Saturday, October 17, 2020

முரளியை மிரட்டும் தாமரையின் அரைவேக்காட்டு ஈழ அரசியல்

"அன்று தலைவர் நினைத்திருந்தால் அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்...!" என்று கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது வெளிப்படையாக வன்முறையை ஆதரிக்கும் கூற்று மட்டுமல்ல. கவிஞர் தாமரை தனக்கு புலிகளின், ஈழத்து அரசியல் பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்பதை வெளிப்படுத்தி விடுகிறார். 

ஈழப்போர் முடிவுக்கு வரும் வரையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு அப்பால் புலிகளுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை என்பது தான் யதார்த்தம். அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே ஏக பிரதிநிதிகளாக இருக்க விரும்பினார்கள். அதனால் தமக்கு எதிராக மட்டுமல்லாது, போட்டியாக இருந்த தமிழ்த்தேசியவாதிகளைக் கூட கொன்றொழித்தார்கள். ஆனால், வட- கிழக்கு முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்ன அரசியல் பேசுகிறார்கள் என்பது பற்றி அக்கறைப் படவில்லை. அவர்கள் எல்லோரும் தமக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் இருந்தாலும் புலிகளைப் பொறுத்த வரையில் "Never mind" கொள்கை தான். 

இந்தப் பின்னணியில் பார்த்தால், முரளிதரனின் அரசியல் நிலைப்பாட்டை புலிகள் அன்றே கணக்கெடுத்திருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, அன்று கிரிக்கெட் வீரர்கள் அரசியலை தாண்டி அனைத்து மக்களாலும் ஆராதிக்கப் பட்டார்கள். சிங்களவர்கள், தமிழர்கள் யாராக இருந்தாலும் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தார்கள். இதற்கு புலிகள் இயக்க போராளிகளும் விதிவிலக்கல்ல. முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் எந்தத் தாக்குதலும் நடக்காது. அன்றைய தினங்களில் மட்டும் இராணுவத்தினரும், புலிகளும் "இலங்கையராக" ஒன்றிணைந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்து இரசிப்பார்கள். 

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் முத்தையா முரளிதரனை புலிகளே நேரில் அழைத்து வரவேற்று உபசரித்தார்கள். அவரது நட்சத்திர அந்தஸ்து புலிகளையும் மயக்கி இருந்தது. சில நாட்கள் வன்னியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்க ஒழுங்கு படுத்தினார்கள். வன்னியில் புலிகளோடு சம்பந்தப் படாத ஒருவருக்கு கட் அவுட் வைத்திருந்தால், அது முரளிதரனுக்கு மட்டும் தான்! அத்துடன் கொக்க கோலா விளம்பரங்களும் சேர்ந்து கொண்டமை வேறு கதை. 

மீண்டும் அரசியலுக்கு வருவோம். அன்று மட்டுமல்ல, இன்றும் கூட முரளிதரனுக்கு அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்று தான் சொல்ல வேண்டும். அவரது அபத்தமான பேச்சுகள் யாவும் மேட்டுக்குடி மனப்பான்மையில் இருந்தும், ஒரு சாமானியனின் உலகப் பார்வையில் இருந்தும் பிறக்கின்றன. இந்த உண்மை அன்று புலிகளுக்கும் புரிந்திருக்கும். உண்மையில் புலிகள் இருந்த காலத்தில், தென்னிலங்கையில் வெளிப்படையாக அரசை ஆதரித்த கொழும்பு/மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் நிறையப் பேர் இருந்தனர். அவர்கள் தெரிந்து கொண்டே பேசிய நச்சுக் கருத்துகளுடன் ஒப்பிட்டால், முரளிதரன் பேசியது ஒன்றுமேயில்லை. Wait... இனித் தான் கிளைமாக்ஸ். அதே அரசியல்வாதிகள் சிலருடன் புலிகளும் நட்பு பாராட்டினார்கள்! எந்தளவுக்கு என்றால், கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலிப் போராளிகளுக்கு மறைவிடம் ஒழுங்கு படுத்தியதும் அவர்கள் தான்! 

சுருக்கமாக: கொழும்பு, மலையகத் தமிழர்களில் சிலர் அரசுக்கு ஆதரவாக இருப்பதை புலிகள் கண்டிக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. இன்னும் சொன்னால், புலிகள் அதை அங்கீகரிக்கும் நிலையில் தான் இருந்தனர். இதற்கு தேசியத் தலைவர் பிரபாகரனே மிகச் சிறந்த உதாரணம். 

கிளிநொச்சியில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் ஒருவர் கேள்வி கேட்டார்: 

"மலையகத் தமிழர்கள் பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?" 

தலைவர் பிரபாகரன்: 

"அவர்கள் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்!" 

 

மேலதிக தகவல்களுக்கு எனது காணொளியை பார்க்கவும்: 

 

2 comments:

மயில் said...

சிறப்பு தோழர்

சுரேஷ் பாபு said...

இன்று தான் இந்த செய்தி எனக்கு நன்றாக விளங்கியது