், கிறீன் பீஸ் போன்ற அமைப்புகளே தைரியமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்கிறோம். கத்தி என்ன பெரிய அரசியல் பேசிக் கிழித்து விடப் போகிறது? கத்தி திரைப் படத்தை விட, அமெரிக்காவில் தயாரிக்கப் பட்ட "சிரியானா"(Syriana) மிகவும் அழுத்தமாக கார்ப்பரேட் எதிர்ப்பு அரசியல் கருத்துக்களை பதிவு செய்துள்ளது. மன்னிக்கவும், தயவுசெய்து அதையெல்லாம் "கம்யூனிச படம்" என்று சொல்லி எங்கள் மண்டைகளை காய வைக்காதீர்கள்.

அது சரி, கொக்கோ கோலா, மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்ப்பவர்கள், எல்லோரும் கம்யூனிஸ்டுகள் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? நீங்களாகவே அப்படி நினைத்துக் கொண்டீர்களோ? பல் தேசியக் கம்பனிகளின் வரவால் அழிந்து போன உள்ளூர் கம்பனிகள் எத்தனை? எத்தனை சிறு வணிகர்கள் நஷ்டப் பட்டு வியாபாரத்தை கை விட்டார்கள்? சிறிய அளவில் வியாபாரம் செய்தாலே, தன்னை பெரிய முதலாளியாக நினைத்துக் கொள்ளும் பலர் உண்டு. அவர்களும் தான் பல்தேசியக் கம்பனிகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். விவசாயிகள் மாதிரி அந்த "முதலாளிகளும்" தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கத்தி திரைப்படம் அந்த உண்மையை சொல்லவில்லை.

கத்தி திரைப்படத்தை, லைக்கா கம்பனி தயாரித்தது. அது கோடிக் கணக்கான இலாபம் ஈட்டும் ஒரு "கார்பரேட் நிறுவனம்" என்று சிலர் வாதாடலாம். உண்மையில், லைக்கா கம்பனி, பல்தேசியக் கம்பனிகளுக்கு கிட்டவும் நெருங்க முடியாது. ஒரு சராசரி பல்தேசியக் கம்பனியின் வருமானம், இந்தியாவின் மொத்த பொருளாதார உற்பத்தியை விட அதிகமாக இருக்கும். அவர்களால் இந்திய அரசையே தாங்கள் நினைக்கும் படியாக சட்டம் இயற்ற வைக்க முடியும். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. உலகவங்கி, IMF, அமெரிக்க அரசு என்பன, கார்பரேட் நிறுவனங்கள் சொல்லிக் கொடுப்பதை செய்யும் சேவையாளர்கள் தான்.

இயக்குனர் முருகதாசுக்கும், கத்தி படத்தை தயாரித்தவர்களுக்கும், கம்யூனிசம் பற்றித் தெரியாது என்பது ஒரு புறமிருக்கட்டும். அவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றியும் சரியாகத் தெரியவில்லை. அல்லது வேண்டுமென்றே பார்வையாளர்களுக்கு தவறான தகவல்களை கொடுக்கிறார்கள். கத்தி படத்தில் காட்டுவது மாதிரி, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருப்பதில்லை. அந்தக் காட்சி மிகவும் அபத்தமானது.

உலக யதார்த்தம், சினிமாவுக்கு முற்றிலும் முரணானது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் போட்டி, பொறாமை அதிகம். ஒன்றையொன்று காட்டிக் கொடுப்பது, போட்டுக் கொடுப்பது, எதிராளிகளை போட்டுத் தள்ளுவது.... இப்படி நிறைய தில்லுமுல்லுகள் நடக்கின்றன. சுருக்கமாக சொன்னால், சட்டவிரோத மாபியாக் குழுக்களுக்கு இடையில் நடக்கும் மோதல்கள், கார்ப்பரேட் உலகில் இரகசியமாக நடக்கின்றன. சின்ன மீன்களை பெரிய மீன்கள் பிடித்து சாப்பிடும். ஒன்றின் அழிவில் மற்றொன்று வாழும். வலியது பிழைக்கும், மற்றவை அழிந்து போகும். அது தான் முதலாளித்துவத்தின் இயற்கை நியதி.

"தாயும், பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு." அந்தப் பழமொழி, வர்த்தக உலகின் நிதர்சனம். அண்மையில், பிரிட்டிஷ் உளவுத்துறையின் தொழில்நுட்பப் பிரிவு, பெல்ஜியத்தில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனத்தை உளவு பார்த்தமை கண்டுபிடிக்கப் பட்டது. தொழில் நுட்ப இரகசியங்களை திருடுவது என்று சொல்வார்கள். இன்று இணையம் மூலமாக இலகுவாக நடக்கும் சமாச்சாரமாகி விட்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

உலகில் மிக அதிகமான பல்தேசியக் கம்பனிகளின் தலைமை அலுவலகங்கள், அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் உள்ளன. அதன் அர்த்தம், மேற்கத்திய நாடுகள் "அண்ணன், தம்பி மாதிரி" ஒற்றுமையாக, நம்பிக்கைக்கு உரியவர்களாக நடக்கிறார்கள் என்பதல்ல. திரை மறைவில் எத்தனையோ கழுத்தறுப்புகள், குழி பறிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும், சொந்த இனத்தவரின் கார்ப்பரேட் நிறுவனங்களை, வெளிநாட்டு கார்ப்பரேட்கள் விழுங்கி ஏப்பம் விடுவதைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை விட, 2008 ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியில் காணாமல் போன கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தனை?

நல்ல வேளையாக, உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் அரசு என்ற நிறுவனம் பெயருக்காவது இயங்கிக் கொண்டிருக்கிறது. அது சும்மா தேசியம், தேசியக் கொடி, தேசிய இராணுவம், தேசிய விலங்கு என்றெல்லாம் பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. பல்தேசியக் கம்பனிகள் அவற்றை உள்ளூர வெறுத்தாலும், சட்டத்திற்கு அடி பணிந்து நடப்பது போன்று காட்டிக் கொள்கின்றன. இல்லாவிட்டால், ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென தனியாக இராணுவம் வைத்துக் கொண்டு ஆட்சி செய்யத் தொடங்கி விடும். ஜூராசிக் பார்க் மாதிரி, ஒன்றையொன்று பிடித்து விழுங்கி விடும். பூரண சுதந்திரம் கொண்ட சந்தை அமைப்பும், சுதந்திரமான முதலாளித்துவமும் உலகில் இருக்க முடியாது.


இது தொடர்பான முன்னைய பதிவு:
கத்தி சினிமாவின் "இட்லி கம்யூனிசம்!" - ஒரு கார்பரேட் கனவுப் புரட்சி!!

2 comments:

Unknown said...

ஊருக்கே தெரிஞ்ச ஒரு சின்ன செய்தி
கத்தியோட உண்மையான ஓனர் பேரு கோபி அவரோட வீடியோ ஒன்னு முருகதாஸ கிழி கிழி ன்னு கிழிசிருக்கு.

சோ.வீ.தமிழ்மறையான் said...

படித்தேன்.நன்றி.