Saturday, May 17, 2014

தமிழரை கியூபாவுக்கு அனுப்பி விடத் துடிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள்

"சோஷலிசம் சிறந்தது என்று பேசும் தமிழர் எல்லோரும், கியூபாவுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கே அகதித் தஞ்சம் கோருமாறு.... " ஒரு அறிவுஜீவி நண்பர், ஆலோசனை வழங்கி இருக்கிறார். அவரது ஆலோசனைக்கு முதற்கண் நன்றிகள்.

ஈழத் தமிழர்கள் யாராவது தமிழீழத்திற்கு ஆதரவாக பேசினால், அவர்களை தமிழ்நாட்டுக்கு போகுமாறு சொல்வதைப் போன்றுள்ளது மேற்படி நபரின் கூற்று. சிங்கள இனவாதிகளும், அதைத் தானே காலங்காலமாக ஈழத் தமிழர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?

 ஈழத்தில் வாழும் உழைக்கும் வர்க்க தமிழர்கள் கம்யூனிசம், சோஷலிசம் பேசுகிறார்கள் என்பதற்காக, அவர்களை எல்லாம் பிடித்து கியூபாவுக்கு நாடு கடத்தி விட்டால், அப்புறம் அங்குள்ள வேலைகளை யார் செய்வார்களோ தெரியவில்லை. மேட்டுக்குடியினரிடம் பணம் இருப்பதால், பங்களாதேஷ்ஷில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்வார்களோ தெரியாது. சரி, அது போகட்டும். அது அவர்களது பிரச்சினை.

தற்போது, என்னிடம் பல அறிவுஜீவிகளும், "கியூபாவுக்கு போ!" என்று சொல்லி இருப்பதால், கியூபாவில் அகதித் தஞ்சம் கேட்பது எப்படி என்று விசாரித்துப் பார்த்தேன். கியூபாவில் எப்படிப்பட்ட அகதிகளை அனுமதிப்பார்கள்? தஞ்சம் கோரும் அகதிகள் என்ன காரணத்தை சொன்னால் அங்கீகரிப்பார்கள்? இது பற்றி எல்லாம் விசாரித்துப் பார்த்தேன்.

கியூபா இன்னமும் ஒரு வறிய நாடு தான். இருப்பினும், பல தசாப்த காலமாக கியூபாவில் பல வெளிநாட்டு அகதிகளுக்கு புகலிடம் வழங்கி இருக்கிறார்கள். ஒரு காலத்தில், சோஷலிசப் புரட்சிக்கான கெரில்லாப் போர் நடக்காத லத்தீன் அமெரிக்க நாடு எதுவும் இருக்கவில்லை. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கங்களின் தலைவர்கள், போராளிகள், ஆதரவாளர்கள் பலருக்கு கியூபாவில் அரசியல் தஞ்சம் வழங்கப் பட்டுள்ளது.

எல் சல்வடோர், பிரேசில் ஆகிய நாடுகளில் ஏழை மக்களின் விடுதலைக்காக, மார்க்சியத்தையும், கிறிஸ்தவத்தையும் கலந்து போதித்து வந்த கத்தோலிக்க பாதிரியார்கள் இருந்தனர். "விடுதலை இறையியல்" என்ற சித்தாந்தத்தின் கீழ், வர்க்கப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய கிறிஸ்தவ பாதிரியார்கள், அந்த நாடுகளில் இருந்த வலதுசாரி இராணுவ சர்வாதிகாரிகளினால் வேட்டையாடிக் கொல்லப் பட்டனர். அதனால், நிறைய மார்க்சிய- கத்தோலிக்க பாதிரியார்கள் கியூபாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

சிலியில் சி.ஐ.ஏ. ஆதரவுடன் திடீர் சதிப்புரட்சி நடந்தது. இராணுவ ஆட்சியாளர்கள், வீடு வீடாகச் சென்று, நாட்டில் இருந்த கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளை எல்லாம் கைது செய்து கொண்டு வந்து சிறையில் அடைத்தார்கள். ஆயிரக் கணக்கானோரை சித்திரவதை செய்து, கொலை செய்தனர். அதனால், சிலியில் இருந்து தனியாகவும், குடும்பமாகவும் தப்பியோடிய, ஆயிரக் கணக்கான இடதுசாரிகளுக்கு, கியூபாவில் அகதித் தஞ்சம் வழங்கப் பட்டது. கியூப அரசு, அவர்களுக்கான புதிய வீடுகளை கட்டிக் கொடுத்து, வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. 

லத்தீன் அமெரிக்க நாட்டு அகதிகள் மட்டுமல்ல, கணிசமான அளவு அமெரிக்க அகதிகளும் கியூபாவில் வாழ்கின்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி இருந்த, "கருஞ் சிறுத்தைகள்" அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் பலர், கியூபாவில் அரசியல் தஞ்சம் கோரி, இன்னமும் அங்கே வாழ்கின்றனர்.

எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, கியூபாவில் பின்வரும் காரணங்களுக்காக ஒருவருக்கு அகதித் தஞ்சம் வழங்கப் படுகின்றது: அகதியாக புலம்பெயர்ந்தவரின் சொந்த நாட்டில், 
  1. வர்க்கப் போர் நடந்து கொண்டிருக்க வேண்டும். 
  2. ஒரு ஆயுதபாணி விடுதலை இயக்கம், அந்த நாட்டில் உள்ள முதலாளித்துவ அரசை கவிழ்த்து அங்கே சோஷலிச அரசை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருக்க வேண்டும். 
  3. ஒரு வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர், கம்யூனிச அல்லது இடதுசாரி சிந்தனையாளர்களை வேட்டையாடி கொன்று, சித்திரவதை செய்திருக்க வேண்டும்.


மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ள நாடுகளில் இருந்து, புலம்பெயர்ந்து வரும் அகதிகளுக்கு கியூபாவில் அரசியல் தஞ்சம் கொடுப்பார்களாம். 

ஆகவே, அறிவுஜீவி நண்பர்கள் என்னை கியூபாவுக்கு போகுமாறு ஆலோசனை வழங்குவதற்கு முன்னர், கியூபாவில் அகதி தஞ்சம் கோருவதற்கு தேவையான பின்வரும் ஆதாரங்களை திரட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்: 
  •  இலங்கையில் இன முரண்பாடு எதுவும் இல்லை, அங்கே நடந்தது ஒரு வர்க்கப்போர். 
  •  ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப் புலிகள் ஒரு கம்யூனிசப் புரட்சி இயக்கம். 
  •  அவர்கள் அமைக்க விரும்பிய தமிழீழம் சோஷலிசப் பொருளாதாரத்தை கொண்டிருக்கும். 
  • இலங்கையில் மார்க்சியம், கம்யூனிசம், சோஷலிசம் பேசுவது தடை செய்யப் பட்டுள்ளது. 
  • ஸ்ரீலங்கா இராணுவம், கம்யூனிச, சோஷலிச நம்பிக்கையாளர்களை வேட்டையாடிக் கொன்று குவித்து வருகின்றது.


ஓர் அகதி, உலகில் எந்த நாட்டில் தஞ்சம் கோரினாலும், என்ன பிரச்சினை காரணமாக தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்தார் என்பதற்கான காரணத்தைக் கூற வேண்டுமென்பது, உங்களுக்குத் தெரியாததல்ல. ஆகவே, காலதாமதம் செய்யாமல், மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை கொண்டு வந்து வந்து சமர்ப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: