Showing posts with label சோஷலிசப் புரட்சி. Show all posts
Showing posts with label சோஷலிசப் புரட்சி. Show all posts

Wednesday, October 05, 2016

சோஷலிசப் புரட்சிக்குப் பின்னரான அரசியல் பொருளாதார நிலைமை


ஒரு நாட்டில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், அங்கே சோஷலிசப் புரட்சி நடந்ததாக அர்த்தம் இல்லை. அதற்கு முன்னர் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற காலகட்டம் உள்ளது. இதனால், பல முன்னாள் "சோஷலிச" நாடுகள், உத்தியோகபூர்வமாக மக்கள் ஜனநாயகக் குடியரசுகள் என்று அழைத்துக் கொண்டன.

சோஷலிச நாடுகளாக கருதப் பட்ட, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், மற்றும் கியூபா ஆகியன, உண்மையில் மக்கள் ஜனநாயகக் குடியரசுகளாக இருந்தன. மக்கள் ஜனநாயகக் குடியரசில், புரட்சிக்கு முன்பிருந்த அதே அமைப்பு வடிவம் தொடர்ந்தும் இருக்கும். முன்பிருந்த முதலாளிகள், நிலவுடைமையாளர்களும் இருப்பார்கள். ஆனால், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அவர்களை கட்டுப்படுத்தும்.

வர்க்கப் போராட்டம் என்பதன் அர்த்தம், வர்க்க சமுதாய அமைப்பை இல்லாதொழிப்பது. ஒரு சிலர் தவறாக நினைப்பது போல, வர்க்கத்தை சேர்ந்த மனிதர்களை ஒழித்துக் கட்டுவதல்ல. கலகம் செய்யும் எதிர்ப்புரட்சியாளர்கள் மட்டுமே கைது செய்யப் படுவர், அல்லது சுட்டுக் கொல்லப் படுவர். ஏனையோர் அரசியல் பாடங்களை கற்று தம்மைத் தாமே திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப் படும்.

சீனாவில் நடந்த புரட்சிக்குப் பின்னரும் அதே மாதிரியான நிலைமை தானிருந்தது. பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் மட்டுமே எதிரிகளாக பிரகடனப் படுத்தப் பட்டனர். தேசிய முதலாளிகள் தொடர்ந்தும் இயங்குவதற்கு அனுமதிக்கப் பட்டது. அந்த வகையில், நிலவுடைமையாளர்கள், பண்ணையார்கள், பணக்கார விவசாயிகள் கூட பொருளாதார நன்மை கருதி விட்டு வைக்கப் பட்டனர்.

இதிலே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. முன்னாள் முதலாளிகள், நிலவுடைமையாளர்கள், பண்ணையார்கள் போன்றோர், தமது சமூக அந்தஸ்தை இழந்து விடுவார்கள். அதாவது அவர்களும் சாதாரண தொழிலாளர்கள் போன்றே கருதப் படுவார்கள்.

உதாரணத்திற்கு, ஒரு முதலாளி தனது தொழிற்சாலையில் ஒரு சாதாரண தொழிலாளியாக வேலை செய்ய வேண்டும். அத்துடன் "முதலாளிக்குரிய" நிர்வாகப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார். நிலவுடமையாளரும் அப்படியே தனது வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

முன்னாள் முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் ஐந்தாண்டுகள் வேலை செய்ய வேண்டும். பணக்கார விவசாயிகளுக்கு மூன்றாண்டுகள். அந்தக் காலகட்டத்தில் அவர்களும் சாதாரண தொழிலாளர்கள் போன்று அரசியல் கல்வி புகட்டும் பாடசாலைக்கு செல்ல வேண்டும். ஐந்து வருடம் முடிந்ததும் அவர்களது வர்க்க மனப்பான்மை எப்படி இருக்கின்றது என்பது சோதித்து அறியப் படும். திருப்தி இல்லாவிட்டால், மேலும் சில வருடங்கள் நீடிக்கப் படும்.

(ஆதாரம்: de culturele revolutie in China, Adrian Hsia)

மேற்குறிப்பிட்ட பதிவு தொடர்பாக, பேஸ்புக்கில் எனக்கும், நடராஜா முரளிதரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை கீழே தருகின்றேன். சோவியத் யூனியன், சோஷலிச நாடுகள் குறித்து மேற்குலகம் பரப்பிய பொய்ப் பிரச்சாரங்களை, இவரைப் போன்று பலர் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது சந்தேகங்களை தெளிவு படுத்துவதற்கு அது உதவும்.

கேள்வி (Nadarajah Muralitharan): கட்சித் தலைவர்களும் கட்சி நிர்வாகிகளும் சலுகை பெற்ற அதிகாரம் கொண்ட புதிய வர்க்கமாக மாறவில்லையா ? மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக "கியூ"வில் முண்டியடித்துக் கொண்டிருக்கையில் கட்சி நிர்வாகிகளும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்ட கட்சி உறுப்பினர்களும் பிரத்தியேகமான கடைகளில் தங்களுக்கானவற்றைச் சுலபமாக கொள்முதல் செய்யவில்லையா ?

பதில்: அது எப்போது ந‌ட‌ந்த‌து என்ப‌து முக்கிய‌மான‌து. யுத்த‌ கால‌த்தில் மேற்கு ஐரோப்பாவிலும் அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளுக்கு த‌ட்டுப்பாடு நில‌விய‌து. ம‌க்க‌ள் கியூ வ‌ரிசையில் நின்றார்க‌ள்.

சோவிய‌த் யூனிய‌னில் குருஷேவ் வ‌ந்த‌ பின்ன‌ரும், சீனாவில் டெங்சியாபெங் வ‌ந்த‌ பின்ன‌ர் முத‌லாளித்துவ‌ சீர்திருத்த‌ங்க‌ளை அறிமுக‌ப் ப‌டுத்தினார்க‌ள். க‌ட்சி நிர்வாகிக‌ள் ப‌ற்றி ம‌ட்டும் தான் உங்களுக்கு தெரியும். க‌ம்ப‌னி நிர்வாகிகள், உத்தியோக‌ம் பார்க்கும் ம‌த்திய‌ த‌ர வ‌ர்க்க‌மும் ச‌லுகைக‌ளை அனுப‌வித்த‌ன‌ர். அந்த‌ப் பிரிவின‌ரை வேண்டுமென்றே ம‌றைப்ப‌து ஏனோ?

கேள்வி: அந்தப் பிரிவினர் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து எல்லோருக்கும் தெளிவாகத் தெரிகிறது. அத்தகையவர்கள் கூடுதல் நலன்களைத் தாங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களோடு கொண்டு போய் பொதுவுடமைத் தத்துவத்தில் தோய்ந்தெழுந்தவர்களை சுரண்டலுக்கு எதிராகப் போர்க் கோலம் பூண்டவர்களையும் ஒப்பிடுவது நகைப்புக்கு இடமாக இல்லையா?

பதில்: இப்போது யார் ஒப்பிட்டார்கள்? கலப்புப் பொருளாதாரம் இருந்தால், அங்கே நிர்வாகிகளும், மத்தியதர வர்க்கத்தினரும் இருப்பார்கள் தானே? அதிலென்ன அதிசயம் கண்டுவிட்டீர்கள்? குருஷேவ் "சோவியத் யூனியன் அனைத்து மக்களுக்குமான நாடு" என்று சொன்னார். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? மேற்கத்திய நாடுகளில் இருப்பது மாதிரி, எல்லா வகையானவர்களையும் சகித்துக் கொள்ளும் சமூகம்.

கேள்வி: அந்த நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் என்று சொல்லுகிறேன். பொதுவுடமைத் தத்துவத்தைக் கரைத்துக் குடித்தததாகப் பறைசாற்றுபவர்கள் என்கிறேன். பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினர்கள் என்று கூறுகிறேன். அப்படிப்பட்டவர்கள் சாதாரண மக்களையும் விடவும் சலுகைகளைக் கூடுதலாக அனுபவிக்கத் துடித்திருக்கிறார்கள். 1917 இல் நடைபெற்ற புரட்சிக்குப் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து அங்கே ஏன் கலப்புப் பொருளாதாரம் நிகழ வேண்டியிருந்தது ?

பதில்: "கட்சி நிர்வாகிகள்" என்ற போர்வையின் கீழ் சிறு முதலாளிகள், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளையும் மறைக்கிறீர்கள். ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகு de- stalinisation என்ற ஒன்று நடந்தது தெரியுமா? அது என்ன தெரியுமா? ஸ்டாலின் காலத்தில் வர்க்கமற்ற சமுதாயம் கறாராக பின்பற்றப் பட்டது. கூட்டுத்துவ பொருளாதார அமைப்பு காரணமாக யாரும் சொத்து சேர்க்க முடியாத நிலைமை இருந்தது. 

ஆனால், குருஷேவ் கொண்டு வந்த de-stalinisation அதை இல்லாதொழித்தது. முதலாளித்துவ செயற்பாடுகளும் சிறிய அளவில் அனுமதிக்கப் பட்டன. அப்போது புதிதாக கம்பனி நிர்வாகிகள் உருவாகினார்கள். அவர்கள் கட்சிக்கு கட்டுப் பட்டு நடந்தாலும், ஓரளவு சுதந்திரமாக இயங்க முடிந்தது. மானேஜர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்தது. அதெல்லாம் கூடாது என்று சொல்கிறீர்களா? அப்போ நீங்கள் அசல் ஸ்டாலினிஸ்ட் ஆக இருக்க வேண்டும்.

கேள்வி: மக்கள் கிளர்ந்தெழுந்த .....தொழிலாளர்கள் ஆர்ப்பரிந்தெழுந்த ....போராட்டம் ....பின்பு தத்துவார்த்தம் ஊட்டப்பட்ட சமூகமாக மாறிய பொதுவுடமைத் தேசத்தில் தனியொரு மனிதன் ஸ்ராலின் கடவுளாக மாற்றம் பெறுகிறார். பின்பு அவர் மறைந்த பின் அனைத்து மாற்றங்களும் தலைகீழாக ஆகி விட்டது என்று சொல்லுவது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா ?

பதில்: மேலெழுந்தவாரியாக பார்த்தால் அப்படித் தான் தெரியும். ஸ்டாலினை யாரும் கடவுளாக்கவில்லை. அது வெளியுலகில் நடத்தப் பட்ட விஷமப் பிரச்சாரம். ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை நடைமுறைப் படுத்தினார் என்று தான் சொன்னேன். அது என்ன என்றாவது கேட்டிருக்க வேண்டும். அதாவது, நீங்கள் குற்றம் சாட்டும் கட்சி நிர்வாகிகள் கூட அதிகாரத் துஸ்பிரயோகம் செய்தால், அல்லது லஞ்சம் வாங்கினால், சிறைக்குப் போக வேண்டியிருக்கும். ஊரில் யாரிடமாவது பணம் புழங்குவதாக தெரிந்தால் மக்களே தகவல் கொடுப்பார்கள். 

அப்படியானதொரு சமுதாயத்தில் நீங்கள் சொல்லும் முறைகேடுகள் எப்படி இருக்க முடியும்? அப்படியானால் நீங்கள் லஞ்சம், ஊழலை ஆதரிப்பவரா? ஸ்டாலின் மறைந்த பிறகு, கட்சிக்குள் குருஷேவின் திடீர் சதிப்புரட்சி நடந்தது. ஸ்டாலினுக்கு ஆதரவானவர்களை விலத்தி விட்டு, தனக்கு விசுவாசமானவர்களை நியமித்தார். அதன் பிறகு ஸ்டாலினுக்கு எதிரான குற்றப் பத்திரிகை வாசிக்கப் பட்டது... இதில் "மோசடி" எங்கே வந்தது? அது அதிகார மட்டத்தில் நடந்த ஆட்சி மாற்றம்.

//தத்துவார்த்தம் ஊட்டப்பட்டமாக சமூகமாக மாறிய பொதுவுடமைத் தேசத்தில்// இது அதீத கற்பனை. எல்லா நாடுகளிலும் மக்கள் ஒரே மாதிரித் தான் இருப்பார்கள். சோவியத் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மக்கள் மக்கள் தான். உங்களை மாதிரி ஆட்களும் இருப்பார்கள். என்னை மாதிரி ஆட்களும் இருப்பார்கள். இதையெல்லாம் வாசித்துக் கொண்டிருப்பவர்கள் மாதிரி ஆட்களும் உண்டு. வெவ்வேறு அரசியல் கொள்கைகளை நம்புகிறவர்கள் இருப்பார்கள். 

பொதுவுடைமை தத்துவம் என்பது "ஊட்டப் படுவது" அல்ல. அதை மக்கள் தாமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். யாரையும் வற்புறுத்த முடியாது. ஒரே இரவில் எல்லாவற்றையும் அடியோடு மாற்ற முடியாது. சமூகம் மெல்ல மெல்லத் தான் மாறும். அதற்குப் பொறுமை வேண்டும். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நடக்க முடியாது. எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல முடியாது. எப்படிப் பட்ட எதிரியாக இருந்தாலும் திருந்துவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

கேள்வி: "இது அதீத கற்பனை." இங்கு நான் இதனை அச்சொட்டாகச் சொல்லவில்லை. இந்த நாடுகளில் பொதுவுடமைத் தத்துவம் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களில் புகட்டப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள எல்லா ஊடகங்களிலும் பொதுவுடமைத் தத்துவம் ஒலிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வந்தது. கலை, இலக்கியம், திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்குப் பொதுவுடமைத் தைலம் பூசப்பட்டது. "எல்லா நாடுகளிலும் மக்கள் ஒரே மாதிரித் தான் இருப்பார்கள்." என்ற ஒப்புதல் வாக்குமூலம் இங்கு நடக்கும் உரையாடலில் குறிப்பிடத்தக்கது. "சோவியத் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மக்கள் மக்கள் தான். உங்களை மாதிரி ஆட்களும் இருப்பார்கள்." இந்த வாக்கியமும் இங்கு முக்கியமானதொன்று! ஆகாவென்றெழுந்த "யுகப் புரட்சியை" நிகழ்த்திய சோவியத் மக்கள் ஒப்பீட்டளவில் தமிழ் மக்களைக் காட்டிலும் கூடுதலாகப் பொதுவுடமைத் தத்துவார்த்தப் பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறார் கலை! மக்கள் தாமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். யாரையும் வற்புறுத்த முடியாது. அப்படியாயின் 1917 இல் நிகழ்ந்தது ஒரு நாட்டுக்குள் நிகழ்ந்த "சோசலிசப் புரட்சி" அல்ல....மிகச் சிறுபான்மையோரால் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட புரட்சியாகவே "கலை" ரஷ்யப் புரட்சியை நோக்குகிறார் எனலாம். ஆனால் பொதுவுடமைத் தத்துவவாதிகள் ஒரு நாட்டுக்குள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட "சோசலிசப் புரட்சி" என்றே அக்டோபர் புரட்சியை வரையறுத்திருந்தனர். 70 வருட காலம் நீடித்த புரட்சியின் பின்னான அந்த ஆட்சி ஆட்டம் காண முன்பு வெகுகாலத்துக்கு முன்பாகவே 1956இல் ஹங்கேரிக்கு சோவியத் படைகள் ஏன் அனுப்பப்பட்டது ? ஹங்கேரி என்ற நாடு சார் மன்னர்கள் காலத்திலேயே ரஷ்யாவுக்குள் இருந்த நாடா ? அல்லது ஜேர்மனியின் நாஜிப்படைகளை வெற்றி கொண்ட செம்படையினர் வலிந்து ஆக்கிரமித்த நிலமா ஹங்கேரி ?

பதில்: நீங்கள் இரண்டு மாறுபட்ட விடயங்களை ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். உங்களது கருத்திடலில் பல தடவைகள் அவதானிக்கப் பட்ட குறைபாடு இது. //தத்துவார்த்தம் ஊட்டப்பட்டமாக சமூகமாக மாறிய பொதுவுடமைத் தேசத்தில்// என்ற கூற்றுக்கு தான் விளக்கம் கூறினேன். புரட்சியில் என்ன நடந்தது என்று விவாதிக்கவில்லை. தத்துவம் ஊட்டுவது பற்றி மேலதிக விளக்கம் கூறி விட்டு புரட்சிக்கு வருகிறேன். 

இன்று பெரும்பான்மையான உலக நாடுகளில் முதலாளித்துவ தத்துவம் பாடசாலைகளில் போதிக்கப் படுகின்றது. ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. சுயநலம் பேணுவது, நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாவது சர்வ சாதாரணமாக கருதப் படுகின்றது. செல்வம் சேர்க்க வேண்டும் என்ற வெறி, பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை, எல்லாம் ஊக்குவிக்கப் படுகின்றன. இவற்றுக்குப் பின்னால் முதலாளித்துவ தத்துவம் மறைந்திருப்பதை யாரும் மறைக்க முடியாது. 

இருந்தாலும் இவற்றில் நம்பிக்கையற்ற மக்களும் இருக்கிறார்கள் தானே? அதாவது சுயநலம் பார்க்காமல் பொதுநல சேவை செய்பவர்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். பணம், பொருளில் பற்று இல்லாதவர்கள். பேராசை கொள்ளாதவர்கள்.... உலகில் இப்படியான மனிதர்களும் இருக்கிறார்கள் தானே? அவர்கள் தான் நீங்கள் வெறுக்கும் "பொதுவுடைமைவாதிகள்". 

அரசே முன்னின்று பொதுவுடைமை கொள்கையை செயற்படுத்தும் நாட்டில் அவை தான் போதிக்கப் படும். அதெல்லாம் தவறு என்று சொல்கிறீர்களா? அதே நேரம், அந்த சமூகத்தில் சுயநலவாதிகள், பணத்தாசை கொண்டவர்கள், பேராசை மிக்கவர்களும் இருப்பார்கள். அதாவது, சுருக்கமாக முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்கள். இவர்களை முடிந்த வரையில் திருத்தி எடுப்பது தானே முறை? ஒருவனை கெட்ட வழியில் செல்ல விடாமல் நல்லவனாக மாற்றுவதை நீங்கள் "தத்துவார்த்தம் ஊட்டப்பட்டது" என்று புரிந்து கொள்கிறீர்கள். உங்களது புரிதல் அப்படித் தான்.

புரட்சி தொடர்பாக... உங்களுக்குத் தெரியுமா? உலகில் முதலாவது பொதுவுடைமைப் புரட்சி நடந்த நாடு எது? அது ரஷ்யா அல்ல! பிரான்ஸ்!! பாரிஸ் கம்யூன் என்ற பெயரில் பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப் பட்டது. மூன்று மாதங்கள் நீடித்தது. 

ரஷ்யாவில் நடந்த பாட்டாளிவர்க்க புரட்சி மட்டுமே உங்களுக்குத் தெரியும். அதே காலகட்டத்தில், ஜெர்மனியில் நடந்த பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பெர்லின், மியூனிச், ஹம்பேர்க் ஆகிய நகரங்களில் சோவியத் அரசுகள் உருவாக்கப் பட்டன! குறைந்தது ஒரு மாதமாவது ஜெர்மன் சோவியத்துகள் நின்று பிடித்தன. 

இதை விட ஹங்கேரியிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடந்து சில மாதங்கள் நீடித்தது. முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் பொதுவுடமைப் புரட்சி நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. அதைத் தடுப்பதற்கு அரசுகள் எல்லா முயற்சிகளையும் எடுத்திருந்தன. ஆகவே, புரட்சி என்பது ரஷ்யாவுக்கு மட்டுமே உரிய தனித்துவம் அல்ல. அது உலகில் எந்த நாட்டிலும் நடக்கலாம், நடந்துள்ளது. 

ரஷ்யா மட்டும் ஏன் விதிவிலக்காக பேசப் படுகின்றது? அதற்குக் காரணம் புரட்சியை தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போர். போல்ஷெவிக் கட்சியினர், தொழிலாளர்கள், விவசாயிகளை இணைத்து செம்படையை உருவாக்கினார்கள். அது எதிர்ப்புரட்சியாளர்களுடனான போரில் வெற்றி பெற்றது. அதனால் தான் அங்கு உருவான பொதுவுடைமை அரசு அடுத்து வந்த எழுபதாண்டுகள் நீடித்தது. 

பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி போன்ற நாடுகளில் எதிப்புரட்சியாளர்கள் பலமாக இருந்தனர். தேசிய இராணுவம் அவர்களது பக்கம் நின்றது. அதனால், அங்கு நடந்த புரட்சிகள் வன்முறை கொண்டு அடக்கப் பட்டன. அப்போது புரட்சியில் பங்கெடுத்தவர்கள் அனைவரும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப் பட்டனர்.

//1956இல் ஹங்கேரிக்கு சோவியத் படைகள் ஏன் அனுப்பப்பட்டது ?// நீங்கள் ஒரு தடவை நேட்டோ ஒப்பந்தம் என்ன சொல்கிறதென்று வாசித்துப் பாருங்கள். நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடொன்றில் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அங்கு நேட்டோ படைகளை அனுப்பும். ஒரு தடவை அப்படியும் நடக்க இருந்தது. 

போர்த்துக்கல் நாட்டில் பொதுவுடைமைக்கு ஆதரவான இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினார்கள். அங்கு ஜனநாயக வழியில் தெரிவு செய்யப் பட்ட சோஷலிச அரசு அமைந்தது. அதைத் தொடர்ந்து, நேட்டோ கடற்படைக் கப்பல்கள் போர்த்துக்கல் கரையோரத்தில் முற்றுகையிட்டன. படையெடுக்கப் போவதாக மிரட்டின. ஹங்கேரியிலும் அதே கதை தான் நடந்தது. 

ஹங்கேரி வார்சோ ஒப்பந்த உறுப்புரிமை கொண்ட நாடாக இருந்தது. அதுவும் நேட்டோ மாதிரியான விதிகளை உள்ளடக்கிய இராணுவக் கூட்டமைப்பு தான். அந்த வகையில் ஹங்கேரி கிளர்ச்சியை அடக்குவதற்கு வார்சோ படையணிகள் அனுப்பப் பட்டன. நேட்டோவில் பெரும்பங்கு அமெரிக்க இராணுவம் இருப்பது மாதிரி, வார்சோவில் சோவியத் இராணுவம் பெரும்பங்கு வகித்தது. இது தான் நடந்தது. வார்சோ படையணிகளை, சோவியத் படைகள் என்று திரித்து பேசுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

கேள்வி: சோவியத் யூனியன் என்பது அந்தந்த நாடுகளில் வாழும் மக்களின் விருப்புக்கு மாறாக ஒன்றிணைக்கப்பட்ட கூட்டமைப்பு இல்லையா ?

பதில்: அப்போ நீங்க‌ தேசிய‌ இன‌ங்க‌ளின் சுய‌நிர்ண‌ய‌த்திற்கு எதிரான‌வரா? சார் ம‌ன்ன‌ன் கால‌த்தில், 20 ம் நூற்றாண்டு வ‌ரை ர‌ஷ்யா என்ற‌ ஒரே தேச‌மாக‌ இருந்த‌து. அதைத் தான் சோவிய‌த் யூனிய‌ன் என்ற‌ பெய‌ரில் 15 குடிய‌ர‌சுக‌ளாக‌ பிரித்தார்க‌ள். அத‌ற்குள் ஒவ்வொரு இன‌த்திற்கும் த‌னித் த‌னியாக‌ த‌ன்னாட்சிப் பிர‌தேச‌ங்க‌ளும் உருவாக்கினார்க‌ள். அதற்காக‌ அந்த‌ ம‌க்க‌ள் சோவிய‌த் யூனிய‌னுக்கு ந‌ன்றி கூற‌க் க‌ட‌மைப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.

கேள்வி: அடிப்படையில் நான் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவானவன். சார் மன்னன் ஆயுத முனையில் கட்டியாண்ட பெரு நிலப் பிரதேசத்தை நீங்கள் ஒரே அரச பிராந்தியமாக மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்றாகக் கருதுகிறீர்களா ? அப்படியாயின் லெனின் காலத்தில் உக்ரேன் பிரிய வேண்டிய காலகட்டம் ஏன் நிகழ்ந்தது ? எஸ்தோனியா,லாட்வியா, லிதுவேனியா மக்கள் எந்தக் காலத்திலும் "ஸ்லாவிய" இன மக்களாக தங்களைக் கருதவில்லை. அதனால் சோவியத் யூனியனோடு இணைந்திருக்க அவர்கள் எந்தக் காலத்திலும் பிரியப்படவில்லை. எந்தக் குடியரசுகளும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி இணைக்கப்படவில்லை.

பதில்: சுயநிர்ணய உரிமைக்கு "ஆதரவானவர்" சோவியத் யூனியனை எதிர்க்க மாட்டார். ஏனென்றால் சோவியத் புரட்சிக்குப் பிறகு தான் சுயநிர்ணயம் பற்றிய பேச்சே எழுந்தது. அது நடைமுறைப் படுத்தப் பட்டது. அதற்கு முன்னர் அதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய தேசியவாதக் கருத்துக்கள் ஏற்கனவே சில இடங்களில் பரவி இருந்தன. உதாரணத்திற்கு, ஆர்மேனியா, ஜோர்ஜியா. 

அதே நேரம், மத்திய ஆசியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கிளர்ச்சி செய்தனர். அவர்களது நோக்கம் தேசிய அரசு அல்ல. மாறாக, இஸ்லாமிய அரசு. ஸ்லாவிய மக்கள் ரஷ்யா, உக்ரைன், வெள்ளை ரஷ்யாவில் மட்டும் இருந்தனர். மற்ற நாடுகளில் வெவ்வேறு மொழிகளை பேசினார்கள். அவற்றிற்கும் ஸ்லாவிய மொழிகளுக்கும் சம்பந்தம் இல்லை. மொல்டாவியாவில் ருமேனிய மொழி, அசர்பைஜானில் துருக்கி மொழி.... ஏன் ரஷ்யாவுக்குள் கூட நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப் படுகின்றன.

1917 ம் ஆண்டுக்கு முந்திய உலக வரலாற்றில் எந்தவொரு நாடும், "சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி" இணைக்கப்படவில்லை. பிரித்தானியாவில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தியா அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸை இணைத்தார்கள்? ஸ்பெயினில், பிரான்சில் சர்வசன வாக்கெடுப்பு நடந்ததா? நோர்வே, சுவீடன், பெல்ஜிய, நெதர்லாந்து, இங்கெல்லாம் சிறுபான்மை இனங்களை சர்வசன வாக்கெடுப்பு நடத்தியா இணைத்தார்கள்?

கேள்வி: சுயநிர்ணயம் என்ற மொட்டைத் தலையோடு சோவியத் யூனியன் என்ற முழங்காலை ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கின்றேன்! தேசிய இனம் குறித்த சிந்தனைகள் மேற்கு ஐரோப்பாவிலேயே முதலில் தோற்றம் பெற்றது. அறிவொளிக் காலமும் கைத்தொழிற் புரட்சியும் அதற்கான தோற்றுவாய்களாக இருந்தன. மதமாகவும் ...கடவுளாகவும் எவற்றையும் வழிபாடு செய்ய வேண்டிய அவசியம் கருத்துக் கட்டாயம் உண்மையான உரையாடலுக்கு இடையூறு என்று எண்ணுகிறேன். மக்கள் எழுச்சி பெற்ற காலங்கள் ...ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிய வேளைகளில் நல்ல கருத்தியல்கள் பிறந்திருக்கின்றன என்பதற்காக அவற்றைக் கண்மூடித்தனமாகப் போற்ற வேண்டியதில்லை. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கருத்தியல் பெரும் விவாதமாக லெனின் காலகட்டத்தில் உருவெடுத்தாலும் ஸ்ராலின் போன்றவர்கள்(ஸ்ராலின் ஜோர்ஜியனாக இருந்த பொழுதிலும்) ரஷ்யப் பெருந்தேசியவாதிகளாகவே இருந்தார்கள் என்பதே வரலாற்றுண்மை. ஏனென்றால் போர்களை வெற்றி கொள்ள மக்களுக்குத் தேசிய வெறியை ஊட்ட வேண்டிய கட்டாயத்தில் ஸ்ராலின் போன்றவர்கள் இருந்தார்கள்.

பதில்: மேற்கு ஐரோப்பிய "தேசிய இன சிந்தனைகள்"(?) பேரினவாதமாக மாறியதை கண்டுகொள்ளாமல் மறைப்பது ஏனோ? உதாரணத்திற்கு, பிரெஞ்சு "தேசிய இனம்", சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கியது. அவர்கள் வீட்டில் கூட தமது மொழியைப் பேச விடாமல் தடை போட்டது. இது சுத்த பேரினவாத சிந்தனை. அனேகமாக எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பேரினவாத சிந்தனை தான் கோலோச்சியது. 

சோவியத் ஒன்றியத்தின் குறிக்கோள் தேசியங்களை வளர்த்து விடுவதல்ல. பாட்டாளி வர்க்க மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவது. சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவது. நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும் மக்கள், தமது மொழி, கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு உதவியாகத் தான் தேசிய அரசமைப்பு உருவாக்கப் பட்டது. உங்களது மனதில் உள்ள "தேசிய இன சிந்தனை" வேறு. அது மக்களுக்கான அரசு அல்ல. மேட்டுக்குடி வர்க்கம் சலுகைகளை கோரும் அரசு. ஒரே இனத்தில் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆளும் ஒடுக்குமுறை அரசு. அது தான் உங்கள் மனதில் உள்ள "தேசிய இன சிந்தனை"!

கேள்வி: தேசிய இனம் என்ற கருத்தியல் தோற்றம் பெற்ற வரலாற்றைப் பற்றிப் பேசுகையில் மேற்கைப் பற்றிக் குறிப்பிட வேண்டி நேர்ந்தது. அதற்காக மறைப்பது என்று சொல்லுவது அபத்தத்தின் உச்சம். எப்படியாயினும் சோவியத் ஒன்றியம் என்பதில் ரஷ்யப் பேரினவாதமே மேலாட்சி செலுத்தியது என்பதை யாரும் மறைக்க முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுவதாயின் சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதாயின் அது பெரும்பான்மை மக்களது ஆதரவோடு நிகழ்த்தப்பட வேண்டும். அதனைத் திணிக்க முடியாது. ஆயுத முனையில் அமுலாக்கினால் நீண்ட காலத்திற்கு அது தாக்குப் பிடிக்க முடியாது. அந்தந்த மக்களை இயல்பாக இருக்க விடுங்கள். அவர்கள் தங்களது மொழியையும் கலையையும் பண்பாட்டையும் காப்பார்கள். இங்கு எஜமான் தேவையில்லை. எனது மனதில் உள்ள தேசிய இனச் சிந்தனையானது மேலாதிக்க மனோபாவம் கொண்டதல்ல என்று உறிதியாகக் கூறுகிறேன். இன்றைய ரஷியாவின் அதிபர் முன்னாள் "கொம்யூனிஸ்ட்" எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்க்கிறீர்களா ? முழுக்க முழுக்க ரஷ்ய பேரினவாத மேலாண்மையும் ஓதோடொக்ஸ் கிறீஸ்தவ மத வாதமும் அவரில் பொங்கி வழிவதை அவதானிக்கலாம். கலையும் கூட மேற்குலக சுரண்டல் அரசின் சலுகைகளைப் புத்திசாலித்தனமாக அனுபவித்துக் கொண்டு எங்கள் எலலோருக்கும் மார்க்சீயம் போதிக்க விரும்புகிறார். அவருடைய புகலிட வாழ்வில் என்றுமே எந்தப் பொதுவுடமை சார்பு நாடுகளுக்குச் செல்லவோ அதனை அங்கு சென்று ஆராயவோ அல்லது அங்கு வாழவோ விரும்பியிருக்க மாட்டார் என்றே எனக்கு நினைக்கத் தோன்றுகிறது!

பதில்: //சோவியத் ஒன்றியம் என்பதில் ரஷ்யப் பேரினவாதமே மேலாட்சி செலுத்தியது// அபத்தமான கற்பனை. இதை மேற்குலகப் பேரினவாதிகள் சொல்வது தான் மிகப் பெரிய அபத்தம். சோவியத் யூனியன் ரஷ்யப் பேரினவாதிகளை அடக்கியொடுக்கியது. வெண் படைகள் என்ற பெயரில் எதிர்ப்புரட்சியில் ஈடுபட்ட ரஷ்யப் பேரினவாதிகளுக்கு மேற்குலக நாடுகள் முண்டு கொடுத்தன. ரஷ்யப் பேரினவாதிகளுக்கு ஆதரவாக தமது படைகளையும் அனுப்பின. 

ரஷ்ய மொழி பொது மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு விடயத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதை பேரினவாதமாக காட்ட முடியாது. உங்களிடமே கேட்கிறேன். வேறு எந்த மொழியை பொது மொழியாக படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் இவற்றில் ஒன்றை சோவியத் யூனியனின் பொது மொழியாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா? ரஷ்ய மொழியை இரண்டாம் மொழியாக படிப்பது "ரஷ்ய பேரினவாதம்" என்றால், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக படிப்பதற்கு என்ன பெயர்? அது பேரினவாதம் இல்லையா?

//பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுவதாயின் சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதாயின் அது பெரும்பான்மை மக்களது ஆதரவோடு நிகழ்த்தப்பட வேண்டும். அதனைத் திணிக்க முடியாது.// நீங்கள் குறிப்பிடும் அந்தப் "பெரும்பான்மை" மக்கள் யார்? முதலாளிகளா? பணக்காரர்களா? நிலவுடமையாளர்களா? இல்லவே இல்லை. சாதாரண விவசாயிகள், தொழிலாளர்கள் தான் ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருப்பார்கள். அவர்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு உதவுவது எப்படி "திணிப்பு" ஆகும்? உண்மையில் அது தான் ஜனநாயகம். 

போல்ஷெவிக் புரட்சிக்கு முன்னரே, ரஷ்யாவில் மேற்குறிப்பிட்ட பிரிவினர் புரட்சி செய்தனர். அதற்குப் பிறகு உருவான இடைக்கால அரசு முதலாளித்துவ நலன் சார்ந்த அரசாக இருந்தது. அதனால் தான் பிற்காலத்தில் போல்ஷெவிக் புரட்சி நடந்தது. அதைத் தொடங்கியவர்கள் சாதாரண கடற்படையினர். தொழிலாளர்கள் உதவியுடன் குளிர்கால அரண்மனையை கைப்பற்றியதும் புரட்சி வெடித்தது. 

ஆரம்பத்தில் சென் பீட்டர்ஸ்பெர்க் மட்டும் புரட்சியாளரின் கையில் இருந்தது உண்மை. ஏனைய இடங்களில் உள்நாட்டுப் போர் நடந்தது. நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. சாதாரணமான விவசாயிகள், தொழிலாளர்கள் தான் செம்படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையில் ஒரு நாள் கூட துப்பாக்கியை தொட்டிராத விவசாயிகள், தொழிலாளரை படைவீரர்களாக மாற்றுவது லேசான விடயமா?

//இன்றைய ரஷியாவின் அதிபர் முன்னாள் "கொம்யூனிஸ்ட்" எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்க்கிறீர்களா ?// இது மற்றொரு அபத்தமான கூற்று. ஒரு காலத்தில் அப்படி இருந்தார்கள் என்பதற்காக இபோதும் அப்படி இருப்பார்களா? அவர்கள் இன்று முதலாளித்துவவாதிகள். ஒரு முதலாளித்துவவாதி எப்படி நடந்து கொள்வார் என்பது உங்களுக்கு தெரியும் தானே? அப்படித் தான் நடந்து கொள்கிறார். இதில் என்ன ஆச்சரியம்?

//கலையும் கூட மேற்குலக சுரண்டல் அரசின் சலுகைகளைப் புத்திசாலித்தனமாக அனுபவித்துக் கொண்டு எங்கள் எலலோருக்கும் மார்க்சீயம் போதிக்க விரும்புகிறார்.// நீங்கள் குறிப்பிடும் "சலுகைகள்" எதுவும் அரசு விரும்பிக் கொடுத்தவை அல்ல. அது தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள். நீண்ட காலமாக நடந்த போராட்ட வரலாற்றை இருட்டடிப்பு செய்து விட்டு "சலுகை" பற்றிப் பேசுவது ஒரு அரச அடிவருடித்தனம். ஆமாம், அரசு "சலுகை" தருகிறது என்பதற்காக, அந்த அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று போதிப்பதை எப்படி அழைப்பது? 

முதலில் அரசு என்றால் என்னவென்று அடிப்படை அறிவு இருக்க வேண்டும். முதலாளிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிப்பதாக அரசு காட்டிக் கொள்கிறது. எல்லா நாடுகளிலும் அப்படித் தான். ஆனால், நடைமுறையில் முதலாளிகளின் பக்கம் சாய்ந்து விடுகின்றது. மேற்கு ஐரோப்பிய தொழிலாளர்கள், தொழிற்சங்க நடவடிக்கை மூலம் அதை மாற்றி அமைத்தார்கள். 

உதாரணத்திற்கு, இன்று சம்பளத்தை தீர்மானிக்கும் விடயத்தில், தொழிற்சங்கத்தை அழைத்துப் பேசும் நிலையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதெல்லாம் வானத்தில் இருந்து விழவில்லை. வேலைநிறுத்தம் போன்ற பல வகையான போராட்டங்கள் ஊடாக பெற்றுக் கொண்ட உரிமைகள்.

//எந்தப் பொதுவுடமை சார்பு நாடுகளுக்குச் செல்லவோ அதனை அங்கு சென்று ஆராயவோ அல்லது அங்கு வாழவோ விரும்பியிருக்க மாட்டார்// இதுவும் சுத்த அபத்தமான கூற்று. நாங்கள் காலனிய எஜமானர்களின் நாடுகளுக்கு செல்கிறோம். ஒரு காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் எமது தாயகத்தின் வளங்களை சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு செல்கிறோம். அதற்கு எமது மக்களுக்கு இருக்கும் உரிமையை மறுப்பது, வெள்ளையின மக்களை பாதுகாக்கும் நிறவெறிச் சிந்தனை ஆகும்.

"பொதுவுடைமை" ஒரு அது மாற்று அரசியல் பொருளாதாரம். எந்த நாட்டிலும் நடைமுறைப் படுத்தக் கூடிய, எல்லா நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ள, உழைக்கும் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வது பற்றிய தத்துவம். அது குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே இருக்கிறது என்று நினைப்பது உங்களது அறியாமை. முதலாளித்துவ நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் முதலாளிகள் அல்ல. அங்கேயும் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்கள் தான். உலகம் முழுவதும் நிலைமை அப்படித் தான்.

Sunday, May 08, 2016

அரசியல் பழகு, அபத்தங்களுக்கு பதிலளி: எது புரட்சி? எது ஜனநாயகம்?

"புர‌ட்சி செய்யாதே! பூப் ப‌றித்து பூஜை செய்!" - இது க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ஸ் போதிக்கும் ஜ‌ன‌நாய‌க‌ பாட‌ம். முத‌லில், இந்தியாவில் ந‌ட‌க்கும் தேர்த‌லில் ஒரு "இந்திய‌ சாவேஸ்" தேர்ந்தெடுக்க‌ப் ப‌டும் நிலைமை வ‌ர‌ட்டும். அப்போது தெரியும் இந்தப் போலி ஜ‌ன‌நாய‌க‌ம் என்ன‌ பாடுப‌ட‌ப் போகிற‌தென்று.

தி இந்து பத்திரிகையில், புரட்சிகர அரசியலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறும் வகையில், சமஸ் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அரசியல் பழகு: எது நவயுக புரட்சி? என்ற அந்தக் கட்டுரையில், அரசியல் மயப்பட்ட இளைஞர்களுக்கு ஏராளமான புத்திமதிகள் கூறுகின்றார்.

"ஆயுதப்புரட்சி இந்தக் காலத்திற்கு ஏற்றது அல்ல. ஜனநாயக வழிமுறைகளை பயன்படுத்துங்கள். படிக்கும் வயதில் புரட்சியை பற்றி நினைக்காதீர்கள். படித்து உத்தியோகம் பார்த்து சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்..." இவ்வாறு அறிவுரை கூறுகின்றார்.

புதிய மொந்தையில் பழைய கள் மாதிரி, இதுவும் காலம் காலமாக "பெரியவர்களினால்" சொல்லப் பட்டு வரும் அறிவுரை தான். நான் பதினான்கு வயது சிறுவனாக இருந்த காலத்தில் தான் ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் தொடங்கியது. அப்போதும் நமது பெற்றோர்கள், நம்மூர் பெரியவர்கள் சமஸ் மாதிரி அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். "அந்த இளைஞர்களைப் பாருங்கள்... எந்தவித அரசியல் நாட்டமும் இன்றி படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள்..." என்று சிலரை உதாரண புருஷர்களாக சுட்டிக் காட்டினார்கள்.

அன்று ஈழப்போராட்டம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், கவனமாகப் படித்து பட்டம் பெற்று, உத்தியோகம் பார்த்தவர்கள் பலருண்டு. அதே நேரம், படிப்பை பாதியில் விட்டு விட்டு முழுநேர ஈழ அரசியலில் ஈடுபட்ட இளைஞர்களும் உண்டு. தமது உயிர், உடைமைகளை பணயம் வைத்து, அத்தகைய இளைஞர்கள் செய்த தியாகத்தினால் நன்மை அடைந்தவர்கள் சிலருண்டு. அவர்கள் தான், சமஸ் கூறும் "சமர்த்துப் பிள்ளைகள்"! தமது உத்தியோகத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டு, ஜனநாயக வழியில் கட்சி அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சமஸ் கூறும் அறிவுரைகள், எவ்வாறு ஈழப் போராட்டத்தில் "பரீட்சித்துப்" பார்க்கப் பட்டன என்பதற்கு இதுபோன்ற ஆயிரம் உதாரணங்களைக் காட்டலாம். தற்போது சமஸ் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய காரணம் என்ன? கால் நூற்றாண்டுக்கு முன்னர், உலகம் முழுவதும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியை கொண்டாடியவர்கள், "கம்யூனிசம் கல்லறைக்குள் போய்விட்டது" என்று புளுகித் திரிந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலும் கம்யூனிச புரட்சிகர அரசியல் சக்திகள் நலிவடைந்த நிலையில் இருந்தன. ஏற்கனவே இருந்த ஆதரவாளர்களே காணாமல் போய்க் கொண்டிருந்த நிலையில், இனிவரும் புதிய தலைமுறை அதில் நாட்டம் கொள்ளாது என்று நம்பினார்கள்.

ஆனால், காலம் மாறிவிட்டது. உலகமயமாக்கலின் தாக்கமும், தீர்க்கப் படாத மனித அவலங்களும், மீண்டும் ஒரு புரட்சிகர அரசியலின் தேவையை உணர்த்தின. இன்று உலகம் முழுவதும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கூட, பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் புரட்சிகர கம்யூனிச அரசியல் பேசுமளவிற்கு காலம் மாறி விட்டது. சமஸ் அதையெல்லாம் கண் முன்னால் கண்டு வந்துள்ளார். ஒருவகையில், சமஸ் எழுதியுள்ள கட்டுரையானது ஒரு நிகழ்கால யதார்த்தத்தை உணர்த்தி நிற்கின்றது.

இந்த உண்மையை சமஸ் தனது கட்டுரையில் பிரதிபலிக்கிறார்: 
//சென்னை வந்ததிலிருந்து இப்படியான இளைஞர்களை அனேகமாக மாதத்துக்கு ஒருவரையாவது சந்திக்கிறேன். பெரும்பாலும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்ட, கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள். இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களிலும் இப்படியான மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருபுறம் அரசியல் உணர்வே இல்லாத உள்ளீடற்ற மாணவர்களை நம் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன என்றால், மறுபுறம் ஆழமான ஆர்வம் கொண்ட இப்படியான மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான இடமளிக்காமல் கல்வி நிலையங்கள் வெளியே தள்ளுகின்றன. இதற்கெனவே காத்திருக்கும் கசப்பு சக்திகள் அவர்களை வாரிச் சுருட்டிக்கொள்கின்றன.//

குறைந்தது பத்து வருடங்களுக்கு முன்னர் கூட, தமிழ் இளைஞர்கள் அரசியல் நீக்கப் பட்ட சமூகமாக இருந்தனர். மத்தியதர வர்க்கத்தினர் மேற்கத்திய கலாச்சாரத்தை போட்டி போட்டுக் கொண்டு பின்பற்றினார்கள். "எனக்கு அரசியல் தெரியாது... அதில் நாட்டமும் இல்லை." என்று சொல்வதே நாகரிகம் என்று கருதப் பட்டது. அரசியல் நீக்கம் செய்யப் பட்ட இளைஞர் சமுதாயத்தில், கம்யூனிசம், புரட்சி பற்றிப் பேசும் இளைஞர்களும் இருப்பார்கள் என்பதை சமஸ் போன்றவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவர்கள் பயந்து கொண்டிருந்த கெட்ட கனவு பலித்து விட்டது. அரசியல்மயப் பட்ட இளைஞர்களுக்கு, ஜனநாயக விழுமியங்களை கற்றுக் கொடுப்பதால், எதிர்காலத்தில் புரட்சியை தவிர்க்கலாம் என்று கணக்குப் போடுகின்றனர்.

சமஸ்: //நம் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு, உலுத்துப்போன வார்த்தை புரட்சியாகத்தான் இருக்கும். ஒரு ஜனநாயக யுகத்தில், ஆயுதவழிக் கிளர்ச்சியை அடிமனதில் வைத்துக்கொண்டு, புரட்சி எனும் வார்த்தையைப் பயன் படுத்துபவர்களை எப்படிக் குறிப்பது?//

முதலில் புரட்சி என்பதை "ஆயுதக் கிளர்ச்சி" என்று புரிந்து கொள்வதே அபத்தமானது. "முதலாளிய வர்க்கம் அமைதியான வழியில் அதிகாரத்தை மாற்றித் தந்தால் அது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், அப்படி நடக்குமா என்பதே கேள்விக்குறி." இது 150 வருடங்களுக்கு முன்னர், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எழுதிய வாசகம்.

சமஸ் கூறுவது போல, "ஜனநாயக யுகத்தில் ஒரு ஆயுதக் கிளர்ச்சியை" தவிர்க்க முடியாதா? இந்திய முதலாளித்துவ அரசியல்வாதிகளும், இந்திய முதலாளிகளும், அமைதியான முறையில் நாட்டின் அரசியல் - பொருளாதார அதிகாரம் முழுவதையும், கம்யூனிசப் புரட்சிகர இயக்கங்களிடம் ஒப்படைத்து விட்டு, ஏதாவதொரு கரீபியன் தீவுக்கு சென்று ஓய்வெடுக்கட்டுமே? யார் வேண்டாம் என்றார்கள். அப்படி நடக்குமா என்பது தான் கேள்வி. அந்த இடத்தில் தான் புரட்சியின் தேவை எழுகின்றது. 

அது சரி, கடந்த நூற்றாண்டில் உலகில் எந்த நாட்டிலும் அமைதி வழிப் புரட்சி நடக்கவில்லையா? 1974 ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் நடந்த சோஷலிசப் புரட்சியில் ஒரு துளி இரத்தம் சிந்தப் படவில்லை. 1918 ம் ஆண்டு, ஹங்கேரி சோவியத் அரசு ஜனநாயக வழியில் தான் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்தப் புரட்சி ஆயுதக் கிளர்ச்சியாக நடக்கவில்லை.

சிலி நாட்டில் ஜனநாயக தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் தான் புரட்சியைக் கொண்டு வந்தார்கள். இறுதியில் சிலியின் அமைதியான ஜனநாயகப் புரட்சி நசுக்கப் பட்டது ஏன்? சமஸ் பெருமையுடன் குறிப்பிடும் அதே ஜனநாயக தேர்தலில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு, சதிப்புரட்சியாளர்களினால் ஆயுதமுனையில் நசுக்கப் பட்டது. 

சிலியில் நடந்த சதிப்புரட்சிக்கும், அதைத் தொடர்ந்த இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கும் அமெரிக்கா உதவியது எல்லோருக்கும் தெரியும். சமஸ் பயமுறுத்தும் புரட்சிகர கம்யூனிச/சோஷலிச சக்திகளின் ஆட்சிக் காலத்தில் சிலியில் ஒரு துளி இரத்தம் சிந்தப் படவில்லை. ஆனால், சமஸ் போற்றும் ஜனநாயக சக்திகளின் ஆட்சிக் காலத்தில் இருபதாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் (இனப்)படுகொலை செய்யப் பட்டனர்.

சமஸ்: //இன்னும் பழமைவாத மனநிலையிலிருந்து விடுபடாதவர்களாலேயே இப்படிப் பேச முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியைத் தன் அந்தரங்கக் கனவாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தனக்குக் கீழே இருப்பவர்களையும் ஏமாற்றிக் கொள்ளப் பழக்குவதாகவே இருக்க முடியும்.//

லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த மேற்குலகம் ஆதரித்த "புரட்சிப் படைகள்", அஹிம்சைப் போராட்டமா நடத்தின? லிபிய ஜிகாதியக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதை மேற்கத்திய நாடுகள் பெருமையோடு சொல்லிக் கொண்டன. சிரியாவிலும் சுதந்திர சிரிய இராணுவம் என்ற புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தன. சமஸ் அதற்கு ஒரு பதில் வைத்திருப்பார்: "மேற்குலக எதிரி நாடுகளுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடந்தால் அது நல்லது. மேற்குலக நட்பு நாடுகளுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடந்தால் அது கூடாது."

சமஸ்: //ஒருகாலத்தில், இந்த உலகின் பெரும் பகுதி மன்னர்கள் கையில் இருந்தது. அவர்களுடைய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.... பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி இப்படி நாமறிந்த எல்லா கிளர்ச்சிகளும் ஆயுதவழிப் போராட்டங்களாக நடக்க அதுவே காரணமாக இருந்தது. அன்றைக்கு அதற்கான நியாயமும் இருந்தது.//

மேற்குறிப்பிட்ட மூன்று புரட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நோக்கங்களுக்காக நடந்தவை. அவற்றை, ஒரே தட்டில் வைத்து ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது அபத்தமானது. "ரஜனிகாந்த், விஜயகாந்த் அண்ணன் தம்பி" என்பது போன்ற பாமரத்தனமான கூற்று. 

பிரெஞ்சுப் புரட்சி மன்னராட்சிக்கு எதிராகத் தான் நடந்தது. ஆனால், அதற்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த நெப்போலியன் போர்களினால் மன்னர்களின் அதிகாரம் கணிசமான அளவு குறைந்து போனது. வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோல்வியுற்றாலும், அவன் கொண்டு சென்று பரப்பிய "லிபரலிசம், தேசியம், முதலாளித்துவம்" போன்ற புதிய அரசியல்-பொருளாதார சித்தாந்தங்கள் ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவி விட்டன. 

பல ஐரோப்பிய நாடுகளில், பூர்ஷுவா வர்க்கம் (அல்லது முதலாளித்துவவாதிகள்) அதிகாரத்திற்கு வந்தது. லிபரல்வாதிகள் என்று அழைத்துக் கொண்ட பூர்ஷுவா வர்க்கம், அரச பரம்பரையுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டது. பிரிட்டன், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க் போன்ற நாடுகளில் அந்த அமைப்பை "பாராளுமன்ற சட்டத்திற்குட்பட்ட மன்னராட்சி" (Constitutional Monarchy)  என்று அறிவித்துக் கொண்டனர்.

அந்தக் கால ரஷ்யா இரண்டு புரட்சிகளை கண்டிருந்தது. 1905 ம் ஆண்டு நடந்த புரட்சியில், சார் மன்னனின் அதிகாரம் பெருமளவு குறைக்கப் பட்டு விட்டது. அது லிபரல்வாதிகளின் புரட்சி. அதற்குப் பிறகு தான் ரஷ்யாவில் பல கட்சிகள் பங்குபற்றும் பாராளுமன்ற அமைப்பு வந்தது. முதலாளித்துவமும் கணிசமான அளவு வளர்ச்சியைக் கண்டிருந்தது. உண்மையில் போல்ஷெவிக்குகள் நடத்திய புரட்சி, லிபரல் அரசுக்கு எதிராகவே நடந்தது.

ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு போல்ஷெவிக் புரட்சியாளர்களினால் கவிழ்க்கப் பட்ட லிபரல் அரசு தான், இன்றைக்கு இந்தியாவிலும் பல உலக நாடுகளிலும் உள்ளது. அதைத் தான் சமஸ் "ஜனநாயக அரசு" என்று சொல்கிறார். அனேகமாக, முதலாம் உலகப்போர் வரையில், உலகில் எந்த நாட்டிலும் ஜனநாயகத் தேர்தல்கள் நடக்கவில்லை. அதனால் ஜனநாயக நாடுகளும் இருக்கவில்லை. ஏனென்றால், அன்று அனைத்து குடி மக்களுக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கப் படவில்லை. பெருமளவு சொத்து வைத்திருந்த மேட்டுக்குடியினருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது.

1949 ம் ஆண்டு நடந்த சீனப் புரட்சி காலனித்துவத்திற்கு எதிரானது. அப்போது சீனாவில் மன்னராட்சி இருக்கவில்லை. சீனப் புரட்சி நடப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன்னரே, சீனா பிரிட்டனின் அரைக் காலனியாக மாறிவிட்டது. சீன சக்கரவர்த்தி பொம்மையாக வைக்கப் பட்டிருந்தார்.

சன்யாட்சன் தலைமையில் லிபரல்களான சீன தேசியவாதிகள் அதிகாரத்திற்கு வந்திருந்தனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் சீனா ஜப்பானின் காலனி நாடாகி விட்டிருந்தது. மாவோவின் கம்யூனிசப் படைகள், ஒரு புறம் ஜப்பானிய காலனியாதிக்கப் படைகளையும், மறுபுறம் சீனத் தேசியவாத படைகளையும் எதிர்த்துப் போராடினார்கள்.

சமஸ்: //2001-க்குப் பிறகு, இந்த உலகில் தனித்த ஒரு நாடு என்று ஒன்று எதுவுமே கிடையாது. எல்லா அரசாங்கங்களும் பொருளாதார, ராணுவ, ராஜ்ஜிய வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டவை. உலகின் ஏதோ ஒரு சின்ன தீவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு குழு ஆயுதத்தைத் தூக்கினால், அது அந்த அரசாங்கத்தை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த அமைப்பையும் எதிரியாக்கிக் கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நம் கண் முன்னே நடந்த விடுதலைப் புலிகளின் அழிவும், தமிழ் இனப் படுகொலையும்!//

பனிப்போர் காலத்தில் உலகம் இரு துருவங்களாக பிரிந்திருந்தது. ஆனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் உலகம் முழுவதும் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியலுக்கு கட்டுப்பட்டது. 2001-க்குப் பிறகு, அது மென்மேலும் உறுதியாக்கப் பட்டது. 

2001-க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றமானது, ஆயுதக் குழுக்களுக்கு மட்டும் எதிரானது என்று மேலோட்டமாக பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற பெரிய நாடுகள் கூட எதிரிகளாக்கப் பட்டன. லிபியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பும், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தமும், 2001 நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடந்தது.

ஆகவே, ஒரு சிறிய ஆயுதக் குழு அரசை எதிர்க்கிறதா இல்லையா என்பதல்ல இங்கேயுள்ள பிரச்சினை. அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு தடையாக, ஒரு சிறிய இயக்கம் அல்ல, ஒரு பெரிய அரசு இருந்தாலும் அகற்றப் பட்டு விடும் என்பது தான் யதார்த்தம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நடந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நேபாளத்தில் ஆயுதப்போராட்டம் நடத்திய மாவோயிஸ்டுகள் கூட அவ்வாறு தான் "சமநிலைப்" படுத்தப் பட்டனர்.

சமஸ்: //பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை விலையாகக் கொடுத்து, எல்லாப் பெரிய எதிரிகளையும் கடந்து ஒரு ஆயுதபாணி இயக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், இறுதியில் அது நிறுவும் ஆட்சி எப்படிப்பட்டதாக அமைகிறது? எந்த ஜனங்களின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அதே ஜனங்களையும் ஜனநாயகத்தையும் கடைசியில் காலில் போட்டு நசுக்குவதே இதுவரை நாம் கண்ட வரலாறு.//

"ஜனங்கள்" என்று சொல்லப் படுபவர்கள் யார்? "ஜனநாயகம்" என்றால் என்ன?

முதலில் ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? இது தான் ஜனநாயகம் என்ற வரையறை இருக்கிறதா? பண்டைய கிரேக்கத்தில் இருந்த ஜனநாயக  அமைப்பில் எந்தக் கட்சியும் இருக்கவில்லை. அதை நேரடி ஜனநாயகம் என்று சொல்வார்கள். வாக்குரிமை பெற்ற மக்கள் தமக்குப் பிடித்த ஒருவரை தெரிவு செய்வார்கள். ஆயினும், அடிமைகளுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. 

இன்றைக்கு நாம் காணும் முதலாளித்துவ - ஜனநாயகத்திற்கும், கிரேக்க ஜனநாயகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் உருவான நவீன ஜனநாயகம் இது. இதற்குப் பெயர் "பிரதிநிதித்துவ ஜனநாயகம்".  பாராளுமன்ற ஜனநாயகம் என்றும் அழைக்கலாம். ஆனால் அது மட்டும் தான் ஜனநாயகம் அல்ல. 

பாராளுமன்றத் தொகுதிகளுக்கு, ஐந்து வருடங்களுக்கொரு தடவை நடக்கும் தேர்தலில், மக்கள் தமது பிரதிநிதியை தெரிவு செய்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அதுவும் பெரும்பாலான நாடுகளில் கட்சிகளுக்கு மட்டும் தான் ஓட்டுப் போடலாம். அதிலும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை பெற்றால் மட்டுமே ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட, எப்போதும் இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன, அல்லது ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. 

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்த போதிலும், இந்தியா இன்னமும் ஒரு வறிய நாடாகவே இருப்பது எதைக் காட்டுகின்றது? எந்தக் கட்சியிடமும் மக்களின் பிரச்சினைகள் தீர்ப்பதற்கான திட்டம் கிடையாது. அப்படி ஒரு கட்சி ஆட்சிக்கு வர முடியாது. அப்படி இருந்திருந்தால் இந்தியா இன்றைக்கு மேலைத்தேய நாடுகளின் தரத்திற்கு நிகராக வந்திருக்குமே? இந்தியாவில் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து என்பது சாதாரண பாமர மக்களுக்கும் தெரியும்.

பல கட்சி ஜனநாயகம் நிலவும் நாடுகளில், கட்சிகள் பணத்தை அள்ளியெறிந்து தான் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. அமெரிக்காவும் அதற்கு விதிவிலக்கல்ல. பணபலம் இல்லாத கட்சி, குறைந்தது ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது. அது மட்டுமல்ல, மக்களை இனம், மதம், சாதி அடிப்படையில் பிரித்து அரசியல் செய்வதால் தான், பெரும்பான்மைக் கட்சிகள் தேர்தல் களத்தில் நின்று பிடிக்கின்றன. இந்தியாவில் எந்தக் கட்சி மக்களை ஒன்று சேர்க்கப் பாடுபட்டிருக்கிறது? அப்படியே முயற்சித்தாலும் அது நடக்கிற காரியமா?

