Monday, July 25, 2016

கபாலி சொல்லாத "மண்ணின் மைந்தர்களின்" கதை


ரஜனிகாந்த் நடித்துள்ள க‌பாலி திரைப்ப‌ட‌ம் ம‌லேசிய‌ த‌மிழ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் பிர‌ச்சினையை மைய‌மாக‌ வைத்து எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அந்த‌ விட‌ய‌த்தில் இது பாராட்ட‌த் த‌க்க‌ ப‌டைப்பு. ப‌ட‌ம் முழுவ‌தும் காட்பாதர் திரைப் ப‌ட‌த்தை நினைவுப‌டுத்தினாலும், இது ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் நடைமுறைப் பிர‌ச்சினையை கூறும் த‌னித்துவ‌ம் கொண்ட‌து.

அர‌சிய‌ல் பேசும் ப‌ட‌மாக‌ இருந்தாலும், அது ம‌லேசிய‌ அர‌சின் விளையாட்டு விதிக‌ளுக்கு அமைய‌வே எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. ப‌ட‌த்தின் தொட‌க்க‌த்தில் ஒரு த‌மிழ் சிறை அதிகாரி சொல்வார்: "வெளியே போய் ப‌ழைய‌ப‌டி ஆர‌ம்பிக்காதிங்க‌... த‌மிழ‌ர்க‌ளுக்கு இங்கே கெட்ட‌ பெய‌ர் இருக்கிற‌து." இது தான் எம‌க்கு ம‌லேசிய‌ அரசு சொல்ல‌ விரும்பும் "அறிவுரை"!

கேங்ஸ்ட‌ர் க‌லாச்சார‌ம் உல‌க‌ம் முழுவ‌தும், குறிப்பாக‌ வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ (அல்லது அடைந்து வ‌ரும்) நாடுக‌ளில் உள்ள‌ பிர‌ச்சினை. ல‌ண்ட‌ன், பாரிஸ், டொர‌ன்டோ ஆகிய‌ மேற்க‌த்திய‌ ந‌க‌ர‌ங்க‌ளில், ஈழ‌த் த‌மிழ் இளைஞ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ள் இருக்கின்ற‌ன‌. அந்த‌க் குழுக்க‌ள் த‌ம‌க்குள் மோதிக் கொள்ளும். ஹாலிவூட் திரைப் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌து போன்ற‌ துப்பாக்கிச் சூட்டு ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் ந‌ட‌க்கும்.

ஒரு த‌ட‌வை ல‌ண்ட‌ன் போயிருந்த‌ நேர‌ம், "ல‌ண்ட‌னில் உள்ள‌ த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் என்ன‌ செய்கிறார்க‌ள்? " என்று ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்தேன். "த‌மிழ் ம‌க்க‌ளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்க‌ள்.... அத‌னால் எம‌க்கு ந‌ல்ல‌து செய்கிறார்க‌ள்." என்றார்க‌ள். அப்ப‌டி என்ன‌ ந‌ன்மை செய்து விட்டார்க‌ள்? க‌ட‌ன் அட்டை மோச‌டி போன்ற‌வ‌ற்றில் த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் ஈடுப‌ட்டாலும், அவர்க‌ளால் த‌மிழ‌ர்க‌ளும் பெரும‌ள‌வு பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். கோஷ்டி மோத‌ல்க‌ளில் ப‌லியாகுப‌வ‌ர்க‌ளும் த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் தான்.

க‌பாலி ப‌ட‌ம் சொல்லாத‌ க‌தையும் இது தான். கேங்ஸ்ட‌ர் க‌லாச்சார‌ம் த‌மிழ‌ர்களுக்கு ந‌ன்மை உண்டாக்குவ‌தாக‌ நினைத்துக் கொள்வோர் ப‌ல‌ருண்டு. இன்னொரு ப‌க்க‌மாக‌ பார்த்தால், இதுவும் "சிறுபான்மையின‌ருக்கு எதிரான‌ ஒடுக்கு முறையின் இன்னொரு வ‌டிவ‌ம்" என்றும் சொல்ல‌லாம். மேற்க‌த்திய‌ நாடுக‌ள் போன்று, ம‌லேசிய‌ அர‌சும் த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் மீது க‌டுமையான‌ நட‌வடிக்கை எடுப்ப‌தில்லை. கார‌ண‌ம்? த‌மிழ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்குள்ளே மோதிக் கொண்டு சாக‌ட்டும் என்ற‌ அல‌ட்சிய‌ ம‌ன‌ப்பான்மை!

வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ முத‌லாளித்துவ‌ நாடுக‌ளில், சிறுபான்மையின‌த்த‌வ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ள், அந்த‌ ச‌முக‌த்தின‌ர் பொருளாதார‌ ரீதியாக‌ "முன்னேறுவ‌தை" குறிக்கோளாக‌ கொண்டுள்ள‌ன‌. ஆனால், இது அர‌சு அனும‌திக்கும் "சுத‌ந்திர‌த்திற்குள்" சாத்திய‌மாகும். ஏனென்றால், கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ளில் சேர்ப‌வ‌ர்க‌ள் ஒரு பேரின‌வாத‌ அர‌சை தட்டிக் கேட்ப‌தில்லை. அது ம‌ட்டும‌ல்ல‌, பெரும் முத‌லாளித்துவ‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் மேலாதிக்க‌த்தை கேள்வி எதுவுமின்றி ஏற்றுக் கொள்வார்க‌ள்.

தமிழன் முன்னேறாமல் இருப்பதற்கு தமிழன் தான் காரணம் என்று, ரஜனி ஒரு "நண்டுக் கதை" சொல்கிறார்.அதாவது, ஒரு நண்டு மேலே ஏறினால், அடுத்த நண்டு இழுத்து விழுத்துமாம். தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லையென்று புலம்பும் தமிழ் தேசியவாதிகளின் அரதப் பழசான பிரச்சாரம் இது. அன்றைய கருணாநிதி முதல் இன்றைய சீமான் வரையில் "நண்டு அரசியல்" தான் பேசிவருகிறார்கள். தமிழ் மக்களை சினிமா போதைக்கு அடிமைகளாக்கி, பணத்தை சுரண்டி வாழும் "கார்ப்பரேட் நடிகன்" ரஜனிகாந்த், இதைச் சொல்வது தான் வேடிக்கை. பெரிய பெரிய பண முதலைகள், தமிழர்களை பிடித்து விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

கபாலி சொல்லும் அந்த "நண்டுகள்" எவை? படத்தில் கபாலிக்கு எதிரான கேங்க்ஸ்டர்கள். குறிப்பாக, "கபாலியை காட்டிக் கொடுத்தவர்கள், எதிரியான சீன கேங்க்ஸ்டருடன் ஒத்துழைப்பவர்கள்". மலேசிய அரசுடன் ஒத்துழைக்கும் தமிழ் அமைச்சர்களை படத்தில் மிகவும் கவனமாக தவிர்த்திருக்கிறார்கள். மலேசிய அரசு கடைப்பிடிக்கும் "பூமி புத்திரர்கள் கொள்கை" வெளிப்படையானதொரு பேரினவாதக் கொள்கை. இவ்வளவு யுத்த அழிவைக் கண்ட இலங்கையில் கூட, அந்தளவு மோசமான இனப்பாகுபாட்டுக் கொள்கை கிடையாது.

அது என்ன "பூமி புத்திரர்கள் கொள்கை"? அந்த சம்ஸ்கிருத சொல்லை தமிழில் மொழிபெயர்த்தால் மண்ணின் மைந்தர்கள் என்று அர்த்தம் வரும். அதாவது, மலே மொழி பேசும் இனத்தவர்கள் மட்டுமே மண்ணின் மைந்தர்கள். ஏனையோர் எல்லாம், சீனர்கள், தமிழர்கள் வந்தேறுகுடிகள்! இது வெளிப்படையான இனவாதக் கொள்கை என்று பலரால் கண்டிக்கப் பட்டாலும், மலேசிய அரசு இன்றைக்கும் அதை நடைமுறைப் படுத்தி வருகின்றது.

மலே இனத்தில் பிறந்தவர்கள், பணக்காரர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் வீட்டு மனை போன்ற பல துறைகளில் அரசு மானியம் கொடுக்கும். பிற இனங்களில் உள்ள ஏழைகளுக்கு அந்தச் சலுகை கிடையாது. மலேசிய அரசின் இன ஒதுக்கல் கொள்கையால் பெரியளவில் பாதிக்கப் பட்டவர்கள் தமிழர்கள் தான். பொருளாதார வல்லரசான சீனாவின் தொடர்பு காரணமாக, தனியார் முதலீடுகளில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் சீன சமூகத்தினருக்கு தனியார் துறை ஆதரவு கிடைக்கிறது.

மலேசியாவில் தமிழர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகமாக இருப்பதால், அவர்கள் மத்தியில் வேலையற்றோரும், ஏழைகளும் அதிகம். கேங்க்ஸ்டர் கலாச்சாரம் பரவுவதற்கு அதுவும் ஒரு காரணம். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அது ஏற்ற வழி. மலேசியத் தமிழ் சமூகம் முழுவதும் அப்படி என்று நினைப்பதும் தவறு. பெரும்பாலான மலே,சீன மக்கள், தமிழர்கள் பற்றி எதிர்மறையான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.

மலேசியத் தமிழர்களில் உயர் கல்வி கற்று உத்தியோகம் பார்ப்பவர்களும் ஏராளம் பேருள்ளனர். இவர்களில் சிலர் தமது மத்தியதர வர்க்க மனப்பான்மை காரணமாக மலேசிய பேரினவாத அரசுக்கு வக்காலத்து வாங்குவதுமுண்டு. மலேசிய அரசும் வேண்டுமென்றே வர்க்கப் பிரிவினையை உருவாக்கி வளர்த்து வருகின்றது. இல்லாவிட்டால் பூமி புத்திரர்களின் நாட்டு அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்களுக்கு இடம் கிடைத்தது எப்படி? தமிழ் அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட மலேசிய பேரினவாத அரசுடன் இணக்க அரசியல் நடத்துபவர்கள் தான். இதையெல்லாம் கபாலி பேச மாட்டார். படத்தை தணிக்கை செய்து விடுவார்கள் என்று பயம்.

இது காலனிய காலத்தில் இருந்து தொடரும் பிரித்தாளும் சூழ்ச்சி. மலேசியா பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்தில், ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியத் தமிழ்க் கூலிகளை தருவித்தனர். அதே நேரம், அவர்களை மேற்பார்வை செய்வதற்கு, யாழ்ப்பாணத் தமிழ் கங்காணிகளை (கண்காணிப்பாளர்) பதவியில் அமர்த்தினார்கள். பெருந்தோட்டப் பக்கம் வெள்ளைக்கார முதலாளி வரா விட்டாலும், தமிழ்க் கங்காணிகள் தமிழ்க் கூலிகளை வருத்தி வேலை வாங்கினார்கள். ஒரு காலத்தில், இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்ற பகை முரண்பாடு ஏற்படவும் அதுவே காரணமாக இருந்தது.

தமிழ் கூலித் தொழிலாளர்கள் வறுமையில் இருந்து மீள முடியாமல் தவிக்கையில், தமிழ் மேற்பார்வையாளர்கள் செல்வம் சேர்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் ஓய்வு பெறும் வயதில் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிச் சென்று, வசதியான வீடு கட்டி வாழ்ந்தார்கள். யாழ்ப்பாணத்தில் மக்கள் அவர்களை "மலேசியா பென்சனியர்" என்று அழைத்தார்கள். எழுபதுகளில், மலேசியா பென்சனியர் என்றால் பணக்காரன் என்றும் இன்னொரு அர்த்தம் இருந்தது.

தமிழர்கள் மத்தியில் இருந்த சாதிப் பாகுபாட்டையும் ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். தொழிலாளர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சாதியினராகவும், அவர்களை மேற்பார்வை செய்தவர்கள் ஆதிக்க சாதியினராகவும் இருந்தனர். மலேசியாவில் மட்டுமல்ல, இலங்கையின் மலைநாட்டில் இருந்த பெருந் தோட்டங்களிலும் அதே நிலைமை காணப் பட்டது. அதாவது, இந்தியத் தமிழ் கூலித் தொழிலாளர்கள், இலங்கைத் தமிழ் மேற்பார்வையாளர்கள். இந்தவிரு சமூகங்களுக்கு இடையில் பிளவை உண்டாக்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரம்.

கபாலி படத்தில் நண்டுக் கதை சொல்லும் ரஜனி, அதை வெறுமனே "தமிழர் எதிர் தமிழர்" என்று விளக்கம் கொடுப்பது எதற்காக? வேறொன்றுமில்லை. அப்போது தான், தமிழர்கள் மத்தியில் உள்ள வர்க்க வேற்றுமைகளை மறைக்க முடியும். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் உள்ள தமிழ்த் தேசியவாதிகளும், கபாலியின் நண்டுக் கதை சொல்லித் தான் வர்க்க முரண்பாடு வெளித்தெரிய விடாமல் பூசி மெழுகி வருகின்றனர்.

No comments: