Showing posts with label பட்டினி. Show all posts
Showing posts with label பட்டினி. Show all posts

Saturday, February 19, 2022

தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்!


தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்! ஆம், நீங்கள் சரியாகத் தான் வாசித்தீர்கள். வட கொரியா அல்ல,தென் கொரியா தான். இது பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் தென்கொரியர்கள் பற்றிய தகவல் அல்ல. (அதுவும் நடக்கிறது தான்.) ஆனால், கிம்மின் "சர்வாதிகார" ஆட்சி நடக்கும் வடகொரியாவில் இருந்து தப்பியோடி, சுதந்திரமாக வாழ்வதற்காக "ஜனநாயக" ஆட்சி நடக்கும் தென் கொரியாவில் தஞ்சம் கோரிய அகதிகள் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள்.

தென் கொரியாவில் தஞ்சம் கோரி வாழ்ந்து வந்த வடகொரிய அகதியான Han Sung-ok எனும்  42 வயது தாயும், அவளது ஆறு வயது மகனும் வீட்டில் சாப்பிட எதுவுமில்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். ஆமாம், முதலாளித்துவ சொர்க்கபுரியான ஒரு "செல்வந்த" நாட்டில், ஒரு குடும்பம்  சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்தது செத்த அவலம் நடந்திருக்கிறது! (ஆதாரம்: She fled North Korea for a better life. She died with her young son in an apartment in Seoul

இந்த சம்பவம் நடந்தே மூன்று வருடங்கள் ஆகின்றன. இருப்பினும்,  இந்தக் கொடுமை தென் கொரியாவில் நடந்த படியால்பெருமளவில் ஊடகக் கவனத்தை பெறவில்லை. இதுவே வடகொரியாவில் நடந்திருந்தால், இந்நேரம் தமிழ் ஊடகங்கள் எல்லாம் மாறி மாறி ஒப்பாரி வைத்து கதறி அழுதிருப்பார்கள். என்ன செய்வது? அவர்கள் இறந்தது முதலாளித்துவ சொர்க்கபுரியான தென் கொரியாவில் அல்லவா? அதனால் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்கிறார்கள். 

அந்தத் தாயும் மகனும் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு தண்ணீர் மீட்டர் அளக்க வந்த பரிசோதகர், ஒரு வீட்டிலிருந்து வித்தியாசமான மணம், பிண வாடை வந்த படியால், உடனடியாக பொலிசிற்கு அறிவித்திருக்கிறார். அவர்கள் வந்து பார்த்த நேரம், அந்த வீட்டிற்குள் இரண்டு அழுகிய பிணங்களும் வெறுமையான குளிர்சாதனப் பெட்டியும் இருந்தன. அவர்கள் மாதக் கணக்காக சாப்பாடு எதுவும் இல்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். 

ஏற்கனவே அந்தக் குடும்பத்தினர் பல மாதங்களாக வீட்டு வாடகை, எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கட்டணங்களை செலுத்த முடியாமல் அவதிப் பட்டிருக்கிறார்கள். பில்லுக்கு மேல் பில் என, கடனுக்கு மேல் கடன் சேர்த்து வைத்திருந்திருக்கிறார்கள். வேலையுமின்றி, அரச உதவியுமின்றி, தெருவில் உணவுக்காக பிச்சை கேட்டு கையேந்த வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளே பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள். 

ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் வட கொரியாவில் இருந்திருந்தால் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்கள். வட கொரியாவில் யாரும் வீட்டு வாடகை கட்டுவதில்லை. எல்லோரும் சொந்த வீடுகளில் குடியிருக்கிறார்கள். எரிபொருள் கட்டணம் மிக மிகக் குறைவு. தண்ணீருக்கு செலவே இல்லை. எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதனால் வருமானம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானியத்தில் கிடைக்கின்றன. அதனால் யாரும் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால், நமது தமிழ் ஊடகங்கள் என்ன சொல்கின்றன? வட கொரியாவில் மக்கள் எல்லோரும் பட்டினி கிடப்பதாக புளுகுகின்றன. சாப்பாடு இல்லாமல் புல்லைத் திண்கிறார்கள் என்று ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுவார்கள். அதையும் நம்புவதற்கு நாட்டில் ஏராளமான முட்டாள்கள் இருக்கிறார்கள். 

அது சரி, தென் கொரியாவுக்கு வருவோம். பனிப்போர் காலத்தில் தென் கொரியாவுக்கு வந்த வட கொரிய அகதிகளுக்கு, அரசு தாராளமாக நிதியுதவி செய்தது. அகதிகள் வந்தவுடன் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து, வீட்டு வசதிகளையும் செய்து கொடுத்து வந்தது. உண்மையில் வடகொரியாவில் வாழ்பவர்களுக்கு வசதி, வாய்ப்புகள், பணம் மீதான ஆசை காட்டி அவர்களை தென் கொரியாவுக்கு வரவழைக்கும் வகையில் கவர்வது தான் அதன் நோக்கம். 

ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு தென் கொரிய அரசு வட கொரிய அகதிகளுக்கு நிதி ஒதுக்குவது படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பனிப்போர் முடிந்த பின்னர், உலக ஒழுங்கு மாறி விட்டது. மேலும், அந்தக் காலகட்டத்தில் வட கொரியாவில் வரட்சி, வெள்ளப்பெருக்கு காரணமாக பஞ்சம் ஏற்பட்ட படியால் பெருமளவு அகதிகள் வந்து விடுவார்கள் என்று அஞ்சி இருக்கலாம். தொண்ணூறுகளுக்கு பின்னர், வட கொரிய பொருளாதாரம் மாற்றமடைந்து, தென் கொரிய நிறுவனங்களும் முதலிடும் வகையில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் வந்து விட்டது. அதனால் தற்போது எந்தவிதமான சித்தாந்த முரண்பாடுகளும் கிடையாது. 

வட கொரியாவில் வறுமை இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதனால், வடகொரியாவில் இருந்து செல்லும் அகதிகள், தென் கொரியாவுக்கு பிழைப்பு தேடிச் செல்கிறார்கள் என்று சொன்னாலும் தவறில்லை. ஆனால், அவர்கள் அறியாத உண்மை ஒன்றுள்ளது. தென் கொரியாவிலும் வறுமை இருக்கிறது. அது வட கொரிய வறுமையை விட பல மடங்கு கொடுமையானது என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். 

உண்மையில் தொண்ணூறு சதவீதமான வட கொரிய அகதிகள், அவர்களது தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் தென் கொரியா பற்றிய கற்பனைகளை வளர்த்து வந்ததாக தெரிவிக்கிறார்கள். பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கையை காட்டும் தென் கொரிய படங்கள், டிராமா சீரியல் பார்த்து விட்டு, இப்படித் தான் சாதாரண தென் கொரிய மக்கள் வாழ்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தாங்களும் அங்கே சென்றால் ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என கனவு கண்டிருக்கிறார்கள். ஆனால், தென் கொரியாவுக்கு வந்த பின்னர் தான் யதார்த்தம் அவர்களது முகத்தில் அறையும். 

வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்கள் அனைவரும் இனத்தால் கொரியர்கள் தான். ஒரே கொரிய மொழி தான் பேசுகிறார்கள். ஆனால், வட கொரியர்களின் வட்டார பேச்சு வழக்கு வித்தியாசமாக இருக்கும். அதுவே அவர்களை காட்டிக் கொடுத்து விடும். வட கொரிய பேச்சு மொழியை கேட்டால் வேலை தர மாட்டார்கள். தனியார் முதலாளிகள் வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டுவார்கள். தொழிற்துறையில் பெரும்பாலும் தனியார்மயம் கோலோச்சும் நாட்டில் அரச உதவியை எதிர்பார்க்க முடியுமா? ஏமாற்றம். மிகப் பெரிய ஏமாற்றம். 

தென் கொரிய பாடசாலைகளில் படிக்கும் வட கொரிய பிள்ளைகள் பேசும் வட்டார வழக்கு காரணமாக பிற மாணவர்களின் கேலிக்கு உள்ளாகிறார்கள். இதனால் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வேலைக்கு செல்பவர்கள் பலர். இந்தக் காலத்தில் எவனாவது டிப்ளோமா இல்லாமல் வேலை கொடுப்பானா? அதனால், அதிக உடல் உழைப்பை கோரும் அடி மட்ட வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலைமை. 

ஏன், வட கொரியாவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், மேல் மட்ட பதவிகளில் இருந்தவர்களுக்கும் அது தான் நிலைமை. தென் கொரியாவில் அவர்களது தகுதிக்கேற்ற வேலை கிடைக்காது. அவர்களும் சாதாரண கூலித்தொழில் செய்து பிழைக்க வேண்டிய அவல நிலை. முன்பு வட கொரிய இராணுவத்தில் நல்ல பதவியில் இருந்த ஒருவர், இன்று தென் கொரியாவில் குப்பைகள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்கிறார். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்வதை விட வட கொரியாவில் இருந்து செத்திருக்கலாம் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார். 

வட கொரிய அகதிகள் வரும் பொழுதே கடன் சுமையுடன் தான் வருகிறார்கள்.  சட்டவிரோத எல்லை கடத்தல் மூலம் சீனா ஊடாக அழைத்து வரும் "பயண முகவர்களுக்கு" ஆயிரக்கணக்கான டாலர்கள் கடன் கொடுக்க வேண்டி இருக்கும். அந்தக் கடனை அடைப்பதற்காகவே தென் கொரியாவில் வருடக் கணக்காக வேலை செய்ய வேண்டி இருக்கும். அரச உதவித் தொகையும் மிச்சம் பிடித்து கடனை அடைப்பதற்கு செலவாகி விடுகிறது. அதனால் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. தென் கொரியாவில் தஞ்சமடைந்த வட கொரிய அகதிகள் பட்டினி கிடந்தது சாவதற்கு இதுவும் ஒரு காரணம். 

பெரும்பாலும் வட கொரிய அகதிகளுக்கு இலகுவாக தென்கொரிய நண்பர்கள் கிடைப்பதில்லை. அவர்கள் இவர்களை தாழ்வாக பார்ப்பார்கள். அதைவிட தென்கொரிய தேசியவாதிகளின் துன்புறுத்தல்கள் வேறு. வடகொரியா எப்போதாவது ஏவுகணை சோதனை செய்து விட்டால், தேசியவாதிகளின் உணர்வுகள் உச்சத்திற்கு சென்று விடும். அந்நேரம் கண்ணில் அகப்படும் வடகொரியர்களை வறுத்தெடுத்து விடுவார்கள். 

சரி, தஞ்சம் புகுந்த நாட்டில் தான் வரவேற்பில்லை. தாயகத்தில் இருக்கும் உறவுகளோடு பேசி துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றால், அதற்கும் தடை போட்டிருக்கிறார்கள். அதாவது, தென்கொரியாவில் வாழும் யாரும் வடகொரியாவில் இருப்பவர்களுடன் தொடர்பு வைக்க முடியாது.  தொலைபேசி, கடிதப் போக்குவரத்து எதுவுமே இருக்கக் கூடாது. ஆமாம், தென் கொரிய அரசு தான் இந்தளவு கடுமையான தடைகளை போட்டிருக்கிறது. 

தென்கொரியாவுக்கு வந்த அகதிகளில் குறிப்பிட்ட அளவில் சிலர் மட்டுமே வசதியாக வாழ்கிறார்கள். ஏனையோர் வாழ்க்கையை நடத்த  முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். தென் கொரியாவில் தொட்டதெற்கெல்லாம் பணம். கையில் காசு இல்லையா? யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தெருவில் படுத்தால் என்ன, செத்துத் தொலைந்தால் என்ன கண்ணை மூடிக் கொண்டு சென்று விடுவார்கள். 

இப்படியான நரகத்தில் வாழப் பிடிக்காமல், பலர் வடகொரியாவுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள். அதுவும் சட்டவிரோதமாகத் தான்.  தென் கொரியாவில் வாழும் அகதிகளில் குறைந்தது சில ஆயிரம் பேராவது வடகொரியாவுக்கு திரும்பிச் சென்று விட்டார்கள். உண்மையில் தென் கொரிய அரசு அனுமதித்தால் இன்னும் பல ஆயிரம் அகதிகள் தாமாக திரும்பிச் சென்று விடுவார்கள். ஆனால், அதற்கான எல்லா வழிகளையும் தென் கொரிய அரசு அடைத்து வைத்திருக்கிறது.

Tuesday, February 21, 2012

பட்டினிச் சாவில் பல இலட்சம் இலாபம் சம்பாதிக்கலாம் !

"சோமாலியாவில் பஞ்சத்தால் பல்லாயிரம் மக்கள் பலி."
"உணவுப் பொருட்களின் விலையேற்றம்."
"பங்குச் சந்தையில் குறியீட்டுச் சுட்டெண் அதிகரித்துள்ளது."
மேற்குறிப்பிட்ட மூன்று விடயங்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக, யாராவது உணர்ந்துள்ளனரா? படித்தவர்களைக் கேட்டால், பல்வேறு காரணங்களை சொல்லி மறைக்கப் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து இவ்வாறான பதில்கள் வரும்.
- "சோமாலியாவில் பட்டினிச் சாவுகளுக்கு காரணம், அங்கு நிலவும் கடும் வரட்சி."
- "உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணம், அதற்கான கேள்வி அதிகரித்துள்ளது. உலகத்தில் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை."
-"பங்குச் சந்தை சுட்டெண் ஏற்றத்திற்கு காரணம், நெருக்கடியில் இருந்து மீண்ட, முதலாளித்துவத்தின் சாதனை."

அண்மையில், நெதர்லாந்து நாட்டில், Zembla எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிப்பவர்கள் ஆய்வு செய்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. (HANDEL IN HONGER - 23 DECEMBER 2011 ) பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை செயற்கையாக ஏற்றி வைக்கும், வணிகச் சூதாடிகளால் தான் இத்தனை பிரச்சினைகள். சோமாலியாவில், அல்லது இன்னொரு ஆப்பிரிக்க நாட்டில், மக்கள் பட்டினியால் இறப்பதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இன்னும் சொல்லப் போனால், பட்டினிச் சாவுகளுக்கு அவர்களும் முக்கிய காரணம். ஒரு பக்கம் மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பங்குச் சந்தையில் கோடி கோடியாக பணம் புரள்கின்றது.

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம், முதலீட்டாளர்கள் குறிப்பிட்டளவு பணத்தை முன்கூட்டியே கொடுத்து விடுவார்கள். முதலீட்டாளர் கேட்கும் அளவு பண்டத்தை வழங்குவது விவசாயிகளின் பொறுப்பு. கேள்வியே பண்டத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றது, என்ற மரபு வழி முதலாளித்துவ தத்துவம் இந்த இடத்தில் சரிப் பட்டு வரலாம். ஆனால், தற்பொழுதுள்ள நிலைமை வேறு. முதலீட்டாளருக்கும், விவசாயிக்கும் இடையில், ஊக அடிப்படையில் விலையை தீர்மானிக்கும் இடைத் தரகர்கள் நுழைந்து விட்டனர். இவர்கள், விவசாயியையோ, அல்லது உணவுப் பண்டத்தையோ கண்ணால் காண்பதில்லை. பெரு நகரம் ஒன்றில், அலுவலகத்தில் சொகுசாக உட்கார்ந்து கொண்டே, கணனித் திரையில் விரும்பியவாறு விலையைத் தீர்மானிக்கின்றனர். 2004 ம் ஆண்டு வரையில், வீட்டு மனை போன்ற துறைகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அமெரிக்காவில் வீட்டுக்கடன் பிரச்சினையால், நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அதனை பாதுகாப்பற்ற முதலீடாக கருதுகின்றனர்.

உற்பத்தி செய்யப் படும் பொருட்கள் எல்லாம், உலகச் சந்தையில் விற்கப் பட வேண்டும் என்பது, முதலாளித்துவம் வகுத்த விதியாகும். அரிசி, கோதுமை என்ன விலைக்கு ஏற்றுமதி செய்யப் பட வேண்டும் என்று, சம்பந்தப் பட்ட நாட்டு அரசு கூட தீர்மானிக்க முடியாது. சிக்காகோ, நியூயோர்க்கில் உள்ள சர்வதேச பங்குச் சந்தையில், ஏலத்திற்கு விட வேண்டும். அங்கு வரும் வர்த்தகர்கள் என்ன விலையை கேட்கிறார்களோ, அந்த விலைக்கு தான் இன்னொரு நாட்டிற்கு விற்க வேண்டும். உதாரணத்திற்கு, அதிகளவு தானியம் ஏற்றுமதி செய்யும் உக்ரைன் நாட்டில், பனிப்பொழிவு காரணமாக பயிர்கள் நாசமாகின்றன என்று வைத்துக் கொள்வோம். இதனால், உலகச் சந்தையில் குறிப்பிட்ட தானியத்திற்கு தட்டுப்பாடு வரும் என்ற எதிர்பார்ப்பில், கணனித் திரையில் தானியத்தின் விலையை கூட்டி விடுவார்கள். இது ஒரு சூதாட்டம். ஆமாம், வெறும் ஊகத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு விலையை தீர்மானிப்பதற்குப் பெயர் சூதாட்டம் தான். அதனால் இவர்களை பங்குச் சந்தை சூதாடிகள் என்றும் அழைக்கலாம்.

சிக்காகோ பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது, அவற்றை சர்வதேச சந்தையில் வாங்கும் அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே, இதனால் பெருமளவு பாதிக்கப் படுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளின் மக்களும், வறிய நாடுகளின் மத்தியதர வர்க்கமும், தமது வாங்கும் சக்தி குறைவதை உணர்கின்றனர். ஆனால், ஏழைகள் தான் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர். வறிய குடும்பத்து பிள்ளைகள், அரைப் பட்டினியுடன் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை. நிலையான அரசு இல்லாத சோமாலியா போன்ற நாடுகளில், வறட்சியும் சேர்ந்து கொள்ளவே, நிலைமை மோசமடைகின்றது. வரட்சிப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு தேவைப்படும் உணவை விற்பதற்கு வியாபாரிகள் தயாராகத் தானிருக்கின்றனர். ஆனால், அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லா விட்டால், என்ன செய்ய முடியும்? பட்டினி கிடந்தது சாகத் தான் முடியும்.

2006 ம் ஆண்டு முதல், உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஒரு வருடத்திற்குள், கோதுமையின் விலை 80 வீதம் உயர்ந்தது. அரிசி 320 வீதம் உயர்ந்தது! அதே காலகட்டத்தில், 30 நாடுகளில் 200 மில்லியன் மக்கள் போஷாக்கின்மையால், அல்லது பட்டினியால் வாடினார்கள். உணவுப் பொருட்களின் விலையை தீர்மானிக்கும் சூதாடிகளுடன், மேற்கத்திய நாடுகளின் ஓய்வூதிய நிறுவனங்களும், வங்கிகளும் கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த நிறுவனங்கள், தமது பங்குதாரருக்கு கொடுக்க வேண்டிய ஈவுத் தொகையை அதிகப் படுத்துவதற்காக, உணவுப் பொருள் வணிகத்தில் முதலிடுகின்றன. ஒரு நிறுவனம் இலாபத்தை எதிர்பார்ப்பதும், பங்குதாரருக்கு இலாபத்தில் பங்கு கொடுப்பதும், முதலாளித்துவ தர்மப் படி நியாயமானவை. ஆனால், அதற்காக இலட்சக் கணக்கான பொது மக்களின் உயிர்களுடன் விளையாடுவது அநியாயமானது. இதிலே ஓய்வூதிய நிறுவனங்களின் பங்கு சர்ச்சைக்குரியது. ஏனெனில், பணக்கார நாடுகளைச் சேர்ந்த மக்களின் வயோதிப கால சுக வாழ்வை உறுதிப் படுத்துவதற்காக, வறிய நாடுகளைச் சேர்ந்த மக்களை பஞ்சத்திற்கு பலி கொடுக்கிறார்கள்.

Zembla தயாரிப்பாளர்கள், நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். மிகப்பெரிய ஓய்வூதிய காப்புறுதி நிறுவனமான Zorg en Welzijn , 700 மில்லியன் யூரோ உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலிட்டுள்ளது. அதனோடு போட்டி போட்டுக் கொண்டு, அரசாங்க ஊழியர்களின் காப்புறுதி நிறுவனமான ABP , 500 மில்லியன் யூரோ முதலிட்டுள்ளது. ஐ.நா. சபையில் பணியாற்றும் பொருளாதார நிபுணரான Olivier de Schutter , "ஓய்வூதிய நிறுவனங்கள் உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலீடு செய்வதால், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ஏழை மக்கள் பாதிக்கப் படுவதாக" தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம், உணவுப் பொருள் வர்த்தகத்தில் சூதாடுவதை தடுக்கும் சட்டம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கின்றது. அதே நேரம், புருசெல்ஸ் நகரில் முகாமிட்டுள்ள ஊக வணிகர்களின் நலன்புரி அமைப்பு, அந்த சட்டத்தை வர விடாது தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களைப் பொறுத்த வரையில், "பங்குச் சந்தைக்கும், பட்டினிச் சாவுக்கும் சம்பந்தம் இல்லை!" எங்கேயோ ஒரு ஆப்பிரிக்க அல்லது ஆசிய நாட்டு மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? பிணத்தை, பணமாக்கும் மந்திர வித்தை தெரிந்தவர்கள் அல்லவா?

Zembla தயாரிப்பில் உருவான "HANDEL IN HONGER " (பட்டினியில் வணிகம்) ஆவணப் படத்தை பார்ப்பதற்கு:
HANDEL IN HONGER


Get Microsoft Silverlight
Bekijk de video in andere formaten.