சோஷலிச புரட்சி நடந்த நாடுகளில் ஜனநாயகம் இருக்கவில்லை என்று சமஸ் எங்கே படித்தார்? அந்த நாடுகளில் அரசு அதிகார நிறுவனங்களுக்கு மட்டும் தேர்தல் நடக்கவில்லை. பாடசாலைகள், தொழிற்சாலைகள், சமூக அமைப்புகள் எல்லாவற்றிலும் தேர்தல்கள் நடந்தன. வேட்பாளராக நிற்பவர் ஆளும் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டுமல்ல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏராளமான பணம் செலவளித்து பரப்புரை செய்வதில்லை. அவர்கள் தங்களது கொள்கைகள், திட்டங்களை பற்றி மட்டுமே தெரிவிப்பார்கள். 

"ஜனங்கள்" என்று சொல்லப் படுபவர்கள் யார்? ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாட்டில் அனைத்து ஜனங்களும் சமமாக நடத்தப் படுகின்றனரா? பணக்காரர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் ஏழைகளுக்கு கிடைக்கின்றதா? உயர் சாதியினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு கிடைக்கின்றதா?

"ஜனங்களுக்குள்" ஏனிந்த பிரிவினை? இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் ஒடுக்கப் பட்ட நேரம், ஒரு "ஜனநாயக" அரசு அவர்களை ஜனங்களாக கருதவில்லையா? அதே மாதிரி, இந்தியாவில் உள்ள "ஜனநாயக" அரசு, காஷ்மீர், அசாம் மக்களை ஒடுக்கிய நேரம், அவர்கள் "ஜனங்கள்" என்ற பிரிவுக்குள் அடங்கவில்லையா?

ஒரு முதலாளித்துவ நாட்டில், சிறுபான்மை மேட்டுக்குடியினர் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அடித்தட்டு மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். மத்தியதர வர்க்க மக்கள் செலவுகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். அதன் அர்த்தம் அந்த நாடுகளில் வர்க்கப் பாகுபாடு உள்ளது என்பது தானே?

சோஷலிசப் புரட்சி நடந்த நாடுகளில் அந்த நிலைமை தலைகீழாக மாற்றப் பட்டது. அதாவது ஏழைகள், அடித்தட்டு ம‌க்க‌ள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி இருந்தனர். காலங்காலமாக ஆண்டு அனுபவித்து வந்த நிலவுடமையாளர்கள், பணக்காரர்கள், மேட்டுக்குடியினர் சமூகத்தில் கீழ் நிலைக்கு வந்தனர். அதாவது, "தாழ்த்தப் பட்டவன் உயர்த்தப் பட்டான். உயர்த்தப் பட்டவன் தாழ்த்தப் பட்டான்." இதைத் தான் "ஜனங்களை காலில் போட்டு நசுக்கினார்கள்" என்று சமஸ் குறைப் படுகின்றார்.

அரசியல் பழகுவோம்....

Sunday, April 26, 2015

25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்ட வரலாற்றில் குறிப்பிடத் தக்க தினம்


ஒரு மேற்கு ஐரோப்பிய நாடான போர்த்துக்கல்லில், 1974 ம் ஆண்டு, ஒரு துளி இரத்தம் சிந்தாமல், ஒரு வெற்றிகரமான சோஷலிசப் புரட்சி நடந்த விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

அதற்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. பல தசாப்த காலமாக, பாசிஸ சர்வாதிகாரி சலசாரின் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்ற விடயமாவது தெரியுமா?

கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளின் புரட்சிக்குப் பின்னர், சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, போர்த்துக்கல்லில் ஜனநாயக பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப் பட்டன என்ற உண்மை தெரியுமா? இன்றைக்கும் மறைக்கப் பட்டு வரும் ஐரோப்பாவின் வரலாற்று உண்மைகளில் செவ்வரத்தம் பூ புரட்சியும் ஒன்று.

போர்த்துக்கல் இராணுவத்திற்குள் இருந்த கம்யூனிச, சோஷலிச அல்லது ஜனநாயக ஆதரவு சக்திகள், இரகசியமான சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். வெறும் நான்கு உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டன. சலசாரின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது.

படையினர் தமது துப்பாக்கி முனைகளில், செவ்வரத்தம்பூ செருகி வைத்திருந்த படியால், அது இன்றைக்கும் செவ்வரத்தம் பூ புரட்சி என்றே அழைக்கப் படுகின்றது. அதற்கு பெருமளவு மக்கள் ஆதரவு இருந்தது.

புரட்சிக்குப் பின்னர், அரசமைப்பு, பொருளாதாரம் தொடர்பாக, வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் கை ஓங்கியிருந்த சில இடங்களில் நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன.

அதே நேரம், போர்த்துக்கல் அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக குற்றஞ் சாட்டி, நேட்டோ படையெடுக்கப் போவதாக மிரட்டியது. அட்லாண்டிக் கடலில் நேட்டோ கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப் பட்டிருந்தன.

இறுதியில், 1976 ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்து, சமூக ஜனநாயகக் கட்சியும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும் கூட்டரசாங்கம் அமைத்த பின்னர், நேட்டோ அழுத்தம் விலக்கிக் கொள்ளப் பட்டது.


******


25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்டத்தில் குறிப்பிடத் தக்க சரித்திர தினம். இன்று அது இத்தாலியின் சுதந்திர தினமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. முசோலினியின் இருபதாண்டு கால பாசிஸ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது. இறுதிக்காலத்தில், ஜெர்மன் நாஸிப் படைகள் உதவிக்கு வந்த போதிலும், முசோலினியின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.

இத்தாலியின் வட பகுதி மாகாணங்களை, தமது சொந்தப் பலத்தில் விடுதலை செய்த கம்யூனிசப் போராளிகள், 25 ஏப்ரல் சுதந்திர தினமாக பிரகடனப் படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வந்திறங்கிய அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள், தென் இத்தாலி பகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

2ம் உலகப் போர் முடிந்த பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. அமெரிக்காவால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வத்திக்கானுடன் சேர்ந்து சதி செய்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டுப் போடுவோர், கத்தோலிக்க மதத்தில் இருந்து விலத்தி வைக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்கள். திரும்பவும் தேர்தல் நடத்தினார்கள். அதில் வத்திக்கான் ஆதரித்த கிறிஸ்தவ ஜனநாயக்கட்சி வென்றது. அதற்குப் பிறகு இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சியை தலையெடுக்க விடவில்லை.

மேலும், மேற்குலகின் கடுமையான ஸ்டாலின்/ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. தற்போது இருப்பது சீர்திருத்தப்பட்ட, சமூக- ஜனநாயக கம்யூனிஸ்ட் கட்சி.

Saturday, November 08, 2014

கருவிலே அழிக்கப் பட்ட துருக்கியின் பத்து மாதப் புரட்சி


பத்சா (Fatsa), கருங்கடலுக்கு அருகில் உள்ள துருக்கியின் ஒர்டு மாகாணத்தில் ஒரு நகரம். எழுபதுகளில், இருபதாயிரம் பத்சா வாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். உணவுக்கான சாக்லேட் களி செய்ய பயன்படும் மூலப் பொருளான hazel nut உற்பத்தியாகும் அரிதான இடங்களில் அதுவும் ஒன்று. விவசாயிகள் தவிர்ந்த ஏனையோர் மீனவர்கள்.

1965 ஆம் ஆண்டு, பத்சா நகரில், துருக்கி உழைப்பாளர் கட்சி (TIP) உருவாக்கப் பட்டது. உழைப்பாளர் கட்சியானது, மாணவர்கள், தொழிலாளர்கள் மத்தியில், தொழிற்சங்கம், விவாத அரங்கம் போன்றவற்றின் ஊடாக இயங்கத் தொடங்கியது. குறிப்பாக விவசாயிகள் சுரண்டப் படுத்தல், கந்து வட்டிகாரர்களின் கொடுமை, இடைத் தரகர்களின் மோசடி  போன்றவற்றை விவாதப் பொருளாக்கியது.

TIP கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, மஹிர் ஜயான் (Mahir Çayan)  தலைமையில், "மக்கள் விடுதலை இயக்கம் - துருக்கி முன்னணி" (THKP-C) ஸ்தாபிக்கப் பட்டது. துருக்கி, கோடீஸ்வர தொழிலதிபர்களினால் ஆளப்படுகின்றது என்றும், நவ- தாராளவாத பிடியின் கீழ் இருக்கிறது என்பதும் அவர்களது கொள்கையாக இருந்தது. ஆளும் வர்க்கத்தை அடக்க வேண்டுமானால், ஆயுதப் போராட்டம் அவசியம் என்பது அவர்களது பாதை. பத்சா நகரில் அந்த இயக்கத்திற்கு ஆதரவுத் தளம் இருந்தது.

12-5-1971 அன்று, துருக்கியில் ஒரு சதிப்புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ ஆட்சியாளர்கள் புரட்சிகர இடதுசாரி சக்திகளை அடக்க முனைந்தனர். அதனால் THKP-C ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டது. இதே நேரம், இராணுவத்தினர் மூன்று இடதுசாரி மாணவர் தலைவர்களை (Deniz Gezmis, Hüseyin Inan, Yusuf Aslan) கைது செய்து தூக்கில் போட இருந்தனர்.

மாணவர் தலைவர்களின் மரண தண்டனையை தடுக்கும் நோக்கில், THKP-C கெரில்லாக்கள், நேட்டோ வில் வேலை செய்த மூன்று ரேடார் தொழில் நுட்ப நிபுணர்களை கடத்திச் சென்றனர். அவர்கள் கிசில்டேரே(Kizildere) எனும் கிராமத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்தனர். 30-3-1972 அன்று, அந்தக் கிராமத்தை படையினர் சுற்றி வளைத்தனர். இராணுவத்தினருடன் நடந்த மோதலில், ஜயான் உட்பட பத்து போராளிகளும், மூன்று நேட்டோ பயணக்கைதிகளும் கொல்லப் பட்டனர்.

இராணுவ சர்வாதிகார ஆட்சி, கிசில்டேரே தாக்குதல் காரணமாக, பத்சா கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. ஏனெனில், கொல்லப் பட்ட போராளிகளில் பலர் அந்த நகரத்தை சேர்ந்தவர்கள். எழுபதுகளின் மத்தியில், பாராளுமன்ற ஜனநாயகம் மீட்கப் பட்டு, அங்காராவில் சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது இராணுவ அடக்குமுறை ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட, இடதுசாரி ஆர்வலர்கள் பலர் விடுதலை செய்யப் பட்டனர். அவர்களில் ஒருவர், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான "பிக்ரி சென்மெஸ்" (Fikri Sönmez). அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர், பத்சா நகரில் ஒரு தையல்காரராக தொழில் புரிந்து வந்தவர்.

பிக்ரி சென்மெஸ் (Fikri Sönmez)

பிக்ரி சென்மெஸ், ஜோர்ஜிய மொழி பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர். அதனால் இன வேற்றுமைகளை கடந்து மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது. விடுதலையாகி வரும் பொழுது, அவரின் வயது 36 மட்டுமே. அதனால், இரண்டு தலைமுறைகளை சேர்ந்தவர்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்தார். பத்சா உதைபந்தாட்ட கழகத்தின் நிறுவனராக இருந்தார். மேலும் மக்களைக் கவரும் பேச்சு வன்மை கொண்டவர்.  பிக்ரி சென்மெஸ், அடுத்து வரப் போகும் பத்சா நகர புரட்சியில் முக்கிய பாத்திரம் வகிக்க இருந்தார்.  

பிக்ரி சென்மெஸ், THKP-C இயக்கத்தின் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கினார். பத்சா விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அதிக பட்ச விலை நிர்ணயம் செய்தல், அரிதாகக் கிடைத்த பாவனைப் பொருட்களின் பதுக்கலை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தார்.

அந்தக் காலத்தில், துருக்கி கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளினால் பாதிக்கப் பட்டிருந்தது. சீனி, மார்ஜரீன், சலவைத் தூள், சீமென்ட், சிகரட் போன்ற பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. வர்த்தகர்கள் அவற்றை பதுக்கி வைத்திருந்து, அதிக விலைக்கு விற்று வந்தனர்.

இடதுசாரி ஆர்வலர்கள், பதுக்கப் பட்ட களஞ்சிய அறைகளை உடைத்து, அந்தப் பொருட்களை மக்களுக்கு நியாய விலையில் விற்பனை செய்தனர். விற்பனையில் கிடைத்த இலாபத்தை, சம்பந்தப் பட்ட வர்த்தகர்களிடம் கொடுத்தனர். இடதுசாரி இளைஞர்களின் இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, உள்ளூர் மக்கள் மத்தியில் சோஷலிசவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது.

எழுபதுகளின் மத்தியில், நாடு முழுவதும் இடதுசாரி அலை வீசியது. பத்சாவில் மட்டுமல்லாது, வேறு பல இடங்களிலும் பல்வேறு சோஷலிச, கம்யூனிச இயக்கங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. 

1971 ஆம் நடந்த இராணுவ சதிப்புரட்சியின் எதிர்விளைவாக, மக்கள் இடதுசாரி கட்சிகளை ஆதரிக்கத் தொடங்கி இருந்தனர். துருக்கியின் "ஜனநாயக அரசாங்கத்திற்கும்" அது ஒரு பெரும் தலையிடியாக இருந்தது. அன்று உலகம் முழுவதும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலமாகையினால், அதன் தாக்கம் துருக்கியிலும் உணரப் பட்டது. 

இடதுசாரிகளை அடக்குவதற்கு, ஆளும் வர்க்கத்திற்கு இன்னொரு இராணுவ சதிப்புரட்சி தேவைப் படவில்லை. அதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படைகளுக்கும், பாசிஸ இயக்கங்களுக்கும் இடையில் ஓர் உடன்பாடு எட்டப் பட்டது. சாம்பல் ஓநாய்கள், தேசிய செயற்பாட்டுக் கட்சி (MHP) என்பன, அரச இயந்திரத்தின் கைக்கூலிகளாக இயங்க முன் வந்தன. 

இடதுசாரிகளின் கோட்டைகள் எனக் கருதப் படும் இடங்களுக்குள் மோட்டார் சைக்கிள்களில் திரியும் பாசிஸ காடையர்கள், இலக்கின்றி சகட்டுமேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். புரட்சிகர சோஷலிச இயக்கங்களின் உறுப்பினர்களை தேடிச் சென்று தாக்கினார்கள். தெருக்கள், பாடசாலைகள் போன்ற எந்தப் பொது இடத்திலும், இடதுசாரிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. அதனால், இடதுசாரி ஆர்வலர்கள், தற் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆதரவாளர்கள் குறைவான பகுதிகளில், தலைமறைவாக வாழ வேண்டி இருந்தது. அங்கெல்லாம் பாசிஸ இயக்கங்களின் கை ஓங்கியது. 

1977 ஆம் ஆண்டு, பத்சா நகரில் இயங்கிய மக்கள் குழுத் தலைவரும், சென்மெஸ்ஸின் கூட்டாளியுமான கெமல் கரா (Kemel Kara) படுகொலை செய்யப் பட்டார். அந்தக் கொலை மூலம், மக்கள் மனதில் பீதியை உண்டாக்கலாம் என்று பாசிஸ்டுகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், விளைவு அதற்கு மாறாக அமைந்தது. மக்கள் மத்தியில் பாசிஸ எதிர்ப்புணர்வு அதிகரித்தது. அதனால், பத்சாவை சேர்ந்த சாம்பல் ஓநாய்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தமது பாதுகாப்புக் கருதி ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

மேலும் 1977 ஆம் ஆண்டு படுகொலைச் சம்பவம், புதியதொரு புரட்சிகர இயக்கத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. டெவ்ரிம்சி யொல் (Devrimci Yol: புரட்சிகர பாதை) எனும் பெயரிலான இயக்கத்தில், முன்னாள் THKP-C உறுப்பினர்கள் சிலருடன், மக்கள் குழுக்களின் பிரதிநிதிகளும், தொழிற்சங்க வாதிகளும் அங்கம் வகித்தனர். 

டெவ்ரிம்சி யொல் துருக்கி முழுவதுக்குமான இயக்கமாக இயங்கியது. பத்சா நகரில் சென்மெஸ்ஸும், அவரின் தோழர்களும் முக்கிய பங்கு வகித்தனர். அது ஒரு மார்க்சிய இயக்கம் தான். ஆனால், பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருந்து வேறு பட்டிருந்தது. அதாவது, டெவ்ரிம்சி யொல் சோவியத் யூனியனையோ, அல்லது சீனாவையோ பின்பற்றவில்லை. 

துருக்கி பற்றிய டெவ்ரிம்சி யொல்லின் அரசியல் நிலைப்பாடு இது: "துருக்கியில் முதலாளித்துவம் மேலிருந்து திணிக்கப் பட்டது. பிற்காலத்தில் வெளிநாட்டு உதவியுடன் நிலைநாட்டப் பட்டது. அந்தக் காரணத்தினால், துருக்கி முதலாளித்துவம் பலவீனமானதாகவும், நிலப்பிரபுத்துவ பிரச்சினைகளுடன் போராட வேண்டிய நிலையிலும் உள்ளது. ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தியங்கும், தொழிலதிபர்கள், நிலவுடமையாளர்கள், மேட்டுக்குடி வர்க்கத்தினர், துருக்கியில் முதலாளித்துவத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அந்த ஆளும் வர்க்கம், பாசிஸ்டுகளை அடியாட்படையாக வைத்துக் கொண்டுள்ளது. அதனால், பாசிஸ்டுகளை தோற்கடிப்பது சோஷலிச புரட்சிக்கு முன் நிபந்தனையாக உள்ளது."  

முந்திய THKP-C இயக்கத்திற்கும், பிந்திய டெவ்ரிம்சி யொல் இயக்கத்திற்கும் இடையில் ஒரு பிரதானமான கொள்கை வேறுபாடு இருந்தது. முன்னையது ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தது. பிந்தியது மக்கள் விழிப்புக் குழுக்கள் அமைத்து, மக்கள் போராட்டமாக மாற்ற விரும்பியது. முதலில் மக்கள் புரட்சிக் கமிட்டிகள் உருவாக்கி, பின்னர் தேவைப் பட்டால் அவற்றை ஆயுதபாணிகளாக்கலாம் என்றது. 

மக்கள் கமிட்டிகள், எதிர்கால சோஷலிச மாற்று சமூகத்திற்கான வித்துகள் என்று சொல்லப் பட்டது. மக்கள் தமது அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு பயிற்சிக் களமாக மக்கள் கமிட்டிகள் இருக்கும். குறிப்பாக, பத்சா நகரில், மக்கள் கமிட்டிகள் செயற்பட ஆரம்பித்தன. அங்கே பாசிஸ்டுகள் விரட்டப் பட்ட பின்னர், பெருமளவு மக்கள் ஆதரவு கிடைத்தது. 

1979 ஆம் ஆண்டு, பத்சா நகர சபையை நிர்வகித்த, சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மேயர் காலமானார். அதனால் அங்கே இடைத் தேர்தல் வந்தது. டெவ்ரிம்சி யொல் இடைத்தேர்தலில் பங்கெடுப்பதா, அல்லது பகிஷ்கரிப்பதா என்று விவாதம் நடந்தது. அரச அடக்குமுறைக்குள் சுதந்திரமான தேர்தல் நடக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி, கட்சித் தலைமை முடிவு செய்தது. இருப்பினும், பத்சா நகரில் கணிசமான அளவு மக்கள் ஆதரவு இருந்த படியால், டெவ்ரிம்சி யொல் தேர்தலில் போட்டியிட்டது. 

டெவ்ரிம்சி யொல் ஒரு அங்கீகரிக்கப் பட்ட கட்சியாக இருக்கவில்லை. அதனால், சென்மெஸ் ஒரு சுயேச்சை உறுப்பினராக நிறுத்தப் பட்டார். பிற கட்சிகளின் வேட்பாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை விட வித்தியாசமாக, சென்மெஸ் நேரடி ஜனநாயகத்தை கொண்டு வரப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். 

நகர சபை நிர்வாகத்தில் ஊழல், அணைவு அரசியல், போன்ற தீமைகளை இல்லாதொழிப்பதற்கு மக்கள் கமிட்டிகள் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். 14-10-1979 அன்று நடந்த தேர்தலில், சென்மெஸ்  61சதவீத வாக்குகளைப் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.  அவருடன் போட்டியிட்ட சமூக ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு 22 சதவீத ஓட்டுக்கள் விழுந்தன. 

உள்ளூராட்சி சபைக்கான இடைத் தேர்தல் முடிந்தவுடனே, 11 மக்கள் கமிட்டிகள் உருவாக்கப் பட்டன. அவற்றின் பொறுப்பாளர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப் பட்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கமிட்டிக் கூட்டங்கள், வெளிப்படையாக நடத்தப் பட்டன. 

மக்கள் கமிட்டிக் கூட்டங்களில் நடக்கும் விவாதங்கள், நகரின் பல பகுதிகளிலும் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகள் மூலம், மக்கள் அனைவருக்கும் கேட்கும் வசதி செய்யப் பட்டது. மக்களின் பல்வேறு பிரச்சினைகள், தேவைகளுக்காக, தனித் தனி கமிட்டிகள் நியமிக்கப் பட்டன.    

மக்களின் பிரதான பிரச்சினைகளான, பாதைகளை செப்பனிடுவது, கால்வாய் அமைத்தல், குடி நீர் மற்றும் மின்சார விநியோகம், போன்றவற்றை கவனிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில், மக்கள் கமிட்டிகள் பரித்துரைக்கும் திட்டமொன்றை நிறைவேற்றுவதற்கு, "சட்ட பூர்வமான" நகர சபையின் அங்கீகாரம் தேவைப் பட்டது. 

அன்று நடைபெற்ற தேர்தல் மேயர் பதவிக்கானது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் நகரசபை உறுப்பினர்களாக இருந்தனர். சமூக ஜனநாயகக் கட்சி பெருமளவு ஆசனங்களில் அமர்ந்திருந்தது. இருந்த போதிலும், மக்கள் கமிட்டிகள் பரிந்துரைத்த திட்டங்களுக்கு அந்தக் கட்சி உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினார்கள். 

மேயர் சென்மெஸ், மாதத்திற்கு இரண்டு தடவைகள் மக்கள் கமிட்டிக்கு முன்னால் சமூகமளித்தார். நகர சபை நிர்வாகத்தில் நடக்கும் விடயங்கள் தொடர்பாக, கமிட்டியில் கேட்கப் படும் கேள்விகளுக்கு பதில் கூறும் பொறுப்பை ஏற்றிருந்தார். 

நகர சபையின் கீழ் வேலை செய்த அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக ஒரு பொது ஒப்பந்தம் போடப் பட்டது. புரட்சிகர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (DISK) முன்மொழிந்த ஊழியர் சம்பளத் திட்டம், துருக்கி முழுவதற்கும் முன்னுதாரணமாக விளங்கியது. உதாரணத்திற்கு, அரசியல் ஈடுபாடு தொடர்பாக ஓர் அரச ஊழியர் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் பட்டாலும், அவரது சம்பளம் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வழங்கப் படும். அதற்குப் பிறகு, நான்கு வருடங்களுக்கு 25% கிடைத்துக் கொண்டிருக்கும். 

துருக்கியில் முன்னெப்போதும் கேள்விப் பட்டிராத நேரடி ஜனநாயகம், மக்களுக்கு புதுமையாக இருந்தது. உண்மையில், பத்சா நகரில் இரண்டு அதிகார மையங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. வழமையான அரச இயந்திரமான பொலிஸ், நீதிமன்றம் போன்றன அப்படியே இருந்தன. ஆனால், மக்கள் அவற்றின் உதவியை நாடுவது குறைந்து கொண்டே சென்றது. அதற்குப் பதிலாக, மக்கள் கமிட்டிகள் மக்களின் குறை, நிறைகளை கேட்டு நிவர்த்தி செய்தன. 

மக்கள் கமிட்டிகள் உள்ளூர் பொருளாதாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. முன்னர் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டிருந்த நிறுவனங்களை, மீண்டும் அரசுடமையாக்கியது. உதாரணத்திற்கு, குடிநீர், தானிய விநியோகம், பொதுப் போக்குவரத்து, துறைமுக மேற்பார்வை போன்றவற்றை குறிப்பிடலாம். அதனால், நகர சபைக்கு நிறைய வருமானம் கிடைத்தது. 

நீண்ட காலமாக, சட்டவிரோதமாக நடந்து கொண்டிருந்த வர்த்தகம் தடை செய்யப் பட்டது. கந்துவட்டிக் காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டது. பத்சா நகரவாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள் என்பதால், வருடத்திற்கு ஒரு தடவை தான் பணத்தை கண்ணால் காண்பார்கள். அதாவது, அறுவடைக் காலத்தில் விளைச்சலை விற்றால் தான் பணம் கிடைக்கும். அதனால், இடைப்பட்ட காலத்தில் கந்துவட்டிக் காரர்களிடம் கடன் வாங்கி, அநியாய வட்டி கட்டிக் கொண்டிருந்தார்கள். விவசாயிகள் வாங்கிய கடனை மட்டுமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கமிட்டிகள் உத்தரவு பிறப்பித்தன. 

புரட்சியின் இன்னொரு முக்கியமான சாதனையாக, தெருக்கள் அமைத்ததை குறிப்பிடலாம். பத்சா நகரில் பெரும்பாலான தெருக்கள் செப்பனிடப் படாமல் இருந்தன. மழைக் காலத்தில் சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். அதனால், அவற்றை தார் போட்டு நிரப்பும் பணிகள் ஆரம்பமாகின. தெருக்களை புனரமைப்பதற்கு, ஆயிரக் கணக்கான தொண்டர்கள் தாமாகவே முன்வந்து வேலை செய்தனர். 

துருக்கியின் பல பாகங்களில் இருந்தும், புரட்சியாளர்கள் திரண்டு வந்தார்கள். அயலில் இருந்த நகரங்களில் இருந்தும், வாகன, உபகரண உதவி கிடைத்தது. அதனால், தொடங்கப் பட்டு சில வாரங்களிலேயே அனைத்து தெருக்களும் செப்பனிட்டு முடிக்கப் பட்டன. 

1980 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பத்சா நகரில் "மக்கள் பண்டிகை" அறிவிக்கப் பட்டது. நகர மத்தியில் மேடைகள் அமைக்கப் பட்டு, ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டம் நடைபெற்றது. துருக்கி முழுவதிலும் இருந்து பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட வெகுஜன கலாச்சாரத்திற்கு மாற்றாக, இடதுசாரி கலாச்சார விழுமியங்களை வெற்றிகரமாக மேடையேற்றினார்கள். 

நிச்சயமாக, துருக்கி அரசாங்கம் பத்சா புரட்சியை கலக்கத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. தலைநகர் அங்காராவில் இருந்து, வெறும் 500 கிலோ மீட்டர் தூரத்தில் பத்சா இருந்தது. 1978 ம் ஆண்டு. ஜோரும், மாராஸ், ஆகிய இடங்களில், சாம்பல் ஓநாய் பாசிஸ்டுகள், அலாவி சிறுபான்மையின மக்களை படுகொலை செய்திருந்தனர். அந்த இனப்படுகொலை துருக்கியை உலுக்கி இருந்தது.

பிரதமர் டெமிரேல், அந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தி, பாசிஸ்டுகளை தூண்டி விடும் வகையில் உரையாற்றினார்: "ஜோருமை மறந்து விடுங்கள்... பத்சாவை பாருங்கள்... இப்போதே நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால், எதிர்காலத்தில் நூறு பத்சாக்கள் உருவாகும்."

அரசு நிறுவனங்கள், பத்சா நகர சபை நிர்வாகத்தின் மேல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தன. பெட்ரோல் போன்ற பொருட்களின் விநியோகம் தடுக்கப் பட்டது. ஆடிட்டர் பரிசோதகர்களை அனுப்பி, நகர சபை கணக்குகளை ஆராய்ந்தது.

இதற்கிடையே, முதலாளிய ஊடகங்கள் அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டன. பத்சாவில் "ஒரு குட்டி மொஸ்கோ" உருவாகி விட்டது என்று பதறின. அது ஒரு தனியான குடியரசாக பிரிந்து சென்று விட்டதாகவும், பாஸ்போர்ட் இல்லாமல் யாரும் அங்கே செல்ல முடியாதென்றும், கட்டுக்கதைகளை பரப்பின. 

நகர சபை கட்டிடம், காவல்துறையினரால் அடிக்கடி காரணமின்றி சோதனையிடப் பட்டது. அங்கு வேலை செய்த ஊழியர்கள் துன்புறுத்தப் பட்டனர். பத்சா நகரவாசிகள், அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கு செல்லும் போதெல்லாம் தாக்கப் பட்டனர். அவர்கள் வைத்திருந்த பணம், பொருட்கள் வழிப்பறி செய்யப் பட்டன. பாசிஸ்டுகள் அவர்களைக் கண்டால் குண்டாந்தடிகளால் தாக்கினார்கள். 

பத்சா நகரம் அமைந்துள்ள, ஒர்டு மாகாணத்தின் ஆளுநராக, பாசிஸ MHP கட்சியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப் பட்டார். அவர் "பத்சாவை மீட்டெடுக்கப் போவதாக" சூளுரைத்தார். பாதுகாப்புப் படைகளையும், பாசிஸ குண்டர்களையும், பத்சாவை நோக்கி நகர்த்தினார். 

11-7-1980 அன்று, பத்சா மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியது. அயல் நாட்டின் மீது படையெடுப்பது போன்று, பாதுகாப்புப் படைகள் கவச வாகனங்கள், தாங்கிகள் சகிதம் முன்னேறிச் சென்றன. கடலில் இரண்டு போர்க் கப்பல்கள் ரோந்து சுற்றின. இவை யாவும் அங்கே ஒரு யுத்தம் நடப்பது போன்ற பிரமையை உண்டாக்கின. 

இராணுவ நடவடிக்கையின் போது, சென்மெஸ் உட்பட, 600 பேரளவில் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப் பட்டனர். தப்பி ஓடக் கூடியவர்கள், காடுகளுக்குள்ளும், மலைகளிலும் மறைந்து கொண்டார்கள். பெரும் படையை எதிர்த்து நிற்பது தற்கொலைக்கொப்பானது என்பதால், யாரும் ஆயுதமேந்திப் போராடவில்லை. அவ்வாறு போராடி இருந்தாலும், ஆயுத வன்முறையை துருக்கி அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நினைத்தனர். 

கைது செய்யப் பட்டவர்கள், முகமூடி அணிந்த தலையாட்டிகளின் முன்னால் நிறுத்தப் பட்டனர். முன்னர் பத்சாவில் வாழ்ந்த, இடதுசாரிகளினால் விரட்டப்பட்ட பாசிஸ இளைஞர்களே, படையினருடன் கூட வந்து காட்டிக் கொடுத்தனர். இராணுவ நடவடிக்கையின் பின்னர், பாசிஸ்டுகள் பத்சா நகரில் சுதந்திரமாக தங்க முடிந்தது. பத்சா இராணுவ நடவடிக்கையானது, துருக்கியில் வரப் போகும் இராணுவ ஆட்சிக்கு ஒத்திகையாக அமைந்திருந்தது. 12-9-1980 அன்று, துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி நடந்தது. 

சென்மெஸ்ஸுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப் பட்டது. அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்றுவதற்கு முயற்சித்தமை ஒரு குற்றமாக தீர்ப்புக் கூரப் பட்டது. சிறையில் அடைக்கப் பட்டிருந்த சென்மெஸ், தனது 47 வது வயதில், 4-5-1985 அன்று மாரடைப்பினால் காலமானார். 

பத்சா புரட்சி பத்து மாதங்கள் நீடித்தது. அதற்கு காரணமான புரட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். மார்க்சிஸ்டுகள் ஆனால் லெனினிஸ்டுகள் அல்லர். இடதுசாரி சோஷலிஸ்டுகள் என்று கூறலாம். அவர்களால் பூரணமான சோஷலிச சமுதாயத்தை உருவாக்க முடியவில்லை. அரசு இயந்திரத்தின் மேல் கை வைக்கவில்லை. அரசு நிறுவனங்கள் வழமை போல இயங்கிக் கொண்டிருந்தன. தனியுடைமை, சொத்துரிமை ஆகியவற்றில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. மேலும் சில கலாச்சார மரபுகள், இடதுசாரி ஒழுக்கக் கோட்பாட்டின் பெயரில் நீடித்தன. 

பத்து மாத பத்சா புரட்சியானது, ஒரு ஜனநாயக மறுமலர்ச்சியை உண்டாக்கி விட்டிருந்தது. அடக்குமுறை இல்லாதிருந்தால், அது இன்னும் சிறப்பாக வளர்ந்திருக்கும். ஆயினும், கோட்பாடுகளில் காலம் கழிக்காமல், மக்கள் கமிட்டிகள் மூலம் மாற்று உலகை சிருஷ்டிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தது. மக்கள் சுதந்திரமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தனர். 

(நன்றி: Doorbraak, oktober 2012, Mehmet Kirmaci எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.)

Friday, June 13, 2014

பாகிஸ்தான் வரலாற்றில் மறைக்கப் பட்ட சோஷலிசத்திற்கான வர்க்கப் போராட்டம்


பாகிஸ்தான் என்றதும், இஸ்லாமிய மத அடிப்படைவாதமும், தாலிபானும் தான் பலருக்கு நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு, சராசரி பொது மக்களின் மனங்கள் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளன. பாகிஸ்தானில் இன்றைக்கும் நிலவும் நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகள், அதற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம், யாருடைய கவனத்தையும் கவர்வதில்லை. மிதவாத சமூக ஜனநாயகவாதிகள் முதல் தீவிர மாவோயிஸ்ட்கள் வரையில், இன்றைக்கும் பல இடதுசாரி கட்சிகள் அங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எழுபதுகளில், ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஆப்கான் முஜாகிதீன் குழுக்களுக்கு உதவிய வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், பலருக்குத் தெரியாத ஓர் உண்மை உண்டு. பாகிஸ்தானில் இயங்கும் கம்யூனிஸ்ட் அமைப்புகள், சோவியத் இராணுவ உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றும் அபாயம் நிலவுவதாக அப்போது வதந்தி கிளப்பி விடப் பட்டது. அந்தக் காரணத்தைக் கூறித் தான், பாகிஸ்தான் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தது.

பாகிஸ்தானில், அஷ்டநகர் மக்கள், ஒரு வர்க்கப் போராட்டத்தின் ஊடாக தமது சமூக பண்பாட்டு விடுதலையை பெற்றுக் கொண்டனர். மார்க்சிய லெனினிச சித்தாந்தம், அந்த மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்திருந்தது. அஷ்ட நகர் என்பது, சமஸ்கிருதத்தில் எட்டு கிராமங்களை குறிக்கும். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மலைப் பிரதேசத்தில், நிலப்பிரபுக்களுக்கு எதிராக விவசாயக் கூலிகள் ஒரு வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். அஷ்ட நகர் பகுதியில் நடந்த சோஷலிசப் புரட்சியை பற்றிய முழுமையான ஆவணப் படம் இது. வரலாற்றில் மறைக்கப் பட்ட பாகிஸ்தானிய உழைக்கும் மக்களின் போராட்டம் பற்றிய ஆவணப் படுத்தல்.

 

Hashtnagar - a song of another world door ammaraziz1


மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பில் உள்ள கட்டுரையை வாசிக்கவும்: 
 Pakistan: Hashtnagar, a land forgotten

Saturday, June 25, 2011

பின்லாந்தின் சோஷலிசப் புரட்சி - ஒரு மீளாய்வு

சோஷலிச பின்லாந்தின் கொடி

நமது கால இளைஞர்கள், "நோக்கியா" செல்பேசியின் தாயகமான பின்லாந்து குறித்து, அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பிய கண்டத்தின் பெரிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து, இன்று அரசியல் குழப்பங்களற்ற அமைதிப் பூங்காவாக காட்சியளிக்கின்றது. இந்த வருடம், உலகில் சிறந்த வாழ்க்கை வசதிகளைக் கொண்ட முதலாவது நாடாக தெரிவு செய்யப் பட்டதில் அந் நாட்டினருக்கு பெருமை தான். சுமார் என்பது வருடங்களுக்கு முன்னர், பின்லாந்து மிகவும் வறிய நாடாக இருந்தது. ரஷ்யாவை பின்பற்றி சோஷலிசப் புரட்சி வெடித்ததும், அதன் விளைவாக நடந்த உள்நாட்டுப் போரில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்ட வரலாறுகள் இன்று பெரிதும் மறைக்கப் பட்டு விட்டன.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நடந்த இது போன்ற புரட்சிகள் பல வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன. கிடைத்தற்கரிய ஆவணங்கள் பல, ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள "சர்வதேச சமூக வரலாற்று ஆய்வு மையத்தில்" (International Institute of Social History) பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அந்த நிலையத்தின் நூலகத்தில் சில நாட்களை செலவிட்டதன் பயனாக, பல தகவல்களை அறிய முடிந்தது. இந்தக் கட்டுரையில் பின்லாந்து பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.

பின்லாந்து ஐரோப்பாக் கண்டத்தில் தனிச் சிறப்பு மிக்க நாடு. பின்லாந்து நாட்டு மக்கள் பேசும் Suomen kieli மொழியடிப்படையில் அமைந்த உத்தியோகபூர்வ பெயர்: சுஒமி(Suomi). எமக்கு நன்கு பரிச்சயமான ஜெர்மானிய, அல்லது லத்தீன், அல்லது ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேராத தனித்துவமான மொழி அது. எஸ்தோனியா, லாட்வியா நாடுகளில் பேசப்படும் மொழிகளுக்கு நெருக்கமானது.

சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளின் வட பகுதியில் வாழும் "சாமி" (Sami) இன மக்கள், மற்றும் வட-மேற்கு ரஷ்யாவில் வாழும் கரேலிய (karelia) இன மக்கள் பேசும் மொழிகளுடன் தொடர்புடையது. பின்லாந்து என்பது, சுவீடிஷ்காரர்கள் வைத்த பெயராக இருக்கலாம். நீண்ட காலமாக பின்லாந்து அகண்ட சுவீடிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது. பிற்காலத்தில், சுவீடனுடன் போரிட்டுக் கொண்டிருந்த ரஷ்ய சாம்ராஜ்யத்தினால் உள்வாங்கப் பட்டது. 1918 ல் சுதந்திர நாடாகும் வரையில், ரஷ்யாவின் பகுதியாகவிருந்தது.

சார் மன்னனின் ஆட்சிக் காலத்திலேயே, பின்லாந்து ஓரளவு சுயாட்சி அதிகாரத்தை பெற்றிருந்தது. சார் காலத்தில், பின்லாந்து தேசியவாதிகள் ரஷ்ய மொழித் திணிப்பை எதிர்த்து கலகம் செய்தனர். ரஷ்யாவில் லெனின் தலைமையில் இடம்பெற்ற போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், பின்லாந்துக்கு சுதந்திரம் வழங்கப் பட்டது. முன்னர் சார் மன்னனால் ஆளப்பட்ட ரஷ்யப் பகுதிகள், புதிய சோவியத் அரசுக்குள் உள்வாங்கப் பட்டன.

ஆயினும், போல்ஷெவிக்குகள் எதற்காக பின்லாந்தை சுதந்திர நாடாக்கினார்கள் என்ற கேள்வி எழலாம். அன்றைய புவிசார் அரசியல் காரணிகள் முக்கியமாக இருந்துள்ளன. முதலில், சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியிருந்த லெனின் குழுவினர், ஜெர்மனியின் உதவியுடன் பின்லாந்து வரை ரயிலில் வந்தனர். பின்லாந்து எல்லையில் இருந்து சுமார் 200 கி.மி. தூரத்தில் சென்.பீட்டர்ஸ்பேர்க் நகரம் இருப்பது குறிப்பிடத் தக்கது. லெனின் குழுவினர் பத்திரமாக ரஷ்யா போய்ச் சேருவதற்கு உதவிய பின்லாந்துக்கு நன்றிக்கடனாக, அதற்கு சுதந்திரம் வழங்கி இருக்கலாம். மேலும், ஜெர்மனியின் வற்புறுத்தலும் பின்லாந்து சுதந்திரத்தை விரைவு படுத்தியது எனலாம்.

"தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" குறித்து லெனின் எழுதிய கோட்பாடுகளும், பின்லாந்து தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்து விட்டது. இன்று "தமிழ்த் தேசியவாதிகள்" அதைக் காட்டித் தான், இடதுசாரி சக்திகளை தமக்குப் பின்னால் வருமாறு அழைக்கின்றனர். "தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவன் கம்யூனிஸ்ட் அல்ல," என்று புது வியாக்கியானங்களை கொடுக்கின்றனர். "பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணயம்" என்ற கோட்பாடு, அந்த தேசங்களின் பாட்டாளி வர்க்கம் சமதர்ம புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்ற நோக்கில், லெனினால் எழுதப்பட்டது.

வலதுசாரி தேசியவாத சக்திகளே அந்த உரிமையை பயன்படுத்திக் கொள்கின்றன என்பதும், அதிகாரத்திற்கு வந்ததும் பாட்டாளிவர்க்க புரட்சியாளர்களை ஒடுக்குவார்கள் என்பதும், லெனின் கண்கூடாக கண்ட உண்மைகளாக உள்ளன. இதனால், பிற்காலத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, சோவியத் ஒன்றியத்திற்குள் தீர்வு எட்டப்படுவதை வலியுறுத்தியது. அது வேறு விடயம். இப்போது பின்லாந்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்று விரிவாக ஆராய்வோம்.

பின்லாந்தில் "சுதந்திரப் போராட்டம்" நடந்ததாகவும், அந்தக் காலத்தில் வடக்கே உள்ள வாசா (Vaasa) நகரம் தற்காலிக தலைநகரமாக திகழ்ந்ததாகவும், முதலாளித்துவ சரித்திர ஆசிரியர்கள் எழுதுகின்றனர். அநேகமாக, பின்லாந்து பாட நூல்களிலும், வெளிநாட்டவர்களுக்கான அறிமுக கையேடுகளிலும் அவ்வாறே குறிப்பிடப் படுகின்றது. ரஷ்ய மேலாதிக்கத்தை எதிர்த்து சுதந்திரம் பெற்றதைப் போல காட்டுவதற்காக, பின்லாந்தில் நிலை கொண்டிருந்த ரஷ்ய இராணுவ வீரர்களின் "ஆயுதக் களைவு பிரச்சினை" எடுத்துக் காட்டப் படுகின்றது. உண்மையில் சுதந்திரப் பிரகடனத்தை அடுத்துக் கிளம்பிய சோஷலிசப் புரட்சியை சிறுமைப் படுத்தவே அவ்வாறு பரப்புரை செய்யப் பட்டது.

ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்தில், ரஷ்யப் படைகள் நிலை கொண்டிருந்ததில் வியப்பில்லை. அதே நேரம், ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், ரஷ்ய இராணுவத்தினுள் பிளவு ஏற்பட்டதையும் மறுக்க முடியாது. அக்டோபர் புரட்சியின் பின்னர் ரஷ்யாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததும், புரட்சிக்கு ஆதரவான செம்படைகளும், மன்னருக்கு விசுவாசமான வெண் படைகளும் மோதிக் கொண்டன. இதே போன்றதொரு பிரிவு, பின்லாந்திலும் தோன்றியது. பழைமைவாத, நிலப்பிரபுத்துவ ஆதரவு வெண்படை அதிகாரத்தை கைப்பற்றத் துடித்தது. பின்லாந்தின் பாட்டாளி வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்திய சமூக- ஜனநாயகக் கட்சி அதற்கு சவாலாக விளங்கியது. அவர்களைப் பொறுத்த வரையில், சோஷலிசப் புரட்சிக்கு ஏற்ற தருணம் அது.

"பின்லாந்தில் ஒரு போதும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு இருக்கவில்லை. ஆகவே ரஷ்யா, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்ததைப் போன்று புரட்சிக்கு ஏதுவான சூழ்நிலை இருக்கவில்லை." பூர்ஷுவா சரித்திரவியலாளர்களின் இன்னொரு திரிபுபடுத்தல் இது. அந்தக் கூற்றில் அரைவாசி மட்டுமே உண்மை. பின்லாந்தின் பெரும்பகுதி நாட்டுப்புறங்களில் சிறு விவசாயிகள், தமது ஜீவனோபாயத்தை தாமே தேடிக் கொள்ளும் சுதந்திரம் பெற்றிருந்தனர். அவர்கள் எந்தவொரு நிலப்பிரபுவுக்கும் திறை செலுத்தவில்லை. இன்னும் வடக்கே போனால், பழங்குடியினரின் "லாப் லான்ட்"(Lapland) பிரதேசம் வரும். (அங்கே தான் கிறிஸ்மஸ் தாத்தா வாழ்வதாக ஐதீகம்!)

லாப் லான்ட் பழங்குடியினர் இன்றைக்கும் மான் பண்ணைப் பொருளாதாரத்தை நம்பி வாழ்கின்றனர். சுய பொருளாதாரத்தை நம்பி வாழும் மக்கள் மத்தியில் பின்லாந்து தேசியவாதிகள் ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், அன்று மட்டுமல்ல இன்றைக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும், தொழிற்துறை வளர்ச்சி கண்ட தென் பின்லாந்துக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது. பின்லாந்தின் தெற்குப் பகுதியில் தான் அதிகளவு நகரமயமாக்கல் இடம்பெற்றுள்ளது. நகரங்களின் தோற்றத்திற்கு வித்திட்ட தொழிற்புரட்சியின் காரணமாக, பெருந்திரள் பாட்டாளி மக்கள் தென் பின்லாந்தில் வசிக்கின்றனர். மத்திய காலத்தில், சுவீடிஷ் நிலப்பிரபுக்களும் தெற்குப் பகுதிகளில் தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதனால், பெருமளவு விவசாயக் கூலிகளும் அங்கே காணப்பட்டனர். அத்தகைய சமூகத்தில், சமதர்மக் கொள்கைகள் பரவியதில் வியப்பில்லை.

பின்லாந்தின் சுதந்திரத்திற்கு முன்னரே, பாராளுமன்றம் அமைக்கப் பட்டு விட்டது. தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்ற சமூக- ஜனநாயகக் கட்சி அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தது. உலகிலேயே முதல் தடவையாக, ஒரு சோஷலிசக் கட்சி அதிகளவு ஓட்டுகளைப் பெற்றது பின்லாந்தில் தான். நிலைமை அவ்வாறு இருக்கையில், "ரஷ்ய போல்ஷெவிக்குகளின் சூழ்ச்சியினால் பின்லாந்தின் செம் புரட்சி இடம்பெற்றதாக," என்று வரலாற்றைப் புரட்டுகின்றனர். உண்மையில், பின்லாந்துப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தலைமையேற்ற சமூக- ஜனநாயகக் கட்சி லெனினைப் பின்பற்றவில்லை. அந்தக் கட்சியினர் மார்க்சிய நெறிகளை நம்பினார்கள். அதே நேரம், லெனினிசம் தவறான வழி முறைகளைக் கொண்டது எனக் கருதினார்கள். லெனின் முன் மொழிந்த "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை.

பின்லாந்து சோஷலிஸ்டுகளின் வருடாந்த மகாநாடு ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின், புரட்சிக்கு தயார் படுத்துமாறும், அதற்கு ரஷ்ய போல்ஷெவிக்குகளின் ஆதரவு கிடைக்கும் என்றும், உறுதிமொழி வழங்கினார். ஆயினும், பெரும்பான்மை பின்லாந்து சோஷலிஸ்டுகள், தேசியவாத அரசியலையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் விரும்பினார்கள். "பின்லாந்துக்காரர்கள் புரட்சிக்கு தகுதியற்ற மிதவாதிகள்" என்று லெனின் சாடினார். உண்மையில், சோஷலிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றும் நேரத்தில், பின்லாந்துக்கு சுதந்திரம் வழங்கவே போல்ஷெவிக்குகள் விரும்பினார்கள்.

"பின்லாந்தின் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் (ரஷ்ய) பேரினவாதிகள்...." (V.I.Lenin, Speech on the National Question) ரஷ்ய தரப்பு சலசலப்புகளை மீறித் தான் லெனின் பின்லாந்துக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தார். சுவீடனிடமிருந்து நோர்வே பிரிந்து சென்றதை உதாரணமாகக் காட்டினார். பின்னிஷ் தேசியவாதிகள் பூரண சுதந்திரம் பெறுவதில் ஆர்வமாக இருந்தனர். அந்த விடயத்தில் பின்னிஷ் சோஷலிஸ்டுகளும் உடன்பட்டனர். ஆனால், சுதந்திரத்தின் பின்னர் தேசியவாதிகள் தம்மை அழித்தொழிக்கத் துணிவார்கள் என்பதை சோஷலிஸ்டுகள் எதிர்பார்க்கவில்லை. வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு தொழிலாளர்கள் மடிந்தனர். அந்த சம்பவம் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

சோஷலிஸ்டுகள், "தொழிலாளர் பாதுகாப்புப் படைகளை" உருவாக்கத் தொடங்கினார்கள். மறு பக்கத்தில் தேசியவாதிகளும் ஆயுதக் குழுக்களை அமைத்துக் கொண்டனர். பின்னிஷ் தேசியவாதிகளுக்கு ஜெர்மனியின் ஆதரவு கிட்டியது. ஜேர்மனிய, சுவீடிஷ் வீரர்கள், பின்னிஷ் தேசியவாத வெண் படையில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் தளபதியான மன்னேர்ஹைம் சார் மன்னனின் இராணுவத்தில் பணியாற்றியவர். ஜெர்மனியர்களால் பயிற்றுவிக்கப் பட்டவர். இன்றுள்ள பின்லாந்தின் "ஜனநாயக அரசு" கூட, அவர் ஒரு ஒப்பற்ற படைத் தளபதி என்று, மன்னேர்ஹைம் புகழ் பாடுகின்றது. ஆனால், மன்னேர்ஹைம் தலைமை தாங்கிய வெண் படையினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து மௌனம் சாதிக்கின்றது.

சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டில்
இருந்த பின்லாந்தின் பகுதிகள்
1918 ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த போர், பின்லாந்து மக்கள் மத்தியில் பாரிய பிளவை ஏற்படுத்தியது. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், கொள்கை அடிப்படையில் பிரிந்து நின்றனர். ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொன்று குவித்தனர். வெளியில் இருந்து பார்ப்போருக்கு அப்படித் தான் தெரியும். ஆனால் அது ஒரு வர்க்கப் போர். வெவ்வேறு இனங்களை சேர்ந்தோர், தாம் சார்ந்த வர்க்கத்திற்கு ஆதரவளித்தனர். உதாரணத்திற்கு, பின்னிஷ் சோஷலிச செம்படையுடன் சேர்ந்து ரஷ்ய தொண்டர்கள் போரிட்டனர். அதே போல, பின்னிஷ் தேசியவாத வெண் படையில் ஜெர்மன், சுவீடிஷ் இனத்தவர்கள் சேர்ந்திருந்தனர்.

சனத்தொகை அடர்த்தியுள்ள, பெரு நகரங்களைக் கொண்ட பின்லாந்தின் தெற்குப் பகுதி சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. "பின்லாந்து சோஷலிசக் குடியரசின்" தலைநகராக ஹெல்சிங்கி இருந்தது. சனத்தொகை குறைந்த பின்லாந்தின் வட- மத்திய பகுதி தேசியவாதப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. "பின்லாந்து மன்னராட்சியின்" தலைநகராக வாசா இருந்தது.

ஆரம்பத்தில் சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ரஷ்யாவில் இருந்து ஆயுத விநியோகம் நடந்து கொண்டிருந்தது. இன்னமும் வாபஸ் பெறப்படாத ரஷ்ய படைகளும் உதவின. ஆயினும், ஏற்கனவே ஜெர்மனியுடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்திற்கு மதிப்பளித்து ரஷ்ய ஆதரவு விலத்திக் கொள்ளப் பட்டது. பின்லாந்தில் செல்வாக்கு செலுத்த, இது தக்க தருணம் என்று ஜெர்மனி கருதியது. வெண் படையின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, ஜெர்மன் படைகள் அனுப்பி வைக்கப் பட்டன.

பின்லாந்து சோஷலிச நாடானால், சுவீடிஷ் சோஷலிச இயக்கத்தையும் புரட்சிக்கு தூண்டி விடும் என்று பயந்த சுவீடனும், தொண்டர் படை அனுப்பியது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற்ற தேசியவாதப் படைகள், அனைத்து முனைகளிலும் முன்னேறிச் சென்றன. குறிப்பாக பின்லாந்தின் தெற்குக் கரையோரம், ஜெர்மன் படைகள் நேரடியாக வந்திறங்கியமை, சோஷலிச செம்படைக்கு பேரிடியாக அமைந்து விட்டது. அதுவே பின்லாந்தின் சோஷலிசப் புரட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம். சுமார் மூன்று மாத காலம் நிலைத்து நின்ற "பின்லாந்து சோஷலிசக் குடியரசு" முடிவுக்கு வந்தது.

மூன்று மாத போரில், இரண்டு தரப்பிலும் குறைந்தது முப்பதாயிரம் பேர் கொல்லப் பட்டனர். செம்படையினர் பக்கமே அதிகளவு உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டது. பெருமளவு செம்படை வீரர்கள், இராணுவ பயிற்சி பெற்ற தொழில் முறை வீரர்கள் அல்ல. அவர்கள் ஆயுதமேந்திய சாதாரண மக்களாவர். செம்படையின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம். சோஷலிச புரட்சிக்கு தலைமை தாங்கியவர்களும், செம்படையின் முக்கிய உறுப்பினர்களும், சோவியத் யூனியனுக்கு தப்பியோடி விட்டார்கள். கீழ்நிலைப் போராளிகளும், ஆதரவாளர்களும் அகப்பட்டுக் கொண்டனர். நூற்றுக் கணக்கான சரணடைந்த செம்படையினர், நிராயுதபாணிகளாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஓராயிரத்திற்கும் குறையாத ரஷ்ய தொண்டர்களும் நீதிக்கு மாறாக படுகொலை செய்யப்பட்டனர்.

போர் நடந்த காலத்தில், செம்படையினரும் "நீதிக்கு புறம்பான கொலைகளில்" ஈடுபட்டதாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. நிலவுடமையாளர்கள்,முதலாளிகள்,அரசு அதிகாரிகள், சில மதகுருக்கள் போன்றோரே செம்படையினரால் "மரண தண்டனை" விதிக்கப்பட்டனர். ஆனால், தேசியவாதப் படையினரோ, சோஷலிசக் கட்சி உறுப்பினர்கள், அனுதாபிகள் எல்லோருக்கும் "மரண தண்டனை" விதித்தார்கள். அவர்கள் மீது "தேசத் துரோக" குற்றச்சாட்டு சுமத்தியே தண்டனை நிறைவேற்றப் பட்டது. சோஷலிசத்திற்கு ஆதரவானோர் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரம், இன்று வரை கணக்கெடுக்கப் படவில்லை. குறைந்தது பத்தாயிரம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம்.
சரணடைந்த செம்படைக் கைதிகள் சுட்டுக் கொல்லப் படுகின்றனர்.
சோஷலிசப் புரட்சிக்கு ஆதரவளித்த மக்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப் பட்டனர். பல வருடங்களாக அவர்கள் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடந்தனர். முகாம்களுக்கு உள்ளேயும் கொலைகள் நடந்தன. இதை விட, உணவுப் பற்றாக்குறை காரணமாக பட்டினி கிடந்தது மடிந்தோர் ஆயிரம். சுகாதார வசதி இல்லாததால் தொற்று நோய்களும் பரவின. மொத்தம் பத்தாயிரம் பேராவது தடுப்பு முகாம்களில் இறந்திருப்பார்கள்.

ஹெல்சிங்கி நகருக்கு அண்மையில் உள்ள Suomenlinna தீவு, ஒரு காலத்தில் கொலைகள் மலிந்த தடுப்பு முகாமாக செயற்பட்டது. பின்லாந்து அரசு, தனது கடந்த கால போர்க்குற்றங்களை மறைப்பதற்காக, இன்று அந்த தீவை சுற்றுலாத்தலமாக்கியுள்ளது. பின்லாந்தின் தோற்றுப் போன சோஷலிசப் புரட்சியும், உள்நாட்டுப் போரும், மக்கள் மத்தியில் ஆறாத ரணங்களை ஏற்படுத்தி விட்டது. அண்மைக் காலம் வரையில், இடதுசாரி பின்னிஷ் மக்களும், வலதுசாரி பின்னிஷ் மக்களும், குரோதத்துடன் வாழ்ந்து வந்தனர். ஒருவர் மற்றவரைக் கண்டால் வெறுக்குமளவிற்கு, அவர்கள் மனதில் வன்மம் குடி கொண்டிருந்தது.

பின்லாந்து சோஷலிசப் புரட்சியின் தோல்வியானது, இடதுசாரிகள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தியது. மிதவாத சமூக - ஜனநாயகவாதிகள் புதிய அரசுடன் ஒத்துழைத்தனர். அதற்கு மாறாக புரட்சியை தொடர விரும்பியவர்கள், "பின்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி"யை ஸ்தாபித்தனர். அவர்கள் எல்லோரும் சோவியத் யூனியனில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால், சோவியத் சார்பு நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். சோஷலிசப் புரட்சியின் தோல்விக்கு அவர்கள் முன்வைத்த விமர்சனம் பின்வருமாறு: "புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் ஜனநாயகவாதிகள். சோவியத் யூனியனுடன் கூட்டமைப்பை விரும்பாதவர்கள். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை." 

ஆமாம், பின்லாந்து புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள், "நிரந்தரப் புரட்சியை" முன்னெடுத்த சமூக- ஜனநாயகவாதிகள். இன்று மேற்கத்திய ஜனநாயகத்தில் காணப்படும் "கருத்துச் சுதந்திரம், பல கட்சி ஜனநாயகம்" போன்றவற்றை நடைமுறைப் படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார்கள். உழைக்கும் மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டால் போதும். மக்கள் ஆட்சி மலரும் என்று நம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அதனை, "தூய ஜனநாயகவாதம்" என்று விமர்சித்தது.

__________________________________________________

படங்களுக்கான விளக்கம்:

1.மேலே: சோஷலிச பின்லாந்தின் கொடி
2.மத்தி: சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பின்லாந்தின் பகுதிகள். செந்நிற மையினால் காட்டப்பட்டுள்ளது.
3.கீழே: சரணடைந்த செம்படைக் கைதிகள் சுட்டுக் கொல்லப் படுகின்றனர்.
___________________________________________________


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்:

1.Dokument från Finska Inbördeskriget (Hannu Soikkanen)
(ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்பட்டது. பல கிடைத்தற்கரிய ஆவணங்களை தொகுத்துள்ளது.)
2.A brief History of Modern Finland (Martti Häikiö)
3.The Winter War (Engle & Paananen)
4.Speech on the National Question (V.I.Lenin)
5.மற்றும் International Institute of Social History நூலகத்தில் கிடைத்த ஆவணங்கள்.