Showing posts with label ஈரான். Show all posts
Showing posts with label ஈரான். Show all posts

Thursday, November 26, 2020

மாஸ்டாகிசம் - பண்டைய ஈரானிய கம்யூனிச மதம்!

 

கம்யூனிசம் என்பது கார்ல் மார்க்சின் கண்டுபிடிப்பு அல்ல. உலகம் முழுவதும் முன்னொரு காலத்தில் இருந்த, ஆதிகால கம்யூனிச சமுதாயங்கள் குறித்து ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. அவை சிலநேரம் ஏதாவதொரு மதம் சார்ந்தும் இருந்திருக்கலாம்.

 பொதுவாக உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் எதோ ஒரு கட்டத்தில் வர்க்கப் பிரிவினைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. அதற்கு மாறாக, வர்க்க பேதமற்ற பொதுவுடைமை சமுதாயத்தை போதித்த ஒரு மதம் வரலாற்றில் இருந்துள்ளது. ஈரானில் தோன்றிய மாஸ்டாயிசம் என்ற கம்யூனிச மதம் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம். ஆதி கால கிறிஸ்தவர்கள் ஒரு கம்யூனிச சமுதாயத்தில் வாழ்ந்தனர். இருப்பினும் கிரேக்க- ரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதும், அது அரச மதமாகியது. அதனால் கிறிஸ்தவம் போதித்த சமத்துவ கொள்கைகள் கைவிடப் பட்டு, கிறிஸ்தவ மதமும் ஒரு வர்க்க சமுதாயத்தின் பாதுகாவலனாக மாறியது. 

பண்டைய ஈரானில் நிலவிய சொராஸ்டிரிய மதத்தின் பல தத்துவங்கள் இன்றைக்கும் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களால் பின்பற்றப் பட்டு வருகின்றன. ஈரானிய சாம்ராஜ்யத்தின் அரச மதமாகவும் சொராஸ்டர் மதம் இருந்து வந்தது.


ஈரானில் இஸ்லாமிய- அரேபியரின் படையெடுப்புகள் நடக்கும் வரையில், அங்கு சசானிய அரச வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களும் சொராஸ்திரிய மதத்தை தான் பின்பற்றி வந்தனர். கி.பி. 473 முதல் 531 வரை ஈரானை ஆண்ட சசானிய பரம்பரையை சேர்ந்த காவாத் மன்னனின் காலத்தில் ஒரு புதிய கம்யூனிச மதம் தோன்றியது. அதை தோற்றுவித்த மாஸ்டாக் என்ற மதகுருவின் பெயரால் அது மாஸ்டாகிசம் என்று அழைக்கப் பட்டது. 


உண்மையில் மாஸ்டாக் கூட ஒரு சொராஸ்திரி மதகுரு தான். அவரது போதனைகள் வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை நோக்கியதாக இருந்தன. "ஆதி கால கம்யூனிசம்" என்று சொல்லத்தக்க பொதுவுடைமைக் கோட்பாடுகளை மதக் கருத்துக்களாக போதித்து வந்தார். அவரது போதனைகளால் பெருமளவு மக்கள் கவரப் பட்டனர். 


மாஸ்டாக் போதனைகளின் படி, கடவுள் இந்தப் பூமியை அனைத்து மனிதர்களுக்கும் படைத்துள்ளார். பூமியில் உள்ள செல்வங்களை அனைவரும் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதே கடவுளின் நோக்கம். இருப்பினும் வலிமை படைத்த தீயவர்கள், வலிமை குறைந்த நல்லவர்களை அடக்கி ஒடுக்கி அனைத்து செல்வங்களையும் தாமே அனுபவிக்கத் தொடங்கினார்கள். இதனை மாஸ்டாக் இருமைவாதக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளக்குகிறார். 

இத்தகைய இருமைக் கோட்பாடு (Dualism) இன்றும் பல மதங்களில் உள்ளது. உதாரணத்திற்கு கிறிஸ்தவ மதத்தில் அது ஆண்டவருக்கும் சாத்தானுக்கும் இடையிலான போராட்டம் என்று சொல்லப் படுகிறது. இஸ்லாமிய மதத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான போராட்டம், அதாவது ஜிகாத் என்று இன்னொரு விதமாக விரிவான விளக்கம் கொடுக்கிறது. 


இருமைக் கோட்பாடு, ஏற்கனவே ஈரானில் இருந்த சொராஸ்திரிய மதத்தில் முக்கிய பங்கு வகித்தது. அதற்கு மாஸ்டாக் சோஷலிச விளக்கம் கொடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. உலகில் தீமைகள் நடப்பதற்கான ஐந்து காரணிகள் என்று மாஸ்டாக் குறிப்பிடுவதும் சோஷலிச கண்ணோட்டத்தில் அமைந்துள்ளது. அவர்கள் அதை நல்லதுக்கும் கெட்டதுக்கும், அல்லது வெளிச்சத்திற்கும் இருட்டுக்கும் இடையிலான போராட்டம் என்பார்கள். 


மாஸ்டாக் முக்கியமாக ஒரு வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை போதித்தார். அனைவருக்கும் சமமான உரிமைகள், மற்றும் சமமான நீதி வழங்கப் பட வேண்டும் என்றார். மேலும் சொத்துக்கள் அனைவருக்கும் பொதுவாக்கப் பட வேண்டும், தனியுடைமை ஒழிக்கப் பட வேண்டும் என்பது பிரதானமான போதனையாக இருந்தது. கடவுள் வளங்களை அனைவருக்கும் சமமமாக பங்கிட்டுக் கொடுத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கைத் தவிர மேலதிகமாக எடுத்துக் கொள்ள ஆசைப் படக் கூடாது. இருப்பினும் பலமுள்ளவர்கள், பலவீனமானவர்களிடம் இருந்து செல்வத்தை பறித்தெடுத்து தமக்கென சொந்தமாக்கி உள்ளனர். பணக்காரர்கள் தமது பங்கிற்கு மேற்பட்ட செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 


இந்த இடத்தில் பெண்கள் தொடர்பான ஒரு சுவாரஸ்யமான போதனையை காண முடிகிறது. மாஸ்டாக்கிய மதத்தில் சுதந்திரமான காதல் திருமணங்கள் அனுமதிக்கப் பட்டிருந்தன. அத்துடன் பலதார மண முறை கடுமையாக எதிர்க்கப் பட்டது. அந்தக் காலத்தில் உலகம் முழுவதும் பலதார மணம் சர்வசாதாரணமான விடயமாக இருந்தது. ஈரானும் அதற்கு விதிவிலக்கல்ல. மாஸ்டாக் அதையும் ஒரு வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அதாவது செல்வந்தர்கள் மட்டுமே பல பெண்களை மணம் முடிக்கிறார்கள். அன்றைய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் பெண்களும் சொத்துக்களாக கருதப் பட்டனர். ஒரு வர்க்க ஏற்றத்தாழ்வு கொண்ட சமுதாயத்தில் பணக்காரர்கள் பெண்களையும் தமக்குள் பகிர்ந்து கொள்வதால், ஏழைகள் மணம் முடிக்க பெண்கள் கிடைப்பதில்லை. கிறிஸ்தவம் ஒருவனுக்கு ஒருத்தி கொள்கையை போதித்தது. இஸ்லாம் நான்கு மனைவியர் மட்டுமே என்று சட்டம் போட்டு கட்டுப் படுத்தியது. ஆனால் கிறிஸ்தவமோ, இஸ்லாமோ பலதார மணத்தை வர்க்க கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறி விட்டன. 


சமூகத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுக்கு ஐந்து பிசாசுகள் காரணம் என்பது ஒரு மாஸ்டாக் போதனை. பொறாமை, கெட்ட எண்ணம், பழிவாங்கும் உணர்வு, தேவை, பேராசை ஆகிய ஐந்து பிசாசுகள் மனிதனை தீய வழியில் கொண்டு செல்கின்றன. இதிலிருந்து விடுதலை பெற ஒரு சமூகப் புரட்சி (சோஷலிசப் புரட்சி) அவசியம். அந்த வகையில் கார்ல் மார்க்ஸ் போன்ற சோஷலிச அறிஞர்கள் உலகில் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாஸ்டாக் ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
அன்று பல இலட்சக் கணக்கான ஈரானியர்கள் மாஸ்டாக்கின் சமத்துவ கொள்கைகளால் கவரப் பட்டு புதிய மதத்தில் சேர்ந்து கொண்டனர். அவர்கள் தமது சொத்துக்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டு கம்யூனிச சமுதாயமாக வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் மன்னன் காவாத் புதிய மதத்தை தழுவிக் கொள்ளும் அளவிற்கு பெரும்பான்மை மக்கள் மாஸ்டாகிய மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். 


இருப்பினும் அந்நாட்டில் பிற மதங்களை, குறிப்பாக அரச மதமான சொராஸ்திரிய மதத்தை பின்பற்றுவோரும் வாழ்ந்தனர். குறிப்பாக மேட்டுக்குடியினர் தனியுடைமையை ஏற்றுக் கொண்ட சொராஸ்திரிய மதத்திற்கு விசுவாசமாக இருந்தனர். இந்த சொத்துடைமை வர்க்கத்தினர், சொராஸ்திரிய மதகுருக்களுடன் சேர்ந்து புதிய கம்யூனிச மதத்தை அழிப்பதற்கு சூழ்ச்சி செய்தனர். அவர்களுடன் முடிக்குரிய இளவரசன் கொஸ்ரோவ் அனுஷீர்வனும் சேர்ந்து கொண்டான். ஒரு குறிப்பிட்ட நாளில் அரண்மனையில் நடக்கவிருக்கும் விருந்துக்கு வருமாறு மாஸ்டாக் மதகுருக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அது தமக்கு வைக்கப் பட்ட பொறி என்பதை அறியாமல் சென்ற மாஸ்டாக் மதகுருக்கள் அனைவரும் படுகொலை செய்யப் பட்டனர்.
 

அந்த சம்பவத்திற்கு பின்னர், நாடு முழுவதும் மாஸ்டாக் மத நம்பிக்கையாளர்கள் வேட்டையாடப் பட்டு இனப்படுகொலை செய்யப் பட்டனர். பலர் உயிரோடு புதைக்கப் பட்டனர். முன்பு மாஸ்டாக்கிய மதத்தை தழுவியிருந்த மன்னன் காவாத், அன்று நடந்த சதிப்புரட்சி காரணமாக வெளியேற்றப் பட்டான். மூன்று வருடங்களுக்கு பின்னர் திரும்பி வந்த மன்னன் மாஸ்டாக் மதத்தை கைவிட்டு விட்டு, மறுபடியும் சொராஸ்திரிய மதத்தை பின்பற்றினான். அத்துடன் அவனே மாஸ்டாக் இனப்படுகொலையை முன்னின்று நடத்தினான். 


மாஸ்டாக் மதம் தொடர்பாக எழுதப்பட்ட அனைத்து நூல்களும் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டு விட்டன. அதனால் இன்று வரை மாஸ்டாக் மதம் பற்றிய முழுமையான தகவல்கள் யாருக்கும் தெரியாது. உண்மையில் மாஸ்டாக் மதத்தின் எதிரிகள் எதிர்மறையாக எழுதி வைத்த தகவல்களில் இருந்தே, அது சம்பந்தமான விபரங்களை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உதாரணத்திற்கு, மாஸ்டாக்கிய அழித்தொழிப்புக்கு பிறகு அந்நாட்டில் மீண்டும் தனியுடைமை வைத்திருக்கும் உரிமை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. 


இருப்பினும் மாஸ்டாகிய மதம் முற்றாக அழிந்து விட்டது என்று சொல்ல முடியாது. ஈரான் இஸ்லாமியமயமாகிய பின்னரும் அவர்கள் பல்வேறு பெயர்களில் சிறு குழுக்களாக மாஸ்டாக் மதத்தை பின்பற்றினார்கள். மசாக்கியே, கொராமியே, கொராம் டினியே, சொர்க் ஜமேகான், செபித் ஜமேகன் என்று பல பெயர்களில் அழைக்கப் பட்டனர். காலப்போக்கில் அவர்களும் இஸ்லாமியராக மாறி விட்டாலும், சமத்துவ கொள்கைகளை கைவிடவில்லை. ஷியா- இஸ்லாத்தில் சில பிரிவுகள் சமத்துவ சமூகத்தில் நம்பிக்கை வைத்துள்ளன. அத்துடன், இன்றைக்கும் ஈரானில் ஏராளமான தீவிர மார்க்சிய- லெனினிசவாதிகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இது ஒரு வகையில் மாஸ்டாக் கம்யூனிசத்தின் பாரம்பரியமாகவும் கருதலாம். 


இன்றும் கூட மத்திய கிழக்கு நாடுகளில் அரேபியர்கள் மத்தியில் சோஷலிச அல்லது கம்யூனிச கொள்கைகளை பின்பற்றுவோரை "மாஸ்டாக் பெர்சியர்கள்" என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இது குறித்து எல்லோருக்கும் தெரியாது என்றாலும், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் பிரச்சாரங்ககளில் அவ்வாறு குறிப்பிடப் படுவதுண்டு. 

 

- கலையரசன்

25-11-2020

 

இதே கட்டுரை யூடியூப் காணொளியாக பதிவேற்றப் பட்டுள்ளது:

Friday, January 24, 2020

ஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்?


நவீன கால வரலாற்றில் முதல் தடவையாக, ஈரானில் ஷியா மதத்தவரின் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் செங்கொடி பறக்கிறது. அதன் அர்த்தம், ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் யுத்தம் வெகுவிரைவில் தொடங்கும். கவனிக்கவும்: எண்பதுகளில் ஈரான் - ஈராக் போர் நடந்த காலத்தில் கூட இந்தக் கொடி பறக்க விடப் படவில்லை.

ஈரானின் ஷியா மதப்பிரிவினரின் ஆன்மீகத் தலைநகரமான கோம் நகரில் உள்ள புனித ஸ்தலமான ஜம்கரன் (Jamkaran) மசூதியின் உச்சியில் இந்த செங்கொடி ஏற்றப் பட்டது. தெஹ்ரான் அரசியல் தலைநகரமாக இருந்த போதிலும், ஷியாக்களின் உயர் மதத்தலைவராக கருதப்படும் ஆயத்துல்லா இந்தக் கோம் நகரில் இருந்து தான் ஆட்சிபரிபாலனத்தை கவனிப்பார். ஆகவே இதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த சம்பவம் நவீன உலக வரலாற்றில் இதற்கு முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை. இதில் உள்ள விசேஷம் என்ன?

இஸ்லாமிய ஷியா மதப் பிரிவினரை பொறுத்தவரையில் இந்த செங்கொடி ஒரு வரலாற்று துயரத்தை குறிப்பால் உணர்த்துகிறது. ஷியா முஸ்லிம்களின் வரலாற்றில் முதல் தடவையாக, அவர்களால் முதலாவது இமாம் என மதிக்கப்படும் ஹுசைன் தூக்கிப் பிடித்த கொடி அது. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமிய ராஜ்ஜியத்தை ஆண்ட கலீபாக்களால் இறைதூதர் முகமதுவின் மகள் பாத்திமாவும், அவரது கணவன் அலியும் சதி செய்து கொல்லப் பட்டனர். அவர்களது மகன் ஹுசைன் குருதியில் நனைந்த செங்கொடி ஏந்தி, ஆட்சியாளரின் அநீதிக்கும், அராஜகத்திற்கும் எதிராக நீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டம் நடத்தினார். அதனால் இந்த செங்கொடி "ஹுசைனின் கொடி" என்றும் அழைக்கப் படுகின்றது. ஷியா இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இது ஓர் உணர்வுபூர்வமான விடயம். இது ஒரு வகையில் நீதியை நிலைநாட்டும் போராட்டத்திற்கான அறைகூவலாகவும், கோழைத்தனமாக படுகொலை செய்த பகைவர்களின் பழி தீர்ப்பதற்கான மதக் கடமையாகவும்  கருதப் படுகின்றது.

இன்றைய நிலைமையை புரிந்து கொள்வதற்கு நாம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இஸ்லாமிய மதம் பரவிய ஆரம்ப காலங்களில், 632 ம் ஆண்டு இறைதூதர் முகமதுவின் மறைவுக்குப் பின்னர், இஸ்லாமிய அகிலத்திற்கு யார் தலைமை தாங்குவது என்ற பிரச்சினை எழுந்தது. குறிப்பாக இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு வன்முறையில் முடிந்தது. இஸ்லாமிய அகிலத்தின் தலைமைப் பதவிக்கு, அதாவது கலீபாவாக முகமதுவின் ஆருயிர் நண்பர் அபூபக்கர் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டார். இருப்பினும் முகமதுவின் மருமகன் அலியின் தலைமையை பின்பற்றிய குழுவினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஷியாத் அலி (அலியின் கட்சியினர்) என்று அழைக்கப் பட்டனர். அதிலிருந்து தான் பிற்காலத்தில் ஷியா மதப் பிரிவு உருவானது.

அலி ஆதரவுக் குழுவினர், இறைதூதர் முகமதுவின் மகள் பாத்திமாவின் கணவர் என்ற வகையில், அவரது மருகனான அலிக்கு தான் தலைமைப் பதவி கிடைக்க வேண்டும் என்று வாதாடினார்கள். இந்த நெருக்கடிக்கு மத்தியில் பாத்திமா மர்மமான முறையில் மரணமுற்றார். அங்கு நடந்த வன்முறைகள், சூழ்ச்சிகள் காரணமாக, அபூபக்கர் ஒரு சதிப்புரட்சி மூலம் கலீபா பதவிக்கு வந்ததாக அலியின் ஆதரவாளர்கள் கருதினார்கள். இருப்பினும், இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்த அபூபக்கர் காலத்திலும், அதற்குப் பின்னர் ஒரு வருடம் கலீபாவாக இருந்து ஓர் அடிமையால் கொல்லப்பட்ட ஒமார் காலத்திலும், ஆட்சியாளர்களுக்கு அலியின் நிபந்தனையற்ற ஆதரவு இருந்து வந்தது. உண்மையில் அலி தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கலீபாப் பதவிக்காக பொறுமையுடன் காத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

இருப்பினும், ஒமாருக்கு அடுத்ததாக ஒத்மான் கலீபாவாக பதவியேற்றதற்கு பின்னரான காலத்தில் அலியின் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்தனர். அதற்குக் காரணம், ஒத்மானின் எதேச்சாதிகாரம். அவர் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு அரச பதவிகளை கொடுத்து அதிகாரத்தில் வைத்திருந்தார். அத்துடன் முன்பு இறைதூதர் முகமதுவை எதிர்த்துப் போரிட்ட குற்றத்திற்காக நாடுகடத்தப் பட்ட இனக்குழுக்களையும் கூப்பிட்டு சேர்த்துக் கொண்டார். இதனால் குடிமக்கள் கலகம் செய்தனர். கலீபாவின் வீட்டை முற்றுகையிட்ட ஒரு கும்பல் ஒத்மானை பிடித்துக் கொன்று விட்டது. அன்று கலீபா ஒத்மானின் கொடுங்கோன்மைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்கள் மத்தியில் ஷியாக்கள் இருந்தனர்.

இன்றைக்கும் ஷியா- இஸ்லாமிய மத நிறுவனமானது அடிமட்ட மக்கள் சக்தியில் நம்பிக்கை கொண்டு இயங்கி வருகின்றது. அதனால் தான், ஈரானில் 1979 ம் ஆண்டு நடந்த மக்கள் எழுச்சியை இஸ்லாமியப் புரட்சியாக மாற்ற முடிந்தது. அன்று பல்வேறு இடதுசாரிக் கட்சிகள் முன்னெடுத்த பொதுவுடைமைக்கான வர்க்கப் புரட்சியை, ஆயத்துல்லா கொமெய்னி தந்திரமாக சுவீகரித்து மத அடிப்படைவாத இஸ்லாமியப் புரட்சியாக மடைமாற்றியது ஒரு தனிக்கதை. (புரட்சிக்குப் பின்னரும் சில வருட காலம் இடதுசாரிகளும், மதவாதிகளும் கூட்டணி வைத்திருந்தனர்.)

இந்த இடத்தில் சன்னி முஸ்லிம் பிரிவினருக்கும், ஷியா முஸ்லிம் பிரிவினருக்கும் இடையிலான சமூகப் பின்னணியையும் கவனிக்க வேண்டும். சன்னி முஸ்லிம் பிரிவினர் ஒரு வகையில் மேலைத்தேய கலாச்சார மரபை பின்பற்றினார்கள் எனலாம். அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதில் நவீன காலத்து குடியரசு முறையை பின்பற்றினாலும், அரசு, ஆளும் வர்க்கம் போன்றவற்றில் விட்டுக்கொடாத தன்மையை கொண்டிருந்தனர். அதற்கு மாறாக ஷியா முஸ்லிம் பிரிவினர் கீழைத்தேய மரபை பின்பற்றினார்கள் எனலாம். அவர்களைப் பொறுத்தவரையில், அரசியல் தலைமைக்கு தகுதியான நபர் அரச பரம்பரை போன்று வாரிசு முறையில் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். அத்துடன், அரசு, ஆளும் வர்க்கம் போன்றவற்றிற்கு பதிலாக அனைவராலும் அங்கீகரிக்கப் பட்ட ஓர் ஆன்மீகத் தலைவரே, அரசியலுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

அரசியல், மதம் தொடர்பான ஷியாக்களின் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இன்றைய ஈரானில் ஆட்சி நடக்கிறது. அந்நாட்டில் பாராளுமன்ற முறையிலான அரசமைப்புக்கு சமாந்திரமாக மதத் தலைவர்களும் தனியான அரசு நிர்வாகத்தை நடத்துகின்றனர். பொதுத் தேர்தல்கள் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டாலும், உண்மையான அதிகாரம் மதத்தலைவர்கள் கைகளில் இருக்கிறது. அங்கே இரண்டு இராணுவங்கள் உள்ளன. அரசியல் தலைமைக்கு கட்டுப்படும் தேசிய இராணுவம் ஒரு புறமும், ஆயத்துல்லாவுக்கு விசுவாசமான புரட்சிகர இராணுவம் மறுபுறமும் இயங்கி வருகின்றன.

ஈரானிய தேசிய இராணுவத்தில் யாரும் சேரலாம். ஆனால், புரட்சிகர இராணுவத்தில் கொள்கை அடிப்படையில்  விசுவாசமானவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். அண்மையில் ஈராக்கில் கொல்லப்பட்ட ஜெனரல் சுலைமானி, புரட்சிகர இராணுவத்தின் ஒரு பிரிவான அல் குட்ஸ் சிறப்புப் படையணிக்கு தலைமை தாங்கியவர். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உயர் பதவிக்கு வந்தவர். பெரியளவு மதப்பற்று இல்லாவிட்டாலும், நாட்டுப்பற்று மிக்கவராக இருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னர் சிரியா, ஈராக்கில் நடந்த ISIS எதிர்ப்புப் போரில் முக்கிய பங்காற்றியவர். ஜெனரல் சுலைமானியின் இராணுவ தந்திரோபாயம் தான் ISIS பயங்கரவாதம் தோற்கடிக்கப் படக் காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. பூகோள அரசியல் சதுரங்க ஆட்டத்தில், ஈரானிற்கு வரவிருந்த ஆபத்தை சிரியாவிலும், ஈராக்கிலும் எதிர்த்துப் போராடி முறியடித்திருந்தார். உண்மையில் இதுவே அமெரிக்கா அவரைக் குறிவைத்து தீர்த்துக் கட்டக் காரணமாக இருந்திருக்கலாம்.

ஆரம்ப கால இஸ்லாமிய சாம்ராஜ்ய வரலாற்றில் நடந்த உள்நாட்டுப் போர்கள் (அல்லது சகோதர யுத்தங்கள்) மிக முக்கியமானவை.  உண்மையில் கலீபா ஒத்மானின் மரணத்திற்கு பின்னர், இறைதூதர் முகமதுவின் பேரன் அலிக்கு தான் கலீபா பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் டமாஸ்கஸ் ஆளுநர் முவாவியா அலியை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தார். அவருடன் இறைதூதர் முகமதுவின் இளம் விதவை மனைவி ஆயிஷாவும் சேர்ந்து கொண்டார். அவர்களது படையினரும், அலியின் படையினரும் மோதிக் கொண்டமை முதலாவது உள்நாட்டுப் போர் ஆகும். 657 ம் ஆண்டு, உள்நாட்டுப் போரின் இறுதியில் அலி முவாவியாவின் ஆட்களால் படுகொலை செய்யப் பட்டார்.

அடுத்து வந்த சில வருடங்களில் எதிர்பாராத சில திருப்புமுனைகள் ஏற்பட்டன. 669 ம் ஆண்டு அலியின் மூத்த மகன் ஹசன் முவாவியாவின் ஆட்களால் நஞ்சூட்டிக் கொல்லப் பட்டார். அதை அடுத்து இரண்டாவது மகன் ஹுசைன் ஷியா பிரிவினரின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இன்றைக்கும் ஷியா முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஹுசைன் ஒரு மிக முக்கியமான ஆளுமை. பெரும்பாலான ஷியா முஸ்லிம்களின் வீடுகளில் ஹுசைன் படம் மாட்டி வைத்திருப்பார்கள். அண்மையில் ஈரானில் நடந்த ஜெனரல் சுலைமானியின் இறுதிச் சடங்குகளின் போது, "சொர்க்கத்தில் ஹுசைன் சுலைமானியை ஆரத்தழுவும்" படம் பொறித்த போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன.

ஷியா முஸ்லிம்களின் வரலாற்றில் முதல் முறையாக ஹுசைன் தான் செங்கொடி ஏந்திப் போருக்கு சென்றார். எதேச்சாதிகார அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் தம்முயிர் ஈந்த தியாகிகளின் இரத்தத்தில் தோய்ந்த படியால் அது சிவப்பு நிறக் கொடி ஆனது. கொடியின் சிவப்பு நிறமானது வஞ்சகர்களை பழி தீர்க்கும் கடமையை உணர்த்துவதாகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிரான விடுதலைப் போரின் எழுச்சியாகவும் கருதப் பட்டது. இன்றைய ஈராக்கில் உள்ள கர்பலா நகரில், 680ம் ஆண்டு நடந்த போரில் ஹுசைனின் படையினர் சுற்றிவளைக்கப் பட்டனர். இறுதிப்போரில் ஹுசைனும், குடும்பத்தினரும் எதிரிப் படைகளால் கொல்லப் பட்டனர். ஹுசைனின் தலை வெட்டி எடுத்துச் செல்லப் பட்டது.

கர்பலா நகரில் ஹுசைன் படுகொலை செய்யப்பட்ட இடம் இன்றைக்கும் ஷியாக்களின் புனித ஸ்தலமாக பேணிப் பாதுகாக்கப் படுகின்றது. அங்கு ஒரு பெரிய மசூதி உள்ளது. அதற்கு ஒவ்வொரு வருடமும் ஷியாக்கள் புனித யாத்திரை செல்வார்கள். இஸ்லாமியக் கலண்டரில் வரும் அஷூரா நாளன்று ஹுசைன் கொல்லப் பட்ட படியால், வருடந் தோறும் அஷுரா நினைவுதினம் அனுஷ்டிக்கப் படுகின்றது. அன்றைய தினம் ஷியா மத நம்பிக்கையாளர்கள் தமது தலையிலும், மார்பிலும் அடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். சிலநேரம் இரத்தம் வரும் வரை சவுக்கால் அடித்து தம்மைத் தாமே வருத்திக் கொள்வார்கள்.

பிற மதத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியாக்கள் தலையிலும், மார்பிலும் அடித்து அழும் நடைமுறை ஒரு புரியாத புதிராக இருக்கும். பலர் இதனை பைத்தியக்காரத்தனம் என்றும் சொல்வார்கள். ஆனால், ஷியாக்களை பொறுத்தவரையில் இது ஓர் உணர்வுபூர்வமான விடயம். அநேகமாக இஸ்லாத்திற்கு முன்பிருந்த கீழைத்தேய பண்பாட்டில் இருந்து இந்தப் பழக்கம் வந்திருக்கலாம். எது எப்படியோ, ஹுசைனின் தியாக மரணத்தை நினைத்து ஒப்பாரி வைக்கும் சம்பிரதாயம், அவர்களது மத நம்பிக்கையாக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.

கர்பலாவில் பறந்த ஹுசைனின் செங்கொடி இறக்கப் பட்டு ஆயிரத்து நானூறு வருடங்களுக்குப் பின்னர், இப்போது தான் மீண்டும் அதே செங்கொடி கோம் நகரில் ஏற்றப் பட்டுள்ளது. அந்தக் கொடியில் "ஹுசைன் சிந்திய இரத்தத்திற்கு பழி தீர்ப்பவர்களுக்காக..." என்று எழுதப் பட்டுள்ளது.  இந்தச் சம்பவமானது இனி வருங்காலத்தில் உக்கிரமான போர் நடக்கப் போவதற்கான அறிகுறி. அன்றைய ஈராக்கில் ஈராக்கில் ஷியாக்களின் இராணுவத் தளபதியும், பன்னிரு இமாம்களில் ஒருவருமான ஹுசைன் எதிரிகளால் வஞ்சகமான முறையில் தீர்த்துக் கட்டப் பட்டார். வரலாறு திரும்புகிறது என்பது மாதிரி, இன்று ஜெனரல் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் தீர்த்துக் கட்டப் பட்டார். இந்த ஒற்றுமையானது வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், ஷியா மத நம்பிக்கையாளர்களுக்கு இது உணர்ச்சியைத் தூண்டும் அளவுக்கு குறிப்பிடத்தக்க விடயம்.

தெஹ்ரானில் நடந்த ஜெனரல் சுலைமானியின் இறுதிச் சடங்கில் பல கோடிக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமியப் புரட்சி நடந்து இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர், இந்தளவு அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரண்டது இதுவே முதல் தடவை. அத்துடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மக்கள், அஷுரா தினம் அனுஷ்டிப்பது போன்று தலையிலும், மார்பிலும் அடித்து ஒப்பாரி வைத்தனர். அத்துடன், ஈரான், ஈராக், லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் அல்லது ஆன்மீகத் தலைவர்கள், அமெரிக்காவுக்கு எதிரான பழி தீர்க்கும் போருக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளனர். அதன் அர்த்தம் ஷியா முஸ்லிம்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அமெரிக்காவுக்கு எதிரான போரை தமது நீதியான மதக் கடமையாகக் கருத வேண்டும். அதை அவர்கள் ஹுசைனின் செங்கொடி ஏற்றப்பட்ட மறுகணமே புரிந்து கொண்டு விட்டனர்.

கோம் நகரில் உள்ள மஹ்தி மசூதி என அழைக்கப்படும் ஒரு புனித ஸ்தலத்தில் செங்கொடி ஏற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்துக்கள் கலிகாலத்தில் வரும் கல்கி அவதாரத்தை நம்புவது மாதிரி, முஸ்லிம்கள் (கிறிஸ்தவர்களும் கூட) இனிவரப்போகும் ஊழிக் காலம் பற்றிய நம்பிக்கையை கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் கடவுளின் பிரதிநிதி பூமியில் தோன்றுவார் என்றும் நியாயத் தீர்ப்பு வழங்குவார் என்றும் நம்புகின்றனர். இது பற்றிய விவரணைகள் பைபிள், குரான் இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தான் உள்ளன.

ஷியா முஸ்லிம்களுக்கென தனித்துவமான நம்பிக்கை உள்ளது. அவர்கள் இறைதூதர் முகமதுவுக்கு அடுத்ததாக பன்னிரண்டு இமாம்களை தமது வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த மதத்தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாரிசு உரிமையின் படி மதத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். ஆனால், 868ம் ஆண்டு பிறந்த  பன்னிரண்டாவது இமாம் முஹம்மத் ஹசன் அலி இயற்கை மரணம் அடையவில்லை என்றும், அவர் திடீரென மறைந்து விட்டார் என்றும் சொல்லப் படுகின்றது.

பூமியில் போரும், குழப்பங்களும் அதிகரிக்கும் காலத்தில் பன்னிரண்டாவது இமாமின் வருகை இடம்பெறும் என்று ஷியாக்கள் நம்புகின்றனர். இது இயேசு வருகிறார் எனும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை பெரிதும் ஒத்துள்ளது. பன்னிரண்டாவது இமாம் தோன்றும் காலத்தில் நீதி நிலைநாட்டப் பட்டு சமாதானம் ஏற்படும் என்பது ஷியாக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் அவர் "இறைவனால் வழிநடத்தப் படுபவர்" என்ற அர்த்தத்தில் முஹமத் அல் மஹ்தி என்ற பெயராலும் அழைக்கப் படுகின்றார்.

ஈரானில் மஹ்தியின் வருகைக்காக கட்டப்பட்ட ஜம்கரன் மசூதியின் உச்சியில் ஹுசைனின் செங்கொடி பறக்கின்றது. இந்தத் தகவலை நாங்கள் ஒரு சாதாரண விடயமாக கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விட முடியாது. உலகில் பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் இந்த சம்பவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இது வேண்டுமென்றே தவிர்க்கப் பட்ட விடயமாக இருக்கலாம். ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்கு அடுத்த நாள் ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதி அமெரிக்காவுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார்: "இந்தப் போரை நீங்கள் தொடங்கி இருக்கலாம். ஆனால் நாங்கள் தான் அதை முடித்து வைக்கப் போகிறோம்!"

- கலையரசன் -   
7-1-2020

இந்தக் கட்டுரை ஜூனியர் விகடனில் பிரசுரமானது:
ஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்?

Tuesday, May 15, 2018

ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்!

ஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச மட்டத்தில் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ள இந்த அறிவிப்பு, ஒரு சாமானிய இந்தியக் குடிமகன் மீதும் தாக்கத்தை உண்டாக்க வல்லது. அத்துடன் மத்திய கிழக்கில் வரப்போகும் போர்களுக்கு கட்டியம் கூறுவதாகவும் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அதிக அக்கறை செலுத்தாத சர்வதேச அரசியல் நிலவரம், எந்தளவு தூரம் நமது தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி படைத்தது என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.

டிரம்பின் திடீர் அறிவிப்புக்கு முதலில் எதிர்வினையாற்றியது பங்குச்சந்தை வர்த்தகம் தான். இதனால் எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் விளைவாக பெட்ரோல் மட்டுமல்லாது அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப் படவுள்ளன. ஏனெனில், 2015 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கப் பட்ட பின்னர், ஆசிய நாடுகள் தான் ஈரானிய எண்ணையை வாங்கி வந்தன.

இலங்கையில் இரவோடிரவாக எரிபொருட்களின் விலைகளை உயர்த்தி விட்டார்கள். அமைச்சர் மங்கள சமரவீர, டெய்லி மிரர் பத்திரிகை பெட்டியில், விலை உயர்வுக்கு ஈரான் பிரச்சினையை காரணமாகக் காட்டி இருந்தார். இருப்பினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும், சர்வதேச பிரச்சினைகளுக்கும் தொடர்பிருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில், முதலாளிய "அரசியல் ஆய்வாளர்கள்" மிகவும் அவதானமாக உள்ளனர். அவர்கள் "மைத்திரி அரசா, மகிந்த அரசா சிறந்தது?" என்று பட்டிமன்றம் நடத்தி மக்களின் கவனத்தை திசைதிருப்பினார்கள்.

உண்மையில், ஈரானுடனான அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் தனியே அமெரிக்காவுடன் மட்டும் கைச்சாத்திடப் படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து அணுவாயுத வல்லரசு நாடுகளுடன், ஜெர்மனியும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருந்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்,ஈரானின் பரம வைரிகளான இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் ஆரம்பத்தில் இருந்தே ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தன. அன்றிருந்த ஒபாமா நிர்வாகம், கடும்போக்காளர்களை ஓரங் கட்டி விட்டு ஒப்பந்தம் போட்டது.

டிரம்பின் ஒருதலைப்பட்சமான விலகலை கடுமையாக ஆட்சேபித்துள்ள ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், முடிவை மறுபரிசீலனைக்கு எடுக்குமாறும், புதிய ஒப்பந்தம் போடுமாறும் கேட்டு வருகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ் எதிர்ப்பதற்கு காரணம், அந்நாடுகளின் வர்த்தக நலன்கள் என்று அமெரிக்க ஆதரவாளர்கள் வாதாடலாம். உண்மை தான். யாருக்கு தான் நலன்கள் இல்லை? அமெரிக்கா பொதுநலன் கருதி, உலகை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் செயற்படுவதாக சொன்னால், அது நகைப்புக்குரியது.

முன்பு ஈராக் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்து, பின்னர் ஒரு இனப்படுகொலை யுத்தம் நடத்தி, ஈராக் என்னைக் கிணறுகள் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றிய வரலாற்றை உலகம் மறந்து விடவில்லை. வரலாறு திரும்புகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்து பலவீனப் படுத்தி விட்டு, இறுதியில் படையெடுத்து ஈரானின் எண்ணை வளத்தை முழுமையாகக் கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டம்.

ஒப்பந்த விலகலைத் தொடர்ந்து, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் படுவதாக அறிவித்துள்ள டிரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறுவதற்கு மூன்று மாத தவணை கொடுத்துள்ளது. இதனால், எண்ணை ஏற்றுமதி மட்டுமல்லாது, அலுமினியம், இரும்பு, நிலக்கரி தொடர்பான வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப் படும். பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களுக்கான நிறுவனங்களுக்கு மட்டும் 180 நாட்கள் தவணை கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானுடனான அமெரிக்க வர்த்தகம் மிகவும் அரிது என்பதால், டிரம்பின் முடிவால் அமெரிக்க வர்த்தகர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை.

ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஈரானுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்புகளை பேணி வருகின்றன. அதனால், அமெரிக்காவின் அடாவடித்தனங்களால் ஐரோப்பாவும் பாதிக்கப் படுகின்றது என்பது நிச்சயம். உலக சந்தையில் அமெரிக்காவுடன் போட்டி போடுவது எந்தளவு கடினமானது என்பது ஐரோப்பிய முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்காவின் நிழல் கூடப் படாத ஈரானில், ஏராளமான வணிக வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன. ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள், அந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. இது அவர்களுக்கு கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பம். அதை இலகுவில் இழக்க விரும்ப மாட்டார்கள்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா ஈராக் போரைத் தொடர்ந்து, ஈரான் மீது போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஏற்கனவே, அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானை சுற்றி வளைத்திருந்தன. இருப்பினும், அமெரிக்கா ஆழமறியாமல் காலை விட விரும்பவில்லை. அதனால், அரை மனதுடன் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதன் விளைவு தான் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம். இதனால் ஈரான் மீண்டும் சுதந்திரமாக சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடிந்தது.

தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி முடிவுக்குப் பின்னால் இஸ்ரேலின் நெருக்குவாரம் உள்ளது. சிரியாப் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஈரான் இரகசியமாக அணுகுண்டு தயாரிப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு அறிவித்து வந்தார். அந்த நேரத்தில், அதை வெறும் இஸ்ரேலிய பிரச்சாரமாகக் கருதி, யாரும் பொருட்படுத்தவில்லை.

ஈரானில் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் சரியாக நடைமுறைப் படுத்தப் படுவதை கண்காணித்துக் கொண்டிருக்கும் IAEA என்ற சர்வதேச அணு சக்தி முகாமைத்துவ நிறுவனம் அதை மறுத்துள்ளது. ஏற்கனவே ஈரானிய அணு உலைகளில் இருந்த யுரேனியம் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப் பட்டு விட்டது. ஐ.நா. மன்றம் வரை சென்று படம் காட்டி பயமுறுத்திய, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவின் குற்றச்சாட்டு எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு அவதூறுப் பிரச்சாரம்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டை உலகில் யாரும் நம்பாவிட்டாலும், தான் அதை நம்புவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது, ஈரான் இரகசியமாக அணுவாயுதம் வைத்திருக்கிறது என்ற ஒரேயொரு காரணத்தை சொல்லித் தான், ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப் பட்டுள்ளது. இது முன்பு சதாம் ஹுசைன் பேரழிவு தரும் ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய் கூறி ஈராக் மீது படையெடுத்த வரலாற்றை நினைவுபடுத்துகிறது. இது மீண்டும் மத்திய கிழக்கின் மீது போர் மேகங்கள் சூளுகின்றன என்பதை உணர்த்துகிறது.

அமெரிக்காவில் டிரம்ப் அறிவித்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு ஈரானிய படையினர் வசமிருந்த ஆயுதக் கிடங்கு தாக்கப் பட்டதாகவும், சில ஈரானியரும் கொல்லப் பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், ஈரானிய அரசு அதை மறுத்திருந்தது. சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை அதுவே முதல் தடவை அல்ல. ஆகையினால், இந்தத் தடவையாவது இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரானிய அரசியல் களத்தில் விவாதிக்கப் பட்டது.

கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த சிரியாவின் உள்நாட்டுப் போர் தற்போது பிராந்தியப் போராக மாறியுள்ளது. ஒருவேளை இது மூன்றாம் உலகப் போராகவும் இருக்கலாம். சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் இருந்தே, அது ஈரானுக்கு வைக்கப் பட்டுள்ள குறி என்பது பலருக்கும் தெரிந்திருந்தது. குறிப்பாக, ஈரானிய இராணுவ ஆலோசகர்களும், லெபனானிய ஹிஸ்புல்லா தொண்டர்களும், சிரியாப் போரில் தலையிடுவதற்கு அதுவே காரணமாக இருந்தது.

போரின் முடிவில் சிரியாவை ஆளும் ஆசாத் அரசு கவிழும் என்றும், ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் வெற்றிவாகை சூடுவார்கள் என்றும், இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான விடயங்கள் நடந்தேறின. ரஷ்யாவின் வருகை ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், கிளர்ச்சிக் குழுக்கள் தோற்கடிக்கப் பட்டு, இறுதியில் ஆசாத் அரசு வெற்றி வாகை சூடியது.

இஸ்ரேலின் அயல்நாடுகளில் சிரியா மட்டுமே இதுவரையில் எந்தவித சமரசமும் செய்யாமல் எதிரி நாடாக உள்ளது. அத்துடன், அது லெபனான் மீதும் செல்வாக்கு செலுத்தி வந்தது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பதும் சிரியா மட்டும் தான். இதனால், சிரியாப் பிரச்சினையை ஒரு வழியாக முடித்து விட்டால், ஈரானை தாக்குவது இலகுவாகி விடும் என்று இஸ்ரேல் கணக்குப் போட்டிருந்தது.

அமெரிக்காவால் எதிரி நாடுகளாக நடத்தப் படும் ஈரான் போன்ற நாடுகள், கடந்த கால உலக வரலாற்றில் இருந்து படிப்பினைகளை பெற்றுள்ளன. ஈராக், லிபியா என்று ஒவ்வொன்றாக தீர்த்துக் கட்டிய அமெரிக்கா, சிரியாவையும் பிடித்து விட்டால் எஞ்சியிருப்பது ஈரான் மட்டுமே. ஆகையினால், தனது சொந்த நலன் கருதியாவது, ஈரான் சிரியாப் போரில் தலையிட வேண்டி இருந்தது. ஆசாத் அரசை வெல்ல வைப்பதன் மூலம், சிரியாவை தொடர்ந்தும் ஈரானின் பாதுகாப்புக் கவசமாக வைத்திருக்கலாம்.

அதே நேரம், சிரியாவின் உள்நாட்டுப் போரானது, "ஜென்ம விரோதிகளான" இஸ்ரேலையும், ஈரானையும் அருகருகே கொண்டு வந்து விட்டுள்ளது. தனது வடக்கு எல்லையில் ஈரானியப் படைகள் நிலை கொண்டிருப்பதால், இஸ்ரேலுக்கு எந்நேரமும் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கும். சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், தனது பலமடைந்துள்ள சிரியாவின் அரச இராணுவம், எதிர்காலத்தில் கோலான் குன்றுப் பகுதியை மீட்கும் யுத்தத்தை தொடங்கலாம். அதை ஈரானும் நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது. அவ்வாறு எல்லைப்போர் மூண்டால், வடக்கே லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தலாம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள, "கடைசி ஐரோப்பிய காலனியான" இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளை அடிபணிய வைக்கும் திட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. அயல்நாடுகளான ஜோர்டான், எகிப்து போன்றவற்றை போரில் தோற்கடித்து நட்பு நாடுகளாக்கி விட்டார்கள். இதுவரை காலமும் கள்ள உறவு வைத்திருந்த சவூதி அரேபியா, தற்போது பகிரங்கமாகவே இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுகிறது. இவை அனைத்தும் சன்னி- இஸ்லாமிய பிரிவை பின்பற்றும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது.

அதற்கு மாறாக, ஷியா- இஸ்லாமிய பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள லெபனான், சிரியா ஆகிய நாடுகள் இன்று வரைக்கும் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டுகின்றன. அதற்கு மூல காரணம், ஷியாக்களின் கோட்டையாக கருதப்படும், பிராந்திய வல்லரசாக வளர்ந்துள்ள ஈரான். ஆகவே, பொருளாதாரத் தடைகள், யுத்தங்கள் மூலம் ஈரானை பலவீனப் படுத்தி, அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சியாளர்களை கொண்டு வருவதற்கான காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை கேள்வி கேட்கும் சக்தி படைத்த நாடுகள் எதுவும் இருக்கவில்லை. ஐரோப்பா மட்டுமல்லாது, ரஷ்யா, சீனா கூட, விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அனுசரித்து போன காலம் ஒன்றிருந்தது. அத்தகைய காலகட்டத்தில், இஸ்ரேலுக்கு ஈரானை ஒடுக்குவது இலகுவாக இருந்திருக்கும். எதிர்பாராத விதமாக, சிரியாவின் உள்நாட்டுப் போரில் ரஷ்யா தலையிட்ட பின்னர் நிலைமை சிக்கலாகியுள்ளது.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர் மூண்டால், ரஷ்யா எந்தப் பக்கத்தை ஆதரிக்கும்? உண்மையில், இது ரஷ்யாவுக்கும் ஒரு நெருக்கடியான நிலைமை. இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன ஜார் மன்னன் என அழைக்கப் படும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் கோஷத்தின் கீழ் தான் சிரியாப் போரில் ஈடுபட்டார். இது, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் வெளிவிவகார கொள்கையாக இருந்தது.

இருப்பினும், இஸ்ரேலில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ரஷ்யர்களை புட்டின் புறக்கணிக்க முடியாது. இலட்சக்கணக்கான ரஷ்ய யூதர்கள் மட்டுமல்லாது, பொருளாதார காரணங்களுக்காக குடியேறிய ரஷ்யர்களும் இஸ்ரேலில் உள்ளனர். இஸ்ரேலிய தேர்தல்களில் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு பலமான வாக்கு வங்கியாக உள்ளனர். பிரதமர் நெத்தன்யாகு இஸ்ரேலிய ரஷ்யர்களை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருகின்றார். அதாவது, ரஷ்யா சென்று புட்டினை சந்தித்து பேசிய பொழுது, மேற்குறிப்பிட்ட பிரச்சினையை சுட்டிக் காட்ட மறக்கவில்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கை, ஈரானை ஆளும் ஆயத்துலாக்களின் கரங்களை பலப்படுத்தும். அமெரிக்காவுக்கு ஆதரவான லிபரல் முகாமை பலவீனப் படுத்தும். அமெரிக்காவை நம்ப முடியாது என்று கூறி வரும் கடும்போக்காளர்களின் கரம் உயரும். "அமெரிக்கர்கள் அயோக்கியர்கள் என்றால், ஐரோப்பியர்கள் கோழைகள்" என்று ஈரானில் பேசிக் கொள்கின்றனர்.

ஈரான் இன்று வரையில், ஷியா இஸ்லாமிய மத அடிப்படைவாத கருத்தியலை அரச கொள்கையாக கொண்டுள்ள போதிலும், சவூதி அரேபியா போன்ற "இஸ்லாமிய" நாடுகளே அதன் பிரதானமான எதிரிகளாக உள்ளன. அதனால், ஈரான் தவிர்க்கவியலாது, "கிறிஸ்தவ" ரஷ்யாவுடனும், "நாஸ்திக" சீனாவுடனும் நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டியுள்ளது. அரசியல்- பொருளாதாரக் காரணங்களுக்காக உருவான இந்தக் கூட்டணி, மதத்திற்கு அப்பாலும் கவனிக்கப் பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன என்பதை நிரூபிக்கின்றது.

- கலையரசன் 14-05-2018 ******

Saturday, January 20, 2018

பல்லவர்கள் ஈரானில் இருந்து வந்த வெள்ளையர்கள், தமிழர்கள் அல்ல!


"பல்லவன்" (Pahlavan) என்றால் பண்டைய ஈரானிய மொழியில் நாயகர்கள் என்று அர்த்தம். தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், உண்மையில் ஈரானில் இருந்து வந்த வெள்ளையினத்தவரே! தமிழர் என்பது இனக்கலப்படைந்த சமுதாயம் என்பதற்கு மேலும் ஒரு சான்று.

கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் என்ற "சரித்திர" நாவலில் பல்லவ மன்னர்களை தமிழர்களாக சித்தரித்து எழுதி இருப்பார். இன்றைக்கும் பெருமளவில் விற்பனையாகும் கல்கியின் நாவல்கள், ஒரு வகையில் தமிழினவாத அரசியலை ஊக்குவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. 

கல்கியின் எழுத்துக்கள் ஏற்படுத்திய தாக்கத்தால், "பல்லவர்கள் தமிழர்களே" என்று நம்புவோர் பலருண்டு. அவ்வாறான கற்பிதத்தை உருவாக்குவதில், ஒரு பிராமணரான கல்கிக்கு அரசியல் நோக்கங்கள் இருந்திருக்கலாம். இன்றைய தமிழகப் பிராமணர்களில் ஒரு பிரிவினர் ஈரானில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். அந்த உண்மையை மூடி மறைத்து, பிராமணர்களும் தமிழர்களே என்று உறுதிப் படுத்துவதற்கு கல்கி போன்ற அறிவுஜீவிகள் பாடுபட்டுள்ளனர்.

பல்லவர்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டாலும், அவர்களது ராஜ்ஜியத்தின் உத்தியோகபூர்வ மொழி சமஸ்கிருதமாக இருந்தது. பல்லவ மன்னர்கள் தமது பெயர்களுக்குப் பின்னால் சூட்டிக் கொண்ட "வர்மன்" என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் அர்த்தம் பாதுகாவலன். 

வர்மன் என்ற பெயரைக் கண்டதும், பலர் அறியாமை காரணமாக, "பல்லவர்கள் தமிழ் மன்னர்கள்" என்று நினைக்கிறார்கள். வர்மன் என்ற பெயர் கொண்டிருந்த படியால், கம்போடியாவை ஆண்ட மன்னர்களும் தமிழர்களே என்று தவறாக நினைப்பவர்கள் பலருண்டு. இது ஒரு தப்பெண்ணம். அதில் எந்த உண்மையும் இல்லை.  அந்த கம்போடிய அரச பரம்பரையினரும் பல்லவர்களில் இருந்து வந்தவர்களே. ஆனால், தமிழர்கள் அல்ல.

யார் இந்தப் பல்லவர்கள்? எவ்வாறு தமிழகத்திற்கு வந்தார்கள்? தமிழர் என்றால் யார்? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும். தமிழில் பல்லவர்கள் பற்றிய வரலாற்று நூல்களை எழுதிய சரித்திர ஆசியர்கள் "பல்லவர்களின் பூர்வீகம் பற்றி எதுவும் தெரியவில்லை" என்று எழுதியுள்ளனர். அது உண்மை அல்ல. அவர்களுக்கு பல்லவர்கள் யார் என்பது தெரியும். அவர்களது பூர்வீகம் ஈரான் என்பதும் தெரிந்த விடயம் தான்.ஆனால் சொல்லத் தயங்குகிறார்கள்.

அந்த உண்மையை சொல்ல விடாமல் சரித்திர ஆசிரியர்களை தடுப்பது எது? இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகப் படுத்தப் பட்ட தமிழ்த் தேசியக் கோட்பாடு அதைக் கூற விடாமல் தடுக்கிறது. அதற்கு முன்னர் தமிழர் என்ற இன உணர்வு யாரிடமும் இருக்கவில்லை. "தமிழர்கள் ஒரே மாதிரியான, கலப்படையாத, தூய்மையான இனம்" என்பது ஒரு கற்பிதம். உலகில் உள்ள எல்லா தேசியவாதிகளும், இது போன்ற கற்பனையான வரலாற்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். 

பல்லவர்களின் வரலாறு என்ன?

பண்டைய ஈரானை ஆண்ட அரச வம்சங்களில் ஒன்று "பஹ்லவி". இந்தியாவில் அவர்களை பல்லவன் என்று அழைத்தனர். பஹ்லவி அரச வம்சத்தினர் பார்த்திய இனத்தை சேர்ந்தவர்கள். வட மேற்கு ஈரானில் வாழ்ந்த பார்த்தியர்கள், ஒரு காலத்தில் ஈரானில் பெரியதொரு சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார்கள். 

ஈரானில் இன்னொரு மூலையில் வாழ்ந்த பார்சியர்கள் என்பது வேறு இனம். ஆனால், இனக்கலப்பு காரணமாக காலப்போக்கில் பார்த்திய, பார்சிய மொழிகள் ஒன்றாகி, பின்னர் அது அரபிச் சொற்களை உள்வாங்கி நவீன பார்சி மொழி உருவானது. இருப்பினும் அது ஒரு ஆரிய மொழி என்பதால், சமஸ்கிருதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இதனால், ஈரானிய பார்த்திய வம்சாவளியினரான பல்லவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்த பின்னர் சமஸ்கிருதம் பேசியதில் ஆச்சரியப் பட எதுவும் இல்லை.

ஈரானியர்களும், இந்திய ஆரியர்களும் பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்து சென்ற கிளைகள் தான். இன்றைக்கும் ஈரான் என்ற பெயரின் பொருள் "ஆரியர்களின் நாடு" என்பது தான். இந்திய - ஈரானிய ஆரியர்களின் மூதாதையர் குறைந்தது பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் கவ்காசியா அல்லது சைபீரியாவில் (இன்று ரஷ்யாவுக்கு சொந்தமானது) இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். 

காலப்போக்கில் அவர்களுக்குள் பல மொழிகள், இனங்கள் தோன்றியுள்ளன. இவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டாலும், அந்நிய படையெடுப்புகளால் புலம்பெயர்ந்து புதிய இனமாகவும் மாறியுள்ளன. ஈரானிலிருந்து தென்னிந்தியா வரையிலான தொடர்ச்சியான இடப்பெயர்ச்சி காரணமாக பல்லவர்கள் இந்தியத் தன்மை கொண்ட புதிய இனமாக உருமாறி இருந்தனர்.

உலகை வெல்ல நினைத்த கிரேக்க அலெக்சாண்டர் இந்தியா வரையில் வந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், அலெக்சாண்டர் மறைவுக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரம் வரலாற்று நூல்களில் காண்பதரிது. குறிப்பாக தமிழில் உள்ள சரித்திர நூல்களில் அதைப் பற்றி ஒரு குறிப்புக் கூட காணக் கிடைக்காது. சிலநேரம், வேண்டுமென்றே இப்படியான இருட்டடிப்புகள் செய்யப் படுவதாக தோன்றுகிறது.

சங்ககால தமிழ் இலக்கியத்தில் கிரேக்கர்களை யவனர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், யவனர்கள் கடலோடிகளாக கப்பலில் வந்த வணிகர்கள் என்று தான் பலர் கருதுகிறார்கள். அது ஒரு பக்கச் சார்பான உண்மை மட்டுமே. அவர்களுக்கு மறுபக்க வரலாறு தெரியாது. இன்றைய ஆப்கானிஸ்தானில் இருந்து தரைவழியாக வந்து தமிழ்நாட்டில் குடியேறிய யவனர்களும் இருந்தனர். அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அலெக்சாண்டர் மறைவுக்குப் பின்னர் அவர் கைப்பற்றி இருந்த அகண்ட நிலப்பரப்பு பல துண்டுகளாக பிரிக்கப் பட்டது. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகள் ஒரு குடையின் கீழ் தனியான ராஜ்ஜியமானது. அதற்கு அலெக்சாண்டரின் முன்னாள் தளபதிகளில் ஒருவர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். 

பக்டீரியா என அழைக்கப்பட்ட அந்த ராஜ்ஜியம், "சத்ரபதிகள்" என்ற கிரேக்க மொழி பேசும் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள் உள்நாட்டு (இந்திய) கலாச்சாரங்களை பின்பற்றினார்கள். பௌத்த மதத்தை தழுவிக் கொண்டனர். கிரேக்க, ஈரானிய, இந்திய கலாச்சாரங்கள் ஒன்று கலந்து, தனித்துவமான புதியதொரு கலாச்சாரம் உண்டானது. அது இன்று வரைக்கும் நாம் காணும் "இந்திய கலாச்சாரத்தின்" ஒரு பகுதியாக உள்ளது.

இதற்கிடையே அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் தலையெடுத்த ஈரானிய பார்த்தியர்களும் (பல்லவர்கள்), கிரேக்க சத்ரபதிகளும் போரிட்டுக் கொண்டனர். பண்டைய காலத்து யுத்தங்கள் எதுவுமே இனம், மொழி சார்ந்து நடக்கவில்லை. யாராவதொரு மன்னரின் ராஜ்ஜிய விஸ்தரிப்புக்காக போர்கள் நடந்திருக்கும். அந்த வகையில் நாம் இதை கிரேக்க - ஈரானிய போராக கருத முடியாது. அந்தக் காலத்தில் வாழ்ந்த யாருக்கும் மொழி, இன உணர்வுகள் இருக்கவில்லை.

கிரேக்க, பார்த்திய ராஜ்ஜியங்களுக்கு வடக்கில் இருந்து ஆபத்து வந்தது. ஷாகா என்ற இன்னொரு ஆரிய இனம், வடக்கே இருந்து படையெடுத்து வந்தது. இன்றைய உஸ்பெகிஸ்தான் பிராந்தியத்தில் இருந்து வந்த ஷாகா இனத்தவர்கள், ஈரானில் பெரும்பகுதியை ஆக்கிரமித்தனர். அதுவரை காலமும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த பார்த்தியரும், கிரேக்கரும் பின்வாங்கி இந்தியாவுக்கு சென்றனர். இன்றைய இந்தியாவின் பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் புதிய ராசதானிகளை அமைத்துக் கொண்டனர்.

இதே நேரம், சீனாவில் சீனப் பெருஞ்சுவர் கட்டப் பட்டுக் கொண்டிருந்தது. அது மேற்கு நோக்கி விரிவாக்கப் பட்டது. அந்தப் பிரதேசத்தில் அரசாண்ட யுயே சி என்ற இனம், சீனர்களால் தெற்கு நோக்கி அடித்து விரட்டப் பட்டது. சீனர்களால் யுயே சி அல்லது இந்தியர்களால் குஷான் என அழைக்கப் பட்ட இனத்தவர்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிராந்தியத்தில் புதிய ராஜ்ஜியத்தை அமைத்தனர். இதனால் அங்கு வாழ்ந்த ஷாகா இனத்தவர் தெற்கு நோக்கி புலம்பெயர்ந்தனர்.

கி. பி. முதலாம் நூற்றாண்டில், மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் பகுதியில் உருவான பல்லவ ராஜ்ஜியத்தில், கிரேக்க, பார்த்திய, ஷாகா ஆகிய ஆரிய இனத்தவர்கள் ஒன்று கலந்து, புதியதொரு வெள்ளையினம் உருவாகி இருந்தது. அவர்களே தமிழகத்து பல்லவர்களின் மூதாதையர். குஜராத்தில் கால்பதித்திருந்த பல்லவர்கள்,  கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் தென்னிந்தியா நோக்கி படையெடுத்து சென்றனர். வட தமிழகத்தில் உள்ள தொண்டை மண்டலத்தை கைப்பற்றி, அங்கு மாமல்லபுரத்தை தலைநகராகக் கொண்ட பல்லவ ராஜ்ஜியத்தை அமைத்தனர்.

மாமல்லபுரத்தை தலைநகராகக் கொண்ட பல்லவ நாட்டை ஆண்ட மன்னர்களும், படையினரும் தமிழர்கள் அல்ல. அவர்கள் இனத்தால் வெள்ளையர்கள். அதாவது, பார்த்திய, ஷாகா, கிரேக்கர்களும் கலந்த வெள்ளையினம். அவர்கள் எப்படி தமிழர் ஆனார்கள்? பிற்காலத்தில், அந்நிய படையெடுப்புகள் காரணமாக பல்லவ ராஜ்ஜியம் அழிந்து போனாலும், பல்லவர்களின் வழித்தோன்றல்கள் தமிழ்நாட்டில் தங்கி விட்டிருப்பார்கள். அவர்கள் காலப்போக்கில் தமிழ் பேசி தமிழர்களாக மாறி விட்டனர்.

மேலே குறிப்பிடப் பட்ட வரலாற்று நிகழ்வுகளும், இனக்கலப்புகளும் நடப்பதற்கு ஐநூறு வருடங்கள் எடுத்திருக்கலாம். நமது கால அளவீட்டின் படி கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைபட்ட காலத்திற்குள் நடந்த மாற்றங்கள் இவை. அந்தக் காலங்களில் யார் என்ன மொழி பேசுகிறார்கள் என்றெல்லாம் யாரும் கவலைப் படவில்லை. "இனம்" என்ற கருதுகோள் அப்போது இருக்கவில்லை. அது காலனிய காலத்தில் உருவான நவீன அரசியல் கோட்பாடு.

குஜராத்தில் ராஜ்ஜியம் அமைத்த பல்லவர்களுக்கு, கிழக்கே இருந்து ஆபத்து வந்தது. அப்போது வட இந்தியாவில் குப்தர்களின் சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்தது. நீண்டதொரு போருக்குப் பின்னர், குப்தர்கள் குஜராத் பல்லவர்களின் ராஜ்ஜியத்தை கைப்பற்றினார்கள். கி.பி. 375 ம் ஆண்டு, குப்தர்களின் சாம்ராஜ்யம் தெற்கு நோக்கி விரிவடைந்தது. தொண்டை மண்டலத்தில் இருந்த பல்லவ நாடும் குப்தர்களிடம் வீழ்ந்தது. அப்போது பல்லவ அரச வம்சத்தினர் (மட்டும்) கப்பல்களில் தப்பிச் சென்று, தூர கிழக்காசிய நாடுகளை சென்றடைந்தனர். அவர்களே கம்போடியாவில் புதியதொரு அரச வம்சத்தை உருவாக்கினார்கள்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், குப்த சாம்ராஜ்யம் பலவீனமடைந்த காலத்தில், பல்லவர்கள் மீண்டும் தலையெடுத்தனர். காஞ்சிபுரத்தில் மீண்டும் ஒரு பல்லவ நாடு தோன்றியது. த‌மிழ‌க‌ வ‌ர‌லாற்றில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து, ஏழாம் நூற்றாண்டு வரையில் "பல்லவர்களின் பொற்காலம்" எனலாம். அந்தக் காலத்தில், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற தூர கிழக்காசிய நாடுகளில் தோன்றிய பல்லவர்களின் ராஜ்ஜியங்களுக்கும், தமிழகத்து பல்லவ நாட்டிற்கும் இடையில் கப்பல் போக்குவரத்து இருந்தது. அதன் விளைவாக சர்வதேச வாணிபம் வளர்ச்சி கண்டது.

தமிழகத்து பல்லவ நாட்டின் ஆட்சியாளர்களில் சிலர் அப்போதும் கிரேக்க மொழி பேசுவோராக இருந்திருக்கலாம். ஆகையினால், ஐரோப்பிய கிரேக்கர்களுடனும் வணிகத் தொடர்பு ஏற்பட்டது. உண்மையில், இன்றைய சர்வதேச வணிகம் எப்படி நடக்கிறதோ, அப்படித் தான் அன்றைய வணிகப் போக்குவரத்தும் அமைந்திருந்தது. அதாவது, ஐரோப்பிய கிரேக்கர்களின் வணிகக் கப்பல்கள் தமிழ்நாட்டு சந்தையில் தமது பொருட்களை விற்றனர், அல்லது வாங்கினர்.

அதே மாதிரி தூர கிழக்காசிய வணிகர்ளும் தமிழகத்திற்கு வந்து சென்றனர். இந்த வணிகத் தொடர்பு பண வருமானத்தை மட்டும் கொண்டு வரவில்லை. அறிவியலும் வளர்ந்திருக்கும். அதே நேரம், அந்நிய நாடுகளை சேர்ந்தவர்கள் தமிழர்களுடன் ஒன்று கலந்திருப்பார்கள். உலகில் இனக் கலப்பில்லாத எந்த இனமும் நாகரிகம் அடைந்ததாக வரலாறு இல்லை. ஆகவே, தமிழர்களும் இனக்கலப்பு காரணமாகத் தான் நாகரிக வளர்ச்சி கண்டனர். அது இயற்கையானது.


பிற்குறிப்பு: 
- இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஆதாரங்களை பின்வரும் நூலில் இருந்து எடுத்துள்ளேன்: Early Kingdoms of the Indonesian Archipelago and Malay Peninsula, Paul Michel Munoz

- மேலே உள்ள படமும் அந்த நூலில் இருந்து எடுக்கப் பட்டதே.



இதனுடன் தொடர்புடைய முனைய பதிவு:

Friday, April 25, 2014

ஆப்கான் அகதிகள் - ஈரானில் இன்னலுறும் தீண்டத்தகாதவர்கள்

தமிழ்நாட்டு முகாம்களில் வாழும், ஈழத் தமிழ் அகதிகளின் துயரக் கதைகளை பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். ஈரானில் தஞ்சம் கோரியுள்ள, ஆப்கானிஸ்தான் அகதிகளின் நிலைமையும், அதற்கு சற்றும் குறைந்தது அல்ல. ஈரானில் கட்டிடத் தொழில் செய்யும் ஒரு இடத்தில் படுத்துறங்கும் இந்தக் குழந்தையின் படமே, அவர்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ள போதுமானது.

ஈரானில் எங்கு பார்த்தாலும், அடி மட்டத் தொழிலாளிகள் ஆப்கானிய அகதிகளாகவே இருப்பார்கள். புதிய கட்டிடங்கள் கட்டப் படும் இடங்களில் அவர்களைக் காணலாம். அவை பெரும்பாலும், ஈரானியர்கள் செய்ய விரும்பாத, கடின உழைப்பைக் கோரும் வேலைகள். ஆப்கான் அகதிகள் மட்டுமே, கொதிக்கும் வெயிலில்,கடினமான வேலை செய்யத் தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு கிடைக்கும் கூலியும் குறைவு. அவர்களது உழைப்பை சுரண்டும் ஈரானிய முதலாளிகள், சில நேரம் மாதக் கணக்காக சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவார்கள். அதற்கு எதிராக எங்கேயும் முறைப்பாடு செய்ய முடியாது. ஏழை சொல் அம்பலம் ஏறாது.

ஆப்கானிய அகதிகளும், ஈரானியர்கள் போன்று முஸ்லிம்கள் தான். ஈரான் அதிகார வர்க்கமான இஸ்லாமிய மதத் தலைவர்கள், அகதிகளின் துயரைத் துடைப்பதற்கு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. இதே மதத் தலைவர்கள் தான், ஆப்கானிஸ்தானில் போராடிக் கொண்டிருந்த முஜாகிதீன் குழுக்களுக்கு கொடுப்பதற்காக, பள்ளிவாசல்களில் நிதி சேகரித்துக் கொடுத்தார்கள். அந்த நிதியில் பெரும்பகுதி ஆயுதங்கள் வாங்கப் பயன்பட்டது.

ஈரானிய "தொப்புள்கொடி உறவுகள்" அனுப்பிய நிதியும்,ஆயுதங்களும் ஆப்கான் போரினை தீவிரப் படுத்தியது. அதன் விளைவாக, அப்பாவிப் பொதுமக்கள் அகதிகளாக ஈரானுக்குள் நுளைந்தார்கள். ஆப்கான் போராளிகளுக்கு உதவுவதற்காக நிதி சேகரித்துக் கொடுத்த மதத் தலைவர்கள், தமது நாட்டிற்குள் புகலிடம் கோரிய அகதிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர்.

ஈரானில் வாழும் ஆப்கான் அகதிகளின் நிலைமை, இந்தியாவில் வாழும் தீண்டத்தகாத சாதியினருடன் ஒப்பிடத் தக்கது. அவர்களை யார் வேண்டுமானாலும், என்னவும் செய்யலாம். அரசாங்கமும், மதத் தலைவர்களும் ஏனென்று கேட்க மாட்டார்கள். ஆப்கான் அகதித் தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டலுக்கு மட்டும் பலியாவதில்லை. பணக்கார ஈரானியர்களின் வீடுகளில் வேலைக்காரிகளாக பணியாற்றும் பெண்கள், பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர்.

எண்பதுகளில், ஆப்கான் போர் தொடங்கிய காலத்தில் இருந்து, இலட்சக் கணக்கான ஆப்கான் அகதிகள் ஈரானில் தஞ்சம் கோரியுள்ளனர். பெரும்பாலும், ஈரானில் பேசப் படும் பார்சி (டாரி) மொழி பேசும் ஆப்கானியர்கள் தான், ஈரானுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். (பஷ்டூன் மொழி பேசும் ஆப்கானியர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் பக்கமாக புலம்பெயர்ந்தனர்.) டாரி மொழி பேசும் மக்கள் ஈரான் எல்லையோரம் அமைந்துள்ள ஹெராட் நகரிலும், அதைச் சூழவும் வாழ்கின்றனர். ஆகையினால், ஈரானியர்களும், ஆப்கானிய அகதிகளும், இனத்தால், மொழியால், மதத்தால் ஒன்று பட்டவர்கள். அப்படி இருந்தும் ஏனிந்த பாரபட்சம்?

ஈரானில் தங்களுக்கு வரவேற்பு இல்லை என்பதும், பல இன்னல்களை சகித்துக் கொண்டு, அவல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதும், ஆப்கான் அகதிகளுக்கு தெரியும். இருந்தாலும், சமாதானம் நிலவும் ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்று திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். நிரந்தர யுத்த பூமியாகி விட்ட ஆப்கானிஸ்தானில், மரணம் எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. ஈரானில் மரண பயம் இல்லை என்பதால், எல்லாக் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

ஈரானில் வாழும் ஆப்கான் அகதிகள் ஒரே மொழியை பேசுகின்றார்கள். ஒரே மதத்தை பின்பற்றுகிறார்கள். எதற்காக ஈரானிய முதலாளிகள் அவர்களை இரக்கமின்றி சுரண்ட வேண்டும்? எதற்காக ஈரானிய அரசு அவர்களை பாரபட்சமாக நடத்த வேண்டும்? இதே கேள்விகளை, தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் விடயத்திலும் கேட்கலாம்.

இதற்கெல்லாம் விடை ஒன்று தான். மத உணர்வு, மொழி உணர்வு, இன உணர்வு, தேசிய உணர்வு, இவை எல்லாம் மக்களை மூளைச் சலவை செய்து, முட்டாள்களாக வைத்திருப்பதற்கு மட்டுமே உதவும். எல்லாவற்றையும் பணம் தான் தீர்மானிக்கின்றது. எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தை நம்பினாலும், முதலாளிகளின் குணம் ஒன்று தான். அவர்களால் சுரண்டப் படும் மக்களின் பிரச்சினைகளும் ஒன்று தான்.


Thursday, November 17, 2011

ஈரான் நாட்டு பல்லவர்கள் தமிழரான வரலாறு

ஐரோப்பியர்கள் அறிமுகப் படுத்திய இனத் தேசியவாதம் என்ற கற்பிதம் செயற்கையானது. இது பல தடவை நிரூபிக்கப் பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு இனமும் பழம் பெருமை பேசத் தெரிவு செய்யும் சரித்திர நாயகர்கள், அந்தப் பெருமைக்கு தகுதியுடையவர் தானா, என்பது சந்தேகமே. இன்றைக்கு இருக்கும் மொழி சார்ந்த இனவுணர்வு, நூறாண்டுகளுக்கு முன்னர் காணப்படவில்லை. 

மதத்தை மாற்றுவது போல, மொழியை மாற்றிக் கொள்வதும் காலங்காலமாக நடைபெற்று வரும் மாற்றங்கள். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, ஆட்சியாளர்கள் கூட அவ்வாறு தான் வாழ்ந்துள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம், இன்று "தமிழர்கள்" என அறியப்படும் பல்லவர்கள். 

சேர, சோழ, பாண்டியர்கள் என்ற மூவேந்தர்களுடன் பல்லவர்களையும் பண்டைய தமிழ் மன்னர்களாக உருவகித்துக் காட்டும் போக்கு, இனப்பெருமை பேசுவோரால் முன்னெடுக்கப் படுகின்றது. "தமிழ் மன்னர்கள்" எல்லாம், உண்மையிலேயே தமிழர்களா, அல்லது தமிழ் உணர்வுடன் ஆட்சி செய்தனரா, என்பது குறித்தெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை.

பல்லவர்கள் என்றவுடன், சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரம் சிற்பங்கள் நினைவுக்கு வரும். பல்லவர் காலத்து கோயில்களும், சிற்பங்களும் இன்றைக்கும் அழியாமல் உள்ளன. கருங்கல்லில் வடிக்கப் பட்ட சிற்பங்கள், இந்து புராணக் கதைகளை நினைவூட்டுகின்றன. இவற்றை வைத்து பல்லவர்கள் நம்மவர்கள் என்று கருதிக் கொள்கிறோம். 


மாமல்லபுரம் கோயில்களை குடைந்தவர்களும், சிற்பங்களை செதுக்கிய சிற்பிகளும் தமிழ் பாட்டாளி மக்கள் தான். அதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஆனால், அவற்றை செதுக்குவதற்கு உத்தரவிட்ட மன்னர்கள் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சோழர் காலத்து கல்வெட்டுகள் தமிழில் இருக்கையில், பல்லவர் காலத்து கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் காணப் படுகின்றன. 

இந்தியாவின் கிழக்குப் பகுதியில், சமஸ்கிருதத்திற்கு முன்னர் பேசப்பட்ட பிராமி மொழி, அந்தக் காலத்தில் நாகரீகமடைந்த மொழியாக இருந்துள்ளது. அதுவே பல்லவர்களின் ஆட்சி மொழியாக இருந்திருக்கலாம். பல்லவர்களின் சிற்பங்கள் செதுக்கும் வழக்கம், மாமல்லபுரத்திற்கு மட்டுமே சிறப்பான ஒன்றல்ல.

முதலில் பல்லவரின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் எதுவெனப் பார்ப்போம். இன்றைய ஆந்திரா மாநிலத்தின் தென் பகுதியும், தமிழ் நாடு மாநிலத்தின் வட பகுதியும் பல்லவர்களின் நாடாக இருந்துள்ளது. தென் ஆந்திராவில் உள்ள குண்டூர், வட தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் என்பன பல்லவர் காலத்தில் குறிப்பிடத் தக்க நகரங்களாக இருந்துள்ளன. 


ஒரு காலத்தில், மகாராஷ்டிரத்தில் இருந்து தெற்கு நோக்கி விரிந்திருந்த சாதுவாகனரின் சாம்ராஜ்யத்தின் மறைவில் தான் பல்லவர்கள் தலையெடுக்கத் தொடங்கினார்கள். பண்டைய இந்தியாவில், சாதுவாகனரின் சாம்ராஜ்யத்திற்குள், இன்றைய இந்திய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றின் பகுதிகள் அடங்கியிருந்தன, சாதுவாகனரின் ஆட்சியில் பௌத்த மதம் அரச அந்தஸ்துப் பெற்றிருந்தது. 

இன்றைக்கும் ஆந்திராவில், குண்டூருக்கு அருகில் புத்தர் சிலைகளும், வேறு சில பௌத்த மத சின்னங்களும் கண்டெடுக்கப் படுகின்றன. மகாராஷ்டிராவில் தான் அஜந்தா குகை ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும் காணப் படுகின்றன. இவை யாவும் பௌத்த மத துறவிகளால் செதுக்கப் பட்டவை. இதற்கெல்லாம் நீங்கள் சரித்திரப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. சாதாரணமாக, அந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணியாக செல்லும் ஒருவர், அறிந்து வைத்திருக்க கூடிய தகவல்கள் இவை.

இன்றைக்கும் புத்தகக் கடைகளில் சூடாக விற்பனையாகும், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற "சரித்திர நாவல்கள்", வரலாற்றை திரித்து எழுதப் பட்டுள்ளன. கல்கியின் நாவல்களில் வரும் புலிகேசி என்ற "வில்லன்", உண்மையில் இந்தியர்கள் பெருமைப் படக் கூடிய சக்கரவர்த்தி ஆவார். ஆனால், அவர் காலத்தில் பௌத்த, சமண மதங்களுக்கு அரச அங்கீகாரம் கொடுக்கப் பட்டமை, அவரை வில்லனாக காட்டுவதற்கு காரணமாக இருக்கலாம். புலிகேசியின் சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் தான், "இந்து மதம்" (இந்து என்ற சொல் சர்ச்சைக்குரியது. பொதுவான அர்த்தத்தில் கூறப் படுகின்றது.) தலையெடுத்தது.

பண்டைய காலங்களில், இந்து மதம் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய ஆதிக்க மதமாக இருந்தது. யாகம் வளர்த்து மிருகங்களை பலி கொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை, வழிபாடாகக் கொண்டிருந்தது. சாதுவாகனரின் ஆட்சிக் காலத்தில், அந்த வழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. 


புலிகேசி காலத்தில் அடங்கியிருந்த பிராமணர்கள், பல்லவர்கள் காலத்தில் தான் மறுபடியும் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. பல்லவர்களும் பிராமணர்கள் என்றொரு சரித்திரக் குறிப்பு தெரிவிக்கின்றது. இந்திய சாதி அமைப்பின் பிரகாரம், அரச பரம்பரையினர் சத்திரியர்களாக கருதப் பட வேண்டும். இருப்பினும், பிராமணர்களும், சத்திரியர்களும் ஆரிய வம்சாவழியை பூர்வீகமாக கொண்டுள்ளனர்.

வரலாற்றில் திராவிடர் என்றொரு இனம் இருந்ததில்லை. அது, ஐரோப்பிய சமூக-விஞ்ஞானிகள் தென்னிந்தியர்களுக்கு சூட்டிய பொதுப் பெயர். ஆனால், ஆரியர், அல்லது அவ்வாறு தம்மை அழைத்துக் கொள்ளும் இனம், இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கி.பி. 200 க்குப் பின்னர், ஈரானிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சசானியர்கள் தம்மை ஆரிய இனத்தவர்கள் என அழைத்துக் கொண்டனர். அவர்கள் காலத்தில் தான் ஈரான் என்ற பெயர்ச் சொல்லும் பாவனைக்கு வந்தது. அதாவது, ஈரான் என்றால் "ஆரியர்களின் நாடு" என்று அர்த்தம்!

சசானியர்களுக்கு முன்னர், ஈரானை பார்த்தியர்கள் ஆண்டார்கள். சசானியர்களினதும், பார்த்தியர்களினதும் ஆட்சிப் பரப்பு, இன்றைய பாகிஸ்தான் வரையில் விரிந்திருந்தன. அதற்குமப்பால், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் அவர்கள் படையெடுத்து சென்றுள்ளனர். இரண்டு அரச பரம்பரையினர் காலத்திலும், மாமல்லபுரத்தில் உள்ளது போன்று சிற்பங்கள் போன்று செதுக்கும் கலை வளர்ந்திருந்தது. மேலும் ஒரு தகவல், உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். 


சசானியர்களினதும், பார்த்தியர்களினதும் ஆட்சிக் காலத்தில், பெரும்பான்மை ஈரானிய குடிமக்கள் பேசிய மொழியின் பெயர், "பல்லவ மொழி"! அரேபியரின் இஸ்லாமியப் படையெடுப்பின் பின்னர், பல்லவ மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய ஈரானியர்கள் பேசும் பார்சி மொழியில், நிறைய அரபுச் சொற்கள் கலந்துள்ளதால், புதிய மொழி போன்று தோற்றமளிக்கின்றது.

ஈரானியர்களுக்கும், வட-இந்தியர்களுக்கும் இடையில் மிக அதிகமான கலாச்சார ஒற்றுமைகள் காணப்படுகின்றன. பார்சி, சமஸ்கிருதம், உருது, ஹிந்தி எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள மொழிகள். இவற்றில் ஒரு மொழி தெரிந்தவர், இன்னொன்றை பயில்வது இலகு. மார்ச் 21 , அல்லது அதற்கு பிந்திய நாள், ஈரானில் புது வருடமாகவும், வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகவும் கொண்டாடப் படுகின்றது. 


இஸ்லாத்தின் வருகைக்கு முந்திய ஈரானிய மதக் கதைகள், இந்து மதக் கதைகளை ஒத்துள்ளன. மித்ரா, வருணா, போன்ற கடவுளர்கள் ஒரே பெயரில் வந்தாலும், அவர்களைப் பற்றிய கதைகள் சிறிது மாறு படுகின்றன. இந்துக்களின் "ரிக் வேதம்", ஈரானியர்களின் "அவெஸ்தா கதா" இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும். 

சுருக்கமாக, இந்து மதமும், ஈரானிய மதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இந்துக்களான பல்லவர்கள், ஈரானியர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதை நிறுவுவதற்கு இது போதும்.

பண்டைய ஈரானிய மன்னர்கள் போரில் கைப்பற்றும் நாடுகளில், தமது மதத்தையோ, அல்லது மொழியையோ திணிக்கவில்லை. உள்நாட்டு மக்களின் மொழியை, மதத்தை அங்கீகரிப்பதன் மூலம், சிறந்த முறையில் அவர்களை ஆள முடியும் என்று நம்பினார்கள். இல்லாவிட்டால், கிரேக்கம் முதல் இந்தியா வரையிலான, ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அவ்வளவு சுலபமாக நிர்வகித்திருக்க முடியாது. 


ஈரானிய ஆட்சியாளர்கள், "நெருப்பை வணங்கும், சரதூசரின் தத்துவங்களை பின்பற்றும்" மத நம்பிக்கையாளர்கள். ஆனால், அவர்கள் ஆக்கிரமித்த நாடுகளில், தமது மதத்தை தமக்குள்ளே மட்டும் வைத்துக் கொண்டார்கள். ஈரானிய மன்னர்கள் வெளியிட்ட இலச்சினைகளில் எப்படியும் நெருப்பின் படம் பொறிக்கப் பட்டிருக்கும். 

தென்னிந்தியாவில் பல்லவர்கள் ஆண்ட இடங்களிலும், அது போன்ற இலச்சினைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ஆந்திராவில், குண்டூர் மாவட்டத்தில் பல்லவர்கள் ஆண்ட பகுதி "பல் நாடு" என்று அழைக்கப் படுகின்றது. பல் நாடு பற்றிய செவி வழிக் கதைகள், "பல் நாட்டி வீருள்ள கதா" என்ற நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. தெலுங்கு மொழியில் உள்ள, பண்டைய இலக்கியங்களில் அது முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள், தமிழ் பேசும் மக்களைக் கவர்வதற்காக தமது பெயர்களையும் தமிழ்ப் படுத்திக் கொண்டார்கள். "மாமல்லன்" என்பது, தமிழாக்கப் பட்ட ஈரானியப் பெயராக இருக்க வாய்ப்புண்டு. தமிழில் மல்யுத்தம் செய்யும் வீரர்களை மல்லர்கள் என்று அழைப்பார்கள். 


மல்யுத்தம் என்ற வீர விளையாட்டு, பல்லவர்களின் தாயகமான ஈரானில் இருந்து வந்திருக்க வேண்டும். பல்லவ மன்னர்கள், தம்மை சிறந்த மல்யுத்த வீரர்களாக காட்டிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. Varzesh-e Bastani என்பது ஈரானின் மரபு வழி மல்யுத்த விளையாட்டைக் குறிக்கும். 

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக, இன்றைக்கும் பயிற்றப் படும் மல்யுத்தமானது, ஈரானியக் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்து விட்டது. ஈரானில் மல்யுத்த வீரர்களை "பஹ்லவன்" என்று அழைப்பார்கள்! ஈரானிய பஹ்லவன், தமிழில் பல்லவனாக மருவியிருக்கலாம். இன்றைக்கும் பல ஈரானியர்கள், பஹ்லவன் என்று பெயர் வைத்துக் கொள்வது வழமையானது.


இணைய சுட்டிகள்:

India's Parthian Colony On the origin of the Pallava Empire of Dravidia
Pallava dynasty
Pal Nadu
Varzesh-e Bastani
பல்லவர்
சாதவாகனர்

Thursday, June 24, 2010

"அல்கைதாவும் அமெரிக்காவும் நண்பர்கள்!" - ஒரு பயங்கரவாதியின் சாட்சியம்

"அல்கைதாவுடன் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை." - பிடிபட்ட பயங்கரவாதியின் வாக்குமூலம். மேலும் ஈரான் போன்ற நாடுகளில் இயங்கி வரும், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அமெரிக்க அரசு ஆயுதங்களும், நிதி உதவியும் வழங்கி வந்துள்ளது. பெப்ரவரி மாதம் ஈரானில் பல பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பான "ஜன்டுல்லா" (அல்லாவின் சேனை) என்ற இயக்கத் தலைவர் கைது செய்யப்பட்டார். அவர் துபாயில் இருந்து கிரிகிஸ்தான் செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது பிடிபட்டார். கிரிகிஸ்தான் மனாஸ் அமெரிக்க இராணுவ முகாமில் ஒரு முக்கிய புள்ளியை சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்த பொழுது, விமானம் ஈரானில் பலவந்தமாக தரையிறக்கப்பட்டது. ஜன்டுல்லா தலைவர் ரிகி கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களின் பின்னர் தூக்கில் இடப்பட்டார்.
இங்கேயுள்ள வீடியோவில் பிடிபட்ட ஜன்டுல்லா தலைவர் ரிகியின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது.


இது குறித்து கலையகத்தில் ஏற்கனவே வந்த செய்தி:
ஈரானிற்குள் சி.ஐ.ஏ. நடத்தும் இரகசிய யுத்தம்

Thursday, December 31, 2009

இஸ்ரேல் - ஈரான் போர் மூளுமா? விரிவான அலசல்

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் அணு உலைகளை தாக்குவதற்கு இஸ்ரேல் இரகசிய திட்டம் தீட்டியுள்ளது. இஸ்ரேலின் விமானப்படைக்கு சொந்தமான இரு தாக்குதல் விமானங்கள் வீரியம் குறைந்த அணுகுண்டுகளை போடுவதற்கு தயாராகி வருகின்றன. இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பானில் அணு குண்டுகள் போடப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், முதலாவது அணுவாயுதப் போர் இதுவாக இருக்கும். ஈரான் மீதான தாக்குதல், இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை தோற்றுவிக்கலாம். வளைகுடா எண்ணெய் விநியோகம் தடைப்படலாம். இது போன்ற காரணங்களால் அமெரிக்கா தாக்குதலுக்கு அனுமதியளிக்கவில்லை. அவ்வாறு இஸ்ரேல்-ஈரான் போர் மூளுமாயின், அதன் காரணிகள் என்ன? ஈரானின் அணு உலைத் திட்டங்கள், இஸ்ரேலின் எதிர்ப்புக்கான காரணங்கள், போன்ற பூகோள அரசியலை ஆராயும் விறுவிறுப்பான ஆவணப்படம் இது.


Part 01

part 02

part 03

part 04

part 05

part 06

Wednesday, December 30, 2009

உலகம் அறியாத இஸ்லாமிய ஈரானின் மறுபக்கம்

"இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், ஈரானை இருண்ட மத்திய காலத்தில் வைத்திருப்பதாக" ஊடகங்கள் நமது காதில் முழம் முழமாக பூச்சுற்றுகின்றன. ஈரானிய இளைஞர்கள் ஆடம்பர அமெரிக்க கலாச்சாரத்திற்கு அடிமையானவர்கள். பாரிசிலும், லண்டனிலும் காணும் அதே கடைத்தெருக்கள் தெஹ்ரான் நகரை அலங்கரிக்கின்றன. இஸ்லாமியப் புரட்சி படித்த மத்தியதர வர்க்கத்தை தோற்றுவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களில் 60 % பெண்கள். நிறுவனங்களைக் கூட பெண்கள் சிறப்பாக நிர்வகிக்கிறார்கள். ஈரான் ஒளிர்கிறது! முதலாளித்துவ பொருளாதாரத்தின் வெற்றிகரமான சாதனை அது. இருப்பினும் ஈரானுக்கு இன்னொரு இருண்ட பக்கம் இருக்கிறது. குழந்தைத் தொழிலாளரை சுரண்டும் தொழிலகங்கள். பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தடைச் சட்டம் போடத் தயங்கும் அரசு. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான துரதிர்ஷ்டசாலிகள். நாடு முழுவதும் இரண்டு மில்லியன் போதை அடிமைகள் இருப்பதாக அரசே கூறுகின்றது. கணக்கில் வராதது இன்னும் பல மடங்கு. இது இஸ்லாமிய ஈரானின் இன்னொரு முகம். சமூக ஏற்றத்தாழ்வுக்கு காரணமான முதலாளித்துவ கொடுங்கோலாட்சியை இஸ்லாம் திரையிட்டு மறைக்கின்றது. இது தான் இன்றைய ஈரான்.

Saturday, November 28, 2009

வீடியோ: விபச்சாரத்தில் ஈடுபடும் ஈரான் பெண்கள்

இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடான ஈரானில், திரைமறைவில் விபச்சாரம் நடக்கிறது. மேற்குலகை விட ஈரானில் போதைவஸ்துக்கு அடிமையானவர்கள் அதிகம். அதிர்ச்சி தரும் இந்த வீடியோ இரகசியமாக படமாக்கப்பட்டது. மத நம்பிக்கை மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து விடும் என்ற கட்டுக்கதை, வறுமையின் முன்னால் பொய்த்துப் போகின்றது.

Part 1


Part 2

Tuesday, November 17, 2009

அமெரிக்க நிதியில் ஈரான் எதிர்ப்பு ஆயுதக்குழுக்கள்

சிலரைப் பொறுத்தவரை, அமெரிக்க-ஈரான் போர் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது. இரு நாடுகளும் நேரடியாக மோதுவதை தவிர்த்து வந்த போதிலும், பதிலிப் போரில் ஈடுபட்டுள்ளன. ஈரான், ஈராக் நாடுகளின் வடபகுதி மலைகளில், குர்து இன மக்கள் வாழ்கின்றனர். ஈராக்கிய குர்தியர்கள், அமெரிக்க ஆதரவுடன் "குர்திஸ்தான்" சுயாட்சிப் பிரதேசத்தைக் கொண்டுள்ளனர். ஈரானிய குர்து மக்கள் எல்லை கடந்து வந்து, ஈராக்கிய-குர்திஸ்தானில் அடைக்கலம் தேடுகின்றனர். ஈராக்கிய மலைகளில் முகாமிட்டுள்ள (ஈரானிய) குர்து போராளிக் குழுக்கள், ஈரானுக்குள் ஊடுருவி தாக்கி வருகின்றனர். அனைத்து ஈரான் எதிர்ப்புக் குழுக்களுக்கும் அமெரிக்க நிதி உதவி கிடைப்பது ரகசியமல்ல. ஈராக்கில் தளமமைத்துள்ள PJAK போன்ற ஈரான் எதிர்ப்பு இயக்கங்களை ஆராயும் ஆவணப்படம்.

Sunday, August 30, 2009

ஈரானிற்குள் சி.ஐ.ஏ. நடத்தும் இரகசிய யுத்தம்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்து நீண்ட காலமாகி விட்டது. மேலெழுந்தவாரியாக பிரச்சார யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதைப் போலதோன்றினாலும், மறைமுகமாக தனது கூலிப்படைகளினூடாக இரத்தம் சிந்தும்ஆயுதப்போராட்டத்தையும் நடத்தி வருகின்றது. ஈராக்கில் தளமமைத்துள்ளமுஜாகிதீன் கல்க் என்ற ஈரானிய எதிர்ப்பியக்கம் வெளிப்படையாகவேஅமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றது. இதே நேரம் பாகிஸ்தானைதளமாக கொண்டு இயங்கி வரும் "ஜன்டுல்லா" என்ற தீவிரவாதக் குழுவிற்குஅமெரிக்கா இரகசியமாக உதவி வருவதை ABC தொலைக்காட்சிஅம்பலப்படுத்தியுள்ளது. 2005 ம் ஆண்டு, முன்னாள் அமெரிக்க அமைச்சர் டிக்சென்னிக்கும், அப்போது பாகிஸ்தானில் பதவியில் இருந்த முஷாரப்பிற்கும்இடையில் ஏற்பட்ட இரகசிய உடன்படிக்கையின் பின்னர் இந்த பதிலிப்போர்ஆரம்பமாகியுள்ளது.

பலுச்சி மொழி பேசும் மக்கள் ஈரானிற்குள்ளும் வாழ்கின்றனர். பாகிஸ்தானின்பலுச்சிஸ்தான் மாகாணம் ஈரான் எல்லையில் அமைந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாகாணத்தின்பிரிவினைக்காக சில ஆயுதமேந்திய இயக்கங்கள் போராடி வந்தன. அவை யாவும்பாகிஸ்தானிய இராணுவத்தால் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டன. எஞ்சியஆயுதபாணிகளை "ஜன்டுல்லா" என்ற பெயரில் ஒன்று திரட்டி, ஈரானுக்குள்சென்று போரிட அனுப்பி வைக்கப்படுகின்றனர். அமெரிக்கா நேரடியாக உதவிசெய்யா விட்டாலும், ஈரானிய புலம்பெயர் அமைப்புகள் மூலம் பணப் பரிமாற்றம்செய்கின்றது. ஜன்டுல்லா தலைவர் அப்த் எல் மாலிக் ரெகி ஒரு மாஜிதாலிபானும், போதைவஸ்து கடத்தல்காரனுவார்.

ரெகி தலைமையிலான சில நூறு போராளிகள் எல்லை கடந்து ஈரானுக்குள்நுழைந்து, ஈரானிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களை கடத்தி கொலைசெய்து வருகின்றனர். இதுவரை ஒரு டசினுக்கும் அதிகமான சிப்பாய்களைகடத்தி கொலைசெய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதை நிரூபிக்கும் வீடியோப்பிரதிகளை அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்தது. இதே நேரம்ஈரானில் ஸஹடன் நகரத்தில் பெப்ரவரி இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில், வண்டியில் சென்ற பதினோரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் என்று இரண்டு ஜன்டுல்லாதீவிரவாதிகளை ஈரானிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அவர்கள் தாம்பாகிஸ்தான் பலுச்சிஸ்தான் பகுதி முகாமில் பயிற்சி பெற்றதைஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய தொலைக்காட்சி அறிவித்தது. சி... தீவிரவாதிகளை பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ள போதிலும், சி... இதனை மறுத்துள்ளது.


Sunday, June 14, 2009

ஈரான் தேர்தல்: "எல்லா வாக்கும் இறைவனுக்கே!"


"ஈரானிய அதிபர் தேர்தலில் அஹமதிநிஜாத் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தேர்தல் முடிவை ஏற்க மறுத்து தெஹ்ரான் வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன."

மேற்குலகுடன் மோதல் போக்கை பின்பற்றும் கடும்போக்காளர் என வர்ணிக்கப்படும் அஹ்மதின்ஜாத் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் என மேற்கத்திய ஊடகங்கள் பல ஆரூடம் கூறி வந்தன. அவருக்கு எதிராக போட்டியிட்ட முசாவி ஒரு சீர்திருத்தவாதியாக (அதாவது லிபரல் போக்கு) ஊடகங்களால் காண்பிக்கப்பட்டார். முசாவிக்கு பின்னால் திரண்டிருந்த இளைஞர் பட்டாளத்தை படம் பிடித்துக் காட்டி, முசாவிக்கு நாடு முழுவதும் ஆதரவு இருப்பதாக கூறிக்கொண்டன. பொதுவாக தமது அரசியல் கொள்கை சார்ந்த ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அபிலாஷை காரணமாக இந்த முறையும் சற்று அதிகமாகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்.

பொதுவாகவே மத்திய கிழக்கு நாடுகளைக் குறித்த புரிந்துணர்வு, மேற்குலகில் குறைவு. அதிலும் ஈரானின் உள்நாட்டு விவகாரம் பற்றி எப்போதும் தவறாகவே கற்றுக் கொள்கின்றனர். ஈரானில் இருந்து அமெரிக்காவிற்கு உயர்கல்வி கற்க சென்ற மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பின்வருமாறு தெரிவித்தார். ஈரானில் பெண்கள் பல்கலைக்கழக கல்வி கற்றிருக்கிறார்கள் என்ற விஷயத்தை அப்போது தான் சக மாணவர்கள் ஆச்சரியத்துடன் தெரிந்து கொண்டார்களாம். ஈரான் இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடு என்பதால், அங்கே பெண் கல்விக்கு தடை உள்ளதாக "அனைத்தையும் அறிந்த" அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். ஈரான் அரசியல் பற்றிய புரிதலும் அவ்வாறே பத்தாம்பசலித்தனமாக உள்ளது.

ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாத சர்வாதிகாரம் நிலவுவதாக பொதுவான கருத்து நிலவுகின்றது. அப்படியானால் எதற்காக தேர்தல் முடிவுகளை ஆர்வமாக அவதானிக்கிறார்கள்? இதில் இருக்கும் முரண்பாட்டை பலர் உணர்வதில்லை. சாதாரண மக்களுக்கு அரசியல் தெளிவின்மை இருக்கலாம். மேற்கத்திய ஆட்சியாளர்களுக்கும், ஊடகவியலாளருக்கும் அரசியல் விஞ்ஞானம் தெரியாது என்று சொல்ல முடியாது. அவர்கள் தமக்குத் தெரிந்த ஒரு உண்மையை மக்களுக்கு மறைக்கிறார்கள். அந்த உண்மை "அரசியல் நிர்ணயச் சட்டம்". ஆம், ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் இருக்கின்றது. சர்வாதிகாரம் இருக்கின்றது. ஆனால்... அவையெல்லாம் மிக நுட்பமாக கையாளப்படுகின்றது. இதை பொது இடங்களில் வெளிப்படும் சில அசம்பாவிதங்களை மட்டும் வைத்துக் கொண்டு எடை போட முடியாது.

இன்றைய ஈரானின் அரசியல் கட்டமைப்பு 1979 ம் ஆண்டு இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியுடன் ஆரம்பமாகியது. புரட்சியை பாதுகாக்க அமைக்கப்பட்ட காவல்படை தேசத்தின் பாதுகாப்பை பொறுப்பெடுத்து. ஆயத்துல்லா என அழைக்கப்படும் மதத்தலைவரான கொமெய்னி தேசத்தின் தலைவரானார். அமைச்சர்களும் அரசாங்கத்தை நடத்தியவர்களும் மதத் தலைவர்கள் தாம். இதை வைத்துக் கொண்டு, ஈரானில் மதம் அரியணை ஏறியிருந்தது என்று சொல்லப்படுவது உண்மை தான். ஆனால் குறிப்பிட்ட காலம் மட்டுமே மதத் தலைவர்கள் நேரடி நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த சில வருடங்களுக்குள், "புரட்சியை காக்கும் படை" எதிர்ப்பாளர்களை அழித்தொழித்து விட்டது. புதியதோர் அரசியல் நிர்ணயச் சட்டம் எழுதப்பட்டு விட்டது. கடைசியாக சொன்ன வரிகளை தொடர்ந்து நினைவில் வைத்திருங்கள்.

ஆகவே, இப்போது அரசியல் களத்தில் குதிக்கும், தேர்தலில் எதிரும் புதிருமாக நிற்கும் சீர்திருத்தவாதிகள் எல்லோரும் புரட்சிக்குப் பின்னர் புதிதாக தோன்றியவர்கள். அதற்கான வழிகளை மதத் தலைவர்களே ஏற்படுத்திக் கொடுத்தனர். அதாவது தேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, அதற்கென திறமையுள்ள மத்தியதர வர்க்கம் ஒன்றிடம் கையளித்து விட்டு, மதத்தலைவர்கள் ஒதுங்கி விட்டனர். ஈரானின் அரசியல், பொருளாதார தலைநகரம் எப்போதும் போல தெஹ்ரான் தான். இருப்பினும் தெற்கில் அமைந்திருக்கும் "கோம்" என்ற நகரம் மதத்தலைவர்களின் நிர்வாகத் தலைமையகமாக செயற்படுகின்றது. மதத்தலைவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடவில்லை.மாறாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றம் நிறைவேற்றும் எந்தச் சட்டமும் மதத் தலைவர்களின் ஒப்புதல் இன்றி நடைமுறைக்கு வராது.

ஜனநாயகத் தேர்தல் கூட, மதத் தலைவர்கள் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் எழுதி வைத்தவை தாம். மேற்குலக நாடுகள், தமது அழுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகள் என்பது போல பெருமை பேசுகின்றன. உண்மை அதுவல்ல. இஸ்லாமியப் புரட்சியின் பரணாம வளர்ச்சி இந்த ஜனாயகத் தேர்தல். ஒன்றுமே புரியவில்லையே, தலையைச் சொரிபவர்களுக்காக ஒரு ஒப்பீடு. இங்கிலாந்து நாட்டில் பதினாறாம் நூற்றாண்டில் (புரட்டஸ்தாந்து) கிறிஸ்தவ மத அடிப்படைவாத புரட்சி ஏற்பட்டது. அதற்குப் பின்னர் பாராளுமன்றமும், முடியாட்சியும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் அரசியல் நிர்ணயச் சட்டம் தோன்றியது. இன்று பிரித்தானியா, நெதர்லாந்து, பெல்ஜியம், நோர்வே போன்ற நாடுகளில் அது போன்ற அரசியல் அலகு நடைமுறையில் உள்ளது. இந்த நாடுகளில் சோஷலிசக் கட்சி போன்ற "சீர்திருத்தவாதக் கட்சிகள்" தேர்தலில் போட்டியிடவும் ஆட்சியமைக்கவும் முடியும். எந்தவொரு கட்சியும் அரசியல் சட்டத்தை மாற்ற, மன்னர் குடும்பத்தின் அதிகாரத்தை நீக்குவதற்கு விரும்பினால், அது பெரும் வில்லங்கத்தில் போய் முடியும்.

முடிக்குரிய ஜனநாயகம் போலத்தான், ஈரானின் மதவாத ஜனநாயகமும். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அஹ்மதின்ஜாத்தின் கட்சியினர், மேற்கத்திய நாடுகளில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியுடன் ஒப்பிடத் தக்கது. சீர்திருத்தவாதியான முசாவி (முன்பு கத்தாமி) ஆகியோரின் கட்சியினர், லிபரல்கள் (அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி) அல்லது சமூக ஜனநாயகவாதிகள் (ஐரோப்பாவில் சோஷலிஸ்ட் கட்சி) ஆகியோருடன் ஒப்பிடத் தக்கவர்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், எந்தக் கட்சி தேர்தலில் வென்றாலும் "கோம்"மில் உள்ள மதத்தலைவர்களின் அதிகாரத்தை அசைக்க முடியாது. வேண்டுமானால் சில விட்டுக்கொடுப்புகளை செய்யலாம். அஹ்மதின்ஜாத் பகுதி, மதத் தலைவர்களுக்கு "பிரியமான பிள்ளைகளாகவும்", சீர்திருத்தவாதிகள் "தறுதலைப் பிள்ளைகள்" போலவும் நோக்கப்படுகின்றனர். அது மட்டும் தான் வித்தியாசம்.

மேற்குலகில் பிரச்சாரம் செய்யப்படுவதைப் போல ஈரானில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு தேசத்தை தலைகீழாக புரட்டிப் போடும் வல்லமை கிடையாது. அஹமதிநஜாத் மதத்தலைவர்களுக்கு நெருக்கமானவராக காட்டப்பட்டாலும், இராணுவத்தை போருக்கு தயார் படுத்தும் அதிகாரம் கூட அவருக்கு இல்லை. ஈரானில் சர்வ வல்லமை பொருந்திய சிறப்புப் படையணியான "புரட்சிக் காவல்படை" கூட அஹமதிநஜாத் சொல் கேட்டு நடப்பதில்லை. ஈரானில் அனைத்துப் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக, உயர்மட்டத் தலைவரான ஆயத்துல்லா கொமெய்னி அதிகாரம் செலுத்துகிறார்.

பொதுத் தேர்தலில் அஹமதிநஜாத் குழுவிற்கும், முசாவி குழுவிற்கும் இடையில் நிலவும் போட்டியும், முரண்பாடுகளும் ஈரானில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவரப் போவதில்லை. இதனை தமிழ் நாடு மாநிலத்தில், இரு எதிர்க்கட்சிகளுக்கு இடையில் நடக்கும் பூசல்களுடன் ஒப்பிடலாம். நிச்சயமாக, ஈரானிலும் இரண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றையொன்று விமர்சிப்பதுடன் நில்லாது, அவதூறுகளையும் அள்ளி வீசுகின்றன. தேர்தலுக்கு முன்னர் அமெரிக்க பாணியில் இரு வேட்பாளருக்கும் இடையில் பகிரங்க தொலைக்காட்சி விவாதம் இடம்பெற்றது. இதில் எதிர்த் தரப்பு வேட்பாளர் மீது தனிநபர் தாக்குதல் நடந்ததையும் காண முடிந்தது. முசாவியின் ஆதரவாளர்கள் நாசிச பாணியில் பச்சை வர்ண(கட்சியின் நிறம்) அணிவகுப்புகளை நடத்துவதாக அஹமதிநஜாத் பிரச்சாரம் செய்தார். அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு எல்லாம் அஹமதிந்ஜாத் நிர்வாகம் பொறுப்பெடுக்க வேண்டும் என்று முசாவி குற்றம் சுமத்தினார். எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை பகிரங்கமாக குறை சொல்லுமளவிற்கு அங்கே ஜனநாயகம் நிலவுகின்றமை குறிப்பிடத் தக்கது.

ஈரானில் நடப்பது ஒரு வகை வர்க்கப் போராட்டம். முசாவியின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் மாநகரங்களில் வாழும் படித்த நடுத்தர வர்க்க இளைஞர்கள். அதற்கு மாறாக அஹமதிநஜாத் ஆதரவாளர்கள் நாட்டுப்புறங்களில் வாழும் வசதியற்ற ஏழை மக்கள். இந்தத் தேர்தலில் 85 வீதமனோர் வாக்களித்துள்ளனர். (ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கூட 43வீதமானோர் மட்டுமே வாக்களித்தனர்.) மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள ஏழை வாக்களார்கள் அஹமதினஜாத்திற்கு வாக்களித்திருப்பார்கள், என்பதைப் புரிந்து கொள்ள ராக்கெட் விஞ்ஞானம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

சீர்திருத்தவாதி முசாவி வெற்றி பெற வேண்டுமாயின் முழு நடுத்தர வர்க்கமும், ஒரு பகுதி உழைப்பாளர் வர்க்கமும் வாக்குப் போட்டிருக்க வேண்டும். ஆனால் முசாவியின் தேர்தல் பிரச்சாரம் முழுக்க முழுக்க நடுத்தர வர்க்க நலன்களை குறிவைத்தே செய்யப்பட்டன. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மக்கள், நாளாந்தம் உயரும் விலைவாசியால் வாழ்வதற்கு அல்லல் பட வேண்டியுள்ளது. அடுத்த வேளை உணவு எங்கேயிருந்து வரும் என்பது அவர்களது பிரச்சினை. அதற்கு மாறாக தின்று கொழுத்து, ஆடம்பரக் கார்களும், அமெரிக்க கலாச்சாரமாக வாழ்க்கையை அனுபவிக்கும் நடுத்தர வர்க்க ஈரானியர்களுக்கு வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அஹமதிநஜாத் பதவியில் இருக்கும் காலத்தில் நடந்த உலக காற்பந்தாட்டப் போட்டிகளில் ஈரான் அணி வெற்றிக் கிண்ணத்தை பெறவில்லையாம். அதற்கு முன்னர் இருந்த சீர்திருத்தவாதி கத்தாமியின் ஆட்சிக்காலத்தில் ஈரான் உதைபந்தாட்ட அணி பல போட்டிகளில் ஜெயித்ததாம். (தி கார்டியன் வீக்லி 12-6-09) நடுத்தர வரக்கத்திற்கு இவையெல்லாம் முக்கியமான பிரச்சினைகள். உதைபந்தாட்ட விளையாட்டு வெறி பொதுத் தேர்தலில் எதிரொலிக்கின்றது.

1979 ம் ஆண்டு, ஷா மன்னருக்கு எதிரான இஸ்லாமியப் புரட்சி உழைக்கும் மக்களின் ஆதரவின்றி வென்றிருக்க முடியாது. நாட்டுப்புற உழைக்கும் மக்கள் ஒன்றில் கொமெய்னி தலைமையிலான இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள், அல்லது "துடே கட்சி" என அழைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள். இவ்விரண்டு சக்திகளும் ஒன்று சேர்ந்து, கொடுங்கோல் ஷா மன்னர் ஆட்சியை கவிழ்த்த புரட்சியை தலைமை தாங்கி நடத்தின. புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்தை கையில் எடுத்த மதவாதிகள், கம்யூனிஸ்ட்களை வேட்டையாடி அழித்தார்கள். தலைவர்கள் தூக்கிலிடப் பட்டனர். உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

தேசிய முதலாளிகளின் வளர்ச்சிக்கு, மதத் தலைவர்கள் ஒரு நாளும் குறுக்கே நிற்கவில்லை. ஈரானில் பொருளாதாரம் முழுவதும் புரட்சிக்குப் பின்னர் தோன்றிய தேசிய முதலாளிகளின் கைகளில் உள்ளது. கூடவே முதலாளித்துவத்திற்கு சேவை செய்து கைநிறைய பணம் சம்பாதிக்கும் மத்திய தர வர்க்கம் ஒன்றும் உருவானது. மத்திய தர வர்க்கத்தின் ஆடம்பர மோகத்தையும், கலாச்சார சீரழிவையும் ஆட்சியிலிருந்த மதத் தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை. பங்களாவில் நான்கு சுவர்களுக்குள் இளவயதினரின் நடன விருந்துகள் நடக்கின்றன. சுற்றுலா மையங்களில் 'பிக்னிக்' போகும் இளஞ்ஜோடிகள் உல்லாசமாக பொழுது போக்குகின்றனர். இஸ்லாமிய மத அடிப்படைவாத ஈரானில் இப்படி எல்லாம் நடக்கின்றது என்று சொன்னால் வெளியுலகில் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இதையெல்லாம் அனுபவிப்பது, மொத்த சனத்தொகையில் 20 % மும் இல்லாத பணக்கார நடுத்தர வர்க்கம்.

நடுத்தர வர்க்கத்தில் இயல்பாகவே காணப்படும் மேலைத்தேய மோகம், அமெரிக்க அரசியல் சார்ந்ததாக இருப்பதில் வியப்பில்லை. மேற்குலக ஊடகங்கள் அதை அடிப்படையாக வைத்து பிரமைகளை தோற்றுவிக்கின்றன. ஈரானிய மக்கள் முழுவதும் அமெரிக்கா தங்களை வந்து விடுதலை செய்ய வேண்டும் என்று காத்திருப்பதைப் போல கதைகளை கட்டி விடுகின்றன. இந்தப் பின்னணியிலேயே ஈரான் தேர்தல் குறித்த மேற்கத்திய பரப்புரைகளையும் எடை போட வேண்டும்.

தேர்தல் முடிந்தவுடன் வந்த செய்தித் தலைப்புக்கள் இவை: "... தேர்தல் முடிவுகள் குறித்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சந்தேகம்" (டைம்ஸ்) "வாக்குகள் களவாடப்பட்டு விட்டன என எதிர்க்கட்சி வேட்பாளர் முசாவி தெரிவிக்கிறார்."(நியூ யார்க் டைம்ஸ்) "அமெரிக்க அரசியல் அவதானிகள் நம்ப முடியவில்லை என தெரிவித்தனர்." (பாக்ஸ் நியூஸ்)

ம்ம்ம்... பாராளுமன்ற தேர்தல் மூலம் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என்று மேற்குலக அறிவுஜீவிகள் செய்து வந்த பிரச்சாரத்தை தற்போது தாமே நம்பத் தொடங்கி விட்டனர்.