Showing posts with label நக்சல்பாரி. Show all posts
Showing posts with label நக்சல்பாரி. Show all posts

Sunday, November 24, 2019

நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்

"நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்": அனைவரும் வாசித்து அறிந்திருக்க வேண்டிய ஆவணம். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்கிய நூலை இப்போது தான் வாசித்து முடித்தேன். 432 பக்கங்களை சில நாட்களில் வாசித்து முடிக்கும் அளவிற்கு சுவையாக எழுதப் பட்டுள்ளது.

 இது ஒருவரது சுயசரிதை தான். ஆனால், இதனூடாக பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது. அறுபதுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிளவுகள். திருத்தல்வாததிற்கு எதிரான போராட்டம். புரட்சிகர அரசியலுக்காக ஒரு புதிய கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடமைப்பாடு. அதற்கான தத்துவார்த்த விவாதங்கள். அஜிதா இது போன்ற விடயங்களை, நூலின் ஆரம்பத்தில் இலகுவான மொழி நடையில் கூறிச் செல்கிறார்.

ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பெண்ணான அஜிதா, தீவிர கம்யூனிச அரசியல் ஈடுபாடு காரணமாக நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து காடுகளில் தலைமறைவாக வாழும் அளவிற்கு துணிச்சல் உள்ள பெண்மணி. ஆரம்ப கால நக்சலைட் ஆயுதப்போராட்டத்தில் பங்கெடுத்த ஒரே பெண்ணாகவும் இருந்துள்ளார். அந்த வகையில் அவரது நினைவுக்குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக உள்ளன.

அஜிதாவின் தாயும், தந்தையும் கூட நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர்கள் தான். இவர்கள் ஆரம்ப காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காலத்தில் தலைமையுடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து சென்றுள்ளனர். இவரது தந்தை கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகிய நேரம், "சி.ஐ.ஏ. உளவாளி" என்று எந்த ஆதாரமும் இன்றி அவதூறு செய்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த நக்சல்பாரி புரட்சியின் தலைவர் சாரு மாஜும்தார் கூட அஜிதா குடும்பத்தினரை புறக்கணிக்கும் அளவிற்கு கட்சிக்குள் கழுத்தறுக்கும் நபர்கள் இருந்துள்ளனர்.

வட இந்தியாவில் சாரு மாஜும்தாரால் கூட்டப்பட்ட ஒருங்கிணைப்புக் கமிட்டியிலும், பின்னர் உருவாக்கப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) போன்றவற்றில் அஜிதாவின் குடும்பத்தினர் ஆர்வமாக பங்கெடுத்துள்ளனர். (பிற்காலத்தில் சாரு மாஜும்தாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன.) அதே நேரம், கேரளாவுக்கு வருகை தரும் திருத்தல்வாத மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, மகாநாட்டுக்கு அருகில் மாவோவின் நூல்களை விற்பனை செய்வது என்று இவர்களது ஆரம்ப கால கிளர்ச்சி அரசியல் இருந்துள்ளது.

மலைப் பகுதியை சேர்ந்த வயநாட்டு விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது தான் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு தயாராகிறார்கள். அப்போது மன உறுதியற்றவர்கள் விலகிச் செல்கிறார்கள். மரணத்திற்கு அஞ்சாத துணிச்சலான போராளிகள், ஆயுதப்போராட்டம் பற்றிய முன் அனுபவம் ஏதும் இல்லாத நிலையிலும் காடுகளுக்குள் முகாமிட்டு தங்கியுள்ளனர். அப்போது அவர்களது கைகளில் இரண்டு, மூன்று துப்பாக்கிகளும், நாட்டு வெடிகுண்டுகளும் இருந்துள்ளன.

நக்சலைட் போராளிகள் ஒரு போலிஸ் நிலையத்தை தாக்கியுள்ளனர். அங்கிருந்த தொலைத்தொடர்பு கருவியை சேதப் படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் நிலச்சுவாந்தர்களான ஜமீன்தார்கள் வீடுகளை தாக்கி, அங்கு அடமானம் வைக்கப் பட்டிருந்த விவசாயிகளின் கடன் பத்திரங்களை கொளுத்தி உள்ளனர். ஜமீன்தார்களிடம் இருந்த பணம், நகைகளை சூறையாடியுள்ளனர். இதனால் இயக்கத்தின் நிதித் தேவையை ஈடுகட்ட முடிந்தாலும், ஆயுதப்போராட்டம் குறித்த சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் அத்தனையும் வீணாகிப் போயின.

உழைக்கும் மக்களின் வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு அந்தப் பகுதி ஆதிவாசி மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரளாவின் பிற பாகங்களில் இருந்து வந்து குடியேறி தமது நிலங்களை பறித்துக் கொண்ட பிற மலையாளிகளை விட இந்த நக்சலைட் புரட்சியாளர்கள் வேறுபட்டுத் தெரிந்தனர். அதனால் அவர்களுக்கு ஆதிவாசி மக்கள் தமது தார்மீக ஆதரவை வழங்கி உள்ளனர். மேலும் ஆதிவாசி இளைஞர்கள் தான் காடுகளில் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். இருப்பினும் நீண்ட காலம் தலைமறைவாக வாழ முடியாத காரணத்தால், அல்லது வேறு வழி தெரியாத படியால் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக விலகிச் சென்றுள்ளனர். அஜிதா உட்பட எஞ்சியோர் ஆள்நடமாட்டம் உள்ள கிராமப் பகுதிக்கு வந்த நேரம், பொலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வழமையான வெகுஜன அரசியலில் தெருக்களில் போராட்டம் நடத்துவதற்கும், தலைமறைவு அரசியலில் ஆயுதப்போராட்டம் நடத்துவதற்கும் இடையிலான வேறுபாட்டை, அன்று அஜிதா போன்றோர் புரிந்து கொள்ளவில்லை. இதை அவரே தனது நூலில் ஒத்துக் கொள்கிறார். இருப்பினும் "இது தனிநபர் சாகசம்" என்று சொல்வதையும் மறுக்கிறார். அவர்களது ஆயுதப்போராட்டத்திற்கு ஆதிவாசி மக்களின் ஆதரவு இருந்துள்ளது. இந்தியாவில் புரட்சிக்கான தேவையும் இருந்துள்ளது. வாயளவில் புரட்சி பற்றிப் பேசிக் கொண்டே, செயலில் எதையும் காட்டாத கபடவேடதாரிகள் ஒரு மிகப்பெரிய தடையாக (குறிப்பாக தேர்தல் அரசியலில் ஈடுபடும் வலது-இடது கம்யூனிஸ்ட் கட்சியினர்.) இருந்துள்ளனர். அரசாங்கமும் வாய்ச் சொல் வீரர்கள் தமக்கு ஆபத்தில்லாதவர்கள் என்பதால் சில விட்டுக்கொடுப்புகளை செய்கின்றது.

இந்த நூல் அறுபதுகள், எழுபதுகள் காலகட்டத்தில் எழுதப் பட்டிருந்தாலும், அன்றிருந்த நிலைமை இன்றும் தொடர்வதை நாங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளலாம். அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மாநிலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு மாவோயிஸ்டுகள் போலிசால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களும் சரணடைய வந்தவர்கள் என்றும், பொலிஸ் முதலில் கைது செய்து பின்னர் "என்கவுண்டர்" கொலை செய்ததாகவும் சொல்லப் படுகின்றது. இதே மாதிரியான சம்பவங்கள் அறுபதுகள், எழுபதுகளிலும் நடந்துள்ளதை அஜிதாவின் நூல் வாயிலாக அறிய முடிகின்றது.

நூலின் அரைவாசிப் பகுதி, அஜிதாவின் சிறை வாழ்க்கையை பற்றி விவரிக்கின்றது. அவர் சிறைச்சாலையில் பிற கைதிகளிடம் இருந்து அறிந்து கொண்ட கதைகளை எழுதி உள்ளார். அவை அடித்தட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் எதிர்நோக்கும் குரூரமான சமூக யதார்த்தம் பற்றிப் பேசுகின்றன. அஜிதா ஓர் ஆயுட்தண்டனை கைதியாக சிறையில் கழித்த காலத்தில் தான் மார்க்சிய நூல்களை ஆழமாகக் கற்றுள்ளார். தீராத்துயருக்குள் சிக்கிக் கொண்டாலும் மன உறுதியை காப்பாற்றுவதற்கு மார்க்சியப் படிப்பு அவருக்கு உதவியுள்ளது. இந்திரா காந்தியின் அவசர கால சட்டம் முடிவுக்கு வந்து, மத்தியில் ஆட்சி மாறியதும் பெரும்பாலான நக்சலைட் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர்.

நக்சலைட் புரட்சியாளர்கள் போலீசில் பிடிபட்டவுடன் அவர்களுக்கு நடந்த சித்திரவதைகள் பற்றியும் இந்த நூலில் விவரிக்கப் பட்டுள்ளது. எந்தக் குற்றமும் செய்திராதவரைக் கூட அடித்து கையை உடைக்கும் அளவுக்கு போலிசின் வன்மம் மேலோங்கி காணப்பட்டது. சிறைக்குள் கைதிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை கோரினாலும் அடி, உதை, சித்திரவதை தான் பதிலாகக் கிடைக்கும். அந்தளவுக்கு நக்சலைட் புரட்சியாளர்களை கீழ்மக்கள் போன்று, காவல்துறையினரால் வெறுக்கப் பட்டுள்ளனர்.

நக்சலைட் கைதிகள் அத்தனை போரையும் நிரந்தர நோயாளியாக்கும் நோக்குடன் போலிஸ் சித்திரவதைகள் அமைந்துள்ளன. பிற்காலத்தில் அவர்கள் விடுதலையான போதிலும் நிரந்தர நோயாளிகளாக காலம் கழிக்க வேண்டிய அவல நிலை. இதை ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக கருத வேண்டும். ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றும் குழுவினர் ஒடுக்கப்படுவதும் இனப்படுகொலை தான்.

ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் மட்டுமே ஒடுக்குமுறைக்கு காரணம் அல்ல. ஒரே இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வர்க்க முரண்பாடு காரணமாக அதிகார வர்க்கம் அளவுகடந்த வன்முறையை, ஒடுக்குமுறையை பிரயோகிக்கத் தயங்காது என்பதை "நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்" நமக்கு உணர்த்துகின்றன.

Thursday, April 21, 2016

கம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்


நக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்ஜிலிங் பகுதியில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில், சாரு மஜூம்தார் தலைமையில் விவசாயிகளின் புரட்சி வெடித்தது. இந்தியா முழுவதும் ஆயுதமேந்திய கம்யூனிசப் புரட்சிக்கு அது வித்திட்டது. 

அத்தகைய பெருமைக்குரிய நக்சல்பாரி கிராமத்தின் இன்றைய நிலை என்ன? டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையில், Avijit Ghosh என்பவர் ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். (பார்க்க: Pitch report - Lenin is just a bust in Charu's Naxalbarihttp://timesofindia.indiatimes.com/elections-2016/west-bengal-elections-2016/news/Pitch-report-Lenin-is-just-a-bust-in-Charus-Naxalbari/articleshow/51789203.cms)

லெனின், மாவோ, சாருமஜூம்தார் சிலைகளைத் தவிர, அந்த இடத்தில் கம்யூனிசப் புரட்சி நடந்ததற்கான தடயமே இல்லை என்றும், மக்களுக்கு அதைப் பற்றிய நினைப்பே இல்லை என்றும் எழுதி இருக்கிறார்.

முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம் நக்சல்பாரிக் கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும், விலை ஏறிக் கொண்டிருக்கும் காணிகளை வாங்கி விற்பதிலும் தான் மக்கள் குறியாக இருக்கிறார்கள்.

தேர்தல் அரசியலில் கூட, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றன என்றும், நக்சல்பாரி புரட்சியின் பின்னர் உருவான CP ML - லிபெரேஷன் கட்சி, வெறும் இரண்டு சதவீத வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது என்றும் எழுதுகின்றார்.

சுருக்கமாக சொல்வதென்றால், "கம்யூனிசம் காலாவதியாகிவிட்டது" என்ற முதலாளித்துவ பரப்புரைகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக எழுதப் பட்ட கட்டுரை இது.

நல்லது, தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்த யாழ்ப்பாணத்திற்கு சென்று பார்த்தாலும் இதே மாதிரியான காட்சிகளைக் காணலாம். யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்கள், நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும், விலை ஏறிக் கொண்டிருக்கும் காணிகளை வாங்கி விற்பதிலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதுமட்டுமல்ல, தேர்தலில் கூட, தமிழீழத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்துக் கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு தான் பெருமளவில் ஓட்டுப் போடுகின்றார்கள்.

நக்சல்பாரியில் நடந்த விவசாயிகளின் வர்க்கப் போராட்டத்தையும், யாழ்ப்பாணத்தில் நடந்த தேசியவாதப் போராட்டத்தையும் ஒப்பிட முடியுமா என்று சிலர் கேட்கலாம். மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இருந்து இதைப் பார்க்க வேண்டும்.  முதலில், எழுபதுகளில் இந்தியாவிலும், இலங்கையிலும் இருந்த அரசியல் பொருளாதார நிலைமையை கருத்தில் எடுக்க வேண்டும்.

நக்சல்பாரி கிராமம், இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் நிலைமையும் அது தான். ஒரு காலத்தில், யாழ்ப்பாணப் பொருளாதாரம் "மணி ஓர்டர் (Money Order) பொருளாதாரம்" என்று அழைக்கப் பட்டது. (அதாவது, கொழும்பில் வேலை செய்த அரச ஊழியர்கள் அனுப்பும் பணத்தில் தங்கி இருந்தது.) மேலும், எழுபதுகளில் இருந்த யாழ்ப்பாணம், நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை கறாராக பின்பற்றி வந்தது. முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி குன்றியிருந்த படியால், நிலப்பிரபுத்துவ பொருளாதார அடிப்படை கொண்டவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

தற்போது எழுபதுகளில் இருந்த நக்சல்பாரி பக்கம் பார்வையை திருப்புவோம். முதலாளித்துவம் ஊடுருவி இருக்காத காலகட்டத்தில், அது நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இதைப் புரிந்து கொள்ள அதிக சிரமப் படத் தேவையில்லை. சாரு மஜூம்தார் தலைமையிலான விவசாயிகளின் புரட்சி யாருக்கெதிராக நடந்தது? 

அன்று நிலவுடையாளர்கள் தான் நக்சல்பாரி மக்களின் எதிரிகளாக இருந்தனர். நக்சல்பாரி புரட்சி வெடித்த நேரம், காலங் காலமாக உழைப்பாளிகளை சுரண்டிக் கொழுத்து வந்த, நிலவுடைமையாளர்கள், பண்ணையார்கள், கந்துவட்டிக் காரர்கள் ஆகியோர் எழுச்சி பெற்ற மக்களால் கொல்லப் பட்டனர், அல்லது விரட்டப் பட்டனர்.

நிச்சயமாக, இதையெல்லாம் இந்திய அரசு கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அரச படைகளை அனுப்பி விவசாயிகளின் புரட்சியை அடக்கியது. கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள், ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப் பட்டனர். நக்சல்பாரியில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகு? அங்கு முதலாளித்துவ பொருள் உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. நுகர்வுக் கலாச்சாரம் அறிமுகப் படுத்தப் பட்டது.

இந்த இடத்தில் எல்லோரும் ஒரு முக்கியமான உண்மையை வசதியாக மறந்து விடுகிறார்கள். இந்திய அரசு ஒரு முதலாளித்துவ அரசு. அதன் அர்த்தம், அது முதலாளித்துவ பொருள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு தன்னாலியன்ற முயற்சிகளை செய்யும். அது மட்டுமல்ல, முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானது என்ற உண்மையையும் மறந்து விடக் கூடாது. 

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ அரசுக்கள், நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டன. அங்கே நிலப்பிரபுத்துவ காலத்தின் எச்சசொச்சங்கள் அடியோடு ஒழிக்கப் பட்டு விட்டன. ஆனால், இந்தியா, இலங்கை போன்ற நாடுகள், "அரை- நிலப்பிரபுத்துவ, அரை- முதலாளித்துவ" நாடுகளாக இருந்து வந்தன. கடந்த இருபது வருடங்களாக, அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது. இன்று முதலாளித்துவம் நுழையாத இடமே இல்லை.

சந்தேகம் இருந்தால், ஒரு தடவை யாழ்ப்பாணத்திற்கு சென்று பாருங்கள். மேற்கத்திய பாணியில் அமைந்த பல்பொருள் அங்காடிகள், யாழ் நகரிலும், சிறிய நகரங்களிலும் வந்து விட்டன. மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் அதே நுகர்வுப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் கிடைக்கின்றன. கல்வியறிவு பெற்ற இளைய தலைமுறையினர் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்கிறார்கள்.

நிலத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், பிரதான வீதிக்கருகில் உள்ள காணிகளின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. வழமையாகவே, யாழ்ப்பாணத்து மக்கள் காணி வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். தற்போது சொல்லவே தேவையில்லை. "தமிழீழமா, கிலோ என்ன விலை?" என்று கேட்கும் அளவிற்கு யாழ்ப்பாணம் மாறி விட்டது.

"கம்யூனிசம் காலாவதியாகி விட்டது" என்ற பிரச்சாரமும், "தமிழ் தேசியம் காலாவதியாகி விட்டது" என்ற பிரச்சாரமும் ஒரே கோட்பாட்டு அடிப்படை கொண்டவை. அறிவிலிகளுக்கும், மர மண்டைகளுக்கும் புரியும் படியாக சொன்னால், உலகமயமாக்கல், நுகர்வுக் கலாச்சாரம் போன்றன, உலகம் முழுவதும் உள்ள மக்களை முதலாளித்துவ நலன்களுக்காக உயிர் வாழும் விலங்குகளாக மாற்றி விட்டன. சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்த அடிமைகளுக்கு, தாங்கள் அடிமைகள் என்ற உணர்வாவது இருந்தது. ஆனால், இன்று கடன் என்ற கண்ணுக்குப் புலப்படாத சங்கிலிகளால் கட்டப் பட்டிருக்கும் அடிமைகளுக்கு அந்த உணர்வே கிடையாது.

மார்க்சியம் படிக்காத தற்குறிகள் தான் "கம்யூனிசம் காலாவதியாகி விட்டது" என்று சொல்வார்கள். மார்க்சியம் என்ன சொல்கிறது? ஆண்டான், அடிமை பொருள் உற்பத்தியை ஒழித்துக் கட்டி விட்டு, நிலப்பிரபுத்துவம் மேலாதிக்கத்திற்கு வந்தது. அதே மாதிரி, நிலப்பிரபுத்துவ பொருள் உற்பத்தியை ஒழித்துக் கட்டி விட்டு, முதலாளித்துவம் மேலாதிக்கத்திற்கு வந்தது. முதலாளித்துவ சமுதாய மாற்றம், நக்சல்பாரி போன்ற கிராமங்களை வந்தடைவதற்கு சிறிது காலதமாதமாகி விட்டது.

உண்மையில், நக்சல்பாரி விவசாயிகளின் புரட்சி ஒரு சமுதாய மாற்றத்திற்கான தேவையில் இருந்து உருவானது. முதலாளித்துவம் காலூன்றி இருக்காத பலவீனமான ஒரு பகுதியில் அந்தப் புரட்சி வெடித்தது. அதை இந்திய அரசு ஒடுக்கி விட்டது. தற்போது அந்த வெற்றிடம் முதலாளித்துவத்தால் நிரப்பப் பட்டுள்ளது. இது தான் நடந்தது. ஆகவே, இதை நாங்கள் "நிலப்பிரபுத்துவம் காலாவதியாகி விட்டது" என்றல்லவா சொல்ல வேண்டும்?

Saturday, December 03, 2011

மக்கள் தலைவன் கிஷன்ஜி

கிஷன்ஜியின் குடும்பம்

கிஷன்ஜி என்று அனைவராலும் அறியப்பட்ட புரட்சியாளர் மல்லோஜூல கோடீஸ்வர ராவ், 1954 ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் பெத்தபள்ளி என்ற ஊரில் பிறந்தவர். புரட்சிகர இயக்கமான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு) இயக்கத்தில் தம்மைப் பல காலமாக இணைத்துக் கொண்டு செயல் பட்டவர். அவரது குடும்பம் சாதியில் உயர் சாதியினரான பிராமணராக இருந்தபொழுதும் மிகவும் முற்போக்கான குடும்பம். அவருடைய தாயும் தந்தையும் அரசியல்உணர்வும் நற்சிந்தனையும் உடையவர்கள். அவருடைய தந்தையார் வெங்கையா வெள்ளையரை எதிர்த்து நடந்த சுதந்திர இயக்கத்தில் நாட்டுக்காகப் போராடிச் சிறை சென்றவர். அவர் அன்றையக் காங்கிரெஸ் கட்சியின் ஆந்திர மாநிலத் துணைத் தலைவராக பணி செய்தவர்.தாயார் மதுரம்மாள் தமது பெயருக்கு ஏற்ப இனிமையான வழியில் தம் மக்கள் மூவரையும் நாட்டுப் பற்றுடனும் ஏழைகள் மீது அன்பு காட்டும் வழியிலும் வளர்த்தவர். கிஷன்ஜியின் இளைய சகோதரர் ஒருவரும் மாவோயியப் புரட்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றுபவர் என்று சொல்லப் படுகிறது.

கிஷன்ஜியின் இளமைக் காலம்

கிஷன்ஜி தமது பதினைந்தாம் வயதிலேயே புரட்சிகர இயக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டார். தன் இளமைக் காலத்தில் அவர் அநீதியையும் ஏற்றத்தாழ்வையும் கண்டு கொதிப்படைவது வழக்கம். நீதியும் நேர்மையும் தமது இரண்டுகண்களாகக் கொண்டு எங்கு ஒடுக்குமுறை நடந்தாலும் அது கண்டு கொதித்து எழுந்தவர். பள்ளிமாணவனாக இருந்த காலத்திலேயே வகுப்பில் ரவுடித்தனம் செய்யும் மாணவர்களையும், மாணவிகளைக் கேலி செய்யும் சில்லறைப் பொறுக்கிகளையும் தட்டிக் கேட்பதில் முன் நின்றவர். தமது இளமைக் காலத்தில் காந்தியின் நூல்களையும், தாகூரின் கவிதைகளையும் தெளிவாகக் கற்றவர். இன்சொல் பேசும் இனியவர்.

1969 ம்ஆண்டு தாம் ஒரு பள்ளி மாணவனாக இருந்த போது நடைபெற்ற தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு நடந்த போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். தமது இடைவிடாத அரசியல் கல்வியின் பலனாக மர்க்சியமே உலகைக்காக்கும் ஆயுதம் என்ற தத்துவ முடிவுக்கு வந்தவர். ஏன் இப்படி வயதான தாயை தனியேவிட்டு விட்டுப் பிறருக்காகப் பணி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் கேட்டால் கிஷன்ஜி சொல்லும் பதில்: "என் தாய்க்கு மூன்று பிள்ளைகள், அதில் ஒருவர்வீட்டுக்கு, இருவர் நாட்டுக்கு." எதிலும் நியாயமாக நடக்கும் கிஷன்ஜி குடும்ப பாரத்தைச் சுமப்பதற்கும் நியாயமான வழியைச் சொன்னவர். கொண்ட கொள்கைக்காக தமது வீடு,நண்பர்கள், சொத்துகள், உற்றார் உறவினரைத் துறந்து மக்கள் பணி செய்யச் சென்றவர். வீட்டைவிட்டுச் சென்ற கிஷன்ஜியை அவரது தாயாரும் உறவினர்களும் முப்பத்து மூன்று ஆண்டுகள் கழித்துத் தான் உயிரற்ற உடலாகப் பார்க்க முடிந்தது.

