Showing posts with label கார்ப்பரேட். Show all posts
Showing posts with label கார்ப்பரேட். Show all posts

Friday, June 22, 2018

NGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை

NGO Sector, The Trojan horse of capitalism - ஒரு துண்டுப்பிரசுரம்
------------------

"அரசு சாரா நிறுவனங்கள்" (NGO) என்றால் என்ன? எதற்காக மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், முதலாளிகளும் அந்த அமைப்புகளுக்கு நிதி கொடுத்து வளர்க்கிறார்கள்?

நூலில் உள்ள விபரங்கள் சுருக்கமாக:

தேர்தல்களால் மாற்றம் வரும் என்றால் தேர்தல் நடத்துவதை தடை செய்து விடுவார்கள் என்று சொல்லப் படுவதுண்டு. அந்தக் கூற்று NGO க்களுக்கும் பொருந்தும். உலக நாடுகள் ஒவ்வொன்றிலும், இந்த "அரசு சாரா" நிறுவனங்களை, நடைமுறையில் உள்ள அரசுகள் சகித்துக் கொள்வதன் காரணம் என்ன?

NGO என்பது, அரசு, நீதித்துறைக்கு அடுத்ததாக, ஜனநாயகத்தின் மூன்றாவது அமைப்பாக கருதப் படுகின்றது. அதிகாரம், அடக்குமுறை, வறுமை போன்றவற்றுக்கு எதிராக NGO க்கள் போராடுவதாக காட்டப் படுகின்றது. உண்மையில், இது முதலாளித்துவத்தின் இன்னொரு ஏமாற்று வேலை. தேர்தல்கள் மூலம் மக்களுக்கு தெரிவு செய்யும் சுதந்திரம் இருப்பது போன்ற மாயை உருவாக்கப் பட்டுள்ளது. அதே மாதிரி, NGO க்கள் சமூகத்தை ஜனநாயக மயப் படுத்துவது போன்ற மாயை உண்டாக்கப் படுகின்றது.

NGO என்ன செய்கிறது? அரசுக்கும் மக்களுக்கும் நடுவில் மத்தியஸ்தம் வகிப்பதாக காட்டிக் கொள்கிறது. இதன் மூலம் அரசுக்கு எதிரான மக்களின் கோபங்களை தணிக்க உதவுகிறது. அரச எதிர்ப்பு சக்திகளை சட்டபூர்வமான, அமைதியான, கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றுகின்றது. 

இதன் மூலம், மக்களை முதலாளித்துவ ஆதரவாளர்களாக மாற்றுவதுடன், ஆளும் வர்க்க கருத்தியல்களை ஏற்றுக் கொள்ளவும் வைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் NGO க்களின் தாக்கம் மிகக் குறைவாக இருந்த போதிலும், பிற உலக நாடுகளில் அவற்றின் ஆதிக்கம் அளவிட முடியாதது.

அரசு சாரா நிறுவனங்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அவற்றிற்கு கிடைக்கும் நிதியில் ஒரு பகுதி அரசிடம் இருந்து வருகின்றது. பல வகையான NGO க்கள் உள்ளன. தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது, அதிகாரத்தை கட்டமைப்பவை, உள்நாட்டு, சர்வதேச NGO க்கள் என்று பல வகையானவை. 

NGO என்றால் என்ன என்ற கேள்விக்கு, "ஒரு தனியார் தொண்டு நிறுவனம்" என USAID கூறும் வரைவிலக்கணம் சர்ச்சைக்குரியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணம், அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அவற்றிற்கு உதவுவதால் மட்டும் அல்ல. ஒரு NGO அமைப்பு, மனேஜர்கள் போன்ற சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்களையும், இலவச தொண்டு வேலை செய்யும் களப் பணியாளர்களையும் கொண்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு எழுதப் பட்ட ஐ.நா. சாசனத்தில் தான் NGO பற்றிய குறிப்புகள் வருகின்றன. இருப்பினும், உலகில் மிகப் பழமையான NGO, 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப் பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகும்.

இந்த NGO க்களுக்கான நிதி எங்கிருந்து வருகின்றது? உலகளவில் கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசுகளும் நிதி கொடுக்கின்றன. அதே நேரம், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மத அமைப்புகளும் சிறியளவில் நிதி வழங்குகின்றன. முதலாளிகளையும், அரசையும் பின்பற்றி, மத நிறுவனங்களும் தமது செல்வாக்கை பயன்படுத்த விரும்புகின்றன.

சர்வதேச மட்டத்தில், அநேகமாக நீங்கள் கேள்விப் பட்ட எல்லா பெரிய நிறுவனங்களும், NGO க்களுக்கு நிதி வழங்கும் அமைப்புகளை கொண்டுள்ளன. Microsoft, Monsanto, Nike, Ford, Starbucks... இது போன்ற பெரும் முதலாளிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, தனிப்பட்ட செல்வந்தர்களும் நிதி வழங்குகின்றனர். பில் கேட்ஸ், ஜோர்ஜ் சோரோஸ், ரொக்கபெல்லர் என்று பலரைக் குறிப்பிடலாம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழைகள், சிறுவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு உதவும் திட்டங்களை செயற்படுத்துவதன் நோக்கம் என்ன?  சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் பொறுப்புள்ள நிறுவனங்கள் என்று காட்டிக் கொள்கின்றன. இந்த நற்பெயர், மக்கள் அவர்களது உற்பத்திப் பொருட்களை பெருமளவில் வாங்க வைக்கும். அதனால் அதிக இலாபம் கிடைக்கும்.

ஆப்பிள் நிறுவனம் ஆசிய நாடுகளில் இலட்சக் கணக்கான தொழிலாளர்களை சுரண்டுகின்றது. அவர்களை நாளொன்றுக்கு பதினான்கு மணித்தியாலம் வேலை செய்ய வைத்து கசக்கிப் பிழிகிறது. ஒரு ஐபோனின் விலை தான், அதைச் செய்யும் தொழிலாளியின் ஒரு வருடச் சம்பளமாக இருக்கும். ஆப்பிள் நிறுவனம் மலேரியா தடுப்பு மருந்துக்கு கொஞ்சப் பணத்தை நன்கொடை வழங்குவதால், இந்தக் கொடுமைகள் மறைக்கப் படுகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் குறுகிய கால உதவிகள் மூலம், அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி அடைய விடாமல் பார்த்துக் கொள்கின்றன. இதனால் அவை என்றென்றும் மேற்கத்திய நாடுகளில் தங்கியிருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள், அந்த நாடுகளின் வளங்களை இரக்கமற்று சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் அபிவிருத்தி தடைப் படுவதுடன், NGO நிறுவனங்களின் கருணையில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றன. இதனால்,வறுமை, பட்டினி, நோய்கள், எழுத்தறிவின்மை போன்றவற்றை ஒழிப்பதற்கான மக்களின் போராட்டத்தை தகர்க்கின்றன.

எதற்காக முதலாளிகள் NGO நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறார்கள்? முதலாளித்துவ பொருளாதார விதியின் படி பார்த்தால் இது ஒரு "மீளப் பெறப் படாத செலவு". அதாவது, ஒரு வணிக நிறுவனத்தின் ஒரு பகுதி உற்பத்தி செலவுக்கும், இன்னொரு பகுதி மீள் முதலீட்டுக்கும் செலவாகிறது. இதில் இலாபம் தனியாக ஒதுக்கப் படுகின்றது. அப்படியானால், எதற்காக முதலாளிகள் தமது இலாபத்தின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு செலவிடுகிறார்கள்?

தொண்டு நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் முதலாளிகள் கொடை வள்ளல்கள் என்று சமூகத்தில் படம் காட்டப் படுகின்றது. ஆனால், இது ஒரு கொடை அல்ல. அவர்களது வர்த்தகத்தை உறுதிப் படுத்தவும், எதிர்கால இலாபத்தை நிச்சயப் படுத்துவதற்குமான முதலீடாக அந்தப் பணம் செலவிடப் படுகின்றது. இதனால் கிடைக்கும் இலாபம் நீண்ட கால நோக்கிலானது.

NGO நிறுவனங்கள், முதலாளித்துவ சமுதாயத்தின் மீதான நன்மதிப்பை உருவாக்கி, முதலாளித்துவத்தை நிலைநிறுத்துகின்றன. ஜனநாயகமயப் படுத்தலுக்காக, பொருளாதார சுதந்திரத்திற்காக பாடுபடும் NGO க்களுக்கு கார்பரேட் முதலாளிகள் அள்ளிக் கொடுப்பதும் காரணத்தோடு தான். பொருளாதாரத்தை மறு கட்டமைப்பு செய்வதன் அர்த்தம், உற்பத்தி, தொழிலாளர் உரிமைகள், ஏகபோகம் போன்ற விடயங்களில் மிகக் குறைந்தளவு கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தான். இதனால், பெரும் முதலாளிகளுக்கு மிகப் பெரும் செல்வம் செல்வம் சேர்வதுடன், உழைக்கும் வர்க்கத்திற்கு அவலங்களும் உண்டாகும்.

அரசு எதற்காக NGO க்களுக்கு உதவுகின்றது? நடைமுறையில் உள்ள அரசு, பணக்காரர்களை பாதுகாப்பதையும் அவர்களது நலன்களை உறுதிப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசானது, வன்முறை மீது ஏகபோக உரிமை பாராட்டுவதுடன் அடக்குமுறையையும் ஏவி விடுகின்றது. இன்றுள்ள முதலாளித்துவ சமூக அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் அரசு NGO க்களுக்கு நிதி வழங்குகின்றது. அரசு உறுதியாக இருந்தால் தான், அது பணக்காரர்களுக்கு சேவை செய்ய முடியும்.

NGO க்கள் முன்னெடுக்கும் "போராட்டம்" என்றைக்குமே அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை. அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை. வன்முறை பிரயோகிப்பதில்லை. அத்துடன், மையப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதில்லை. பாராளுமன்றத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு கோபத்துடன் இருப்பவர்களை, NGO க்கள் தம்முடன் சேர்த்துக் கொண்டு அஹிம்சா வழியில் போராடுமாறு சொல்லிக் கொடுக்கின்றன. அவர்களை கோட்டு சூட்டு போட்ட அலுவலகப் பணியாளர்களாக, அறிக்கைகள் எழுத வைக்கின்றன.

எந்த NGO வும் புரட்சிகரமாக செயற்பட முடியாது. அது தனது கணக்கு அறிக்கைகளை தயாரிப்பதிலும், அடுத்த வருடத்திற்கான நிதியை பெற்றுக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. நிதியின்றி எந்த NGO வும் இயங்க முடியாது. அரசும், கார்பரேட் முதலாளிகளும் புரட்சிகர NGO வுக்கு நிதி வழங்க மாட்டார்கள். சுருக்கமாக, ஒரு NGO வின் செயற்பாடுகளும், போராட்டங்களும், அந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

சட்டங்களுக்குள் அனுமதிக்கப் பட்ட போராட்டம் வெற்றி காண முடியாது. அது எப்போதும் அதிகார வர்க்கத்துடனான சமரசப் பேச்சுவார்த்தைகளில் தான் முடியும். அரசாங்கத்தையும், அதன் சட்டங்களையும் எதிர்க்கும் NGO போராட்டம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால், அது அதிகாரத்தை முழுமையாக கேள்விக்குட்படுத்த மாட்டாது. அரசைக் கவிழ்க்க நினைக்கும் NGO சட்டப் படி பதிவு செய்ய முடியாது. சமூகத்தில் NGO எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்ற நம்பிக்கையில் அரசாங்கம் அமைதியாக ஆட்சி செய்கின்றது.

பிற்குறிப்பு: 
துண்டுப்பிரசுரம் போன்ற இந்த சிறு நூல், (முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான) மசிடோனியாவில் உள்ள Crn Blok என்ற இடதுசாரி (Anarchist) அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.

Tuesday, January 30, 2018

வேலைக்காரன் - திரையில் ஒலிக்கும் உழைக்கும் மக்களின் கலகக் குரல்

வேலைக்காரன் திரைப்படம்: ஒரு நிகழ்கால அரசியல்- பொருளாதாரக் கண்ணோட்டம்


"எங்களோட இந்த முயற்சியே ஒரு மார்க்கெட்டிங் தான். நல்லது ஜெயிக்கும் என்று sample காட்ட..."

படத்தின் முடிவில் வரும் இந்த வசனம் தான், இதன் "மார்க்கெட்டிங் வெற்றி" எனலாம். மார்க்ஸிய சொல்லாடலான "உழைக்கும் வர்க்கம்" என்பதை, இந்தத் திரைப்படத்தில் "வேலைக்காரர்கள்" என்று மக்களின் பேச்சு மொழியில் பயன்படுத்துகின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இதுவே படத்தின் வெற்றிக்கு காரணம். அதாவது, கம்யூனிசத்தை உழைக்கும் மக்களின் மொழியில் புரிய வைப்பதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். அது நிறைவேறியுள்ளது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இந்திய மத்தியதர வர்க்கத்தினர் கார்பரேட் நிறுவனங்களை கைநீட்டி வரவேற்றனர். துரித உணவுகளை Junk food என்றும் பாராமல் உண்டு களித்தனர். அன்று அது "நாகரிகமாக" கருதப் பட்டது. மேலைநாட்டு கார்ப்பரேட் கலாச்சாரத்தை வெறித்தனத்துடன் பின்பற்றுவதில் பெருமைப் பட்டனர்.

ஆனால், காலப்போக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல், துரித உணவுகளில் கலந்துள்ள இரசாயன நஞ்சு போன்ற விடயங்கள் வெளித் தெரியவாரம்பித்தன. அதன் எதிரொலி தான் வேலைக்காரன் திரைப்படம். இது "முதலாளித்துவம் தனது சவக்குழியை தோண்டுகின்றது" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னதை நினைவுபடுத்துகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் "படிப்புக்கேற்ற ஊதியம் தருகிறார்கள்" என்று இறுமாந்திருந்தனர். தற்போது தாமும் உழைக்கும் வர்க்கம் தான் என்பதையும், முதலாளிகள் ஈவிரக்கமின்றி தமது உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதையும் உணர்கிறார்கள். இவர்கள் நவீன பாட்டாளிவர்க்கமாக மாறியுள்ளனர். 

அத்தகைய சமூகப் பின்னணியில் இருந்து வந்தவன் தான் வேலைக்காரன் படக் கதாநாயகன். இவன் போன்ற குட்டி முதலாளிய இளைஞர்கள், ஆரம்பத்தில் முதலாளிக்கு விசுவாசமாக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் சமூக விழிப்புணர்வு பெற்று, பாட்டாளி வர்க்க நலன்களுக்காக வென்றெடுக்கப் படுவார்கள். இது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் கூறியது. வர்க்க சிந்தனையில் ஏற்படும் பண்பு மாற்றத்தை வேலைக்காரன் திரைப்படம் திறம்பட எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில்,விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்கு சேரும் கதாநாயகன் அறிவு, முதலாளிக்கு விசுவாசமாக பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு குப்பத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, உழைக்கும் வர்க்கப் பின்னணி கொண்ட அறிவு, தனக்குக் கிடைத்த கார்ப்பரேட் வேலையை பெரிதாக எண்ணுகிறான். தனது குப்பத்து இளைஞர்களை அடியாட்களாக பயன்படுத்தி, கூலிக்கு கொலை செய்யும் தாதாவான காசியை வெறுக்கிறான். ஆனால், ஒரு கட்டத்தில் காசி தனது நண்பனை கொல்லும் போது உண்மை தெரிய வருகின்றது.

காசி போன்ற பேட்டை ரவுடிகளையும் காரப்பேட் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அப்போது ஓர் உண்மை உரைக்கிறது. முதலாளிகளின் அடியாட்களாக கூலிக்கு கொலை செய்யும் ரவுடிக் கும்பலுக்கும், சம்பளம் வாங்கிக் கொண்டு மனச்சாட்சியை அடைவு வைத்து விட்டு வேலை செய்யும் மத்தியதர வர்க்க அடியாட்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு தரப்பினரும் முதலாளிய நிறுவனங்களின் குற்றங்களுக்கு உடந்தையாகின்றனர்.

தமக்கு எதிரானவர்களை அடிப்பது, கொலை செய்வது போன்ற "சட்டவிரோத  செயல்களை" கூலிக்கு மாரடிக்கும் அடியாட்களிடம் ஒப்படைத்து விட்டு, தமது கை சுத்தம் என்று மேட்டுக்குடி கனவான்களாக நடந்து கொள்வது தான் கார்ப்பரேட் கலாச்சாரம். அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் இது தான்  நடக்கிறது. 

இருபது வருடங்களுக்கு முன்னர், எண்ணை வள நாடான நைஜீரியாவில், எண்ணைக் கழிவால் மக்களின் வாழ்விடம் மாசடைவதை எதிர்த்துப் போராடிய, ஒரு பிரபல சூழலியல்வாதி (Ken Saro-Wiwa) கொலை செய்யப் பட்ட சம்பவத்திற்குப் பின்னால் ஷெல் நிறுவனம் இருந்தது. அது அப்போது உலகச் செய்தியாகி ஷெல் நிறுவனத்திற்கு அவமானத்தை தேடித் தந்தது.

நெதர்லாந்தில் ஒரு தடவை, "உங்களுக்குப் பிடிக்காத விடயம் எது?" என்று ஒரு கார்ப்பரேட் நிர்வாகியிடம் கேட்ட நேரம், "எல்லாம் தெரிந்து வைத்திருப்பவர்கள்" என்று பதில் கூறினார். அவர் சுட்டிக் காட்டிய "எல்லாம் தெரிந்தவர்கள்" இடதுசாரி சமூக ஆர்வலர்கள் தான். உண்மை தெரிந்தவர்கள், அதை மக்களுக்கு சொல்லி விடக் கூடாது என்பதில் முதலாளிகள் கவனமாக இருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனம், எங்கெல்லாம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது? அவற்றின் சட்டவிரோத செயல்கள், நிதி மோசடிகள், உழைப்புச் சுரண்டல்கள் போன்ற பல விபரங்களை தேடி அறியும், மேற்கத்திய இடதுசாரி அமைப்புகள், அந்த அறிவை மக்களிடம் பரப்புவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. வேலைக்காரன் திரைப்படத்தில் மேற்படி இடதுசாரி செயற்பாட்டாளர்களின் மொத்த உருவமாக கதாநாயகன் அறிவு காட்டப் படுகின்றான். இங்கே அறிவு என்பது ஒரு தனி மனிதன் அல்ல. சமூக உணர்வாளர்களின் பொது வடிவம்.

மேற்குலக நாடுகளில் உழைக்கும் வர்க்கம் உரிமைக்காக போராடும் ஒவ்வொரு தடவையும், முதலாளிய வர்க்கம் அதைக் கடுமையாக எதிர்த்து நிற்கும். ஆனால், ஒரு தடவை தொழிலாளர்கள் (அல்லது நுகர்வோர்) தமது நியாயமான உரிமைகளை வென்று விட்டால், அந்த வெற்றிக்கு முதலாளிகளும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

மேற்கைரோப்பிய நாடுகள் மனித உரிமைகள் விடயத்தில் "நாகரிக வளர்ச்சி" கண்டுள்ளது என்றால், அதற்குக் காரணம் அங்கு நடந்த தொழிலாளர் போராட்டங்கள் தான். ஆனால், அயோக்கியத்தனமாக அந்த உண்மையை மறைக்கும் மேற்கத்திய முதலாளிய வர்க்கம், அதை தானே செய்ததாக தம்பட்டம் அடிக்கும். இந்த அயோக்கியத்தனம், வேலைக்காரன் திரைப்படத்தில் ஆதி என்ற பாத்திரம் மூலம் காட்டப் படுகின்றது.

திரைப்படத்தில் தான் வேலை செய்யும் கம்பனி தயாரிக்கும் பொருட்களில் இரசாயன நஞ்சு கலந்துள்ளது என்ற உண்மையை தெரிந்து கொள்ளும் அறிவு, இரண்டு நாட்களுக்கு தரக் கட்டுப்பாட்டுக்கு ஏற்றவாறு வேலை செய்யும் திட்டத்தை கொண்டு வருகிறான். அறிவின் மேலாளரும், போட்டி நிறுவன முதலாளியின் மகனுமான ஆதி, தந்திரமாக அதற்கு உடன்படுகிறான்.

அதற்குப் பின்னால், போட்டி நிறுவனத்தை கழுத்தறுக்கும் முதலாளிகளின் சுயநலம் ஒளிந்துள்ளது. அது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் ஆதி தானே தொழிலாளர்களின் பாதுகாவலன் என்றும் காட்டிக் கொள்வான். நிஜ வாழ்வில், இந்த விடயங்கள் பல்வேறு கம்பனிகளில் பல வருட கால இடைவெளிகளுக்குள் நடந்துள்ளன. 

அவற்றை கோர்வையாக்கி, ஒரே கதையாக கூறத் தெரிந்த டைரக்டரின் திறமையை பாராட்ட வேண்டும். பெரும்பாலும் படித்தவர்களும் கவனம் செலுத்தாத, கார்ப்பரேட் ஊழல்களை, பொருளாதார நுணுக்கங்களை, மிகவும் எளிமையாக பாமர மக்களுக்கும் புரிய வகையில் கூறியிருக்கும் டைரக்டரை மெச்சலாம்.

இரண்டு மணிநேர திரைப்படத்தில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பது உண்மை தான். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் எளிதான விடயம் அல்ல. இருட்டைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்காமல், ஒரு மெழுவர்த்தியை ஏற்றி வைக்கலாம். அதைத் தான் வேலைக்காரன் திரைப்படம் கூற முனைகின்றது. 

உலகில் எதுவும் போராடாமல் கிடைப்பதில்லை. அதை புதிய சிந்தனைகளுடன் வடிவமைப்பதும் அவசியமாகின்றது. உதாரணத்திற்கு, வேலைநிறுத்தம் செய்வது மட்டும் போராட்டம் அல்ல. "வேலை செய்வதும்" ஒரு போராட்ட வடிவம் தான்.

அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் உள்ளிருந்து வேலை செய்து கொண்டு போராடிய சம்பவங்கள் நடந்துள்ளன. (பார்க்க: சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது) அதாவது, வழமை போல முதலாளிக்கு விசுவாசமாக உற்பத்தி செய்யாமல், சமூகத்திற்காக உற்பத்தி செய்யும் போராட்டம்.

ஒரு தொழிலகம், சமூகத்தில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்கப் பட்ட முடிவுப் பொருட்களை அந்த சமூகத்திற்கே விற்கிறது. (இது முதலாளித்துவ மார்க்கெட்டிங் பாடநூலில் எழுதப் பட்டுள்ளது.) அதன் அர்த்தம், தொழிலாளர்கள் சமூகத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கான நஷ்டஈடாக சம்பளம் பெற்றுக் கொள்கிறார்கள். எதற்காக முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்? இந்தக் கேள்வியை வேலைக்காரன் திரைப்படம் எழுப்புகின்றது.

தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியான அறிவுக்கும், முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியான ஆதிக்கும் இடையில் நடக்கும் விட்டுக்கொடுக்காத போராட்டமே படத்தின் பின்பாதிக் கதை. அறிவின் யோசனைப் படி, தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் தரக் கட்டுப்பாடுடன் தயாரித்த பொருட்களை, ஆதி எரித்துக் கொளுத்தி நாசமாக்கி விடுகிறான். இதனால் தரமான பொருள் சந்தைக்கு வருவது தடுக்கப் படுகின்றது. 

இறுதியில், தொழிலாளர்கள் நேர்மையாக வேலை செய்யும் விழிப்புணர்வு பெற்றதே வெற்றி தான் என்பது அறிவின் வாதம். அது இன்னொரு கட்டத்திற்கு நகர வேண்டும். தொழிலாளர்கள் தாமே நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்த வேண்டும். குறைந்த பட்சம், கம்பனி நிர்வாகிகள் குழுவில் தொழிலாளர் பிரதிநிதிகளை சேர்த்துக் கொள்ள வற்புறுத்த வேண்டும்.