Thursday, May 15, 2014

ஐரோப்பாவில் கல்வி : முற்றிலும் இலவசம் அல்ல

"கற்றுக் கொள்ளுங்கள்...கற்றுக் கொள்ளுங்கள்... மேலும் மேலும் கற்றுக் கொள்ளுங்கள்..." - லெனின்

கல்வி கற்க விரும்புவதும், அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்க வசதி செய்து கொடுப்பதும், ஒரு சிலரின் பார்வையில் "கம்யூனிசம்" என்றால், சாதாரண பாமர மக்கள் கம்யூனிஸ்டாக இருக்கவே விரும்புவார்கள். தமது சொந்தக் காசை செலவு செய்து வெளிநாட்டில் படிப்பவர்கள், தமது மூளை உழைப்பை பணக்கார நாடுகளின் அபிவிருத்திக்கு காணிக்கை ஆக்குபவர்கள், கம்யூனிசத்தை வெறுப்பதைப் போன்ற அறிவிலித்தனம் வேறு இருக்க முடியாது.

நோர்வே போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில், ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலை உயர்கல்வி வரையில், கல்வி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. வெளிநாட்டு மாணவர்களும் இலவசமாக கல்வி கற்கலாம். ஆனால், "முற்றிலும் எல்லாம் இலவசம்" என்று கருதி விட முடியாது. நான் நோர்வேயில் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு சொல்கிறேன். அந்த நாட்டில், இடைத்தர தொழிற்கல்வி இலவசமாக கிடைப்பதில்லை.

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், பல்கலைக்கழக கல்வி கற்பவர்களை விட, தொழிற்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். நோர்வேயும் அதற்கு விதிவிலக்கல்ல. குடும்பக் கஷ்டம் காரணமாக, உடனடியாக வேலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள், ஏதாவதொரு தொழிற்கல்வியை தான் தேர்ந்தெடுப்பார்கள். கஷ்டப் பட்டவனிடம் பணம் பறிப்பது, என்ன வகை நியாயம் என்று தெரியவில்லை.

உயர்கல்விக்கு கட்டணம் எதுவும் அறவிடுவதில்லை. ஆனால், மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்காக, அரசு கல்விக் கடன் கொடுக்கிறது. இந்தக் கடனை, வேலை செய்யும் காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், கல்வியை தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ், தற்போது பல தனியார் பாடசாலைகளும், தனியார் கல்லூரிகளும் வந்து விட்டன. அவர்கள் நிர்ணயிக்கும் விலையை கொடுத்து படிப்பது, பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு மட்டுமே முடிந்த காரியம்.

முன்னொரு காலத்தில், ஜெர்மனியில் கல்வி இலவசமாக கிடைத்தது. அனால், இப்போது நிறைய கட்டணம் வசூலிக்கிறார்கள். முன்பு, கிழக்கு ஐரோப்பாவில் பல சோஷலிச நாடுகள் இருந்த படியால், சில மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இலவசக் கல்வி வழங்கி வந்தார்கள். பெர்லின் மதில் விழுந்து, சோவியத் யூனியனும் உடைந்த பின்னர் அந்த தேவை இல்லாமல் போய் விட்டது. அதனால், தற்போது எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் கல்விக் கட்டணத்தை கூட்டி வருகின்றனர். இன்னொருவிதமாக கூறினால், இதுவரை காலமும் கல்விக்கு அரசு கொடுத்து வந்த மானியத்தை குறைத்துக் கொண்டு வருகின்றது.

சோஷலிச நாடுகளில் கல்வி முற்றிலும் இலவசம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்கள் சிலரை சந்தித்துப் பேசினேன். ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, கியூபா ஆகிய பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள், புலமைப்பரிசில் (Scholarship) கிடைத்து, மொஸ்கோவில் படித்து விட்டு வந்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்பதற்கு, குறிப்பிட்டளவு அதி புத்திசாலி மாணவர்களுக்கு மட்டுமே புலமைப் பரிசு கொடுக்கிறார்கள். ஆனால், அது பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே நன்மை பயக்கின்றது.

தங்களது சொந்தக் காசில் படிக்கும் வசதி படைத்த மாணவர்களானாலும், ஸ்காலர்ஷிப் கிடைத்து செல்லும் ஏழை மாணவர்கள் ஆனாலும், பெரும்பாலானோர் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைத்து தங்கி விடுகின்றனர். இதன் மூலம், மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த புத்திசாலி மாணவர்களின் மூளை உழைப்பை பயன்படுத்திக் கொள்ளும் பணக்கார நாடுகள், காலப்போக்கில் அந்த "சொத்தை" தமதாக்கிக் கொள்கின்றன. வறிய நாடுகளில் இதனை மூளை வெளியேற்றம் (brain drain) என்று அழைப்பார்கள். அதாவது, வறிய நாடுகளை சேர்ந்த அறிவுஜீவிகளின் திறமை, அந்த நாட்டு மக்களுக்கு பயன்படுவதில்லை. பணம் உள்ள நாடுகள் அதனை பயன்படுத்திக் கொள்கின்றன.

முன்னாள் சோஷலிச நாடுகளில் அப்படி அல்ல. அந்த நாடுகளை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள், சோவியத் யூனியனில் உயர்கல்வியை முடித்து விட்டு, தமது சொந்த நாடுகளில் வேலை செய்து வந்தனர். சோவியத் யூனியனில் கல்வி கற்கும் வாய்ப்பு, ஒரு சில "அதி புத்திசாலி மாணவர்களுக்கு" மாத்திரம் கிடைக்கும் சலுகையா? அப்படி அல்ல. இது குறித்து, சோவியத் யூனியலில் கல்வி கற்ற எனது ஆப்கானிய நண்பர்களிடம் வினாவினேன். 

எண்பதுகளில், ஆப்கானிஸ்தானும் சோஷலிச நாடாக இருந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தக் காலங்களில், "சோவியத் ஒன்றியத்தில் உயர்கல்வி கற்க விரும்புவோர் பதிவு செய்யுமாறு" இடைத்தர, உயர்தர வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் வகுப்பாசிரியர் வந்து கேட்பார். வெளிநாட்டில் படிக்கும் ஆர்வமுள்ள எல்லா மாணவர்களுக்கும் அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும். இறுதித் தேர்வில் அதி கூடிய புள்ளிகள் பெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. 

ஒரு காலத்தில், சோவியத் யூனியனுடன் நட்புறவு பேணிய, முன்னாள் சோஷலிச நாடுகளை சேர்ந்த பிரஜைகள் எல்லோருக்கும், மேற்படிப்புக்காக சோவியத் யூனியனுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அவை சோஷலிச நாடுகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. பிரேசில், இந்தியா, இலங்கை போன்ற சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு பேணிய பன்னாட்டு மாணவர்களுக்கு அந்தச் சலுகை கிடைத்து வந்தது. 

சோவியத் யூனியனில், கல்விக் கட்டணம் கிடையாது என்பது மட்டுமல்ல, மாணவர்களின் வாழ்க்கைச் செலவையும் அரசே கொடுத்து வந்தது. மேலும் அது கடன் அல்ல. வெளிநாட்டு மாணவர்களாக இருந்தாலும், திருப்பிக் கட்ட வேண்டிய அவசியமில்லை. அதனால், பண வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கும், வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டியது.

அது மட்டுமல்ல, கோடை கால விடுமுறைக்கு ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அல்லது விரும்பாதவர்கள், ஏதாவதொரு வேலை செய்து சம்பாதிக்க முடிந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு படிக்கச் சென்றால் தான் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்தத் தகவல் நம்ப முடியாமல் இருக்கலாம். சோவியத் யூனியனில் எல்லோருக்கும் வேலை இருந்தது. அது மட்டுமல்ல, ஒரு தொழிலாளிக்கு கிடைத்த குறைந்த பட்ச சம்பளம் கூட, அண்ணளவாக மாதமொன்றுக்கு 1000 டாலர்கள்.

சோவியத் யூனியனில் வசிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், வேலை செய்வதற்கு விசேட அனுமதி பெற்றிருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதே நேரம், கஷ்டப் பட்டு தேட வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. வேலை செய்ய விரும்பியவர்கள், சும்மா ஒரு தொழிற்சாலைக்கு நேரில் சென்று கேட்டால் போதும். அங்கே எப்போதும் ஏதாவதொரு வேலை இருக்கும். ஒரு மாத கோடை கால விடுமுறையில், வேலை செய்து சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்பி விட்டு படித்தவர்கள் நிறையைப் பேர். இந்தத் தகவல்கள் யாவும், அங்கு கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து பெறப் பட்டவை.


"கற்றுக் கொள்ளுங்கள்...கற்றுக் கொள்ளுங்கள்... மேலும் மேலும் கற்றுக் கொள்ளுங்கள்..." - லெனின்

1 comment:

balu said...

தேமதுரத்தமிழழோசை உலகெலாம் பரவும் வகை செய்யும் வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை நனவாக்கும் நிகண்டு.காம் ற்கு நன்றி.