அரசியல் பணி

பள்ளிக் கல்விக்குப் பின்னர், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்று பட்டம் பெற்றார். பின்னர் சட்டப் படிப்பு படிக்கத்தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் பெரும் வீச்சில் நடந்து வந்த நக்சல்பாரி,ஸ்ரீகாகுளம் விவசாயிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு முழு நேரப் புரட்சிப்பணிக்காக தமது பல்கலைக் கழகக் கல்வியையும் துறந்தார். 1974 ம் ஆண்டு புரட்சிகர மார்க்சிய லெனினிய இயக்கத்தில் முழு நேரப் பணியாளராக இணைந்தார். சர்வாதிகாரி இந்திராவின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில் சில மாதம் சிறையில் இருந்தார். சிறை விட்டுத் திரும்பிய பின் இயக்கத்தின் அறை கூவலை ஏற்று கிராமப் பணி செய்யக் கிளம்பினார். அந்தக் கால கட்டத்தில் புரட்சிகர இயக்கத்தினர்மக்கள் பணி செய்ய கிராமங்களை நோக்கிச் செல்லுமாறு கேட்கப் பட்டனர். கிராம மக்களுடன் வாழ்ந்த காலத்தில் ஆந்திராவின் ஜக்தியால் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம் நிலப் பிரபுக்களிடம் இருந்து நிலங்களை மீட்டுக் குத்தகை விவசாயிகளுக்கு வழங்கியது. இளைஞர்கள் கிராம மக்களை அணி திரட்டி அவர்களுடைய உரிமைகளை உணர்த்தி நிலப் பிரபுக்களின் பிடியிலிருந்து அவர்களை மீட்டனர். அவரதுபணியின் தீவிரம் கண்டு 1979 ம் ஆண்டு இயக்க ஊழியர்கள் அவரை கரீம் நகரமாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்தனர். பின்னர் கட்சியின் ஆந்திர மாநிலக்கமிட்டியின் உறுப்பினராகவும் தேர்வு செய்யப் பட்டார். 1986 ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

வங்காளத்தில் கிஷன்ஜியின் பணி

மேற்கு வங்க மாநிலத்தில், நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னர் அந்த இயக்கத்தை ஒடுக்கியும், போலிக் கம்யுனிசம் பேசியும்,மக்களை மயக்கத்திலும் குழப்பத்திலும் வைத்திருந்த அவரைப் பணியாற்றும் படி அவரது கட்சி அவரைப் பணித்திருந்தது. 1986 ம் ஆண்டு தொடங்கி அவர் படுகொலைசெய்யப்பட்டது வரை கிஷன்ஜி வடக்கு, கிழக்கு இந்தியாவிலும், தண்டகாரண்யத்திலும் பணியாற்றி வந்தார். தண்டகாரண்யம் என்பது இந்தியாவின் மத்தியப் பகுதியில் திராவிட இனங்களின் மூத்த இனங்களான கோண்டுகள் உள்ளிட்ட இதர பழங்குடிகள் வாழும் இன்றைய சத்திஸ்கார் மாநிலமாகும். போலிக் கம்யுனிஸ்டுகளின் தலைவர் ஜோதிபாசுவும் அதன்பின்வந்த புத்ததேவ் பட்டச்சாரியாவும் புரட்சிக்கு சாவு மணி அடித்து விட்ட பெருமிதத்தில் இருந்த போது, இங்கே கிஷன்ஜி தமது அரசியல் பணியைத் தொடங்கினார். இனி நாடாளுமன்றத்தில் தான் தமது அரசியல் நடக்கும் என்று ஜோதிபாசு தீர்மானமாக இருந்தபோது வழி தெரியாது தளர்ந்து கிடந்த பழங்குடிகளை கிஷன்ஜியின் இயக்கம் அணித திரட்டி ஒருஇயக்கமாக்கி வந்தது. கிஷன்ஜி செய்த அரசியல் பணிகளில் மகத்தானது மார்க்சியத்தை வங்காள மண்ணில் உயிர்ப்பித்தது.இது தவிர, வங்காளத்திலும், பீகாரிலும் சிதறுண்டு கிடந்த இந்திய மார்க்சிய லெனினியக் கட்சியின் பல புரட்சிகரப் பிரிவுகளுடன் தொடர்ந்து அரசியல் விவாதம் நடத்தி மாவோயிஸ்டுக் கட்சி என ஓரணியில் திரட்டியதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியிருந்தார்.

லால்கார் போராட்டம்

சுரங்கம் தோண்டுவதற்காக பசங்குடி விவசாயிகளின் நிலங்களை இந்திய இரும்புக் கம்பெனிகளான ஜிண்டால், டாட்டா போன்றவை பறித்துக் கொண்டிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில், தெற்கு வங்காளத்தின் புருலியா, ஜார்கிராம்,மிட்னாபூர் போன்ற மாவட்டங்களில் வாழும் வீரம் மிக்க சந்தால் இன மக்களையும் இதர பழங்குடிகளையும்ஒற்றுமைப் படுத்தி ஒரு ஆயுதம் தாங்கிய கொரில்லாப்படையினையும், பல ஆயிரம் தொண்டர்களைக் கொண்ட ஒரு அரசியல் இயக்கத்தையும் வளர்த்தெடுத்தார். லட்சக் கணக்கான மக்கள், அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் பங்கு கொண்டு வீரத்துடன் போராடியலால்கார், நந்திகிராமம், சிங்கூர் நில மீட்பு இயக்கங்களுக்கு அவர் அரசியல்தலைமையேற்று வழி நடத்தினார். கடந்த முப்பது ஆண்டு காலத்தில் இந்திய முழுமையும் நடைபெற்றஎந்த ஒரு போராட்டத்தையும் விட இது அளவிலும் குணத்திலும் மாறுபட்டது. இந்தப் பேரியக்கம் இந்திய அரசியலில், ஏன் தெற்காசிய அரசியலில் ஒரு மிகப் பெரும் வீச்சைஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. உலக முதலாளிகள், அவர்களின் ஏவல் படைகள் அனைவரும் உற்று நோக்கிய இந்தப் போராட்டம்போலிக் கம்யுனிஸ்டுகளின் மாயையில் இருந்து மக்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.

யாரும் புக முடியாத காடுகளுக்குள் இருந்து கொண்டு மாவோயிஸ்டுகள்பயங்கரவாதத்தில் ஈடுபட்டு அட்டுழியம் செய்கிறார்கள் என்ற பொய்யுரையை கிஷன்ஜிதலைமையில் நடந்த லால்கார் போராட்டம் புரட்டிப் போட்டது. அவர் தலைமையில் நடந்தபோராட்டம் பெரும் நகரங்களுக்கு அருகில் திரளான மக்கள் பங்கேற்புடன் மிகவும்ஒழுக்கமான முறையில் நடந்தது. புரட்சியின் அலைகள் கல்கத்தா போன்ற தொழில் நகரங்களைநெருங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை கிஷன்ஜி வழி நடத்திய இந்தப் போராட்டங்கள் வழங்கின.

வங்காள இளைஞர்களிடம் எழுச்சி

வடக்கு, கிழக்கு இந்தியாவில் அதிலும் குறிப்பாக வங்காளத்தில் தொய்வுற்றுக் கிடந்த இளைஞர் கூட்டம் பெரும் திரளாக அணி திரண்டுபுரட்சி இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொள்ள முன்வந்தது கிஷன்ஜி செய்த பெரும்பணிக்கு கிடைத்த பலனாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் அவரைப் பற்றிதினமும் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. அவரைப் பற்றிப் பேசாத பத்திரிகைகளே இல்லை, செய்தி வெளியிடாத தொலைக் காட்சிகளே இல்லை என்னும் அளவுக்கு அவருடைய பணி பிரபலம் அடைந்து இருந்தது. தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் கிஷன்ஜியைக் கண்டு பேட்டி எடுக்க விரும்பாத பத்திரிகையளரே இல்லை என்ற சூழல் நிலவியது. போலிசும் அரசும் மீண்டும் மீண்டும் கிஷன்ஜியை கொன்று விட்டதாகச் சொல்லி வந்த போதும் அவர் மக்கள் என்னும் கடலில் ஒரு மீனைப் போல நீந்தி வந்தார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி மக்களைக் குழப்பும் போலியான அறிவுஜீவிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கிஷன்ஜி தெளிவான வகையில் அவரவர்விரும்பும் மொழியில் பதில் கொடுத்து வந்தார்.

புரட்சிகர அரசியலுக்கும் தத்துவத்திற்கும் உரியமுக்கியத்தை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் எளிமையாகவும் நேரடியாகவும் வார்த்தை ஜாலங்கள் இன்றி, ஒளிவு மறைவின்றி, கேட்பவர்,படிப்பவர் நெஞ்சைத் தொடும் வண்ணம் அமைந்திருக்கும். சமீப கால வங்காள அரசியலில் படித்தோர் பாமரர் அனைவரும் விரும்பும் தலைவராக கிஷன்ஜி இருந்தார்.

பன்மொழிப் புலவர் கிஷன்ஜி

பல மொழிகளில் வல்லுனரான கிஷன்ஜி தெலுங்கு, இந்தி,வங்காளி, ஆங்கில மொழிகளில் எழுதவும் பேசவும் புலமை பெற்று இருந்தார். கோண்டி உட்படபல வழக்கு மொழிகளிலும் அவர் பேசும் புலமை பெற்று அந்த மக்களின் இதயத்தில் இடம்பெற்று இருந்தார். கவிதையிலும் இசையிலும் பாடல்களிலும் தமது உள்ளத்தைப் பறிகொடுத்திருந்த கிஷன்ஜி தாம் கொல்லப்படும் வரை ஒரு மென்மையான இலக்கிய ஆர்வலராகவாழ்ந்து மறைந்தார். பொருளாதாரம் தொடங்கி வரலாறு வரை அனைத்துத் துறைகளிலும்மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கிஷன்ஜி. தமது 57 வயதிலும் ஒரு போராளியாக வாழ்ந்த அவர் ஒரு நாளின்ஒரு நொடிப் பொழுதையும் வீணாக்கியவர் அல்லர். அவர் கால் படாத கிராமங்களேவங்காளத்தின் தெற்குப்பகுதியிலும், மத்திய இந்தியாவிலும், தண்டகாரண்ரயத்திலும்இல்லை எனலாம். கற்பதிலும் கேட்பதிலும் மிகச் சிறந்த இந்த மனிதர் தாம் சாகும்வரைஒரு படிப்பாளியாகவே வாழ்ந்தவர்.

தேசிய இனங்களின் விடுதலை

தேசிய இனங்களின் தன்னுரிமைக்கு மிகுந்த முக்கியம்கொடுத்தவர் கிஷன்ஜி. இந்தியாவின் போராடும் தேசிய இனங்கள் மாவோயிசப் புரட்சிகரஇயக்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அறுபது ஆண்டுகளாக இந்திய ராணுவத்தை எதிர்கொண்டு போராடும் அஸ்ஸாமியர்கள், நாகர்கள், மணிப்புரிகள்,திரிபுரிகள் என அனைத்துப் பிரிவினருடனும் ஒளிவு மறைவற்ற நேர்மையான அரசியல்விவாதங்களை அவர் தலைமையிலான இயக்கம் நடத்தி வந்தது. வடக்கு மற்றும் கிழக்குஇந்தியாவின் தேசிய இனங்கள் இந்தியப் போலிக் கம்யுனிச இயக்கங்களால் தொடர்ந்துதுரோகம் செய்யப்பட்டவர்கள். வெறுப்புற்று இருந்த இந்த தேச விடுதலை இயக்கங்கள் இந்தியாவில்புரட்சி பேசும் இயக்கங்களை ஒருபோதும் நம்பியதே இல்லை. ஆனால், சமீப ஆண்டுகளில் கிஷன்ஜிஅவர்களுடன் நடத்திய அரசியல் விவாதங்கள் இந்த இயக்கங்கள் புரட்சியாளர்களுடன் இணைந்துசெயல்படும் அளவுக்கு முன்னேறியிருந்தது. இது இந்திய அரசியல் வானில் ஒரு புதுவிதமானஅரசியல் கூட்டணி அமைவதை நோக்கியதான பாதை சென்றுசொல்லலாம்.

படுகொலை

முப்பது ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் தேடிவந்த போதும் சிறிதும் அஞ்சாத கிஷன்ஜி, நாட்டின் கிழக்கிலும் வடக்கிலும் உள்ள பல பகுதிகளுக்கும் பயணம் செய்து வந்தவர். தமது வாழ்வு முழுவதையும் இந்தியாவின் ஏழை விவசாயிகள், பழங்குடிகளின் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்த இந்த மாவீரன், பலர் அறிய உயிருடன் பிடித்துச் செல்லப் பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப் பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட 2011 நவம்பர் 27 ம் நாள் இந்தியாவின் வரலாற்றில் ஒருதுயரம் மிக்க நாளாகும். மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற போர்வையில் சமாதானம் பேச வரவழைக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது பெருந்தலைவர் கிஷன்ஜி. பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த கிஷன்ஜியின் மரணம் மிகவும் துயரமானது, இமய மலையினும் கனமானது.

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள்,களவாணிகள், தரகர்கள் நிறைந்த காங்கிரசுக் கட்சியும் அவர்களின் ஏவலர்களான சோனியாகாந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும், மந்திரி செட்டிநாட்டுச் சிதம்பரமும்,வங்காள முதல்வர் மமதா பானர்ஜியும் நேரடியாக இந்தப் படுகொலையை நடத்தியவர்கள் என்று புரட்சிகர இயக்கங்கள் அறிவித்துள்ளன.

கிஷன்ஜியின் இழப்பு இந்தியா மட்டும் இல்லாமல், உலகெங்கும் உள்ள புரட்சிகர இயக்கங்கள், தேசிய இனங்கள் அனைத்திற்குமான ஒரு பேரிழப்பாகும்.

தியாக சீலர்களின் மகனாகப் பிறந்து, பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த கிஷன்ஜியின் புகழ் வான் உள்ளவரை நிலைத்து நிற்கும்.



ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்ப தொன்றில் (குறள்: 233)



ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்தஉலகத்தில் நிலைத்திருப்பது புகழைத்தவிர வேறு எதுவும் இல்லை.



ஓங்குக கிஷன்ஜியின் புகழ் !!


-ராமசாமி-

Saturday, December 19, 2009

ஒரு இந்தியத் தாயின் வர்க்கப் போராட்டம் - திரைப்படம்

வர்க்கம் சார்ந்த அரசியல் விழிப்புணர்வு, ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கு உள்ளே பிளவை ஏற்படுத்துகின்றது. சமூக விடுதலைப் போராளியான மகனின் மரணத்தை அலட்சியப்படுத்தும் முதலாளித்துவவாதிகளான அப்பா, மற்றும் சகோதரர்கள். பொய்மை உலகில் இருந்து அன்னியப்பட்டு, புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகனை பறிகொடுத்த அம்மா. 1084 இலக்கம் கொண்ட மகனின் பிணத்தை அடையாளம் காட்ட வரும் அப்பாவி தாய், அதிலிருந்து மெல்ல மெல்ல வர்க்க அரசியலை புரிந்து கொள்கிறார். எழுபதுகளில் நக்சல்பாரி எழுச்சியால் உந்தப்பட்டு புரட்சிக்கு புறப்பட்ட கல்கத்தா இளைஞர்களின் உண்மைக்கதை. HAZAAR CHAURASI KI MAA (MOTHER OF 1084) சிறந்த திரைப்படத்திற்கான சர்வதேச பரிசுகளைப் பெற்றது.
1084 இன் அம்மா, உண்மையைத் தேடி ஒரு பயணம்!


Part 1


Part 2


Part 3


Part 4


Part 5


Part 6


Part 7


Part 8


Part 9


Part 10


Part 11


Part 12


Part 13


Part 14