Tuesday, June 21, 2016

"இனம் என்னடா இனம், வர்க்கம் தான் நிரந்தரம்!" - இப்படிக்கு தமிழ் முதலாளிகள்


இனம் இனத்தோடு தான் சேரும். ஈழத் தமிழ் முதலாளி, சிங்கள பேரினவாத அரசுடன் கைகோர்ப்பான். யாழ்ப்பாண தமிழ் கோடீஸ்வரர், வெற்றிகரமான தொழிலதிபர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன். இவர் சிங்கள பேரினவாத அரசு இயந்திரத்துடன் கைகோர்த்துள்ளதை நிரூபிக்கும் படங்கள், சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளப் பட்டன.

யாழ்நகரில் இருந்து வெளியாகும் தமிழ்த் தேசிய, புலி ஆதரவு தினசரி உதயன் பத்திரிகை முதலாளி சரவணபவன் மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆடம்பரமாக நடைபெற்றது. அதில் இலங்கை ஜனாதிபதி மைத்திரி, மற்றும் சிங்கள இராணுவத் தளபதியும் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த பல தசாப்த காலமாக யாழ்நகரில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையை மற்றைய பத்திரிகைகளுடன் ஒப்பிட முடியாது. யுத்த காலத்தில், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் புலிகளுக்கு ஆதரவான செய்திகளை தெரிவித்து வந்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இருப்பினும், உதயன் பத்திரிகைக்கு யாழ்ப்பாண தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு இருந்தது.

உதயன் பத்திரிகை வரலாற்றில் அது பல தடவைகள் தடங்கலுக்கு உள்ளாகியது. அதன் நிர்வாகம் பல தடவைகள் கைமாறியுள்ளது. இன்றைய உதயன் பத்திரிகை, புலிகளின் முதலீட்டில் உருவானதாக சந்தேகிக்கப் பட்டது. தலைமை நிர்வாகி சரவணபவன் ஒரு பினாமி முதலாளி என்றும் நம்பப் பட்டது. இராணுவப் புலனாய்வுத்துறை அது தொடர்பாக மோப்பம் பிடித்த படியால், சரவனபவனை கைது செய்து விசாரித்துள்ளது.

ஒரு தடவை, உதயன் பத்திரிகையாளர் நிமலராஜன் ஈபிடிபி ஆயுதபாணிகளால் படுகொலை செய்யப் பட்டார். இறுதிப்போர் நடந்த காலத்தில், உதயன் பத்திரிகை அலுவலகம் அடிக்கடி தாக்குதலுக்குள்ளானது. ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் செயல்பட்டனர். இத்தனை பிரச்சினைகள் இருந்த போதிலும், உதயன் தனது புலி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

சிங்கள பேரினவாதிகளின் கோட்டையான கொழும்பு நகரில் இருந்து வெளியான, உதயனின் சகோதர பத்திரிகையான சுடரொளி வெளிப்படையாகவே புலிகளின் புகழ் பாடி வந்தது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது? உதயன் முதலாளி சரவணபவன், திரைமறைவில் சிங்கள அரசுடன் தொடர்புகளை பேணி வந்தார். ஒரு காலத்தில் இரகசியமாக இருந்த உறவு, இன்று பரகசியமாக வெளிப்பட்டுள்ளது. இதிலென்ன அதிசயம்?

விடுதலைப் புலிகள் வலதுசாரிப் பாதையை தேர்ந்தெடுத்ததும், தமிழ் முதலாளிகளை ஊக்குவித்து வளர்த்ததும் கடந்த கால வரலாறு. சிலநேரம் புலிகளே உருவாக்கி வளர்த்து விட்ட தமிழ் முதலாளிகள், புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தனர். (பார்க்க: இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!) சரவணபவன் போன்ற பல முதலாளிகள், இன்று சிங்களப் பேரினவாத அரசை பகிரங்கமாகவே ஆதரிக்கிறார்கள். எல்லாம் வணிக நலன்தான் காரணம்.

இன உணர்வை விட வர்க்க உணர்வு மிகவும் உறுதியானது. தமிழீழ தேசிய போராட்டமும், முதலாளித்துவமும் ஒன்றுக்கொன்று விரோதமான விடயங்கள். அந்த உண்மையை காலங் கடந்தாவது உணர வேண்டும். இன்றைக்கும் முதலாளித்துவத்தை ஆதரித்துக் கொண்டே, புலிகளையும் ஆதரிப்பதாக பாசாங்கு செய்யும் வலதுசாரிகளையிட்டு தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

"இனம் என்னடா இனம், வர்க்கம் தான் நிரந்தரம்!" - இப்படிக்கு தமிழ் முதலாளிகள்


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: