Tuesday, August 09, 2016

இனப்படுகொலை தொடர்பாக ஜெயமோகனுக்கு ஒரு பகிரங்க மடல்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள், "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை" என்று கூறியிருக்கிறீர்கள். ஈழத்து, தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதிகள் மாத்திரம் உங்களது கூற்றை மறுத்து எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று த‌மிழ்/ சிங்கள இடதுசாரிகளும், மேற்குலக நாடுகளை சேர்ந்த இடதுசாரிகளும் சொல்கிறார்கள்.  இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். 

"இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள்" போன்றவர்களையும் "மாற்றுக் கருத்தாளர்கள்" என்று தமிழ் தேசியவாதிகள் வசைபாடி வந்துள்ளனர். இருப்பினும் சர்வதேச அரங்கில் அத்தகைய "மாற்றுக் கருத்தாளர்கள்" தான் இனப்படுகொலை என்ற சொல்லை தொடர்ந்தும் பாவித்து வருகின்றனர். அதற்கு ஓர் உதாரணம் தருகின்றேன்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நகரமொன்றில், போலந்தை சேர்ந்த 19 வயது வாலிபனை சந்தித்தேன். அறிமுகத்தின் பின்னர் நான் ஓர் ஈழத் தமிழன் என்று தெரிந்ததும், அவனிடம் இருந்து வந்த வார்த்தைகள் பின்வருமாறு: "இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்." இலங்கையில் நடந்த போர் அழிவுகள் பற்றி அனைத்து விபரங்களும் அறிந்து வைத்திருந்தான். 

நீங்கள் நினைப்பது போன்று, அவனும் ஒரு ஈழத்து/தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதியாக இருந்திருந்தால் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஆனால், அவன் போலந்தை சேர்ந்த இளம் கம்யூனிஸ்டு. கடந்த ஐந்து வருடங்களில், நான் சந்தித்த ஐரோப்பிய கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் இலங்கையில் இனப்படுகொலை நடந்த விபரம் தெரிந்திருக்கிறது. அதை அவர்கள் தமது கூட்டங்களிலும், வெளியீடுகளிலும் சொல்லி வருகின்றனர். 

எதற்காக சர்வதேச இடதுசாரிகளும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள்? இந்த விடயம் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழும் புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், மேற்குலக நாடுகளில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். 2009 ம் ஆண்டு, மேற்கத்திய நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், இடதுசாரிகள் முன்னின்று ஒத்துழைத்தனர். 

இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் புலிகளை தடை செய்து விட்டன. அதனால் பெரும்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் புலிகளை ஆதரித்து யார் பேசினாலும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அந்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டியவர்கள் இடதுசாரிகள் தான். அதனால் தான் இன்று வரைக்கும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். 

"இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்." என்றொரு பழமொழி உண்டு. அந்த வகையில், புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளின் எதிர்வினைகளை எதிர்பார்த்து, நீங்கள் இனப்படுகொலை குறித்த கருத்தை கூறியிருக்கலாம். இதுவரை காலமும் அவர்கள் சொல்லி வந்த வாதங்களும் உங்களுக்கு மனப்பாடமாக இருக்கலாம். ஆனால், இனப்படுகொலை பற்றிப் பேசும் ஈழத் தமிழர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்களும் அல்ல, தமிழ் தேசியவாதிகளும் அல்ல.

நான் பிறந்ததில் இருந்து 13 வயது வரையில் கொழும்பு நகரில் வாழ்ந்து வந்தேன். எனது வாழ்நாளில் இரண்டு "இனக் கலவரங்களை" கண்டிருக்கிறேன். 1977, 1983 கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் கதைகளை கேள்விப் பட்டிருக்கிறேன். 

அவை "இனக்கலவரம்" என்று அரசு சொன்னதும் இனவாத உள்நோக்கம் கொண்டது தான். பொதுவாக, கலவரங்கள் அரசுக்கு எதிரான ஒழுங்கு படுத்தப் படாத மக்கள் எழுச்சியாக அறியப் பட்டுள்ளன. ஆனால், "தமிழர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக சிங்கள மக்களின் எழுச்சி" என்று அரசு பிரச்சாரம் செய்தது.

சாதாரண சிங்கள மக்களுக்கு தமிழர்களை எதிரிகளாக காட்டுவதன் மூலம், அரசு தனக்கெதிரான கலவரங்களில் இருந்து பாதுகாப்பு தேடிக் கொண்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 

அதை "இனக்கலவரம்" என்று அழைத்தார்கள்.  ஆனால், உண்மையில் அவை கலவரங்கள் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலைகள். அதற்கு ஆதாரம் என்ன? கொழும்பு நகரில் வசிக்கும் தமிழர்களின் பெயர் விபரங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து பெற்றுக் கொண்டார்கள். அதன் படி தமிழர்களின் வீடுகளை தேடிச் சென்று தாக்கினார்கள். 

சிங்கள இனவெறிக் காடையர்களுக்கு வாக்காளர் பட்டியலை கொடுத்தது யார்? அப்போது ஆளும்கட்சியாக இருந்த யு.ஏன்.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள். தமிழர்களின் வீடுகள் மட்டுமல்லாது, வர்த்தக நிலையங்களும், பாடசாலைகளும், கோயில்களும் தாக்கி எரிக்கப் பட்டன. குறிப்பாக 1983 ம் ஆண்டு, தலைநகரில் இருந்த தமிழர்களின் சொத்துக்கள் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டன. இதனை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்த அதே பாணியில் தான், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையும் நடந்தது. அங்கேயும் இந்து மதவெறியர்கள், முஸ்லிம் வாக்காளர்களின் விபரங்களை கையில் வைத்திருந்தார்கள். அதுவும் குஜராத் மாநில பாஜக அரசியல்வாதிகளின் துணையுடன் நடந்தது. ஆகவே, இலங்கையில் தமிழர்கள் மாதிரி, இந்தியாவில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர் என்று சொல்வதற்கும் ஆதாரங்கள் பலமாக உள்ளன. 

மேலதிகமாக ஓர் உண்மையை இங்கே குறிப்பிட வேண்டும். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை உருவாக்கியதில் பெரும்பங்கு சிறிலங்கா அரசை சாரும்! இந்தத் தகவல் உங்களுக்கு அதிசயமாக இருக்கலாம். நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே, தென்னிலங்கையில் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்ததை அறிந்து வைத்திருக்கிறேன். அனுராதபுரத்தில் எமது உறவினர்கள் சிலர் வசித்தனர்.

"தனிச் சிங்கள மாவட்டங்கள்" என்று கருதப்படும், அனுராதபுரம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் வடக்கு, கிழக்கில் இருந்து சென்று குடியேறியவர்கள் அல்ல. நினைவு தெரிந்த நாளில் இருந்து, அவற்றை பூர்வீக பூமியாக கொண்டிருந்தனர். ஆனால், "இனக்கலவரங்கள்", அதாவது திட்டமிட்ட இனப்படுகொலைகளின் விளைவாக அவர்கள் அந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

அவ்வாறு தான் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கென "ஒதுக்கப் பட்ட" பிரதேசமாகியது. அதை "தமிழீழம்" என்ற தனி நாடாக்க கோரியவர்கள், யாழ் மையவாத சிந்தனைக்குள் கட்டுப்பட்டவர்கள் மட்டும் தான். தமிழரசுக் கட்சி, விடுதலைப் புலிகள் என்று அந்தக் கொள்கை தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், எண்பதுகளில் ஆயுதமேந்திய இயக்கங்களில், ஈரோஸ், ஈபிஆர்எல்ப் ஆகியவை மலையகத்தையும் சேர்த்து ஈழம் என்று உரிமை கோரின. குறிப்பாக ஈரோஸ் மலையகப் பகுதிகளில் சில தாக்குதல்களை நடத்தி இருந்தது. அந்தளவுக்கு மலையகத் தமிழ் போராளிகளும் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

மலையகத்தில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தவறு. கொழும்பில் மட்டுமல்லாது, மலையகத்திலும் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. அதன் விளைவாக, மலைநாட்டுப் பகுதிகளில் தமிழர்களை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் குவிய வைத்தது. பெருமளவு மலையகத் தமிழர்கள் அகதிகளாக வெளியேறி வன்னியில் குடியேறினார்கள். இன்றைக்கும் வன்னிப் பிரதேச சனத்தொகையில் கணிசமான அளவு மலையகத் தமிழர்களும் அடங்குவார்கள். 

2009 ம் ஆண்டு நடந்த, புலிகளின் அழித்தொழிப்பிற்கு பழிவாங்குவதற்காக சிலர் இனப்படுகொலை அரசியலை முன்னெடுப்பதாக தாங்கள் கருதலாம். அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். நான் முன்னர் கூறிய படி, "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்பவர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்கள் அல்ல."

1977, 1983 இனக்கலவரங்களை இனப்படுகொலை என்று அப்போதே பலர் சொல்லத் தொடங்கி விட்டனர். தமிழர்கள் மட்டுமல்ல, இடதுசாரி சிங்களவர்களும் இனப்படுகொலை என்றே சொல்லி வந்தனர். 2009 ம் ஆண்டு இனப்படுகொலை நடக்கலாம் என்று ஏற்கனவே பலருக்குத் தெரிந்திருந்தது.

சமாதான பேச்சுவார்த்தையின் போது, புலிகளுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதுவர் "என்ன விலை கொடுத்தேனும் புலிகளை தோற்கடிப்போம்." என்று சூளுரைத்தார். போர் முடிந்த பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க பத்திரிகைகள் பின்வருமாறு கூறின: "போர் தொடர்ந்திருந்தால் இதை விட பல மடங்கு இழப்புகள் வந்திருக்கும். இத்துடன் போர் முடிவுக்கு வந்ததால் இது ஒரு ஈடுகட்டக் கூடிய இழப்பு (collateral damage) தான்."

பெரும்பாலானோர் புலிகளும், புலி ஆதரவாளர்கள் சொல்வதும் தான் ஈழத் தமிழரின் அரசியல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. அதற்குமப்பாலும் ஓர் அரசியல் இருக்கிறது. அது ஏகாதிபத்திய நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

இலங்கையில் நடந்தது "கிளர்ச்சியை அடக்குவதற்கான அரசின் வன்முறை" என்று நீங்கள் விளக்கம் கூறலாம். அதற்கு உதாரணமாக ஜேவிபி கிளர்ச்சியை எடுத்துக் காட்டலாம். "அதுவும் இனப்படுகொலையா?" என்று கேட்கலாம். ஆம், அதுவும் இனப்படுகொலை தான்! இந்த விடயத்தில் நான் ஏற்கனவே தமிழ் தேசியவாதிகளுடன் பல தடவைகள் முர‌ண்ப‌ட்டுள்ளேன். அவர்களும் உங்களைப் போன்று "அது இனப்படுகொலைக்குள் அடங்காது" என்று நம்புகிறவர்கள் தான்.

ஜேவிபி கிளர்ச்சியின் போது, சில கிராமங்கள் முற்றாக அழிக்கப் பட்டன. சில பாடசாலைகளில் படித்து வந்த மாணவர்கள் அனைவரும் கொல்லப் பட்டு புதைகுழிகளுக்குள் புதைக்கப் பட்டனர். "தமிழர்களை படுகொலை செய்வதற்கு காரணம் வேற்றினத்தின் மீதான வெறுப்பு. சிங்களவர்களை படுகொலை செய்வதற்கு என்ன காரணம்?" என்று கேட்கலாம். 

இந்தியாவில் நக்சலைட் ஒழிப்புப் போரில்  படுகொலை செய்யப் பட்டவர்கள் யார்? கூலி விவசாயிகள், தாழ்த்தப் பட்ட சாதியினர், ஆதிவாசிகள் போன்றோர் தான். இலங்கையிலும் அது தான் நடந்தது. ஒரே சிங்கள மொழி பேசினாலும், வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு காரணமாக படுகொலை செய்யப் பட்டனர். ஆகவே, அதுவும் இனப்படுகொலைக்குள் அடங்கும்.

இந்தோனேசியா, மலேசியா, போன்ற நாடுகளில் நடந்ததும் இனப்படுகொலையா? ஆம், இனப்படுகொலை தான். இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட் சந்தேகநபர்கள் மீது நடத்தப் பட்ட இனப்படுகொலை பற்றி விரிவான கட்டுரை எழுதி இருக்கிறேன். அது மட்டுமல்ல, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பூர்வகுடிகள் அழித்தொழிக்கப் பட்ட வரலாறும் இனப்படுகொலைக்குள் அடங்கும். அவற்றைப் பற்றியும் எழுதி இருக்கிறேன்.

அன்புடன்,
- கலையரசன் 



பிற்குறிப்பு:
சிலநேரம் ஜெயமோகன் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான்" என்று சொல்லியிருந்தால் மட்டும் தான், அந்தக் கூற்றின் உள்நோக்கம் குறித்து சந்தேகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அது அவரது அரசியல் கொள்கைக்கு முரணானது.

பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களும், ஏதாவதொரு அரசியல் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஜெயமோகன் இந்து பேரினவாத கொள்கையை பின்பற்றுபவர். அவர் அதை வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் காட்டியதில்லை. இப்போதும் அந்தக் கொள்கையில் உறுதியாக நின்று கொண்டு தான் பேசுகின்றார்.

உண்மையில், ஜெயமோகன் மிகவும் தெளிவாக உள்ளார். ஆனால், இந்துத்துவா சார்பு தமிழ் தேசியவாதிகள் தான் மிகவும் குழம்பிப் போயுள்ளனர். ஜெயமோகனுக்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது என்பதை ஒத்துக் கொண்டால், குஜராத், காஷ்மீர், மணிப்பூரில் நடந்ததும் இனப்படுகொலை தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதை அவரே நேரடியாக சொல்லி இருக்கிறார்.

ஜெயமோகனின் பதிலில் இருந்து சில உதாரணங்கள்: 
//பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த ஒருவர் சொன்னார், இந்தியாவில் இஸ்லாமியர் இன அழித்தொழிப்பு செய்யப்படுகிறார்கள் என. நான் அதிர்ச்சியுடன் அதை மறுத்தேன்.// 
//மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சொன்னார், இந்தியா மணிப்பூரிகளை இன அழித்தொழிப்பு செய்கிறது என. அங்கு நடந்த இந்திய அரசுசார்ந்த அனைத்துத் தாக்குதல்களையும் பட்டியலிட்டார். இன அழித்தொழிப்புக்கு அவர் சொன்ன ஒரு வழிமுறை அதிர்ச்சி கொள்ளச் செய்தது.// 
//இதோ இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் காஷ்மீரில் இந்தியா செய்யும் இனஅழித்தொழிப்புக்கு எதிராக அறைகூவுகிறது.// 
//இப்படி அறைகூவுபவர்கள் இரண்டு விஷயங்களை மறைத்துவிடுவார்கள். ஒன்று தங்கள் சார்பில் செய்த மீறல்களை. இரண்டு, தங்கள் கொள்கையுடையவர்கள் செய்த இனஒழிப்புகளை தாங்கள் ஆதரிப்பதை.//

ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நடத்துகிறவர்கள், அது பற்றி சிந்திப்பவர்கள், முதலில் தமக்கான அரசியல் சித்தாந்தம் ஒன்றை தெளிவாக வரையறுக்க வேண்டும். "சிங்களப் பேரினவாதம் எமக்கு எதிரி. ஆனால், இந்து பேரினவாதம் எமக்கு நண்பன்." என்ற அளவில் தான் அவர்களது அரசியல் நிலைப்பாடு உள்ளது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஆக்ரோஷமாக பேசுகிறவர்கள், காஷ்மீர், குஜராத், மணிப்பூரில் நடந்தவை இனப்படுகொலை இல்லை என்று வாதிடுவார்கள். அப்படியான "தமிழ் தேசியவாதிகள்" பலரை நானே சந்தித்து இருக்கிறேன்.

இந்துத்துவா சார்பு தமிழ் தேசியவாதிகள், இப்போதாவது தமது தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஜெயமோகன்களை கண்டிக்கும் தார்மீக பலத்தையும் இழந்து விடுவார்கள்.

இந்திய, இலங்கை பேரினவாத அரசுக்கள், எப்போதும் இனங்களை பிரித்து வைத்து, அவற்றிற்கு இடையில் பகையை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. ஜெயமோகனும் அத்தகைய பேரினவாத அரசின் நிலைப்பாடை தான் பிரதிபலித்துள்ளார்.

தேசிய இன விடுதலைக்காக போராடும் சக்திகள், இந்திய- இலங்கை அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாமல், சரியான அரசியல் சித்தாந்தத்தின் வழிநடத்தலின் கீழ் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதுவே ஜெயமோகன் போன்றவர்களுக்கு கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.

Wednesday, July 27, 2016

துருக்கியில் முறியடிக்கப் பட்ட இராணுவத்தின் சதிப்புரட்சி ஒத்திகை


துருக்கியில் நடந்த இராணுவ சதிப்புரட்சி தோல்வியடைந்துள்ளது. சதிப்புரட்சி பற்றிய தகவல்கள் உலகம் முழுவதும் வலம் வந்த போதிலும் உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பது தெளிவாவாவதற்கு ஒரு நாள் எடுத்தது. இருப்பினும், இதை எழுதிக் கொண்டிருக்கும் வரையில், சதிப்புரட்சியை நடத்தியவர்களின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. துருக்கி அரசு கூட ஊகங்களின் அடிப்படையில் தான் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தது.

15 ஜூலை, துருக்கி நேரம் இரவு ஒன்பதரை மணியளவில், இஸ்தான்புல், அங்காரா போன்ற முக்கிய நகரங்களில் பெரும‌ள‌வு இராணுவ‌த்தின‌ர் குவிக்க‌ப் பட்டனர். இலட்சக் கணக்கான மக்கள் வசிக்கும் இரண்டு நகரங்களின் மீதும், போர் விமானங்கள் வட்டமிட்டன. யாரும் பயந்த படி குண்டு போடவில்லை. ஆனால், ஹெலிகாப்டர்களில் இருந்து சுட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தன. தலைநகர் அங்காராவில், பாராளுமன்றம், அமைச்சுக்கள், அரசு அலுவலகங்கள், ஊடக நிறுவனங்கள் யாவும் இராணுவக் கட்டுப்பாட்டில் வந்தன. தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து சதிப்புரட்சியை பிரகடனம் செய்த இராணுவத்தினர், தாம் ச‌ர்வ‌தேச‌ ச‌ட்ட‌ங்க‌ளுக்கு ம‌திப்புக் கொடுப்ப‌தாக‌ தெரிவித்த‌ன‌ர்.

இஸ்தான்புல் ச‌ர்வதேச‌ விமான‌ நிலைய‌ம் மூட‌ப் பட்டிருந்தது. வெளிநாட்டு, உள்நாட்டு விமான‌ சேவைக‌ள் அனைத்தும் இர‌த்து செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. விமான‌ நிலைய‌த்தில் யுத்த‌ தாங்கிக‌ள் நிறுத்த‌ப் பட்டிருந்தன. இஸ்தான்புல் நநகரில் காவ‌ல்துறையின‌ர் எதிர்ப்புக் காட்டி உள்ள‌ன‌ர். இராணுவத்தினருக்கும், பொலிசாருக்கும் இடையில் நடந்த சண்டையில் பலர் கொல்லப் பட்டனர். சில மணி நேரத்தின் பின்னர், அதாவது சதிப்புரட்சி தோல்வியுற்றதும், இராணுவத்தினர் பொலிசாரிடம் சரணடைந்தனர்.

அன்றைய சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களில் பெரும்பான்மையானோர் இருபது வயது மதிக்கத் தக்க இளைஞர்கள். பலருக்கு என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை. தாம் ஒரு பயிற்சிக்கு அழைத்துச் செல்லப் படுவதாக நம்பினார்கள். இதுவும் ஓர் ஒத்திகை என்று நினைத்தார்கள். அதனால் தான், சதிப்புரட்சி தோல்வியடைந்த நேரம் மக்களைத் தாக்காமல் சரணடைந்தார்கள். சதிப்புரட்சியாளர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படலாம்.

தலைநகரில் சதிப்புரட்சி நடந்த நேரம், ஜ‌னாதிப‌தி எர்டோக‌ன் தென் துருக்கியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமான மார்மாரிஸ் நகரில் இருந்தார். ஆளும்கட்சியான, அவ‌ர‌து AK க‌ட்சிக்கு எதிராக‌வே ச‌திப்புர‌ட்சி ந‌ட‌ந்துள்ள‌து. இராணுவ‌த்தின‌ர், அங்காரா ந‌க‌ரில் AK க‌ட்சி த‌லைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்தனர். தனது ஆட்சிக் காலம் முழுவதும் மக்கள் போராட்டங்களை சகித்துக் கொள்ளாத ஜனாதிபதி எர்டோகன், தனது ஆட்சிக்கு ஆபத்து வந்து விட்டது என்றதும், மக்களை வீதிக்கு வந்து போராடுமாறு அறைகூவல் விடுத்தார்.

தொலைக்காட்சி நிலையம் ஒன்று ஸ்கைப் மூலம் உரையாடிய ஜனாதிபதியின் பேச்சை நேரடி ஒளிபரப்புச் செய்தது. எர்டோகனின் அறைகூவலை செவி மடுத்த அவரது கட்சி ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி சதிப்புரட்சியாளர்களுக்கு எதிராக சவால் விட்டனர். யுத்த தாங்கிகளை துணிச்சலுடன் எதிர்த்து நின்றனர். "இராணுவ சதிப்புரட்சி மக்கள் சக்தி மூலம் முறியடிக்கப் பட்டதாகவும், இராணுவத்தினர் மக்களைக் கொல்லவில்லை..." என்று ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டதில் ஒரு பகுதி உண்மை தான் உள்ளது.

உண்மையில் சதிப்புரட்சியின் போது இரத்தக் களறி ஏற்பட்டது. இராணுவம் மக்களை நோக்கி சுட்டது. அதில் பல பொது மக்கள் மரணமடைந்தனர். இதைத் தவிர, பொலிசாருக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சமரில், இரண்டு தரப்பிலும் பலர் கொல்லப் பட்டனர். சதிப்புரட்சியின் விளைவாக, மொத்தம் 260 பேர் மரணமடைந்ததாக ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சதிப்புரட்சி தோல்வியடைந்ததற்கு இன்னொரு காரணம் துருக்கி இராணுவம்! ஆமாம், தொண்ணூறு சதவீத படையினர் சதிப்புரட்சியில் பங்குபற்றவில்லை. அன்று இரவே, "இராணுவ‌த்தில் ஒரு பிரிவின‌ர் ம‌ட்டுமே ச‌திப்புர‌ட்சியில் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌" பிர‌த‌ம‌ர் யில்ட்ரிம் (Yildrim) தெரிவித்திருந்தார். அது உண்மை தான். படையினரே சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை தெருவில் பிடித்து வைத்து அடித்து உதைக்கும் காட்சிகளை அடுத்த நாள் காணக் கூடியதாக இருந்தது.

இதில் இன்னொரு முக்கிய விடயத்தையும் கவனிக்க வேண்டும். துருக்கியில் 1960 - 1980 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் மூன்று தடவைகள் இராணுவ சதிப்புரட்சிகள் நடந்துள்ளன. பல வருட காலம் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்துள்ளது. நவீன துருக்கியின் சிற்பியாக கருதப் படும், "தேசப் பிதா" கெமால் அட்டா துர்க் காலத்தில் இருந்து, துருக்கியில் இராணுவம் ஒரு பலமான ஸ்தாபனம். ஜனநாயக தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப் படும் அரசாங்கங்கள் இராணுவத்துடன் சமரசமாகப் போகவே விரும்பும்.

துருக்கியில் மேலைத்தேய கலாச்சாரத்தை புகுத்தி, அதை ஒரு சராசரி ஐரோப்பிய நாடாக்கிய பெருமை அட்டா துர்க்கையே சேரும். துருக்கி அரசு மதச்சார்பின்மையை கறாராக பின்பற்ற வேண்டும் என்பது அவர் உத்தரவு. அதை இன்றைக்கும் நடைமுறைப் படுத்தி வரும் அரச இயந்திரம் இராணுவம் தான். இஸ்லாமியவாத எர்டோகன், பல தடவைகள் மத நம்பிக்கை சார்ந்த சட்டங்களை கொண்டு வர முயன்றார். அப்போதெல்லாம் இராணுவம் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. ஆனால், இந்த தடவை எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதிப்புரட்சியை இராணுவம் ஆதரிக்கவில்லை.

ஆகவே, தற்போது நடைபெற்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, சதிப்புரட்சிக்கு மக்கள் மட்டுமல்ல, துருக்கி இராணுவம் கூட ஆதரவளிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. அப்படியானால் சதிப்புரட்சியை நடத்தியவர்கள் யார்? நிச்சயமாக இராணுவத்தில் ஒரு சிறு பிரிவினர் தான். ஆனால், அவர்களது நோக்கம் என்ன? பின்னணியில் வேறு யார் இருந்துள்ளனர்? இவை இன்னும் மர்மமாகவே உள்ளன.

சதிப்புரட்சி தோல்வியடைந்ததும், அதில் ஈடுபட்ட எட்டு இராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தப்பியோடி கிரீசில் தரையிறங்கி உள்ளனர். (இஸ்தான்புல் நகரில் இருந்து கிரேக்க நாட்டு எல்லை சில மைல் தூரம் தான்.) அவர்கள் அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். கிரேக்க அரசு அவர்களை கைது செய்து விட்டு, ஹெலிகாப்டரை துருக்கிக்கு திருப்பி அனுப்பி விட்டது. ஆனால், அரசியல் தஞ்சம் கோரிய படையினர் திருப்பி அனுப்பப் படுவார்களா என்பது தெரியவில்லை. இந்தியா - பாகிஸ்தான் மாதிரித் தான், கிரீஸ், துருக்கிக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளும் உள்ளன.

துருக்கியில் இது வ‌ரையில் ஜெனர‌ல்க‌ள் உட்பட‌ இர‌ண்டாயிர‌த்திற்கும் அதிக‌மான‌ ப‌டையின‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். குறிப்பாக இரண்டாம் படைப்பிரிவு தளபதி ஆதம் ஹுடுத்தி (Adem Huduti), மூன்றாம் படைப்பிரிவு தளபதி எர்டல் எஸ்துர்க் (Erdal Öztürk) ஆகிய தளபதிகளும் கைது செய்யப் பட்ட பெரிய தலைகள் ஆவார்கள். மூன்றாம் படைப்பிரிவு இஸ்தான்புல் மாநகர காவலுக்கும், இரண்டாம் படைப்பிரிவு சிரியா எல்லைக் காவலுக்கும் பொறுப்பான இராணுவப் பிரிவுகள் ஆகும். மேலும், 2745 நீதிப‌திக‌ளும், 140 ச‌ட்ட‌மா அதிப‌ர்க‌ளும் கைது செய்யப் பட்டவர்களில் அடங்குவார்கள். இன்னும் ப‌ல‌ர் தேட‌ப் படுகின்ற‌ன‌ர்.

எர்டோகன் அரசு எதற்காக நீதிபதிகளை கைது செய்ய வேண்டும்? அரசு, அரசாங்கம் என்பவற்றிக்கு எதிரான வித்தியாசங்களை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தேர்தலில் வெற்றி பெறும் கட்சி அரசாங்கம் அமைத்தாலும், அது விரும்பும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு தடையாக அரசு இருக்கலாம். நீதிபதிகள் போன்றோர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத அரசுப் பிரதிநிதிகள். அப்படியானவர்களை அப்புறப் படுத்தினால், தான் விரும்பும் இஸ்லாமிய மதச் சார்பான மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது எர்டோகனின் நோக்கம்.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில், சிரியா எல்லைக்கு அருகில் உள்ள இன்சிரில்க் (Incirlic) விமானப் படைத் தளத்தை சேர்ந்தவர்களே இராணுவ சதிப்புரட்சியின் சூத்திரதாரிகள் என்று ஒரு சந்தேகம் நிலவுகின்றது. அங்கிருந்து தான் சதிப்புரட்சிக்கு திட்டம் தீட்டப் பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப் படுகின்றது. இதனால், இன்சிரில்க் முகாம்மு சுற்றிவளைக்கப் பட்டது. முகாமுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப் பட்டது. அங்கிருந்த துருக்கிப் படையினர் விசாரணை செய்யப் பட்டனர். பலர் கைது செய்து காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

இன்சிரில்க் படைத்தளம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் ஒரு பகுதியில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியில் மொத்தம் 2,200 அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர். அவர்களில் 1,500 பேர் இன்சிரில்க் முகாமில் உள்ளனர். சிரியாவில் ISIS பிரதேசம் மீது குண்டு வீசும் அமெரிக்க விமானங்கள் இன்சிரில்க் படைத் தளத்தில் இருந்து தான் புறப்படுகின்றன.

அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் குய்லன் (Gülen) என்ற அரசியல் தலைவர் தான், தோல்வியுற்ற சதிப்புரட்சிக்கு காரணம் என்று எடோகன் குற்றம் சாட்டுகின்றார். அவர் ஒரு "பயங்கரவாதி" என்றும், துருக்கிக்கு நாடு கடத்துமாறும் அமெரிக்க அரசை கோரியுள்ளார். ஆனால், அது நடக்குமா என்பது தெரியவில்லை. எர்டோகனும், குய்லனும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள்! தற்போது ஜென்மப் பகைவர்கள்!

தற்போது ஆளும்கட்சியான AK கட்சி, முதன்முதலாக 2002 ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தமைக்கு குய்லன் முக்கிய காரணம். அவரது மேற்பார்வையின் கீழிருந்த குய்லன் இயக்கம் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தது. ஆட்சியைப் பிடித்த பின்னர், எர்டோகனுக்கும், குய்லனுக்கும் இடையில் விரிசல் தோன்றியது. 

எர்டோகன் தீவிர இஸ்லாமியவாதியாக இருந்தது மட்டுமல்லாது, தனது சர்வாதிகார தலைமையின் கீழ் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயற்சித்தார். அதற்கு மாறாக, குய்லன் மிதவாத இஸ்லாமியவாதியாக, பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆதரித்து வந்தார். இது மட்டுமே, AK கட்சியின் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு. அதைத் தவிர வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பின்தங்கிய நாடாக இருந்த துருக்கி, தொண்ணூறுகளுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி கண்டது. அப்போது தோன்றி வளர்ந்த தேசிய முதலாளிகளின் செல்வாக்கும் அதிகரித்தது. அவர்கள் தான் இஸ்லாமியவாத AK கட்சியின் நிதிப் புரவலர்கள். தேசிய முதலாளித்துவமும், இஸ்லாமியவாதமும் கையோடு கைகோர்த்து ஆட்சியைப் பிடித்தன. இருப்பினும் ஆளும் வர்க்கத்தின் உள்ளேயே பிளவுகள் தோன்றின. அவற்றில் குய்லன் ஆதரவுக் குழுவினர் முக்கியமானவர்கள். இது ஒரு கோஷ்டி மோதல். குய்லன் இயக்கம் என்பது, ஒரு சமூக அரசியல் அமைப்பாக, ஏராளமான உறுப்பினர்கள், ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது.

துருக்கியர்கள் ஒரே மொழி பேசினாலும், அவர்கள் ஒரு பிளவு பட்ட சமுதாயம் தான். கொள்கை முரண்பாடு காரணமாக சிலநேரம் உறவினர்களும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை. இடதுசாரிகளும், வலதுசாரிகளும் நேரில் கண்டால் கடித்து இரத்தம் குடிக்குமளவிற்கு வெறுப்பார்கள். அந்தப் பிரிவினை ஒரு புதினமல்ல. காலங்காலமாக இருந்து வருவது தான். ஆனால், இஸ்லாமியவாதிகள் (துருக்கி இடதுசாரிகள் அவர்களை "இஸ்லாமிய - பாசிஸ்டுகள்" என்றும் அழைக்கிறார்கள்) தமக்குள் பிளவு பட்டு அடிபடுவது ஒரு புதிய அரசியல் தோற்றப் பாடு என்று தான் சொல்ல வேண்டும்.

தோல்வியுற்ற சதிப்புரட்சிக்கு குய்லன் தான் காரணம் என்று எர்டோகன் சொல்வது உண்மையானால், இது ஆளும் வர்க்கத்திற்குள் தோன்றிய முரண்பாட்டின் விளைவு என்பது தெளிவாகின்றது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர், நீதித்துறையினரில் பெரும்பான்மையானோர் குய்லன் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

குய்லன் இயக்கம் ஒரு சாதாரணமான சமூக அமைப்பு அல்ல. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள மசூதிகள், பள்ளிக்கூடங்கள், வணிக நிலையங்கள் பல குய்லன் இயக்க ஆதரவாளர்களினால் நடத்தப் படுகின்றன. உண்மையில் இன்னும் சில சமூக அமைப்புகள் அவ்வாறு இயங்குகின்றன. ஆனால், எர்டோகனின் சர்வாதிகாரத்திற்கு சவாலாக இருப்பது குய்லன் இயக்கம் மட்டும் தான். பிரபல இஸ்லாமிய அறிவுஜீவியான பெதுல்லா குய்லன், அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் வாழ்ந்து வருகிறார்.

துருக்கி அமைச்ச‌ர் சொய்லு, "இராணுவ‌ ச‌திப்புர‌ட்சியில் அமெரிக்காவுக்கு ப‌ங்கிருக்கிற‌து" என்று தெரிவித்தார். இவ்வாறு துருக்கி அர‌சு ப‌கிர‌ங்க‌மாக‌ அமெரிக்காவை குற்ற‌ம் சாட்டிக் கொண்டிருந்தால், "இர‌ண்டு நாடுக‌ளுக்கும் இடையிலான‌ இராஜ‌த‌ந்திர‌ உற‌வில் விரிச‌ல் ஏற்ப‌டும்." என்று அமெரிக்க‌ அமைச்ச‌ர் கெரி எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்க - துருக்கி உறவில் விரிசல் ஏற்படுமானால், அது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். தற்போது நடந்துள்ள நடந்துள்ள இராணுவ சதிப்புரட்சி ஓர் ஒத்திகை மட்டுமே. ஆட்டம் இனித் தான் ஆரம்பமாகவுள்ளது. 

துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி தோல்வியடைந்ததும், மக்கள் சக்தி வெற்றி பெற்று விட்டதாக பலர் நினைக்கலாம். ஆனால், ஆட்சியாளர்கள் அப்படிக் கருதவில்லை. "சதிப்புரட்சி அபாயம் இன்னும் நீங்கவில்லை" என்று பிதமர் யில்ட்ரிம் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். 

வழமையாக இஸ்லாமியவாத AK கட்சியுடன் கொள்கை ரீதியாக முரண்படும், MHP (துருக்கி தேசியவாதிகள்), HDP (குர்திய உரிமைப் போராளிகள்) போன்ற எதிர்க்கட்சிகளும் சதிப்புரட்சியை கண்டித்துள்ளன. ஆனால், அமெரிக்க தூதுவராலயம் சதிப்புரட்சியை வரவேற்று அறிக்கை விட்டதாக சொல்லப் படுகின்றது. ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளும் "எர்டோகன் ஆட்சி கவிழ்க்கப் பட்டதற்கு" மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

துருக்கியில் நடந்த சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்கு என்ன? எர்டோகன் தன்னை ஒரு நவீன சுல்த்தானாக காட்டிக் கொள்வதும், ஓட்டோமான் சாம்ராஜ்யப் பெருமை பேசுவதும் மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தை மாற்றும் உள்நோக்கம் கொண்டது. எர்டோகனின் இஸ்லாமியவாத அரசியல் கொள்கை அமெரிக்காவை எரிச்சலூட்டி வருகின்றது. 

ஐ.எஸ்., அல்கைதா போன்ற தீவிரவாதிகளை விட, எர்டோகன் போன்ற ஜனநாயகவாதிகள் ஆபத்தானவர்கள் என்று அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் எர்டோகனின் எதிரி குய்லன். இன்சிரில்க் இராணுவ தளத்துடன் தொடர்பு பட்டவர்களின் கைது. சிரியா எல்லைக் காவல் படைத் தளபதி கைது. இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாகத் தான் வருகின்றது.

Monday, July 25, 2016

கபாலி சொல்லாத "மண்ணின் மைந்தர்களின்" கதை


ரஜனிகாந்த் நடித்துள்ள க‌பாலி திரைப்ப‌ட‌ம் ம‌லேசிய‌ த‌மிழ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் பிர‌ச்சினையை மைய‌மாக‌ வைத்து எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அந்த‌ விட‌ய‌த்தில் இது பாராட்ட‌த் த‌க்க‌ ப‌டைப்பு. ப‌ட‌ம் முழுவ‌தும் காட்பாதர் திரைப் ப‌ட‌த்தை நினைவுப‌டுத்தினாலும், இது ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் நடைமுறைப் பிர‌ச்சினையை கூறும் த‌னித்துவ‌ம் கொண்ட‌து.

அர‌சிய‌ல் பேசும் ப‌ட‌மாக‌ இருந்தாலும், அது ம‌லேசிய‌ அர‌சின் விளையாட்டு விதிக‌ளுக்கு அமைய‌வே எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. ப‌ட‌த்தின் தொட‌க்க‌த்தில் ஒரு த‌மிழ் சிறை அதிகாரி சொல்வார்: "வெளியே போய் ப‌ழைய‌ப‌டி ஆர‌ம்பிக்காதிங்க‌... த‌மிழ‌ர்க‌ளுக்கு இங்கே கெட்ட‌ பெய‌ர் இருக்கிற‌து." இது தான் எம‌க்கு ம‌லேசிய‌ அரசு சொல்ல‌ விரும்பும் "அறிவுரை"!

கேங்ஸ்ட‌ர் க‌லாச்சார‌ம் உல‌க‌ம் முழுவ‌தும், குறிப்பாக‌ வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ (அல்லது அடைந்து வ‌ரும்) நாடுக‌ளில் உள்ள‌ பிர‌ச்சினை. ல‌ண்ட‌ன், பாரிஸ், டொர‌ன்டோ ஆகிய‌ மேற்க‌த்திய‌ ந‌க‌ர‌ங்க‌ளில், ஈழ‌த் த‌மிழ் இளைஞ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ள் இருக்கின்ற‌ன‌. அந்த‌க் குழுக்க‌ள் த‌ம‌க்குள் மோதிக் கொள்ளும். ஹாலிவூட் திரைப் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌து போன்ற‌ துப்பாக்கிச் சூட்டு ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் ந‌ட‌க்கும்.

ஒரு த‌ட‌வை ல‌ண்ட‌ன் போயிருந்த‌ நேர‌ம், "ல‌ண்ட‌னில் உள்ள‌ த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் என்ன‌ செய்கிறார்க‌ள்? " என்று ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்தேன். "த‌மிழ் ம‌க்க‌ளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்க‌ள்.... அத‌னால் எம‌க்கு ந‌ல்ல‌து செய்கிறார்க‌ள்." என்றார்க‌ள். அப்ப‌டி என்ன‌ ந‌ன்மை செய்து விட்டார்க‌ள்? க‌ட‌ன் அட்டை மோச‌டி போன்ற‌வ‌ற்றில் த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் ஈடுப‌ட்டாலும், அவர்க‌ளால் த‌மிழ‌ர்க‌ளும் பெரும‌ள‌வு பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். கோஷ்டி மோத‌ல்க‌ளில் ப‌லியாகுப‌வ‌ர்க‌ளும் த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் தான்.

க‌பாலி ப‌ட‌ம் சொல்லாத‌ க‌தையும் இது தான். கேங்ஸ்ட‌ர் க‌லாச்சார‌ம் த‌மிழ‌ர்களுக்கு ந‌ன்மை உண்டாக்குவ‌தாக‌ நினைத்துக் கொள்வோர் ப‌ல‌ருண்டு. இன்னொரு ப‌க்க‌மாக‌ பார்த்தால், இதுவும் "சிறுபான்மையின‌ருக்கு எதிரான‌ ஒடுக்கு முறையின் இன்னொரு வ‌டிவ‌ம்" என்றும் சொல்ல‌லாம். மேற்க‌த்திய‌ நாடுக‌ள் போன்று, ம‌லேசிய‌ அர‌சும் த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் மீது க‌டுமையான‌ நட‌வடிக்கை எடுப்ப‌தில்லை. கார‌ண‌ம்? த‌மிழ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்குள்ளே மோதிக் கொண்டு சாக‌ட்டும் என்ற‌ அல‌ட்சிய‌ ம‌ன‌ப்பான்மை!

வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ முத‌லாளித்துவ‌ நாடுக‌ளில், சிறுபான்மையின‌த்த‌வ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ள், அந்த‌ ச‌முக‌த்தின‌ர் பொருளாதார‌ ரீதியாக‌ "முன்னேறுவ‌தை" குறிக்கோளாக‌ கொண்டுள்ள‌ன‌. ஆனால், இது அர‌சு அனும‌திக்கும் "சுத‌ந்திர‌த்திற்குள்" சாத்திய‌மாகும். ஏனென்றால், கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ளில் சேர்ப‌வ‌ர்க‌ள் ஒரு பேரின‌வாத‌ அர‌சை தட்டிக் கேட்ப‌தில்லை. அது ம‌ட்டும‌ல்ல‌, பெரும் முத‌லாளித்துவ‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் மேலாதிக்க‌த்தை கேள்வி எதுவுமின்றி ஏற்றுக் கொள்வார்க‌ள்.

தமிழன் முன்னேறாமல் இருப்பதற்கு தமிழன் தான் காரணம் என்று, ரஜனி ஒரு "நண்டுக் கதை" சொல்கிறார்.அதாவது, ஒரு நண்டு மேலே ஏறினால், அடுத்த நண்டு இழுத்து விழுத்துமாம். தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லையென்று புலம்பும் தமிழ் தேசியவாதிகளின் அரதப் பழசான பிரச்சாரம் இது. அன்றைய கருணாநிதி முதல் இன்றைய சீமான் வரையில் "நண்டு அரசியல்" தான் பேசிவருகிறார்கள். தமிழ் மக்களை சினிமா போதைக்கு அடிமைகளாக்கி, பணத்தை சுரண்டி வாழும் "கார்ப்பரேட் நடிகன்" ரஜனிகாந்த், இதைச் சொல்வது தான் வேடிக்கை. பெரிய பெரிய பண முதலைகள், தமிழர்களை பிடித்து விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

கபாலி சொல்லும் அந்த "நண்டுகள்" எவை? படத்தில் கபாலிக்கு எதிரான கேங்க்ஸ்டர்கள். குறிப்பாக, "கபாலியை காட்டிக் கொடுத்தவர்கள், எதிரியான சீன கேங்க்ஸ்டருடன் ஒத்துழைப்பவர்கள்". மலேசிய அரசுடன் ஒத்துழைக்கும் தமிழ் அமைச்சர்களை படத்தில் மிகவும் கவனமாக தவிர்த்திருக்கிறார்கள். மலேசிய அரசு கடைப்பிடிக்கும் "பூமி புத்திரர்கள் கொள்கை" வெளிப்படையானதொரு பேரினவாதக் கொள்கை. இவ்வளவு யுத்த அழிவைக் கண்ட இலங்கையில் கூட, அந்தளவு மோசமான இனப்பாகுபாட்டுக் கொள்கை கிடையாது.

அது என்ன "பூமி புத்திரர்கள் கொள்கை"? அந்த சம்ஸ்கிருத சொல்லை தமிழில் மொழிபெயர்த்தால் மண்ணின் மைந்தர்கள் என்று அர்த்தம் வரும். அதாவது, மலே மொழி பேசும் இனத்தவர்கள் மட்டுமே மண்ணின் மைந்தர்கள். ஏனையோர் எல்லாம், சீனர்கள், தமிழர்கள் வந்தேறுகுடிகள்! இது வெளிப்படையான இனவாதக் கொள்கை என்று பலரால் கண்டிக்கப் பட்டாலும், மலேசிய அரசு இன்றைக்கும் அதை நடைமுறைப் படுத்தி வருகின்றது.

மலே இனத்தில் பிறந்தவர்கள், பணக்காரர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் வீட்டு மனை போன்ற பல துறைகளில் அரசு மானியம் கொடுக்கும். பிற இனங்களில் உள்ள ஏழைகளுக்கு அந்தச் சலுகை கிடையாது. மலேசிய அரசின் இன ஒதுக்கல் கொள்கையால் பெரியளவில் பாதிக்கப் பட்டவர்கள் தமிழர்கள் தான். பொருளாதார வல்லரசான சீனாவின் தொடர்பு காரணமாக, தனியார் முதலீடுகளில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் சீன சமூகத்தினருக்கு தனியார் துறை ஆதரவு கிடைக்கிறது.

மலேசியாவில் தமிழர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகமாக இருப்பதால், அவர்கள் மத்தியில் வேலையற்றோரும், ஏழைகளும் அதிகம். கேங்க்ஸ்டர் கலாச்சாரம் பரவுவதற்கு அதுவும் ஒரு காரணம். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அது ஏற்ற வழி. மலேசியத் தமிழ் சமூகம் முழுவதும் அப்படி என்று நினைப்பதும் தவறு. பெரும்பாலான மலே,சீன மக்கள், தமிழர்கள் பற்றி எதிர்மறையான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.

மலேசியத் தமிழர்களில் உயர் கல்வி கற்று உத்தியோகம் பார்ப்பவர்களும் ஏராளம் பேருள்ளனர். இவர்களில் சிலர் தமது மத்தியதர வர்க்க மனப்பான்மை காரணமாக மலேசிய பேரினவாத அரசுக்கு வக்காலத்து வாங்குவதுமுண்டு. மலேசிய அரசும் வேண்டுமென்றே வர்க்கப் பிரிவினையை உருவாக்கி வளர்த்து வருகின்றது. இல்லாவிட்டால் பூமி புத்திரர்களின் நாட்டு அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்களுக்கு இடம் கிடைத்தது எப்படி? தமிழ் அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட மலேசிய பேரினவாத அரசுடன் இணக்க அரசியல் நடத்துபவர்கள் தான். இதையெல்லாம் கபாலி பேச மாட்டார். படத்தை தணிக்கை செய்து விடுவார்கள் என்று பயம்.

இது காலனிய காலத்தில் இருந்து தொடரும் பிரித்தாளும் சூழ்ச்சி. மலேசியா பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்தில், ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியத் தமிழ்க் கூலிகளை தருவித்தனர். அதே நேரம், அவர்களை மேற்பார்வை செய்வதற்கு, யாழ்ப்பாணத் தமிழ் கங்காணிகளை (கண்காணிப்பாளர்) பதவியில் அமர்த்தினார்கள். பெருந்தோட்டப் பக்கம் வெள்ளைக்கார முதலாளி வரா விட்டாலும், தமிழ்க் கங்காணிகள் தமிழ்க் கூலிகளை வருத்தி வேலை வாங்கினார்கள். ஒரு காலத்தில், இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்ற பகை முரண்பாடு ஏற்படவும் அதுவே காரணமாக இருந்தது.

தமிழ் கூலித் தொழிலாளர்கள் வறுமையில் இருந்து மீள முடியாமல் தவிக்கையில், தமிழ் மேற்பார்வையாளர்கள் செல்வம் சேர்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் ஓய்வு பெறும் வயதில் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிச் சென்று, வசதியான வீடு கட்டி வாழ்ந்தார்கள். யாழ்ப்பாணத்தில் மக்கள் அவர்களை "மலேசியா பென்சனியர்" என்று அழைத்தார்கள். எழுபதுகளில், மலேசியா பென்சனியர் என்றால் பணக்காரன் என்றும் இன்னொரு அர்த்தம் இருந்தது.

தமிழர்கள் மத்தியில் இருந்த சாதிப் பாகுபாட்டையும் ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். தொழிலாளர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சாதியினராகவும், அவர்களை மேற்பார்வை செய்தவர்கள் ஆதிக்க சாதியினராகவும் இருந்தனர். மலேசியாவில் மட்டுமல்ல, இலங்கையின் மலைநாட்டில் இருந்த பெருந் தோட்டங்களிலும் அதே நிலைமை காணப் பட்டது. அதாவது, இந்தியத் தமிழ் கூலித் தொழிலாளர்கள், இலங்கைத் தமிழ் மேற்பார்வையாளர்கள். இந்தவிரு சமூகங்களுக்கு இடையில் பிளவை உண்டாக்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரம்.

கபாலி படத்தில் நண்டுக் கதை சொல்லும் ரஜனி, அதை வெறுமனே "தமிழர் எதிர் தமிழர்" என்று விளக்கம் கொடுப்பது எதற்காக? வேறொன்றுமில்லை. அப்போது தான், தமிழர்கள் மத்தியில் உள்ள வர்க்க வேற்றுமைகளை மறைக்க முடியும். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் உள்ள தமிழ்த் தேசியவாதிகளும், கபாலியின் நண்டுக் கதை சொல்லித் தான் வர்க்க முரண்பாடு வெளித்தெரிய விடாமல் பூசி மெழுகி வருகின்றனர்.

Sunday, July 24, 2016

சிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்!




யாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! 

இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அந்த பிரச்சனையால் யார் தேர் இழுப்பதென்று சண்டை வந்தது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று முடிவு செய்தனர். 

தேர் இழுத்த இராணுவவீரர்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரும் உள்ளனர். அந்த விபரமெல்லாம் யாழ்ப்பாணத் தமிழ் சாதிவெறியர்களுக்கு தெரியாது. இதைப் பார்க்கும் பொழுது குரங்கு அப்பம் பங்கிட்ட கதை தான் ஞாபகம் வரும். 

ஈழப்போர் தொடங்கிய காலத்தில், மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவைக் கதை உலாவியது: 
"இந்த அரசாங்கம் முட்டாள்தனமாக யுத்தம்செய்யாமல், தமிழீழத்தை பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு தமிழர்கள் சாதிகளாக பிரிந்து சண்டை பிடிப்பார்கள். இறுதியில் அவர்களாகவே தமிழீழத்தை சிங்களவனின் கையில் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்!".

பிற்குறிப்பு
அச்சுவேலி கிராமத்தில் வாழும் ஒருவர் முகநூலில் தெரிவித்த தகவலை அடிப்படையாகக் வைத்து எழுதி இருக்கிறேன். சாதாரண மக்களும் தகவல் தெரிவிக்கும் ஊடகமாக சமூகவலைத்தளங்கள் மட்டுமே உள்ளன. அதனால் தான் இது போன்ற உண்மைகள் வெளிவருகின்றன. இலங்கையில் உள்ள தமிழ் வணிக ஊடகங்களும், பெரும்பாலான தமிழ் இணையத் தளங்களும், ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், அவர்கள் ஒன்றில் இருட்டடிப்பு செய்வார்கள் அல்லது அங்கு நடந்த சம்பவத்திற்கு சாதிப் பிரச்சினை தான் காரணம் என்பதை மட்டும் தணிக்கை செய்து விட்டு வெளியிடுவார்கள்.  

இதனுடன்  தொடர்புடைய  முன்னைய  பதிவுகள்:

Saturday, July 23, 2016

வலதுசாரி பயங்கரவாதி நடத்திய மியூனிச் கொலைவெறித் தாக்குதல்!


22-07-2016 அன்று,ஜெர்மனி நாட்டின் மியூனிச் நகரில் ஒலிம்பியா வணிக வளாகத்தில் நுழைந்த பதினெட்டு வயது இளைஞன், கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இந்த கொலை வெறி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய இளைஞன் Ali Sonboly ஈரானிய வம்சாவளியை சேர்ந்த ஜேர்மனிய இளைஞன் என்ற தகவல் வந்ததும், இதுவும் வழமையான "ஐ.எஸ். சுடன் தொடர்புடைய முஸ்லிம் பயங்கரவாத" தாக்குதல் என்று வதந்திகளை கிளப்பி விட்டார்கள்.

சில புலம்பெயர்ந்த தமிழர்களும் "இப்படியே தாக்குதல்கள் தொடர்ந்தால், ஐரோப்பாவில் இஸ்லாமியர் ஒருவர் கூட மிச்சம் வைக்காமல் துடைத்தழித்து விடுவார்கள்" என்று சாமியாடினார்கள். உள்மனதில் இருந்த தமது அவாவை செய்தி போன்று சொன்னவர்கள், ஒரு காலத்தில் தமிழர்களும் அப்படியான நிலைமையில் இருந்து வந்தவர்கள் என்பதை மறந்து விட்டுப் பேசுகின்றார்கள்.

மியூனிச் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பற்றி அறிவித்துக் கொண்டிருந்த பி.பி.சி. நிருபர், இது தீவிர வலதுசாரிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று ஊகித்திருந்தார். வேறு பலரும் அவ்வாறான ஊகத்தை தெரிவித்தனர். அதற்குக் காரணம் என்ன? தாக்குதல் நடந்த திகதியை பாருங்கள்:22-07-2016. அன்று என்ன விசேஷம்? மிகச் சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பு, இதே நாளில் நோர்வேயில் ஒஸ்லோ நகரில் 77 இளைஞர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப் பட்டனர்.

நோர்வே ஒஸ்லோ நக‌ருக்கு அருகில் ஒரு வ‌ல‌துசாரி - பாஸிச‌ பய‌ங்க‌ர‌வாதிக‌ளால் ப‌டுகொலை செய்ய‌ப் பட்ட‌ 77 இளைஞ‌ர்க‌ளும், தொழிற்கட்சியின் இளைஞ‌ர் அணியை சேர்ந்த‌வர்கள். அன்டெர்ஸ் பிறேவிக் என்ற தீவிர வலதுசாரி, அவர்கள் "இட‌துசாரிக‌ள்" என்ற‌ வெறுப்புண‌ர்வின் கார‌ண‌மாக‌ சுட்டுக் கொன்றான். அந்தப் பாஸிச பயங்கரவாதியினால் கொல்லப் பட்ட "இட‌துசாரி" இளைஞர்க‌ளில் ஒர் ஈழ‌த் த‌மிழ்ப் பெண்ணும் அட‌ங்குவார்.

ஒஸ்லோவில் நடந்த கொலைவெறித் தாக்குதலின் ஐந்தாண்டு நினைவுநாளில் மியூனிச் தாக்குதலும் நடந்துள்ளது. அது மட்டுமல்ல, மியூனிச் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் நோர்வீஜிய வலதுசாரி பயங்கரவாதி அன்டெர்ஸ் பிறேவிக்கின் படத்தை தனது வாட்ஸ் அப் புரபைலாக வைத்திருந்தான். இந்தத் தகவலை, கொலையாளியின் வீட்டில் சோதனை நடத்திய பொலிசார், பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். வாட்ஸ் அப் புரபைலில் பிறேவிக் படம் இருந்ததை நண்பர்களும் உறுதிப் படுத்தி உள்ளனர். ( http://www.bbc.com/news/world-europe-36874497)

கொலையாளி ஒரு பெண்ணின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்து, மியூனிச் நகரில் ஒரு குறிப்பிட்ட மக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு பலரை வரவழைத்து இருக்கிறான். இன்று அங்கு இலவசமாக உணவு கிடைக்கும் என்று அழைப்பு விடுத்திருக்கிறான். ஒலிம்பியா வணிக வளாகத்தில் இருந்த மக்டொனால்ட்ஸ் உணவத்திலும் சில பருவ வயதினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளி அங்கிருந்து தப்பியோட எத்தனித்து இருக்கலாம். அவனது வீட்டில் "தற்கொலைப் பிரகடனம்" எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

மியூனிச் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ன் ஒரு ஈரானிய‌ - ஜேர்மனிய‌ இளைஞ‌ன் என்று தெரிய‌ வ‌ந்த‌தும், இவ‌னும் "இஸ்லாமிய‌ - தீவிர‌வாதி" தான்  வாதாடிய த‌ற்குறிக‌ளுக்கு  ஒன்றைச் சொல்லிக் கொள்ள‌ விரும்புகிறேன்: "அவ‌ன் இஸ்லாமிய‌ருக்கு விரோத‌மான‌ தீவிர‌ வ‌ல‌துசாரி!"

நான் பல‌ வ‌ருட‌ கால‌ம் ப‌ல‌ ஈரானிய‌ ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌ழ‌கி இருக்கிறேன். புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈரானிய‌ர்க‌ளின் ம‌ன‌நிலை என‌க்கு ந‌ன்றாக‌ப் புரியும்.
"வெள்ளைய‌னுக்கு குண்டி க‌ழுவுவ‌தை பெருமையாக‌ க‌ருதுவ‌தில்", ஈரானிய‌ர்களும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ச‌ளைத்த‌வ‌ர்க‌ள் அல்ல‌. குடியுரிமை பெற்ற‌வுட‌ன் ஐரோப்பிய‌ர்க‌ள் த‌ம்மை "கௌர‌வ‌ப் பிர‌ஜைக‌ளாக‌" ம‌திப்புக் கொடுக்கிறார்க‌ள் என்று ப‌ந்தா காட்டும் த‌மிழ‌ர்களை க‌ண்டிருக்கிறேன். ஆனால் ஈரானிய‌ர்க‌ள் அத‌ற்கும் மேலே!

குடியுரிமை பெற்ற‌வுட‌ன் த‌ன‌து பெய‌ரை ஐரோப்பிய‌ பாணிக்கு மாற்றிக் கொண்ட‌ ஈரானிய‌ர்க‌ளை என‌க்குத் தெரியும்.  ஏற்க‌ன‌வே, ந‌டை, உடை, பாவ‌னை, க‌லாச்சார‌ம் எல்லாம் ஐரோப்பிய‌ பாணிக்கு மாற்றி இருப்பார்க‌ள். பிற‌ ஐரோப்பிய‌ இன‌த்த‌வ‌ருக்கும் த‌ங்க‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லையென்று பாவ‌னை செய்வார்க‌ள். "ஈரானிய‌ர்க‌ள் இன‌த்தால் ஆரிய‌ர்க‌ள், அத‌னால் ஐரோப்பிய‌ர்க‌ள்." என்று பெருமையாக‌ சொல்லிக் கொள்வார்க‌ள்.

ஒரு ஹாஸ்ட‌லில் என்னோடு த‌ங்கியிருந்த‌ ஈரானிய‌ ந‌ண்ப‌ரின் ரூமுக்கு போன‌ பின்ன‌ர் தான், அவ‌ர் (பெந்த‌கொஸ்தே) கிறிஸ்த‌வ‌ராக‌ மாறி இருந்த‌ விட‌ய‌ம் தெரிய‌ வ‌ந்த‌து. முஸ்லிம்க‌ளைப் ப‌ற்றி மிக‌வும் மோச‌மாக‌ப் பேசிக் கொண்டிருந்தார்.

இவ‌ர் ம‌ட்டும‌ல்ல‌, இஸ்லாத்தையும், முஸ்லிம்க‌ளையும் ப‌ற்றி கேவ‌ல‌மாக‌ப் பேசும் ப‌ல‌ ஈரானிய‌ர்க‌ளை என‌க்குத் தெரியும். இத‌னால் ச‌க‌ ஈரானிய‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டை  போடுவ‌தையும் க‌ண்டிருக்கிறேன்.

மியூனிச் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ இளைஞ‌ன் த‌ன்னை ஒரு "அச‌ல் ஜேர்ம‌னிய‌ன்" என்று சொன்ன‌தாக‌ சாட்சிக‌ள் தெரிவித்த‌ன‌ர். அது ம‌ட்டும‌ல்ல‌, துருக்கிய‌ரையும் மோச‌மாக‌ திட்டிக் கொண்டிருந்தானாம். அதாவ‌து, "முஸ்லிம்க‌ளை வெறுக்கும் இன‌வாத‌ ஜேர்ம‌னிய‌ன்" போன்று காட்டிக் கொண்டான். ஏன் ஒரு குடியேறி இன‌வாத‌ ஐரோப்பிய‌ர்க‌ள் மாதிரி சிந்திக்க‌ மாட்டானா? ந‌ம்ப‌ முடிய‌வில்லையா?

நம்பா விட்டால் ந‌ம‌து த‌மிழ‌ர்க‌ள் சிலர், அதாவது "க‌றுப்பு - ஐரோப்பிய‌ர்க‌ள்" என்ன‌ பேசுகிறார்க‌ள் என்று காது கொடுத்துக் கேளுங்க‌ள்.  பொதுவாக‌, அவர்க‌ள‌து "இஸ்லாமிய‌ர்க‌ள் ப‌ற்றிய‌ க‌தையாட‌ல்க‌ள்" ஐரோப்பிய‌ இன‌வாதிக‌ளின் சிந்த‌னையை அடிப்ப‌டையாகக் கொண்டிருக்கும். அதை அவ‌ர்க‌ள் மிக‌ச் சாதார‌ண‌மாக‌ எடுத்துக் கொள்கிறார்க‌ள். 

அண்மைக் காலமாக ஐரோப்பாவில் நடந்து வரும் கொலைவெறித் தாக்குதல்களுக்கு உடனுக்குடன் "இஸ்லாமிய பயங்கரவாத" சாயம் பூசுவது வழமையான விடயம். சிலநேரம், பொலிஸ் அல்லது அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்னரே, ஊடகங்கள் முந்திக் கொண்டு வதந்திகளை கிளப்பி விடுகின்றன. ஊடகங்களில் வரும் செய்தியை பார்த்து விட்டு, எங்கோ இருக்கும் ஐ.எஸ். அதற்கு உரிமை கோருவது உச்ச பட்ச காமெடி. 

இந்த தடவை அது போன்ற காமெடிக் காட்சிகள் எதுவும் அரங்கேறவில்லை. சம்பவம் நடந்தவுடனே, "இதோ பார்த்தீர்களா? (இஸ்லாமிய) அகதிகளை உள்ளே விட்டதன் விளைவைப் பார்த்தீர்களா?" என்று வலதுசாரிகள் பிரச்சாரம் செய்யக் கிளம்பி விட்டார்கள். இது போன்ற அரசியல் அழுத்தம் எதற்கும் அடி பணியாமல், ஜெர்மன் பொலிஸ் பொறுப்புடன் நடந்து கொண்டது.

இந்த இடத்தில், சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நீஸ் நகரில் நடந்த தாக்குதல் சம்பவமும், எவ்வாறு ஊடகங்களினால் திரித்துக் கூறப் பட்டது என்பதை இரை மீட்டுப் பார்ப்பது நல்லது:

பிரான்ஸ், நீஸ் நகரில் 80 பேரைக் கொன்ற தாக்குதலில், லாரி ஓட்டிச் சென்ற "பயங்கரவாதி", பொருளாதாரக் கஷ்டம், பண நெருக்கடி, குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட நபர்.

சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர், துனீஷியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்ஸ் பிரஜை. பெயரில் முஸ்லிமான அந்த நபர் மத நம்பிக்கையற்றவர். ஒரு நாளும் மசூதிக்கு சென்றதே கிடையாது. வீட்டில் கூட தொழுதிராதவர்.

அவரை நன்கு அறிந்த அயலாரும், நண்பர்களும் இந்தத் தகவலை தெரிவித்தனர். சமீப காலமாக பண நெருக்கடிக்கு ஆளானது மட்டுமல்லாது, மண முறிவு காரணமாகவும் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டிருந்தார். (பார்க்க: http://www.leparisien.fr/faits-divers/attentat-a-nice-les-papiers-d-identite-d-un-franco-tunisien-retrouve-dans-le-camion-15-07-2016-5969385.php )

வழமை போல ஊடகங்கள் இதற்கு கண்,காது,மூக்கு வைத்து, உலகத் தலைவர்கள் கண்டிக்கும் அளவிற்கு தீவிரவாதத் தாக்குதலாக்கி விட்டன. மர்ம நபர் ஓட்டி வந்த லாரியில் "பயங்கர ஆயுதங்கள்" கண்டுபிடிக்கப் பட்டதாக ஊடகங்களில் சொல்லப் பட்டது. ஆனால், லாரிக்குள் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி மட்டும் இருந்ததாக, நெதர்லாந்து தொலைக்காட்சியில் தெரிவிக்கப் பட்டது.

மேலும் 80 பேர் கொல்லப் பட்டதற்கு லாரி மோதியது மட்டுமே காரணம் என்று சொல்லப் படுவதும் சந்தேகத்திற்குரியது. அந்த நேரத்தில் பரவலாக துப்பாக்கிச் சூடுகள் நிகழ்த்தப் பட்டதாக, நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். வான வேடிக்கையை அடுத்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவலை, அந்த இடத்தில் இருந்த டச்சு சுற்றுலாப்பயணி ஒருவர், டச்சு தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார்.

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய்.