Saturday, November 01, 2014

கத்தி சினிமாவின் "இட்லி கம்யூனிசம்!" - ஒரு கார்பரேட் கனவுப் புரட்சி!!


"கத்தி கம்யூனிசப் படமா?" என்று, மீண்டும் வர்க்க வெறுப்புடன் சிலர் பேசி வருகின்றனர். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அநீதியை தட்டிக் கேட்கும் கதாநாயகனின் தனி நபர் சாகசப் படங்கள் எல்லாம் "கம்யூனிசப்" படங்கள் தான். 

சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிரான, உழைக்கும் மக்களின் கோபாவேச உணர்வுகளை கட்டுப்படுத்துவதே, இது போன்ற தனி நபர் சாகச திரைப் படங்களை தயாரிப்பதன் நோக்கம். சினிமாவில் தமிழீழம் கிடைக்கும் என்று நம்பும் காலத்தில் இது ஒன்றும் புதினம் அல்ல.

கத்தி முருகதாசின் முன்னைய படமான ஏழாம் அறிவு, ஒரு "தமிழ் தேசியப் படம்". டி.எஸ்.சேனநாயக்க காலம் தொடங்கி மகிந்த வரைக்கும், இலங்கைத் தமிழ் தேசியவாதிகள் கூடிக் குலாவி அமைச்சர்களாக இருந்து இருக்கிறார்கள். ஜி.ஜி. பொன்னம்பலம் தொடக்கம் டக்லஸ், கருணா வரையில் பல தமிழ் தேசியவாதிகள் அரசுடன் கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை. அது ஏனுங்கோ? என்ன இருந்தாலும், தமிழ் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சி, எளிதில் விட்டுப் போகுமா?

கத்தி திரைப்படம் மூலம் பிரபலமான "இட்லி கம்யூனிசம்", எனது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகின்றது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, எனது வீட்டிருக்கு அருகில் இருந்த அகதி முகாம் ஒன்றுக்கு அடிக்கடி சென்று வந்தேன். அந்த முகாமில் பல ஈழத் தமிழ் அகதிகள் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அப்போது எனக்கு இந்தியாவில் இருந்து அஞ்சலில் வந்து கொண்டிருந்த, "புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம்" போன்ற சஞ்சிகைகளை கொண்டு சென்று வாசிக்கக் கொடுப்பது வழக்கம்.

ஒரு தடவை, இருபதிற்கும் முப்பதிற்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞன், அந்த முகாமிற்கு மாற்றலாகி வந்திருந்தான். அவன் முன்பு ஒரு காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியாக இருந்தவன். பல யுத்த களங்களில் போராடி இருக்கிறான்.

வறுமையான குடும்பப் பின்னணியை கொண்ட போராளி என்ற காரணத்தால், பொதுவாக இடதுசாரிக் கருத்துக்கள் மீது கவர்ச்சி இருந்தது. ஆனால், எதையும் சரியாக அறிந்து வைத்திருக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. (இப்படி நிறைய புலிப் போராளிகளை சந்தித்திருக்கிறேன்.)

அந்த புதிய வாலிபனும், புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களை ஆர்வமாக வாங்கி வாசித்து வந்தான். தான் வன்னியில் போராளியாக இருந்த காலத்தில், முகாம்களில் அந்த சஞ்சிகைகளை பார்த்ததாக கூறினான். தமிழ்நாட்டில் சில நக்சலைட் இயக்கங்களும், ஈழப் போராட்டத்தை ஆதரிப்பதால், புலிகள் இயக்கத் தலைமை, அந்த சஞ்சிகைகளை முகாம்களில் வாழ்ந்த போராளிகளும் வாசிக்க அனுமதித்ததாக தெரிவித்தான்.

சில வாரங்களுக்குப் பின்னர், மீண்டும் அந்த முன்னாள் போராளி இளைஞனை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவன் என்னிடம் கேட்டான்: - "அண்ணே, நீங்க கம்யூனிஸ்டா?"

- "இருக்கலாம்.... உங்களைப் பொறுத்த வரையில், கம்யூனிசம் என்றால் அர்த்தம் என்ன?" என்று ஒரு விவாதத்தை தொடங்கும் ஆர்வத்துடன் நான் கேட்டேன். 

அதற்கு அந்த இளைஞன் கூறிய பதில் என்னை தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பதில் இது தான்: 
- "பிச்சை எடுப்பதென்றாலும், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பிச்சை எடுக்க வேண்டும்...!" 
- "கம்யூனிச சமுதாயத்தில் பணக்காரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதன் அர்த்தம் மற்றைய மக்கள் எல்லோரும் பிச்சைக்காரர்கள் என்பதல்ல. அவர்கள் உழைப்பாளிகள். கம்யூனிசம் என்றால் எல்லோரும் ஒன்றாக பிச்சை எடுப்பதல்ல. எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உழைத்து முன்னேறுவது." என்று சொன்னேன்.

வன்னியில் வாழ்ந்த காலத்தில், தனக்கு இப்படி யாரும் தெளிவாக விளக்கவில்லை என்று, மேலும் அறியும் ஆர்வத்துடன் கூறினான்.

இப்படித் தான், விஜய்-முருகதாஸ் சினிமாக்காரர்களின் "இட்லி கம்யூனிசம்", மக்கள் மனதில் தவறான புரிதல்களை உண்டாக்கி வருகின்றது.

No comments: