Saturday, February 02, 2019

ஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை


ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, தமிழரின் மானம் சந்தி சிரித்தது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், காட்டுப் பகுதியில், பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் சடலம் ஒன்று, அரைவாசி எரிந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டது. ஆரம்பத்தில், வெள்ளையின நாஜி தீவிரவாதிகளே அந்தக் கொலையை செய்ததாக, எல்லோராலும் நம்பப் பட்டது. மரணமடைந்த பெண்ணின் பெற்றோரும் அவ்வாறே வாக்குமூலம் கொடுத்தனர்.

இருப்பினும், ஏதோ ஒரு சந்தேகத்தில் துப்புத் துலக்கிய ஜெர்மன் பொலிஸ், உண்மையான கொலையாளி அந்தப் பெண்ணின் தகப்பன் என்பதை கண்டுபிடித்தது. கொலைக்கான காரணம் என்னவென்பதையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.

உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பருவ மங்கை, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனை காதலித்து வந்தார். அந்தக் காதலை பொறுக்க முடியாத தந்தையே, தனது மகளை அடித்துக் கொலை செய்திருக்கிறார். உடலை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் கொண்டு சென்று போட்டு விட்டு, அவசர அவசரமாக தகனம் செய்து விட்டு வந்திருக்கிறார். நவ-நாசிகளை கை காட்டி விட்டால், குடும்பத்திற்குள் நடந்த கௌரவக் கொலையை மறைக்கலாம் என்ற எண்ணம் ஈடேறவில்லை.

துருக்கிய சமூகத்தில் கௌரவக் கொலைகள் நடப்பது, ஏற்கனவே ஜெர்மானியர்களுக்கு தெரிந்த விடயம். கௌரவக் கொலைகளை செய்வதில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, தமிழர்களும் நிரூபித்தார்கள்.

இந்த சம்பவம் குறித்து, உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் கதைத்த பொழுது, அவர்கள் சம்பந்தப்பட்ட தந்தையை குற்றவாளியாக கருதவில்லை என்பது தெரிந்தது. "மகளை கண்டித்து அடிக்கும் பொழுது, தற்செயலாக படாத இடத்தில் பட்டு இறந்து விட்டதாக..." வக்காலத்து வாங்கினார்கள்.

ஜெர்மனியில், பெற்றோர் பிள்ளைகளை அடிப்பது கூட குற்றம் என்பதையும் மறந்து, காதலித்த பிள்ளையிடம் தவறு காணும் அளவுக்கு தான், புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சமூகத்தில், உண்மையான காதல் சினிமாவில் மட்டுமே உள்ளது. நிஜத்தில் அது சாதிய கட்டுமானங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றது. சாதி கடந்த காதல், பல போராட்டங்களுக்கு பின்னரே நிலைத்து நிற்கின்றது. இளவரசனின் தற்கொலை/கொலை, அந்தப் போராட்டத்தில் ஒரு மைல் கல். அது வெறும் காதல் கதையின் சோக முடிவு அல்ல. சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் நிகழ்ந்த திருப்புமுனை. முத்துக்குமார், செங்கொடியின் மரணங்கள் போன்று, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனச் சாட்சியை உலுக்கிய தியாக மரணம்.

இன்றைக்கும், தமிழர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றினாலும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சாதி பார்த்து தான் திருமணம் செய்து கொள்கின்றனர். காதலிக்கும் பொழுதே, சாதி பற்றி விசாரிக்கின்றனர். திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும், சாதிப் பாகுபாடு காரணமாக பிரிந்து செல்கின்றனர். இது போன்ற பல சம்பவங்களை நேரில் கண்டிருக்கிறேன். 

இது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. "தமிழீழப் போராட்டம் காரணமாக சாதி ஒழிந்து விட்டது", என்று கூறிக் கொள்ளும் ஈழத் தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனை மறுப்பவர்கள், ஒன்றில் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள், அல்லது சாதிய கட்டுமானத்தை பாதுகாப்பவர்களாக இருப்பார்கள்.

4 comments:

raajsree lkcmb said...

புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் தன் நடை உடை பாவனைகளை ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு மாற்றிக்கொண்டார்களே ஒழிய சிந்தனையை மாற்றிக்கொள்ளவில்லை. அது இன்னும் சீழ் பிடித்தே இருக்கிறது.

Packirisamy N said...

புலம் பெயர்ந்தும் இப்படியா?

Packirisamy N said...

புலம் பெயர்ந்தும் இப்படியா?

தமிழ் எழினி said...

சாதியின் வேர் இந்து மதம். இது இருக்கும் வரை சாதிக்கு மரண சாசனம் கிடையாது