Friday, November 14, 2014

வட அயர்லாந்தில் விழுத்த முடியாத "பெல்பாஸ்ட் மதில்"!


பெர்லின் மதில் விழுந்த பின்னரான, 25 வருட காலத்தில், உலகில் இன்னமும் பல மதில்கள் விழாமல் அப்படியே உள்ளன. வட அயர்லாந்தில், பெல்பாஸ்ட் நகரில் கட்டப்பட்ட மதில் சுவர் பற்றிய ஆவணப் படம் ஒன்று பார்த்தேன். நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான De Muur (சுவர்) என்ற படம் பல அதிர்ச்சியான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

சிங்கள-தமிழ் பிரச்சினை, இஸ்ரேலிய - பாலஸ்தீன பிரச்சினை, எல்லாம் அடிப்படையில் ஒரே தன்மை கொண்டவை. அதே போன்றது தான், வட அயர்லாந்துப் பிரச்சினையும். எந்த வித்தியாசமும் கிடையாது. இனப்பிரச்சினை எந்தளவு தூரம் மக்களை பிளவு படுத்தியுள்ளது என்பது, அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

வட அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து ஆங்கிலேயர்களும், கத்தோலிக்க ஐரிஷ் காரர்களும், இன்னமும் இரண்டு தனிதனி சமூகங்களாக பிரிந்து வாழ்வதை, De Muur ஆவணப்படம் எடுத்துக் காட்டுகின்றது. பெல்பாஸ்ட் மதிலை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுடன் படம் தொடங்குகிறது. வழிகாட்டி அதை சுட்டிக் காட்டி, "சமாதான மதில்" என்று கூறுகின்றார்.

பெர்லின் மதிலை "அவமானத்தின் சின்னம்" என்று நையாண்டி செய்தவர்கள், பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிய "சமாதான(?)" மதிலை கண்டுகொள்வதில்லை. பெல்பாஸ்ட் "சமாதான மதில்" ஒரு பக்கம் ஆங்கிலேயர்களையும், மறு பக்கம் ஐரிஷ்காரர்களையும் இன, மத அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கின்றது.

அறுபதுகளில் நடந்த புரட்டஸ்தாந்து, கத்தோலிக்க சமூகங்களுக்கு இடையிலான கலவரங்களுக்கு பின்னர், பிரிட்டிஷ் இராணுவம் அங்கே நிலை கொண்டது. அதற்குப் பிறகு தான் "சமாதானத்தை நிலைநாட்டும் மதில்" கட்டப் பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக வேலை செய்யும், லியாம் எனும் ஐரிஷ்காரர், ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, பல வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். "இங்கே யாரும் தன்னை IRA உறுப்பினர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்" என்று கூறுகின்றார். ஏனென்றால், இன்றைக்கும் அதற்காக கைது செய்யப் படும் அபாயம் உள்ளது!

மதில் சுவரை சுற்றிப் பார்க்க வரும் கத்தோலிக்க சிறுவர்கள், மதிலுக்கு அப்பால் உள்ள புரட்டஸ்தாந்து பகுதிக்குள் செல்ல அஞ்சுகிறார்கள். அதே மாதிரி, புரட்டஸ்தாந்து காரர்கள் கத்தோலிக்க பகுதிக்குள் செல்வதில்லை. இரு பகுதி மக்கள் மனதிலும் அச்சம் குடிகொண்டுள்ளது. ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதில்லை. அங்கே சமாதானம் பெயரளவில் மட்டுமே உள்ளது.

மதிலுக்கு அருகே வாழும் ஆங்கிலேய குடும்பம் ஒன்று, வீட்டு முற்றத்திற்கு மேலே கண்ணாடிக் கூண்டு அமைத்துள்ளது. அதைத் தவிர மதிலுக்கு மேலே கம்பி வலை கட்டப் பட்டுள்ளது. ஏனென்றால், மறு பக்கத்தில் இருந்து கற்கள் வீசப் படுகின்றனவாம். "ஒரு நாள், அந்த மதில் இடிக்கப் பட்டால் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு, "இடம்பெயர்ந்து சென்று விடுவோம்" என்று வீட்டுக்கார பெண்மணி பதில் கூறுகின்றார்.

புரட்டஸ்தாந்து, கத்தோலிக்க சமூகங்களை சேர்ந்த பிள்ளைகள், இன்னமும் தனித்தனி பாடசாலைகளில் படிக்கின்றன. அதனால், மற்ற சமூகத்தின் மீதான வெறுப்புணர்வுடன் வளர்க்கப் படுகின்றன. நண்பர்களாக்கிக் கொள்வதும் அரிதாகவே நடக்கிறது. மதிலுக்கு இரண்டு பக்கமும் சுமார் 50 மீட்டர் தூரத்தில் பிரிந்து வாழும் இரண்டு நண்பிகள், அமெரிக்காவில் தான் சந்தித்துக் கொண்டார்கள்.

டச்சு புரட்டஸ்தாந்து மன்னனின் உதவியுடன், ஆங்கிலேயர்கள் வட அயர்லாந்தை ஆக்கிரமித்தனர். தமது மேலாதிக்க வெறியை ஒவ்வொரு வருடமும் "ஒரேஞ்ச் அணிவகுப்பு" என்ற பெயரில் காட்டுகின்றனர். வேண்டுமென்றே கத்தோலிக்க தெருக்களுக்கு ஊடாக அணி நடையாக செல்லும் பொழுது தான் கலவரங்கள் நடக்கின்றன. கத்தோலிக்க மக்களை ஆத்திரமூட்டி தூண்டி விடும் நோக்கிலேயே, புரட்டஸ்தாந்துகாரர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள். இந்தியாவில் இந்துத்துவாவாதிகள், முஸ்லிம்களின் தெருக்களின் ஊடாக, விநாயகர் ஊர்வலம் செல்வதை, வட அயர்லாந்தின் ஒரேஞ்ச் அணிவகுப்பு நினைவுபடுத்துகின்றது. வீட்டுக்குவீடு வாசல்படி இருக்கிறது.

புரட்டஸ்தாந்து காரர்கள், "கலாச்சாரம் பேணுதல் என்ற பெயரில் தமது மேலாதிக்கத் திமிரை வெளிப்படுத்துகிறார்கள்." என்று ஒரேஞ்ச் அணிவகுப்பு குறித்து ஒரு கத்தோலிக்கர் கூறுகின்றார். இன்றைக்கும், வட அயர்லாந்தின் வசதி வாய்ப்புகளை புரட்டஸ்தாந்து காரர்களே அனுபவிக்கிறார்கள். கத்தோலிக்கர்கள், வேலை வாய்ப்பு உட்பட, எல்லா இடங்களிலும் பாகுபாடு காட்டப் படுகின்றனர். அதனால் ஒரு பின்தங்கிய சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். பெருமளவு கத்தோலிக்க ஐரிஷ்காரர்கள், பாலஸ்தீனம் போன்ற உலக விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல.

ஆவணப் படத்தை இதிலுள்ள இணைப்பில் பார்வையிடலாம்: 
http://www.npo.nl/de-muur/07-11-2014/VARA_101369841


No comments: