Thursday, December 25, 2014

தேசிய வெறி தோற்கடிக்கப் பட்ட கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம்


இன்று (25-12-2014) கிறிஸ்துமஸ் போர்நிறுத்தத்தின் நூறாவது ஆண்டு நினைவு தினம். ஐரோப்பாவில் முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1914 ம் ஆண்டு, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று போர்நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது.

தமிழர்களும், சிங்களவர்களும், இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் எந்தளவு தூரம் ஒருவரையொருவர் வெறுக்கும் பகைவர்கள் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. நூறு வருடங்களுக்கு முந்திய ஐரோப்பியர்களும், அப்படித் தான் வாழ்ந்தார்கள். தேசியவெறி, இனவெறி காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பிய தேசிய இனங்கள், தமிழர்-சிங்களவர், இந்தியர்-பாகிஸ்தானிகளை விட மோசமான பகைவர்களாக இருந்தனர். ஐரோப்பியர்களின் தேசியவெறி, கோடிக் கணக்கான உயிர்களை பலி கொண்ட முதலாம் உலகப் போருக்கு இட்டுச் சென்றது. இனவெறியூட்டப் பட்ட ஐரோப்பிய நாடுகளின் படைகள், ஈவிரக்கமின்றி படுகொலைகளை செய்து கொண்டிருந்தன. அப்படியான ஒரு தருணத்தில் தான், கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம் வந்தது.

பெல்ஜியத்தில், ஒரு பக்கம் ஜெர்மன் படைகளும், மறுபக்கம் பிரிட்டிஷ் படைகளும் போர்க் களத்தில் நின்று கொண்டிருந்தன. அன்றைய ஐரோப்பாவில், ஜெர்மனியர்களும், ஆங்கிலேயர்களும், தமிழர், சிங்களவர் மாதிரி ஜென்மப் பகைவர்கள் ஆவர். அப்படியான தேசியவெறி/இனவெறி ஊட்டப்பட்ட படைவீரர்கள், போர் நிறுத்தம் ஏற்பட்டதும், ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக் கொண்டனர்.

காட்டுமிராண்டித் தனமான போருக்கு மத்தியில், போர்நிறுத்தம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது. ஜெர்மன் படையினரும், பிரிட்டிஷ் படையினரும், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் பரிசுகளை பகிர்ந்து கொண்டனர். ஒன்றாக சேர்ந்து கால்பந்து விளையாடினார்கள். சில நாட்களுக்கு முன்னர், ஒருவரை ஒருவர் கொன்று குவித்த எதிரிகள், போர்நிறுத்த காலம் முழுவதும் நட்புடன் பழகினார்கள்.

படையினருக்கு இடையில் இது போன்ற நட்புறவு தொடர்ந்திருக்க ஆட்சியாளர்கள் சம்மதிப்பார்களா? மீண்டும் போர் வந்தது. ஒன்றாக கால்பந்து விளையாடியவர்கள், மீண்டும் துப்பாக்கிகளை எடுத்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றார்கள். இன்னும் பல இலட்சம் பேரைக் காவு கொண்ட போர், 1917 ம் ஆண்டு தான் ஓய்ந்தது.

ஈழப்போர் நடந்த காலத்திலும், இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், பிரேமதாச ஆட்சிக் காலத்தில், பலாலி இராணுவ முகாமுக்கு அருகில் நடந்த சம்பவம் ஒன்று, யாழ்ப்பாண தமிழ்ப் பொது மக்களால் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசப் பட்டது.

பலாலி இராணுவ முகாமுக்கு அருகில், சிறிலங்கா படையினரும், புலிகளும் எதிரெதிரே காவலரண்களை போட்டிருந்தார்கள். இரண்டுக்கும் இடையில் உரிமை கோரப் படாத பிரதேசம் (No man's land) இருந்தது. அங்கே எப்போதும் சண்டை நடப்பதில்லை. சில நேரம் அமைதியாக இருக்கும். சிங்களப் படையினரும், புலிப் போராளிகளும், நட்பாகவும் பேசிக் கொள்வார்கள். அப்போது பழக்கமான புலிப் போராளியிடம், சிங்களப் படையினன் பின்வருமாறு கூறினானாம்: "என்னுடைய ஐயாவும், உன்னுடைய ஐயாவும் ஏ.சி. ரூமுக்குள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நானும், நீயும் தான் இந்த வெட்ட வெளியில் நின்று சண்டை பிடிக்கிறோம்..."

தேசியவெறி/இனவெறிக் கொள்கையால் ஆதாயம் அடையும் பிரிவினர், அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று மறுக்கலாம். ஆனால், சாதாரண சிங்கள-தமிழ் மக்கள், சாதாரண சிங்களப் படையினர், தமிழ்ப் புலிப் போராளிகள் எல்லோரும், தேசியவாதிகளோ அல்லது இனவாதிகளோ அல்ல. அப்படி கருதிக் கொள்வது ஒரு கற்பனாவாதம்.

No comments: