Saturday, November 22, 2014

சோஷலிச நாடுகள் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப் படுத்துவோம்

சர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம் 

கியூபாவில் வாழும் சேகுவேராவின் புதல்வியுடனான பேட்டி

கேள்வி : மேற்குலகம் கியூபாவை ஒரு சர்வாதிகார நாடாகப் பார்க்கின்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: மேற்குலகில் இருப்பவர்களுக்கு சர்வாதிகாரம் என்றால் என்னவென்றே தெரியாது. எந்த சர்வாதிகாரியும் தனது மக்களை படிக்க வைக்க மாட்டான். ஏனென்றால், எந்தளவுக்கு அதிகமாகப் படிக்கிறார்களோ, அந்தளவுக்கு சுதந்திரமாக சிந்திப்பார்கள்.

எந்தவொரு சர்வாதிகாரியும் அனைவருக்கும் இலவசக் கல்வியை அறிமுகப் படுத்த மாட்டான்.... எப்படிப் பட்ட சர்வாதிகாரி தனது மக்கள் ஆரோக்கியமாக வாழவும் இலவசமாக கல்வி கற்கவும் விடுவான்? எப்படிப் பட்ட சர்வாதிகாரி பிற உலக மக்களுடன் ஒற்றுமையாக வாழுமாறு தனது மக்களுக்கு போதிப்பான்? கியூபாவில் அது தான் நடக்கிறது. 

ஒற்றுமை, மரியாதை, பிற மக்களின் மேல் அன்பு செலுத்துதல், மற்றவர்களின் நன்மைக்கான சுய அர்ப்பணிப்பு, இந்தக் கொள்கைகள் தான் கியூப மக்களுக்கு போதிக்கப் படுகின்றன. அதை எப்படி நீங்கள் சர்வாதிகாரத்துடன் முடிச்சுப் போடலாம்?

முழுமையான பேட்டியை வாசிப்பதற்கு:
‘West has no idea what a dictatorship is’ – Che Guevara’s daughter to RT 


*********

உக்ரைனிய பஞ்சம்: உண்மையும், புனை கதைகளும் 

கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பொய்ப் பிரச்சாரங்களில் ஒன்று, "உக்ரைனிய பஞ்சம்." மேற்கத்திய நாடுகளினால் holodomor என்று பெயரிடப் பட்ட உக்ரைனிய பஞ்சம், "ஸ்டாலினின் சோஷலிச பொருளாதார திட்டங்களினால் ஏற்பட்ட தீய விளைவு" என்று சுட்டிக் காட்டுவார்கள். அப்படியா?

இரண்டாம் உலகப் போர் முடிவு வரையில், உக்ரைனின் மேற்குப் பகுதி, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா, ருமேனியா ஆகிய அயல் நாடுகளினால் பங்கு போடப் பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த பெரும்பான்மை இன மக்கள் உக்ரைனியர்கள். ஆனால், போர் முடிந்த பின்னர் தான், அவை சோவியத் யூனியனின் பகுதிகள் ஆகின.

செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசத்தில்
15 000 குழந்தைகள் பட்டினியால் மரணம் 

அந்தக் காலத்தில், உக்ரைனிய பஞ்சம் பற்றி அறிவித்த ஒரு பத்திரிகையின் பக்கத்தை இங்கே தருகிறேன். இது எந்த நாட்டின் செய்தித் தாள்? செக்கோஸ்லாவாக்கியா. தலைநகர் பிராஹாவின் பெயர் வந்துள்ளதை கவனிக்கவும். அதில் என்ன எழுதியிருக்கிறது? செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசமான சகர்பாத்தி (Zakarpatie) யில், 15 000 குழந்தைகள் பட்டினியால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கிறது.

இதன் அர்த்தம், அன்றைய சோவியத் உக்ரைனில் பட்டினிச் சாவுகள் இருக்கவில்லை என்பதல்ல. இரண்டாம் உலகப்போர் வரையில், பஞ்சம் ஐரோப்பாக் கண்டம் முழுவதற்கும் பொதுவான பிரச்சினையாக இருந்தது. இன்று பஞ்சம் என்று சொன்னால், பெரும்பாலானோருக்கு சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் தான் நினைவுக்கு வரும்.

ஆனால், சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் வேறு. இன்று ஆப்பிரிக்கா இருக்கும் நிலைமையில், அன்று ஐரோப்பா இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சமும், இரண்டு மில்லியன் மக்களின் பட்டினிச் சாவுகளும் இன்றைக்கும் நினைவுகூரப் படுகின்றன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, பஞ்சத்தினால் பாதிக்கப் படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இன்றைக்கு வாழும் மக்கள், எவ்வாறு ஆப்பிரிக்க பஞ்சத்தை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்கிறார்களோ, அதே மாதிரித் தான் அன்றைய ஐரோப்பிய மக்களும் நடந்து கொண்டார்கள்.

*********

சிறுவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பது "கம்யூனிச மூளைச் சலவை"! 

இளம் வழிகாட்டிகளின் ஒழுக்க விதிகள்
முன்பு சோஷலிச நாடுகளில், ஆரம்ப பாடசாலை மாணவர்கள் "வழிகாட்டிகள்" (Pioneer ) எனும் சாரணர் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அதில் சேருவது கட்டாயமில்லை, ஆனால் விரும்பத்தக்கது. ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய அதே சாரணர் அமைப்புத் தான். ஆயினும், சோஷலிச அரசமைப்புக்கு ஏற்றவாறு சில வேறுபாடுகள் இருந்தன. மேற்கத்திய நாடுகளில், அதைத் திரிபுபடுத்தி "சிறுவர்களை கம்யூனிச கொள்கைக்கு ஏற்றவாறு மூளைச் சலவை செய்கிறார்கள்..." என்று (பொய்ப்) பிரச்சாரம் செய்தார்கள்.

இங்கே, முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் (DDR) இருந்த, சாரணர் அமைப்பின் ஆவணத்தை தருகிறேன். பின்வரும் இளம் வழிகாட்டிகளின் ஒழுக்க விதிகளை (Die Gebote der Jungpioniere), ஒவ்வொரு மாணவனும் ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.


  • இளம் வழிகாட்டிகளான நாங்கள், எமது ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு மீது அன்பு செலுத்துகின்றோம். 
  • நாங்கள் எமது பெற்றோர் மேல் அன்பு செலுத்துகிறோம். 
  • நாங்கள் சமாதானத்தை விரும்புகின்றோம். 
  • நாங்கள் சோவியத் யூனியன், மற்றும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த பிள்ளைகளுடன் நட்பைப் பேணுவோம். 
  • நாங்கள் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுவோம். நாங்கள் சீரான, ஒழுக்கமானவர்கள். 
  • நாங்கள் விளையாட்டில் ஈடுபடுவோம். எமது உடலை தூய்மையாக வைத்திருப்போம். 
  • நாங்கள் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துவோம். சிறப்பாக பணியாற்ற உதவுவோம். 
  • நாங்கள் பாட்டுப் பாடவும், நடனம் ஆடவும் விளையாடவும் விரும்புகின்றோம். 
  • நாங்கள் நல்ல நண்பர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்வோம். - நாங்கள் எமது நீல நிற கழுத்துப் பட்டியை பெருமையுடன் அணிந்து கொள்வோம்.

பெரியோர்களே! தாய்மார்களே! மேற்குறிப்பிட்ட ஒழுக்க விதிகள் எல்லாம் "கம்யூனிச மூளைச்சலவை" என்றால், பிள்ளைகளை தறுதலைகளாக திரிய விடுவது தான் முதலாளித்துவ சுதந்திரமா?

******** 

கிழக்கு ஜெர்மன் மாநில அரசில், மீண்டும் ஒரு மார்க்சிஸ்ட் முதல்வர்!

பெர்லின் மதில் வீழ்ந்து 25 வருடங்களுக்குப் பிறகு, கிழக்கு ஜெர்மன் மாநிலமான துய்ரிங்கன் மாநிலத்திற்கு நடந்த தேர்தலில், Die Linke பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெற்றது. சமூக ஜனநாயகக் கட்சியான SDP இரண்டாம் இடத்திற்கு வந்திருந்தது.

மாநில அவையில் கூட்டணி அமைப்பதற்கு, இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையில் ஓர் உடன்பாடு எட்டப் பட்டுள்ளது. பசுமைக் கட்சியுடன் சேர்ந்து அமைக்கப் பட்டுள்ள கூட்டரசாங்கம் "R2G" (Red, Red, Green) என்று அழைக்கப் படுகின்றது. R2G கூட்டரசாங்கத்தின் முதல்வராக டீ லிங்கே கட்சியை சேர்ந்த Bodo Ramelow தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

Bodo Ramelow, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கார்ல் மார்க்ஸ் பொம்மையை பக்கத்தில் வைத்துக் கொண்டு உரையாற்றுவார். தீவிர இடதுசாரிக் கட்சியான PDS, டீ லிங்கே கட்சியில் பெரும்பான்மை பலத்துடன் அங்கம் வகிக்கிறது. அது முன்னர் கிழக்கு ஜெர்மனி சோஷலிச நாடாக இருந்த காலத்தில் ஆட்சி செய்த SED கட்சியின் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர், கிழக்கு- மேற்கு ஜெர்மனிகளை சேர்ந்த தீவிர இடதுசாரிகள் ஒன்றிணைந்து, Die Linke எனும் புதிய கட்சி உருவானது. துய்ரிங்கன் மாநில முதல்வராக தெரிவாகி உள்ள Bodo Ramelow மேற்கு ஜெர்மனியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

கிழக்கு ஜெர்மனி, துய்ரிங்கன் மாநில அரசாங்கத்தில் மார்க்சிய Die Linke கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அகதிகளுக்கு ஆதரவான கொள்கையை அறிவித்துள்ளனர். அதன் பிரகாரம், துய்ரிங்கன் மாநிலத்தில் வாழும் அகதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப் படுவார்கள். நாடு கடத்தப் படுவது இடைநிறுத்தி வைக்கப் படும். (Neues Deutschland, 20.11.2014)

விசா, வதிவிட அனுமதி எதுவுமில்லாத அகதிகளுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், அநாமதேய மருத்துவ காப்புறுதி வழங்கப் படும். ஜெர்மனி முழுவதும் வாழும் அகதிகளால் வெறுக்கப் படும், உணவு முத்திரைகள் இல்லாதொழிக்கப் படும். அதற்குப் பதிலாக, அகதிகளின் அத்தியாவசிய தேவைகளுக்கான பணம் வழங்கப் படும். (ஜெர்மனியில் உள்ள தற்போதைய விதிமுறையில் அகதிகளின் கைகளில் பணம் கொடுப்பதில்லை. அரசு தரும் உணவு முத்திரைகளை, கடையில் கொடுத்து மாற்றி அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பாவிக்க வேண்டும்.)

துய்ரிங்கன் மாநிலத்தின் அகதிக் கொள்கை, முழு ஜெர்மனிக்கும் முன்மாதிரி திட்டமாக முன்மொழிவதற்கான முயற்சிகள் எடுக்கப் படுமென அறிவிக்கப் பட்டுள்ளது. 


No comments: