Wednesday, January 12, 2011

சோவியத் தேசிய இனங்களின் சத்திய சோதனை


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?]
(பகுதி : 4)


எந்தவொரு மேலாதிக்க சக்தியும், தேசிய இனங்களை மோத வைக்கவோ அல்லது ஒற்றுமையாக வாழ வைக்கவோ தான் விரும்பும். சதுரங்கம் விளையாடுவது போல, "ஆண்டவர்கள்" எங்கோ இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிங்களவர்களை வெறுக்கும் தமிழர்கள். தமிழர்களை வெறுக்கும் சிங்களவர்கள். பாகிஸ்தானியர்களை வெறுக்கும் இந்தியர்கள். இந்தியர்களை வெறுக்கும் பாகிஸ்தானிகள். இவர்கள், தாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வல்லரசால் ஆட்டுவிக்கப்பட்ட பொம்மைகள், என்று உணர்வதில்லை. தங்களது கேவலமான நிலைமையை  உணராமல், மற்றவர்களை பரிகசித்துக் கொண்டிருப்பார்கள்.

சோவியத் யூனியன் குறித்து மத்திய தர வர்க்க அறிவுஜீவிகள் முன்வைக்கும் விமர்சனங்களில் ஒன்று, ரஷ்ய மொழியின் மேலாதிக்கம் பற்றியது. இதே அறிவுஜீவிகள் தமது தாய்மொழியை விட ஆங்கிலத்தை பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதில் என்ன தவறு? என்றும் கேட்பார்கள். 19 ம் நூற்றாண்டில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை காலனிப் படுத்தினார்கள். அங்கே ஆங்கில மொழியின் மேலாதிக்கத்தை திணித்தார்கள். சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க அவர்களுக்கு ஒரு பொது மொழி தேவைப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ரஷ்யர்களும் அதைத் தான் செய்தார்கள். இங்கிலாந்துக்கு போட்டியாக சார் மன்னனின் ரஷ்யா சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. கொகேசிய ஐரோப்பிய பகுதிகள், சைபீரியா, மத்திய ஆசியப் பகுதிகள் எல்லாம் அப்போது ஆக்கிரமிக்கப்பட்டு காலனிப் படுத்தப்பட்டது. அங்கெல்லாம் ரஷ்ய மொழியே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.

1917 ல் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட்கள் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே பலர், சார் மன்னனின் ரஷ்ய மொழிக் கொள்கையை பின்பற்ற விரும்பினார்கள். "ரஷ்ய மொழியை ஒரே மொழிக் கொள்கையாக தொடர்வது, ரஷ்ய பேரினவாதத்தின் தொடர்ச்சியாக கருதப்படும்," என்று லெனின் கண்டித்திருந்தார். கம்யூனிஸ்ட்கள் புதிதாக தேசிய இனங்கள் பற்றிய கொள்கை வகுக்க வேண்டுமென்று, ஸ்டாலினை தேசிய இனங்களின் கமிசாராக நியமித்தார். ரஷ்ய மொழியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஜோர்ஜிய மொழியை தாய்மொழியாக கொண்ட ஸ்டாலின் அதற்கு ஏற்ற ஒருவராக கருதப்பட்டார். புதிய சோவியத் குடியரசுகளில் அந்தந்த மக்களின் மொழிகளை வளர்ப்பதற்கும், கல்வி கற்கவும் உரிமைகள் இருந்தன. அதே நேரம் ரஷ்ய மொழி கட்டாயமான இரண்டாவது மொழியாக பயின்றார்கள். நமது நாடுகளில் ஆங்கில வழிக் கல்வி போன்று, அங்கே தனியாக ரஷ்ய வழிக் கல்வி வழங்கும் பாடசாலைகளும் இருந்தன. சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஸ்டாலின் அதிபராக பதவியேற்ற பின்னர் கூட, ரஷ்ய மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ரஷ்ய மொழி மேலாதிக்கத்தை எதிர்க்கும் நமது அறிவுஜீவிகள், அதற்கு பதிலாக வேறெந்த மொழியை, பொது மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினால் நல்லது. யாருமே பேசாத ஆங்கிலத்தையோ, பிரெஞ்சையோ எவ்வாறு பொது மொழியாக கொண்டு வர முடியும்?

இன்றைக்கு பல முன்னாள் சோவியத் பிரஜைகள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால் ஆட்சியில் இருப்பவர்களின் அரசியல் சார்பு, பொருளாதார ஒத்துழைப்பு, மேற்குலகை நோக்கி இருப்பதே அதற்கு காரணம். சார் மன்னன் காலத்தில் மட்டுமல்ல, சோவியத் புரட்சியின் பின்னர் கூட பொருளாதார கட்டமைப்பு மொஸ்கோவை மையமாக கொண்டிருந்தது. ஆனால் சுற்றவரவிருந்த நாடுகளிடம் இருந்து துண்டிக்கப் பட்டிருந்தது. எல்லைக்கோடு பிரித்திருந்தாலும், அயல் நாடுகளில் சகோதர இனங்களைக் கொண்டிருந்த தேசிய இனங்கள் முதலில் பாதிக்கப்பட்டன. ஆர்மேனியாவின் அரைவாசிப் பகுதி ஏற்கனவே துருக்கியினால் விழுங்கப்பட்டிருந்தது. அங்கே தற்போது ஆர்மேனியர்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல், துருக்கிமயமாகி விட்டது. ரஷ்யாவின் பகுதியாக இருந்த ஆர்மேனியாவுக்கு போல்ஷேவிக்குகளால் குடியரசு அந்தஸ்து வழங்கப்பட்டது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் நெதர்லாந்துக்கு பல ஆர்மேனிய அகதிகள் வந்திருந்தனர். அவர்கள் இன்றைக்கும் தமது மொழியை சரளமாக எழுதப், பேச தெரிந்து வைத்திருந்தனர். "சோவியத் சர்வாதிகாரம் பல மொழிகளை அழித்து விட்டதகாவும், சிறுபான்மை மொழியினத்தை சேர்ந்தவர்களுக்கு ரஷ்ய மொழி மட்டுமே தெரியும் என்றும்," மேற்குலகினால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேற்குலகைச் சேர்ந்த சிறுபான்மையினங்களைப் பொறுத்த வரை, அது உண்மை தான். நான் சந்தித்த ஐரிஷ்காரர்களுக்கு சிறிதளவேனும் ஐரிஷ் மொழி பேசத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா, ஆர்மேனியா, அசர்பைசான், உக்ரைன், பெலாரஸ், மொல்டோவியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் எல்லோருக்கும் தமது தாய்மொழி தெரிந்திருந்தது. அதே நேரம் ரஷ்ய மொழியும் சரளமாக பேசக் கூடிய அளவுக்கு இரு மொழிப் புலமை பெற்றிருந்தனர். எழுபதாண்டு கால சோவியத் சர்வாதிகாரம் இந்த மொழிகளை அழித்திருந்தால், எவ்வாறு இளைய தலைமுறை அந்த மொழிகளை கற்றுக் கொண்டது? நமது மக்களிலேயே தமிழ் மொழியை பேச விரும்பாமல், ஆங்கிலம் பேசுவதை பெருமையாகக் கருதும் பலர் உண்டு. அத்தகையவர்கள் சோவியத் காலத்திலும் இருந்திருக்கின்றனர். அந்தப் பிராந்தியத்தில் ரஷ்ய மொழியே அதிக வளர்ச்சியடைந்திருந்தது. உயர்கல்வி, உயர்பதவியை நாடுவோர் ரஷ்ய மொழிப் புலமை பெற விரும்பினார்கள். துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளுக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. ரஷ்ய சிரிலிக் எழுத்துகளை கொண்டு எழுதும் முறை வந்த பின்னர் தான், அந்த மொழிகளில் நவீன கல்வி பெரும் வாய்ப்புக் கிட்டியது. அது வரை காலமும் இஸ்லாமிய மதகுருக்களால் நடத்தப் பட்ட மதராசாக்களில் திருக்குரான் மட்டுமே கற்பிக்கப்பட்டது. சுருக்கமாக, இன்றைய ஆப்கானிஸ்தான் போலத்தான் அன்றைய மத்திய ஆசிய சோவியத் குடியரசுகள் காணப்பட்டன.

1917 கம்யூனிஸ்ட் புரட்சியை பல வகையான சக்திகள் எதிர்த்துப் போரிட்டன. ஆர்மேனியா, ஜோர்ஜியாவில் தேசியவாத சக்திகள் பலமாக இருந்தன. அசர்பைசான், மற்றும் துருக்கெஸ்தான் (மத்திய ஆசிய குடியரசுகளின் பொதுவான பெயர்) ஆகிய நாடுகளில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் "கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரான ஜிகாத்" நடத்திக் கொண்டிருந்தார்கள். செம்படை முதலில் இவர்களை போரில் தோற்கடிக்க வேண்டியிருந்தது. ஸ்டாலின் தனது தாய் நாட்டின் (ஜோர்ஜியா) தேசியவாதிகளுக்கு கூட கருணை காட்டவில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பொழுது, உக்ரைன் மற்றும் பால்ட்டிக் (எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா) நாடுகளை சேர்ந்த தேசியவாதிகள் நாஜி ஆக்கிரமிப்பளர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஹிட்லரும் அவர்களின் தனி நாடுகளை அங்கீகரித்து குஷிப் படுத்தியிருந்தார். ஹிட்லரின் வீழ்ச்சியுடன் பறி போன சுதந்திரத்தை, ஜனநாயக மேற்கு நாடுகள் வாங்கிக் கொடுத்தன. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரும், தேசிய இனங்களை மறு வார்ப்புச் செய்ய வேண்டியேற்பட்டது. எதிரிகளான ஜெர்மனியர்களுடன் ஒத்துழைத்த இனங்களின் பெரும்பான்மைப் பலத்தை குறைக்கும் முகமாக, ஆயிரம் மைல்களுக்கப்பால் கொண்டு சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டன.

ஆனால் அதற்கு முன்னரே, எல்லா சோவியத் குடியரசுகளிலும் குறிப்பிட்ட ஒரு இனத்தின் பெரும்பான்மைப் பலத்தை குறைப்பதற்காக, பிற சிறுபான்மை இனங்களின் பிரதேசங்கள் சேர்க்கப்பட்டன. (இது பற்றி விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்.) வருங்காலத்தில் இந்த குடியரசுகள் தனி நாடாக பிரிந்து சென்றாலும், இன முரண்பாடுகள் அவை தாம் விரும்பிய திசையில் செல்ல விடாது தடுக்கும். தேசிய இனங்களின் தலைவிதியை மாற்றியமைத்த ஸ்டாலினின் தொலைநோக்கு இன்று நிதர்சனமாகி வருகின்றது. லண்டனில் இருந்து கொண்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தேசிய இனங்களின் தலைவிதியை எழுதியவர்களுக்கும் அத்தகைய தொலைநோக்கு இருந்தது. பங்களாதேஷ், காஷ்மீர், ஈழப் பிரச்சினைகளை ஆங்கிலேயர்கள் முன் கூட்டியே அனுமானித்திருந்திருப்பார்கள். தமிழர்களும், சிங்களவர்களும் இன்னும் நூறு வருடங்களுக்கு சண்டை பிடித்தால் பார்த்து இரசித்துக் கொண்டிருப்பார்களே தவிர, தமிழீழத்தை பிரித்துக் கொடுக்க முன்வர மாட்டார்கள்.

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

1.ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?
2.பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை
3.காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்

5 comments:

Vijay Periasamy said...

//19 ம் நூற்றாண்டில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை காலனிப் படுத்தினார்கள்//

ஆங்கிலேயர்கள் 1700 களிலேயே முழு இந்தியாவையும் அடிமைபடுத்திவிட்டனர் .

sivakumar said...

/பெரும்பான்மைப் பலத்தை குறைப்பதற்காக, பிற சிறுபான்மை இனங்களின் பிரதேசங்கள் சேர்க்கப்பட்டன. (இது பற்றி விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்.) வருங்காலத்தில் இந்த குடியரசுகள் தனி நாடாக பிரிந்து சென்றாலும், இன முரண்பாடுகள் அவை தாம் விரும்பிய திசையில் செல்ல விடாது தடுக்கும்.// இதை எப்படி சரியானது என்று சொல்கிறீர் ? இனவாதிகளின் செயல் போல் தெரிகிறது. இது குறித்துத்தான் அடுத்த கட்டுரையில் சொல்லப்போகிறீர் என்றால் அதிலேயே விளக்கிவிடுங்கள்.

Kalaiyarasan said...

தமிழ் வினை, எந்த இனமாகிலும் அதன் மேலாண்மையை தடுக்கும் செயல் எவ்வாறு இனவாதமாகும்? எனக்குப் புரியவில்லை. ஒரு தேசத்தில் நூறு வீதம் ஒரே இனம் வாழ்ந்தால் அது இனவாத அரசு ஆகாதா? தெளிவு படுத்தவும்.

sivakumar said...

நூறு விழுக்காடு ஒரே இனம், மேலாண்மையுடன் ஒரே தேசத்தில் வாழ்ந்தால் அது இனவாத அரசுதான். சிங்கள, யூத குடியேற்றங்கள் நோக்கம் இதுதானே என்ற புரிதலின் அடிப்படையில் கேட்டேன். இல்லை பெரும்பான்மை இனங்களுடன் சிறுபான்மையினர் சேர்க்கப்பட்டனர் என்று பொருள் கொள்ள வேண்டுமா ?

Kalaiyarasan said...

தமிழ் வினை,
சோவியத் யூனியனில் ஒவ்வொரு குடியரசும், அந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தில் பெயரில் உருவாக்கப்பட்டன. ஆனால் அதற்குள்ளே ஏதாவது ஒரு சிறுபான்மையினத்தின் பிரதேசமும் உள்ளடக்கப்பட்டது. அந்த சிறுபான்மையினம், அயல் நாட்டில் பெரும்பான்மை இனமாக இருக்கலாம். சோவியத் வீழ்ச்சியின் பின்னர் புதிதாக சுதந்திரமடைந்த நாடுகள் எல்லாம் அப்படித்தான். இன்று பூரண சுதந்திரம் அனுபவிக்கும் போது இனக்கலவரம், இனச்சுத்திகரிப்பு, குடியேற்றம் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எவராலும் நூறு விழுக்காடு ஒரே இனத்தைக் கொண்ட தேசத்தை அமைக்க முடியாது. காரணம்: இன்றைய நவீன உலகில் சர்வதேச அரசியலும், உள்நாட்டு அரசியலும் அந்தளவு நெருக்கமானவை.

அடுத்த பகுதி எழுதி முடிக்கும் வரை காத்திருந்தால் இன்னும் தெளிவான விளக்கம் கிடைக்கும்.