Friday, January 03, 2014

ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்

(முதலாம் பாகம்)


ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு,  போல்ஷெவிக் கட்சியினரின் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றாலும், புரட்சியின் ஆயுட்காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வி எழுந்தது. முடியாட்சிக்கு விசுவாசமான வெண் படைகளுக்கும், செம் படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. ஏற்கனவே, முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட தோல்வியில், அதன் அழிவில் இருந்து மீள முடியாத மக்கள், மீண்டும் ஒரு போருக்குள் தள்ளப் பட்டனர்.

நாடு முழுவதும், மீண்டும் பல இலட்சம் மக்கள் மடிந்தனர். பல இலட்சம் சொத்துக்கள் நாசமாகின. இறுதியில், செம்படையினர் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றாலும், அதற்காக பெரியதொரு விலை கொடுக்க வேண்டி இருந்தது. இடையறாது நடந்த போரினால், பட்டினிச் சாவுகளும் அன்றாட நிகழ்வுகளாகின. எல்லாம் ஓய்ந்து அமைதி திரும்பிய காலத்தில், குறைந்தது பத்து மில்லியன் மக்கள் பலியாகி விட்டிருந்தனர்.

உள்நாட்டுப் போரின் முடிவில், மார்க்சிஸ்டுகள் அதிகாரத்தை நிலை நாட்டினாலும், அவர்கள் கனவு கண்ட சோஷலிச சொர்க்கத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஒரு சோஷலிச நாடு எப்படி இருக்கும் என்ற விளக்கக் கையேடு எதையும் கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கவில்லை. இதற்கிடையே அராஜகவாதிகள் பல சோவியத் சங்கங்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

அராஜகவாதிகள் நேரடி ஜனநாயகம், நேரடி கம்யூனிசம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்திக் கொண்டிருந்தனர். ஆயினும், ட்ராஸ்கி தலைமை தாங்கிய செம்படை, குரோன்ஸ்டாட் சோவியத் மீது தாக்குதல் நடத்திய பின்னர், அராஜகவாதிகளின் சோவியத்துகள் கலைக்கப் பட்டன. அதற்குப் பிறகும் ஜனநாயக அமைப்பு தொடர்ந்திருந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், எந்தக் கட்சியையும் சேராமல் சுயேச்சையாக போட்டியிட்ட தனி நபர்களும் மட்டுமே சோவியத் சபைகளுக்கு தெரிவு செய்யப் பட்டார்கள். 

உள்நாட்டு, உலகப் போர்களினால் கடுமையாக பாதிக்கப் ரஷ்யா, அழிவின் விளிம்பில் நின்றது.  லெனின் தற்காலிக தீர்வாக, “புதிய பொருளாதாரக் கொள்கை" (NEP) ஒன்றை அறிவித்தார். முக்கியமான தொழிற்துறைகள், பெரிய நிறுவனங்கள் மாத்திரம் தேசியமயமாக்கப் பட்டன. சிறிய தொழிற்சாலைகளும், சிறு கைத்தொழில்களும், பிராந்திய முதலாளிகளின் கீழே இயங்கிக் கொண்டிருந்தன. விவசாய உற்பத்தியும் வழக்கமான பண்ணையார்கள், பணக்கார விவசாயிகளின் (கூலாக்)  ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 

(கம்யூனிச) போல்ஷெவிக் கட்சியின் புதிய சோவியத் அரசு, தனது கட்டுப்பாட்டின் கீழ், முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்கு சுதந்திரம் கொடுத்திருந்தது. இதனால் நகரங்களில் சிறு முதலாளிகளும், வணிகர்களும், கிராமங்களில் பண்ணையார்களும் புதிது புதிதாக உருவானார்கள். இதனால், நகர்ப்புறங்களில் தொழிலாளர்களும், கிராமப் புறங்களில் ஏழை விவசாயிகளும் பு.பொ.கொ.(NEP) மீது வெறுப்புக் கொண்டனர். அவர்கள் நம்பியிருந்த சோஷலிசப் புரட்சி நடக்காததால் ஏமாற்றமடைந்தனர். அவர்கள், மீண்டும் முதலாளிகளின், பண்ணையார்களின் கீழ் வேலை செய்யும் நிலைமையை விரும்பவில்லை. சோவியத் அரசு, தங்களது வர்க்க அபிலாஷைகளை பிரதிபலிக்கும் அரசு என்று அவர்கள் நம்பியிருந்தனர்.

லெனினின் மறைவுக்குப் பின்னரும், ஸ்டாலினின் ஆரம்ப காலங்களிலும் ரஷ்யா முழுவதும் குழப்பகரமான சூழ்நிலை நிலவியது. புதிய சோவியத் அரசின் அதிகாரிகள் எல்லோரும் அரசியல் அறிவு பெற்றிருக்கவில்லை. பொதுவாக, ஆசியாவில் அல்லது ஆப்பிரிக்காவில் இன்றுள்ள சராசரி வறிய நாடொன்றின் நிலைமை தான், அந்தக் கால (1917 - 1930) சோவியத் யூனியனிலும் நிலவியது. லெனின் பு.பொ.கொள்கையை ஒரு தற்காலிக தீர்வாகக் கருதி இருந்தார். 

லெனினின் மறைவுக்குப் பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குள் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. புகாரின் தலைமையிலான வலது கம்யூனிஸ்டுகள், NEP கொள்கையை தொடர விரும்பினார்கள். ஆனால், நாட்டுப்புறங்களில் இருந்த பணக்கார விவசாயிகள், தங்களது விவசாய உற்பத்திக்கு அதிக விலை எதிர்பார்த்தார்கள். அரசு அவர்கள் கேட்ட விலையை கொடுக்க மறுத்ததால், நகரங்களுக்கான உணவு விநியோகம் தடைப் பட்டது. நகரங்களில் உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், முரண்பாடற்ற சகோதரத்துவ வர்க்கங்கங்களாக கருதப் பட்ட, விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.

சோவியத் நாட்டு ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும், எல்லோரும் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்று கருதினார்கள். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் தான், உழைக்கும் மக்களுக்கு உறுதியளித்த சோஷலிச சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால், அதற்கு பெருமளவு மூலதனம் தேவைப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்த மூலதனம், காலனிகளில் இருந்து சுரண்டிய செல்வம், என்று கார்ல் மார்க்ஸ் எழுதியதை எல்லோரும் படித்திருந்தார்கள். புதிதாக தோன்றியுள்ள சோவியத் ஒன்றியம், அவ்வாறு காலனிகளை பிடித்து சுரண்டி மூலதனம் சேர்க்க முடியாது.

1917 ல் போல்ஷெவிக் கட்சியினர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதும், தமக்கும் பழைய சார் மன்னனின் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தனர். அதன் அர்த்தம், சார் மன்னன் வாங்கியிருந்த வெளிநாட்டுக் கடன்களுக்கு, புதிய அரசு பொறுப்பேற்க முடியாது. தமது கடன் பணம் திரும்பி வராது என்று தெரிய வந்ததும், பிரிட்டன், ஜப்பான் போன்ற கடன் கொடுத்த நாடுகள், சோவியத் ஒன்றியத்தின் மீது போர் தொடுத்தன.

பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் போன்ற மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் சில பகுதிகளை சிறிது காலம் ஆக்கிரமித்திருந்தன. மீண்டும் ஒரு போர். இந்த தடவையும், ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடித்து விட்டு, செம்படை வெற்றி வாகை சூடியது. ஆனால், வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் முற்றாக துண்டிக்கப் பட்டன. அதற்குப் பிறகும், அவர்கள் சோவியத் நாட்டுப் பொருளாதாரத்தில் முதலிட முன்வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள், ட்ராஸ்கி பிரதிநிதித்துவப் படுத்திய இடது கம்யூனிஸ்டுகள் என்ற பிரிவு இருந்தது. அவர்கள் “நிரந்தரப் புரட்சியை" எதிர்பார்த்தார்கள். அதாவது, சோவியத் ஒன்றியத்தில் சோஷலிசத்தை கொண்டு வருவது இப்போதைக்கு சாத்தியப் படாது. முதலில், மார்க்ஸ் எதிர்பார்த்தது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புரட்சி ஏற்பட வேண்டும். அதற்குப் பின்னர், அந்த நாடுகள் சோவியத் யூனியனின் நட்பு நாடுகளாகி உதவி செய்யும். ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகளில் புரட்சி வரும் வரை காத்திருப்பது, இலவு காத்த கிளியின் கதையாகியது. 

ஜெர்மனி, ஹங்கேரியில் சில மாதங்கள் நிலைத்திருந்த புரட்சிகளை தவிர, வேறெந்த நாட்டிலும் புரட்சி நடக்கவில்லை. ஆனால், பாராளுமன்ற ஜனநாயக சீர்திருத்தங்கள் வந்தன. இதனால், தேர்தல்களில் போட்டியிடும் சமூக - ஜனநாயகக் கட்சிகளும், அரசை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுமாக இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்க மக்கள், வேறொரு கட்டத்தை நோக்கி (ஜனநாயக சோஷலிசம்) நகர்ந்து சென்றனர். மேற்குலகில் அன்றிருந்த நிலைமை, ட்ராஸ்கியின் நிரந்தரப் புரட்சியின் தத்துவங்களை பிரதிபலித்ததால், இன்றைக்கும் பல ட்ராஸ்கிச கட்சிகள் சமூக ஜனநாயக அரசியலை பெரிதும் விரும்புகின்றன. இன்று மேற்குலக நாடுகளில், ட்ராஸ்கிச அமைப்புகள் பெருமளவு ஆதரவாளர்களை கொண்டிருப்பது தற்செயல் அல்ல.

ஸ்டாலின் ஆட்சி செய்த காலத்தில், அல்லது போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர், ஒரு சர்வாதிகாரியின் (முன்னர் லெனின், பின்னர் ஸ்டாலின்) எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை, மக்களை வருத்தியதாக நினைப்பவர்கள் பலர். ஒரு புரட்சி நடக்கும் நாட்டில், எதிரெதிர் அரசியல் கருத்துக் கொண்ட அணிகளுக்கு இடையில் மோதல் நிலைமை உருவாகும். அதிலே ஒரு அணி அதிக பலம் பெறுவதும், அது பிற சிறிய குழுக்களை ஒடுக்குவதும் வரலாறு முழுக்க நடந்து வந்துள்ளது. கிரேக்க-ரோமன் சாம்ராஜ்யத்தில் கிறிஸ்தவ மதம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்ட காலத்தில், பல்வேறு கிறிஸ்தவக் குழுக்கள் இயங்கின. 

கிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்கு இடையில், மாறு பட்ட கோட்பாடுகள் இருந்தது மட்டுமல்ல, விவிலிய நூல் கூட தனித் தனியாக எழுதப் பட்டிருந்தது. ஆனால், பிற்காலத்தில் பலம் பெற்ற குழுவினர், மற்ற குழுக்களை சேர்ந்த கிறிஸ்தவர்களை ஒடுக்கினார்கள். கிரேக்கம் முதல் எகிப்து வரையில் பல ஆயிரம் மாற்றுக் கருத்தாளர்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதன் பிறகு தான், நாம் இப்போது அறிந்து வைத்திருக்கும் உலகளாவிய கிறிஸ்தவ மதமும், பொதுவான விவிலிய நூலும் உருவானது. அதாவது மதப் போரில் வென்றவர்கள், எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை மூலம், தமது கருத்துக்களை உலகம் முழுவதும் ஏற்க வைத்தார்கள். அதை யாரும் இன்றைக்கு நினைவுகூருவதில்லை.

பிரிட்டனில் குரொம்வெல் மன்னராட்சிக்கு எதிராக நடத்திய புரட்சியினால் தான், பாராளுமன்றம் என்ற ஒன்று உருவானது. அப்போதும், "பாராளுமன்றத்திற்கான புரட்சியில்" பல இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டனர். மன்னரைக் கொன்று பாராளுமன்ற அமைப்பை ஸ்தாபித்தாலும், குரொம்வெல் ஒரு சர்வாதிகாரியாகத் தான் ஆட்சி நடத்தினார். இதே போன்ற நிலைமை, பிரெஞ்சுப் புரட்சியிலும் காணப் பட்டது. மன்னர், பிரபுக்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் படுகொலை செய்யப் பட்டனர்.

பிரான்ஸ் முழுவதும் கத்தோலிக்க பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் கூட கொன்று குவிக்கப் பட்டனர். அது மட்டுமல்ல, ஒரு காலத்தில் பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் நின்று பாடுபட்ட சக தோழர்கள், சில வருடங்களின் பின்னர் ரொபெஸ்பியரின்  சர்வாதிகார ஆட்சியில் வேட்டையாடிக் கொல்லப் பட்டனர். பிரெஞ்சுப் புரட்சியின் போது இலட்சக் கணக்கான மக்களும், ஒரு பிரிவு புரட்சியாளர்களும் அழித்தொழிக்கப் பட்டனர். பிரெஞ்சுப் புரட்சியின் லிபரல் கொள்கைகளை ஐரோப்பா முழுவதும் பரப்பக் கிளம்பிய, நெப்போலியனின் போர்களில் கொல்லப் பட்ட பிற ஐரோப்பிய மக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், அது ஒரு கோடியை தாண்டும்.

ஒரு காலத்தில், சர்வாதிகாரிகளினால் மக்கள் மீது திணிக்கப் பட்ட கிறிஸ்தவ மதத்தையும், லிபரல் சித்தாந்தத்தையும் பின்பற்றுவதற்கு பெருமைப் படுவோர், "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" பற்றி பேசுவது அபத்தமானது. உலகம் முழுவதும், புரட்சிகர சமுதாயம் ஒன்று உருவாகும் காலத்தில், சர்வாதிகாரம், படுகொலைகள், குழு மோதல்கள் எல்லாம்  நடந்து கொண்டு தானிருக்கின்றன. நாம் இன்றைக்கு வாழும், "மேற்கத்திய விழுமியங்களை கொண்ட ஜனநாயக சமுதாயம்" கூட, சர்வாதிகாரம், படுகொலைகள், போர்கள் இல்லாமல் நடைமுறைச் சாத்தியமாகி இருக்காது. பலர் இந்த யதார்த்தத்தை உணர்வதில்லை. இன்றைக்கும் ஏராளமான உலக மக்கள் ஸ்டாலினை ஆதரிப்பதை, ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியை ஆதரிப்பதாக திரிபு படுத்துவது அபத்தமானது. அன்றைய சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஒரு நாட்டில் சோஷலிச பொருளாதாரத்தை கட்டியெழுப்ப துணிந்த பின்னர் தான், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம்  மேம்பட்டது.

ஒரு நாட்டில், எப்படிப் பட்ட கொடூரமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும், மக்களுக்கு அது ஏற்புடையதாக இல்லாவிட்டால், எதிர்த்துக் கிளர்ச்சி செய்வார்கள். மக்கள் எழுச்சியை எந்த அரசாலும் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு அடிபணிந்து தான் செல்ல வேண்டும். ஸ்டாலின் பதவிக்கு வந்த காலத்திலும், பெருமளவு மக்கள் அரசு இயந்திரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்துள்ளனர். அவர்களது கோபாவேசம் முழுவதும் புதிய பொருளாதாரக் கொள்கையினால் பலனடைந்த சிறு பிரிவினருக்கு எதிராக இருந்தது. 

அந்தக் கொள்கையின் முன்னெழுத்துகளால், “NEP காரர்கள்" என்று அழைக்கப் பட்ட பிரிவினர் மீது, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். கம்யூனிஸ்டுகளான போல்ஷெவிக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும், ஒரு தசாப்த காலமாக சோவியத் யூனியனில் முதலாளித்துவ-சந்தைப் பொருளாதாரம் நிலவியது. அதன் அர்த்தம், அடக்குமுறையை திணிக்கும் வர்க்கமும், அடக்கப்படும் வர்க்கமும் சேர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்டது. புதிய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்க தலைமை பற்றி பேசிக் கொண்டிருக்கையில், பாட்டாளி மக்கள் முதலாளிகளால் சுரண்டப் பட்டுக் கொண்டிருந்தால், யாருக்குத் தான் கோபம் வராது?

மக்கள் தமது மனக் குமுறல்களை பல வழிகளிலும் காட்டினார்கள். தமது எதிர்ப்புக் குரல்களை சுவர்களில் எழுதினார்கள். நேரடியாக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்கள். தொழிற்சாலைகளில் நடந்த முறைகேடுகள், அதிகாரிகளின் ஊழல்கள், உணவுப் பற்றாக்குறை, வீட்டுப் பிரச்சினை போன்ற எல்லாவற்றையும், மக்கள் கடிதங்களில் விபரித்து எழுதினார்கள். நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் எழுச்சிகளும், வேலை நிறுத்தங்களும் வெடித்தன. (அந்தக் கடிதங்கள் எல்லாம் மொஸ்கோ நகரில், “Obshchestvo i vlast 1930, povestvovanie v dokumentakh” என்ற பெயரிலான ஆவணத்தில் இன்றைக்கும் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.)

ஒரு பக்கத்தில், ட்ராஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடு காலத்திற்கு ஒவ்வாததாக கருதப் பட்டது. நிரந்தரப் புரட்சிக்கு காத்திருந்தால், மக்கள் தொடர்ந்தும் பட்டினி கிடக்க வேண்டியிருந்திருக்கும். மறு பக்கத்தில், புகாரினின் “சந்தை சோஷலிசக் கோட்பாட்டினால்" ஒரு பிரிவினர் மட்டுமே நன்மை அடைய முடிந்தது. (புகாரினின் கோட்பாடான சந்தை-சோஷலிச பொருளாதாரம், பிற்காலத்தில் டெங்சியாவோபிங்கினால் சீனாவில் கொண்டு வரப் பட்டது.) இதன் மூலம், ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தளவு செல்வம் சேர்ப்பதற்கு சுதந்திரம் கிடைத்தது. அதனால், நகரங்களில் சிறு முதலாளிகளும் (அல்லது தொழில் முனைவோரும்), கிராமங்களில் பணக்கார விவசாயிகளும் மட்டுமே நன்மை அடைந்தனர். பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.

(தொடரும்)


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) 


ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"

3 comments:

சிவக்குமார் said...

சோவியத், ஸ்டாலின் குறித்த இது போன்ற உங்கள் தொடருக்காக காத்திருந்தேன்.
ஸ்டாலின் ஆதரவை நீங்கள் உங்கள் பாணியில் எளிமையாக நியாயப்படுத்திய விதம் வழக்கம் போலவே பிரமாதம். தொடருங்கள்.

லெனின் அகத்தியநாடன் said...

நமது மதிப்பிற்குரிய தோழரும், ஆசான்களில் ஒருவருமான ஜே.வி.ஸ்டாலின் மீது, யாருக்கும் இல்லாத அளவுக்கு எதிர்ப்புகளும், தவறான சித்தரிப்புகளும், கட்டுகதைகளும், அவதூறுகளும் நிரம்பிக் கிடக்கின்றன. முதலாளித்துவவாதிகளுக்கு ஸ்டாலினைக் கண்டு அவ்வளவு பயம்.

இருக்கட்டும்! எனவே இதுபோன்ற நம்பிக்கைக்குரிய, ஸ்டாலினின் உண்மை முகத்தை காட்டும் கட்டுரைகள் நிச்சயம் இன்றைய தலைமுறைக்கு தேவை. ஏனெனில் ஸ்டாலின் இந்த உலகிற்கு மாபெரும் தேவை.

லெனின் அகத்தியநாடன் said...

நமது மதிப்பிற்குரிய தோழரும், ஆசான்களில் ஒருவருமான ஜே.வி.ஸ்டாலின் மீது, யாருக்கும் இல்லாத அளவுக்கு எதிர்ப்புகளும், தவறான சித்தரிப்புகளும், கட்டுகதைகளும், அவதூறுகளும் நிரம்பிக் கிடக்கின்றன. முதலாளித்துவவாதிகளுக்கு ஸ்டாலினைக் கண்டு அவ்வளவு பயம்.

இருக்கட்டும்! எனவே இதுபோன்ற நம்பிக்கைக்குரிய, ஸ்டாலினின் உண்மை முகத்தை காட்டும் கட்டுரைகள் நிச்சயம் இன்றைய தலைமுறைக்கு தேவை. ஏனெனில் ஸ்டாலின் இந்த உலகிற்கு மாபெரும் தேவை.